கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஒரு குறுகிய திருமணத்தின் கதை

Tuesday, February 14, 2017

(The Story of a Brief Marriage By Anuk Arudpragasam)

1.
நெடும் வருடங்கள் நடந்த ஒரு யுத்தத்தில் ஒரு நாளைப் பிரித்தெடுத்து நிதானமாய்ப் பார்த்தால் என்னவாகும்? உயிர் தப்பியதே அதிசயமாய் ஒரு புறமிருக்க, அந்த நாளொன்றில் இந்தளவு சம்பங்கள்  நிகழ்ந்ததா என ஒருவகையில் திகைக்க வைக்கக்கூடும். அனுக் அருட்பிரகாசம் எழுதிய The Story of a Brief Marriage,  எறிகணைத்தாக்குதலில் காயமடையும் ஆறுவயதுச் சிறுவனை, இந்நாவலின் முக்கிய பாத்திரமான தினேஷ் வைத்தியசாலைக்குள் தூங்கிக்கொண்டு வருவதோடு தொடங்குகின்றது. அதேபோல நாவல் முடிவதும் மிகக்கொடூரமான எறிகணைத்தாக்குதலோடுதான். ஆனால் ஒரு பகலிலிருந்து அடுத்த நாள் விடிவதற்குள்  நாவல் முழுவதும் நகர்ந்தும் முடிந்து விடுகின்றது.

நம் வாழ்வில் ஒருநாளில் நிகழ்வதை, மிக மெதுவாகச் சுழற்றிப் பார்த்தால் எப்படியிருக்குமோ, அப்படியே இந்த நாவல் கொடும் யுத்தச் சூழலின் ஒரு நாளை மிக மிக மெதுவாக நகரவிட்டு பின் தொடர்ந்தபடி இருக்கின்றது. இங்கே இராணுவம் பற்றியோ, அதை நடத்திக்கொண்டிருக்கும் அரசு பற்றியோ எதையும் நேரடியாகச் சொல்லாமல் யுத்தத்தின் பயங்கரத்தை எழுத்துக்களால் அனுக் கொண்டுவருகின்றார். புலிகளைக் கூட இயக்கம் (movement) என அடையாளப்படுத்துகின்றாரே தவிர, அவர்களைப் பற்றி எந்த விரிவான சித்திரங்களும் இல்லை. இன்னுஞ் சொல்லப்போனால் எறிகணைகள் விழுந்து வெடிக்கின்றதான சித்தரிப்புக்களில்லை. ஆனால் எறிகணைகள் ஏவப்பட்டதுடன் ஆரம்பிக்கும் உத்தரிப்புக்களும், எறிகணைகள் வெடித்தபின் மாறும் கொடும் சூழல் பற்றியும் விரிவான காட்சிகள் இதில் இருக்கின்றன. `வன்னி யுத்தம்` நூலில் , மரணத்தை விட மரணம் எப்போதும் நெருங்கும்/நிகழும் என்கின்ற அச்சமே தனக்கு யுத்தகாலத்தில் மிகப்பெரும் மனப்பாரத்தைத் தந்தது என எழுதியவர் கூறுவதைப்போல, இங்கே யுத்த காலத்தில் வாழ நேர்ந்தவர்களின் அவதிகளும்/ அச்சங்களும் எழுத்தில் முன்வைக்கப்படுகின்றன.

தூக்கி வந்த சிறுவனின் காயத்தின் நிமித்தம் இனி கையை வெட்டியகற்றியவுடன்  தப்பிவிடுவான் என கதைசொல்லி நினைக்கையிலே, யுத்தம் என்பது உடல் உறுப்புக்களை இழப்பதையெண்ணிக் கவலைப்படும் காலத்தைத் தாண்டி, உயிரோடு எஞ்சுதலே பெருங்காரியம் என்கின்ற சூழ்நிலைக்கு மனிதர்களைக் கொண்டுவந்துவிட்டதை உணர்கின்றோம். தினேஷ், பின்னர் தற்காலிக மருத்துவமனையாய் அமைக்கப்பட்ட கொட்டகையைச் சூழ இருந்த பிணங்களைத் தோண்டிப் புதைக்கின்றார்.

அந்தப் பொழுதிலே தினேஷைப் பற்றி அறிந்த வைத்தியர் சோமசுந்தரம் தனது மகளை மணக்கமுடியுமா என்பதைக் கேட்கின்றார். வைத்தியர் சோமசுந்தரம், தனது மகனையும் மனைவியையும் யுத்தத்தின் நிமித்தம் இழந்தவர். உயிரோடு எஞ்சியிருக்கும் தன் 18வயதிற்குட்ட மகளையும் இயக்கத்தின் கட்டாய ஆட்சேர்ப்பில் இழந்துவிடுவேனோ என்ற பயத்தில் திருமணம் ஒன்றை செய்துவைக்க முயல்கின்றார். நேரங்கிடைக்கும்போதெல்லாம் வைத்தியசாலைப் பகுதியில் வந்து தேவையான உதவிகளைச் செய்யும் தினேஷும் காட்டையண்டிய பகுதியில், இயக்கத்தின் கண்களில் அகப்படாது மறைந்தபடி வாழ்கின்றார்.

தினேஷூம், தாயும் சில மாதங்களாய் யுத்தத்தின் நெருக்குவாரத்தில் ஒவ்வொரு இடங்களாய் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஓரிடத்தில் இன்னொரு குடும்பத்தோடு தங்கி நிற்கின்றனர். அந்தக் குடும்பத்து மகனை இயக்கம் யுத்தகளத்திற்குக் கொண்டு சேர்த்திடும் என்ற பயத்தில், அந்தக் குடும்பம் எண்ணெய் பரலுக்குள் நிலத்தில் புதைத்து மகனை மறைத்து வைக்கின்றது. இப்படி ஒளிந்துகிடப்பதன் அவஸ்தையில் ஒருநாள் வீட்டிற்கே சொல்லாமலே அந்த இளைஞன் இயக்கத்தில் சேர்ந்துவிடுகின்றான். பிறகு அவன் களத்தில் மரணமானபோதும், அந்தத் தாய் தன் மகன் இறக்கவில்லை என தொடர்ந்து தன் நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்கின்றார். எனது மகன் பிறக்கமுன்னர் எப்படி எனது கருவாக என் உடலில் தங்கியிருந்தானோ அப்படியே இப்போதும் உருவமின்றி இருக்கின்றான் எனச் சொல்கின்றார். அப்போது இந்த 'நினைவுகளின் குழப்பத்தை' வித்தியாசமாக நினைக்கும் தினேஷ், பின்னர் தன் தாய் கண்முன்னே துப்பாக்கிகளின் சன்னத்தில் சரிவதைப் பார்க்கும்போது, தன் தாயையும் இப்படியே நினைவுகொள்கின்றார்.

சோமசுந்தரம் திருமண சம்பந்தத்தைச் சொல்லும்போது, காயப்பட்ட ஒரு ஐயரை வைத்து திருமணத்தைச் செய்யலாம் என்கின்றார். பிற்பகலில் தினேஷ் வைத்தியரின் தரப்பாள் குடிலைத்தேடிப் போகும்போது, வைத்தியரின் மகள் கங்கா நிற்கின்றார். இருவரும் வைத்தியரைத்தேடிப் போகும்போது, காயப்பட்ட ஐயர் வைத்தியரின் உதவியில்லாது மரணிப்பதைக் காண்கின்றனர். கங்கா, தினேஷ் இருவருக்கும் இதில் முழுச்சம்மதமா என்று என யோசிக்க அவகாசம் கொடுக்காது வைத்தியர் தன் முன்னிலையில் திருமணத்தை அவர்களுக்குச் செய்துவிடுகின்றார். இறந்துபோன கங்காவின் தாயாரின் தாலியை தினேஷ் அணிந்துவிட, அவர்களைத் தனியேவிட்டு சோமசுந்தரம் வைத்தியசாலைக்குப் போகின்றார். யுத்த நேரத்தில் அவ்வப்போது சந்தித்ததைத் தவிர, வேறெந்த தொடர்புமில்லாத இருவர் இப்போது கணவன் -மனைவி ஆகிவிட்டனர்.

2.
யுத்தகாலத்தின் நெருக்கடிகளை மிக விரிவான சித்திரிப்புக்களை அனுக் தரும்போது நமக்கும் அதற்குள் நிற்பதுபோலத் தோன்றுகின்றது. மலசலம் கழிக்கக் கஷ்டப்படுவதிலிருந்து, எத்தனையோ நாட்கள் குளிக்காமல் இருந்து முதல் தடவை குளிப்பது, நகங்களை எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு வெட்டுவது என எல்லாவற்றையும் தினேஷூடாக சித்தரிக்கும்போது, மானுட விழுமியங்கள் எல்லாமே எப்படி யுத்தக்காலத்தில் அர்த்தமிழந்து போகின்றதென்பதை நாம் அறிகின்றோம்.

திருமணம் ஆகிவிட்ட கங்காவைப் பார்த்து, 'உனக்கு இது மகிழ்ச்சியா?' எனக் கேட்கும்போது, 'மகிழ்ச்சியோ துக்கமோ தங்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என அறியக்கூடியவர்களுக்கு மட்டும், எங்களுக்கு அப்படி எந்தத் தெரிவுமே இல்லையே ' என அந்தக் கேள்வியைத் தட்டிக்கழிக்கும் போது அவர்களின் வாழ்க்கையை அவர்கள் தீர்மானிக்கமுடியாத கட்டத்திற்கு யுத்தம் அவர்களைக் கொண்டுவந்துவிட்டதையும் அறிகின்றோம்.

அனுக்கின் இந்த நாவலில் எனக்கு மிகப்பிடித்த விடயங்களில் ஒன்று என்னவென்றால், அவர் சாதாரண மக்களின் நிலையை, அவர்களுக்கிருந்த தெரிவுகள் எவை அன்று இருந்தனவோ, அதற்குள் நின்று இந்த நாவலை எழுதியிருப்பது. அதற்கு அப்பால் போய் அரசையோ, புலிகளையோ, இடங்கிடைக்கின்றதேயென விளாசவுமில்லை. இப்படியான நிலையில்தான் மக்கள் அன்று வாழவேண்டியது என்று போருக்கு வெளியில் இருந்தவர்க்கு ஒரு கதையை அனுக் சொல்கின்றார். போர் என்பது நீங்கள் கற்பனையே செய்யாத தளங்களில் மனித வாழ்வை எப்படிக் கீழ்நிலைக்குக் கொண்டு போகின்றதெனவும் -ஒருநாளைச் சித்தரிப்பதன் மூலம்- காட்டுகின்றார்.

முக்கியமாய் ஒரு அத்தியாயத்தில், திருமணம் முடிந்தபின் கூடாரத்தில் தினேஷூம், கங்காவும் தனித்திருக்கும் நேரத்தில் யுத்தத்தின் மத்தியில், இந்த யுத்தம் எப்படி உடல்களின் மீதான இயல்பான வேட்கையையும் இல்லாமற் செய்துவிடுவதை அவர் விபரித்திருக்கும் முறை கவனிக்கத்தக்கவை. பலநாட்களாய் தூக்கமே இல்லாதிருக்கும் தினேஷ் (அவருக்கு எவ்வளவு முயன்றாலும் நித்திரையே வருவதில்லை) கங்காவிற்கு ஒரு அதிசயமான பிறவியாக இருக்கின்றார். இடையில் ஏதோ காட்டின் கரையிலிருந்து ஒலிவர, இயக்கந்தான் ஆட்களைச் சேர்க்க வந்துவிட்டார்களோ என  இருவரும் அஞ்சுகின்றனர்.

தினேஷ்,  வெளியில் போய்ப் பார்க்கின்றேன் எனப் புறப்படும்போது, காயம்பட்ட காகத்தைப் பார்க்கின்றார். அந்தக் காகத்திலிருந்து வேறொரு கதை முகிழ்கின்றது. எத்தனை மாதக்கணக்காய் காகம், குயில் இன்னபிற பறவைகளைக் காணவில்லையென அவர் நினைக்கத்தொடங்குகின்றார். காயம்பட்ட காகம் ஒரு பாதுகாப்பான இடத்திற்குப் போகும்வரை நிதானமாய் இருந்து பார்த்துவிட்டு வரும் தினேஷிடம், கங்கா 'பறக்க முடியாத பறவைகள் நீண்டகாலம் வாழ முடியாதல்லவா?' எனச் சொல்லும்போது அதற்கு வேறொரு அர்த்தம் வருகின்றது.

கங்காவின் தோளில் தன்  தாயின் இழப்பிலிருந்து எல்லாவற்றையும் அடக்கிவைத்த தினேஷ் அழுகின்றார். அதுவரை நீண்டகாலமாய் தொலைந்து போயிருந்த தன் நித்திரையைக் கண்டுகொள்கின்றார். விடிகாலையில்  துயிலெழும்போது கங்கா காணாமற் போய்விடுகின்றார். கங்கா தன்னோடு எப்போதும் காவியபடி இருக்கும் ஒரு பையையும் கூடவே கொண்டு சென்றுவிடுகின்றார். ஒவ்வொரு பொழுதும் அதற்குள் என்ன இருக்கிறதெனத் தேடவிரும்பும் தினேஷின் ஊடாக வாசிப்பவர்களுக்கும் அந்த மர்மம் எழுந்தபடி இருக்கின்றது. இறுதி முடிவும் நாவல் தொடங்குவதைப் போல துயரமானதுமிகக் குறுகிய திருமணம் ஒருநாளில் முடிந்தும் போகின்றது. ஆக அந்த ஒருநாள் என்றென்றைக்குமாய் மறக்கமுடியாத ஒருநாளாய் தினேஷின் வாழ்வில் ஆகிப்போகின்றது.

3.
அனுக் அருட்பிரகாசம் கொழும்பில் வசிக்கின்றவர். இப்போது தத்துவவியலில் கலாநிலைப் பட்டத்தை கொலம்பியா பல்கலையில் படித்துக்கொண்டிருக்கின்றார். யாழ்ப்பாணப் பெற்றோருக்குப் பிறந்தவர். தமிழ் தன் வீட்டு மொழியென்றாலும், முதலாம் வகுப்பிலிருந்து ஆங்கிலத்தில் கற்றவர். தமிழிலும் எழுதுகின்றவர்/எழுத விரும்புகின்றவர். கொழும்பு அறிவுஜீவிகளைக் கூட்டம் மீது எரிச்சல்வந்தே தான் நிறையப் புத்தகங்களை வாசித்து தன்னைத் தனிமைப்படுத்தியதாய்க் கூறுகின்றார். ஆங்கிலம் ஒரு காலனித்துவமொழி என்கின்ற புரிதல் இருப்பதாய் கூறும் அவர், தமிழிலும் எழுத விருப்பம் என்கின்றார். போர் பற்றி நேரடிச் சாட்சிகளின்  கதைகளை கேட்டு பதிவு செய்யப்போன தான், அதை பின்னர் இவ்வாறான நாவலாக மாற்றியதாய் ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். போர் பற்றி தான் வாசித்தவற்றையும், தொலைக்காட்சிகளில் பார்த்த திரைப்படிமங்களும் தன்னைப் பாதித்து இதை எழுத வந்ததாகவும் கூறுகின்றார். தனது கலாநிதிப் பட்டத்தை முடித்துவிட்டு இன்னும் சில வருடங்களில் இலங்கை போய்விடுவேன் எனவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கின்றார்.


ஈழத்தில் நடந்த யுத்தத்தோடு சம்பந்தப்பட்டு வரும் புனைவு மற்றும் புனைவுகளில்லாதவற்றை ஓரளவு வாசித்த அளவில், அநேகமானவர்கள் தமிழில் வாசிக்காதவர்கள்/தமிழை வாசிக்கத் தெரியாதவர்கள் எழுதியதன் பலவீனம் அவர்களின் சித்தரிப்புக்களில் எப்படியேனும் தெரியும். அந்தப் பலவீனத்தை அனுக் தாண்டியிருப்பதற்கு அவருக்குத் தமிழ் பரிட்சயமாக இருப்பது முக்கிய காரணம் என நினைக்கின்றேன். அத்துடன் அடிக்கடி பல இடங்களில்  ஏலவே குறிப்பிட்டதைப் போல, மிகச்சிறிய நாவல்களையும்  நுட்பமான சித்தரிப்புக்களுடன் எழுதவேண்டுமென்பதற்கிணங்க இந்த நாவல் 200 பக்கங்களில் அடக்கப்பட்டு இருப்பது பிடித்திருந்தது.  நாவலில் கூறப்பட்ட சம்பவங்களும், அனுபவங்களும் தமிழில் நாம் ஏற்கனவே வாசித்திருக்கக்கூடிய/ அறிந்திருக்கக்கூடியதுதான். ஆனால் இந்த நாவலின் சிறப்பம்சம் என்னவென்றால் அதன் சித்தரிப்புக்கள், ஆங்கிலச் சூழலிற்கு அவ்வளவு பரிட்சயமில்லாதது. முக்கியமாய் அரசு X புலிகள் என எப்போதும் பேசிக்கொண்டிருக்கும் மேற்குலகிற்கு, அவர்களும் பங்காளிகளான ஈழயுத்ததின் கோரத்தை அவர்களின் மொழியிலே முன்வைத்து, இந்தச் சாதாரண மக்களுக்கான நியாயம் என்னவாக இருக்குமெனக் கேட்க விழைவதாகும்.

(நன்றி: 'அம்ருதா' - மாசி/2017)

0 comments: