Tuesday, April 28, 2026

கார்காலக் குறிப்புகள் - 150

 

மது நகரில் (Toronto) நூறு நூலகங்கள் இருக்கின்றன. நூறாவது நூலகமாக புதிதாகத் திறக்கப்பட்டது, அதற்கு முன்னர் மாநகரசபையாக இயங்கிய கட்டடத்தின் ஒருபகுதி. இப்படி நூறு நூலகங்கள் இருக்கும் எங்கள் நகரில் நூலகங்கள் சிலதை மூடவேண்டும் என்று ஆட்சியிலிருக்கும் வலதுசாரி மாகாண (மாநில) அரசு முடிவெடுத்தபோது, அதற்கு பெரும் எதிர்ப்பு வந்திருந்தது. அந்த எதிர்ப்பை முன்னெடுத்தவர்களில் முன்னே நின்றவர் கனடாவின் பிரபல்யமான எழுத்தாளரான மார்க்கரெட் அட்வூட். அவரும் எமது நகரில் வசிப்பவர்.

நூறு நூலகங்களில் ஆகக்குறைந்தது 15-20 நூலகங்களில் தமிழ் நூல்களை இரவல் பெறமுடியும். அவ்வாறு அந்த நூலகங்களுக்கு அருகில் இல்லாவிட்டாலும் இணையத்தில் தேவை என்று பதிவு செய்துவிட்டால், அவர் எமக்கு அருகில் இருக்கும் நூலகத்தில் கொண்டுவந்து வைப்பார்கள். நாம் தொலைதூரத்துக்குப் போகாது அருகில் இருந்த நூலகத்திலே இந்த நூறு நூலகங்களில் இருக்கும் எந்தப் புத்தகத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.

 


அண்மையில் ஒரு பெண் (Marci), அவரின் காலமாகிவிட்ட தாயின் நினைவுகளுக்காக எமது நகரில் நூலகங்களுக்கு நடந்து போயிருக்கின்றார். கிட்டத்தட்ட பத்து நாட்களாக முந்நூறு கிலோமீற்றர்கள் நடந்திருக்கின்றார். தாயார் சிறுவயதில் தன்னை இந்த நூலகங்களுக்கு ஒவ்வொரு வாரமும் கூட்டிக் கொண்டு செல்வார். அதுமட்டுமில்லாது அவர் இறக்கும்வரை (50 ஆண்டுகளுக்கு மேலாக) நூலகங்களுக்கு சென்று கொண்டிருந்தவர். அவரின் ஞாபகங்களுக்கு மரியாதை செலுத்த இந்த நூலகங்களுக்கு நடந்து போயிருக்கின்றார்.

நடப்பது மட்டுமில்லாது விரும்பியவர்கள் ஏதேனும் நிதி பங்களிப்புச் செய்யலாம் என்று அது நூலகத்திற்கே செல்லுமென ஒரு குறிப்பிட்ட நிதியைச் சேகரித்தும் கொடுத்திருக்கின்றார்.

இதையேன் இங்கே எழுதுகின்றேன் என்றால் இலங்கையிலோ இந்தியாவிலோ எவ்வளவோ நூலகங்கள் இருக்கின்றன. ஆனால் அதை எந்தளவுக்கு நாங்கள் பயன்படுத்துகின்றோம் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டுமென்பதற்காகவே. என் அனுபவத்தின்படி எங்கள் வீட்டில் நிறைய நூல்கள் இருந்தாலும் நான் பல்வேறு நூலகங்களுக்கு போர்க்காலத்தின் நடுவிலும் போய் வந்திருக்கின்றேன். அவையே ஒருவகையில் யுத்த சூழலைத் தாண்டிய ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

போர் நடந்த/நடந்து கொண்டிருக்கும் சிரியா, பாலஸ்தீனம், லெபனான், ஈரான் போன்ற பகுதிகளில் நூல்களை எந்தளவுக்கு அந்த மக்கள் நேசிக்கின்றார்கள் என்பதை நாம் அறிந்திருப்போம். ஏன் ஈழத்தில் தொடக்க கால போராளிக்குழுக்களுக்கு நூல்களின் வாசிப்பு எவ்வளவு முக்கியமானதாக இருந்திருக்கின்றது என்பதை அன்றைய காலத்தவர்கள் மூலம் தெரிந்திருப்போம்.

ஆக அவ்வளவு கொடுமையான போர்ச்சூழலிலே வாசிப்பு என்பது எவ்வளவு நேசிப்புக்குரியதாக இருக்கும்போது, நாம் அப்படி கடும்சூழலுக்குள் வாழாதபோதும் ஏன் நூலகங்களுக்குச் செல்லத் தயங்குகின்றோம், நமது பிள்ளைகளுக்கு நூலகங்களை அறிமுகப்படுத்துவதில்லை என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவ்வாறான சூழ்நிலைகளை உருவாக்காது, இந்தச் சமூகம் தற்குறிகளையும், ரீல்ஸ் பார்க்கும் ஜென் ஸீக்களையும் உருவாக்குகின்றது என்று புலம்பதில் என்ன நியாயம் இருக்கப் போகின்றது? மேலும் வாசிப்பில் எப்போதும் பெரும்பான்மையானோர் திசை திருப்பவதில்லை என்ற உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் வாசிக்கவும் சிந்திக்கவும் விரும்புகின்ற ஒரு சிறுபான்மையினர் ஒவ்வொரு காலத்திலும் இருந்தபடியே இருக்கின்றார்கள்.

அந்த அரிய உயிரினங்கள் அழிந்துபோகாமல் இருப்பதற்காகவேனும் நாம் நூலகங்களிளனதும், வாசிப்பினதும் அருமையை மார்ஸி ஒரு நூறு நூலகங்களுக்கு நடந்துசென்று ஒரு விழிப்புணர்வை தன் தாயாரின் நினைவுகளின் நிமித்தம் செய்தது போல, ஏதேனும் வித்தியாசமாகச் செய்து பார்க்கலாம்

***

 

No comments:

Post a Comment