Thursday, April 30, 2026

தமிழ் சினிமாவில் சாதி எதிர்ப்பின் அழகியல்

 

தமிழ் சினிமாவில் சாதி எதிர்ப்பின் அழகியல்'  (Anti- Caste Aesthetics in Tamil Cinema) முதல்நாள் நிகழ்வில் சொர்ணவேல் நல்லதொரு உரையை பா.ரஞ்சித்தினதும் ('தங்கலான்', 'சார்பட்டா பரம்பரை'), மாரி செல்வராஜ்ஜினதும் ('கர்ணன்', 'பைசன்') திரைப்படங்களை முன்வைத்து தந்திருந்தார். தமிழ்ச் சினிமாவை தத்துவ, வரலாற்றுப் பின்புலங்களில் வைத்து ஆராயும் உரைகள்/எழுத்துக்களை வாசிப்பது என்பது இப்போது அரிதாகிவிட்டது.

சொர்ணவேல் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியராக அமெரிக்காவில் இருந்தாலும், தமிழ்ச்சூழலை முக்கியமாக சினிமாவுக்கு நெருக்கமாகவும் இருக்கின்ற ஒருவர். அதனாலேயே அவரால் இன்றைய தமிழ் சினிமாவை, பல்கலைக்கழப் பின்புலத்தில் வைத்தும் பேசவும் எழுதவும் முடிகின்றது. இப்படி முன்பு 'தமிழியல்' மாநாடுகள் ரொறொண்டோ பல்கலைக்கழகத்தில் நடக்கின்றபோதும் பேராசிரியர்கள் வந்து தமிழ் இலக்கியம்/கலாசார/பண்பாடுகள் பற்றிப் பேசுவார்கள். 

ஆனால் அவர்களுக்கு சமகால தமிழ் இலக்கியப் போக்குகள் குறித்து பெரும்பாலும் தெரியாதிருக்கும். அதனால் அவர்களின் பெரும்பாலான ஆய்வுக்கட்டுரைகள் 'கற்கால'த் தமிழுக்குப் பொருத்தமாக மட்டும் இருந்திருக்கின்றன. அந்தத் தவறை தமிழ்ச்சினிமா சார்ந்து செய்யாத ஒருவராக பேராசிரியர் சொர்ணவேல் இருப்பது மகிழ்ச்சிக்குரியது.

 

இன்றைய நிகழ்வின் முடிவில் கேள்வி-பதில் நேரத்தில் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ்ஜின் 'வெற்றிகரமான ஜனரஞ்சக' நோக்கத்திற்காக சிலவேளைகளில் அவர்கள் சொல்ல வந்ததன் அடிப்படை நோக்கங்களை நீர்த்துப் போகச் செய்கின்றனரா என்ற விவாதம் வந்திருந்தது. அதற்கு சொர்ணவேல் கூறிய கருத்து அல்லது அவர் எடுத்திருக்கும் சார்ப்பை ரஞ்சித்தினதும், மாரியினதும் திரைப்படங்களை முன்வைத்து எனக்குரியதாகவும் சொல்வேன். எனினும் அனைத்து கலைப்படைப்புகளும் உரையாடல்களுக்கும், இடைமறிப்புக்களுக்கும் உரியவை என்பதிலும் மாற்றுக் கருத்துக்களுமில்லை.

*

'தமிழ் சினிமாவில் சாதி எதிர்ப்பின் அழகியல்' இரண்டு நாள் நிகழ்வுக்கும் சென்றிருந்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு புதிதாக அல்லது அறிந்தவற்றை கேள்விக்குட்படுத்தும்  உரையாடல்களைக் கேட்க முடிந்தது என்னளவில் மகிழ்ச்சியானது.

எப்போதும் சொல்வதுதான், ஏதோ ஒன்றை வாசிக்கும்போதோ அல்லது ஒரு நிகழ்வில் பங்குபெறும்போதோ நாம் அங்கே ஏதேனும் புதிதாக ஒன்றை கற்றுக்கொள்வதாக இருக்க வேண்டும். அல்லாதுவிடின் அவற்றால் எந்தப் பயனுமில்லை, நேரமும் வீண் விரயம்.

இந்நிகழ்வில் சொர்ணவேலுடன், கங்காவுடன், மற்றும்  பல நண்பர்களுடன் உரையாடியது மனதுக்கு இதமாக இருந்தது. நிகழ்வுகளை நடத்துவது முக்கியமில்லை, அதை எப்படி constructive ஆக நடத்துவது என்பதற்கும் இந்நிகழ்வு நல்லதொரு முன்னுதாரணம்.

***

 

No comments:

Post a Comment