கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 107

Wednesday, August 27, 2025

 

கோடை என்றால் இங்கே தெருவிழாக்கள் அமோகமாக நிகழும். இப்போது ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் தமிழர்கள் விழாக்களை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். என்னை இந்தத் தெருவிழாக்கள் அவ்வளவாக கவர்வதில்லை. பெரிதாகக் காரணம் ஒன்றுமில்லை, அங்கே கூடும் சனங்களின் நெருக்கம் என்னை மூச்சுவிட திணற வைக்கும்.

நேற்று ஒரு தெருவிழாவுக்குப் போகவேண்டுமென நண்பர் விரும்பியிருந்தார். அதற்கு இந்நிகழ்வுக்கு பாடகர் பிரதீப் குமார் வருவதாக விளம்பரப்படுத்தியிருந்தனர் என்பதும் ஒரு காரணம். இன்னொரு நண்பரை நீண்டகாலமாக சந்திக்க விரும்பியும் இதுவரை சாத்தியமில்லாமல் இருந்தது. அவரையும் அவரின் வேலை முடித்து அங்கே சந்திக்க வரச் சொல்லியிருந்தேன்.

தமிழர்களின் தெருவிழாக்களில் இருக்கும் தன்முனைப்புக்கள்/அரசியல்/குழிபறிப்புகள் குறித்து விரிவாக எதுவும் பேசப்போவதில்லை. அது ஒரு பெருங்கடல்; அது குறித்து 24/7 சூடாய்ப் பேசுவதற்கு நிறையப் பேர் இருக்கின்றனர்.

பிரதீப்குமார் நண்பருடன் குழுவினராய் வந்து இறங்கியிருந்தனர். அவர்கள் Oorka என்கின்ற சுயாதீன இசைக்குழுவை நீண்டகாலம் நடத்தி வருகின்றனர். எனவே அவர்கள் தமது சுயாதீனப் பாடல்களைப் பாடினார்கள். எனக்கு இதில் இருந்த வியப்பு என்னவென்றால், பிரதீப்குமார் பிரசித்த பெற்ற பாடகர்/இசைக்கோர்ப்பாளர் என்று வளர்ந்தபின்னும், ஒரு சுயாதீன இசைக்குழுவின் ஒரு 'பேஸ் கிட்டாராக' அவர்களோடு சேர்ந்து வந்திருந்தார். இந்தக் குழுவின் இசைக்கோர்ப்பாளர்/பாடகராக முக்கியமாக இருப்பவர் பாரத் சங்கர்.

நேற்றைய நிகழ்வில் பிரதீப்குமார் எதுவும் பாடப்போவதில்லை என்றுதான் பாரத் சங்கர் கூறினார். அதுபோலவே பிரதீப் குமார் எதையும் பாடவில்லை. பொதுவாக சினிமா/இசைச்சூழலில் ஒருவர் அதில் பிரபல்யமானபின், தன்னை முதன்மை ஆளுமையாக முன்வைப்பார்கள்; அதில் துளி ஆணவமும் இல்லாது பிரதீப் குமார் நேற்று மற்றவர்கள் பாட, கூட ஒரு பக்கவாத்தியக் கலைஞராக மட்டும் இருந்தார். இது அவ்வளவாக எவருக்கு சாத்தியமாகாது. அந்தவகையில் பிரதீப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எப்போதும் சினிமாப் பாடல்களை பாடும் இவ்வாறான நிகழ்வுகளில், ஒரு சுயாதீன இசைக்குழுவை அழைத்து வந்து பாட வைத்த விழாக்குழுவினருக்கும் நன்றி சொல்லவேண்டும்.

இப்போது நான் இதை எழுத வந்ததற்கான காரணத்துக்கு வருகின்றேன். இதை நான் என் பள்ளி/பல்கலைக்கழகத்திலிருந்து பேசி வருகின்றோம். நம்மவர்களுக்கு இருக்கும் இந்த இந்தியச் சினிமா/சினிமா மோகம் பற்றியது. கோடம்பாக்கம் திரையுலகு எவ்வளவு பிரமாண்டம்/இராட்சத்தனம் என்பது பற்றி பேசவேண்டியதில்லை. சினிமா/ இசைக்கலைஞர்களை இங்கு அழைப்பது, மனம்குளிர 'கொடுத்து' திருப்பி அனுப்பிவைப்பது குறித்தும் கவலையில்லை. அவரவர் அவரவர்க்கான விருப்பம்.

ஆனால் பாருங்கள், இப்போது ஒரு சுயாதீன இசைக்குழுவை அழைக்க முடிந்தவர்களால், நம்மவர்களிடையே இருந்து முகிழ்ந்த சுயாதீன இசைக்குழு ஒன்றை அழைக்கவேண்டும் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடிந்திருக்காது. இத்தனைக்கும் கனடாவிலே நான்றிய சிறந்த சுயாதீனப் பாடர்களென தென்னிந்தியா சினிமா உலகே பாராட்டும் NavZ-47, Shan Vincent de Paul போன்ற பலர் இருக்கின்றனர்.

ஆங்கிலம் உள்ளிட்ட வேறு மொழிகளில் பாடமுடியும் என்றாலும், தமிழில் மட்டுமே பாடுவோம் என்று இங்கிருக்கும் நவனீ போன்று நோர்வேயில் 9 grader nord என்ற இசைக்குழுவை நடத்தும் மீரா/தீபா சகோதரிகள் தமிழிலேதான் பாடுகின்றனர். இப்படி எண்ணற்ற நம்மவரிடையே இருக்கும் 'சுயாதீன இசைக்குழு'வைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஏன் இப்போது ஈழத்தில் இருந்து நன்றாகப் பாடும் வாகீசன் குழுவினரைக் கூடக் கூப்பிடலாம்.


மேலும் இங்கே தெருவிழாக்களை யார் நடத்துகின்றோம் என்று போட்டியிடும் குழுக்கள் கூட, எவரை அழைக்கவேண்டும்/எவருக்கு தளங்களை அமைத்துக் கொடுக்கவேண்டும் என்பது குறித்து ஒருபோதும் பொதுவில் விவாதிப்பதில்லை. இங்கே இப்போது தெருவிழா சார்ந்து அடிவாங்கும் ஒரு நிறுவனம் கூட, நம்மவர்கள் ஒரளவு பிரபல்யம் அடைந்தபிறகுதான், எம்மிடம் வாருங்கள் என்று தங்கத்தம்பாளம் வைத்து வரவேற்று பாராட்டுவார்கள். தமது தனித்துவமான கலைத்திறமைகளால் வளர்ந்துவரும் கலைஞர்களை இவர்களைப் போன்றவர்கள் ஒருபோதும் அரவணைப்பதில்லை. அந்தக் கலைஞர்களுக்கு ஏதோ ஒருவகையில் அங்கீகாரம் கிடைத்தபின்னேதான் நம்மவர்கள் எனப் பாராட்ட முன்வருவார்கள்.

உங்களுக்குச் சந்தேகம் இருப்பின், அவர்கள் கடந்தகாலத்தில் கெளரவித்தவர்களின் பட்டியலைப் பாருங்கள். ஆனால் வெளியில் என்னவோ ஈழத்தமிழர் சமூகத்திற்காக உடல்/பொருள்/ஆவியைக் கொடுத்துக் கொண்டிருப்பதாக களமாடி கொண்டிருப்பார்கள். நாங்கள்தான் தமிழ்ச்சமூகத்தை அடையாளப்படுத்துபவர்கள் என்ற ஏகபோக உரிமையை தாமாகவே எடுத்துக் கொள்வார்கள்.

ஒரு சமூகமாக எல்லோரையும் உள்ளடக்கும்போது அந்த சமூகம் உங்களை அரவணைப்பார்கள். விடுகின்ற தவறுகளைக் கூட, செய்து முடித்த/செய்து கொண்டிருக்கும் நல்ல விடயங்களை முன்வைத்து சமூகமாக மக்கள் மன்னிக்கக் கூடத் தயாராக இருப்பார்கள்.

ஆனால் அது ஊர்ச்சங்கமாக இருந்தாலென்ன, பாடசாலைச் சங்கமாக இருந்தாலென்ன, ஏன் சமூகச் சங்கமாக இருந்தாலென்ன, தலைமைக்கான போட்டியில் அடிபடுவார்கள், ஒருவரையொருவர் இழுத்து விழுத்துவார்கள், பிறகு நாங்களே நல்லவர்கள்/வல்லவர்கள், எங்களுக்கு நீங்கள் இப்படிச் செய்யலாமா என்று அழுதபடி சமூகத்திடம் வந்து நீதி கேட்பார்கள்.

ஆகவே இங்கிருக்கும் ஒவ்வொரு சமூக நிறுவனங்கள் மட்டுமில்லை, தனிப்பட்ட ஒவ்வொருவரும் நீங்கள் உங்கள் தனிப்பட்ட விருப்பு/தன்முனைப்புகளைத் தவிர்த்து ஒரு சமூகமாக நாம் முன்னேற/உருப்பட ஒரு சிறு கல்லையாவது எடுத்துப் போட்டிருக்கின்றோமா என்று கேள்வி கேட்கவேண்டும். அந்த அடிப்படை அறத்தோடே சமூகக் களங்களுக்கு பணியாற்ற வாருங்கள். இல்லாவிட்டால் அமைதியாக இருங்கள். ஆகக்குறைந்தது பொதுவில் வந்து நீதி கேட்கும் முன், நீங்கள் இதுவரை காலம் எவ்வளவு ஜனநாயகத்தன்மையுடன் செயற்பட்டிருக்கின்றீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

***


(Aug 10, 2025)

0 comments: