கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 97

Sunday, June 22, 2025

 

புலம்பெயர் வாழ்வைப் பற்றி பல்வேறு புதினங்கள் தமிழிலும், தமிழ் அல்லாத மொழிகளிலும் வந்திருந்தாலும், இந்த நாடுகளின் நாம் எதிர்கொண்ட இனவாதம் பற்றி ஆழமாகப் பேசியவை மிக அரிதானவையே. ஒரளவுக்கு இனவாதத்தையும், எதிர் காலனித்துவத்தையும் பேசிய நாவலென சங்கரி சந்திரனின் 'Chai Time at Cinnamon Gardens' சொல்லலாம்.

கனடா போன்ற நாடுகளில் இருக்கும் இனவாதம் உள்ளே புதைந்து கிடப்பவை. சரியான நேரத்தில் அவை தம் அசலான முகத்தை வெளியே காட்டும். இப்போது இங்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஹரி ஆனந்தசங்கரி மீது வன்மத்துடன் 'குளோபல் நீயூஸ்' ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கின்றது. அதன் தாக்கம் இப்போது பாராளுமன்றத்தில் ஒலித்திருக்கின்றது. அந்தச் செய்தியின் சாரம், ஹரி கடந்தகாலங்களில் தமிழ் மக்களுக்காகவும், போர் முடிந்த பின் வந்த கப்பல்களில் வந்த ஈழத்தமிழர்களைச் சந்தித்து அவர்களின் அகதிக் கோரிக்கையை ஏற்க வாதாடியவர் என்பதால், ஹரி கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக இருக்கத் தகுதியவற்றவர் என்று ஸ்டூவாட் பெல் எழுத, அதை வழமைபோல இங்குள்ள வலதுசாரிகள் எண்ணெய் ஊற்றி இன்னும் எரித்து கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த ஸ்டூவாட் பெல் ஒரு பத்திரிகையாளர் என்றாலும், அந்தளவுக்கு இனத்துவேஷம் நிறைந்தவர். இவர் இப்போதில்லை எனக்குத் தெரிந்து 20 வருடங்களுக்கு மேலாக கனடாவிலிருக்கும் தமிழ்ச் சமூகம் மீது இனத்துவேஷத்தைக் கொட்டிக் கொண்டிருப்பவர். ஈழத்தில் ஆயுதப்போராட்டம் நடந்தகாலங்களில் அவர் எழுதிய கட்டுரைகள் நாஷனல் போஸ்ட் பத்திரிகைகளில் அவ்வளவு துவேஷத்தோடு வந்துகொண்டிருந்தது. என் நினைவு சரியென்றால், இவரோ அல்லது இவரின் சகபாடி யாரோதான் அன்றைய 'ரொறொண்டோ சன்' இல், விடுதலைப் புலிகள் தமது நிதிச் சேகரிப்பிற்காக, தமிழ்ப் பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தச் செய்கின்றார்கள் என்று எழுதியிருந்தார். அதையெதிர்த்து அன்று மாணவர்களாக இருந்த நாம் மறுப்புக்களையும், இந்தப் பத்திரிகை நிறுவனத்தின் முன் ஆர்ப்பாட்டத்தையும் செய்திருந்தோம்.

இங்கே புலிகளையோ, அல்லது கனடாவில் இருக்கும் ஈழத்தமிழர்கள் பற்றியோ விமர்சிப்பது தவறென்பது அல்ல. ஆனால் அதை வன்மத்தோடு முழுச்சமூகத்திற்கும் அடையாளமிட்டு எழுதுவது ஒரு பத்திரிகையாளருக்கு உரிய பண்பல்ல.

ஆனால் இப்படிப்பட்ட வலதுசாரி பத்திரிகையாளர்/அரசியல்வாதிகளோடு சேர்த்துக் கூடிக் குலாவி, தம்மை முன்னிலைப்படுத்தும் ஈழத்தமிழர்களும் இருக்கின்றார்கள் என்பது வேறுவிடயம். ஆகவே இப்படியான வலதுசாரிகளோடு உறவாடுகின்ற 'Prisoner #1056: How I Survived War and Found Peace' எழுதிய ரோய் ரத்தினவேல் போன்றவர்களின் 'அரசியல் சார்பு'களை அவர்கள் பதிவாக்கிய வாழ்வியல் அனுபவங்கள் எந்தளவு முக்கியமானதோ, அந்தளவுக்கு இப்படியானவர்களோடு சேர்ந்து நிற்பது குறித்து யோசிக்கவேண்டும் என்றும் விமர்சித்திருக்கின்றேன்.

"உலகில் பல நாடுகளை விடவும் கனடா ஒரு சிறந்த நாடென்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. இலங்கையில் இருக்கும் பேசும்/ எழுதும்/ நடமாடும் சுதந்திரத்தைவிட பன்மடங்கு சுதந்திரம் கனடாவில் இருப்பதை, ரோயைப் போலவே நானும் உணர்கிறேன் என்பது உண்மைதான். ஆனால் கனடா வாழ்வதற்கு நல்ல நாடென்றால், ‘எல்லோருக்குள்ளும் இனவாதம் இருக்கின்றது. எனவே வெள்ளையர்களை மட்டும் இனவாதிகள் எனச் சொல்லி எங்கள் பிள்ளைகளை வளர்க்கக் கூடாதுஎன்று நமக்கு வலியுறுத்திச் சொல்லும் ரோய், கனடாவில் இந்த வெள்ளையர்கள் இங்கிருக்கும் ஆதிக்குடிகளுக்கு என்ன செய்தார்கள்/ செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதைச் சொல்வதற்கும் நிறைய மினக்கெட்டிருக்க வேண்டும். அதைப் பற்றிய சிறு சலசலப்பைக் கூட இந் நூலில் காணவில்லை. கனடா, அமெரிக்கா உள்ளிட்ட வட அமெரிக்க நாடுகளில் கட்டமைக்கப்பட்ட நிறவாதம்தனி மனிதர்களை நீண்டகாலமாய் பாதிக்கின்றது எனும் உண்மையை ரோய் எளிதாய்க் கடந்து போகவும் செய்கின்றார். ரோய் கனடா வந்தபோது உணர்ந்த இனவாதச் சொற்களைத்தான், இந்த நாட்டில் பிறந்த அவரது பிள்ளையும் இப்போது கேட்கின்றது என்றால், இந்த நாடு ஏன் இன்னும் இவ்வாறான விடயங்களில் முன்னேறாமல் இருக்கின்றது என்றும் அவர் யோசிக்க வேண்டும் அல்லவா? ஆடைகளில் படும் அழுக்கைப் போல எளிதாக இவற்றைத் தட்டிக் கழித்து முன்னேறி விடவேண்டும் என்று ரோய் சொல்வது அநியாயமல்லவா?"
('கைதி #1056 : ரோய் ரத்தினவேல் அவர்களின் சுயசரிதை' - எழுநா)

 
*


இப்போது ஹரியின் அமைச்சுப் பதவியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டின் பின் தெளிவாக இருப்பது இனவாதம். ஹரியை மட்டுமில்லை இந்த இனவாதிகள் வழக்கறிஞரான அவரின் மனைவியான ஹரிணியையும் தாக்கியிருக்கின்றனர். ஆக நாம் இந்த நாட்டில் எத்தகை உயர்பதவி வகித்தாலும், இந்த வெள்ளையினவாதிகள் எந்தப் பொழுதிலும் எம்மை கீழிறக்கும் செயல்களில் ஈடுபடக்கூடிய 'லைசண்சை' வைத்திருக்கின்றார்கள். ஆனால் இதே இனவாதிகள் இங்குள்ள பூர்வீகக்குடிகளுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும் என்ன செய்தார்கள் என்று கேட்டால் பெட்டிப் பாம்பாய்ச் சுருண்டுவிடுவார்கள்.

ஆகவேதான் கனடா போன்ற நாடுகளில் 'தொபுக்கடீர்' என்று விழுந்து தம்மை முற்றுமுழுதான கனடியர்களாக மாறப் பாவனை செய்கின்றவர்களைக் கொஞ்சம் கவனமாக இருங்களென எச்சரிக்கை செய்ய வேண்டியிருக்கிறது. இப்போது மட்டுமல்ல, எப்போது பாதிக்கப்பட்டாலும் அந்தக் குரல்கள் நீங்கள் மண்டியிட்ட வலதுசாரிகளிடமிருந்தோ/மிதவாதிகளிடமிருந்தோ வரப்போவதில்லை என்ற உண்மையை உணர்ந்திருங்கள்.

கனடாவின் குறைகளை விமர்சிக்கும் எங்களை,கனடா என்ற அடைக்கலந்தந்த நாடுகளின் மீது விசுவாமற்றவர்கள் என்று அடையாளமிட்டு திட்டாதீர்கள். இந்த நாடு உலகில் இருக்கும் எத்தனையோ நாடுகளை விட வாழ்வதற்கு அருமையான நாடுதான். அதற்காக இந்த நாடுதான் சொர்க்கமென்ற கனவுகளை பிறரிடம் விதைக்காதீர்கள்.

இறுதியில் 1983 இலங்கையில் நடந்த படுகொலைகளோடு கனடாவுக்கு வந்த அமைச்சரான ஹரியே தன்னை ஒரு அசலான கனடியன் என்று நிரூபிக்க conflict of interest screen இற்கு இப்போது தன்னை ஒப்புக் கொடுக்க வேண்டியிருக்கின்றது என்கின்றபோது சாதாரண கனடியர்களாக இருக்கும் எம்மை இந்த நாடும் இனவாதிகளும் எந்தநேரமும் எதுவும் செய்யலாம். ஒரு அமைச்சரே தன்னைப் பலிபீடத்தில் வைத்துதான் ஓர் அசலான கனடியன் என்று நிரூபிக்க வேண்டியிருக்கின்றது என்பது எவ்வளவு அவலமான சூழல். ஆகவேதான், இன்று நீங்கள் எவ்வளவு வசதி வாய்ப்புக்களோடு வாழ்ந்தாலும், எப்போதும் ஒடுக்கப்படும் விளிம்புநிலையினர் பக்கம் நின்று குரல்கொடுங்கள், அந்தக் குரல்களைப் பொறுமையாகச் செவிமடுங்கள் எனச் சொல்கின்றோம்.

*********

(1)  மேலதிக வாசிப்புக்கு: Public safety minister asks officials to ‘screen’ him fromconflict of interest

 புகைப்படம்: First Nations Treaty Women

0 comments: