கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இளங்கோவின் "இருத்தலின் மீது கவியும் இன்மைகள்"

Tuesday, June 09, 2026

 

டெ. க. அரவிந்தறாஜ்
***

நூலாசிரியர் இளங்கோ யாழ்ப்பாணத்தில் அம்பனையில் பிறந்து தனது பதினாறாவது வயதில் புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கிறார். இதுவரை கவிதைகள், கட்டுரைகள்,  சிறுகதைகள், நாவல் என ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார். இது அவரது பத்தாவது புத்தகம்.

ஈழயுத்தத்தில் அநியாயமாக பலியான அனைவரிற்குமாக படையல் செய்யப்பட்டுள்ள இந்நூல் 112 பக்கங்களில் எழுநாவால் அழகான, கைக்கடக்கமான வடிவமைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. 

 



நூலின் அட்டைப்படம் இளங்கோவின் யுத்தத்தால் சிதைவடைந்த வீட்டின் எஞ்சிய பகுதியின் புகைப்படமாகவும் அதைச் சுற்றிப் படரும் கொடிகளும் பூக்களுமாக காட்டப்பட்டுள்ளது. வீடு என்பது இருத்தலின் ஒரு குறியீடு. ஆனால் இங்கு அதன்நிலை இல்லாமையையும் அதேவேளை பூக்கள் நம்பிக்கையையும் தருவதுபோல தலைப்பிற்கு வலுச்சேர்க்கின்றது.

எழுநா சஞ்சிகையில் தொடர்ச்சியாக வெளிவந்த 13 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். ஈழப்போராட்டத்துடன் தொடர்புடைய ஆங்கிலத்தில் வெளியான 13 நூல்களை ஆசிரியர் தன்னுடைய பார்வையில் ஆராய்கிறார். அவற்றின் சார்பு நிலை, வரலாற்று உண்மைகள், எழுதப்பட்ட நோக்கம், அதற்கு நியாயம் செய்யப்பட்டுள்ளதா என விரிகின்றது இக் கட்டுரைகள்.

இதற்கான களத்தை  ‘எழுநா’ வழங்கி உள்ளது. அதாவது ஈழக்கற்கைகள் என்ற எண்ணக்கருவின் கீழ் வரலாறு, பண்பாடு, சமூகவியல், மானிடவியல், மொழியியல், அரசியல், அபவிருத்தி, சட்டம், பொருண்மியம் என்று பல்வேறு துறைகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டு அறிவு பரம்பலை அல்லது கருத்தாடலை அல்லது வெவ்வேறு பார்வை கோணங்களை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு ‘எழுநா’ செயற்படுகின்றது. அந்த வகையில் ஆங்கிலத்தில் வெளியான இந்தப் புத்தகங்கள் தொடர்பான உரையாடலை உருவாக்குவதில் எழுநாவும் இளங்கோவும் வெற்றி பெற்றுள்ளார்கள் எனலாம்.

பதினொரு எழுத்தாளர்களின் 13 நூல்கள் தொடர்பாக இக்கட்டுரைகள் பேசுகின்றன. அதாவது அனுக் அருட்பிரகாசத்தின் "வடக்கிற்கான பயணம்" மற்றும் ஒரு குறுகிய திருமணத்தின் கதை" ஆகிய இரு நூல்களும் வாசுகி கணேசானந்தனின் "சகோதரனற்ற இரவு" மற்றும் "Love Marriage" ஆகிய  இரு நூல்களும், நிரோமி டீ ஸொய்ஷாவின் "தமிழ்ப் பெண் புலி", ஷியாம் செல்லத்துரையின் "பசித்த பேய்கள்", சாரோன் பாலாவின் "படகு மக்கள்",  ரோய் ரத்னவேலின் "கைதி # 1056", லோகதாசன் தர்மதுரையின் "The Sadness of Geography" , மலரவனின் போர் உலா, மார்க்ஸ் ஸ்டீபனின் "தீவிரவாதிகளுடன் தேநீர் நேரம்", சங்கரி சந்திரனின்"சூரியக்கடவுளின் பாடல்", மற்றும் பெஞ்சமினின் "வன்னி: கிரபிக் நாவல்" என்பவையாகும்.

மலரவன் அவர்களின் போர் உலா தவிர்ந்த ஏனையவை யாவும் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டவை. போர் உலா தமிழில் எழுதப்பட்டு ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டது. இந்நூல்களின் எழுத்தாளர்களை எடுத்து நோக்கினால் இருவர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். பத்துப்பேர் புலம் பெயர்ந்தவர்கள். மலரவன் ஈழ விடுதலைப் போராளி. நிரோமி போராளியாய் இருந்து விலகி பின்னர் புலம்பெயர்ந்தவர்.

இந்நூல்கள் தொடர்பான தனது பார்வையை இளங்கோ முன் வைக்கும்போது ஒரு தெளிவான வடிவத்தை கையாளுகின்றார். அதாவது முதலில் நூலை அறிமுகம் செய்து அதனுடைய கதை, அதை எழுதியவரின் பின்புலம், கதை எழுதப்பட்ட சூழல் என்பவற்றை குறிப்பிட்டு அதன் பின்னர் அந்த பிரதி ஊடாகவும் அந்த பிரதிக்கு வெளியேயும் அந்நூல் எதைப்பற்றி பேசுகிறது என்பதை  தெரிவிப்பதன் ஊடாக வாசகர்களை சிந்திக்கத் தூண்டுகின்றார்.

இது இலக்கியத்தில் ஆதாரமான ஒரு கேள்வியை எழுப்புகின்றது. ஒரு படைப்பை புரிந்து கொள்ள படைப்பு மாத்திரம் போதுமா அல்லது அதன் பின்னணி,  எழுத்தாளரின் நோக்கம் போன்றவற்றையும் கொண்டு அதனை மதிப்பிட வேண்டுமா? அத்துடன் இலக்கியம் என்றால் என்ன? அதன் சார்பு நிலைகள் என்ன? வாசகர்களுக்கு இலக்கியத்தின் ஊடாக என்ன வழங்கப்பட வேண்டும்? போன்ற கேள்விகள் இப்புத்தகத்தை வாசித்து முடிக்கின்ற போது எழுவதை தவிர்க்க முடியவில்லை.

உதாரணமாக அண்மையிலே வெளிவந்த டிலுக்ஸன் மோகனின் ‘படுபட்சி’ நாவல் தன்வரலாறு என்று குறிப்பிடப்பட்டிருந்த போதும் பல்வேறு காரணங்களுக்காக  உண்மைக்கு முரணான பல தகவல்களை கொண்டிருந்ததாக சர்ச்சைக்கு உள்ளானது.

அத்துடன் "தீவிரவாதிகளுடன் தேநீர் நேரம்" என்ற நூல் தொடர்பாக இளங்கோ குறிப்பிடும்போது அதன் நூலாசிரியரான மார்க்ஸ் ஸ்டீபன் தீவிரவாதிகள் பற்றி ஆராயும் ஆசையில் அவர்களை சந்திக்க முயல்கிறார். வேறு நாடுகளைவிட இலங்கையில் சமாதான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்ற காலமாகையால் அது அவருக்கு இலகுவாக அமைகின்றது. எனினும் ஓமந்தை சோதனைச் சாவடியில் மதுபானங்களுடன் சூதாடும் போராளிகளை காணுதல் என குறிப்பிடுவது முற்று முழுதாக தவறானது என்கிறார்.

அதேபோல மார்க்ஸ் ஸ்டீபனின்  தீவிரவாதிகளை பற்றி அறிய வேண்டும் என்ற எண்ணத்தை அமெரிக்க மனநிலை என்று அவருடைய காதலியே சொல்வதாக இப்புத்தகம் குறிப்பிடுகின்றது. இக்கட்டுரையை முடிக்கும்போது இளங்கோ ஈழப் போராட்டம் பற்றி அறிய இப்புத்தகம் ஒன்றும் அவ்வளவு முக்கியத்துவம் ஆனதல்ல என்கிறார்.

அனுக் அருட்பிரகாசம் போர்ச் சூழலிற்குள் எப்போதும் இருக்காதவர். அதை வெளிப்படையாகத் தெரிவித்தே தனது கதைகளை எழுதுகிறார். அதேபோல ஏனையோரும் நேர்மையாக செயற்படுவது அவர்களது புத்தகங்களை புரிந்துகொள்ள உதவும் என்கிறார்.

பெரும்பாலான புத்தகங்கள் எண்பதுகளில் இடம்பெற்ற இனக் கொலைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. உதாரணமாக  "வடக்கிற்கான ஒரு பயணம்" , "படகு மக்கள்" , கைதி # 1056, "நிலவியலின் துயரம்"  1983 ஜூலை  இனக்கொலையுடன் தொடர்புபடுகின்றது.  இந்நூல் ஆசிரியர்களோ அல்லது அவர்களின் பெற்றோர்களோ எண்பதுகளில் புலம்பெயர்ந்த நடுத்தர அல்லது உயர் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்கிறார் இளங்கோ. 




வாசுகி கணேசானந்தனின் ‘சகோதரன் அற்ற இரவு’ நாவலானது 1980 களில் ஆரம்பித்தாலும் இடையில் 20 ஆண்டுகளை விட்டுவிட்டு 2009 ற்கு தாவுவதை குறிப்பிட்டு இடையில் நடந்த யுத்தத்தாலான பாதிப்புகள் தொடர்பாக மௌனம் காப்பதுடன் போராட்டத்தின் அடிப்படை காரணத்தை மறைத்து யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளும் குற்றம் செய்தாக பொதுவாக கூறுவது பொருத்தமற்றது என்கிறார். ஒரு புலம்பெயர்ந்தவராக  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தரப்பின் வலிகளை புரிந்து கொள்ள வேண்டாமா என்றும் கேள்வி எழுப்புகிறார்.

படகு மக்கள் நாவல் தொடர்பாக குறிப்பிடும்போது சாரோன் பாலா யுத்தத்தோடு தொடர்புபடாதவர். அத்துடன் புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர். இருந்தும் அவரால் ஈழப் போராட்டத்தின் நியாயப்பாட்டை புரிந்து கொள்ள முடிகின்றது என்கிறார். சிக்கலான, அபாயம் நிறைந்த, உயிரைப் பறிக்கக்கூடிய படகுப் பயணத்தை ஏன்  இவ் அகதிகள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை இந்தப் பின்னணியில் அவரால் நியாயப்படுத்த முடிகிறது.

அதேபோல சூரிய கடவுளின் பாடல் நாவலில் சங்கரி சந்திரனால் 1930 இலிருந்து 2010 வரையான மூன்று தலைமுறைகளின் கதைகளை யுத்தத்தை நேரடியாக சொல்லாமல் குடும்பங்களின் ஊடாக சொல்லப்படுகின்றது.

வாசுகி கணேசானந்தன், சாரோன் பாலா, சங்கரி சந்திரன் போன்ற எழுத்தாளர்கள் 70,  80களில் வெளிநாடுகளில் பிறந்தவர்கள். தமிழைச் சரியான முறையில் வாசித்து விளங்குவதற்கான திறமை குறைவாக உள்ளவர்கள். இருந்தாலும் அவர்களால் ஈழப் பிரச்சனையின் வரலாற்று ஒழுங்கை எழுத முடிகிறது. அதிலும் சாரோன் பாலா மற்றும் சங்கரி சந்திரன் ஆகியோர் ஈழப் பிரச்சினையின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டு உண்மைக்கு நெருக்கமாக எழுதுகிறார்கள் என்கிறார் இளங்கோ.

அதேபோல ரோய் ரத்தனவேல் மற்றும் லோகதாசன் தர்மதுரையின் சுயசரிதைகள் போரின் பாதிப்புகளையும் புலம்பெயர்வின் அவலங்களையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. போரால் ஏற்பட்ட உளவடுக்களில் இருந்து விடுபட இவர்களுக்கு நீண்ட காலம் சென்றுள்ளது. ரோயிற்கு ஒரு இராணுவ அதிகாரி உதவ, லோகதாசனுக்கு புகையிரதத்தில் சந்திக்கும் ஒரு பெண்ணும் ஒரு இஸ்லாமிய குடும்பமும் உதவுகின்றது. இது மனிதர்கள் தனித்தனியாக நல்லவர்களாக இருப்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

போர் உலாவை பற்றி  இளங்கோ குறிப்பிடும்போது ஈழப் போராட்டத்தைப் பற்றி ஒரு போராளியால் எழுதப்பட்ட முதலாவதும் முதன்மையானதுமான போர் இலக்கியம் என்கிறார். எனினும் அதை எழுதிய மலரவன் சிறிய வயதிலேயே இறந்து விடுவதை குறிப்பிட்டு அவர் இன்று இருந்தால் இன்னும் எவ்வளவு சிறப்பான படைப்புகளை தந்திருப்பார் என்று கேட்பதன் ஊடாக போரினால் என்ன நன்மை விளைந்துவிடக் கூடும் என கேள்வி எழுப்புகிறார்.

ஈழப் போராட்டம் தொடர்பில் வெளிவந்த ஆங்கில நூல்களில்  எவை சரியான வரலாற்று புரிதலுடன் எழுதப்பட்டுள்ளன மற்றும்  எவை வேண்டுமென்றே திரிவுபடுத்துவதற்காகவே எழுதப்பட்டுள்ளன  என்பதை எடுத்துக்காட்டுவதன் ஊடாக ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’
தமிழில் வாசிப்பவர்களுக்கு ஒரு முக்கியமான நூலாக விளங்குகின்றது. அத்துடன் ஆங்கிலத்தில் ஈழப் போராட்டம் தொடர்பான நூல்களில் எவற்றின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் வாசகர்களுக்கு முன்வைக்கின்றது.

எனினும் தமிழ் வாசகர்கள் ஈழப் போராட்டம் தொடர்பாக ஓரளவுக்கு தெளிவான பார்வை உடையவர்கள். புலம்பெயர்ந்த இரண்டாம் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர்களே ஆங்கிலத்தில் வாசிக்கும்போது எது உண்மை எது பொய் என்று தெரியாது ஒரு பிழையான வரலாற்றை நோக்கி இழுத்துச் செல்லப்படக்கூடிய வாய்ப்பு உடையவர்கள். எனவே இளங்கோவின் இப்புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது அவர்களுக்கும் ஒரு சரியான வரலாற்றை அறிந்து கொள்ள பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

***

(‘எழுநா’வினால் 2025 இன் இறுதியில் வெளியிடப்பட்ட ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’ நூல் தொடர்பாக கடந்த 28/02/2026 அன்று திருமறைக்கலாமன்ற கலைத்தூது மணி மண்டபத்தில் ஆற்றப்பட்ட மதிப்பீட்டுரை.)

நன்றி: 'அம்ருதா' - சித்திரை இதழ் 2026

 

0 comments: