Monday, June 18, 2018

Factotum by Charles Bukowski

*Baby, I’m a genesis but nobody knows it but me!

1.
ப்யூகோவ்ஸ்கியின் Factotum நாவல் அவரது தபால் நிலையத்திற்கும் (Post Office), பெண்களுக்கும்   (Women) இடையில் எழுதப்பட்ட நாவலாகும். ப்யூகோவ்ஸ்கியின் எதிர்நாயகனான சினாஸ்கி இதில் ஒரு எழுத்தாளாக வளரவும், அதேவேளை நாளாந்த அல்லாடல்களுக்கிடையில் சிக்குப்படுகின்ற காலப்பகுதியே இதில் முன்னிலைப்படுத்தப்படுகின்றது.  இரண்டாம் உலக மகாயுத்தம் பின்னணியில் நடைபெறுகின்ற காலம். 'தபால் நிலை'யத்திலும், 'பெண்க'ளிலும் கதை நிகழும் நிலப்பரப்பு கிட்டத்தட்ட முற்றுமுழுதாக லாஸ் ஏஞ்சல்ஸ் என்றால், இங்கே கதை அமெரிக்காவின் பல்வேறு நிலப்பரப்புக்களில் அலைந்துகொண்டிருக்கின்றது.

சினாஸ்கியிற்கு லாஸ் ஏஞ்சல்ஸும், அங்கே இருக்கும்  அவரின் பெற்றோரின் வீடும், அமைதியைத் தராதபோது அவர் ஏதேனும் வேறொரு நகர் தனக்கு அடைக்கல்ம் தரக்கூடுமென்று பயணிக்கத் தொடங்குகின்றார். ஒவ்வொரு நகரிலும் அடிமட்டத் தொழிலை தன்னிருப்புக்காகச் செய்கின்றார். சில வேலைத்தளங்களில் துரத்தபடுகின்றவராக, இன்னுஞ் சிலவற்றில் தானாகவே விலத்திக்கொள்கின்றவராக சினாஸ்கி இருந்தாலும், அவர் எல்லா இடங்களிலும் பெண்களைப் பார்த்துச் சலனப்படுவதிலோ, குடிப்பதில் சளைப்பின்றியோ இருக்கின்றார்.

நியூயோர்க் அவருக்குப் பிடிக்காத நகரங்களில் ஒன்று.இவ்வளவு சனங்கள் ஏன் இங்கே பிதுங்குப்படுகின்றனர் என்று எரிச்சல்படுகின்றார். வேலை தேடும் சினாஸ்கி 'ரைம்ஸ்' பத்திரிகையில் வேலைக்கு விண்ணப்பிக்கின்றார். இரண்டு வருடம் கல்லூரியில் படித்த ஜேர்னலிஸம் தன் வேலைக்கு சாதகம் என நினைக்கின்றார். அதிசயமாக 'ரைம்ஸ்' பத்திரிகையினர் வேலைக்குக் கூப்பிடுகின்றனர்.  அங்கு எழுதத்தானே என்னை வேலைக்கு எடுக்கின்றீர்கள் என்று சினாஸ்கி கேட்க, இல்லை இரவுகளில் வேலைத்தளத்தைச் சுத்தமாக்க என்கின்றனர். சினாஸ்கி அந்த வேலையையும் எடுக்கின்றார்.

வழமைபோல அந்த வேலையிலிருந்தும் துரத்தப்படுகின்றார். வேலை செய்த சில நாட்களுக்கான சம்பளத்தை ரைம்ஸ் கொடுக்கத் தாமதிக்கும்போது, அங்கே பெரும் பணியில் இருக்கும் ஒருவரைச் சந்திக்கின்றார். இங்கேதான் ப்யூகோவ்ஸ்கியின் எள்ளல் எழுத்தில் மிளிரும். ப்யூகோவ்ஸ்கி இப்படி எழுதுவார்; 'அந்த மனுசன் நல்ல மனுசன். நன்றாக வசதியாகவும் இருந்தார். பழகுவதற்குப் பரவாயில்லை. ஆனால் பாவம் நான் வேலையை விட்டுக்கொஞ்ச காலத்தில் மனுசன் செத்துவிட்டார். ஆனால் குடித்துக்கொண்டிருக்கும் நான் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்.'

வளர்ந்து வரும் எழுத்தாளரான சினாஸ்கி எழுதி அனுப்பும் படைப்புக்கள் அநேக பத்திரிகைகளிலிருந்து பிரசுரக்க முடியாது என திருப்பியனுப்படுகின்றன. திருப்பி அனுப்பப்படும் மறுப்புக் கடிதங்களைப் பற்றி, ப்யூகோவ்ஸ்கி எழுதும் விதம் அவ்வளவு நகைச்சுவையானது. ஒரு கட்டத்தில் அவரது ஒரு சிறுகதை ஏற்றுக்கொள்ளப்பட்டு, 25 டொலர்கள் சன்மானமாக அனுப்பப்படும்போது சினாஸ்கி அடையும் மகிழ்ச்சி அளவிடமுடியாது. மூன்று நாட்கள் வெளியில் அவ்வளவு போகாது குடித்தபடி தனது அறைக்குள் கொண்டாடியபடி இருப்பார்.

2.

ப்யூகோவ்ஸ்கியின் நாவல்களில் இதுவே முதன்மையானது என்று பலர் குறிப்பிட்டாலும், என்னைப் பொறுத்தவரை  Post Officeற்கும், Womenற்கும் பிறகே இதை வைப்பேன். ஒருவகையில் வளர்ந்துவரும் மத்தியதர எழுத்தாளன்  பாத்திரம்- பிறகு ப்யூகோவ்ஸ்கி பிரபல்யம் அடைவதால்-  எவருக்கும் அமெரிக்க கனவு சாத்தியம் என்பதை முன்வைப்பதால் பலருக்குப் பிடித்திருக்கலாம்.

இதையேன் சொல்கின்றேன் என்றால், ப்யூகோவ்ஸ்கியின் இன்னொரு நாவலான Hollywood ல், சினாஸ்கி தன்னையும் தன்னோடு திரியும் சாராவையும், தாங்களிருவரும் ஸ்காட்டும், ஸெல்டாவும் என அடிக்கடி அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பார்கள். ஸ்காட் பிட்ஸ்ஸலாண்டின் 'The Great Gatsby', அமெரிக்கக் கனவின் முக்கிய படிமம் என்பதை அதை வாசித்தவர்கள் அறிவோம். ஆனால் அந்தக் கனவைக் கூட நக்கலடிக்க ப்யூகோவ்ஸ்கியால்தான் முடியும். தன்னை விட சாராவிற்கு அப்படிச் சொல்வது, ஸ்காட்டின் ஸெல்டாவிற்கு இறுதியில் நிகழ்ந்ததை அறிந்ததால்- பிடிக்காது என்பார். அத்தோடு தனக்கும் ஸ்காட்டின் எழுத்துப் பிடிக்காது என்பார். ஆனால் வேண்டுமென்றே சினாஸ்கி, புதியவர்களைச் சந்திக்கும்போது, இப்படியே தொடர்ந்து அறிமுகப்படுத்தியபடியே Hollywood  நாவலில் இருப்பார்.

'‘I was a man who thrived on solitude; without it I was like another man without food or water. Each day without solitude weakened me. I took no pride in my solitude; but I was dependent on it."எனத் தன்னைத் தெளிவாகப் பிரகடனப்படுத்துகின்ற சினாஸ்கி, கழிவறைகளைச் சுத்தம் செய்வதிலிருந்து, நாய்களுக்கான உண்வைத் தயாரிக்கும் கொதிநிலை தொழிற்சாலைகளிலிருந்து, பெண்களுக்கான ஆடைகள் விற்கும் கடைகளிலிருந்து, கார் பிரேக் பாகங்கள் செய்யும் தொழிலகங்களிலிருந்து எல்லாவிதமான தொழில்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்கின்றார்.

பணக்காரர்கள் வாழும் செழிப்பான இடம் ஒன்றை சென் - லூயிஸில் நடந்து கடக்கும்போது, நல்ல வைனையும், நல்ல மாட்டுத்துண்டையும், அழகான கட்டில்களையும் கொண்ட இவர்களையும் என்னையும் பிரித்து வைப்பது எது? அவர்களை விட நான் கொஞ்சம் கூடவாக சிந்திப்பவனாக இருக்கின்றேன். ஓ அவர்களிடம் அந்தப் பணம்' என்பார். அவ்வாறு யோசித்தாலும், சினாஸ்கி அவருக்கான சந்தர்ப்பங்கள் சில வாய்க்கும்போதும் அப்படிப் பணம் சம்பாதிப்பதற்கான எந்த முயற்சியையும் எடுக்காதவராகவும் இருக்கின்றார்.

எந்த வேலையைச் செய்தாலும், அதை மீறி -சினாஸ்கி வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும்- அவருக்குள் இருப்பது ஒரு எழுத்தாளனாக வரும் கனவு. அதை நோக்கியே சினாஸ்கி உந்தித்தள்ளிப்படுகின்றார்.

ஒருவகையில் அதுவே அவரது சந்தோசமாக/மனநிறைவைத் தருகின்ற விடயமாகவும் இருப்பதை இதை வாசித்து முடிக்கும்போதும், ப்யூகோவ்ஸ்கி என்ற ஒரு எழுத்தாளனின் வாழ்வை இந்தப் பிரதியிற்கு வெளியில் அறியும்போதும் உணரமுடிகின்றது.
---------------------

* சினாஸ்கி நன்கு குடித்துவிட்டு ஒரு பெண்ணின் கால்களின் அழகில் மயங்கி, அந்தப் பெண்ணின் கால்களை முத்தமிட்டபடி சொல்வது.

(Mar 02, 2018)

No comments:

Post a Comment