கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 104

Wednesday, July 23, 2025


னது அண்ணாக்களில் மகன்கள் தொலைக்காட்சிகளில் விளையாட்டுக்கள் நிகழும்போது பார்ப்பதைவிட, ஒளிபரப்பாளர்கள் அந்த ஆட்டங்களின் பின் அதை அலசிக்கொண்டிருப்பதை சுவாரசியமாகப் பார்ப்பார்கள். நானும், அண்ணாவும் அவர்களின் இந்த pre/post game ஆய்வுகளை' எள்ளல் செய்து கொண்டிருப்போம். அந்தப் பாவமோ என்னவோ எனக்கும் அப்படியான ஒரு 'வியாதி' இப்போது வந்துவிட்டது.

இப்போது ஏதாவது திரைப்படம் வருகின்றதெனில் அந்த இயக்குநர்களின் நேர்காணல்களை காணொளிகளாகப் பார்க்கத் தொடங்கிவிடுவேன். பெரும்பாலும் அவர்களின் பேச்சுக்களில் இருந்து ஏதேனும் சுவாரசியமாக அறிந்துகொள்ள இருப்பின் அவர்களைக் காணொளிகளில் பின் தொடர்ந்து பார்க்க/கேட்கத் தொடங்கிவிடுவேன்.

பெரும்பாலும் அந்த இயக்குநர்களின் புதிய திரைப்படங்களை விட அவர்களின் பேச்சில் வெளிப்படும் கருத்துக்கள் எனக்குப் பிடித்துவிடும். கடந்தமாதம் கூட ஒரு தமிழ்ப்படம் வெளிவந்தபோது அந்த நெறியாளரின் நேர்காணல்களை ஒன்றுவிடாமல் கேட்டிருக்கின்றேன். அவரின் திரைப்படம் வெகுசனரீதியாக வெற்றியடைந்தபோதும் என்னை அந்த திரைப்படம் அவ்வளவாக கவரவில்லை என்பது வேறுவிடயம்.

இப்போதும் அப்படித்தான் இயக்குநர் ராமின் நேர்காணல் காணொளிகள் மீது ஈர்ப்பு வந்து கடந்த சில நாட்களகத் தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். இவ்வாறான நேர்காணல்கள் என்பது அவர்களின் புதிய திரைபடங்களுக்கான விளம்பரப்படுத்தல்கள் என்கின்றபோதும், எனக்கு 'பறந்துபோ'வை உடனேயே பார்த்துவிடவேண்டும் என்ற எத்தனிப்பைத் தராதது வியப்பாக இருந்தது.

ஆனால் ராமின் நேர்காணல்களில் இருந்து நான் எடுத்துக் கொள்ள/நெருக்கம் கொள்ள நிறைய விடயங்கள் இருந்தன என்கின்றபோதும், இதில் வேறொரு சிக்கலும் இருந்தது.

 
படத்துக்கான விளம்பரப்படுத்தல்களுக்கான நேர்காணல் என்பதால், ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுக்கப்பட்ட நேர்காணல் என்பதால் எல்லாவற்றிலும் பொதுவான தன்மைகள் இருந்தன. இதை நான் எழுத்தாளர் எஸ்.பொவும், ஜெயமோகனும் கனடாவுக்கு வந்தபொழுதும் கண்டிருந்தேன். அவர்கள் இங்கே தரித்து நின்ற நாட்களில் வெவ்வேறு இடங்களில் பேசியபோதும் அவர்கள் அன்றைய நிலைக்கேற்ற ஒரே விடயங்களைப் பேசியதைப் பார்த்து சற்று ஏமாற்றம் அடைந்திருக்கின்றேன். அதை அன்றைய காலங்களில் என் எழுத்தில் குறிப்பிட்டுமிருந்தேன். ஆக இது இயல்பாக எல்லோருக்கும் நிகழ்வதுதான போலிருக்கின்றது.

*
துவரை வந்த ராமின் திரைப்படங்களில் என்னைக் கவர்ந்தது அவரின் 'கற்றது தமிழே'. அதற்குப் பிறகு வந்த திரைப்படங்கள் என்னை கற்றது தமிழைத் தாண்டிக் கவரவில்லை. எல்லாப் படைப்பாளிகளுக்கும் அவர்களின் முக்கிய படைப்பைத் தாண்டி ஏதேனும் எழுதிவிட முடியும் என்ற எத்தனத்தில்தானே மற்றப் படைப்புக்களை எழுதிப் பார்க்க முயற்சிக்கின்றனர் அல்லவா?

ராமின் ஒரு நேர்காணலில் நான் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் சிலரின் 'கற்றது தமிழ்' விமர்சனத்தைக் கண்டு நொந்தேன் என்று சொல்லி, அதில் ஒன்றாக பெருமாள் முருகனின் 'கற்றது தமிழ்' விமர்சனத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார். இருந்தாலும் ராம், மிஷ்கின், வெற்றிமாறன், ரஞ்சித் போன்ற அரிதானவர்கள்களே தொடர்ச்சியாக வாசிப்புப் பற்றியும், எழுத்தாளர்கள் பற்றியும், நூல்கள் பற்றியும் பொதுவெளியில் பேசிக் கொண்டிருப்பவர்கள். அந்தவகையில் அவர்க்ள் எனக்கு நெருக்கமானவர்கள்.

இந்த நேர்காணல்களில் ராம், கே.ஆர்.மீராவின் 'யூதாசின் நற்செய்தி'யை அப்படி அள்ளியணைத்து பாராட்டுவதைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது. அதை அவரது மதுரை அமெரிக்கன் காலேஜ் பேராசிரியர் பிரபாகர் அறிமுகப்படுத்தியதாகச் சொல்கின்றார். ராம் தனது திரைப்படப் பாத்திரங்களுக்கு தனக்கு நெருக்கமானவர்களின் பெயர்களைப் பெயரிடுகின்றதார் என்பதால் 'கற்றது தமிழில்' ஜீவாவின் பாத்திரமான பிரபாகர் பெயர் இந்தப் பேராசிரியரின் பெயரின் நிமித்தமே வந்திருக்கக் கூடும்.

 
பதினைந்து வருடங்களுக்கு முன் தமிழ்த் திரைப்படங்களுக்கென்று 'காட்சிப்பிழை' என்றொரு சஞ்சிகை வந்து கொண்டிருந்தது. அதில் ஒவ்வொரு மாதமும் ஒரு படைப்பாளியிடம் அவர்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் எழுதும் பகுதி இருந்தது. ஒருமுறை என்னிடம் அவர்களிடம் எனக்குப் பிடித்த திரைப்படத்தைப் பற்றி எழுதச் சொன்னபோது, எனக்கு உடனடியாக ஞாபகத்துக்கு வந்தது 'கற்றது தமிழ்'. அந்தக் கட்டுரை 12 வருடங்களுக்கு முன்னர் வந்தபோது, அதை வாசித்த ராம் தனக்கு அது பிடித்ததாகச் சொன்னதாக அப்போது 'காட்சிப்பிழை'யின் பொறுப்பாசிரியராக இருந்த தளவாய் சுந்தரம் சொல்லியிருந்ததும் நினைவில் இருக்கின்றது. பின்னர் நான் எழுதிய திரைப்படங்கள் சார்ந்த கட்டுரைகளைத் தொகுத்து 'உதிரும் நினைவின் வர்ணங்கள்' என்ற நூலை வெளியிட்டபோது, அதில் ஒரெயொரு தமிழ்த்திரைப்படமாக 'கற்றது தமிழை' மட்டுமே சேர்த்திருக்கின்றேன் என்பதை இப்போது நினைக்க சற்று வியப்பாகத்தான் இருக்கிறது.


ராம் 2000களின் தொடக்கத்தில் இருந்தபோது ஒரு வலைப்பதிவொன்றைத் தொடங்கி (காட்சி?) அவரோடு அப்போது நெருக்கமானவர்களை எழுத வைத்திருந்தார்கள். அப்போது ஈழப்போர் இறுதிக்கட்டத்தில் இருந்தபோது தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தைப் பற்றியும், அது அரசியலாக்கப்பட்ட அவலம் பற்றியும் சிறந்ததொரு கட்டுரை வெளிவந்திருந்தது. அதில் எழுதி எழுதி படைப்பாளிகளாக பின்னாள் மாறியவர்கள் என்று மாரி செல்வராஜ், யமுனா ராகவன் (பிரியா விஜயராகவன்), கார்த்திக் நேத்தா, சாம்ராஜ் என்ற பலரின் எழுத்துக்கள் இன்னமும் எனக்கு ஞாபகத்திலிருக்கின்றது.

அந்தவகையில் ராம் தனக்குப் பின் இயக்குநர்களை மட்டுமின்றி, எழுத்தாளர்களையும் உருவாக்க முயன்றிருக்கின்றார்கள் என்பது முக்கியமான விடயம். இன்றைக்கு கற்றது தமிழ் வெளிவந்து 18 வருடங்களான பின், ஐந்து திரைப்படங்கள் மட்டுமே பொதுவெளிக்கு வந்தும், ஒரு இயக்குநராக ராம் தனக்கான ஓர் இடத்தை, உருவாக்கி வைத்திருப்பது அவ்வளவு எளிதல்ல. அதுவும் கொஞ்சக்காலம் திரைப்படங்கள் வராவிட்டாலே படுகுழிக்குள் இறக்கி மண்ணை மூடிவிட்டு போகும் அவசரமும் பொறாமையும் நிறைந்ததெனச் சொல்லப்படுகின்ற திரையுலகில் தன்னியல்பிலே ஒரு நெறியாளர் நிமிர்ந்து நிற்பது என்பது ஒருவகையில் சாதனைதான்.

காட்சிப்பிழையில் வந்த 'கற்றது தமிழ்' கட்டுரையை இவ்வாறாக முடித்திருப்பேன்:

"பிரபாகர் தனக்கான அறத்தோடு வாழும் ஒருவரே தவிர, பொது அறம் என நாம் விவாதிக்கும் எவற்றிலும் அவருக்கு அக்கறையே இருப்பதேயில்லை.எனவேதான் பிரபாகர் என்கின்ற பாத்திரம் ஒவ்வொருமுறையும் இதுதான் அவர் என நினைக்கின்றபோது இன்னொரு வடிவம் எடுத்துவிடுகின்றது. அது இத்திரைப்படத்தைப் பார்க்கும் நமக்குத் திகைப்பூட்டுவதாய் இருக்கிறது. மேலும் மேலும் இதுகுறித்து உரையாடும் வெளியைத் திறந்தபடி 'கற்றது தமிழ்' ஆகிவிடுகிறது. நாம் ஒவ்வொருவரும் பல்வேறு தன்னிலைகளால் ஆக்கப்பட்டவர்கள். வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வும், வாழ விரும்பும் வாழ்வும் கூட இருவேறு துவிதங்களாய்க் இருக்கலாம். அது இன்னும் நம் தன்னிலைகளை அடித்துத் துவசம் செய்கின்றன.

நாம் நம் தன்னிலைகளில் பிரபாகரைப் பார்க்கின்றோம். நம்மால் செய்யமுடியாததைப் பிரபாகர் செய்யும்போது நெருக்கத்தையும், ஆனால் அதேசமயம் பிரபாகர் நாம் விரும்பி ஆகும் பாத்திரம் அல்ல என்று உணர்கின்றபோது விலகலையும் அடைகின்றோம். எனவேதான் இந்தத் தருணத்தில் 'கற்றது தமிழ்' எனக்குப் பிடித்த திரைப்படமாய் அமைந்திருக்கிறது போலும்."


எனக்கென்னவோ ராமின் பிறகு வந்த திரைப்படங்களின் முக்கியபாத்திரங்களிலும் கூட, இவ்வாறான ஒத்ததன்மைகளே உள்ளோடிக் கொண்டிருப்பது போலத்தான் தோன்றுகின்றது.

*************

 

(Jul 10,2025) 

எனது புதிய இணையத்தளம் - www.elankodse.com

Monday, July 21, 2025

 

நண்பர்களுக்கு வணக்கம்!

 

எனது புதிய தளமான  www.elankodse.com இல் எனது ஆக்கங்களை இனி நீங்கள் வாசிக்க முடியும்.

 

நன்றி. 

****

கார்காலக் குறிப்புகள் - 103

Tuesday, July 15, 2025


ண்பரொருவரின் இன்னமும் வெளியிடப்படாத புனைவொன்றை கடந்த சில நாட்களாக வாசித்துக் கொண்டிருந்தேன். இதை வாசித்த நாட்களில் எனக்குள் பிரான்ஸிஸ் கிருபாவே நிரம்பியிருந்தார். பிரான்ஸிஸ்ஸின் 'கன்னி'யில் உளவியல் பிறழ்வுக்குள்ளான பாண்டியை வீட்டு மரத்தடியில் கட்டி நீண்டகாலம் வைத்திருப்பார்கள். ஒருவகையில் அது அவரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நிகழ்வென்றால், பிரான்ஸிஸ்ற்கு பின்னர் நிகழ்ந்தது ஒரு மீட்சிதான்.

அந்த மீட்சியின் போதுதான் பிரான்ஸிஸ் 'கன்னி'யை எழுதியிருக்கின்றார். எல்லோருக்கும் இப்படியொரு உளவியல் மீட்சி' எளிதில் கிடைப்பதில்லை. அப்படி மீட்சியடைந்தவர்களும் அதை எழுத்தாகப் பதிவு செய்திருப்பார்களா என்று தேடினால் அவர்கள் அரிதாகவே தென்படுவார்கள். எனக்கென்னவோ பிரான்ஸிஸ்ற்கு கிடைத்த அந்த தற்காலிக மீட்சி என்பதே, அவர் கடந்துவந்த வாழ்க்கையை எழுத்தாக நம் முன் வைப்பதற்காகத்தானோ என்றுகூடத் தோன்றுவதுண்டு.

எனது குழந்தை/வளரிளம் பருவம் போருக்குள் கழிந்திருக்கின்றது. ஆனாலும் அவ்வாறில்லாது இயல்பாக சூழ்நிலைக்குள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்று நினைத்த பலரின் குழந்தைப் பருவங்கள் பல்வேறு மனவடுக்களுக்குள் சென்றிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கின்றேன். கிரிஷ் எழுதிய 'விடுபட்டவை'யில் ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு ஆளாவதால் பதின்மத்தில் மனவடுக்குள் போவதைப் போல, நான் வாசித்த -இன்னமும் பிரசுரமாகாத நாவலிலும்- வரும் முக்கிய பாத்திரமான ஆண் குழந்தைப் பருவத்தில் பாலியல் வன்முறைக்குள்ளாகின்றான். அது எப்படி அவனது வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றது என்பதே இந்தப் புனைவின் பெரும்பகுதி.

பெண் குழந்தைகளைத்தான், குழந்தைகளாக வளர்ப்பது நம் சூழலில் கடினமென்று நினைத்தால், ஆண் குழந்தைகளும் இப்படி பாலியல் பலாத்காரங்களுக்குள்ளால்தான் வளர்கின்றார்கள் என்று நினைக்கும்போது மூச்சுமுட்டுகின்றது. அவ்வாறான உளவியல் சிக்கல்களுக்குள் இருப்பவர்களோ அல்லது அதைத்தாண்டி வருகின்றவர்களோ பொதுவெளியில் இவைகுறித்துப் பேசும்போது, நாம் அவர்களுக்கு ஏதேனும் 'அடையாளத்தை'யோ/காரணங்களையோ சுமத்திவிட்டு எளிதில் தப்பிவிடுகின்றோம்.

 
மேலும் பொதுச்சமூகத்தைக் கொஞ்சம் விலக்கிவிட்டுப் பார்த்தால் கூட, இவ்வாறு பெண்/ஆண் என்று வேறுபாடில்லாது பலரின் வெகுளித்தனமான உலகைச் சிதைக்கின்றவர்களாகவும் எழுத்தாளர்கள்/கலைஞர்கள் இருக்கும்போது இன்னும் அச்சமடைய வேண்டியிருக்கின்றது. கலை என்பதே சகவுயிர்கள் மீதெழும் அக்கறையின் பாற்பட்டதெனில், கலைஞர்கள் எவ்வாறு இருக்க முடிகின்றதென்பது அடிநாதமாக ஒலிக்கக்கூடிய அறம் சார்ந்த ஒரு கேள்வி.

இவ்வாறான படைப்பாளிகள் மீது தீங்கிரைக்கானவர்கள் (Victims) குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும்போது நாம் அவர்களின் குரல்களை தொடக்கத்திலேயே கலையின் 'பரிசுத்த ஆவியின்' பெயரால் அடக்கிவிடவும் எத்தனிக்கின்றோம். அப்படியாயின் இந்த தீங்கிரைக்கானவர்கள் எப்போதுதான் அவர்களுக்கான மீட்சியைப் பெறுவது? அவர்கள் தாம் இவ்வாறு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டோம் என்று மனந்திறந்து பேசும்போதல்லவா, குறைந்தபட்சம் அவர்களின் நெஞ்சை அழுத்தும் மனவடுக்களின் பாரங்களிலிருந்து விடுதலையடைய முடியும்? 

 
ஆனால் அந்த சுதந்திரமான வெளிகளைக் கூட அவர்களுக்குக் கொடுக்காது, நமக்கான சார்புகளில் நின்று நாம் தீர்ப்புக்களை வழங்கத் தயங்காத 'மகாத்மா'க்களாக விடுகின்றோம். இவ்வாறு இருப்பதால் எவருக்கும் எந்தப் பயனும் கிடைப்பதில்லை என்கின்றபோதும், நமக்கு இப்படியான ஓர் அடையாளம் வேண்டியிருக்கின்றது. ஆனால் அது தீங்கிரைக்கானவர்களை எந்தளவு இன்னும் மோசமாகப் பாதிக்கும் என்பதை அறியாமலே நாமும் மேலும் தீங்கிழைப்பவர்கள் ஆகிவிடுகின்றோம்.

நண்பரின் இந்த நாவலை வாசித்துக்கொண்டிருக்கையில், அவ்வப்போது இடைவெளி எடுத்தே வாசிக்க வேண்டியிருந்தது. அந்தளவுக்கு கனமான, நான் கற்பனை செய்யாத உலகம் அது. இப்படி உளவடுக்களால் நிரம்பிய ஒரு புனைவை வாசிக்கின்றேன் என்றபோது இன்னொரு நண்பர், 'மற்றவர்களின் அனுபவங்களுக்குள் நுழையாமல் இருப்பதென்பது எம்மைப் போன்றவர்களுக்கு மிகுந்த சவால் மிக்கது. நீங்கள் இவ்வாறான கதைகளை வாசிக்கும்போது அதிலிருந்து உங்களைத் துண்டித்துக் கொள்ளும் வெளிகளை உருவாக்கி வைத்திருத்தல் அவசியம்' என்றார். உண்மையில் அது கடினமானது என்றாலும், அது அத்தியாவசியமானது என்றே நினைக்கின்றேன். இல்லாவிட்டால் இந்தக் கதைகள் மிகுந்த மனப்பாரத்தைத் தந்து எங்களை வேறொரு சுழலுக்குள் அழைத்துச் சென்றுவிடவும் கூடும்.

நீங்கள் அருகில் இருக்கின்றவரோடு உரையாடிக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் அதை மீறி கண்களுக்குத் தெரியாத இன்னொரு ஒரு உருவம் உங்களோடு விடாது பேசிக் கொண்டிருக்கின்றது. அந்த மாயக்குரல் இப்படிச் செய் அப்படிச் செய் என்று விபரீதமான விடயங்களைச் செய்ய உங்களுக்குக் கட்டளையிடும்போது உங்களால் என்ன செய்ய முடியும்? மேலும் எதிரே இருப்பவர் பேசுவதைத் தாண்டி, இந்தக் குரல் தீர்க்கமாக ஒலித்தால் எந்தக் குரலில் உங்கள் கவனம் குவியும்?

இப்படித்தான் பல குரல்கள் ஒரே நேரத்தில் ஒலித்துக்கொண்டிருக்க, அவ்வப்போது அது தற்சாவின் விளிம்புகளும் அழைத்துச் செல்கின்றதுமாக, சிலருக்கு வாழ்க்கை அமைந்துவிடுகின்றது என்பதுதான் எவ்வளவு துயரமானது. மேலும் எல்லோருக்கும் மீட்சியோ/மீளுயிர்ப்போ அவ்வளவு எளிதில் வாய்த்து விடுவதுமில்லை.

***********

 

ஓவியம்: வின்சென்ட் வான்கோ 

(July 03, 2025) 

 

 

கார்காலக் குறிப்புகள் - 102

Monday, July 07, 2025

 

ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது

****

நான் எனது பதினாறாவது வயதில் கொழும்பில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எங்களுக்குக் கற்பித்த தமிழாசிரியரின் தந்தையார் காலமாகி இருந்தார். அவரே எங்கள் வகுப்பாசிரியர் என்பதால் நாங்கள் முழுவகுப்பாக அவரின் வீட்டுக்குப் போயிருந்தோம். ஆசிரியர், கதைகளை எழுதும் ஓர் எழுத்தாளர் என்பதால் அவர் தனது தந்தையைப் பற்றிய ஒரு கதையை உருக்கமாக எழுதினார். அது அன்று கொழும்பில் இருந்து வெளிவந்த 'சரிநிகர்' பத்திரிகையில் வெளியாகியது. எனக்கு இதன் பின்னணி தெரிந்திருந்தாலும் இன்னும் நெருக்கமாக உணரமுடிந்தாலும், இதை அறியாத ஒருவருக்கு அது மிகச்சிறந்த ஒரு புனைவாகத் தெரிந்திருக்கும்.

ஒரு தனிப்பட்ட அனுபவத்தை எப்படி தந்தையர்களை இழந்த எல்லோருக்கும் பொதுவான அனுபவமாக மாற்றமுடியுமென்ற ஒரு திறப்பை அந்த எழுத்து என் பதினாறாவது வயதில் தந்திருந்தது. அதுவரைக்கும் நான் வாசிக்கும் கதைகள் எல்லாம் தொலைவில் நடப்பதாகவும், நடந்து முடிந்துபோனவையாகவும் இருந்ததாக் எண்ணிக் கொண்டிருந்த எனக்கு இது புதிய அனுபவமாக இருந்தது.

எனது தமிழாசிரியராக இருந்தவர் இரவி. அவரின் தந்தையான அருணாச்சலம் காலமானதை புனைவாக எழுதி அந்தத் துயரைக் கடந்திருந்தார். ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவு இப்படி இருக்க முடியுமா என்பதை (அது யதார்த்ததில் எப்படி இருந்தாலும்) எனக்கு ஒருவகை புல்லரிப்பை ஏற்படுத்தியிருந்தது. என் நினைவு சரியானால், அது அப்பா என்கின்ற பெயரில் வெளிவந்திருக்க வேண்டும். இம்முறை இரவி அருணாச்சலத்திற்குத்தான் புனைவிற்கான கனடாவின் 'இயல் விருது' வழங்கப்படுகின்றது. ஆசிரியருக்கு என் வாழ்த்துகள்!
*

இப்படி வேறுவகையான  ஓர் இழப்பைச் சொல்வதற்கு, வ.அ.இராசரத்தினம் 'ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது' என்கின்ற நெடுங்கதையாக எழுதியிருக்கின்றார். வ.அ.இராசரத்தினம் அவரது மனைவியான லில்லியை, தனது 50 ஆவது வயதில் இழக்கின்றார். லில்லிக்கு அப்போது 40களின் மத்தி. அவ்வளவு எளிதில் ஓர் அடையாளங்காண முடியாத நோயால் லில்லி சென்.அந்தோனியார் பாடசாலையில் அதிபராக இருக்கும்போது இறந்துவிடுகின்றார். ஓரிடத்தில் மட்டும் விசர் நாய் கடி காரணமாக இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.

வ.அ.இராசரத்தினம், 'ஒரு காவியம் நிறைவுபெறுகிறது' என்கின்ற குறுநாவலை வீரகேசரியில் தொடராக எழுதுகின்றார். அதில் மனைவியின் மரணத்தோடு அவர்கள் இருவரினதும் வாழ்க்கையை நினைவுகூர்கிறார். லில்லி ஒரே ஊராக இருந்தாலும், இரு குடும்பங்களுள்ளும் இருந்த ஈழஅரசியல்(?) வித்தியாசங்களாலும் திருமணம் முடிக்கமுடியாதிருக்கின்றது. இறுதியில் இரு குடும்பங்களுக்கும் தெரியாமல் இரகசியமாகப் பதிவு திருமணம் செய்யலாம் என்கின்ற முடிவை, தேவாலயப் பாதிரியார் நீங்கள் இருவரும் திருமணம் செய்யும் வயதுக்குரியவர் என்று திருமணம் செய்து வைக்கின்றார்.

லில்லியிடம் தனது சம்பளப் பணத்தைக் கொடுப்பதைத் தவிர குடும்பம்/பிள்ளைகளிடம் நடப்பது எதுவு தெரியாத ஓர் எழுத்தாளராக இராசரத்தினம் இருக்கின்றார். அவர்கள் தங்களுக்கென்று கட்டுகின்ற வீட்டைக் கூட லில்லியாலே கட்டப்படுகின்றது. அதேவேளை லில்லிக்கு தனது கணவர் எழுத்தாளர் என்கின்ற பெருமை இருக்கின்றது. அவர் எழுதுகின்றபோது, அவரின் பிள்ளைகளை அண்டவிடாது மட்டுமில்லை, அவருக்கு வேண்டிய தேநீரையும், சிகரெட்டுக்களையும் எடுத்துக்கொடுக்கின்ற கனிவான துணையாகவும் இருக்கின்றார்.

அந்தக்காலத்திலேயே லில்லி அதிபராக கற்பிக்கின்ற பாடசாலையிலே, இராசரத்தினம் படிப்பிகின்ற ஓர் ஆசிரியராகவும் இருந்திருக்கின்றார்(?). தனது மனைவியின் கீழ் வேலை செய்ய இந்தக்காலத்து ஆண்களே தயங்குகின்றபோது இராசரத்தினம் ஒரு வித்தியாசமான மனிதராக இருக்கின்றார். அதுமட்டுமின்றி இவரது நூல்கள் வெளிவருவதற்கு எங்கேயோ எல்லாம் கடன்வாங்கி புத்தகங்களைப் பதிப்பிகின்ற வைக்கின்றவராகவும் லில்லி இருக்கின்றார். லில்லி மரணமடைகின்ற ஆண்டு 1975. ஆக இவையெல்லாம் 75 இற்கு முன்னராக நிகழ்ந்தவை.

லில்லிக்கு அழகிரிசாமி பிடித்த எழுத்தாளர். இவர்கள் வீடுகட்டி புதுமனைப் புகுதலின்போது உறவுக்காரர்கள் உங்களிடமிருக்கும் பெறுமதி வாய்ந்த பொருட்களை வீட்டுக்குள் கொண்டுவாருங்கள் என சொல்கின்றார்கள். இராசரத்தினமோ தனக்குப் பிடித்தமான சிலப்பதிகாரத்தையும், மு.தளையசிங்கத்தின் 'புதுயுகம் பிறக்கிறது' நூலையும் வீட்டுக்குள் முதன்முதலாகக் கொண்டுவருகின்றார். வந்திருந்த உறவுக்காரர் கோபிக்கின்றனர். லில்லியோ அவரின் பித்து அறிந்தவர் என்பதால், இந்தப் புத்தகங்களோடு நீங்கள் எழுதும் பேனாவையும் சேர்த்து வைத்துக் கொண்டு வாருங்களென சிரித்தபடி சொல்கின்றார்கள். அந்தளவுக்கு லில்லி தனது கணவரைப் புரிந்துகொண்ட துணையெனலாம்.

மரணச் செய்தி அறிந்து அன்றைய பிரதியமைச்சராக இருந்த மஜித், எஸ்.பொ(ன்னுத்துரை)வைக் கூட்டிக்கொண்டு வருகின்றார். எப்போதும் கலகலப்பாகப் பேசும் எஸ்.பொ, இவரை அணைத்துக்கொண்டு 'மகாமாசன' அமைதி காக்கின்றார். எஸ்.பொவை கட்டியணத்தபடி 'நீ அறிந்த எழுத்தாளன் இறந்து போய்விட்டான்' என்று கதறுகிறார் வ.அ.இ! அந்தளவுக்கு லில்லி அவரின் எழுத்துலக வாழ்க்கையின் பின்னிப்பிணைந்தவராக இருந்திருக்கின்றார்.

இறுதியில் லில்லியை உறவுகளும், பாடசாலைச் சமூகமும் பெரியளவில் பிரியாவிடை கொடுக்கும்போது, 'வ.அ.இராசரத்தினம் என்ற எழுத்தாளன் செத்துப்போனான் என்று சொன்னேன் அல்லவா? அவன் சாகவே மாட்டான், ஏனென்றால் ஒரு காவிய நாயகியாக இடம்பெற்ற லில்லியின் கதையை அவன் எழுதவேண்டும்' என்று அருகில் நின்ற எஸ்.பொவிடம் உணர்ச்சியோடு இராசரத்தினம் சொல்கிறார்.

ஒரு பகல் முழுக்க மகாமசான அமைதியைக் கடைபிடித்த எஸ்.பொ, அவரின் முதுகில் தட்டி, 'ஆ. அதுதான் சரி. நீ மட்டும் எழுத்தை மறந்தாயானால் அத் உன்னை எழுத்தாளனாக வளர்ந்துவிட்டவளுக்கு நீ செய்யும் துரோகமாகவே இருக்கும்' என்கிறார்.  அதுவே என் 'காவிய நாகிக்கு' என லில்லிக்கு காணிக்கை செய்த 'ஒரு காவியம் நிறைவுபெறுகிறது' குறுநாவலாக வெளிவருகின்றது.

இந்த குறுநாவல் மிகச்சிறியதுதான். ஒரு எழுத்தாளத் தம்பதியினரின் சிறுபகுதியைச் சொல்வதுதான். ஆனால் இப்போது 50 வருடங்களான பின்னும் இதை வாசித்து முடிக்கும்போது மெல்லிய துயரம் எனக்குள் படிந்துகொள்கின்றது. லில்லி இன்னும் கொஞ்சக் காலம் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம் என்றாலும், நாம் கடந்துபோகும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒருவராக இல்லாது, லில்லியை காலத்தில் மறந்துபோகாது ஒருவராக இராசரத்தினம் எழுத்தின் மூலம் ஆக்கியது முக்கியமானது . அநேகமாக எழுத்தாளர்களின் மனைவிமார்கள்தான் தமது கணவர்களின் மரணத்தை முன்வைத்து பிறகாலத்தில் எழுதியிருக்கின்றார்களே தவிர, ஓர் எழுத்தாளன் தன் மனைவி குறித்து இப்படியெழுதியது என்பது தமிழுலகில் அரிது. ஆகவே இந்த நூல் தனித்துவமானது என்று கூடச் சொல்லலாம்.
*
எஸ்.பொ(ன்னுத்துரை), சண்முகம் சிவலிங்கம் போல, பிற்காலத்தில் இராசரத்தினமும் அவரின் மகளையும் மருமகனையும் இந்த யுத்தத்தில் காவு கொடுத்திருக்கின்றார். தந்தையர்கள் உயிரோடு இருக்க, பிள்ளைகள் இளவயதில் மரணமாவது என்பது கொடுமையானது. இவர்கள் அனைவருமே அந்தத் துயரங்களோடே தொடர்ந்து தமது இறப்புக்கள் வரை விடாது எழுதியவர்கள் என்பதால் இவர்களின்பால் இன்னும் நெருக்கம் கூடுகின்றது.

திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகக் கொண்ட வ.அ.இராசரத்தினம் 90இல் மூதூரை இலங்கை இராணுவப்படை கைப்பற்றியபோது உள்ளூரில் அகதியாகப் இடம்பெயர்ந்தவர். பிறகு அவரின் வீட்டுக்குத் திரும்பியபோது அவர் சேகரித்த நூல்கள், அவர் எழுதி பதிப்பிக்காத பல்லாண்டுகால பத்திரிகை ஆக்கங்கள் உள்ளிட்ட அவர் நடத்திய மூதூரில் நடத்திய பதிப்பகம் அனைத்துமே அரச படைகளால் தீக்கிரையாக்கபட்டிருந்ததன. ஆனால் எழுத்தின் மீதான ஓர்மம் குன்றாது அப்போது 'மண்ணிற் சமைந்த மனிதர்கள்' என்ற நாவலை எழுதியவர்.

அதன் முன்னுரையில், 'நான் பிறந்த மண்ணில், தந்தையும் தாயும் மகிழ்ந்த குலாவிய அத்திருவிடத்தில், இனிப் போய் வாழவே முடியாதோ? என்ற கேள்விக்குறி கொக்கியாய் வளைந்து என் இதயத்தைக் கொழுவி வளைத்து வதைத்தது. அந்த வாதையில் ஒரு காலத்தில் மூதூர்ப்பட்டினத்திற் தமிழர்களும் வாழ்ந்தார்கள்; முஸ்லிம் மக்களோடு சகோதர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான சரித்திரச் சான்றாக அமையவேண்டும் என்ற குறிக்கோளுடன் 1990ம் ஆண்டு மார்கழியில் திருகோணமலையில் வைத்து இந்நாவலை எழுதி முடித்தேன்' என்று சொல்கிறார். மேலும் 'ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதான சங்க இலக்கியங்கள் மூலமாகத்தானே நாம் அந்தக் காலத்து மக்கள் வாழ்க்கையை இன்று அறிகின்றோம். அதுபோலவே இந்த நாவலும், என் ஊரைப்பற்றி இனி வரும் புதிய தலைமுறையினர்க்குச் சொல்லும் ஒரு சரித்திர ஆவணமாக இருக்கும்' என்று எழுதிச் சொல்கிறார்.

நாம் லில்லி என்கின்ற அருமையான பெண்மணியைப் பற்றி 'ஒரு காவியம் நிறைவு பெறுகிறது' குறுநாவலிலும், 'மண்ணிற் சமைந்த மனிதர்கள்' நாவல் மூலமாக மூதூர்ப் பட்டினத்தில் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாழ்க்கையையும் விரிவாக அறிந்துகொள்கின்றோம். எழுத்து என்பது ஒருவகையில் மனிதர்களை அவர்களின் வாதைகளிலிருந்து ஆற்றும் வடிகாலாகவும், இன்னொருவகையில் அதிகாரத் தரப்புக்களால் வரலாற்றில் இருந்து எளிதில் அகற்றமுடியா ஆவணமாக மாறிவிடும் விந்தையையும் செய்து விடுகின்றது.

************

 

( Jun 27, 2025)

ஒரு சந்திப்பு - இளவரசி

Friday, July 04, 2025

 

 அபூர்வமான சந்திப்புகள் அவ்வப்போது நாம் எதிர்பார்க்காமலே நடக்கும்
மதிற்பிற்குரிய எழுத்தாளர் Elanko DSe அவர்களின் சந்திப்பும் அவ்வாறே. அவருடைய ஆழமான,  பகடியான சமகால எழுத்துக்கள் எப்போதும் எனக்கு பிடித்தமானவை.


தோழைமையோடு வந்திருந்தவர் அவருடைய இரண்டு புத்தகங்களை “தாய்லாந்து ” மற்றும் “மெக்ஸிக்கோ” புத்தகங்களை கையளித்து அம்பை,  சூடாமணி,  எஸ் ரா  என உரையாடல் நீண்டது. 


நானும் மொன்றியல் எழுத்தாளர்கள் நடராசா அம்மா & வீணை மைந்தன் ஐயாவின் புத்தகங்களை வாசிக்க கொடுத்தேன். 


அத்தி பூத்தார் போல் நடக்கும் இது போன்ற புத்தகம் ,எழுத்து உலக மனிதர்களோடு உரையாடல் உள்ள நிறைவை அளிப்பது போல் அன்றாடம் அமைவதில்லை.


10 வயதேயான எனது மகனோடு சதுரங்கம் ஆடி சென்றபின்  அவருடைய புத்தகங்களை காட்ட “wow amazing cover and opt size for reading ” என சட்டென உதிர்த்தான் வார்த்தைகளை .. மகனின் முதல் விமர்சனம். 

 

தாய்லாந்து ” மற்றும் “மெக்ஸிக்கோ”  வாசிப்பு பயணம் முடித்து எனது அனுபவம் பகிர்கிறேன்.

 

நன்றி: இளவரசி இளங்கோவன்

கார்காலக் குறிப்புகள் 101

 இனி (ஒரு விதி செய்வோம்)

****

எஸ்.பொ(ன்னுத்துரை)வின் 'இனி' என்ற நூலை திருப்பவும் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். இது வெளியாகியபோதே சுடச்சுட வாசித்திருக்கின்றேன். எனக்கு மிகப் பிடித்த நூல், ஆனால் யாரோ என்னிடமிருந்து எடுத்துக்கொண்டு போய் அது தொலைந்து போய்விட்டிருந்தது. நிறையக் காலம் தேடிக் கொண்டிருந்தேன். இப்போது மீண்டும் அதை வாசிக்கக் கிடைத்தது.


'இனி' என்கின்ற இந்தநூல், ஒருவகையில் எஸ்.பொவின் கடந்தகால இருப்பைச் சொல்லும் அல்புனைவு எழுத்துக்களாலும், நேர்காணல்களாலும், அவருக்குப் பிடித்த அறிக்கைகளாலும் நிரம்பிய தொகுப்பு . ஒருவகையில் எஸ்.பொ இதுதான் தானேன இலக்கிய வெளியில் தன்னை அறிக்கையிட்ட நூலெனவும் எடுத்துக் கொள்ளலாம். இது வெளியிடப்பட்ட ஆண்டு 2000 ஆவணி. அடுத்தடுத்த மாதங்களில் எஸ்.பொ, 'புலம்பெயர்ந்தோரோ இனி தமிழ் இலக்கியத்தை வழி நடத்துவர்' என்கின்ற இலக்கிய சுவிசேஷத்தோடு பல்வேறு நாடுகளில் பயணித்துக் கொண்டிருந்தவர். அப்படி புறப்பட்ட அந்த இலக்கியப் பயணி கனடாவில் கால் வைத்தபோதுதான் நான் அவரை நேரடியாக முதன்முதலாகச் சந்தித்தேன்.

எஸ்.பொவைச் சந்திக்கமுன்னரே அவரின் 'ஆண்மை' சிறுகதைத் தொகுப்பை வாசித்திருந்தேன். என் பதின்ம வயது வாசிப்பை முற்றிலுமாகப் புரட்டிப் போட்ட இரண்டு நூல்களில் ஒன்று 'ஜே.ஜே.சில குறிப்புகள்; மற்றது 'ஆண்மை'. இரண்டையும் தற்செயலாக ஒரேநேரத்தில் வாங்கி வாசித்திருந்தேன்.

எஸ்.பொவைச் சந்தித்த காலத்தில்தான் 'காலச்சுவடு', தமிழினி-2000 என்கின்ற இலக்கியப் பெருநிகழ்வை நடத்தியிருந்தது. அதற்குப் பிறகு அப்படியொரு பெருநிகழ்வு தமிழக-ஈழத்து-புலம்பெயர் எழுத்தாளர்களைக் கொண்டு நடத்தபட்டதாக எனக்கு ஞாபகத்தில் இல்லை. அது சுந்தர ராமசாமி என்கின்ற ஆளுமையின் அன்பின்பால கூட்டிணைந்த கூட்டம். ஒரு பெரு நிகழ்வு நடந்தால் அதற்கு எதிர்ப்பில்லாது, உலகில் எங்கேனும் இலக்கியம் உண்டா என்ன? 'நிறப்பிரிகை'யினர் அ.மார்க்ஸின் தலைமையில் 'தமிழினி என்கின்ற கும்பமேளா' என்று அறிக்கைவிட்டு இந்நிகழ்வைப் புறக்கணித்தனர். இதற்கிடையில் தனித்த ஒநாயாக (lone wolf), சு.ராவோடு ஒத்தோட முடியாமலும், நிறப்பிரிகையோடு இணையவும் முடியாமல் ஜெயமோகன் தனித்து ஓடிக்கொண்டிருந்தார்.

எஸ்.பொ அந்த வருடத்திலேயே ஒவ்வொரு நாட்டுக்கும் பயணித்து இலக்கிய ஊழியத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்தார்.எஸ்.பொவால் நல்ல இலக்கிய ஆளுமைகளைக் சரியாக அடையாளங்கண்டு கொள்ள முடிந்திருக்கின்றது. எம்மிடையே பேசும்போது, இப்போது மலையாளப் பின்னணியில் வந்த ஜெயமோகன் நல்லாய் எழுதிக் கொண்டிருக்கின்றார் எனச் சொன்னார். அப்போது ஜெமோவின் 'விஷ்ணுபுரம்'வந்து நேர்/எதிர்மறையான எல்லா விமர்சனங்களையும் அது சந்தித்துக் கொண்டிருந்தது. அப்படி தன்னுடைய எழுத்துலக வாரிசாக  தற்போது பிரான்ஸில் வசிக்கும் கலாமோகனைச் சொல்லியிருக்கின்றார். பின்னாட்களில் வேறு சிலரையும் எஸ்.பொ வாரிசுக்களாக அறிவித்திருந்தார். அது அவரின் மூப்பின் காரணமாக வந்த தனிமையில் அவரோடு நெருங்கியிருந்த சிலர் மீது வைத்த அன்பின் காரணம் என்பதால் அந்த 'வாரிசு'க்களை நாம் இப்போதைக்கு மறந்துவிடலாம்.

இந்த 'இனி: ஒரு விதி செய்வோம்' என்கின்ற நூலை ஒவ்வொரு தசாப்தங்களாக எஸ்.பொ பிரித்திருக்கின்றார். '70களில் எஸ்.பொ' என்கின்ற பகுதியில், அவரின் பிரசித்த பெற்ற அறிக்கை இருக்கின்றது. 70களில் இடதுசாரி சார்புள்ள சிறிமா பண்டாரநாயக்காவின் அரசு, வெளிநாட்டு உற்பத்திகள் பலவற்றுக்கு தடை விதித்தது. அதில் ஒன்று இந்தியாவிலிருந்து வெளிவந்த புத்தகங்கள்/சஞ்சிகைகளுக்கான தடை. இந்தத் தடையை எந்தந்த வகையினர் எவ்வாறு ஏற்கின்றனர்/எதிர்க்கின்றனர் என்று எஸ்.பொ ஓர் அறிக்கையை 100 பக்கங்களுக்கு மேலாக எழுதியிருக்கின்றார். இது அன்றைய காலத்தில் (1972), 'எஸ்.பொ அறிக்கை' என்ற பெயரில் 124 பக்கங்களில் தனி நூலாகவும் அச்சிடப்பட்டிருக்கின்றது.

இது மட்டுமில்லை, இந்த தொகுப்பில் இல்லாவிட்டலும், கிட்டத்தட்ட அந்தக் காலத்தில் 'இஸ்லாமும் தமிழும்' என்ற நூலையும் எழுதி வெளியிட்டிருக்கின்றார். ஏதோ ஒரு சச்சரவின் நிமித்தம் மூன்றோ/நான்கோ நாளில் 100 பக்கங்களுக்கு மேலாக நீளும் எழுதி இஸ்லாமிய வாலிபர் இயக்கம் இதை வெளியிட்டிருக்கின்றது. என்ன சர்ச்சை என்பது ஒருபுறம் இருக்க, ஒருவகையில் அந்நூலை வாசிக்கும்போது எழுபதுகளில் இஸ்லாமிய (முஸ்லிம்) இலக்கியம் குறித்து நாம் அறியும் ஓர் ஆவணமாக இன்று அது திகழக் கூடும். இவ்வாறு எஸ்.பொ அவருக்குரிய சர்ச்சைகளுடன், ஓர் முழுமையான ஆளுமையாகத் திகழ்ந்திருக்கின்றார்.

அதனால்தான் இந்த நூலில், '80களில் எஸ்.பொ' என்ற பகுதியில் கலாமோகனோடு ஓர் நீண்ட நேர்காணலை நிகழ்த்துகின்றார். அது எஸ்.பொவுக்கு அன்றிருந்த இலக்கிய நிலைப்பாட்டை மட்டுமின்றி, அவருக்கு ஈழத்தில் நடந்துகொண்டிருந்த போராட்டம் குறித்து என்ன கருத்திருந்தது என்பதையும் பதிவு செய்கின்றது. ஆனால் 80களில் இருந்த எஸ்.பொ, 2000களில் இருக்கவில்லை. அவருக்குள் எப்போதும் தமிழ்த்துவக் கனல் எரிந்துகொண்டிருந்தபோதும், பிற்காலத்தில் 'விடுதலை வெறி'யர்களை நேசிக்கும் ஒருவராக அவர் மாறிவிட்டிருந்தார்.

அதை எஸ்.பொவின் 'ஆண்மை' தொகுப்பிலிருக்கும், அருமையான குறுநாவலாக இருக்கும், போராளியாக இருந்து அகாலமான அவரின் மகனின் மித்தியைப் பற்றி நனவிடைதோய்ந்து எழுதிய கதை-15இல் நாம் எளிதாக அறிந்துகொள்ளலாம். அதுபோலவே இந்த நூலின் பின்னட்டையில் அவர் சேர்த்திருப்பது அவரது மகன் போராளியாக களத்தில் ஆயுதங்களோடு அவரின் தோழர்களோடு நிற்கின்ற புகைப்படத்திலும், எஸ்.பொ வந்து சேர்ந்த பாதையைக் காணலாம்.

அதன்பிறகு '90களில் எஸ்.பொ' பகுதியில் அவர் தமிழக/புலம்பெயர்ந்த சஞ்சிகைகளுக்குக் கொடுத்த நேர்காணல்கள். இந்த நூலில் நான் மீண்டும் வாசிக்கும்போது தவிர்த்த பகுதி அதுதான். என் தனிப்பட்ட வாசிப்பில் எனக்கு எவரின் நேர்காணல்களும் சுவாரசியம் தருவதில்லை. ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கையை அறிய வேண்டுமெனில், ஒரு நேர்காணலே போதுமென நினைப்பவன். அதற்குப் பிறகு அவர்கள் எதைச் சொன்னாலும், அதிலிருந்து 'சொன்னதையே திருப்பிக் கூறுகின்றனர்' என்று எளிதாக கண்டுகொண்டுவிடுவேன். மற்றும்படி ஒரு படைப்பாளி தன் (புனைவல்லாத) கருத்துக்களைச் சொல்ல வேண்டுமெனில் எழுதி விட்டுப் போய்விடலாம் என்பதே என் கருத்து. ஆகவே எனக்கு எஸ்.பொவை அறிந்துகொள்ள கலாமோகன் அவரை 80களில் கண்ட ஒரு நேர்காணலே போதுமாக இருந்தது.

இந்நூலின் இறுதிப்பகுதியான 'புத்தாயிரம் நோக்கிய உரத்த சிந்தனைகள்' எனக்கு பிடித்த பகுதிகளில் ஒன்று. இதில் எஸ்.பொ, அன்று 'கணையாழி'யில் எழுதிய கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. 'தமிழ்த்துவம்: ஒரு புரிதல்', 'தேவை: உண்மையான உபாசகர்கள்', இவ்வழி ஏகின் எவ்வழி புக்கும்' என்று பல சுவாரசியமான இன்றும் உரையாடல்கள் அமைக்கக்கூடிய கட்டுரைகள் இருக்கின்றன.
 

இந்த நூல் வெளிவந்து 25 வருடங்கள் ஆன பின்னும், இன்னும் காலத்தில் உறைந்துபோய் விடாமலும், அதே வேளை ஒரு காலகட்டத்தை ஆவணப்படுத்துவதாக இருக்கின்றதும் கவனிக்கத்தது.

எஸ்.பொ, பிரமிள், மு.தளையசிங்கம் போன்றவர்கள் புனைவில் புதிய பாய்ச்சல்களை நிகழ்த்தினாலும், அதேயளவுக்கு நிகராக அல்புனைவிலும் தமது எழுத்தின் திசைகளை விசாலித்தவர்கள். அதனால்தான் இவர்கள் மீது எத்தகைய விமர்சனங்கள்/வசைபாடல்கள்/கீழிறக்குதல்கள் இருந்தாலும், எந்த ஓர் இலக்கிய தரப்பாலும் எளிதில் நிராகரிக்க முடியாதவர்களாக அவர்கள் விகாசித்து ஒளிர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

***********

 

( Jun 25, 2025)