Wednesday, January 29, 2025

கார்காலக் குறிப்புகள் - 68

 

கலை அழைத்துச் செல்லும் பாதை
***************

உஷா ஜேயைப் (Usha Jey) பற்றி பலர் அறிந்திருப்பீர்கள். பரத நாட்டியத்தை ஹிப் ஹொப்போடு கலந்து Hybrid Bharatham என்கின்ற புதிய வகை நடனத்தை அறிமுகம் செய்கின்றார். அண்மையில் அவர் மும்பையில் கொடுத்த TedTalk ஐ பார்த்திருந்தேன். தானொரு தமிழர், யாழ்ப்பாணத்தில் பிறந்து பிரான்சில் வசிக்கின்றார் என்று ஓர் அறிமுகத்தைக் கொடுக்கின்றார். உஷா இந்த நடனங்களின் புகழால் பல முன்னணி நிறுவனங்களின் (Elle, Levis, Converse) விளம்பரங்களில் வந்திருக்கின்றார். ஒரு புலம்பெயர்ந்த அகதி வாழ்வில் தனது சொந்தத் திறமையால் ஒருவர் இந்தளவு உயரத்துக்கு பறப்பது அவ்வளவு எளிதல்ல.. நாம் இவ்வாறான இடங்களை அடைவதற்கு நமக்கு எந்த முன்னோடிகளும், பின்புலங்களும் இல்லை என்பதை அறிவோம் இல்லையா?

சில வருடங்களின் முன், இங்கிலாந்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு நிகழ்விலும் இவர் நடனம் ஆடியிருக்கின்றார். ஆங்கிலேயர் தம் காலனித்துவ பெருமைகளோடு இன்னுமிருக்கும் நாட்டில் தமிழ்க்கலாசாரத்தை பிரதிபலிக்கும் குத்துப்பாட்டுக்கு ஆடியதுதான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.

எனக்குத் தெரிந்து உஷா ஜே, நவனீ (Navz-47), ஷோபியா அக்கரா போன்ற பல பெண்கள் தங்களுக்கு முன்னோடி என்று மாயா அருட்பிரகாசத்தை (M.I.A) குறிப்பிடுகின்றார்கள். உஷா, நவனீ போன்றவர்கள் மாயாவின் இசை நிகழ்விலும் இப்போது பங்குபற்றியும், மாயாவோடு உரையாடல்களையும் செய்து கொண்டிருப்பார்கள். ஒரு பெண் (மாயா) முன்னோடியாகச் சென்று திறப்பைச் செய்யும்போது எத்தனை பேருக்கு அவர்களின் கதவுகள் திறக்கின்றன என்பது எவ்வளவு அருமையானது.

இதனோடு இன்னொரு புறமாக நோர்வேயிலிருந்து '9 Grader Nord' குழுவை உருவாக்கி நம்மிரு பெண்கள் பாடி நோர்வேயின் மிகப்பெரும் விழாவில் (அவர்களின் கிராமி போன்றது) வென்றிருக்கின்றனர். அத்தோடு நவனீ, 9 Grader Nord போன்றவர்கள் தனித்து தமிழில் பாடுபவர்கள். தமிழில் பாடிக்கொண்டு தமிழ் பேசாத அந்நிய நிலங்களில் தமது வேர்களை ஊன்றிக்கொள்வதென்பது எவ்வளவு அற்புதமானது.

எமது தமிழ்ச் சூழலில் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிக்கும்போது out of box ஆக நினைப்பது வெகு அரிது. வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும் விரும்பியவர்கள் வரட்டும். அதுவும் தேவையானதுதான். ஆனால் அதைத்தாண்டி வளரும் பிள்ளைகளை நாம் எந்தளவுக்கு ஒரு சமூகமாக ஆதரிக்கின்றோம் என்று யோசிக்க வேண்டும். எந்தப் பிள்ளைக்குத் திறமையிருந்தாலும் ஒருகட்டத்தில் அவர்களைத் தாங்கிக்கொள்ளும் சமூகப்பாதுகாப்பும், பொருளாதார நிலைமையும் வேண்டியிருக்கும். நாம் அந்தச் சமூகக்கட்டமைப்பை இத்தனை காலத்துக்குப் பிறகும் அவர்களுக்காக உருவாக்கவில்லை என்பதுதான் பெருஞ்சோகம் .

அவர்களாகவே எல்லாவற்றையும் தாங்கி, அடிபட்டு மேலோங்கி வரும்போது மட்டும் ஆகா ஓகோவென்று புகழ்கின்றோமே தவிர, அவர்களின் கலை சம்பந்தமான வளர்ச்சிப்பாதையில் சமூகமாக நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்று யோசிக்க வேண்டும். மாயா இசையில் செய்ததைப் போன்று இப்போது மைத்திரேய் ராமகிருஷ்ணன் ('Never Have I Ever:) ஒரு பெரும் உடைப்பை திரையில் செய்திருக்கின்றார். அவரை முன்னோடியாகக் கொண்டும் ஒரு தலைமுறை இனி திரையை நோக்கி ஆர்வமாக உழைக்கும் என்று நம்புகின்றேன்.

*******

(Jan 11, 2024)

No comments:

Post a Comment