கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 109

Monday, September 01, 2025

 

ங்கிருக்கும் ஒரு புத்த மடாலயத்தில் சில வருடங்களுக்கு முன் ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தது. அந்த மடாலயத்துக்கு எனது மச்சான் ஒருவர்  தொடர்ச்சியாக சென்று கொண்டிருந்தவர். அவர் சிலாபத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் சிங்களப் பாடசாலையில் படித்தவர். அவருக்குத் தமிழ் எழுத/வாசிக்கத் தெரியாது.

அந்த மடாலயத்தில் இருந்த ஒரு புத்த பிக்குவுக்கு, மடாலயத்துக்கு வந்து போய்க் கொண்டிருந்த ஒரு பெண்ணோடு காதல் மலர்ந்திருந்தது. ஒருநாள் துறவங்கி உள்ளிட்ட எல்லாவற்றையும் களைந்துவிட்டு, அந்தப் பெண்ணோடு அருகிலிருந்த அமெரிக்காவுக்குப் போய்விட்டார் என்று சொன்னார்.

உண்மையில் பிரமச்சாரியத்தில் இருப்பதென்பது மிகக் கடினம். அதுவும் பிரச்சினையில்லா பிரமச்சாரியத்தில் இருப்பது என்பது இன்னும் சிக்கலானது. எனது ஆசிரியரான தாயினது பிளம் விலேஜ் இந்தப் பிரமாச்சரியத்தில் மிகவும் இறுக்கமான விதிகளைக் கொண்டது. இத்தனைக்கும் பிரான்சிலிருக்கும் மடாலயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் நிரந்தரமாக வசித்தபடி இருக்கின்றனர். தாயினது வழிவந்தவர்கள் தொடர்ச்சியாக இந்த பிரம்மாச்சாரிய வாழ்வு குறித்தும்,  அவர்களுக்குள் எழும் sexual enerngy குறித்தும் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு இயன்றளவு பதில் சொல்லியபடி இருக்கின்றனர்.

இப்படி தாயுட்டபட பல புத்த பிரிவுகளில், நிர்வாணம் அடைவதற்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக பிரம்மாச்சரியம் இருந்தாலும், அமெரிக்காவுக்கு ஸென் பெளத்தம் வந்தபோது அது வேறுவகையாக இருந்தது. அதனால்தான் அது எளிதில் அமெரிக்காவுக்குள் நுழையுவும், பரவவும் முடிந்தது.

பெளத்தத்திற்கும் அழகும் தனித்துவம் என்னவென்றால் அது அந்த நிலப்பரப்புக்குரிய பெளத்தமாக மாறிவிடுவதாகும். அதனுடைய அடிநாதமாகிய சாரம்சாம்சத்தைக் கைவிடாது, மிகுதி அனைத்தையும் அது மாறுவதை ஏற்றுக்கொள்கின்றது. அதனால்தான் பெளத்தம் இந்தியாவில் தோன்றினாலும், பின்னர் சீனாவுக்கோ, ஜப்பானுக்கோ, வியட்நாமுக்கோ, திபெத்துக்கோ, ஏன் இலங்கைக்குப் போனபோதோ அது அந்த மண்ணுக்குரிய பெளத்தமாக மாறியிருக்கின்றது. அவ்வாறு அது மாறியபடியால்தான் மூல பெளத்தம் இந்தியாவில் செல்வாக்கிழந்து போனபோதும், புத்தருக்குப் பிறகான 2600 ஆண்டுகளிலும் பல்வேறு நிலப்பரப்புக்களில் உயிர்ப்புடன் இருக்கின்றது. ஒருவகையில் பின்னாளில் நமது மார்க்சியர்களில் ஒருபகுதியினர், 'மண்ணுக்கேற்ற மார்க்சியம்' என்று பேசத் தொடங்கியதை, பெளத்தம் அது எப்போதோ 'மண்ணுக்கேற்ற பெளத்தம்' என்று  கைகொள்ளத் தொடங்கிவிட்டதெனச் சொல்லலாம்.

அமெரிக்காவிற்கு பெளத்தம்/ஸென் வந்தபோது அது ஏன் மாறுபட்டதாக இருந்ததென்றால், அமெரிக்காவுக்கு 50/60களில் வந்த ஸென் ஆசிரியர்கள் பெரும்பாலும் திருமணமானவர்களாக இருந்தார்கள். அமெரிக்காவில் 50களின் பிற்பகுதியில் வந்து, ஒரு பெரும் ஸென் மரபை ஏற்படுத்தியவராகக்  கருதப்படுகின்ற  Shunryū Suzuki இற்கு  (அவரின் மாணவர்களால் Suzuki Roshi என்று அழைக்கப்படுகின்றவர்) மனைவி, பிள்ளைகள் இருந்தனர். சூஸூகி ரோஸி அமெரிக்காவில் வாழ்ந்த காலம் 12 ஆண்டுகள் மட்டுமே, ஆனால் அதற்குள் சிறப்பான அடுத்த தலைமுறை மாணவர்களை உருவாக்கியிருந்தார். அவரின்  'Zen mind, beginner's mind' மிக முக்கியமான நூல்.  நான் அவரின் மற்ற நூலான 'Zen is right now' உள்ளிட்ட அவரின் நேரடிய மாணவர்களாகிய Jakusho Kwong, Sojun Mel Weitsman போன்றோரின் நூல்களையும் வாசித்திருக்கின்றேன்.

எல்லா ஆசிரியர்களுக்கும், மடாலயங்களுக்கும் நிகழ்வதைப் போல சூஸுகி ரோஸியின் மரணத்துக்குப் பின்னும் பல சர்ச்சைகள் நிகழ்ந்தன. நான் அதற்குள் இப்போது அதிகம் போகப் போவதில்லை. என்னை நேரடியாகத் தத்துவங்களை/கொள்கைகளை/வழிகாட்டுதல்களைக் கூறும் நூல்கள் அதிகம் ஈர்ப்பதில்லை. எனக்கு இவற்றை யாரேனும் ஒரு கதைபோல, முக்கியமாக தமது சொந்த அனுபவங்களினூடாகச் சொல்லும்போதே அதிகம் கவரும். உதாரணத்துக்கு சூஸூகியின் மாணவரான Sojun Mel Weitsman எழுதிய 'Seeing One Thing Through' எனக்குப் பிடித்தமைக்கு, ஸோஜூன் அதன் முதல் பகுதியில் அவர் 60களில் தியானத்துக்குள் நுழைந்ததைப் பற்றியும், தனது ஆசிரியரான சூஸூகியுடனான அனுபவங்களை விபரித்தமையும் மிக முக்கியமானது.

ஒரு ஸென் மடமும், தியானப் பயிற்சியும் புதிதாகத் தொடங்கும்போது அது அவ்வளவு அற்புதமாக இருக்கின்றது. சூஸூகி ரோஸியை ஒரு மரபான ஜப்பான் மடலாயத்தினரே அமெரிக்காவுக்கு அழைக்கின்றனர். ஆனால் ரோஸியின் வழிமுறையோ வேறுவிதமானது. ஆகவே மரபான மடலாயத்தின் வழிபாட்டு நேரங்களைத் தவிர்த்து, விடிகாலை 5 மணிக்கு தியானத்தைத் தொடங்குகின்றார். அதற்கு பலர் வரத்தொடங்க அதை மாலை நேரத்துக்கும் செய்யத் தொடங்குகின்றார். இந்தச் ஸென்னைத் தேடி விருப்புடன் வந்தவர்கள் அந்தக்காலத்தில் ஹிப்பிகளாக இருந்த பலர். அலங்கோலமான கோலத்துடனும், ஒழுங்காய்க் குளியல்களும் இல்லாமலும் வந்தவர்களை எப்படி ரோஸி discriminate செய்யாமல் அரவணைத்துக் கொண்டார் என்பதை அவரது மாணவர் அழகாக விபரிக்கின்றார்.

இதற்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னரே, இவர்களுக்கென சொந்த இடம் கிடைத்து அது இன்னும் வளர்ச்சியடைகின்றது. என்னை அதிகம் கவர்ந்த விடயம் என்னவென்றால், எவ்வித எதிர்பார்ப்போ, எந்த உறுதிமொழியோ இல்லாது எப்படி ஓர் ஆசிரியருடன் நம்பிக்கையுடன் ஒரு குறிப்பிட்ட மாணவர்கள் வந்து சேர்ந்தார்கள் என்பதுதான். தியானத்தின் மூலம் எதுவும் அடையவோ, மாயங்கள் நடைபெறவோ சாத்தியமில்லை என்கின்றபோது அப்படி ஒரு தலைமுறை தன் வாழ்க்கையை கொடுத்திருக்கின்றது என்பது இப்போது நமக்குத் திகைப்பாக இருக்கக்கூடும்.
 
ரோஸி எப்படி ஹிப்பிகள் உள்ளிட்ட எவரையும் வித்தியாசம் பார்க்காமல் அரவணைத்தாரோ, அப்படியே அவரிடையே இருந்த மாணவர்களிடையே இருந்த உடல்சார்ந்த உறவுகளையும் உள்ளபடியே ஏற்றுக்கொண்டவர். அங்கும் அவர் எவ்வித discriminate செய்யாது இருந்தவர். அதனாலேயே அந்தத் தலைமுறையில் தியானத்திற்கும், விழிப்படைவதற்கும் வந்த பலர் காதலர்களாகவும், இணையர்களாகவும் பின்னர் மாறியிருந்தனர்.

ஆனால் இப்படி சர்ச்சைகள் இல்லாது இருந்த ரோஸியின் மடாலயம் அவரின்  மரணத்தின் பின் அதை நடத்திய Richard Bakerயின் பெண் சகவாசத்தால் சிக்கலுக்குள்ளானது. ரோஸி அவரின் வாழ்க்கைக் காலத்தில் Dharma transmission செய்ய ஒரேயொரு நபர் ரிச்சர்ட் ஆவார். Dharma transmission செய்யப்பட்டாலே ஒருவர் ஆசிரியராகும் தகுதியை அடைவார். அது அவ்வளவு எளிதல்ல. ஒருவர் ஒரு புத்த மரபின் நீட்சியென (lineage) கொள்ள, அவரை அந்த மரபின் ஆசிரியர்கள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். குருவுடன் உடனுறைந்து பத்து/பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் இது சாத்தியமாகக் கூடியது.

*

வ்வாறு பெண்கள் விடயத்தில் பலவீனமாகப் போகும் புத்த துறவிகள் பற்றி யோசித்தபோது, இது இப்போதல்ல புத்தரின் காலத்திலிருந்தே நடக்கின்றதென்பது புரிந்தது. புத்தர் தனது சீடர்களாக இருந்த ஆனந்தா உள்ளிட்டவர்களை பிட்சை கேட்டு ஊர்களுக்கு அனுப்புவார். அவர்களுக்குக் கிடைக்கும் தானம் எதுவாயினும் அதை விருப்பு வெறுப்பின்றி ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை தனது சீடர்கள் பழகிக்கொள்ளவேண்டும் என்றும் புத்தர் விரும்பியிருந்தார். இவ்வாறு ஒருமுறை பிட்சைக்குப் போன ஆனந்தா, ஒரு தாசியின் வீட்டுக்குப் போகின்றார். அந்த தாசி ஆனந்தாவின் மனதை மாற்றி படுக்கையறைக்குள் அழைத்துக்கொண்டு போய்விடுகின்றார். இதையறிந்த புத்தர், தனது இன்னொரு மாணவரான மஞ்சுசிறியை அனுப்பிவைக்கின்றார். அவர் ஒருமாதிரியாக ஆனந்தாவை மீட்டு வருகின்றார்.

அப்படி மீட்டுக்கொண்டு வரப்பட்ட ஆனந்தா அவமானத்தில் குன்றி நின்றபோதே, புத்தர் அவரின் பிரபல்யம் வாய்ந்த 'சுரங்காம சூத்திரத்தை' (Surangama Sutra) உபதேசிக்கின்றார்.  இந்த 'சுரங்காம சூத்திரத்தை' முன்வைத்து, தன் அனுபவங்களையும் சேர்த்து ரோஸி, ஸோஜனின் வழிவந்த ரொபர்ட்  ரோஸன்பம் 'That Is Not Your Mind!' என்ற பெயரில் ஒரு சுவாரசியமான புத்தகத்தை எழுதியிருக்கின்றார். நமது சங்கப்பாடல்களை ஒருவர் வரிவரியாகப் பிரித்து சுவாரசியமாக விளங்கப்படுத்துவதைப் போன்று இந்த நீள் சூத்திரத்தை ரொபர்ட் அலசுகிறார்.

இத்தனைக்கும் ரொபர்ட் ஒரு Neuropsychologist ஆவார். இதில் கலாநிதிப் பட்டம் பெற்றபின் இந்தியாவிலிருக்கும் National Institute of Mental Health and Neuroscience தொடக்கத்தில் பணிபுரிந்தவர். அவருக்கு நல்ல வேலை, மனைவி, குழந்தைகள் என்று இனிதாக எல்லாம் அமைந்தபோதும், மகிழ்ச்சியின் வெற்றிடம் இருந்தது. இதன்பின்னரே அமெரிக்காவுக்குத் திரும்பி, ஸோயூனின் மடாலயத்தில் சேர்கிறார். இதற்கு முன்னர் யோகா பழகியிருந்தபோதும், நல்லதொரு நெடுந்தொலைவு ஓட்டக்காரராக இருந்தபோதும், 5 நாள் தொடர் தியானப்பயிற்சியின்போது அவர் பட்ட கஷ்டங்களை விபரிக்கும்போது, தியானத்தின் ஆரம்பநிலையில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கே, நாம் தனியர்கள் இல்லை என்று கொஞ்சம் நிம்மதி வரும்.

*

இவ்வாறு ஆசிரியர்களாவும், மாணவர்களாகவும் தமது வழியில் தீவிரமாக இருந்தபோதும், பெண்கள் விடயத்தில் பலவீனமாக இருந்ததை புத்தர் காலத்தில் இருந்து, அண்மையில் புத்த அங்கியைக் கழற்றிவிட்டு தனக்குப் பிடித்த பெண்ணோடு வாழத்துணிந்த துறவி வரை சொல்லிவிட்டு, இலக்கியப் பக்கம் போகாமல் இருக்கமுடியுமா என்ன?

அங்கேயும் நிறைய எழுத்துவகைகள் இருக்கின்றன. ஆனால் என் ஆசிரியரான எஸ்.பொவின் 'சுவடு' கதையை ('அவா' தொகுப்பு) வாசித்தவர்க்கு இந்தத் துறவிகளின் பெண் ஈர்ப்பு நன்கு தெரிந்திருக்கும். ஒரு புத்த மடாலயத்தில் இருந்த விலகி வந்த ஒருவனுக்கு திருமணம் நடக்க இருக்கின்றது. அவன் தனது முதல் திருமண அழைப்பிதழை யாருக்குக் கொடுக்கவேண்டும் என்று நினைக்கின்றபோது தனது குருவை நினைத்துக்கொள்கின்றான். அது அவன் தியானம் பழகிய குருவல்ல. ஒரு பெண். அவளை அவன் 'குருத்தினி' என்று அழைத்து நனவிடை தோய்கின்றான்.

அவன் புத்தமடாலயத்தில் இருக்கும்போது ஒரு பெண்ணோடு பழக்கம் வருகின்றது. அவள் பாலியல் தொழிலைச் செய்கின்ற பெண். இவன் எவ்வளவு உறுதியாக இருக்கின்றபோதும் அவள் இவனின் 'பிரம்மச்சாரிய' மனதை கலைத்துவிடுகின்றான். அவனோடு உறவு கொள்கின்றபோது அவள் சொல்கின்றாள், உன் குருவே என்னைத் தேடி வருகின்ற ஒரு 'வாடிக்கையாளர்'தான் என்று. அத்தோடு அவனது துறவுக் கனவு கலைந்து சாதாரண மனிதனாகிவிடுகின்றான். இப்போது அவனுக்குத் திருமணம் நடக்கப்போகின்றது. அந்தப் பெண்ணை நன்றியுடன் நினைத்துக் கொள்வதாகக் கதை நீண்டு முடியும்.

இப்போதெல்லாம் நான் போகும் புத்த மடாலயத்தில், பிரமச்சாரிய துறவிகள் பெண்களுடன் பேசுவதைப் பார்க்கும்போது எனது மனம் பதறுகிறது. எந்தத் துறவி எந்தப் பெண்ணில் மயங்கி துறவியங்கியைக் களையப்போகின்றார் என்று என் கள்ளமனது அந்தரிக்கின்றது. நான் தியானத்தின் மூலம் நிர்வாணமடைவது ஒருபுறமிருக்கட்டும், இந்தத் பெண்களிடமிருந்து துறவிகளைக் காப்பாற்றி கரைசேர்க்கும் 'கடமை'யை நான் விழிப்பாகச் செய்ய வேண்டியிருக்கின்றது. இதுதான் எனக்கு புத்தர் வழங்கவிருக்கும் 'தம்மமாக'வும் இருக்கக் கூடும்.  

பெயரில் மட்டுந்தான் எனக்கு ஒரு பழந்துறவின் பெயர், நினைப்பெல்லாம் எப்போதும் பெண்கள்தான்..!

****


(Aug 2025)

0 comments: