கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சிறுகதைத் தொகுப்பு நிகழ்வு குறித்து..

Tuesday, August 19, 2025


ழுத்து என்பது ஒருவகையில் எனக்கு அந்தரங்கமானது. ஆகவே என் அகமனதோடான உரையாடல் என்றும் அதைச்ஃ சொல்லிக் கொள்ளலாம். எழுதுவது இதமானது என்றால் நூலைப் பதிப்பிப்பது, நூல் வெளியீட்டு நிகழ்வு நடத்துவது என்பது போன்றவை பதற்றத்தைத் தரக்கூடியது. ஒருவகையில் அப்போது மட்டுமே புறவுலகத்தோடு தொடர்பு கொள்வதால் அது என்னளவில் அவ்வளவு உவப்பானதாக ஒரு செயலாக இருப்பதில்லை.

 

இதனாலேயே 2 வருடங்களுக்கு முன்னர் வெளியான 'தாய்லாந்து' குறுநாவலுக்கு எந்த வெளியீட்டு நிகழ்வையும் செய்யாமல் இருந்தேன். இப்போது 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தபோதும் அதில் அவ்வளவு ஆர்வங்காட்டாதே இருந்தேன். என் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்து 12 வருடங்கள் ஆகிவிட்டன. அது என் நண்பரான தளவாய் சுந்தரத்தின் முயற்சியால், அவர் அப்போது பொறுப்பாக இருந்த 'கயல்கவின்' பதிப்பகத்தால் வெளிவந்தது. என் கெட்டகாலமோ இல்லை தமிழுலகின் நல்லகாலமோ என்னவோ, அந்தச் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தபோது 'கயல்கவின்' பதிப்பகமும் மூடும் நிலைக்கு வந்திருந்தது. எனவே அவ்வளவு வெளியில் தெரியாத தொகுதியாக அது போயிருந்தது.

 

எந்த நூலாயினும் அது தகுதியுள்ளதாயின் காலம் அதற்கென ஓரிடம் வழங்குமென்பதில் நம்பிக்கையுடையவன் நான். இந்த 12 வருடங்களில் 'சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்' குறித்து புதியவர்கள் அதை வாசித்து மதிப்புரை எழுதினார்கள். நாஞ்சில் நாடன் போன்றவர்களின் கண்களில்/கரங்களில் தற்செயலாய்ப் போய்ச் சேர்ந்து, அன்று நம்பிக்கை தரும் படைப்பாளிகளில் ஒருவன் என்றவளவில் விகடன் நேர்காணலில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றேன். 'எங்கள் வாப்பாவுக்கு ஓர் ஆனையிருந்தது' என்று பழங்கதைகள் பேசுவதில் என்ன பயன்? சமகாலத்தில் எம் எழுத்து என்னவாகும் இருக்கும் என்பதை நேரடியாகச் சந்திப்பதுதானே ஒவ்வொரு எழுத்தாளருக்கும் முன்னால் இருக்கும் பெரும் சவால்.

 

ஒருவகையில் நம்மால் தொடர்ந்து இதே வகைமைக்குள் எழுதமுடியுமா என்று நம்மை நாமே கத்தி தீட்டிப் பார்ப்பதற்கான வழிதான் கதைகளைத் தொகுத்து நூலாக்குவது என்பது என்னுடைய வழியாகும். ஆகவேதான் ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டபின், அதற்கான விருது/மதிப்பீடுகள் கிடைத்தபோதும், இன்னொரு தொகுப்பை நூலாக்கும் எண்ணம் வரவில்லை. அதற்காக அதன்பிறகு கவிதைகள் அதன்பிறகு எழுதவில்லை என்றல்ல அர்த்தம். ஏற்கனவே எழுத்து அந்தரங்கமானது என்று குறிப்பிட்டதுமாதிரி, எழுதியவை வெளியிடப்படாதவரை அவை என்னோடு அந்தரங்க உரையாடல்களைச் செய்து கொண்டிருக்கின்றன எனச் சொல்லிக் கொள்ளலாம்.

 

சிறுகதைகளைக் கூட இந்த பன்னிரண்டு ஆண்டுகளில் அவ்வளவாக எழுதவில்லை. இந்தத் தொகுப்புக்காக எழுதியவற்றிலிருந்து 10 கதைகளைத்தான் தேர்ந்தெடுத்தேன். ஆக ஒருவருடத்துக்கு ஒரு கதை கூட எழுதவில்லை என்று கூட சொல்லிக் கொள்ளலாம். அதில் குறையேதுமில்லை, ஆகக்குறைந்தது தேர்ந்தெடுத்து நூலாக ஆக்க 10 கதைகளாகவது இருக்கின்றனவே என்கின்ற நிறைவே இருக்கின்றது.

 

'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' நூல்கள் கைகளை அடைந்து மாதங்களாகிவிட்டபோதும், புத்தக வெளியீட்டு நிகழ்வு நடத்தும் எண்ணம் பெரிதாக இருக்கவில்லை. நெருக்கமான சிலர் உந்தித்தள்ளியதால் சரி ஒரு வெளியீட்டு நிகழ்வைச் செய்யலாம் என்று முடிவு செய்தாலும், வழமையான செய்யும் அரங்கிற்கான இடமும் கிடைக்கவில்லை. அரங்கு கிடைத்தபோது கிட்டத்தட்ட 10 நாட்களில் செய்யவேண்டிய நிலைமை. இந்தக் குறுகிய காலத்தில் நூலை வாசித்து கருத்துரைப்பவர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகக் கடினமானது. மேலும் இங்கு இப்போது இரண்டுமாத பாடசாலை விடுமுறை/கோடைகாலம் என்பதால் எல்லோரும் குடும்பம்/பிள்ளைகள் என்று ஓடிக்கொண்டிருப்பார்கள்.

 

ஒரளவு வாசிப்பதில் ஆர்வம் இருக்கும் நானே இப்படி யாரேனும் கேட்டால் முடியாது என்றுதான் உடனேயே மறுத்திருப்பேன்.ஆனால் நான் விரும்பிக் கேட்டேன் என்பதற்காக மைதிலி, ஜயகரன், அரசி, செல்வம், இலங்கதாஸ் என அனைத்து நண்பர்களும் குறுகிய காலம் என்கின்றபோது நூலை வாசித்து பேசச் சம்மதித்தார்கள். அவர்கள் இல்லாதுவிடின் இந்த நிகழ்வு நடந்திருக்கவே மாட்டாது.

 

வழமையான மரபான நிகழ்வில் இருந்து மாற்றவேண்டுமென நிரோஜினியிடம் கதையின் ஒரு பகுதியை வாசிக்கக் கேட்டேன். அவர் சம்மதித்தார். அதுபோலவே இம்முறை கனடிய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஜூவனிட்டா நாதனை அழைத்திருந்தேன். அவர் அரசியல்/சமூக செயற்பாட்டாளாராக இருந்தாலும், தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பவர். அண்மையில் தமிழில் முதுமாணி பட்டத்தை இங்குள்ள மனோன்மணியம் பல்கலைக்கழகத்தினூடு பெற்றுமிருந்தார். கனடிய நீரோட்டத்தில் மட்டும் கால்பதிக்காது, தமிழ்த்துவத்திலும் அவர் கொண்டிருக்கும் ஆர்வத்தில் நேரமிருப்பின் நிகழ்வுக்கு வருகை தர அழைத்தேன். அவர் நூலை வெளியிட்டதோடு எனது புதிய இணையத்தளமான www.elankodse.com  அறிமுகம் செய்து வைத்தார்.

 

********

 

 (Jul 25, 2025)

0 comments: