கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 32

Sunday, May 05, 2024

 நான் Alpha ஆணாக மாறிய கதை!

 

தை மாதமும் முடியபப் போகின்றது, இந்த வருடத்தில் எந்தப் பதிவையும் என் (இணையத்)தளத்தில் எழுதவில்லை. ஆனாலும் இந்த மாதத்தில் அங்கே 1,700 பக்கங்கள் வாசிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். ஆகக்குறைந்தது இந்த 1,700 பக்கங்கள் வாசிப்பில் ஒரு நூறு பேராவது அங்கு போய் எதையோ வாசித்திருக்கின்றார்கள் என எடுத்துக் கொள்ளலாம். இன்னமும் என்னைக் கைவிடாத இருக்கும் அந்த நூறு பேருக்காவது புதிதாக‌ எதையாவது எழுத வேண்டும் என்றுதான் இந்த வாரவிறுதியில் ஆசைப்பட்டேன். 


இதற்குள் என் பதிவுகளை வாசித்துவிட்டு ஒரு நண்பர் புதிய வடிவமைப்பில் ஓர் இணையதளத்தைச் செய்து தருகின்றேன் என்று முன்வந்தார். எதிலும் இப்போது அவ்வளவு மனம் குவிக்க முடியா ஒரு மனோநிலையாலும், கையைக் கடிக்கும் நிதிப்பற்றாக்குறையினாலும் அந்தத் திட்டத்தைக் கொஞ்சம் ஒத்திவைக்கலாமென அவருக்குச் சொன்னேன். யாரென்றே தெரியாது எழுத்தின் வழி என்னை கண்டெடுத்த அந்த நண்பருக்கு என் அன்பு!

தேவிபாரதியின் 'நீர்வழிப் படூஉம்'மை பல்வேறு முறை வாசிக்கத் தொடங்கி இடையில் கைவிட்டிருந்தேன். கதாபாத்திரங்களின் வட்டாரமொழியும், தொடக்கத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்ட நிறைய பாத்திரங்களும் வாசிப்பைத் தொடரமுடியாது என்னைக் கடினப்படுத்தியது. மிக மெதுவாகவே பக்கங்களை எண்ணி வாசிக்க வேண்டியிருந்தது. ஆனால் இம்முறை தன் முயற்சியில் சற்றுந்தளராத விக்கிரமாத்தியன் போல வேதாளத்தை வெட்டி வீழ்த்திவிட்டேன். என் வாசிப்பில் தேவிபாரதியின் 'நட்ராஜ் மகராஜ்'ஜை அவரின் முக்கியமான படைப்பாக இதுவரை வைத்துக் கொண்டிருந்தேன். அதற்குச் சமாந்திரமாக 'நீர்வழிப் படூஉம்மை'யும் வைத்துக் கொள்ளலாமென அதை வாசித்து முடித்தபோது தோன்றியது. காருமாமா, பெரியம்மா, அம்மா, கதைசொல்லி, கடைசியில் ராசம்மா அத்தை உருட்டிய தாயத்தில் அந்த இரண்டு விழுந்ததா என்கின்ற புதிர் என எல்லாவற்றையும் ஒருமுறை மீள நினைத்து எழுதலாம் என்ற விருப்பை,  இந்த 'அனிமல்' அசைத்துப் போட்டுவிட்டது.


'அனிமலை' அரைமணித்தியாலம் பார்த்திருக்கும்போதே நண்பரிடம் இருந்து ஓர் அழைப்பு. காரெடுத்துப் போகும்போதே மனதெல்லாம் ஜிவ் என்றிருந்தது. ஒவ்வொரு சிக்னல் விளக்கிலும் பிரேக்கைக் குத்திக் குத்தி கிறிச்சிட்டு நிறுத்தினேன். பக்கத்தில் வந்தவர்கள் எல்லாம் பதறிப் போய்ப் பார்த்தார்கள். நெருங்கியவர்களாக இருந்தாலும் கண் பார்த்துப் பேசுவதில் எப்போதும் தயக்கமிருக்கும் எனக்கு, அன்று அருகில் காரில் போனவர்கள், தெருவில் நடந்து போனவர்கள் என எல்லோரையும் உற்று உற்று அல்ல, உறுமி உறுமிப் பார்த்தேன். இது நிச்சயம் நான் ஒரு 
ல்பா ஆணாக மாறிவிட்டேன் என்பதற்கான சாட்சியம் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. பார்த்த பெண்களின் பாதங்கள் எல்லாம் நீளமாக இருக்க, இவர்களோடு டேட்டிங் செய்தால் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்பதுவரைக்கும் நான் போய்விட்டேன். நல்லவேளையாக என் பக்கத்தில் இருந்த நண்பர்தான் எல்லாக் காலும் அப்படித்தான் தெரியும், ஏன் என்றால் அவர்கள் இந்தக் குளிர்காலத்தில்  Winter Boots அணிந்திருக்கின்றார்கள் என்பதை நினைவுபடுத்தினார்.

அனிமலைப் பார்த்த அரை மணித்தியாலத்துக்கே இவ்வளவு மாற்றம் என்றால் மூன்றரை மணித்தியால முழுப்படத்தையும் பார்த்த பின் என்னவாகுமோ என்று இந்த ஆல்பா ஆணுக்குப் வியர்க்கத் தொடங்கிவிட்டது. 


இதுவரை  materialistic  ஆக‌ இருப்பது பற்றி துளியும் சிந்திக்காதவன் இப்போது ஒரு விடயத்துக்காய்ப் பணம் சேமிப்பது என முடிவு செய்துவிட்டேன். சொந்தமாக ஒரு இணையத்தளம் வைத்திருக்கத்தான் கையில் அவ்வளவு பணமில்லை. நான் இன்றிலிருந்து ஒரு தனியார் ஜெட் வாங்குவதற்காக கடுமையாக உழைப்பதெனச் சபதமெடுத்துவிட்டேன். இனி இந்த வாசிப்பு, கவிதை, கதை எல்லாம் நேரத்தை வீணாக்கப் போவதில்லை. ஆல்பா ஆணாக இருக்க முடியாதவர்கள்தான் இப்படி கலை இலக்கியமெனச் சொல்லி  ஏமாத்துவார்கள் என்று நெற்றிப்பொட்டில் அடித்துச் சொல்லிவிட்டார்கள்.

ஒரு பெண்,  அவள் உளவாளியா என்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க அவளோடு புவியீர்ப்பு விசையோடு புணர்தலை 
ல்பா ஆணால் மட்டுந்தான் செய்யமுடியுமென்று அறிந்தபோது நான் பரிபூர்ண நிர்வாணமடைந்துவிட்டேன். அதை மனைவியும் ஏற்றுக்கொள்வாள் என்பதுதான் எமக்கான பெரும் விடுதலை.  இனி நான் தேடிப் போகின்ற பெண்கள் எல்லாம் உளவாளிகள்தான். அதில் எந்தச் சந்தேகமும் எனக்கு இருக்கப் போவதில்லை.  அவர்களில் ஏற்படுத்தப்போகும் Love bitsஇற்கு அதே வர்ணத்தில் அவர்களுக்கு என்னால் ஒரு கார் வாங்கிக் கொடுக்க முடியாது போயினும் அதே நிறத்தில் nail polish ஆவது  வாங்கிக் கொடுக்கலாமென நினைக்கின்றேன்.

மேலும் நான் இலக்கியத்துக்கு வந்த தொடக்க காலத்தில் தனது CK உள்ளாடைக்காய் அன்றைய காலத்திலேயே 5,000 ரூபாய் செலவழித்ததாய்  எழுதி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய‌  என் ஆல்பா ஆசானாகிய சாருவையும் இக்கணத்தில் நன்றியுடன் நினைவு கொள்கின்றேன்.

***********

டல்கன்னிக்குப் பதிலாக மீன்மாதர் என்ற அழகான சொல்லை பொன்னி அரசு, ஷரண்யா மணிவண்ணனின் நூலுக்கான தமிழ் மொழிபெயர்ப்பில்  பயன்படுத்தியிருப்பார். தமிழ்க்கன்னி, கடல்கன்னி போன்ற இந்த 'கன்னி'  (virgin) வகை சொற்களைப் பாவிப்பதில் எனக்குச் சிக்கலுண்டு. அந்த வார்த்தைகள் மூலம் நாமறியாமலே பெண் பிள்ளைகளுக்கு  தேவையில்லாப் பாரங்களை சிறுவயதுகளிலேயே ஏற்றிவிடுகின்றோம் என நினைப்பதுண்டு.

'நிலவொளியில் மீன்மாதர்' ஓர் அருமையான புத்தகம். மட்டக்களப்பு பின்னணியில்  இருந்து வந்த ஷரண்யா, மட்டுநகரில் இசைபாடும் மீன் மாதரிலிருந்து உலகின் பல்வேறு கலாசார மீன்மாதர்களின் கதைகளை, மட்டுநகருக்கு பயணம் செய்யும் ஒரு தாய், தன் மகளுக்குக் சொல்வது போல எழுதியிருப்பார்.

அழகான ஓவியங்களுடன் மீன்மாதர்களைப் பற்றிய இந்த நூலை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் சுவாரசியமாக வாசிக்கலாம். இவ்வருட சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 'எதிர்' வெளியீடாக வெளிவந்த இதை நான் வாங்க வேண்டிய புத்தகமாக குறித்து வைத்திருந்தேன். நண்பரினுடாக இந்நூல் பின்னர் எனக்குக் கிடைத்திருந்தது.


******
 
சாரு நிவேதிதாவிடம் இன்றைய காலங்களில் புதிதாகப் பெறுவதற்கு ஒன்றுமில்லையெனினும் நான்  அவரைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கின்றேன். அவரின் அண்மைக்கால நாவலான 'பெட்டீயோ' வரை அனைத்துப் புனைவுகளையும் வாசித்திருக்கின்றேன். ஹருகி முரகாமியின் 'நோர்வேஜியன் வூட்'டை மட்டும் வாசித்துவிட்டு முரகாமிக்கு எழுதத் தெரியாதென்று சாரு சொல்வதெல்லாம் அழிச்சாட்டியம். 'உங்களுக்கு இந்தத் தலைமுறைக்கேற்ப எழுதத் தெரியாது' என்று சொல்லியதை சவாலாக எடுத்து முரகாமி எழுதியதே 'நோர்வேஜியன் வூட்'டே தவிர, அது அவரது இயல்பான புனைவுலகத்துக்குள் வருகின்ற எழுத்து நடையே அல்ல. 'நோர்வேஜியன் வூட்' போன்ற எழுத்துநடையிலும் என்னால் எழுதமுடியுமென்று எழுதிக்காட்டியது, முரகாமியின் பின்னவீனத்துவ எள்ளல் என்று வேண்டுமானால் மட்டும் சொல்லிக் கொள்ளலாம்.  

சாரு, கடந்த சில பதிவுகளில் ப்யூகோவ்ஸ்கியைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கின்றார். 'ஏன் நான் ப்யூக்கின் மனைவி லிண்டா எழுதிய சுயசரிதத்தை வாசிக்கவேண்டும், என் வாழ்வை ப்யூக்கின் வாழ்வைப் போலத்தான் இருக்கின்றது' என்கின்றார்.  ப்யூக்கிற்கு மனிதர்களோடு இருப்பது அவ்வளவு பிடிப்பதில்லையெனினும் அவரது எழுத்தைப் போல, அவரின் வாழ்வும் சுவாரசியமானது. முக்கியமாக 'கண்ணாயிரம் பெருமாள்' போல தனது மனைவி பற்றியோ காதலிகள் பற்றியோ சதா முறைப்பாடுகள் சினாஸ்கி செய்தவருமில்லை. பெருமாளுக்கு சுதந்திரமும் வேண்டும், மனைவியைத் திட்டிக்கொண்டு அவரோடு ஒட்டிக் கொண்டும் இருக்கவேண்டும்.  அதை,பெருமாள் தன் தனிப்பட்ட வாழ்வின் அல்லாடல் என்று வைத்துக் கொண்டால் கூடப் பரவாயில்லை. எல்லாப் புனைவுகளிலும் அதையே திருப்பத் திருப்ப எழுதி அவரின் மனைவியை விட,  எங்களையே நொய்நொய் என்கின்ற‌ பெருமாளுக்கு செவிட்டில் இரண்டு கொடுத்தால் என்னவென்று நினைக்க வைக்கின்றார்.

இப்போது 'என்னையும் என் எழுத்தையும் புரிந்து கொள்ள ஒரு எளிய வழி' (https://www.charuonline.com/blog/?p=14457) என்றொரு கட்டுரையில் சாரு  ப்யூக்கோவ்ஸ்கியின் ஒரு கவிதையைப் பகிர்ந்திருக்கின்றார்.

அது  காமத்தை அப்படியே நேரடியாகச் சொன்ன கவிதை. நான் இக்கவிதையை தமிழாக்கி 'ப்யூகோவ்ஸ்கி கவிதைகள்' தொகுப்பில் சேர்த்திருக்கின்றேன். முதலில் அதே ஸ்லாங்கில் தமிழில் Rawவான கெட்டவார்த்தைகளைப் பாவித்தே தமிழாக்கம் செய்திருந்தேன் என் நண்பருக்கு அதன் முதல்வரைவை அனுப்பியபோது பயந்துவிட்டார். அடுத்த வரைவுகளில் தமிழில் 'நாகரீகமான' வார்த்தைகளைப் பாவித்து முழுமையாகத் திருத்தியமைத்திருந்தேன்.. இருந்தபோதும் தொகுப்பில் இந்தக் கவிதை உட்பட வேறு சில 'காம'க் கவிதைகளைச் சேர்ப்பதற்கு முன் எனக்குத் தெரிந்த 3இற்கும் மேற்பட்ட தோழிகளிடம் அனுப்பி கருத்துக் கேட்டிருந்தேன்.  அத்தொகுப்பை இவ்வாறான கவிதைகள் இல்லாது கொண்டு வந்திருக்கலாம். ஆனால் இந்தக் கவிதைகளும் சேர்த்துத்தான் ப்யூகோவ்ஸ்கி என்பதால் அவற்றைச் சேர்ந்திருந்தேன்.

ப்யூகோவ்ஸ்கியால் தனது இறுதிக்காலம் வரை எழுத்தின் சாறு (juiciness) குறையாது  எழுத முடிந்தது. ப்யூக்கின் 'சினாஸ்கி' போல கண்ணாயிரம் பெருமாள் ஆவது அவ்வளவு எளிதுமில்லை. வாழ்க்கையில் மட்டுமில்லை எழுத்திலுந்தான்.
 
அந்த 'காதல் பாட்டை' இங்கே இணைத்திருக்கின்றேன்.

***********

திரைப்படங்கள் குறித்த சில குறிப்புகள்..

Sunday, April 28, 2024

  (ஓவியங்கள்: ஊக்ரா) 

 

னது அண்மைக்கால பதிவுகளை ஒரு தமிழ்நாட்டு இயக்குநர் வாசித்திருக்கின்றார் போலும். முக்கியமாக ப்யூகோவ்ஸ்கி பற்றியும், திரைப்படங்கள் குறித்தும் நான் எழுதியது அவருக்குப் பிடித்திருந்தது. எனக்கு அவரின் தொடர்பு எண்ணை அனுப்பியதோடல்லாது, voice message ம் விட்டிருந்தார். எனக்கு அவர் பிடித்த நெறியாளர் மட்டுமில்லாது, அவரின் சினிமா/இலக்கியம் சம்பந்தப்பட்ட விடயங்களையும் நான் பின் தொடர்ந்து கொண்டிருப்பவன் என்பதால் அவரது அழைப்பு ஒரு இனிய அதிர்ச்சியாக இருந்தது. நேரமிருக்கும்போது பேசுவோம், உங்களின் திரைக்கதையோடு சேர்ந்து வேலை செய்வோம் என்று அழைத்திருந்தார். அவரோடு சேர்ந்து வேலை செய்வதற்குக் காலம் கனியுமா இல்லையா என்பதை எதிர்காலத்துக்கு விட்டாலும், இதை ஏன் சொல்கின்றேன் என்றால், எழுத்து அழைத்துச் செல்லும் வியப்பான திசைகளைப் பற்றிக் குறிப்பிடத்தான்.

நேற்று வேலையால் வந்த களைப்பு இருந்தாலும் (இந்த வேலை என் நேரத்தையும், மனதையும் அடிவரை உறிஞ்சி எடுத்து சோர்வுறச் செய்தாலும்) ஒரு நண்பரின் தொலைபேசி அழைப்புக்குப் பதில் அழைப்பு எடுத்திருந்தேன். ஏதேதோ சொல்லமுடியாத காரணங்களால் தனித்திருப்பவர்கள் மீது எனக்கு அதீத ஈர்ப்புண்டு. நண்பர் தனது இளமைக்காலத்தில் பார்த்த சிங்களப் படங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அவை பெரும்பாலும் கறுப்பு-வெள்ளையானவை. ஆனால் அந்தக் காட்சிகள் அவரிடம் இவ்வளவு தசாப்தங்கள் ஆனபிறகும் மறக்காமல் இருக்க, அவற்றையெல்லாம் விரிவாக நினைவுபடுத்த அவரால் முடிந்தது. இத்தனைக்கும் அவருக்குச் சிங்களம் தெரியாது. திரைப்படத்தின் மொழி தெரியாமலே அத்திரைப்படங்கள் கவர்ந்திருக்கின்றன மட்டுமில்லை, இத்திரைப்படங்களே தன்னை எழுத்து, இன்னபிற கலைகளுக்கும் கைகோர்த்து அழைத்துச் சென்றன என்றார். இப்போது தானெழுதும் எதற்கும், இந்த 'மொழி' தெரியாத திரைப்படங்களே அடிப்படைக் காரணமென நெகிழ்ந்தார். அப்படியெனில் திரை என்னும் காட்சிமொழி எவ்வளவு வீரியமானது என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

இலங்கையில் நின்றபோது நண்பர் இளங்கோ ராம் தனது திரைப்படமான 'Tentigo' ஐ எனக்கான தனிப்பட்ட காட்சியாகத் திரையிட்டுக் காட்டியிருந்தார். இத்திரைப்படத்தின் கதை என்பது கொஞ்சம் 'ரிஸ்கி'யானது. பார்வையாளர் அதன் முக்கிய கதையிழையைத் தொடக்கத்திலேயே நிராகரித்துவிட்டால், முழுத்திரைப்படமே அபத்தமாகிப் போய்விடும். கத்தியில் கால் வைத்து நடக்கும் கதையில் திரைக்கதை வலுவாகக் கட்டியமைக்கப்பட்டதால் என்னால் முழுத்திரைப்படத்தோடும் தொடர்ந்து பயணிக்க முடிந்தது. இப்போது அது Tallinn, Glasgow போன்ற இடங்களில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில இடங்களில் அதற்கு விருதுகளும் கிடைத்திருக்கின்றன. முற்றுமுழுதாக சிங்களக் கலைஞர்கள் நடித்த அந்த சிங்களத் திரைப்படத்தை நான் அவர்களின் வாழ்வியல் தெரிந்த ஒருவனைப் போல இருந்து இரசித்தேன். விரைவில் இளங்கோ ராம் இந்தியாவிலும் சென்று திரைப்படத்தை இயக்கவிருக்கின்றார் என நினைக்கின்றேன். பிரசன்னா விதானகேயும் இப்போது மலையாள நடிகர்களை வைத்து இந்தியாவில் ஒரு படத்தை இயக்கியிருக்கின்றார். எனவே திரைப்படங்கள் மொழியைத் தாண்டிய பார்வையாளர்களை மட்டுமில்லை, நல்ல நெறியாளர்களை அவர்கள் படங்களை இயக்க நாடுகள் தாண்டியும் அழைத்துச் செல்லும் எனச் சொல்லிக் கொள்ளலாம்.

 

ன்று இலங்கையில் எடுத்த ஒரு திரைப்படத்தை இங்குள்ள திரையரங்குச் சென்று பார்த்தேன். என் நண்பனின் பங்கும் திரைக்குப் பின்னால் இருக்கின்றது என்பதாலும் அதைத் தவறவிடக்கூடாது என்று நினைத்தேன். அரங்கு நிறையப் பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். திரைப்படத்தின் ஒளிப்பதிவு, இசை, நடிகர்கள் தேர்வு கூட நன்றாக இருந்தது. ஆனால் திரைக்கதையின்போது குழுவினர் அனைவரும் நன்றாகத் தூங்கிவிட்டனர் என நினைக்கின்றேன்.

இன்றைய காலங்களில் மனதுக்கு உவப்பில்லாத புத்தகங்கள்/திரைப்படங்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ளும் காலத்துக்கு வந்துவிட்டேன். ஆனால் இத்திரைப்படம் உண்மையிலேயே தலையிடியைத் தந்திருந்தது. அது என்னை எவ்வளவு புறமொதுக்கியதென்றால், படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஓரிரு கட்டுரைகளை அலைபேசியில் வாசித்து முடிக்கும் அளவுக்குச் செய்திருந்தது.

இவர்கள் புதியவர்கள் என்பதால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் 30 நிமிடங்களுக்குள் ஒரு குறுந்திரைப்படமாக எடுக்க வேண்டியதை 2 மணித்தியாலம் நீளமாக எடுத்து பார்வையாளர்களைக் கொல்லக்கூடாது. திரைப்படம் முழுதும் அபத்தம் நீக்கமற இருப்பது ஒருபுறம் இருந்தால், கதையே இல்லாமல் சும்மா 'காட்சிகளை' இனி அலுப்பே ஆக முடியாது என்றளவுக்கு நீட்டித்துக் கொண்டிருந்தனர்.

தம்பிமாரே, இதைத்தான் நான் 10 வருடங்களுக்கு முன்னர் இங்கு தமிழ்த்திரைப்பட விழாக்களின்போது ஜூரிகளில் ஒருவராக இருந்தபோது வருடம் வருடம் பார்த்தேன். அந்தச் சோகத்தையே இப்போது நீங்களும் வைத்துச் செய்து கொண்டிருந்தால் நியாயமா? திரைப்படம் என்பது எத்தனைபேரின் கடினமான உழைப்பால் முழுவடிவம் எடுத்திருக்கும்? நீங்கள் திரைக்கதையை நன்கு செதுக்கி, வலுவாக்கி இருந்தால் அனைவரின் உழைப்பும் மதிக்கப்பட்டிருக்கும் அல்லவா? இப்படி உங்களோடு உழைத்தவர்களை மட்டுமில்லை, உங்களை நம்பி படம் பார்க்க வந்தவர்களையும் கைகழுவிட்டுவிட்டு, திரைப்படம் முடிந்தபின் திரையில் 'இந்திய சினிமாவிட்டு ஈழச்சினிமாவை ஆதரவளிக்கவேண்டும்' என்று விரிவுரை கொடுப்பது நியாயமா சொல்லுங்கள். உங்களின் படைப்பை நம்பித்தானே -பிற தமிழ்/ஆங்கில படங்களுக்குக் கொடுக்கும் ரிக்கெட் விலையை விடக் கூட கொடுத்து- பார்வையாளர்கள் நாங்கள் வந்து அரங்கை நிறைத்து இருந்தோம். ஆனால் நீங்கள் நமக்குத் தந்ததுதான் என்ன? இதைவிட கடந்தவருடத்தில், "சாம் சூஸைட் பண்ணப் போறானில்" சின்ன அதிர்ச்சியைக் கதையின் முடிவில் வைத்து, கடற்கரை, தேவாலயப் பின்னணியில் நல்லதொரு குறுந்திரைப்படம் தந்தவர்களும் இதே யாழ்ப்பாணத்தவர்கள்தானே?

ஆக, ஈழத்து/புலம்பெயர் படங்களுக்கு மக்கள் ஆதரவு தரவில்லை என்றெல்லாம் குறைகூறாது, நல்லதொரு திரைப்படத்தை முதலில் தாருங்கள். ஒரு திரைப்படம் ஓடுமா, ஓடாதா என்பதைவிட நாங்கள் எங்களால் இயன்றவரை சிறந்த படைப்பைக் கொடுத்திருக்கின்றோம் என்று மனநிறைவை நீங்கள் அடைதலே முக்கியம். மேலும் தயவுசெய்து தமிழகத்துப் படங்களைப் போல போலி செய்யாதீர்கள். அது உங்களை எங்குமே அழைத்துச் செல்லாது. அது உங்களின் தன்னிருப்பையே இறுதியில் அழித்துவிடும். தமிழகத்துத் திரைப்படம் போல பாவனை செய்துகொண்டு, இந்தியத்திரைப்படங்களை விடுத்து ஈழச்சினிமாவுக்கு ஆதரவு தாருங்களென நீங்கள் கேட்பது எவ்வளவு போலித்தனமானது இல்லையா? நகைச்சுவையே வராத விடயங்களை எல்லாம் நகைச்சுவை என்ற பெயரில் திரையில் இறக்குவதைப் போல ஓர் ஆபாசம் இல்லையென்பதை நீங்கள் ஒருநாள் அறிந்து வெட்கிக்கவும் கூடும்.

அறிவுரையாக இல்லாது உங்கள் தோளணைத்து நிறைய மலையாள, சிங்களத் திரைப்படங்களை பாருங்கள் எனச் சொல்லப் பிரியப்படுகின்றேன். இயன்றால் தமிழில் எழுதப்பட்டிருக்கும் நல்ல கதைகளை வாசியுங்கள். அதிலிருந்தும் திரைக்கதைகளை உருவாக்க முயலுங்கள். நல்ல கதையோடு வந்தால் நீங்கள் கேட்காமலே ஈழத்தவர் அல்ல, உலகத்தவர்களே கூட உங்களை அரவணைத்துக் கொள்வார்கள். 

 

லக்கியத்துக்குக் கூட மொழி என்கின்ற ஓர் எல்லை இருக்கின்றது. ஆனால் திரைப்படங்கள் அழைத்துச் செல்லும் திசைகளோ விசாலமானது. எனது நண்பர் மொழியே தெரியாத சிங்களத் திரைப்படங்களைப் பார்த்து இன்றும் சிலாகித்துக் கொண்டிருப்பதைப் போல, மிகப்பெரும் தணிக்கையிருந்தும் ஈரானிலிருந்து வரும் திரைப்படங்களைப் பார்த்து நான் நெகிழ்வுற்றதைப் போல உங்களுக்கான சிறகுகளை விரிப்பதற்கும் இந்த வானம் பரந்திருக்கின்றது. உங்கள் கூட்டுழைப்பை இத்திரைப்படத்தைப் போல வீணாக்கிவிடாதீர்கள். கற்றுக்கொள்ளும் ஆவல் இருப்பின் நீங்கள் நம்மண்ணின் தனித்துவங்களோடு ஒரு மகேஷின்டே பிரதிக்காரத்தையோ, Children of Heaven யோ, Oba Nathuwa Oba Ekka எடுக்க முடியும். ஆனால் நீங்கள் உங்கள் திரைக்கதைகளுக்கு நேர்மையாகவும், அசலாகவும் இருக்கவேண்டும். நாளை அப்படியான நெறியாளர்களாக மாற என் வாழ்த்துகள், ஆனால் இப்படியான தலையிடிகளைத் தொடர்ந்து தருவதைத் தவிர்க்கவேண்டும். முன்னோடிகளிடமிருந்து நல்லதை மட்டுமில்லை, நல்லதல்லாதவற்றை செய்யாததையும் கற்றுக் கொள்ளலாம், தவறே இல்லை. அதைக் கொஞ்சம் பொறுமையாகக் கூடக் கற்றுக்கொள்ளலாம். எம் கனவுகள் எங்கும் பறந்துபோய் விடவும் மாட்டாது.

ஒரு வீடற்றவராக (homeless) இருந்த ப்யூகோவ்ஸ்கி தனது எழுத்துக்களால் பிரபல்யமடைய, ஹாலிவூட் அவரைத் திரைக்கதை எழுத அழைக்கின்றது. அப்படி அவர் எழுதிய கதையைக் கொண்டு இயக்கப்பட்டதே Barfly என்கின்ற திரைப்படம். இத்திரைப்பட உருவாக்கத்தை அருகில் இருந்து பார்த்த ப்யூகோவ்ஸ்கி பின்னர் எழுதியதே 'ஹாலிவூட்' என்கின்ற நாவல். இந்நாவலை வாசித்திருந்தால் அதில் எப்படி ஹாலிவூட் உலகை எள்ளல் செய்திருப்பார் என்பது நமக்குப் புரியும். அதுதான் ப்யூகோவ்ஸ்கி. தன்னை அழைத்து மரியாதை கொடுத்த ஹாலிவூட்டையே நக்கலடிக்க முடிந்த அசல் படைப்பாளி அவர். அதனால்தான் அவரை இன்றும் மறக்காமல் பேசிக் கொண்டிருக்கின்றோம்.

தொடக்கத்தில் குறிப்பிட்ட என்னோடு பேச விரும்பிய இயக்குநரை, எனக்கு ஏன் முக்கியமானவர் என்றால் அவர் நல்ல திரைப்படத்தையும், எழுத்தையும் நமக்குத் தந்திருக்கின்றார் என்பதால் ஆகும். அவர் என்னோடு பேசவில்லையென்றாலும் அவரின் படைப்பினூடாக அவர் என்றென்றைக்கும் எனக்கு நெருக்கமாகவே இருந்திருப்பார். அதுதான் கலை நம்மை அழைத்துச் செல்கின்ற பாதையாகும்.

******************

 

(Mar 10, 2024) 

கார்காலக் குறிப்புகள் - 31

Saturday, April 27, 2024

 -காதலர் தினம்-

 ஓவியங்கள்: சின்மயா



ன்று காலையிலேயே ஒரு டசின் ரோஜாப்பூக்கள் வாங்கப் போனபோது, கடையில் வேலை செய்த பெண் you are a good man என்றார். எப்போதாவது அரிதாகத்தான் வாழ்வில்  நான் நல்ல மனிதன் என்று சொல்லக் கேட்பதால் அந்த வார்த்தையை அப்படியே எடுத்திருக்கலாம். இது என் காதலிக்கு இல்லை என் கம்பனிக்கு என்றேன். ரோஜா மலர்கள் போல மலர்ந்த அந்த முகம் கனடாப் பனிக்குளிர் போலச் சுருங்கிவிட்டது.


இப்போதெல்லாம் இளையவர்கள் எப்படி காதல்களைக் கொண்டாடுகின்றார்களோ தெரியாது. ஆனால் என் இளமைக்காலங்களில் நான் மகிழ்வாகக் கொண்டாடியிருக்கின்றேன். ஒவ்வொரு காதலும் துயரமாகப் பின்னாட்களில் (அது இயல்பன்றோ) மாறினாலும் காதல்களின் நிமித்தம் ஒருபோதும் சலித்ததில்லை. பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கொரு காதல் வந்திருந்தது. ஆனால் நாமிருவரும் வெவ்வேறு பல்கலைக்கழகங்கள். காதலியைக் காண்பதென்றால் 400 கிலோமீற்றர்கள் பயணித்துச் சென்று பார்க்க வேண்டும். எப்போதும் என் காதல்கள் தொலைதூரக் காதல்கள்தான். நகரம்  தாண்டி மட்டுமல்ல‌ கடல்கள் தாண்டி கண்டங்கள் தாண்டியவை. ஏழு கடல், ஏழு மலை தாண்டி ஒரு கிளியிடம் என் உயிர் இருக்குமென்று அரக்கர்கள்  நம் கதைகளில் சொல்வதெல்லாம் பொய். அவ்வளவு தொலைவில் இருப்பது அரக்கர்களின் உயிரல்ல, காதலிகளின் ஆழங்காண முடியா இதயங்கள் என்பேன் நான் உறுதியாய்.

என் பல்கலைக்கழகக் காதலியை காதலிக்கத் தொடங்கிவிட்டேன் என்றாலும், நான் அப்போது அவரை நேரில் சந்திக்கவில்லை. எனவே சில மாதங்களின்  பின் வந்த 'காதலர் தினத்தில்' நேரடியாகச் சந்திப்பதென நாம் முடிவு செய்தோம். கனடாவில் பல்கலைக்கழகங்களில் பெப்ரவரியில் ஒரு கிழமை பரிட்சைக்குப் படிப்பதற்கென‌ விடுமுறை விடுவார்கள். ரொறொண்டோ நகருக்கு வந்து அண்ணாவின் வீட்டில் நின்றுதான் காதலியைச் சந்திக்க முடியும். ஒரு மாதிரியாக அன்றையகாலத்தில் 'டிரெண்டாக' இருந்த பெரிய சிவப்பு டெடியையும், ஒரு டசின் ரோஜாக்களையும் முதல் நாளிலேயே வாங்கிவிட்டேன். ஆனால் வீட்டுக்குத் தெரியாமல் மறைக்க வேண்டும். (எத்தனை கழுதை வயதானாலும் ஆண்களுக்கு இதே பிரச்சினை. கல்யாணமான சில ஆண்கள்,   தம் மனைவிக்குத் தெரியாமல் காதலிக்கு ரோஜாக்கள் கொடுக்க இப்படித்தான் இப்போதும் அவதிப்படுகின்றார்கள் என்றும் கேள்விப்படுகின்றேன்).

இங்கே நம்மவர்கள் பூஜையறையாகப் பாவிக்கும் ஒரு அலுமாரிக்குக் கீழே என் புனிதமான காதல் வெகுமதிகளை ஒளித்து வைத்துவிட்டேன். திரிஷ்யம் படத்தில் இறந்த உடலை, கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் பொலிஸ் ஸ்டேனிலேயே புதைக்கும் மோகன்லாலின் கிரிமினல் மூளையெல்லாம் என் காதலின் முன் பிச்சையெடுக்க வேண்டும். 



டுத்த நாள் காதலர் தினத்தன்று காதலியை அவரின் பல்கலைக்கழகத்தில் சந்திக்கின்றேன். ஒரு அமைதியான புராதனமான கட்டிடம். இப்போதும் அது நன்கு நினைவிருக்கின்றது. அவருக்கு என்னை முதல் சந்திப்பதில் இருக்கும் பதற்றத்தில் நான் கொடுத்த ரோஜாக்கள் பத்தா பன்னிரண்டா என்று எண்ண நேரமிருக்கவில்லை.. 'இப்படியா கொத்தாக கொண்டு வந்து ரோஜாக்களைத் தருவது' என்று எனக்குப் பேச்சு விழுந்தது. பத்துத்தலை இராவணன் போல, நீங்கள் ஒருவரே பன்னிரண்டு காதலிகளுக்குச் சமமென்று குறியீடாகத்தான் இப்படித் தருகின்றேன் என்று சொல்ல ஆசை இருந்தது. ஆனால் வார்த்தைகள் வரவில்லை.

இறுதியாய்ச் சந்திப்பு முடிந்தபோது டெடியை எப்படியோ அவர் தனது புத்தகப் பையினுள் அமுக்கி அடக்கிவிட்டார். ரோஜாப்பூக்களை வீட்டுக்குக் கொண்டுபோனால் அதை தன் இறுதியஞ்சலி மலர்வளையமாகத்தான் வைக்கவேண்டி வருமென்று சொல்லி, அவ்வளவு ரோஜாக்களையும் குப்பைத் தொட்டிக்குள் எறிந்துவிட்டார். மானமுள்ள ஆல்பா ஆணாக இருந்தால் அப்போதே நீ அந்தக் காதலை முறித்திருக்கவேண்டுமென நீங்கள் சொல்வது கேட்கின்றது. ஆனால் எப்படியோ இரண்டு வருடங்களுக்கு அந்த காதல் நீண்டது ஒரு வரலாற்றுச் சோகந்தான். எனக்கு மட்டுமில்லை, அவருக்குந்தான்!


இந்த ரோஜாக்கொத்து நிகழ்வுக்கு முன் சற்றுப் பின்னோக்கிப்ப் போனால், என் உயர்கல்லூரிக் காலம் தட்டுப்படும். அப்போதுதான் கனடாவுக்கு வந்தே ஒன்றிரண்டு வருடங்கள் இருக்கும். அப்போதும்... (நீங்கள் நினைப்பது சரிதான்) ஒரு குறுங்காதல் வந்திருந்தது. அது காதலே இல்லையென்று என் பள்ளிக்கால நண்பர்கள் இப்போதும் அடித்துச் சொல்வார்கள். ஆனால் அது எனக்குக் காதலேதான். இல்லாவிட்டால் அது உடைந்தபோது (அல்லது நிராகரிக்கப்பட்டபோது) தற்கொலைவரை போயிருக்கமாட்டேன். அந்தப் பதின்மக் காதலிக்கு இப்படி ஒரு காதலர் தினத்தில் நம் கையில் கிடைத்த‌ காசுக்கேற்ப ஒரு ரோஜாவும், ஒரு வாழ்த்தட்டையும் வாங்கி கொடுப்பதற்காய் வைத்திருந்தேன். வீட்டில் இருந்து என் காதல் உள்ளத்தை அழகாக வாழ்த்தட்டையில் வரைய முடியாதென்பதால், பள்ளிக்கு விடிகாலையிலே போய் ரோஜாவும் அட்டையுமாக எதையோ எழுதிக் கொண்டிருந்தேன். எனது வகுப்பு ஆசிரியர் அதைக் கண்டுவிட்டார். 'நடக்கட்டும் நடக்கட்டும்' எனச் சொல்லியபடி ஒரு புன்னகையால் கடந்துபோனார். இலங்கையில் என்றால் இதற்காக என்னைப் பாடசாலையில் இருந்தே துரத்தியிருப்பார்கள். மேலும் எங்கள் பாடசாலையில் அப்போது 'அநாமதேயமாக' காதலர் தினமன்று எதையாவது அனுப்பிக் காதலை வளர்க்கவெல்லாம் அனுமதிப்பார்கள். அதாவது வகுப்பு நடக்கும்போது காதல் விருப்புக்கள் வெகுமதியுடன் எல்லாம் வந்து சேரும்.

நான் ஒற்றை ரோஜாவும், வாழ்த்தட்டையும் எழுதிக் கொடுத்த அந்த பதின்மக் காதல் இரண்டு வருடங்கள் கூட‌ அல்ல, இரண்டு மாதங்களிலேயே பள்ளியிலேயே விடைபெற்றுப் போனது பற்றியெல்லாம் உங்களுக்கு நீட்டி முழங்கத் தேவையில்லை. நீங்கள் அதை நன்கே அறிவீர்கள்!

இன்று எங்கள் நிறுவனத்தில் காதலர் தினத்தின் பொருட்டு கிளைண்ட்களுக்கு ஏதோ சமூகவலைத்தளத்தில் போட்டிவைத்து பரிசொன்று கொடுக்கின்றார்கள். புத்துணர்வான ரோஜாக்களை நீதான் காலையில் சென்றுவாங்கி வரவேண்டுமென என்னை அனுப்பிவிட்டார்கள். வேலையில் செய்வது எல்லாமே ஆணிபிடுங்குகின்ற எதற்கும் உதவாத வேலைதான். இப்படி ரோஜாப்பூக்களை வாங்கி யாரோ ஒரு முகம் புன்னகைப்பதைப் பார்ப்பது எல்லாவற்றையும் விடப் பெறுமதியானதுதானே. எனவே பூச்சியத்துக்குக் கீழே 15 ஆக கடும்குளிர் இருந்தபோதும் மன்மதனின் ரதிக்குக் கைப்பிள்ளையாகப் போனேன்.

ஆமாம், அது சரி இதையெல்லாம் ஏன் இப்போது எழுதிக் கொண்டிருக்கின்றேன். ஒரு ஆல்பா ஆணை சும்மா போகின்றபோக்கில் ஒருவர் சொன்ன you are a good man அருட்டிவிட்டது போல.  

ஆனாலும் காதலிப்பதை மறந்துவிடாதீர்கள். அதற்காய் கர்த்தர் அயல்வீட்டுக்காரனையும் நேசிக்கச் சொன்னார் என்பதற்காக பக்கத்துவீட்டு கல்யாணமான பெண்ணையெல்லாம் நேசிப்பதாக அடம்பிடிக்கக் கூடாது. அப்படி நினைப்பு வந்தால் தலையில் தேசிக்காயை நன்கு தேய்த்துக்கொள்ளவும் அல்லது பனிக்குள் தனியே உருண்டு புரண்டு கொள்ளவும்.


******

(Feb 14, 2024)

காப்ரியல் மார்க்வெஸ்ஸின் 'ஆகஸ்ட் வரைக்கும்' (Until August)

Friday, April 26, 2024

 

மது மரணத்தின் பின் தமது படைப்புக்கள் அழிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டவர்கள் காஃப்காவும் சிவரமணியும். ஆனால் அவர்களின் இறுதி விருப்புக்கு மாறாக அவை வெளியிடப்பட்டதால் நாம் காஃப்காவையும் சிவரமணியையும் இன்றுவரை பேசிக் கொண்டிருக்கின்றோம்.  ரொபர்தோ பொலானோ போன்ற‌ சில படைப்பாளிகள் அவர்கள் மரணத்தின் பின் பிரபல்யம் அடைந்தவர்கள். அந்த புகழின் வெளிச்சத்தினால் பிற்காலத்தில் ரொபர்த்தோ பொலானோவின் முடிக்கப்படாத நாவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றது. அவ்வாறே இப்போது மார்க்வெஸ் 'அழிக்கப்பட வேண்டிய நாவல்' என்று குறிப்பிட்ட அவரின் நாவலான 'ஆகஸ்ட் வரைக்கும்' வெளிவந்திருக்கின்றது.

மார்க்வெஸ் 2014 இல் காலமாகியவர். அவருக்கு கிட்டத்தட்ட அதற்குப் பத்து வருடங்களுக்கு முன்னரே நினைவு மறதி தொடங்கியிருந்தது. அவருடைய சுயசரிதையான  ‘கதைசொல்வதற்காக வாழ்கின்றேன்’ (Living to tell a tale) இல் 'வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது முக்கியமல்ல, எதை நினைவில் வைத்திருக்கின்றோம் அதை எப்படி நினைவு கூர்கின்றோம் என்பதே முக்கியமானது' என்ற பிரபல்யம் வாய்ந்த வரிகள் இருக்கின்றன.

அவ்வாறு இருக்க விரும்பிய மார்க்வெஸிற்கு அவரின் இறுதிக்காலத்தில் நினைவுகள் மங்கிப் போனது துயரமானது. மார்க்வெஸ் அவரின் நினைவுகள் மங்கும் காலங்களில் இரண்டு நாவல்களை எழுதி வைத்திருந்தார். அதில் ஒன்றே 2004 இல் வெளிவந்த (Memories of My Melancholy Whores) மற்ற நாவலான 'ஆகஸ்ட் வரைக்கும்' முடிக்கப்படாமல் இருந்தது. ஆனால் இந்த நாவலைப் பெரும் நாவலாக எழுதும் கனவு அவருக்குள் ஏற்கனவே விரிந்திருந்தது. அதனால்தான் 1999 இல் ஐரோப்பாவில் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் இதன் முதல் அத்தியாயத்தை வாசித்திருக்கின்றார். இது ஒரு சிறுகதையாக(?) எஸ்பஞோலிலும், பின்னர் ஆங்கிலத்தில் நியூ யோர்க்கரிலும் வெளியானது.

இந்த நாவலை ஐந்து முறை திருத்தங்கள் செய்தபின் இதைப் பிரசுரிக்கலாம் என்கின்ற ஓர் குறிப்பும், இன்னொரு இடத்தில் இது பிரசுரிக்காமல் அழிக்கப்படவேண்டும் என்கின்ற மார்க்வெஸின் விருப்பும் இருந்திருக்கின்றன. இப்போது மார்க்வெஸின் பிள்ளைகளால் 'வாசகர்களின் மகிழ்வின் பொருட்டு' வெளியிடப்பட்டிருக்கின்றது. ஒருவகையில் வாசகர்களாகிய நாம் காபோவின் வாழ்வைக் கொண்டாடும் இறுதி அடையாளமாக இந்தப் புதினத்தை எடுத்துக் கொள்ளலாம்.



னா என்கின்ற 40களின் மத்தியில் இருக்கின்ற பெண், ஒவ்வொரு வருடமும் பெயர் குறிக்கப்படாத ஒரு கரீபியன் தீவொன்றுக்கு ஆவணியில் சென்று கொண்டிருக்கின்றார். அங்கே அவரின் தாயார் புதைக்கப்பட்டிருக்கின்றார். ஆசிரியரான அனாவின் அம்மா நெடுங்காலம் வாழ்ந்த இடமாக வேறு எதுவோ இருக்க, ஏன் இந்தத் தொலைதூரத்து தீவை தன்னைப் புதைப்பதற்கு தேர்ந்தெடுத்தார் என்பது அனாவிற்கும் வியப்பாக இருக்கின்றது.

அனா, இரண்டு பிள்ளைகளின் தாய். கன்னித்தன்மையோடே திருமணம் செய்யவேண்டும் என்று விரும்பி அவரின் காதலைத் திருமணஞ் செய்து 25 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இவ்வாறு ஒரு ஆவணியில் தீவுக்குச் செல்லும் அனாவுக்கு அங்கே சந்தித்த ஒர் அந்நியனுடன் ஈர்ப்பு ஏற்படுகின்றது. அந்த விருப்புக்குப் பெரிதாக ஏதும் காரணம் இருக்கவில்லை. அவனோடு பேசிக் கொண்டிருந்த சில நிமிடங்களிலேயே, அவனைத் தன் அறைக்கு வாவென்று அழைத்துவிட்டு செல்கின்றார். அந்த உடல்சார்ந்த உறவை எப்படி விபரிப்பது என்று தெரியாவிட்டாலும், அனா 'என்னளவில் இந்த வேட்கை மகிழ்ச்சியாக இருந்தது' என்கின்றார். ஆனால் காலையில் அந்த அந்நியன் அனா வாசித்துக் கொண்டிருந்த ஒரு புத்தகத்துக்குள் 20 டொலர் பில்லை வைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றான். இது அனாவுக்கு அந்த உடல் சார்ந்த மகிழ்வைத் தாண்டி அவமானமாக இருக்கின்றது. எல்லா நினைவுகளையும் அதே தீவில் புதைத்துவிட்டு அனா தனது குடும்பத்துக்கும், நாளாந்த வாழ்க்கையும் திரும்பி விடுகின்றார்.

அவ்வாறு அடுத்தடுத்த வருடங்களில் வெவ்வேறான ஆண்களுடன் அனா -இந்த அம்மாவின் நினைவிடத்துக்கு வரும்- ஒரு நாள் பகல்/இரவுப் பயணத்தில் உறவு கொள்கின்றார். இரண்டாவது முறை உறவு கொள்ளும் அனாவை அந்தளவு 'மயக்கி' தனது வாகனத்தில் ஒரு திறந்த வெளிக்கு அழைத்துச் செல்கின்றார். அந்த உறவு முடிந்த சில காலத்தில் அந்த ஆண் பெண்களோடு உறவு வைத்துவிட்டு அவர்களைக் கொலை செய்யும் ஓர் கொலைகாரன் என்பதைக் கண்டறிகின்றார். இவ்வாறு அனா சந்திக்கும் ஒவ்வொரு ஆணும் விசித்திரமானவர்களாக இருக்கின்றார்கள்.

அதற்கு அடுத்த முறை அனா தனது விடுதியறையில் வைத்து உறவுகொள்ளும் ஆண், தன்னையொரு மதகுரு என்கின்றான். பிறகு இல்லை, தான் காப்புறுதி சேகரிக்க இந்த தீவுக்கு அடிக்கடி வரும் ஒரு காப்புறுதி முகவர் என்கின்றான். அவன் அடுத்த நாள் காலையில் அனா வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தில் எதையோ வைத்துவிட்டுச் செல்வதை அனா குளித்தபடி கவனிக்கின்றார். இவனும் அந்த 20 டொலர் தாளை வைத்து அவமானப்படுத்தியவனைப் போன்ற இன்னொருவனா என பதகளிக்கும்போது, நல்லவேளையாக அவன் தனது விஸிட்டிங் அட்டையை வைத்துவிட்டுச் செல்கின்றான்.

அனா, இந்த 'ஒருநாள்' உறவுகளில் வருடமொன்றுக்கு நுழைந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டிருக்கும் அவரின் பிள்ளைகளிலிருந்து விலகுகின்றார். இந்த உறவுகளை அவரின் நீண்டநாள் கணவனிடமிருந்து மறைத்தாலும், கணவனுக்கு வேறு உறவுகள் இருக்கின்றது என்பதை மறைமுகமாக உணர்கின்றார். இவர்களின் இருவரினதும் மணவாழ்க்கை அவ்வளவு அழகாக ஒரு காலத்தில் இருந்துமிருக்கின்றது. இப்போதெல்லாம் அனா இரவுகளில் ஒழுங்கான தூக்கமில்லாது, பதற்றத்திற்கும், மனவழுத்ததிற்கும் உள்ளாகின்றார். இவ்வாறான திருமணத்துக்கு அப்பாலான உறவுதான் தேவையென்றால் ஏன் இவ்வளவு தூரம் போய் அதைக் கணடடைய வேண்டும், தான் வாழும் பெருநகரத்திலேயே இந்த வகை ஆண்களை அடையலாந்தானே என யோசிக்கின்றார். இவ்வாறு ஒவ்வொரு ஆவணியும் ஏதோ ஒரு புதிய ஆணைத் தேடும் பயணங்களை சிலவேளைகளில் ஆண்கள் எளிதாகக் கிடைத்தும்  அந்த ஆண்களின் வேட்கையை மட்டுமின்றி தன் விருப்பையும் மூடி வைத்துக் கொள்கின்றார். ஒருவகையில் அனாவுக்கு இந்த உறவுகள் அடிக்கடி சலித்துப் போகின்றதென்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும் அவர் எதையோ இந்தப் பயணங்களில்/இந்த ஆண்களில் தேடிக் கொண்டிருக்கின்றார் என்பதும் புரிகின்றது.



றுதியில் அவரின் அம்மாவின் நினைவிடத்துக்கு அனா மட்டும் ஒவ்வொரு வருடமும் வருவதில்லை. அம்மாவின் ஓர் இரகசியக் காதலனும் அங்கே அடிக்கடி வந்து தன் தாயை நினைவுகூர்வதை அந்தக் கல்லறையில் நிரப்பப்பட்டிருக்கும் மலர்களால் கண்டு கொள்கின்றார். முன்பு வருடத்துக்கு மூன்றோ நான்கோ முறை இந்தத் தீவுக்கு வரும் தனது தாயாருக்கு ஏதோ ஒரு இரகசிய உறவு இருந்திருக்கின்றது. அதனால்தான் தன்னை அங்கே புதைக்கவேண்டும் என்று இறுதியாசையாக அதை முன்வைத்தார் என்பது அனாவிற்கு விளங்குகின்றது.

அனா வழமையாக நிற்கும் ஒருபகல் மட்டும் நிற்காது அடுத்த நாள் மதியமும் அங்கே தங்கு நின்று, அந்தக் கல்லறையைத் தோண்டச் செய்து, அம்மாவின் மிச்சமுள்ள எலும்புகளை எடுத்துக் கொண்டு படகெடுத்து தான் வாழும் பெரும் நகர் மீள்வதுடன் நாவல் நிறைவுறுகின்றது.

தன் தாயின் எலும்புகளுடன் நகர் மீளும் அனா ஒருபோதும் இந்தத் தீவுக்கு இனி திருப்பப் போவதில்லை என்பது வாசிக்கும் நமக்குப் புரிகின்றது. ஒவ்வொரு வருடமும் ஒரு நாள் அம்மாவின் அஞ்சலிக்காய் வரும் அனாவிற்கு அவை பெரும்பாலும் மறக்கமுடியாத நாளாகத்தான் இருக்கின்றது. அவர் சந்திக்கும் ஆண்கள் அநேகவேளைகளில் ஏமாற்றங்களைத் தந்தாலும், அவர் அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்து தனது குடும்பத்தை விட்டு தனியே பயணித்தபடியே இருக்கின்றார். மத்திய வயதில் குடும்ப வாழ்க்கை அலுக்கத் தொடங்குகையில் இவ்வாறான 'சிறு நெருப்பு' தனது மகளுக்கும் தேவையென்று அந்தத் தாயார் தனது அனுபவங்களினூடாக‌ சிலவேளை யோசித்துமிருக்கலாம்.

மார்க்வெஸ்ஸை ஆராதிப்பவர்க்கு - நெடுங்காலமாக இனிய கனிகளைக் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு பெருமரம், தனது மூப்பில் கடைசிக் கனியைக் கொடுப்பதில்லையா? அவ்வாறே மார்க்வெஸ் நமக்காய் இந்தப் பூமியில் கடைசியாக வாசிக்க விட்டு வைத்த பிரதியென இதை நாம் விமர்சனங்களைச் சற்றுத் தள்ளிவைத்து கொண்டாடலாம்.

ஒருவனை சிலகாலமாக டேட்டிங் செய்துகொண்டிருந்த ஒரு தோழி, முதன்முறையாக அவனோடு உடலுறவு கொண்டு அது நிறைவுற்றபின் அவன் எனக்கு முத்தம் எதுவும் தரவில்லை, அப்போது அவன் ஒரு அந்நியனாகத் தெரிந்தான், அத்தோடு அவனோடு நான் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை, விலகி வந்துவிட்டேன் என்றார். ஓர் உறவின் நிறைவின் பின் ஒரு முத்தம் கொடுக்காததால் ஓர் உறவு முறிந்து போகுமா என்பது எனக்கு அப்போது வியப்பாயிருந்தது. அதுபோலத்தான் இந்த நாவலில் வரும் அனா, தனது தாயின் எலும்புகளை எடுத்துக்கொண்டு அதுவரை கிளர்ச்சி கொடுத்துக்கொண்டிருந்த அந்தத் தீவிலிருந்து முற்றுமுழுதாக விலகி வருவது. எல்லாவற்றையும் நாம் எங்கேயே முடித்து வைக்க வேண்டியிருக்கின்றது என்பதை நமக்கு மறைமுகமாக உணர்த்தத்தான். அதற்குச் சிலவேளைகளில்  நம் மனம் விசித்திரமான காரணங்களைக் கண்டுபிடித்து   இவ்வாறு ஆறுதல்படுத்திக் கொள்கின்றது போலும்.

****************
 

படம் 03 - மார்க்வெஸ் அவரின் கையெழுத்தில் திருத்திய பக்கம் 

 ( Apr 01, 2024)

Manjummel Boysஐ முன்வைத்து சில திரைப்படக் குறிப்புகள்..

Monday, March 25, 2024


 ண்மையில் இன்னொரு நகருக்கு ஒரு நிகழ்வுக்காகப் பயணித்தபோது தற்செயலாக நண்பரொருவரைச் சந்தித்திருந்தேன். சில வருடங்களுக்கும் முன் அவர் ஒரு முழுநீளத் திரைப்படத்தை எடுத்திருந்தார். அவரோடு சமகால புலம்பெயர்/ஈழத்துத் திரைப்பட முயற்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். புலம்பெயர் இலக்கியம் போல, புலம்பெயர் திரைப்பட முயற்சிகளும் தொடக்கத்தில் தந்த நம்பிக்கை போலவன்றி இப்போது உறைந்துபோய் விட்டதன் துயரம் நோக்கி நம் பேச்சு குவிந்தது.


நமது அசலான கதைகளை விட்டு நகர்ந்து, ஒரு 'மேற்கத்தைய' பார்வையாளர்களுக்கு விளங்குவதற்கு திரைப்படங்களை எடுக்கத் தொடங்கியபோது நமது திரைப்படங்கள் ஆட்டங்காணத் தொடங்கிவிட்டது. இது நான் ஒரளவு மதிக்கும் சில நெறியாளர்களின் அண்மைக்கால திரைப்படங்களை முன்வைத்து கிடைத்த‌ அவதானம் எனலாம். இன்னொருபக்கத்தில் எப்போதும் போல புலம்பெயர் தேசங்களிலும்/ஈழத்திலும் தென்னிந்திய திரைப்படங்களை மாதிரியாக வைத்து கதாநாயக விம்பம்/வன்முறை/ஆபாசம் என்றெல்லாம் ஒரு கதம்பமாக அளிக்கின்ற ஒரு வகையினர் இருக்கின்றனர். அவ்வாறு எடுப்பதை மட்டுமே திரைப்படமென உறுதியாக நினைக்கவும் செய்கின்றனர். அவர்களாக வெவ்வேறு திசைகளை பரிட்சித்துப் பார்க்காதவரை அதற்குள்ளேயே தேங்கிவிடுகின்றவர்கள் அவர்கள்.


கடந்த பல வருடங்களாக நான் புலம்பெயர்/ஈழத்து நெறியாளர்கள் முன்மாதிரியாக கொள்வதற்கு சிங்கள மற்றும் மலையாள திரைப்படங்களை உதாரணமாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். அவர்கள் சாதாரண கதைகளையே எப்படியே அசாதாரணக் கதைகளாக மாற்றுகின்றார்கள் என்பதற்கு மட்டுமின்றி எவ்வாறு குறைந்த பட்ஜெட்டோடு விரிவான பார்வையாளர்களுக்கு அதைக் கொண்டு செல்கின்றார்கள் என்று அறிவதற்கும் நாம் அவர்களைப் பின் தொடர்ந்து பார்க்கலாம். இன்றைக்கும் புலம்பெயர் சூழலில் எடுத்த திரைப்படத்துக்கு 'முகத்தை'யும், ஈழத்துப் படத்துக்கு யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள் எண்பதுகளில் 'கல்லூரி வசந்தத்தை'யும் நான் இரண்டு எளிய உதாரணங்களாக முன்வைத்துக் கொண்டிருப்பவன். இரண்டுமே தொழில்நுட்பரீதியில் பார்த்தால் மிகக் குறைந்த வசதிகளைக் கொண்டு எடுக்கப்பட்டது. ஆனால் அதற்குள் கதை என்கின்ற ஆன்மா ஒளிர்ந்துகொண்டிருப்பதை எளிதாகக் கண்டுகொள்ளமுடியும். அவை 'நமது கதைகள்' என்று அதன் தொடக்கத்தில் இருந்து முடியும்வரை ஒரு நண்பனைப் போல தோள்மேல் கைபோட்டு அழைத்துச் செல்வதைப் பார்க்கலாம்.


திரைப்படங்களை எடுக்கும் இன்றைய நம் தலைமுறை தமிழகத் திரைப்படம் சம்பந்தமாக எதைப் பார்க்கின்றதோ தெரியாது, ஆனால் பல நெறியாளர்களின் நேர்காணலைக் கேட்டால்/பார்த்தால், இன்று எல்லாமே தொழில்நுட்பத்தால் சுருங்கிவிட்டதால், நீங்களாகவே குறும்படங்களை எடுத்துக் கற்றுக்கொள்ளலாம் என்று அவர்கள் எல்லா இடங்களிலும் வலியுறுத்துவதைக் கேட்கலாம் . நீங்களாகவே இயக்கி, எடிட் செய்யத் தொடங்க, திரைப்படம் எடுப்பதன் நுட்பங்கள் மெல்ல மெல்லப் புலப்படும் என்று அவர்கள் உற்சாகமூட்டுவதை அவதானிக்கலாம். நல்ல திரைப்படங்களை மட்டுமில்லை, நல்ல கதைகளை வாசிக்கும்போதும் உங்களுக்குள் ஒரு திரைப்படம் ஓடுவதைக் காணலாம்.

ன்றைக்கு ஈழத்திலும்/புலம்பெயர் சூழலிலும் நிறையக் கதைகளை எழுதப்பட்டு இருக்கின்றன. சமகாலத்துக் கதைகளை கதை/திரைக்கதையாக்கி எடுக்கத்தான் நமது ஈகோக்கள் விடாதென்று ஒரு கதைக்காக வைத்துக் கொண்டாலும், காலமாகிவிட்ட நம் முன்னோடிகளின் கதைகள் பல இருக்கின்றன. அதைக் கதையாக்கி பரிசோதனை முயற்சிகளை குறும்படங்களாக எடுத்துப் பார்க்கலாம். அந்த இறந்த ஆத்மாக்கள் நம்மை வந்து ஒருபோதும் பலிவாங்கப் போவதில்லை. இன்னும் சொல்லப்போனால் தாங்கள் இன்னமும் மறக்கப்படவில்லை என்று ஆசிர்வாதங்களை அளிக்கவே செய்வார்கள்.

தொடக்கத்தில் கதை/திரைக்கதை/இயக்கம் என்று எல்லா கீரிடங்களையும் தலைமேல் ஏற்றி பாரம் எல்லாம் சுமக்கத் தேவையில்லை. உண்மையில் இவை எல்லாமே வெவ்வேறு துறைகள் எனச் சொல்லலாம். திரைப்படம் என்பதே கூட்டுழைப்பின் உச்சத்தில் திரண்டு வருகின்றபோது அந்தத்த துறையில் மிகச்சிறந்த உழைப்பை/உதவியைப் பெற்றுக்கொள்வதில் எந்த வெட்கமும் கொள்ளத் தேவையில்லை. மேலும் கதை/திரைக்கதை விவாதங்களில் எழுத்தாளர்களை/திரைப்பட விமர்சகர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். நல்லதொரு குழு அப்படி அமைந்துவிட்டால் அது நம்மை அழைத்துச் செல்லும் பயணம் அருமையாக அமைந்துவிடக்கூடும். ஆனால் எல்லாம் திரண்டு வந்தபின் இயக்குநர் என்கின்ற மீகாமனை நம்புவதற்கு முழு அணியையும் தகவமைத்துக் கொள்ளவேண்டும். நல்ல திரைப்படங்களை எடுத்தவர்களின் நேர்காணலை/காணொளிகளைப் பார்க்கும்போது அவர்கள் ஒரு துறை நல்லதைக் கொடுத்ததைப் பார்த்தபின், அதைப் போட்டியாக வைத்து தமது துறையிலும் நல்லதைக் கொடுக்கவேண்டும் என்ற இயல்பான 'போட்டி' மனது தங்களுக்கு ஒரு திரைப்படத்துக்குள் அமைந்துவிடுவதைக் கூறுவதை நாம் அவதானித்திருக்கலாம்.

மேலும், கிளிஷேக்களை/ பார்வையாளர்களுக்கு அதிர்ச்சிகளைத் தருகின்றோம் என்றெல்லாம் அதிகம் கற்பனை செய்து உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளத் தேவையில்லை. நாம் ஏதோ புரட்சி செய்கின்றோம் என்று கதைக்குத் தேவையில்லாத எதையும் திணிக்காதீர்கள். அது சிறுபிள்ளைத்தனமாகப் போய்விடும். இதை விட மிக முக்கியமானது உணர்ச்சிகளோடு அளவுக்கு அதிகமாக விளையாடாதீர்கள். அதைப் போன்ற ஆபாசம் மனித வாழ்வைத் திரைப்படத்தில் கொண்டுவரும்போது இருக்கப் போவதில்லை.

இப்போது இதையெல்லாம் ஏன் எழுதுகின்றேன் என்றால், ஒரு திரைப்படத்தின் கதை என்னவென்று தெரிந்தும் (அதனால்தான் நான் ஒரு திரைப்படம் குறித்து எதையும் கேள்விப்படாமல்/வாசிக்காமல் திரைப்படங்களைப் பார்க்க விரும்புவேன்), அந்தத் திரைப்படம் அதைத்தாண்டியும் என்னை படம் பார்த்த முழுநேரமும் உள்ளிழுத்தது வைத்திருந்தது. அது உணர்ச்சிகளோடு அதீதமாய் விளையாடமல் கதையை அதன் இயல்போடு முன்வைத்ததால், இரண்டு சந்தர்ப்பங்களில் என்னையறியாமலே விழிகளில் நீர்த் திரையிட்டது. இத்தனைக்கும் இதைவிட ஆபத்தானதும், நீண்டநாட்கள் எடுத்த சிலியில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களையும், தாய்லாந்தில் மாட்டிக்கொண்ட சிறுவர்களையும் காப்பாற்றிய திரைப்படங்களை எல்லாம் பார்த்திருக்கின்றேன்/எழுதியிருக்கின்றேன். ஏன் - ஒரு நாளுக்குள்ளேயே காப்பாற்றப்பட்ட- இந்த ஒரு உயிரியின் கதை நம்மைப் பாதிக்கின்றது என்றால் நாம் அத்திரைப்படத்தில் வரும் நண்பர்களில் ஒருவராக ஆகிவிடுகின்றோம். சாதாரண மனிதர்கள் எல்லாம் எப்படி அசாதாரண மனிதர்களாக ஒரு சம்பவத்தின் மூலம் மாறுகின்றார்கள் என்பதை நுட்பமான திரைக்கதையின் மூலம் இது காட்சிக் கோவைகளாக்கியிருக்கின்றது. அத்துடன் பார்வையாளர்களை உணர்ச்சிவசப்படச் செய்வதற்கு, இன்னும் எத்தனையோ இங்கே சேர்ப்பதற்கு இடங்கள் இருந்தபோதும், உணர்ச்சிகளோடு விளையாடாமல் அதன் எல்லைகள் தெரிந்து கதையின் கடிவாளத்தை நிறுத்திவைத்திருக்கவும் இத்திரைப்படக்குழுவுக்கு நன்கு தெரிந்திருக்கின்றது.

சாதாரணமாக எளிய மனிதர்களுக்கு ஒரு பயணத்தின்போது நிகழ்ந்த கதை எனத் தாண்டிச் செல்லக்கூடியதை, கலையின் அத்தனை கூருருணர்வும் ஒன்று சேரும்போது நாமே அந்தக் குகைக்குள் மாட்டிக் கொண்டவனாகவும், காப்பாற்றி விடத் துடிக்கின்ற நண்பனாகவும் ஒரே நேரத்தில் இருக்கின்றோம். இதைத்தான் கலை மானிடர்க்கு அளிக்கின்ற ஆற்றுப்படுத்தலும், அரவணைப்பும், அற்புதமும் என்பேன்.


(Manjummel Boys)

***********

(Mar 04, 2024)

வீடற்ற வெளியில் அலையும் தன்னிலைகள்!

Sunday, March 24, 2024

 

வ்வொரு மனிதர்களும் சுதந்திரமான வெளிகளில் சிறகடித்துப் பறக்க விரும்புகின்றவர்களாக இருக்கின்றார்கள். அப்படியான ஒரு 'வெளி'யில் கலையில் திளைத்துக் கிடப்பவனுக்கு 'வீடு' என்பது எவ்வாறாக அர்த்தம் பெறுகின்றது என்பதை ஒரு குறுக்குவெட்டுப் பார்வையில் சி.மோகனின் 'வீடு வெளி' புதினம் முன்வைக்கின்றது. கதை 90களில் நிகழ்கின்றது. கதைசொல்லியான கிருஷ்ணன் அவரின் 40களின் நடுப்பகுதியில் இருக்கின்றார். குடும்பம், பிள்ளைகள் என்பவற்றிலிருந்து ஏதோ ஒரு காரணத்தால் விலகி, நண்பர்களில் வீடுகளில் தங்கியிருக்கும் ஒரு 'நாடோடி' வாழ்க்கையை கிருஷ்ணன் தேர்ந்தெடுக்கின்றார்.


அவ்வாறு 'வீடற்ற வெளி'யில் அலையும் கிருஷ்ணனை ஒரு விசித்திரமான நரம்பு நோய் தாக்குகின்றது. அவரின் கால்களை முதலில் தாக்கும் நோய் கைகளை நோக்கியும் பரவுகின்றது. அவரால் இயல்பாக நடக்க முடியாதது மட்டுமின்றி உணவைக் கூட கைகளால் எடுத்துச் சாப்பிடமுடியாத நிலைமை.  நரம்பியல் நிபுணரிடம் மருத்துவ ஆலோசனை கேட்கும்போது அது  poly neuropathy  எனக் கண்டுபிடிக்கப்படுகின்றது. ஒருவர் ஒரு வாரத்துக்கு மேலாகத் தாக்குப் பிடிப்பாராயின் தப்பிவிடுவார். அதற்குள் இது உடலின் உள்ளங்கங்களைப் பாதித்துவிட்டால் வெண்டிலேட்டர் உதவிக்குப் போக வேண்டும். உள் உறுப்புக்களைப்  பாதித்துவிட்டால் மிக ஆபத்தான நிலைக்குப் போய் உயிர் தப்பிவிடாது போகவும் கூடும்.

 

கிருஷ்ணன் அவரின் தோழி அனிதாவினதும், நண்பர்களினதும் உதவியுடன் ஓர் அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார். கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேலாக வைத்தியசாலையில் இருக்கும் கிருஷ்ணன் வைத்தியசாலைக்குள் இருந்து அந்த அனுபவங்களையும், தன் குழந்தைக் காலத்தையும், குடும்பத்தையும், நண்பர்களையும், காதலையும் சொல்கின்ற ஒரு புதினம் என இதைச் சொல்லிக் கொள்ளலாம்.

 

வைத்தியசாலைக்குள் அதன் அத்தனை பதைபதைப்புடன் வைத்துச் சொன்ன நாவலாக இமையத்தின் 'செல்லாத பணத்தை'ச் சொல்லலாம். அத்தகைய பதற்றங்கள் இல்லாமல் பொலி நியூரோபதி எந்நேரத்திலும் ஆபத்தான கட்டத்துக்குச் சென்றுவிடுமென்றாலும் ஒரு நிதானமான தன்மையுடன் 'வீடு வெளி' எழுதப்பட்டிருக்கின்றது.

 

தை ஒரு Novel எனச் சொல்வதை விட Auto Fiction எனச் சொல்வதே பொருத்தமாக இருக்கும். நமக்குப் பழக்கமான, அசலான மனிதர்களான நடேஷ், சஃபி, மாரிமுத்து (யூமா வாசுகி), பிரமிள், கோபிகிருஷ்ணன் எனப் பலர் இதில் வருகின்றார்கள். கதைசொல்லியான கிருஷ்ணன், சி.மோகன் என்று அடையாளப்படுத்துவதிலும் அவ்வளவு கடினம் இருக்கப்போவதில்லை. ஆக இந்த 'நாவல்' கதைசொல்லிக்கு, இமையத்தின் 'செல்லாத பணத்தில்' நெருப்பு மூட்டிய/மூட்டப்பட்ட உயிருக்கு தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு என்ன நடந்துவிடுமென்ற பதைபதைப்பு போல நமக்கு இதில் இருப்பதில்லை. எப்படியெனினும் கதைசொல்லி இறுதியில் எவ்வளவு வேதனை/துயரத்துக்கு அப்பாலும் தப்பிவிடுவார் என்று நமக்கு முதலிலேயே தெரிந்துவிடும். அத்துடன் அசலான மனிதர்கள் (பலர் இப்போதும் உயிரோடு இருப்பவர்கள்) பற்றியும் சொல்லப்படுவதால் ஒருவித எல்லைக் கோடுகள் இந்த தன்வரலாற்று நாவலுக்கு வந்துவிடும். ஆகவே இந்த மட்டுப்படுத்த வெளிக்குள் நின்று எப்படி மோகன் நாவலை எழுதிச் செல்கின்றார் என்று பார்ப்பதே எனக்கான சுவாரசியமாக இருந்தது.

 

90களின் நடுப்பகுதியில் கிருஷ்ணன் காலை இழுத்து இழுத்துக் கஷ்டப்பட்டு உயிருக்கு தத்தளித்தபோது நானென்ன அந்தக் காலத்தில் செய்து கொண்டிருந்தேன் என யோசித்துப் பார்த்தேன். ஆக ஒவ்வொருகாலத்திலும் எண்ணற்ற கதைகளைச் சொல்ல நம் ஒவ்வொருவருக்கும் இந்த வாழ்க்கை சந்தர்ப்பங்களை -அது நல்லதோ, நல்லதில்லையோ- உருவாக்கியிருக்கின்றது. இப்போது இந்தப் புதினத்தை வாசிக்கும்போதோ அல்லது இந்த வாசிப்பை நான் எழுதும்போதோ எத்தனை ஆயிரமாயிரம் கதைகள் எழுதுவதற்காக காத்திருக்கின்றன என்ற வியப்பு ஏற்படுகின்றது.

 

தேவிபாரதி 'நீர்வழிப் படூஉம்' எழுதியிருக்காவிட்டால் காருமாமா என்கின்ற ஓர் அற்புத பாத்திரத்தை நாம் அறிந்திருக்க மாட்டோம். சி.மோகன் 'வீடு வெளிஎழுதாவிட்டால் கிருஷ்ணனுக்கு அவர் வாழ்வின்  நிகழ்ந்த கொடும் சம்பவத்தையோ அதனூடாக அவர் மீளச்சென்று பார்க்கும் வாழ்வின் அனுபவங்களையோ நாம் அறிந்திருக்க முடியாது. ஆகக் குறைந்தது கிருஷ்ணனுக்கு வாய்த்த அற்புத நண்பர்களையோ, அவருக்கு வாய்த்த அந்தக் காதலையோ நாம் தெரிந்திருக்கவே முடியாது.

 

இன்றையகாலத்தில் படைப்புக்களில் அதிகம் சிக்கலாகவும், மொழிப் புலமைகளோடும் எழுதப்படும் நாவல்கள்/சிறுகதைகள் என்னை அவ்வளவு பாதிப்பதில்லை. அப்படி எழுதுவது தவறில்லை எனச் சொல்ல வரவில்லை. இந்த அலங்காரம்/ தன்முனைப்புகளைத் தாண்டி அழகான வாழ்க்கை நம்முன்னே விரிந்து கிடக்கின்றது, அதை வீணாக்கத் தேவையில்லை என நினைப்பதுண்டு. மோகனின் இந்த புதினம் மனிதர்களை அவர்களின் அத்தனைப் பலவீனங்களையும் தாண்டி இன்னமும் நேசிக்கலாம் என்கின்ற வெளிச்சத்தை வலியுறுத்தாமல் நமக்குள் ஒரு நம்பிக்கையாக விதைக்கின்றது. கிருஷ்ணன் ஏதோ ஒரு காரணத்தால் அவரின் மனைவி பிள்ளைகளை விலத்தி வந்துவிட்டார். மனைவியோடு அவ்வளவு விலத்தல் இருக்கின்றது. ஆனால் பிள்ளைகள் மீது நேசமிருக்கின்றது. இதையெல்லாம் அதீத வெறுப்போ/அளவற்ற சென்டிமென்டல்களோ இன்றி எழுத்தில் முன்வைக்கப்படுகின்றது.

 

சமகாலத்து புனைகதைகளில் அதீத உணர்ச்சிகளை முன்வைத்தால்தான் அது ஒரு சிறந்த படைப்பு என்று விம்பங்கள் ஊதிப் பெருப்பிக்கப்படுகின்ற சூழலில் மோகன் குடும்பம்/பிள்ளைகளை மட்டுமின்றி நண்பர்கள்/காதல்களைக் கூட எளிமையாக முன்வைக்கின்றபோது நமக்கு 'ஆசுவாசமாக' இருக்கின்றது. அந்த நிம்மதி நம்மை இந்தப் புனைவுக்குள் மட்டுமின்றி நமது வாழ்வில் நடந்தவற்றையும் ஒரு வித புன்னகையுடன் மீளப் பார்க்க வைக்கின்றது.

 

குடும்பத்தை விட்டு விலகி கலையைத் தன் வாழ்வாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஒருவனுக்கு தமிழ்ச் சமூகத்தில் என்ன இடம் இருக்கின்றது என்பதை இப்புனைவினூடாகப் பார்க்கின்றோம். அதை அந்தக் கலைஞன் எந்த முறைப்பாடுகளும் இல்லாது இது நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை என்கின்ற நெஞ்சுரத்துடன் முன்வைக்கின்றான். கலைஞராக இருக்கும் இன்னொரு பாத்திரம் குடித்தபடி நம்மைக் கைவிட்ட சமூகம் இது என்று அரற்றும்போதும் கிருஷ்ணன் நிதானமாக உரையாடுகின்றார். இன்றைக்கும் பல படைப்பாளிகள் யாரேனும் பட்டியலிடும் படைப்புக்களின் அட்டவணயில் தாம் இல்லையெனப் பொங்கும்போதும், என் எழுத்துக்களை எவரும் கவனிக்கவில்லை என்று பிதற்றும்போதும் ஏன் இவர்கள் தங்களைத் தாமே சிறுமைப்படுத்துகின்றார்கள் என நான் எண்ணுவதுண்டு.

 

இந்நாவலிலும் ஓரிடத்தில் கலைக்கும் வசதி வாய்ப்புகளுக்கும் எவ்வித சம்பந்தமில்லை என்று விவாதத்தில் பிகாஸோவும், வான்கோவும் முன்வைக்கப்படுகின்றனர். அதேபோல டால்ஸ்டாயும், தால்தவேஸ்கியும் உதாரணம் காட்டப்படுகின்றனர்.  ஏன் அண்மையில் மறைந்துபோன ப்யூகோவ்ஸ்கியும் அவ்வளவு வறுமையிலும், வீடற்றவராக இருந்தபோதும், படைப்புகளுக்கும் வறுமைக்கும் ஒரு தொடர்புமில்லையென சொல்லிச் சென்றிருக்கின்றார். கலைக்கும், படைப்பு மனதுக்கும் வறுமையும் வசதியும் ஒரு முன் நிபந்தனையாக ஒருபோதும் இருப்பதில்லை. இவ்வாறு சோழமண்டலத்தில் வாழும் கலைஞர்கள், இளைய ஓவியர்கள் என்று பலரின் படைப்புக்கள்/படைப்பை இரசிக்கும் அனுபவங்கள் மட்டுமின்றி மும்பாயில் கலைஞர்களின் இசைக்கச்சேரி கேட்ட சம்பவங்கள் எனப் பலவற்றை நம்மாலும் அதன் சிறுதுளிகளை உணரக்கூடியதாக மோகன் எழுதிச் செல்கின்றார். இந்த நிகழ்வுகள் நம் முன்னே நடந்துகொண்டிருக்கும், ஆனால் அதை நாம் அனுபவிக்காமல்/கவனிக்காமல் வாழ்வின் அவசரகதியால் ஓடிக்கொண்டிருப்போம். கொஞ்சம் நின்று நிதானித்து இதையும் அனுபவியுங்கள் என மென்மையாகச் சொல்லும் குரலை இந்நாவலில் நாம் கண்டைய முடியும்.

 

இவை ஒருபுறமென்றால், இந்த நாவல் மரணத்தையும் பல்வேறு சம்பவங்கள்/மனிதர்களினூடாக ஆழமாகச் சென்று பார்க்க வைக்கின்றது. கிருஷ்ணன் வாழ்வில் பற்றற்றவராகத் திரிந்தாலும், ஒரு கடும்நோய் அவருக்கு உயிர் வாழும் விருப்பை ஏற்படுத்துவதை நாம் உணர்கின்றோம். அதற்கு அவருக்கு 'இடைவெளி' எழுதிய சம்பத்திலிருந்து, ஜி. நாகராஜனோடு கடைசிக் கணத்தில் இருந்த தருணம் வரை பலதை அவருக்கு நினைவுபடுத்துகின்றது. ஜி.நாகராஜன் ஓரிடத்தில், 'சாவும் அதை மனிதன் எதிர்கொள்ள  தன்னைத் தயார்ப்படுத்தும்போதுதான் வரும்' என்று சொன்னதை நினைவுகூர்கின்றார். அதுபோல கிருஷ்ணன் தன் தந்தையும், ஜி.நாகராஜனும் எப்படிச் சாவை எதிர்கொண்டார்கள் என்பதையும் ஒப்பிட்டுக் கொள்கின்றார். நாகராஜன் தன் சாவை எதிர்கொள்ளத் தயாரானதுபோல இறுதியில் கிருஷ்ணனிடம் 'குளிருது, ரொம்பக் குளிருது, சிதையில் போய் படுத்துக் கொண்டால்தான் இந்த குளிர் அடங்கும்' என்று இறுதியாகச் சொல்லிவிட்டு மதுரையில் இறந்து போகின்றார்.

 

இந்த நாவல் நோய்மையும், காதலும் கொண்ட எளிய புதினம் போலத் தோற்றம் அளித்தாலும், அது விட்டுச் செல்லும் வெவ்வேறு புள்ளிகள் முக்கியமானவை. கிருஷ்ணன் இசைக்கச்சேரியைக் கேட்கும்போது இசைக் குறிப்புக்களில் இல்லை, அதன் இடைவெளிகளில் உள்ள நிசப்தத்தில்தான் சிறந்த இசை இருக்கின்றதெனச் சொல்வார். அவ்வாறுதான் இந்த நாவலும் சொல்லியதை விட அது இடைவெளியில் விட்டுச் செல்கின்ற அமைதியில்தான் இன்னும் சிறப்பாக இருக்கின்றது. உதாரணத்துக்கு நமக்கு கிருஷ்ணனுக்கும் அவரின் மனைவிக்கும் ஏதோ நடந்துவிட்டதெனத் தெரிகிறது. ஆனால் நாவலில் அதற்கான எந்த விளக்கங்களோ, விபரணைகளோ இல்லை. அந்த இடைவெளி நமக்கு நாம் விட்டுவந்த காதல்களின் நினைவுகளை அருட்டிப் பார்க்கச் செய்யலாம். கிருஷ்ணன் அதை விபரித்துவிட்டிருந்தால் நாம் நம்மை ஆழமாகச் சென்று பார்க்கும் புள்ளிகள் மறைந்துவிட்டிருக்கும். ஒரு புதிர் உடைபடாமல் இருக்கும்போதே இன்னும் பலப்பல புதிர்கள் மொட்டுக்கள் போல விரிந்து கொள்ளச் செய்கின்றன. அதுபோலவே கிருஷ்ணன் இறுதியில் கண்டுகொள்ளும் காதலும் அவ்வளவு அழகானது. ஆனால் அதீத உணர்ச்சிவசப்படல்கள் இல்லாது இயல்பாக வாய்க்கின்ற ஒன்று. அங்கேயும் ஆணினது தடுமாற்றங்கள்/பொறுப்பற்று நடத்தல்/குற்றவுணர்வு அடைதல் என்பன சொல்லப்பட்டிருக்கின்றது.

 

ஒரு நோய் நம்மை எளிதாக எங்கிருந்தும் வந்தடையக் கூடும். ஆனால் ஒரு காதலைக் கண்டடைதல் அவ்வளவு இலகுவில்லை. அவ்வாறான ஒரு சிலிர்ப்பான காதலை நாம் கண்டையும்போது வாழ்வின் அனைத்து அபத்தங்களுக்கும் அப்பால் நாம் வாழ்வதற்கான அர்த்தம் நமக்குக் கிடைக்கின்றது. அப்படி வாய்த்த காதல் பின்னாளில் உடைந்துபோனாலும் அது ஒரு நல்ல படைப்பாக மாறலாம். சிலவேளை அதுவே நம்மை ஒரு கலைஞராக  நாம் உணராத் தருணத்தில் உருவாக்கி விடவும் கூடும்.

 

********************

 

(மாசி 18, 2024)

Bob Marley - One Love

Saturday, March 23, 2024

  

பாப் மார்லியின் வாழ்க்கை குறுகியகாலம். 36 ஆவது   வயதில் ஒருவகைப் புற்றுநோய் காரணமாக இறந்தும் விடுகின்றார். அந்தக் குறுகிய காலத்தில் மார்லி சாதித்தவை அதிகம், ஆகவேதான் அவர் இறந்து இன்று 40 வருடங்களுக்கு மேலான பின்னும் பேசப்படுகின்றார்; திரையில் ஒரு நாயகனாக முன்னிறுத்தப்படுகின்றார். Reggaeஇல் மார்லி அளவுக்கு இல்லையெனினும் அடுத்தடுத்த தலைமுறையில் வந்த டூபாக்கிற்கும் Rapஇல் இது நிகழ்ந்திருக்கின்றது. டூபாக் (Tupac)  அவரது 25ம் வயதில் 90களில் சுடப்பட்டு இறந்துவிட்டாரென்றாலும் அவரும் இன்றுவரை பேசப்படுகின்றார். மார்லியின் காலம் புரட்சிக்கும், காதல் செய்வதற்கும் நம்பிக்கை கொடுத்துக்கொண்டிருந்த 60/70கள். அன்றைய கால இளைஞர்கள் எதையாவது உறுதியாய்ப் பற்றிக்கொள்வதற்கு போராட்டமும் (சே குவேரா, மார்ட்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ்), இலக்கியமும் (பீட் ஜெனரேஷன்), இசையும் (பார்லி, ஜான் லெனான்) இருந்திருக்கின்றன.

அன்றையகாலம் போலில்லாது இன்று உலகம் அறிவியலால் சுருங்கிவிட்டபோதும், ஏன் இவ்வாறான நம்பிக்கை தரும் மனிதர்களோ, தத்துவங்களோ உருவாகி வரவில்லையென்பது முக்கியமான கேள்வியாகும். மார்லி இசையில் சாதிக்க வந்தபோது ஜமேய்க்கா அரசியல்/பொருளாதார‌ சீரழிவுக்குள் சிக்கிக் கொள்கின்றது. மார்லி நேரடி அரசியல் சாராது இசையின் மூலம் மக்களிடையே சமாதானத்தைக் கொண்டு வரலாமென‌ நம்புகின்றார். அதன் நிமித்தம் சுடவும்படுகின்றார். அவரும், அவரது மனைவியும், நண்பரும் அச்சம்பவத்தில் அருந்தப்பில் தப்புகின்றனர். ஜமேய்க்காவில் இனி சுதந்திரமாக இருக்கமுடியாதென மார்லி இங்கிலாந்துக்கு புறப்படுகின்றார். அங்கிருந்து புதிய இசை ஆல்பங்களை வெளியிட்டு ஐரோப்பிய நாடுகள் எங்கும் இசை நிகழ்ச்சிகளைச் செய்கின்றார்.

இத்திரைப்படம் மார்லியின் கடைசி 5 வருடங்களைப் பின் தொடர்கின்றது எனச் சொல்லலாம். மார்லி ஜமேய்க்காவின் ஒற்றுமையை மட்டுமில்லாது, ஆபிரிக்கா நாடுகளின் கூட்டிணைவையும் கனவு கணடவர். ஒருவகையில் தன் வேர்கள் எதியோப்பாவில் இருக்கின்றதென நம்பியவர். அதுபோலவே இசைக்கும், ஆன்மிகத் தேடலுக்கும் கஞ்சா புகைத்தல் ஓர் உந்துசக்தியென தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டவர். மார்லியின் இசை, அரசியல், ஆன்மீகத் தேடல் என்பவை மிகத் தெளிவானவை. அதுமட்டுமில்லாது இந்த வாழ்க்கையில் எப்போதும் வேதனையுற்றிருப்பதுதான் இயல்பானதா என்கின்ற இருத்தலியத் தேடல்களும் அவருக்குள் இருந்திருக்கின்றன. இவ்வாறான சில புள்ளிகளை இந்தத் திரைப்படம் தொட்டுச் சென்றாலும் மார்லி என்கின்ற பெரும் ஆளுமையை அதே வீரியத்துடன் முன்வைக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். எனினும் இதுவரை மார்லியை அவ்வளவு அறியாத ஒரு புதிய தலைமுறைக்கு நல்லதொரு அறிமுகத்தைக் கொடுத்து, மார்லியை இன்னும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தைக் கொடுக்கக் கூடும்.

மார்லியின் காலத்து அன்றைய ஜனாதிபதிகளை உலகம் மட்டுமில்லை, ஜமேய்க்கா கூட இப்போது மறந்துவிட்டிருக்கலாம். ஆனால் ஒரு கலைஞனான மார்லி இன்று ஜமேய்க்காவைத் தாண்டி 'இசையின் மூலம் சமாதானத்தைத் தேடிய' ஒரு திருவுருவாக ஆகிவிட்டார். ஜமேய்க்காவின் அடையாளமாக இன்று உலகப்பரப்பில் மார்லியும், அவரால் பாடப்பட்ட ரெக்கே பாடல்களும் நிலைநிறுத்தப்பட்டுவிட்டன. ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ்ந்தான் என்பதைவிட எப்படி வாழ்ந்தான் என்பதே முக்கியம் என்பதை 40 வயதுகளுக்குள்ளேயே காலமான‌ சேகுவேரா, வான்கோவிலிருந்து, மார்லி வரை பலர் நிரூபித்திருக்கின்றனர்.

*************


(Movie - 'Bob Marley: One Love')

(Feb, 2024)

விழிகளில் உறைந்து போகும் காலம்..!

Wednesday, March 20, 2024


னிக்காலம் இன்னமும்  முடிவடையவில்லை. ஆனாலும் வசந்தகாலத்துப் பறவைகள் வந்து பாடத் தொடங்கிவிட்டன. இலையுதிர்த்த மரங்களின் கிளைகளில் புதுத்துளிர்கள் மழைத்துளிகள் போல அரும்புகின்றன. சாம்பல் வானத்தைப் போர்த்தியபடி சுணங்கிக் கிடந்த‌ சூரியன் கூட பிரகாசமாக எட்டிப் பார்க்கின்றது.  இளமை கடந்தபின் காதல் ஓர் ஆம்பலாய் நீருக்குள் மிதப்பது போல, சூரியனின் வெளிச்சம் இருக்கின்றதே தவிர வெம்மையின் துளிக் கதகதப்பைத்தானும் உணர  முடியவில்லை.

 

அந்த விகாரை இந்தத் தெருவில் இருக்கின்றது என்று அறிந்தபோதும், ஒவ்வொருமுறை தேடும்போதும் அது எங்கோ தன்னை ஒளித்து வைக்கின்றதோ என எண்ணுமளவுக்கு என் கண்பார்வையிலிருந்து அது காணாமற் போவதுண்டு. இந்த விகாரை சில வருடங்களுக்கு முன் தீயுக்கு இரையாகியதும் அறிந்திருக்கின்றேன். அப்போது ஈழத்தில் இறுதி யுத்தத்தின் உச்சக்கட்டம். யாரோ, உணர்ச்சிவசப்பட்ட தமிழ் இளைஞர்கள்தான் இந்த விகாரையைக் கோபத்தில் எரித்தார்கள் என்கின்ற ஓர் கதையும் அன்றைய காலங்களில் உலா வந்திருந்தது. அனைத்து மானுடச் சிறுமைகளுக்கு அப்பாலும் நின்று புன்னகைத்துக் கொண்டிருக்கின்ற புத்தரால் முடியும். இல்லாவிட்டால் அவர் உதித்த நாட்டிலே முற்றாக 'மறக்கப்பட்ட'போதிலும், 2500 ஆண்டுகள் கடந்த‌ பின்னும் நாம் ஒவ்வொருவரும் வியந்து, நெருங்கிப் பார்க்கப் பிரியப்படுகின்ற ஒருவராக புத்தர் எப்போதோ இல்லாது போயிருப்பார்

 

உங்களுக்கான சரியான காலம் அமையும்போது, உங்களுக்குரிய ஆசிரியர்கள் தன்னியல்பிலே வந்து வழிகாட்டுவார்கள் என்பது ஸென்னில் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுவது. அதுபோலவே இம்முறை சரியான நேரம் அமைந்து எனக்கு அந்த விகாரை தன்னிருப்பைக் காட்டியது. முதல் நாள் பூரணை. புத்தருக்குப் பிரியமான பெளர்ணமி நாள். நேற்றைய நிலவொளி வீசிய இரவில் காரை தெருவின் இடையில் நிறுத்தி நிலவை இரசித்திருந்தேன். இவ்வாறான ஒரு பூரணையில் புத்தர் ஞானமடைந்தார் என்றால், அன்று அவ்விரவும், நிலவும் என்ன மாதிரியாக புத்தருக்குள் உருமாற்றமடைந்திருக்கும் என யோசனை எழுந்தது. அவர் அதுவரை அலைந்து தேடிக் கொண்டிருந்த எல்லாக் கேள்விகளும் சட்டென்று உதிர்ந்து போய் நிசப்தத்தில் உறைந்து போயிருக்குமா? நம்மைப் போன்ற மனிதர்கட்கு அகப்படாத‌ எந்த வாழ்க்கை அதற்குப் பிறகு அவருக்குள் தோன்றியிருக்கும்?

 

விகாரைக்கு  வந்த எல்லோரும் வெள்ளையாடையுடன் இருந்தார்கள். பூரணை வரும்  நாட்களில் விரதமிருந்து மடாலயம் வந்து பிரார்த்தித்த பின் உணவுண்டு நோன்பு துறப்பார்கள். சடங்குகளில் அவ்வளவு நம்பிக்கை எனக்கு இருப்பதில்லை. அதேபோன்று அவரவர் நம்பிக்கைகளை பிறர் மீது திணிக்காதவரை அவற்றை மதித்தலும் மானுட மேன்மையின் ஒரு சிறுதுளி என்பேன். புத்தர் பிரமாண்டமாய் விரிந்திருந்த பிரார்த்தனை மண்டபத்தில் ஒரு பிக்கு ஏதோ பேசிக்கொண்டிருந்தார். சுற்றி இருந்தும், நின்றும் அவரின் உரையை பலர் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த 'உறைந்த நிலை'யிலும் ஒரு வயதான் பெண்மணி தன் தலையைச் சீப்பால் பின்னால் இருந்து வாரிக் கொண்டிருந்தார். நான் இந்தக் கணத்தில் அவ்வளவு பிரக்ஞையுடன் இருக்கின்றேன் என்று புத்தருக்கே சவால்விடும் ஒருவராகத்தான் அவர்  நிச்சயம் இருப்பார். எல்லோரும் பயபக்தியுடன் இருக்க, இவர் மட்டும் விளையாட்டுத்தனமாக புத்தரின் சந்நிதியில் நின்றது எனக்குப் பிடித்திருந்தது.

 

பிரார்த்தனைக் கூடத்தைத் தாண்டி வெளியே வந்து, எங்கேனும் அமைதியாக இருக்க இடம் இருக்கா என்று கேட்டபோது நூலகம் ஒன்று இருக்கின்றது, அங்கிருந்து வாசிக்கலாம், வேண்டுமெனில் தியானம்  கூடச் செய்யலாம் எனச் சொன்னார்கள். வாசிப்பா, தியானமா என்று கேட்டால் வாசிப்பை முதலில் தேர்ந்தெடுப்பவன் நானென்பதால் அங்கிருந்த நூல்களில் எனது ஆசிரியரான தாயின் நூலொன்றை எடுத்து அதில் அமிழத் தொடங்கினேன். தாய் தனது பிரபல்யமான கவிதையில் சொன்ன 'அதே வியட்னாமிய அகதிப் படகையும், அதில் கடற்கொள்ளையரால் வன்புணரப்பட்ட சிறுமி'யையும் இன்னும் விரிவாக அங்கே வாசிக்கத் தொடங்கினேன். அதில் அநியாயமாகக் கொல்லப்பட்ட சிறுமி மட்டுமில்லை, அந்த கடற்கொள்ளைக்காரனும் நாமாகவே இருக்கின்றோம் என்று அறிதலின் ஆழத்துக்கு தாய் அழைத்துச் செல்லத் தொடங்கியிருந்தார்.

 

எவரையும் எதன் பொருட்டு discriminate  செய்யாது இருப்பது குறித்து யோசிக்கத் தொடங்கியபோது  நூலகத்தின் இன்னொருபக்கத்தில் அந்நியமொழி பேச்சுக் கேட்கத் தொடங்கியது. எனக்குத்தான் அந்நியமே தவிர, அது (முன்பிருந்த) எனது நாட்டு மொழி. சட்டென்று இவர்களில் யாரேனும் இராணுவத்தில் இருந்திருப்பார்களா, என்னைப் போன்ற தமிழர்களைக் கொன்றிருப்பார்களா என் யோசனை போக, நான் அச்சூழலுக்கு அந்நியப்பட்டு அந்தரப்படத் தொடங்கினேன். எவ்வளவோ காலத்துக்கு முன் சொந்தநாட்டை விட்டு வந்தபின் ஏன் இப்படி அவர்களைப் பிரித்துப் பார்க்கின்றேன் என்பதும், அத்துடன் எனது ஆசிரியர் அந்தச் சிறுமியையும், கடற்கொள்ளைக்காரனையும் பிரித்துப் பார்க்காது ஒன்றெனப் பார்க்கச் சொல்வதை வாசித்தும் ஏன் இப்படி என் மனம் குழப்பித் தவிர்க்கின்றது என்பதும் புரியாமல் இருந்தது. எல்லாவற்றையும் அவ்வளவு எளிதாகக் கடந்து போக முடியவில்லை. அதனால்தான் புத்தர் பரிநிர்வாணமடைய முன்னர் எல்லாவித 'தீய'சக்திகளும் மனதில் ஒவ்வொன்றாக வந்து சேரச் சேர விடாது போராடினார் என்றும் சொல்கின்றார்கள்.

 

அங்கே நூல்களை இரவலாகப் பெற்று வரலாம் என்று சொல்ல,  நான் வாசித்த நூலை எடுத்து வெளியே வந்திருந்தேன். வெளியே ஒரு புத்தர் எனக்காக காத்திருந்தார். அவரோடு பனிக்காலத்து வெயிலும் கூடவே துணைக்கு நின்றது. இப்போது மூச்சு சீராகி நிதானமாக வரத் தொடங்கியிருந்த‌து.


புத்தராவதைப் பற்றிப் பிறகு யோசிக்கலாம், என் ஆசிரியரான தாய் அவரின் அகத்தில் வந்தடைந்த ஞானத்தின் ஒரு சிறுதுளியை நான் அனுபவிப்பது என்பது கூட அவ்வளவு எளிதல்ல என்பது புரிந்தது. ஆனாலும் இந்த வாழ்க்கை நம்முன்னே ஒரு நதியைப் போல அள்ள அள்ளக் குறையாது எவருக்கும் வேறுபாடு காட்டாது ஓடிக் கொண்டிருக்கின்றது.

 

அதன் சுவையை ஏதோ ஒருவகையில் நான் உணர அன்பே நீயிருகின்றாய்.  மனம் சிலிர்த்து ஆரத்தழுவி உன் விழிகளில் முத்தமிடுகின்றேன். உறைந்து போகின்றது காலம்!

 

***********


(Feb, 2024)