கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ப்யூகோவ்ஸ்கியின் 'பெண்கள்

Wednesday, August 22, 2018

Women by Charles Bukowski

ப்யூகோவ்ஸ்கியின்  பெரும்பாலான படைப்புக்களில் வரும் கதாபாத்திரமான ஹென்றி ஸ்நாஸ்கியே இதிலும் வருகின்றது. ஒருவகையில் இது புனைவுகளில் ப்யூகோவ்ஸ்கியை பிரதிபலிக்கும் ஒருபாத்திரம் எனலாம்.

வழமைபோல ஹென்றி இந்தப் புதினத்திலும் பெருங்குடிமகனாகவும், பெண்களை வசியம் செய்பவராகவும் இருக்கின்றார். நூறு அத்தியாயங்களுக்கு மேலாக நீளும் இப்புதினத்தில், ஆகக்குறைந்தது 75ற்கு அத்தியாயங்களுக்கு மேலாக அவர் பெண்களைப் படுக்கைக்கு அழைத்துச் செல்வதும், குடிபோதையில் இருப்பதுவுமே எழுதப்பட்டிருக்கும். ஆனாலும் குறிப்பிட்ட சிறு வட்டத்திற்குள் நாவல் சுழன்றாலும் மிகுந்த சுவாரசியமாகவும், எள்ளல் நடையுமாகவும் எழுதப்பட்டிருப்பதால் நாவலை அலுப்பின்றி வாசிக்கமுடிகின்றது.

இவ்வாறு அவர் வலைவிரிக்கும்/அவருக்காய்க் கிடைக்கும் பெண்களைப் பற்றிச் சொன்னாலும், ஹென்றியின் தனிமையும், இருத்தல் பற்றிய அவரின் தேடல்களும் இறுதிப்பகுதியில் ஒருவகையான கனத்தைக் கொடுக்கின்றன. பெண்களை உடலாகவே - இன்னும் குறிப்பாகச் சொன்னால் பெண்களின் கால்களை அந்தளவிற்கு இரசிக்கும்- ஹென்றிக்குத் தன் சுயம் எதுவென்ற பிணக்குப்பாடுகள் அவருக்குள் எழுகின்றது. ஒரு Thanks Giving நேரத்தில் ஒரு பெண்ணைச் சந்திக்கவேண்டியிருப்பதால், இன்னொரு பெண்ணிற்கும் இந்த விடயத்தைச் சொல்லவேண்டுமே என்ற மனஅழுத்தத்தில், அழுது தீர்க்கின்ற ஒரு குழந்தைத்தனமான அவரின் இன்னொரு பக்கத்தையும் பார்த்து வாசிக்கும் நாங்கள் திகைத்து நிற்கின்றோம்.

இவ்வாறு இப்படி எந்தப் பெண்ணுக்கும் 'பொய்' சொல்லக்கூடாது/ஏமாற்றக்கூடாது என நினைக்கின்ற ஹென்றி இனித் திருந்திவிடுவார் என்றால் பிறகு அவர் இது எப்போது நடந்தது என்பது மாதிரி, நம்மை ஏமாற்றிவிட்டு மீண்டும் பழைய 'தேடலுக்கு'ச் சென்றுவிடுவார். தனது வேலையை விட்டு, முழுநேர எழுத்தாளரான ஹென்றிக்கு, தனக்குப் பெரும் பணமும், விமானச் சீட்டும், தங்குவதற்கும் இடமும் தந்து கவிதைகளை வாசிக்க வைக்கும் பல்கலைக்கழகங்கள்/மியூசியங்கள்/தனிப்பட்டவர்களின் மதுபான விடுதிகள் என்பவை ஒருவகையில் ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது.

இவ்வளவு மதிப்புக்கொடுத்து வாசிக்கக் கேட்க, என்னிடம் என்ன இருக்கின்றதென அவருக்கே அவரில் வியப்பாக இருக்கின்றது. அதேசமயம் யாரெனும் எவரும் தமது படைப்புக்களை வாசிக்கவும், அது பற்றிக்கருத்துச் சொல்லவும் கேட்கின்றபோது,  தயவுதாட்சண்யம் காட்டாது, முடியாதென நிராகரித்தும்விடுகின்றார். பிறர் தனக்கு முன், அவர்களின் கவிதையை வாசித்துக் காட்டுவதைக் கூட மூர்க்கமாக மறுதலித்துவிடுவார்.
பெண்களும், குடியும் தனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது என்று ஹென்றி சொல்வதில்லை, ஆனால் இவ்விரு விடயங்களுமே தனது வாழ்க்கைத் தேர்வாக இருக்கின்றது என்பதையே தொடர்ந்து இந்நாவலில் ஹென்றியின் பாத்திரம் வலியுறுத்தியபடி இருக்கின்றது. ஹென்றியின் குடிப்பழக்கம் பார்த்து பலர் அவர் விரைவில் இறந்துவிடுவார் என்று எச்சரிக்கின்றனர். அப்படி சொல்லும் அனைவரிடம் தான் 80 வருடங்கள் இருப்பேன் என்றும், அப்போது தனக்கு ஒரு 18 வயது பெண் காதலியாகவும் இருப்பார் என்றும் உறுதியாய்ச் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்.


ஹென்றி சந்திக்கும் ஒவ்வொரு பெண்களும் வெவ்வேறு கதைகளைத் தமக்குள் கொண்டிருப்பவர்கள். அதிலும் சாரா என்கின்ற பாத்திரம் சுவாரசியமானது. ஹென்றிக்குப் பிடித்த பெண் சாரா என்றாலும், சாரா ஒரு இந்தியச் சாமியாரைப் பின் தொடர்பவர். அந்தச் சாமியார் திருமணத்திற்கு முன் எவ்வித உடல்சார்ந்த உறவும் வைத்திருக்கவும் கூடாது என்று போதித்துவிட்டு இறந்தும்விட்டார்.  ஆகவே சாமியாரிடம் போய் 'இது சிக்கலாக இருக்கின்றது மாற்றுங்கள்' எனவும் கேட்கமுடியாது. ஹென்றிக்கோ சாராவின் உடல் மீது ஈர்ப்பு, அதேசமயம் அதற்காக இவரால் சாராவைத் திருமணமும் செய்யவும்முடியாது. இவர்களுக்கிடையிலான இந்த உறவு பற்றிய அத்தியாயங்களை வாசிக்கும்போது நம்மையறியாமலே ஒரு புன்னகை வந்தபடியே இருக்கும்.

ஒரு கவிதை வாசிப்பிற்காகப் போய் ஓரிடத்தில் தங்கும்போது, ஹென்றிக்கு அடுத்த அறையில் தனது படைப்பை வாசிப்பதற்காக வில்லியம் பாரோஸோம் வந்திருப்பார். அப்போது ஹென்றியிடம் அவரைச் சந்திக்கப் போகின்றீர்களா என ஒருவர் கேட்கும்போது வேண்டாம் என மறுப்பார். ஹென்றி தனது படைப்புக்களைப் பற்றி பிறர் புகழ்வதைக் கேட்பதைத் தவிர்ப்பதைப் போல, தன் சமகாலத்து படைப்பாளிகளையும் விட்டு விலகியே நிற்கின்றார். அதுபோலவே ஹெமிங்வே பற்றி இந்நாவலில் பேச்சு வரும்போது, ஹெமிங்வே நன்றாக எழுதக்கூடியவர்தான், ஆனால் அவரின் எல்லா நாவல்களிலும் போரை எப்படியேனும் கொண்டுவந்துவிடுவார் எனச் சொல்லி ஹென்றி சலிக்கின்றார்.

ஹென்றி என்கின்ற பாத்திரம் கூட்டத்தை வெறுக்கின்ற, தனிமையை விரும்புகின்ற, எங்கேயும் பயணிக்க விரும்பாத ஒரு சிறு உலகிற்குள் தன்னை அடைத்து வைத்திருக்கின்ற ஒன்றாகவே நமக்குக் காட்டப்படுகின்றது. ஆனாலும் இந்தக் குறுகிய உலகத்திலிருந்து ஹென்றியின் வாழ்வு சுழன்றாலும் அந்த வாழ்வை ப்யூகோவ்ஸ்கி விபரிக்கும்போது நமக்கு ஒருபோதும் அலுப்பு வருவதில்லை. ப்யூகோவ்ஸ்கியைப் போல பெண்களை இந்தளவிற்கு ஆன்மாவில்லாத உடல்களாக ஒருவர் சித்தரிக்கமுடியுமா எனத் திகைப்பு வந்தாலும், அவரை அறியாமாலே முக்கியமான எல்லா இடங்களிலும் பெண்களை வியந்துகொண்டிருக்கின்ற பகுதிகளையும் அவரால் தவிர்க்கமுடியாது இருப்பதையும் குறித்தாக வேண்டும்.


Charles Bukowski
ஹென்றி தனக்குள் வைத்திருக்கும் பாதுகாப்பு வளையங்களை உடைத்து, உள்நுழைந்து பெண்களெல்லாம் ஏன் ஹென்றி இப்படியிருக்கின்றார் என்கின்ற வினாவை எழுப்பாமல் செல்வதில்லை. தன்னையறியாமலே தன்னை அவ்வப்போது திறந்துவிடும் ஹென்றி தனது இளமைக்காலம் ஒழுங்காகக் கழியாததால்தான், தான் தனது 50/60களில் தன்னைவிட 20/30 குறைந்த பெண்களைத் தேடிப்போகின்றேன் என்றும், தன்னால் உண்மையாக எவரையும் காதலிக்கத்தெரியாதும் என்றும் வாக்குமூலங்களையும் கொடுத்துவிடுகின்றார்.
ஹென்றி என்பது ப்யூகோவ்ஸ்கியின் alter ego ஆக இருப்பதுபோல, அவரது படைப்புக்களில் வருவதைப் போலத்தான் இத்தனை பெண்களைச் சந்தித்திருப்பாரோ என்று நாம் அந்தளவிற்கு வியக்கவோ/வெறுக்கவோ தேவையில்லை. அதுவே புனைவு ஒரு படைப்பாளிக்குத் தரக்கூடிய பெரும் சுதந்திரம். அதை ப்யூகோவ்ஸ்கி அருமையாகப் பாவித்திருக்கின்றார். அவ்வளவுதான்.

ப்யூகோவ்ஸ்கியின் எந்தப் புனைவை வாசிக்கத் தொடங்கினாலும் அதற்கு முன் நிபந்தனையாக நமது யதாத்த வாழ்வு முன்வைக்கும் ஒழுக்கம்/அறம் சார்ந்த மதிப்பீடுகளை சற்றுக் கழற்றிவைத்தாலே, அவரின் படைப்புக்களைப் பின் தொடர்ந்து போகமுடியும். இல்லாவிட்டால் தொடக்கத்திலேயே அவரின் படைப்புக்கள் நம்மைச் சுழற்றித் தூர எறிந்துவிடும். ப்யூகோவ்ஸ்கியின் உலகில் எவ்வித நியாய அநியாயங்களுக்கும் இடம் இருப்பதில்லை போல எவை குறித்த மதிப்பீடுகளுக்கும், பிறர் தன்னை இப்படி அடையாளப்படுத்திவிடுவார்களோ என்கின்ற பயங்களுக்களுக்கும் இடமில்லை.இப்படித்தான் நான் இருக்கின்றேன், உங்கள் மதிப்பீட்டு வளையங்களில் எனக்கேதும் அக்கறையில்லை என்றே ஹென்றி ஸ்நான்ஸ்கி -நேரடியாகச் சொல்லாமல்- தன்னைப் பிரகடனப்படுத்துகின்றார். அதை ஏற்றுக்கொள்வதா இல்லை என்பது வாசிக்கும் நமது தெரிவே தவிர, இதில் ப்யூகோவ்ஸ்கி நம்மை எதையும் வற்புறுத்தப் போவதில்லை.

ப்யூகோவ்ஸ்கியின் படைப்புக்களிலிருந்த பாத்திரங்களின் தனிமையையும்,  அதேவேளை அவர் கைவிட்ட  'அறங்களை'யும் இணைத்து படைப்புக்களை உருவாக்கும் ஒருவராக ஹருக்கி முரகாமியை கற்பனை செய்து கொள்வது எனக்குப் பிடித்தமாயிருக்கின்றது. அவ்வாறு தமிழ்ச்சூழலில் ப்யூகோவ்ஸ்கியின் பாதிப்போடு எழுதத் தொடங்கி அதைப் பிற்காலத்தில் முற்றாகச் சிதைத்த ஒருவரென நினைக்கும்போது சாரு நிவேதிதா நினைவிற்கு வருகின்றார்.

...................................

நன்றி: நடு

பிரமிள்

Sunday, August 19, 2018


1.
ழத்திலக்கியம் என வரும்போது தொடர்ந்து வாசிக்கவும் உரையாடவும் வேண்டியவர்களென நான் மு.தளையசிங்கத்தையும் (மு.த), எஸ்.பொன்னுத்துரையையும் (எஸ்.பொ)  முன்மொழிந்து வருகின்றவன் . இவர்கள் இருவரையும் விட இன்னொருவரையும் இதில் சேர்க்கலாமோ, விடலாமோ என்கின்ற தயக்கங்கள் எப்போதும் எனக்குண்டு. அது தருமு சிவராம் என்கின்ற பிரமிள். 57 வயதுகள் வரை வாழ்ந்த பிரமிளின் 30 வருடங்கள் இலங்கையிலே கழிந்திருக்கின்றன என்கின்றபோது அவரை ஈழத்தவராகவே கொள்ளமுடியும். ஒருவகையில் பார்த்தால் அவருடைய மேதமை அவருடைய இருபதுகளிலேயே நிகழ்ந்துமிருக்கின்றது. பிறகான காலங்களில் அவர் அதை விரித்து எடுத்துச் சென்றதையே நாம் எளிதாகப் பார்க்கமுடியும்.

பிரமிள், அவரின் 20களின் தொடக்கத்தில் 'எழுத்து' இதழில் எழுதியவை எல்லாம் 'அசுரத்தனமான'வை. இலங்கையில் இருந்துகொண்டே அந்தக்காலத்தில், எவ்வாறு இவ்வாறான விரிவான வாசிப்பும், அதை அற்புதமாக தொகுத்து எழுத்தில் வைக்கும் திறமையும் வந்ததென நான் வியந்து பார்க்கும் ஒருவர் தளையசிங்கம் என்றால் இன்னொருவர் பிரமிள்.
 
ஒருவகையில் பார்த்தால் பிரமிளே (சி.சு.செல்லப்பாவைத் தவிர்த்து) அன்றைய காலங்களில் தமிழகத்தில் மெளனியைக் கண்டுபிடித்தவர் எனச் சொல்லலாம். மெளனியினுடனான அவரது உறவு பல்வேறு நிலைகளை உடையதெனினும், பிரமிள் தன் இறுதிக்காலங்கள் வரை மெளனியை விட்டுக்கொடுக்காததை, அவர் 'எழுத்தி'ல் எழுதிய கட்டுரைகளிலிருந்து, 'மெளனி கதைகளுக்கு' எழுதிய முன்னுரையிலிருந்து, மெளனியின் மறைவின்போது எழுதிய பதிவிலிருந்து,'மெளனியும், மவ்னியும்' என 1992ல் சற்று நகைச்சுவையாக எழுதிய கட்டுரைவரை நாம் அதனைக் கண்டுகொள்ளலாம். பிரமிள், மெளனியை ஒரேயொருவருக்கு முன் மட்டும் கொஞ்சம் கீழிறக்கின்றார் என்றால் அது புதுமைப்பித்தனுக்கு முன்னால் மட்டுமேயாகும்.

பிரமிளுக்கு மெளனியின் கதைகளின் அறிமுகம் 'எழுத்தி'ன் மூலம் கிடைத்து, அவரை 60களில் இந்தியாவிற்கு அவ்வப்போது போகும்போது சந்திக்கின்றார். பிரமிளினதும், சி.செ.செல்லப்பாவினதும் எழுத்துக் கட்டுரைகளில் மூலம் மெளனி மீளக்கண்டுபிடிக்கப்படும்போது, மெளனியின் கதைகள் அவ்வளவு கிடைக்காததால் (மெளனியின் முதல்தொகுப்பு: 'அழியாச்சுடர்'), மெளனி என்ற ஒருவரே இல்லை என்கின்ற பேச்சு காற்றுவாக்கில் வெளிக்கிளம்பும்போதே, பிரமிள் அவரது கதைகளை மீண்டும் பிரசுரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைக்கின்றார். பிரமிளின் உற்சாகப்படுத்தலோடும் மற்றும் அவரின் பிரபல்யம் வாய்ந்த முன்னுரையோடும் அந்தத் தொகுப்பு வெளிவருகின்றது. மெளனி பரவலாக அறிமுகஞ்செய்யப்படவேண்டும் என்பதற்காய் தனது வழமையான எழுத்துப்பாணியில் இருந்து விலகியே தான் அந்த அறிமுகத்தை எழுதியதாகவும் பிரமிள் ஓரிடத்தில் தெரிவிக்கின்றார். அதேபோன்று மெளனி தனித்து இருக்கின்றார்/இயங்குகின்றார் அவரைக் கவனிக்கவேண்டுமென ந.முத்துச்சாமியையும், வெங்கட்சாமிநாதனையும் மெளனியைச் சந்திக்க வைக்கின்றவராகவும் பிரமிளே இருக்கின்றார்.

ஒருவகையான புகைமூட்டமாக மெளனி பற்றிய சித்திரம் நம் தமிழ்ச்சூழலில் இருக்கையில், பிரமிள் எழுதிய மெளனி பற்றிய கட்டுரைகளினூடாக நாம் மெளனி பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தைக் கண்டறிந்துகொள்ளலாம். இன்னொருவகையில், மெளனி பற்றி இன்று 'கேள்விப்பட்டதாய்க்  கூறப்படுகின்ற' கதைகள் எல்லாம் பிரமிளின் எழுத்துக்களினூடாக - அதற்குரிய நன்றி கொடுக்காமலே- பகிரப்படுவதையும் நாம் பிரமிளை வாசிப்பதினூடாக அறிந்துகொள்ளலாம்.

பிரமிள், சி.சு.செல்லப்பா, வெங்கட்சாமிநாதன், சுந்தர ராமசாமி ஏன் மெளனியுடன் கூட ஒன்றாக அவர்களின் கருத்தியல் தளங்களில் இயங்கி, பிறகு அவர்கள் அனைவர் பற்றியும் எடுத்தெறிந்து எழுதியதும் வரலாறு.  நமது கருத்தியல் தளங்களை, நாம் பின் தொடர்ந்த ஆளுமைகளை விமர்சித்து விலகிப்போவது, எழுத்தின் போக்கில் இயல்பாக நடப்பதெனினும், ஒருவரின் மீதான கோபத்தால் காழ்ப்புணர்வாகி சில இடங்களில் தறிகெட்டுப்போன சறுக்கலையும் பிரமிள் பிற்காலங்களில் சந்தித்தவர் என்பதையும் நாம் மறுக்கவேண்டியதில்லை. ஆனால் அவ்வாறு எழுதிய எழுத்துக்களில்கூட, பிரமிளின் ஆளுமை அவரில் சுழன்றாடிய காழ்ப்புணர்வைத்தாண்டி விகசித்து எழுந்தது என்பதுதான் -என்னளவில் - முக்கியமானது.

2.
ங்களுக்குப் பிடித்த ஆளுமைகளை, ஒருவர் சுழற்றி சுழற்றி அடிக்கும்போது கூட, அவரின் எழுத்தில் ஒரு வசீகரம் இருக்கின்றது என்று எப்போதாவது நினைத்திருக்கின்றீர்களா? எனக்கு அப்படி பிரமிளின் எழுத்தில் தோன்றியிருக்கின்றது. என்னை வசீகரிக்கும் ஆளுமைகளான எஸ்.பொவையும், மு.தவையும் இந்தளவிற்கு ஒருவர் தாக்குவாரா என்றளவிற்குப் பிரமிள் போட்டு மிதிக்கும்போதும் கூட,  ஒரு புன்னகையுடன் அவற்றை என்னால் வாசிக்கமுடிகிறது. ஏனெனில் அங்கே அவர்,  நான் கவனிக்கத் தவறிய இன்னொரு பக்கத்தை எவ்வித சமரசமுமின்றி காட்டுகின்றார் என்பதே எனக்கு  முக்கியமாகின்றது. எஸ்.பொவின் 'தீ' வந்தபோது, அது ஒரு குப்பை என மு.தவின் கட்டுரைக்கு பிரமிள் எதிர்வினை எழுதுகின்றார். பின்னர் மு.தவைத் திருஉருவாக்கும் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் மற்றும் பூரணி குழுவினர் உட்பட எல்லோரையும் பிரமிள், மு.தவை நிர்மூலமாக்குவதன் மூலம் இடையூறு செய்கின்றார். இன்று ஜெயமோகன் தான், மு.தவை முதன்நிலைச் சிந்தனையாளராக முதன்முதலில் வைத்ததான ஒரு மாயை சிலரால் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் பிரமிளை வாசிக்கும் ஒருவர் அது சுந்தர ராமசாமியால் முன்வைக்கப்பட்டு, வெ.சாவினால் நிலை நிறுத்தப்பட்டது என்பதை எளிதாக அறியமுடியும். ஆகவேதான் கூறுகின்றேன், பிரமிள் சிலவேளைகளில் 'விதண்டாவாதம்' செய்கின்றார் என்று தோன்றினாலும், அதனூடாக பல புதிய விடயங்களை நாம் அறிந்துகொள்ளமுடியும்.

மு.தவை முக்கியமானவராகக் கொள்ளும் என்னைக்கூட பிரமிள் அவரின் 'மனோவியாதி மண்டலம்' என்ற கட்டுரையை எளிதாகத் தாண்டவிடாமல் செய்கின்றார் என்பதில்தான் பிரமிள் தொகுத்து வைக்கும் கருத்துக்களின் வீரியம்  இருக்கின்றது. இதில்தான் மு.தவை ஒரு ஆஸ்மாகாரராக, சிறைத்தண்டனை பெற்றவராகப் பேசும் தரப்பிற்கு எதிராக, 'கலைத்துவம் அவ்வளவு இல்லாதபோதும், பாதாள இரகசிய வாழ்க்கையும், கடும் சிறைத்தண்டை பெற்று வாழ்ந்ததற்குமாய்' கே.டானியலை நாம் அதிகம் சிலாகிக்கவேண்டும் என்கின்றார். தன் பிறப்பால் மு.தவிற்கு வந்த 'சிறப்புக்கூட' இல்லாது, சாதியால் ஒடுக்கப்பட்ட கே.டானியனுக்கே அதற்கான 'உரிமை' இருக்கின்றதென்கிறார்.  'வர்ணாச்சிர தர்மம் என்பதே ஒருவகையில் செக்ஸ் கட்டுமானம், இந்த செக்ஸ் கட்டுமானம் சாதி, வர்க்கம் போன்றவற்றைத் தாண்டுவதை, முழுமையாக இல்லாதபோதும் கே.டானியல் தன் எழுத்துக்களினூடாக செய்து பார்க்க விழைந்தவர்' என்று பிரமிள் முன்வைக்கும் வாசிப்பு சிலாகிக்கக்கூடியது.

அதேவேளை, மு.த, எஸ்.பொவின் 'தீ'யிற்கு ஆதரவாய் எழுதியவுடன் இரண்டுபேரும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என பிரமிள் நம்புகின்றார். உண்மையில் 'தீ' பற்றியும், எஸ்.பொவின் பிற கதைகள் குறித்தும் மு.தவிற்கும், எஸ்.பொவிற்கும் இடையில் முரண்கள் இருந்ததை நாம் எஸ்.பொவ மற்றும் மு.தவின் தொகுக்கப்பட்ட எழுத்துக்களை வாசிக்கும்போது அறியலாம். மேலும் 1985யில் 'மனோவியாதி மண்டலம்' எழுதும் பிரமிள் - முக்கியமாய் மு.த மறைந்து நெடுங்காலம் ஆனபின் - மு.த தன் தரப்பை முன்வைக்கும் இடமில்லாததை அறிந்தபின், இன்னும் நிதானமாக மு.தபற்றி எழுதியிருக்கலாம். பிரமிளின் சிக்கல் என்னவென்றால் மு.தவை விமர்சிப்பதைவிட, அவரை முன்வைக்கும் சு.ரா, வெ.சா மீதிருக்கும் மூர்க்கமே ஒருவகையில் முன்னிற்கின்றது என்பதையும் ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.

எனக்குப் பிடித்த எஸ்.பொவையும், மு.தவையும் சுட்டெரிக்கும் பிரமிளின் கட்டுரையையே சுவாரசியமாக வாசிக்கக்கூடிய நான், சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே.சிலகுறிப்புகளை' கிழிகிழியென்று கிழிக்கும் 'புதிய புட்டியில் பழைய புளுகு: ஜே.ஜே. சில குறிப்புகள்'  என்கின்ற பிரமிளின் கட்டுரையை கவனிக்காமல் இருக்கமுடியுமா என்ன? அதுவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு படைப்பாக 'ஜே.ஜே.சிலகுறிப்புகளை' கொண்டாடும் என்னைப்போன்ற ஒருவனைக் கூட, இவையெல்லாம் 'ஜே.ஜே.சிலகுறிப்புகளில்' இருந்தனவா என வியக்க வைத்து வாசிக்கவைத்த கட்டுரையென பிரமிளின் இந்தக் கட்டுரையைக் குறிக்கலாம். ஜே.ஜே.சில குறிப்புகளுக்கு பிரமிள் வைத்த இந்த விமர்சனம், சு.ராவை ஆளுமையாகக் கொள்பவர்களால் கூட விலத்திவைக்க முடியாதளவிற்கு மிகக்கூர்மையானது.

3.
பிரமிள் இளமையிலே விகசித்த ஒரு துருவ நட்சத்திரம் என்பதை அவர் தனது 20களில் எழுதிய கட்டுரைகள் பலவற்றில் நாம் கண்டுகொள்ளலாம். இன்னொருவகையில் அப்போது அவருக்குள் எவ்வித காழ்ப்புணர்வும், பக்கச்சார்பு எடுக்கவேண்டிய அவசியமுமில்லாத ஒரு 'பரிசுத்தமான மனது'  இருந்ததைக் காணலாம். மெளனியை முதன்முதலில் சந்திக்கும்போது (21 அல்லது 22 ஆக இருக்கலாம்), மெளனி பிரமிளைச் சந்திக்க அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. அப்படியான மெளனி சட்டென்று 'K என்றால் யார்?' என்கின்றார். 'காஃப்காவின் 'Trail', 'White Castle' நாயகர்களுக்குப் பெயர் இருக்காது. K என்றுதான் இருக்கும்." என பிரமிள் பதிலளிக்கின்றார். தான் இது பற்றி எழுதியதால்,  உண்மையில் அவற்றை வாசித்தேனா, இல்லை இவை வெறும் பெயர் உதிர்ப்புக்கள்தானா என மெளனி தன்னிடம் பரிட்சித்துப் பார்த்தார் என்கின்றார் பிரமிள். மெளினிக்கும், பிரமிளுக்கும் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கான இடைவெளி என்பதையும் நாம் கவனித்தாகவேண்டும். அதேபோன்று பிரமிள், தன்னை இப்படி மெளனி பரிட்சித்துப் பார்த்ததுபோல, தானும் பின்னாளில் செய்திருப்பின் எத்தனையோ பெயர் உதிர்ப்பாளர்களின் தொல்லைகளிலிருந்து தப்பியிருக்கலாமென நகைச்சுவையாகக் குறிப்பிடுகின்றார்.

பிரமிளின் ஆளுமைக்கு அவர் தன் 20களின் தொடக்கத்தில் 'புனித ஜெனே' என்கின்ற கட்டுரையை உதாரணமாகச் சொல்லலாம். ஜெனே பற்றி அவர் நமக்குக் காட்டும் சித்திரம் அவ்வளவு எளிதில் நம்மை விட்டு அகலாதது. அதேபோன்று டி.ராமநாதன் என்கின்ற இலங்கை எழுத்தாளரைப் பற்றிய பிரமிளின் குறிப்பு முக்கியமானது. இங்கிலாந்தில் இருக்கும் என்கெளண்டர் பத்திரிகை வைக்கும் சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு வென்ற கதையை எழுதியவர் டி.ராமநாதன். அந்த முதல்கதையைத் தேர்ந்தெடுத்தவர் விளடீமர் நபக்கோவ் என்பது இன்னுஞ்சிறப்பு. அந்த டி.ராமநாதன் பின்னாட்களில் காந்தியத்தின் மீது ஆர்வமேற்பட்டு, இயற்கை விவசாயம் செய்வதெனச் சென்று இறுதியில் யாழ்ப்பாணத்தில் 87ல் மரணமாகின்றார். பிரமிளுக்கு, டி.ராமநாதனோடு கொழும்பில் இருக்கும்போது பழக்கம் இருந்திருக்கின்றது.

பிரமிளுக்கு, புதுமைப்பித்தனின் மீது இருக்கும் பித்தம் சொல்லிமாளாது. எந்த ஒரு பொழுதிலும் பு.பித்தனை விட்டுக்கொடுக்க முடியாதவராகவே இருக்கின்றார். இன்னொருவகையில் அசோகமித்திரன், ஞானக்கூத்தன் மற்றும் கசடதபறக்குழு, பு.பித்தனை கீழிறக்கும்போது இன்னும் அந்தப்பிடிப்பு பிரமிளில் இறுக்கமாகின்றது. ஒருகட்டத்தில் இந்தப் 'பிராமண' எழுத்தாளர்க்கு எதிராக புதுமைப்பித்தனை முன்வைத்தல் மிக அவசியமென்கின்ற ஒரு நிலைக்குக்கூட வருகின்றார் என்பதை நாம் அவதானிக்கமுடியும். அதேவேளை பு.பித்தனை, க.நா.சு, சு.ரா போன்றவர்கள் முன்வைக்கும் திசைகளிலிருந்து வேறுபட்டு வேறொரு திசையில் பு.பித்தனை நமக்காய் வாசிப்புச் செய்துகாட்டுகின்றார்.

என்னைப் பொறுத்தவரை பிரமிளின் ஆளுமை விகசித்து என்றால் அவரது 20களிலும், 30களிலும் என்றுதான் சொல்வேன். பிறகான காலங்களில் தான் கட்டிய பலவற்றை உடைப்பதிலும், தனிப்பட்ட கோபதாபங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதிலும் காலத்தை வீணடித்த ஒரு பிரமிளை என்னால் எளிதாகக் கண்டுகொள்ள முடியும்.  பசிய புல்வெளியில் நன்று மேய்ந்துவிட்ட ஒரு மாடு, பிறகு ஆறுதலாக அதை அசை போடுவதைப்போலத்தான் பின்னாட்களிலான பிரமிளைக் கொள்வேன். ஆனால் பிரமிள் நம் இலக்கியச்சூழலில் தோன்றி மறைந்த ஓர் அரிய துருவ நட்சத்திரம் என்பது குறித்து எந்தச் சந்தேகமுமில்லை.

நான் முக்கிய ஆளுமைகளாகக் கொள்ளும் எஸ்.பொவோ, மு.தவோ அல்லது பிரமிளோ அவர்கள் தமது புனைவுகளில் மட்டும் நின்றவர்களில்லை. பல்வேறு வடிவங்களைத் தொடர்ந்து முயற்சித்துப் பார்த்தவர்கள்.  தம் படைப்புச் சார்ந்து அல்லாது, நிறைய பிறவற்றை எழுதியவர்கள். ஒருவகையில் பார்த்தால் புனைவுகளில் நான் எஸ்.பொவை அவரின் 'சடங்கு' மற்றும் அவரது சில கதைகளுக்காகவும், மு.தவை அவரின் சில சிறுகதைகளுக்காகவும், பிரமிளை அவரின் குறிப்பிட்ட கவிதைகளுக்காகவுமே கொண்டாடுவேன். ஆனால் அவர்கள் எனக்கு ஆளுமைகளாக, என்னோடு எப்போது உரையாடிக்கொண்டிருப்பவர்களாக இருப்பது அவர்களது அபுனைவுகளினூடாகத்தான்.

தாம் வாழ்ந்த காலங்களில் எந்த அதிகாரத்தின் பின்னால் செல்லாது, எவரையும் ஆசானாக்கிக்கொண்டு சாமரம் வீசாது, தாமே தனித்து நின்று, பின்விளைவுகள் குறித்து கிஞ்சித்தும் யோசிக்காது  எழுதி, அன்றைய காலத்து விடயங்கள் பலதையும்/பலரையும் இடையூறு செய்தவர்கள் இந்த மூவரும். அவ்வாறு அவர்கள் இருந்தபடியால்தான், இன்று அவர்களே தனித்துவ ஆளுமைகளாகி  நம் முன்னே நின்று விகசித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

(பிரமிளின் கட்டுரைகளை 'அடையாளம்' பதிப்பித்த தொகுப்பினூடாக, ஏற்கனவே வாசித்தபோதும், இப்போது 'வம்சி' பதிப்பகத்தால் 'வெயிலும் நிழலும்' என்கின்ற தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைத்தொகுப்பு இன்னும் சிறப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. அதை வாசித்ததின் பாதிப்பில் இது எழுதப்பட்டது)
.........................................
(நன்றி: ‘அம்ருதா’ - ஆடி, 2018)

பார்த்திபனின் 'கெட்டன வாழும்'

Wednesday, July 04, 2018

1.

இந்தக் கதை இந்தியா, உக்ரேன், ஜேர்மனி என்கின்ற மூன்று நாடுகளில் நடக்கின்றது. இந்தியாவில் இந்தக் கதையைச் சொல்பவன் முதலில் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றான். ராஜீவ் காந்தி கொலை நடந்த சில வருடங்களிலிருந்து கதை தொடங்குகின்றது. கதைசொல்லி, இதற்கு முன் ஜெயிலில் இருந்தவன். அதற்கு முன்  இயக்கத்தில் இருந்தவன். இவை எல்லாவற்றுக்கும் முன்,  இலங்கையில் அம்மா சுட்டுத் தரும் தோசைகளைச் சாப்பிட்டபடி, அக்காவோடும் அத்தானோடும் தியேட்டர்களில் படம் பார்த்துக் கொண்டு திரிந்தவன் என ஒரு பின்னணி நமக்குத் தரப்படுகின்றது.

இந்தக் கதைசொல்லி சேர்ந்த இயக்கம், போராடவேண்டிய சிங்கள அரசுக்கெதிராகப் போராடாமல் இந்தியாவில் சொந்த இயக்கத்தவர்களையே கொல்ல, அவன் அதனிலிருந்து ஓடித்தப்புகின்றான். வீட்டுக்கும் திரும்பிப் போகமுடியா நிலை. நெருங்கிய தோழர்களும் கொல்லப்படுகின்றார்கள். பட்டினியால் தினம் தினம்  செத்துப் பிழைக்க, போதைப்பொருள் பசி மறக்க உதவுகின்றது.

ராஜீவ் காந்தியின் மரணத்தோடு, தமிழ்நாட்டு பொலிஸ் இவனைப் போட்டுச் சாத்துவதுடன், பிறகு எவர் டெல்கியிலிருந்து வந்தாலும் இவனைப் போன்றவர்களை ஜெயிலுக்குள் அடைத்தும் உதைக்கின்றது. பசி மட்டும் தொடர்ந்து கொல்கின்றது.

வெளிநாட்டு நண்பர்களிடம் உதவி கேட்கும்போது அவர்கள் தங்கள் நிலை இதைவிடக் கேவலமானது என்றும்,  அளவுக்கு மீறிய கடன்  தொல்லை என்றும் கைவிரிக்கின்றார்கள். யாரோ ஒரு நண்பன் என்னால் உன்னை இங்கே கூப்பிடமுடியாது, வேண்டுமென்றால் எதையாவது வாங்கி நல்லாய்ச் சாப்பிடு என 20 பிராங்கை அனுப்ப, அதைச் செலவழிக்க வெளியில் போக, அப்போதும் பொலிஸ் பிடித்து அடித்து சித்திரவதை செய்கின்றது.

அடுத்து கதையின் களம் உக்ரேனில் திறக்கின்றது. சோவித் யூனியன் உடைந்த உக்ரேன் வறுமைக்குள் போய்க் கொண்டிருக்கின்றது. பிச்சையெடுக்கும் ஒரு சிறுமியும் அவள் தம்பியும் அறிமுகப்படுத்தப்படுகின்றார்கள். பேணிக்குள் போடப்படும் காசு ஒரு கோப்பி கூட வாங்கப் போதாது. தம்பியோ குளிர் வாட்டுகின்றது, வீட்டுக்குள் போவோம் என்கின்றான். பசித்த வயிறோடு வீட்டுக்குள் திரும்பும் இவர்களைப் பின் தொடரும் பெண்ணொருத்தி, ஜேர்மனியில் வைத்தியசாலையில் துப்பரவு செய்யும் வேலை இருக்கின்றது. வருகின்றாயா என அந்தச் சிறுமியிடம் கேட்கின்றார்.

இப்போது கதை ஜேர்மனிக்கு நகர்கின்றது. இந்தியாவிலிருந்த கதைசொல்லி எப்படியோ  ஜேர்மனிக்கு வந்துவிட்டார். அவரின் திறந்திருந்த காருக்குள் ஒரு பதினேழு வயதுப் பதின்மக்காரி ஏறியிருப்பதைக் காண்கின்றார். 'ஒளித்துத் தானிருக்கின்றாள். ஆபத்தில்லை. என்றாலும் அவதானமாக இருக்கவேண்டும். என்னவும் நடக்கலாம். அவளே ஆபத்தானவளாக இருக்கலாம். அல்லது என்னையும் தன்னுடன் ஆபத்தில் மாட்டிவிடலாம்' என கதை சொல்லி நினைக்கின்றார்.

பட்டினியான முகத்தோடு, அவளது வயதுக்குப் பொறுத்தமில்லாத ஆடைகளுடன் இருப்பவளை என்ன செய்வதென்று யோசிக்கின்றார். தனது நண்பரான அந்திரியாஸூடன் கதைத்து முடிவெடுக்கலாமென அவளை தனது அபார்ட்மென்டிற்கு கூட்டி வந்து கோப்பி தயாரித்து கொடுக்கின்றார். அவள் பேசும் மொழி இவருக்கும், இவர் பேசும் மொழி அவளுக்கும் விளங்கவில்லை.  அவளது அரைகுறை ஆடை தாண்டி, அவளது உடம்பில் இருக்கும் கத்தியாலும், சிகரெட்டுக்களாலும் கீறப்பட்ட காயங்களை காண்கின்றார். இவள் பாலியல் விடுதியிற்கு விற்கப்பட்ட சிறுமி என்பதை உடனே புரிந்துகொள்கின்றார்.

கதைசொல்லி மீண்டும் அந்திரியாஸுக்கு தொலைபேசி எடுக்கின்றார். அவன் ஒரு பொலிஸ்காரன். அவன் இப்போதும் தொலைபேசியை எடுக்கவில்லை. அவனோடு மட்டுமே நான் கதைப்பேன் என்கின்றார். இதில் கதையின் முக்கியமானதொரு முடிச்சு இருக்கின்றது.

நேரம் போகின்றது. அவளுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுக்கின்றார். அவள் சாப்பிட்டவுடன் தன்னை எப்படி கத்தியால் வெட்டினார்கள் என்று குசினிக்குள்ளிருந்து கத்தியை எடுத்துக்காட்டி சைகையால் செய்துகாட்டுகின்றாள். ரீவியில் ஒரு பிரபல்யம் வாய்ந்த தொலைக்காட்சிக்காரன் ஒருவன் எப்படி போதை மருந்துகளோடும், பாலியல் விடுதியில் பெண்களோடும் உல்லாசமாக இருந்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்ட செய்தி போகின்றது. தலைமறைவாக இருக்கும் அவன், தன்னிடம் இப்படி பாலியல் தொழில் செய்யும் பெண்களிடம் போன அரசியல்வாதிகளின் பெயர் விபரம் இருக்கின்றது என்கின்றான். கதைசொல்லியோ, இலங்கை இந்தியாவிலிருக்கும் அரசியல்வாதிகள் போல இவர்களும் கோட்டும் சூட்டும் போட்டு அதையேதான் செய்கின்றனர் எனச் சலிக்கின்றான்.

அடுத்தநாள் காலை தனது பொலிஸ் நண்பனைச் சந்தித்து இந்தக்கதைசொல்லி நடந்தவற்றைக் கூறுகின்றான். பொலிஸோ அல்லது ஏதேனும் தேவாலயமோ இந்தப் பெண்ணை பொறுப்பெடுக்கக் கேட்கின்றான். பொலிஸ்காரன், இது ஒரு விசர் வேலை. இப்படியான சிறுமிகளை மாஃபியாதான் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து கொண்டுவருவார்கள். அவர்களோடு ஒருபோதும் போராடவே முடியாது. அவளை வீட்டை விட்டு வெளியேற்றிவிடு, அதுவே நல்லது என்கின்றான்.

இவன் அந்தச் சிறுமிக்கு சொக்கிளேட்டும், உணவும் வாங்கிப் போகின்றான். அவள் குசினியை எல்லாம் சுத்தம் செய்து வைத்திருக்கின்றாள். சொக்கிளேட் கிடைத்த சந்தோசத்தில் இவனை அரவணைத்துக்கொள்கின்றாள். அவளது தீக்காயங்களை ஆடை விலத்தி அவள் காட்ட, இப்படி எவரும் செய்வார்களா எனத் திகைக்கின்றான். அவள் அழுகின்றாள்.

இவனுக்கு வெளியே இப்படியே இந்தப் பெண்ணை அனுப்புவதில் எந்த விருப்பமும் இல்லை. நிறைய யோசிக்கின்றான். இவனுக்கு நண்பன் என்றும் எவனும் இல்லை. இந்தப் பொலிஸ்கார அத்திரியாஸ் மட்டுமே நண்பன். அவனே சொல்லிவிட்டான், இப்படி அவளை நீ வீட்டில் தொடர்ந்து வைத்து ஏதும் பிரச்சினை நடந்தால் நானும் உன்னைக் கைகழுவிவிடுவேன் என்று.

இறுதியால் எதுவுமே பேசாது, அவளுக்கு நூறு யூரோ கையில் கொடுத்து, கதவைத் திறந்து வைத்து வெளியே போகும்படி கையைக்காட்டுகின்றான். அவளுக்குப் புரிகின்றது. இவனால் அவளின் கண்களை நேரடியாகப் பார்க்கவே முடியவில்லை. அவள் அவனை அணைத்துவிட்டு சிரித்தபடி வெளியே போகின்றாள். கதவைச் சாத்திய இவன் ஓடிப்போய் அந்தச் சிறுமியைத் திருப்ப வீட்டை கூப்பிடுவோமா என நினைக்கின்றான். ஆனால் யதார்த்தம் தடுக்கின்றது.

அடுத்தநாள் பேப்பரில் இந்தச் சிறுமி போதை மருந்து கடத்தும் மாஃபியா கும்பலால் கொல்லப்பட்ட செய்தியைப் பார்க்கின்றான். அவர்களின் அகராதியில் இப்படித் தப்பியோடுபவர்களுக்கு சன்மானம், மரணம்.  இவன், தானே கொலை செய்தது மாதிரி  மனம் பதைக்கின்றான். எப்படியெல்லாம் அவளைச் சித்திரவதை செய்து கொன்றார்கள் என்று பேப்பர் விபரித்ததைப் பார்த்து, தூர எறிகின்றான்.

இப்போது பொலிஸ் நண்பன், உனது தொழிலுக்கு நேரம் வந்துவிட்டதென்கின்றான். கொலம்பியாவிலிருந்து போதைப்பொருட்களோடு வரும் கப்பலிலிருந்து பொருட்களை பாதுகாப்பாக குறித்த இடத்திற்குக் கொண்டுசெல்வது இவனது வேலை. இதற்கு உடந்தையாக அந்தப் பொலிசும் இருக்கின்றது. இவன்  இந்தியாவிலிருந்து தப்பி ஜேர்மனிக்கு வர இந்தப் போதைமருந்துக் கடத்தலே உதவியிருக்கின்றது. பொலிஸ்காரனான அந்திரியாஸு இவனை விமானநிலையத்தில் வைத்துப் பிடித்துவிட, இப்போது அவனோடு சேர்ந்து போதைமருந்து கடத்துபவனாக இந்தக் கதை சொல்லி இருப்பதாக, 'கெட்டன வாழும்' கதை முடிகின்றது.


2.

இந்தக் கதையில் கதைசொல்லி முன்னாள் இயக்கக்காரனாக இருந்தவன். அவனது பசியும், தமிழ்நாட்டு ஜெயில் வாசமுந்தான் அவனை எதையாவது செய்து அந்தப் படுகுழியிலிருந்து தப்பிப்போகச் செய்கின்றது. அதே பசியோடு வரும் இன்னொரு சக உயிரியைக் காண்கின்றான். அவனால் அந்தப் பெண்ணின் வறுமையையும், அவள் சிக்கிக்கொண்ட உலகையும் விளங்கிக்கொள்ளமுடிகின்றது. இது வாழ்க்கை. இங்கே சினிமாப்படம் போல ஒரு ஹீரோத்தனம் காட்டமுடியாது. அவன் கூட ஒருவகையில் பொலிஸ்காரனான அந்திரியாஸின் அடிமை.

அவனைத்தாண்டி எதுவும் செய்யமுடியாது. எனவே தெரிந்தே  இந்தப் பெண்ணின் கொலைக்கு இவனும் உடந்தையாகின்றான்.
இப்போதுதான் பார்த்திபன் ஒரு விடயத்தைச் சொல்கின்றார். ஏன் அவன் இயக்கத்துக்குப் போனான்? அவனது அக்காவும், அத்தானும் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டதால் இயக்கம் ஒன்றில் சேருகின்றான். அந்தப் கொடுமை தாங்காது, பரிசுத்தமான மனதோடு இயக்கத்துக்குப் போனவனின் ஒரு வாழ்வு இப்போது எங்கெங்கோ எல்லாம் தறிகெட்டது போயிற்றென்பதுதான் எவ்வளவு அவலம்.

மேலும் புதிய வாழ்வு தேடி வந்த ஜேர்மனியிலும் அவன் இன்னொரு 'சிறை'க்குள் அகப்பட்டுவிட்டான். அவன் இந்தத் தொழிலைச் செய்வதால் அதன் பாதுகாப்புக் கருதி எந்தத் தமிழரோடும் அவனுக்குத் தொடர்பில்லை. அவன் ஒரு தனியன். ஆனால் இனி இந்தப் பெண்ணைக் கொலைக்களத்திற்கு அனுப்பிய குற்றத்தோடும் காலகாலமாக அவன் வாழ்ந்தாக வேண்டும். ஒரு அப்பாவியாக அம்மா சுடச்சுட தோசை தர சாப்பிட்ட ஒருவனின் கதை இப்படியெல்லாம் மாறுமென்று யார் அறிந்திருப்பார். ஆனால் அது நிகழ்ந்திருக்கின்றது.

இந்தக் கதையினூடாக நமது போராட்டம், இயக்கங்களின் வரலாறு, இந்திய அரசு/தமிழகப் பொலிஸின் அடக்குமுறைகள், தப்பிப்பிழைத்தல், பிறகு இன்னும் சிக்கலான ஒரு தொழிலுக்குச் சிக்குப்படல்,  'கெட்டவனாக' இருந்தும் ஒரு பெண்ணுக்காய் பரிதாபம் கொள்ளல் மட்டுமில்லை, தப்பிப் பிழைத்து தக்கண வாழ்பவனாகவும் இருக்கின்றான்.

இதிலெந்தப் பிரச்சாரத் தன்மையோ அல்லது அளவுக்கதிமாய் பரிதாபத்தைக் கோரி நிற்பதோ நடப்பதில்லை. நாம் இந்தக் கதைசொல்லியைப் புரிந்துகொள்வது போல, இந்தப் பெண்ணையும் புரிந்துகொள்கின்றோம். இங்கே கதை சொல்லிக்கு ஒரு முழுமையான கதை சொல்லப்படுவதுபோல, அந்த உக்ரேனியச் சிறுமிக்கு ஒரு கதை  முழுமையாகச் சொல்லப்படாவிட்டாலும், அவளுக்கான கதையை வாசகர்களாகிய நாம் உருவாக்கிக்கொள்கின்றோம். இந்த அப்பாவிச் சிறுமிகளை வைத்து அதிகாரத்திலுள்ளவர்கள் ஆடும் ஆட்டங்களை வெறுப்புட,ன் மீண்டும் வாசிப்புச் செய்கின்றோம்.

இந்தக் கதைசொல்லியைப் போலவே, வாசிக்கும் நாமும் இந்தச் சிறுமியைப் பலிக்களத்திற்கு அனுப்பியிருக்கின்றோம் என்ற குற்றவுணர்வைக் அடைகின்றோம். நாம் 'கெட்டவராக இல்லாத நல்லவராக' இருந்தாலும் கதைசொல்லி எடுத்த முடிவைத்தான் நாங்கள் எடுத்திருப்போம் என்னும் இயலாத்தனம் எங்கள் மனச்சாட்சியை இடையூறு செய்கின்றது. இங்கே அறமற்றவனாகிப்போன ஒருவனான கதைசொல்லியின் 'அறம்' பேசப்படுகின்றது. அதுமட்டுமின்றி நாம் எப்படி இந்தக் கதைசொல்லியை மதிப்பீடு செய்வது என்கின்ற சிக்கலும், எண்ணற்ற கேள்விகளும் இருப்பதால் இது ஒரு முக்கியமான கதையாகியும் விடுகின்றது.

(Apr 10, 2018)