கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 106

Friday, August 22, 2025

 

ன்னுடைய 13/14 வயதுகளில் எனக்குத் தெரிந்த விஞ்ஞான ஆசிரியர்கள் காணாமற் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னுடைய ரீயூட்டரி ஆசிரியர்கள். அந்தக் காலத்தில் படித்த பாடசாலை யுத்தத்தால் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்தது. புதிய ஊர்களில் பாடசாலையை மீண்டும் தொடங்க ஒரு குறிப்பிட்ட காலமளவுக்கு எடுக்கும்.  இப்படி என் பள்ளிப்படிப்பு நிறுத்தப்படுவதும், தொடங்குவதும் என சீரற்று இருக்க, பக்கத்தில் இருக்கும் ரீயுட்டரிகளுக்குப் போகத் தொடங்கினேன்.

அநேகமான ரீயூஷன் ஆசிரியர்களும் ஏதோ ஒரு பாடசாலையில் படிப்பித்துக் கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு விஞ்ஞான ஆசிரியர்,  எங்களுக்கு உதைபந்தாட்டத்தில் கடும் போட்டி தந்துகொண்டிருந்ந்த பாடசாலையில் படிப்பித்துக் கொண்டிருந்தார். ஒருமுறை அந்தப் பாடசாலை எங்களை உதைபந்தாட்டத்தின் இறுதிப்போட்டியில் வெல்ல, அவர் வீட்டில் வைத்தே அந்த அணிவீரர்களுக்கு வெற்றி விருந்தும் கொடுத்திருந்தார். அவர் படிப்பிப்பதோ விஞ்ஞானம்,  ஆனால் விளையாட்டில் வென்றதற்கு வீட்டில் வைத்து ஒரு விருந்தா என்று எங்களைப் போன்றோருக்கு எரிச்சல் இருந்தது.

இப்படி அவர் மீது நிறையக் கடுப்பு இருந்தது. அப்போது அவரிடம் நான் ரியூசன் போகவில்லை. ஆனால் எங்கள் பாடசாலையைச் சேர்ந்த பலர் அவரிடம் போய்க் கொண்டிருந்தனர். நாங்கள் யுத்தத்தால் இடம்பெயர்ந்தபோது, அவரும் எங்கள் பாடசாலை ஆசிரியரும் சேர்ந்து ஒரு ரியூட்டரியைத் தொடங்கினார்கள். எங்கள் பாடசாலை ஆசிரியர் (விஞ்ஞானம் கற்பிப்பவர் அல்ல) மீதும் ஒரு மறைமுகக் குற்றச்சாட்டு பரவலாக இருந்தது.

அந்த ஆசிரியரின் மகன் எங்களை விட நான்கு வயது கூடியவராக இருந்தார். அவரோடு சேர்ந்து நான்கைந்து அதே வகுப்புப் பெடியங்கள் இயக்கத்துக்குப் போய்ச் சேர்ந்திருந்தனர். பதினாறு வயதில் இயக்கத்துக்குப் போய் இணைவதென்பது எங்கள் காலத்தில் சாதாரணமாக இருந்தது. அப்படிப் போன பெடியங்களில் எப்படியோ இந்த ஆசிரியர் தன் மகனை இயக்கத்திலிருந்து வெளியே இழுத்து எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். மற்றவர்கள் போனது போனதுதான். தன் பிள்ளையை மட்டும் காப்பாற்றிக் கொண்டுவந்த தந்தை என்று இவர் மீது மறைமுகமான குற்றச்சாட்டு அன்று பலரிடம் இருந்தது.

ஆகவே நான் இந்த ஆசிரியரும், நம்முடைய கால்பந்தாட்ட 'எதிரி' விஞ்ஞான ஆசிரியரும் இணைந்து நடத்திய ரீயூட்டரிக்குப் போக அவ்வளவாக விரும்பவில்லை. ஆனால் பாடசாலையில் எம்மோடு பேசாத பெண்களெல்லாம் அந்த ரீயூட்டரியில் நிறையப் பேசுகின்றார்கள் என்று மற்றப் பெடியங்கள் வந்து சொல்லும்போது மட்டும் பொறாமைத் தீ பற்றியெரியும்.

பிறகு நானும் வெட்கம்/மானத்தைக் கைவிட்டு அந்த விஞ்ஞான ஆசிரியரிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது அவர் ஏதோ ஒரு பிரச்சினையின் காரணமாக எங்கள் பாடசாலை ஆசிரியரிடமிருந்து பிரிந்து வந்திருந்தார். ஆம், ஒரு பக்கத்தில் யுத்தம் நடந்துகொண்டிருந்தாலும், மனிதர் மனிதர்கள் இல்லையா. எல்லாவிதமான போட்டி பொறாமை கோபம், வன்மம் எல்லாம் எங்களுக்குள் அப்போதும் இருந்தது.

இந்த விஞ்ஞான ஆசிரியர் புது இடமொன்றை தற்காலிகமாகத் தேர்ந்தெடுத்து இருந்தார். அந்த வகுப்பில் எப்போதும் வயல்காற்று வீசியபடி இருக்கும். ரீயூசன் ஓலைக்கொட்டகை என்பதால் எல்லாப் பக்கத்தாலும் காற்று வந்து கொண்டிருக்கும். பக்கத்தில் ஒரு அழகான கோயில் வயல்களுக்கு நடுவில் இருந்தது. எனக்கு அந்தக் கோயிலுக்குப் போய்ப் பார்க்க விரும்பமிருந்தது. ஆனால் எம் இயக்கங்களின் போராட்ட வரலாற்றில் முக்கியமான இருவரை அங்கேதான் சுட்டுப்போட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து அந்தப் பக்கம் போகப் பயமாகவும் இருந்தது.

பிறகு வழமைபோல யுத்தம் நெருக்கித்தள்ள நாங்கள் வேறொரு ஊருக்கு இடம்பெயர்ந்தோம். எங்களைப் போல இந்த விஞ்ஞான ஆசிரியரின் ரியூசனும் இடம்பெயர்ந்தது. நம் தமிழ் அரசியல் கட்சிகள் போல, எம் ஆசிரியரும் இப்போது புதுக்கூட்டுச் சேர்ந்து, வந்த இடத்தில் ரியூசனைத் தொடங்கினார். அது ஒரு மரம் அரிகின்ற இடம். நிறைய மரத்துண்டுகளுக்கு இடையில்தான் வகுப்பு நடக்கும்.  சில வகுப்பறைகளின் நடுவில் மரம் அரிகின்ற  பெரிய அரம் இருக்கும்.
கவனமாக காலை வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

அதோடு இன்னொரு சிக்கல். இந்த மரச்சீவலுக்குள் நுளம்புகள் பெரும் இராட்சியமே அமைத்திருக்கும். அதன் கடிகள் தாங்கமுடியாது இருக்கும். பதினாறு வயது வரை நீள்காற்சட்டை போடமுடியாத யாழ் 'பராம்பரியம்' இருந்ததால், அரைக்காற்சட்டையோடு. தொடை தெரிய இருப்போம். நுளம்புகள் கால்பந்தாட்ட மைதானத்தில் பந்தை உருட்டுவது போல, கொடுக்குகளால் எங்களை அடித்துத் துவம்சம் செய்யும்.

இவ்வாறு எல்லா 'தாக்குதல்களையும்' சமாளித்து ரியூசனுக்குச் சென்ற காலத்தில்தான் எங்கள் அந்த விஞ்ஞான ஆசிரியர் காணாமற் போனார். இயக்கத்தால் எதற்கு அழைத்துச் செல்லப்பட்டார், இனி அவர் திரும்பி வருவரோ என்கின்ற பதற்றத்தோடு நாங்கள் ரீயூசனுக்கு போய்க் கொண்டிருந்தோம். நல்லவேளையாக ஓரிரு மாதங்களுக்குப் பின் அவர் திரும்பி வந்தார். ஆனால் முன்புபோல அவரிடம் கலகலப்பு இருக்கவில்லை. ஏதாவது விசாரணைக்குக் கூப்பிட்டு பங்கருக்குள் போட்டு அனுப்பினார்களா, இல்லை ஏதேனும் யுத்தத்திற்கான ஆயுதத் தயாரிப்புக்கான தொழில்நுட்ப அறிவைப் பெற அழைத்துச் சென்றார்களா என நாங்கள் அறியமுடியாத இரகசியமாக அந்த காணாமற்போதல் இருந்தது.

புலம்பெயர் தேசத்திற்கு வந்தபின், ஒருவரிடம் வயது, சம்பளம், திருமண உறவு உள்ளிட்ட எதையும் நாமாகக் கேட்கக்கூடாது, அது அநாகரீகம் என்பதைப் போல, எங்களுக்கு சின்ன வயதிலே இப்படி இயக்கத்தோடு சம்பந்தப்படும் எதையும் வாய்திறந்து கேட்கக்கூடாது என்பது எவரும் சொல்லாமலே தெரிந்திருந்தது. கடைசிவரை அவர் எதற்காய் அழைத்துச் செல்லப்பட்டார், பலருக்கு நிகழாததுபோல எப்படி அதிசயமாய்த் திரும்பி வந்தார் என்பது எங்களுக்கு புரியாத புதிராகவே இருந்தது.


*


ப்படி இன்னொரு விஞ்ஞான ஆசிரியரும் காணாமற் போயிருந்தார். அப்போது நான் அவரிடம் ரியூசனுக்குப் போகவில்லை. அவர் ஓரிரு மாதங்கள் அல்ல, கிட்டத்தட்ட ஒரு வருடம் காணாமற் போயிருந்தார். அவரை இயக்கம் பின்னர் திருப்பியனுப்பியபோதுதான் அவரிடம் நான் ரீயுசனுக்குப் போயிருந்தேன்.

அதை ரீயூசன் என்றல்ல. தனிப்பட்ட வகுப்பு எனத்தான் சொல்ல வேண்டும். நான் ஏதோ அந்தக்காலத்தில் கொஞ்சம் படிக்கின்றவன் என்பதால் அவர் என்னை வற்புறுத்தி தன்னிடம் படிக்க வரச்சொல்லி என் பெற்றோரிடம் சொல்லியிருக்கின்றார். ஒருவகையில் அவர் தூரத்து உறவினராகவும் எமக்கு இருந்திருக்க வேண்டும்.

நானும், என் உறவுக்காரனும், இன்னும் சிலரும் அவரிடம் விஞ்ஞான வகுப்புக்காய் ரீயூசனுக்காகச் செல்வோம். அவர் மரபான பாடசாலைக் கற்றலைச் செய்யமாட்டார். ஏன் எங்கள் பாடப்புத்தகத்தில் என்ன இருக்கின்றது என்று பார்த்துக்கூட எங்களுக்குப் போதிப்பதில்லை. ஏதேனும் ஒரு விஞ்ஞானப் புத்தகத்தைத் தந்து வாசியுங்கள், கலந்துரையாடுவோம் என்பார். தமிழில் என்றால் கூட, பரவாயில்லை ஆங்கிலத்தை எழுத்துக்கூட்டி வாசித்து கொஞ்சமாய் கிரகிக்கும் மனோநிலையில் இருந்த எங்களுக்கு ஆங்கில விஞ்ஞானப் புத்தகங்களை அள்ளியள்ளித் தருவார். அதில் ஒரு நல்ல விடயம் என்னவென்றால் அவற்றில் அழகான வர்ணப் படங்கள் இருக்கும். படம் பார் கதை சொல் என்கின்றமாதிரி கொஞ்சம் வாசித்தமாதிரி நடிக்கச் செய்வோம்.

உதாரணத்துக்கு ஒரு பெரு மரம், அதில் பல்வகை உயிர்மை வகை என்றால், இது சூழலியலைப் பற்றிப் பேசுகின்றது என்று ஊகிக்க முடியும் அல்லவா? அப்படி அவரிடம் முறைசாரா கற்றலைக் கற்றோம்.நியூட்டன் அப்பிள் மரத்தடியில் இருந்து புவியீர்ப்பு விசையை கண்டறிந்ததுபோல, பாடப்புத்தகங்களைத் தாண்டிய விஞ்ஞானிகளை  எங்களிடையே உருவாக்க வேண்டுமென இந்த ஆசிரியர் நம்பியிருக்கக் கூடும்.

இவரும் இயக்கத்தால் அழைத்துச் செல்லப்பட்டு பங்கருக்குள் போடப்பட்டிருப்பாரா என்ற சந்தேகம் எனக்கு நீண்டகாலமாகவே இருந்தது. அவர் சும்மாவே அமைதியானவர். அத்தோடு இதற்கு முன்னர் ஏதோ வெளிநாட்டில் கல்விகற்கவோ கற்பிக்கவோ சென்றவர். பிள்ளைகள் வெளிநாட்டில் குறிப்பிட்ட காலம் கல்வி கற்றதால் அவர்களின் தமிழ் கொஞ்சம் தமிழாக அழகாக இருக்கும்.

ஆசிரியர், இயக்கம் தன்னை அழைத்துச் சென்றபோது என்ன நடந்தது என்று எங்களுக்குச் சொல்லவில்லை. ஆனால் ஆசிரியரின் மகன் கொஞ்சம் சொன்னான். அது உண்மையா, கற்பனையா என்று அப்போதும் தெரியவில்லை, இப்போதும் தெரியவில்லை. ஆசிரியரின் ஒரு மகனுக்கு ஒரு வயது என்னைவிடக் குறைவாக இருந்தது. ஆகவே அவனும் எங்களோடு இருந்துதான் படிப்பான். அதனால் நல்ல பழக்கமாகிவிட்டான்.

அவன் தான் சொன்னான்: எங்களின் அப்பாவை இயக்கம் அழைத்துச் சென்றது, இயக்கத்துக்கு ஹெலி செய்வதற்கு என்றான்(அப்போது எமக்கு எல்லாமே ஹெலிகொப்டர் தான், இயக்கத்தில் கடைசிக்காலத்தில் இருந்ததென்னவோ சிறிய ரக விமானங்கள்). எங்களால் அதை நம்ப முடியாதிருந்தது. இலங்கை இராணுவத்தின் ஹெலி, பொம்மர், இந்திய இராணுவத்தில் மிராஜ், சுப்பர்சொனிக் போன்ற எல்லாவற்றாலும் போதும் போதுமென்ற அடி வாங்கிய அனுபவத்தில் இயக்கத்தில் ஒரு விமானம் திருப்பியடிக்க இருக்கின்றது என்பதைக் கற்பனை செய்வதே வியப்பாக இருந்தது.

இப்படியெல்லாம் அவன் சொல்லிவிட்டு, நீங்கள் நம்பாவிட்டால் சொல்லுங்கள். நானே திருட்டுத்தனமாக ஓரிடத்துக்குப் போய்க் காட்டுகின்றேன். அங்கேதான் உருமறைப்புச் செய்து வைத்திருக்கின்றனர் என்று ஒரு இயக்க முகாமைப் பற்றியும் சொன்னான்.

எனக்கு அதைச் சென்று பார்க்க ஆசையாகவும் இருந்தது. ஆனால் இயக்கத்திற்கு இப்படி உளவு வேலையில் ஈடுபடுகின்றோம் என்று தெரிந்துவிட்டால்,  அவர்கள் என்னமாதிரியான ஒறுப்பு (தண்டனை) தருவார்கள் என்பதை நினைக்க அதைவிடப் பயமாகவும் இருந்தது.

தகப்பனும் மகனும் சேர்ந்து இயக்கத்துக்கு விமானம் செய்கின்றார்களோ இல்லையோ, என்னைப் போன்றவர்களை எப்படியேனும் சிக்கலில் மாட்டவைத்து இயக்கத்தின் பங்கருக்குள் அனுப்பவிடமாட்டார்கள் என்ற எச்சரிக்கையில் அந்த ஆசிரியரிடம் போவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ளத் தொடங்கினேன்.

அம்மாதான், அந்த மனுஷன் உன்னை ரீயூசன் படிக்க, அவரது வீட்டுக்கு வரச் சொல்லி ஆசையாய்க் கேட்டவர், நீ ஏன் ஒழுங்காய்ப் போவதில்லை என்று அவ்வப்போது கவலையாய்க் கேட்பார். நான் மனதுக்குள், இயக்கம் ஒவ்வொரு அரசாங்கம் மாறி சமாதானப் பேச்சுக்கு போகும்போது, 'சமாதானம் என்பது தற்காலிகத் தீர்வு, எங்களின்  தனிப்பெரும் இலட்சியம்  தனித் தமிழீழம் அடைவதுதான்' என்று எங்களுக்குச் சொல்வதுபோல, இந்த ஆசிரியரின் தற்காலிக இலக்கு விஞ்ஞானம் படிப்பிப்பது, தொலைதூர இலட்சியம் எங்களை விஞ்ஞானிகளாக்கி இயக்கத்தில் சேர்த்துவிடுவதுதான்' என்று சொல்லிக் கொள்வேன்.

*****

 

 ஓவியம்: Melancholy by Edward Munch

( Aug 06, 2025)

0 comments: