Sunday, January 25, 2026

றிஹானா நௌபரின் பதிவு

 

இளங்கோவை நேரில் சந்தித்தும் பேச வாய்ப்பு கிடைக்காமைக்குக் காரணம் நான் அவரை அடையாளம் காணவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் இவர் யார்? எனக் கேட்ட போது அருகில் இருந்த வடகோவையாரை கூறியவர்கள் இளங்கோவை ஒரு கனடா நாட்டைச் சேர்ந்தவர் என்று மட்டுமே கூறினார்கள் . பெயரைக் கூட அவர்கள் குறிப்பிடவில்லை.

முகநூலில் அவ்வப்போது அவரது எழுத்துக்களை வாசித்திருந்தாலும் அவரது “பேயாய் உழலும் சிறு மனமே” மற்றும் “நான் உன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்” ஆகிய நூல்களை அண்மையில் தான் வாசிக்கத் தொடங்கினேன்.

Uploaded Image


இரண்டும் வேறுபட்ட நூல்கள். முதலாவது அவரது வாழ்வியல் அனுபவங்கள் சினிமா இசை என செல்கின்றது. இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. உண்மையில் இளங்கோவின் சிறுகதை எழுத்து நடை கதையை நகர்த்தியுள்ள விதம் எல்லாம் சுவாரசியமானவை.

புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழ்பவர்களின் அன்றாட மனநிலை, தொழில் வாழ்க்கை, உறவுகள், காதல் அத்தோடு அரசியல் சார்ந்தும் சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன.
இளங்கோவின் இரண்டு நூல்களுக்கும் இடையிலான வாசிப்பில் பல விடயங்களை ஆய்வு செய்ய வேண்டி இருந்தது. அது அரசியல் ரீதியாகவோ சினிமா சார்ந்ததாகவோ அமைந்திருந்தது.

கதைகள் இடையே அவர் குறிப்பிட்டுள்ள தத்துவக்கருத்துக்கள் உண்மைத்தன்மையாக இருந்தாலும் நகைச்சுவை கலந்திருந்தது.
வலி மிகுந்த சம்பவங்களையும் சுவாரஸ்யமாக நகைச்சுவை கலந்து வாசகர்களை மிகவும் துக்கத்திற்கு உள்ளாக்காமல் நாசுக்காக கதைகளை கொண்டு சென்றிருக்கும்  பாங்கு வித்தியாசமாக இருக்கின்றது. Tourist family திரைப்படத்தை பார்த்த போதும் அந்த உணர்வு இருந்தது.  

கதைகளிலோ திரைப்படங்களிலோ திடீர் திருப்பம் இருக்கும் போது ஆர்வம் மேலோங்கும். இளங்கோவின் கதைகள் அவ்வாறு தான் இருக்கின்றன. ஒவ்வொரு கதைகளும் எதிர்பாராத திருப்பங்களையோ முடிவுகளையோ கொண்டிருக்கின்றன.

எத்தனை பரபரப்புகளுக்கு மத்தியிலும் வலிகளுக்கு நடுவேயும் வாழ்க்கையை நேசிக்கவும் ஒவ்வொரு கணப்பொழுதையும் விரும்பியவாறு கழித்திட விரும்புபவர்களுக்கு இக்கதைகள் நிச்சயம் பிடித்துப் போகும்.

 

No comments:

Post a Comment