Monday, May 28, 2018

உழைப்பை ஒழிப்போம்?

மேதினத்தில், உழைக்கும் வர்க்கமாய்த் திரண்டு புரட்சி செய்வது, சமத்துவமான உரிமைகளையும் உழைப்பையும் கோருவது என்பது - முக்கியமாய் முதலீட்டிய நாடுகளில்- பெருங்கனவாய் இருக்கும்போது, வேறுவகைகளிலும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. 'உழைப்பு' என்பதில் ஒளிந்து நிற்கும் 'ஓய்வு' குறித்தே அதிகம் இன்றைய பொழுதுகளில் நான் யோசிக்கின்றேன்.

முதலீட்டிய அரசுகள்/பெரு நிறுவனங்கள் என்பவை மிக நுட்பமாக நமது உழைப்பைச் சுரண்டுவதோடு அந்த வலையிலிருந்து வெளிவராமல் நம்மால் எட்டவே முடியாத கனவுகளை ஒருநாள் அடைந்துவிடமுடியுமென பெரும் ஆசைகளை விதைத்துக்கொண்டிருப்பார்கள். அதிலொன்று கடுமையான உழைப்பைக் கொடுத்தால், மிகப் பெரும் சொகுசான வாழ்க்கையைத் தங்களைப் போல - இன்னொருவகையில் சொல்வதனால் The Great Gatsbyயில்  வரும் அமெரிக்க கனவைப் போல- அடைந்துவிடலாமென ஒருவகையில் உணர்த்தியபடியே இருப்பார்கள்.

உதாரணத்திற்கு அடிப்படைச் சம்பளத்தில்(basic salary)  வேலை செய்யும் தொழிலாளியைப் பார்த்து, நீ இன்னும் நிறையக் கல்வி கற்று (அதற்கும் உழைப்பவரே பணம் செலுத்தவேண்டும்; ஆனால் அதற்கான கடனை கூடிய வட்டியுடன்  இவர்களே அள்ளி வழங்குவார்கள்) உயர்ந்த இடத்தைக் காணமுடியுமென ஆசை காட்டுவார்கள். ஆனால் ஒருபோதும் அந்த அடிப்படைச் சம்பளத்தை உயர்த்திக் கொடுப்பது குறித்துப் பேசினால் வேறுதிசையில் முகம் காட்டியபடி காணாமற் போய்விடுவார்கள். இத்தனைக்கும் ஒருவர் கல்விகற்றோ அல்லது வேறுதுறைக்குச் சென்றால் கூட, அந்தத் தொழிலிற்கான இடம் அப்படியே இருக்கும். அதை நிரப்ப, இன்னொரு தொழிலாளர் வரவேண்டியிருக்கும். ஆகவே உண்மையில் ஒரு தொழிலாளியின் நிலையை உயர்த்தவேண்டுமெனில் அவருக்கான அடிப்படைச் சம்பளத்தை உயர்த்துவதுடன், கூடிய ஓய்வை அவருக்கு வழங்குவதிலேயே ஒருவரின் அக்கறை இருக்கவேண்டும்.

இந்த முதலீட்டியம் நமது உழைப்பைச் சுரண்டுவதற்காய் எதையும் செய்வதற்குத் தயாராக இருப்பதால், நாம் உழைப்பிலிருந்து ஓய்வை நோக்கி யோசிக்கவேண்டியிருக்கிறது. அடிப்படைச் சம்பளத்தை உயர்த்துவதோடு, கனடா போன்ற முதலீட்டிய நாடுகளில் பல்கலைக்கழக மேற்படிப்புக்களையும் இலவசமாக வழங்கவேண்டுமென வலியுறுத்தவேண்டும். எனெனில் அந்த மேற்படிப்பு உங்களை மேலும் பத்தாண்டுகளுக்கு இன்னும் உழைப்பு அடிமைகளாக இருக்கவைத்திருக்கும். நீங்கள் அந்தக் கடன்களிலிருந்து தப்பவே முடியாது. உங்கள் வாழ்வை நிதானமாகவோ விரும்பியமாதிரியோ வாழமுடியாது இந்தக் கடன் உங்களை நெருக்கும்.

நான் கனடா வந்து பதினேழாவது வயதிலேயே வேலைக்குப் போகத் தொடங்கிவிட்டேன். பல்கலைக்கழகக் காலங்களிலும் கோடை விடுமுறை காலத்தில் மட்டுமின்றி, பகுதிநேரமாகவும் வேலை செய்திருக்கின்றேன். அப்படிச் செய்தும் படித்த கடனை (வட்டியுடன் சேர்த்து) மட்டும் பத்தாண்டு வருடங்களுக்கு மேலாய் கட்டிக்கொண்டிருப்பவனாய் இருந்திருக்கின்றேன். ஒரு பதின்மனின் வாழ்க்கை, அவன் விரும்பிய இடங்களுக்குப் பயணிக்கவோ இன்னபிற விடயங்களைச் செய்யவோ விடாது இந்த உயர்கல்விக் கடன்கள் ஒருவரைத் திக்குமுட்டாடச் செய்யும்.

வாழ்வில் படித்தபின்னோ/படிக்காமலோ, உயிர்வாழ்வதற்காய் என்றுமே பிற்காலத்தில் உழைக்கவேண்டியிருக்கப்போகும் ஒருவருக்கு, அவர் படிக்கும் காலம் வரையிலாவது விரும்பியதைச் செய்வதற்கு கடன்கள் இல்லாது கழுத்தை நெரிக்கும் ஒரு கல்விமுறையை அறிமுகப்படுத்துவதே சிறந்ததாகும். உழைக்கத் தொடங்கியபின்னும், முதலீட்டிய உலகில் உழைப்பை விட, ஓய்வு குறித்தும் ஒவ்வொரு உழைப்பாளியும் தன் உடல்/உளம் குறித்தும் யோசிக்கவேண்டும். மேலும் மூளை உழைப்பை விட, உடல் உழைப்பைக் கொடுக்கும் தொழிலாளர்க்கு முன்னதாகவே ஓய்வூதியம் கொடுக்கும் திட்டம் குறித்து இந்த முதலீட்டிய அரசுக்கள் சிந்தித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? (கனடாவில் ஓய்வூதிய வயது - 65).

உழைப்பை ஒழிப்போம் (The Abolition of Work) என்கின்ற Bob Black கட்டுரையை இந்த மேதினத்தில் வாசிப்பது கூட பொருத்தமானது. இது தொடர்பாய், தமிழில் வாசிக்க விரும்பவர்க்கு அ.மார்க்சின் 'கடமை அறியோம், தொழில் அறியோம்' என்ற நூலைப் பரிந்துரைக்கின்றேன்.

(மே 01,2016)

No comments:

Post a Comment