கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மக்னோலியாப்பூ குறிப்புகள்

Tuesday, September 30, 2025

 

'Calm in the Storm (Zen Ways to Cultivate Stability in an Anxious World)' நூல் வெளிவந்த அன்றே வாங்கியிருந்தேன். இது எனது ஆசிரியரான தாயின் நேரடி மாணவரான  Brother Phab Huu, ஓரு பத்திரிகையாளராருடன் சேர்ந்து எழுதியது. இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக  Podcast செய்து வருகின்றனர். விரைவில் நூறாவது Podcast வரப்போகின்றது. நடைமுறை வாழ்க்கையில் ஸென்னை எப்படி பழக்கப்படுத்திக் கொள்வது என்று நேரடியாகப் பேசுவதால் இவர்களின் பேச்சுக்கள் சுவாரசியமானவை. ஆகவே நிறைய பலவீனமுள்ள தருணங்களை/மனிதர்களை இவர்களின் பேச்சுக்களினூடாக அறிந்துகொள்ளும்போது, நமது வாழ்க்கையின் பிரதிபலிப்பைப் பார்க்கலாம்.


ஒரு நூலை அது வரமுன்னர் pre-order செய்து நான் வாங்குவதென்பது அரிது. கடைசியாக அப்படி வாங்கியது அருந்ததி ரோயின் The Ministry of Utmost Happiness என நினைக்கின்றேன். 'Calm in the Storm' இல், பெரும்பாலும் அவர்களின் உரைகளிலிருந்தே எழுத்தாக்கி இருக்கின்றனர். இந்த உரைகளை நான் விடாது கேட்பவன் என்பதால் எளிதில் அதைக் கண்டு கொள்ள முடிந்தது. இந்த நூலை வாங்கியது என்பது அவர்களிடமிருந்து நிறையப் பெற்றதற்கு  இது நான் அவர்களுக்கு நன்றி செலுத்தும் முறை என்பேன். 


நாம் எத்தனையோ அரிய விடயங்களைப் பிறரிடமிருந்து பெற்றுக் கொள்கின்றோம், ஆனால் அவர்களுக்கு அதைச் சொல்லவோ/நன்றி செலுத்தவோ முடியவதில்லை. அதை வேறுவிதமாகத்தான் செய்ய வேண்டியிருக்கின்றது.


நண்பரொருவர் நான்கு பெண்கள் இலங்கையில் ஒரு சிறு குழுவைத் தொடங்கி, தொடர்ந்து பல்வேறு வகையில் சமூகத்தில் இயங்கிக் கொண்டிருப்பதைச் சொன்னார். அவரவர்க்கு இருக்கும் நாளாந்த அல்லாடல்களுக்கிடையில் அவ்வளவு உற்சாகமாக அவர்கள் செயற்படுகின்றார்கள் என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் இனியான காலங்களில் சிறுசிறு குழுக்களாலேயே சமூகத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று நம்புவன் நான். ஆகவே இவ்வாறான அமைப்புக்களின் தொடக்கமும், செயற்பாடுகளும் மனதுக்கு இதமளிப்பவையாக இருக்கின்றன. அவர்களது அமைப்பு 'Everystory Sri Lanka'. இன்ஸ்டாவில் தேடினால் எளிதில் கிடைப்பார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள்!


*

ன்று நல்லூர் முருகன் கோயிலில் தேர்த்திருவிழா நடந்து முடிந்திருக்கின்றது. நானறிய யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரேயொரு தீவிர முருகன் பக்தன் நமது வடகோவையாராகத்தான் இருக்கும். ஏனென்றால் அவர் நல்லூர் திருவிழா தொடங்கிய முதல் நாளிலிருந்து 25ம் திருவிழா முடியும்வரை விரதம் இருப்பார்; ஆனால் ஒருநாளும் நல்லூர்க் கோயில் பக்கம் எட்டியே பார்க்கமாட்டார். 


வடிவேல் ஒரு திரைப்படத்தில் ஒரு கோட்டை வரைந்துவிட்டு, நீ  கோட்டுக்கு அந்தப் பக்கத்தில் நின்று கதைக்க வேண்டும், நான் இந்தப் பக்கத்தில் நின்று கதைப்பேன். பேச்சு பேச்சாக இருக்கவேண்டும், என்ன நடந்தாலும் கோட்டைத் தாண்டக்கூடாது என்று வில்லனுக்கு சூளுரைப்பது போல, வடகோவையாருக்கும், முருகனுக்கும் ஏதோ ஒரு சபதம் இருக்கும்போல. இல்லாவிட்டால் திருவிழாக் காலங்களில் கடும் விரதமிருந்து விட்டு கோயில் பக்கம் எட்டிப்பார்க்காமல் யாராவது இருப்பார்களா என்ன? சிலவேளைகளில் மனதிலே கோயில் கட்டிய பூசலார் நாயனாரின் பரம்பரையில் வந்தவராக இவர் இருப்பாரோ தெரியவில்லை.


அவர் ஒரு தீவிர நல்லூர் முருகப் பக்தன் போலக் காட்டிக்கொண்டாலும், நள்ளிரவு 'ஏகாந்த' வேளைகளில் மனந்திறந்து பேசும்போது, 'டேய் நான் எங்கை பக்தியோடு விரதம் இருக்கிறனடா, இப்படிச் செய்வது என்னுடைய detox இற்கு,  வருடம் முழுவதும்  ஊர்வன நகர்வன, பறப்பன, கடலுக்குள் பாய்வது என்று அனைத்தையும்  கணக்கில்லாது  நன்றாக விழுங்கிவிட்டு, 25 நாட்கள் விரதம் இருந்தால் உடல் நல்ல cleansing ஆகிவிடும், அதற்குத்தான் இப்படி விரதம் என்ற பெயரில் பட்டினி கிடக்கின்றேன்' என்று உண்மையை உளறிவிடுவார்.


நல்லூர் முருகனின் தேர்த்திருவிழாவை ஏதோ ஒரு யூ-டியுப்பில் பார்த்துக் கொண்டிருந்த அம்மா, நல்லூரில் ஒரு தேர்தான் போகின்றது என்றார். நான் நல்லூர்க்கோயில் திருவிழாவுக்கு மட்டுமில்லை; சாதாரண நாளில் கூட நல்லூர் கோயிலுக்குள்ளே போனதில்லை (அது எதற்காக என்று தெரிய விருப்பம் இருப்பவர்கள் 'நான் கம்பராமாயணம் படித்த கதை' என்ற எனது ஆக்கத்தை வாசிக்கவும்). எனவே நல்லூரில் தேர்த்திருவிழாவுக்கு ஒரு தேர் மட்டுந்தான் இழுப்பார்கள் என்பதை நான் இதுவரை கவ்னித்திருக்கவில்லை.


ஏனென்றால் என் சிறுவயதில் இருந்து நான் திருவிழா கொண்டாடிய கோயில் என்றால் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில். இந்த நல்லூர்க்கந்தன் போல ஒற்றைத் தேர் இழுக்கும் கஞ்சத்தனம் எல்லாம் மாவிட்டபுரம் கந்தனுக்கு இல்லை. அவரின் தேர்த்திருவிழாவில் கம்பீரமாக 5 தேர்களை இழுப்பார்கள். அதுவும் அந்தப் பெருந்தெருவில் ஐந்து தேர்களும் பவனி வருவது என் சிறுவயதுக் காலங்களில் விழிகள் விரிக்கப் பார்க்கும் வியப்பான விடயம்.


நல்லூர்க் கந்தனுக்கு ஐந்து தேர்கள் மட்டுமில்லை, நல்லூர்ப் பக்கமாய்  தேர்த்திருவிழாவன்று பறவைக்காவடி வருகின்ற சிலமனையும் நான் அவ்வளவாய்ப் பார்க்கவில்லை. இங்கே கனடாவில் மொன்றியலில் மலையில் அமைந்திருக்கும் வல்-மொறின் முருகன் கோயில் தேர்த்திருவிழாவுக்கு போனால் கூட நம்மவர்களின் பறவைக்காவடியைப் பார்க்கலாம். 


பறவைக்காவடிகள் என்றாலே அது சந்நிதி என்று அம்மா சொன்னார். அவர் சின்னப்பிள்ளையாக இருக்கும்போது ஒருநாள் முந்தியே அவரின் தாயோடு போய் சந்நிதியில் தங்கி நின்று இந்தப் பறவைக்காவடிகளை எல்லாம் பார்ப்பார் எனச் சொன்னார்.


ஐந்து தேர்கள் இல்லாத நல்லூர்க் கந்தனைத்தான் எங்கள் யாழ்ப்பாணத்தின் அடையாளம்/பெருமை என்று படங்காட்டுகின்றீர்களே, இதெல்லாம் நியாயமா யாழ்ப்பாணிகளே?


இந்தப் போர் மட்டும் நடக்காது, எங்களைப் போன்றவர்களைப் பனித்தேசத்துக்குத் துரத்தியிருக்காவிட்டால், மாவிட்டபுரம் கந்தன்தான் எங்கள் யாழ்ப்பாணத்தின் அடையாளம் என்று இந்நேரத்துக்கு 'ஹர்த்தாலு'க்கு அழைப்பு விடுத்து கதவடைப்புச் செய்திருப்போம்!


*

யாழ்ப்பாணத்தில் இப்போது நடக்கும் புத்தகக் கண்காட்சியில் 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' சிறுகதைத் தொகுப்புக் கிடைக்கின்றது. நண்பர் மதுராங்கி அங்கு வாங்கியதாக இந்தப் புகைப்படத்தை அனுப்பியிருந்தார். யாழில் என் புத்தகங்களை வாங்கவென 10 வாசகர்கள்தான் இருப்பார்கள். ஏற்கனவே 'கலைமுகம்' இதழின் ஆசிரியரான எமில் இந்நூலை வாங்கியதாகச் சொல்லியிருந்தார். மற்ற நண்பர்கள் அவர்களின் Sleeper cells ஐ களைந்துவிட்டு களத்தில் இறங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.


நிற்க.


இம்முறை 'எழுநா'வும் தனது அரங்கை  இப்புத்தகக் கண்காட்சியில் அமைத்துள்ளது. இந்த ஆண்டுக்கான 25 புத்தகங்களை வெளியிடும் திட்டத்தில் இதுவரை வெளிவந்துவிட்ட 20 நூல்களை நீங்கள் அங்கே பெற்றுக் கொள்ளலாம். உள்ளூர் மக்கள் மட்டுமில்லை, வருடந்தவறாது நல்லூர்க் கந்தனுக்காக அலையலையாகச் செல்லும் புலம்பெயர்ந்தவர்களும் 'எழுநா'வின் இந்த நூல்களை தமக்காக வாங்கலாம் அல்லது வாங்கி வாசிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம். மகிழ்ச்சி என்பது ஒருபோதும் பிறர்க்குக் கொடுக்க கொடுக்க  குறைவதில்லை; மேலும் மேலும் கூடிக்கூடிச் செல்லும் என்று ஆசான் புத்தர் கூறியதுபோல, புத்தகங்களை வாசிப்பதால் நமது உலகம் இன்னுமின்னும் விசாலமடைகிறது என்பதற்கிணங்க இவ்வாறான புத்தகக் கண்காட்சிக்கு, கோயிலுக்கும், திரையரங்குக்கும் செல்வது மாதிரி குடும்பமாகச் சென்று வரலாம். 

 
அறிவைப் பெறாது (பாடப் புத்தக அறிவைச் சொல்லவில்லை), 'வாய் வீச்சில் வீரராக' ஈழத்தமிழ்ச் சமூகம் இருப்பதை தினம் தினம் அரசியல்வாதிகளிலிருந்து, 'அறிவுஜீவிகள்' எனச் சொல்லப்படுவர்கள் வரை பார்க்கின்றோம்; ஆகக் குறைந்தது நாங்கள் இவ்வாறான 'கோமாளி'களாக மாறாதிருக்க நமக்கு முன்னாலிருக்கும் நல்ல தேர்வு புத்தகங்களைத் தேடித் தேடி வாசிப்பதேயாகும்.


ஆகவே இவ்வாறான புத்தகக் கண்காட்சிகளுக்கு உற்சாகமாகச் சென்று வாருங்கள்!


***


(Aug, 2025)

0 comments: