மார்குவெஸ்

மார்குவெஸ்
வாசிப்பு

கள்ளம்

கள்ளம்
வாசிப்பு

கம்பராமாயணம்...

கம்பராமாயணம்...
புனைவு

ஹேமா அக்கா

ஹேமா அக்கா
சிறுகதை

ஒரு க‌விதை: மூன்று த‌மிழாக்க‌ம்

Wednesday, November 16, 2011

Midwinter
by Thomas Transtromer

A blue glow
Streams out from my clothes.
Midwinter.
A clinking tambour made of ice.
I close my eyes.
Somewhere there's a silent world
And there is an opening
Where the dead
Are smuggled over the border.

[Translated from the Swedish by Robert Bly]

இடைப‌னிக்கால‌ம்

ஒரு நீல‌ ஒளிர்வு
என‌தாடைக‌ளிலிருந்து பிர‌வாகித்து வ‌ருகிற‌து.
இடைப‌னிக்கால‌ம்.
க‌ணீரெனும் ராம்போரின் ப‌னியாலான‌து
நானென‌து விழிக‌ளை மூடுகின்றேன்
எங்கேயோ இருக்குமோர் நிச‌ப்த‌ உல‌கில்
ஓரு திற‌ப்புள‌து
அங்கே இற‌ந்த‌ உட‌ல்க‌ள்
எல்லை தாண்டிக் க‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌.
..............

இம்மாத‌க் கால‌ச்சுவ‌டை இணைய‌த்தில் மேய்ந்து கொண்டிருந்த‌போது த‌ற்செய‌லாய் சுகுமார‌ன் மொழிபெய‌ர்த்திருந்த‌ தோம‌ஸ் (டி)ரான்ஸ்ரோம‌ரின் (Thomas Transtromer)க‌விதைக‌ளை வாசித்தேன். சுவீட‌னைச் சேர்ந்த‌ க‌விஞ‌ரான‌ ரான்ஸ்ரோம‌ர் இம்முறை இல‌க்கிய‌த்திற்கான‌ நோப‌ல் ப‌ரிசைப் பெற்ற‌வ‌ர் என்ப‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம். சுகுமார‌னின் மொழிபெய‌ர்ப்பை வாசித்த‌போது, இக்க‌விதைக‌ளில் சில‌வ‌ற்றை ஏற்க‌ன‌வே த‌மிழில் வாசித்த‌ நினைவு வ‌ர‌ ஜெய‌மோக‌னின் த‌ள‌த்தைத் தோண்டினேன். அங்கே கார்த்திக் என்ப‌வ‌ரும் ஏற்க‌ன‌வே மொழிபெய‌ர்த்திருந்த‌தை ஜெய‌மோக‌ன் ப‌கிர்ந்திருப்ப‌தைக் க‌ண்டுபிடித்தேன்.

சுகுமார‌ன், கார்த்திக் இர‌ண்டு பேரின‌தும் த‌மிழாக்க‌ங்க‌ளை வாசித்த‌பின், இந்த‌க் க‌விதையை நான் த‌மிழாக்க‌ம் செய்தால் எப்ப‌டியிருக்குமென‌ முய‌ற்சித்துப் பார்த்தேன். பிற‌கு அந்த‌ த‌மிழாக்க‌த்தை என‌து ந‌ண்ப‌ருக்கு வாசிக்க‌ச் சொல்லி அனுப்பியிருந்தேன். அவ‌ர் சில‌ திருத்த‌ங்க‌ளை செய்திருந்தார். அதைவிட‌ இன்னொரு சுவார‌சிய‌மான‌ விட‌ய‌ம் அவ‌ரும் இப்போது சுவீட‌னில்தான் இருக்கின்றார்.

உண்மையில் க‌விதைக‌ளைத் த‌மிழாக்க‌ம் செய்த‌தைவிட‌, க‌விதையை முன்வைத்து எங்க‌ளுக்கிடையில் ந‌ட‌ந்த‌ உரையாட‌ல் இன்னும் சுவார‌சிய‌மாக‌ இருந்த‌து. ஒரு கவிதை -முக்கிய‌மாய் வேறொரு மொழி/க‌லாசார‌ப் பின்ன‌ணியில் வ‌ருகின்ற‌ ப‌டைப்பு- ப‌ல்வேறு வ‌கையில் வாசிக்க‌க் கூடிய‌தாக‌ இருப்ப‌து..., அதைத் த‌மிழாக்க‌ம் செய்கையில் ந‌ம் ஒவ்வொருவ‌ரின் ம‌னோநிலைக்கு ஏற்ப‌ எவ்வாறு வேறுப‌ட‌க்கூடுமென‌... ப‌ல்வேறுபுள்ளிக‌ளில் நின்று யோசிக்க‌ முடிந்திருந்த‌து.

இந்த‌ 'இடைப‌னிக்கால‌ம்' என்கின்ற‌ க‌விதை முற்றுமுழுதாக‌ ஒரு ப‌னிக்கால‌ப் பின்ன‌ணியைக் கொண்டுவ‌ருகின்ற‌து.  இந்த‌ப் பனிக்கால‌ம் எந்த‌ உண‌ர்வை சுகுமார‌னுக்கோ, கார்த்திக்கிற்கோ கொடுக்கின்ற‌தோ தெரியாது அதை ஒவ்வொரு வ‌ருட‌மும் அனுப‌விக்கும் சூழ‌லில் வாழும் என‌க்கு அது என் வாழ்வில் ஒரு ப‌குதியை பிர‌திப‌லிப்ப‌து போல‌த் தோன்றிய‌து.

ப‌னிக்கால‌ம் என்ப‌தே அநேக‌ம் இருளாக‌வும் -கோடைகால‌த்தைப் போன்ற‌ல்லாது- மிக‌ அமைதியாக‌வும் இருக்கும். அப்ப‌டியெனில் ஏன் ஒரு ராம்போரின் ஒலியை இங்கே க‌விஞ‌ர் கொண்டுவ‌ருகின்றார் என‌ யோசித்தேன். அதுவும் முக்கிய‌மாய் அடுத்த‌டுத்த‌ வ‌ரிக‌ளில் நிச‌ப்த‌ உல‌கைப் பேசும் க‌விஞ‌ர் ஏன் 'ஒலி'யைக் கொண்டுவ‌ருகின்றார் என‌  நானும் ந‌ண்ப‌ரும் விவாதித்திருக்கின்றோம். தோல் வாத்திய‌வ‌கையைச் சேர்ந்த‌ ராம்பூரில் எப்ப‌டி 'Clinking ' ஓசை வ‌ருகின்ற‌து என்ப‌து இன்ன‌மும் யோசிக்க‌வைத்த‌து. உலோக‌வகை வாத்திய‌ங்க‌ளில் அல்ல‌வா 'Clinking' ச‌த்த‌ம் பொதுவாக‌க் கேட்கும்.

என‌க்கு மிருத‌ங்க‌த்தில் இருக்கும் சொற்ப‌ அனுப‌வ‌த்தை வைத்து, பிற‌கு  இதை ஒப்பிட்டுப் பார்த்தேன்.. மிருத‌ங்க‌த்தின் தொட‌க்க‌ப் பாட‌மாய் என‌க்கு க‌ற்பித்து த‌ந்த‌ 'தா/தீ/தொம்/ந‌ம்' இல் வ‌ரும் 'ந‌ம்' ற்கு நாம் சுட்டுவிர‌லால் அடிக்கும்போது, தொட‌ர்ந்து அதிரும் ஒரு ஒலி வ‌ரும். ஆக‌, தோல் வாத்திய‌த்தில்கூட‌ இந்த‌ க‌ணீரென்று ஒலிக்கும் ச‌த்த‌த்தைக் கொண்டுவ‌ரலாம் என‌ நினைக்கின்றேன். இன்னும் எளிதாக‌ச் சொல்வ‌தென்றால் முக்கிய‌மாய் இந்த‌க் க‌விதைக‌ளை தொட‌க்க‌த்தில் ஜெய‌மோக‌னின் த‌ள‌த்தில் வாசித்திருக்கின்றேன் என்ப‌தால், அவ‌ரைச் ச‌ந்தோச‌ப்ப‌டுத்த‌ இந்த‌ உதார‌ண‌த்தை எடுத்துக் கொள்கின்றேன்.  நாம் 'ஓம்' என்று உச்ச‌ரிக்கும்போது 'ம்' ஐ நீண்ட‌நேர‌த்திற்கு உச்ச‌ரித்தால் ஒரு ஒலி வ‌ருமே.  அவ்வாறு ச‌ட்டென்று ஒரு அடி அடித்துவிட்டு கைக‌ளை ராம்போரிலோ/த‌பேலாவிலோ இருந்து எடுத்துவிட்டால் தொட‌ர்ந்து அதிர்ந்துகொண்டிருக்கும்.அதைத்தான் இங்கே க‌விஞ‌ர் உண‌ர்த்துகின்றார் என‌ நினைத்துக்கொண்டேன். அந்த‌ அதிர்வும் சூழ்ந்திருக்கும் ப‌னிக்கால‌நிலையும் அவ‌ர‌து க‌ண்க‌ளை மூடி ம‌ன‌தைப் பார்க்க‌ வைக்கின்ற‌து.

அடுத்து 'Opening' என்ப‌த‌ற்கு 'திற‌ப்பு' என்ப‌தை பாவித்திருக்கின்றேன், ம‌ற்ற‌வ‌ர்க‌ள் 'விரிச‌ல்', 'பிள‌வு' என்ப‌தைப் பாவித்திருக்கின்றார்க‌ள்.  அது ம‌ர‌ண‌த்திற்கு பின் ந‌ம‌க்கு என்ன‌ நிகழ்கிற‌து என்ப‌து தெரியாத‌தால் 'திற‌ப்பு' என‌ப் ப‌ய‌ன்ப‌டுத்தல் பொருத்த‌மாய் இருக்கும் என்ப‌து என் துணிபு.    இந்த‌ அடிப்ப‌டையிலேயே என் த‌மிழாக்க‌ம் இருந்த‌து.  நிச்ச‌ய‌ம் நான் வாசிப்ப‌துபோல‌த்தான் இந்த‌க் க‌விதை இருக்க‌வேண்டுமென்றில்லை. நான் எப்ப‌டி வாசித்தேன், எத‌ன‌டிப்ப‌டையில் த‌மிழாக்கினேன் என்பத‌ற்கே இந்த‌க் குறிப்பு.

இறுதியில் இவ்வாறு இந்த‌க் க‌விதையை விரிவாக‌ வாசிக்க‌ உந்தித்த‌ள்ளிய‌ சுகுமார‌ன் ம‌ற்றும் கார்த்திக்கின் மொழிபெய‌ர்ப்புக்க‌ளுக்கு ந‌ன்றி. இந்த‌க் க‌விதையை நாங்க‌ள் மூன்று பேரும் வாசித்து விள‌ங்கிக்கொண்ட‌து போல‌வ‌ன்றி நீங்க‌ளும் வேறுவ‌கையில் வாசிக்க‌லாம்/வாசித்திருக்க‌லாம்.

இக்க‌விதையை த‌மிழாக்க‌ம் செய்த‌போது, ஒரு சிறுக‌விதை எவ்வ‌ள‌வு விரிவான‌ வாசிப்பைத் த‌ருகின்ற‌து என‌த்தான் விய‌ந்தேன். மேலும் இப்போது இங்கும் ப‌னிக்கால‌மாய் இருப்ப‌தால் இந்த‌க் க‌விதை இன்னும் நெருக்க‌த்தை உண‌ர்த்திற்றோ தெரிய‌வில்லை.


நன் பனிக்காலம்
-தமிழாக்க‌ம்; சுகுமார‌ன்

ஒரு நீல வெளிச்சம்
என் ஆடைகளிலிருந்து கதிர்வீசுகிறது
நன்பனிக் காலம்
பனிக்கட்டிகளின் டாம்போரின்களின்* ஓயாத பேச்சு
என் விழிகளை மூடுகிறேன்

மரித்தவர்கள்
எல்லை தாண்டிக் கடத்தப்படும்
பிளவு இருக்கிறது அங்கே
அங்கே இருக்கிறது ஓர் ஒலியற்ற உலகம்.

* டாம்போரின் - கஞ்சிரா போன்ற தாளவாத்தியம்.
.....

இடைகுளிர்காலம்(Midwinter)
-த‌மிழாக்க‌ம்: கார்த்திக்

என் உடைகளிலிருந்து
நீல நிறம் வெளிச்சம் ஒளிர்கிறது
இடைகுளிர்காலம்

பனிக்கட்டிகளின் டாம்பொரின்* சடசடப்பு

கண்களை மூடிக்கொள்கிறேன்
அங்கொரு நிசப்த உலகுண்டு
இறந்தவர்கள் எல்லைதாண்டி கடத்தப்படும்
ஒரு விரிசல் இருக்கிறது

டாம்பொரின்* கஞ்சிரா போன்றது

.............
ஆங்கில‌த்தில் ரான்ஸ்ரோம‌ரின் க‌விதைக‌ளையே மொழிபெய‌ர்த்த‌  Robert Blyன்   க‌விதைக‌ளையே என‌து த‌மிழாக்க‌த்திற்கு எடுத்துக் கொண்டேன். சில‌வேளைக‌ளில் சுகுமார‌னோ, கார்த்திக்கோ வேறு ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்பிலிருந்து த‌மிழாக்க‌ம் செய்திருக்க‌லாம் என்ப‌தையும் சுட்டிக்காட்ட‌ விரும்புகின்றேன்.
.................

முத‌ல் க‌விதையைத் த‌மிழாக்கிய‌போது வ‌ந்த‌ உற்சாக‌த்தில் இக்க‌விதையையும் த‌மிழாக்க‌ம் செய்தேன்.

April and Silence
 by Tomas Tranströmer

Spring lies abandoned.
A ditch the color of dark violet
moves alongside me
giving no images back.

The only thing that shines
are some yellow flowers.

I am carried inside
my own shadow like a violin
in its black case.

The only thing I want to say
hovers just out of reach
like the family silver
at the pawnbroker’s.

~ from The Winged Energy of Delight, Selected
Translations, Robert Bly (Perennial, 2004)


இள‌வேனிலும் அமைதியும்

வ‌ச‌ந்த‌ம் கைவிட‌ப்ப‌ட்டுக் கிட‌க்கிற‌து.
அட‌ர்ந்த‌ ஊதாக் கால்வாய்
எதையும் பிர‌திப‌லிக்காது
ந‌க‌ர்கிற‌து என்னோடு.

ஒளிர்வ‌ன‌
சில‌ ம‌ஞ்ச‌ட் பூக்க‌ள் ம‌ட்டுமே

க‌றுப்புப் பெட்டிக்குள்
வைக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ய‌லினைப் போல‌
என‌து நிழ‌லுக்குள் நான் காவ‌ப்ப‌டுகின்றேன்.

நான் கூற‌விரும்பும் ஒரேயொரு விட‌ய‌மும்
அட‌குக்க‌டையில் வைத்த‌
வீட்டு வெள்ளி போல‌
அடைய‌முடியாத் தூர‌த்தில் மின்னுகின்ற‌து.

ஹ‌ருக்கி முர‌காமியின் 'இருளின் பின்'

Friday, November 04, 2011

After Dark by Haruki Murakami

1.
ஹ‌ருக்கி முர‌காமியின் 'இருளின் பின்' (After Dark), ஒருநாளின் ந‌ள்ளிர‌விலிருந்து விடியும் வ‌ரை ந‌ட‌க்கும் நிக‌ழ்வுக‌ளைக் கொண்ட‌ ஒரு நாவ‌லாகும். இந்நாவ‌லில் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப‌படும் எல்லாக் க‌தாபாத்திர‌ங்க‌ளும் அவ‌ர்க‌ள் அறிந்தோ அறியாம‌லோ இன்னொரு பாத்திர‌த்தை/நிக‌ழ்வைப் பாதிக்கின்ற‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள். இக்க‌தையில் மேரி, எரி என்கின்ற‌ இரு ச‌கோத‌ரிக‌ளைச் சுற்றியே க‌தை நிக‌ழ்கின்ற‌து. மேரி என்கின்ற‌ 19வ‌ய‌து இளைய‌ ச‌கோத‌ரி, ரோக்கியோவின் க‌ளியாட்ட‌ப் ப‌குதியுள்ள‌ ஓர் உண‌வ‌க‌த்தில் யாருக்காவோ/எத‌ற்காக‌வோ காத்திருப்ப‌துட‌ன் தொட‌ங்கும் க‌தை,  இறுதியில் மேரி அடுத்த‌ நாள் காலை த‌ன் வீட்டுக்குத் திரும்புவ‌துட‌ன் முடிவ‌டைகிற‌து. இந்த‌ இடைவெளியில் அவ‌ர் ச‌ந்திக்கும் ம‌னித‌ர்க‌ள் ம‌ற்றும் நிக‌ழும் ச‌ம்ப‌வ‌ங்க‌ள் மிகுந்த‌ சுவார‌சிய‌மாக‌ இந்நாவ‌லில் விப‌ரிக்க‌ப்ப‌டுகின்ற‌து.

மேரிக்கு எரி என்கின்ற‌ மூத்த ச‌கோத‌ரி ஒருவ‌ர் இருக்கின்றார். அவ‌ரைப் போன்று தான் மிகுந்த‌ அழகில்லை என்கின்ற‌ எண்ண‌மும் மேரிக்கு இருக்கின்ற‌து. த‌ம‌க்கை வ‌ச‌தியான‌ ஜ‌ப்பானிய‌ர்க‌ள் ப‌டிக்கும் க‌ல்லூரிக்குக் க‌ற்க‌ப்போக‌, அங்கே க‌ற்ப‌து பிடிக்காத‌ மேரி சீன‌க்குடிவ‌ர‌வாள‌ர்க‌ள் நிர‌ம்பியிருக்கும் ப‌குதியிலுள்ள‌ ஒரு சீனக்க‌ல்லூரிக்குப் ப‌டிக்க‌ப் போகின்றார்.  அழ‌கான‌ எரி த‌ன் இள‌ம்வ‌ய‌திலேயே ப‌தின்ம‌ர்க‌ளுக்கான‌ ச‌ஞ்சிகைக‌ளில் மொட‌லிங் செய்ப‌வ‌ராக‌, ரிய‌லிட்டி ரீவிக்க‌ளின் நிக‌ழ்ச்சிக‌ளில் ப‌ங்கேற்ப‌வ‌ராக‌ புக‌ழ்பெற்று விடுகின்றார். சீன‌ப் ப‌ள்ளிக்குப் போகும் மேரி சீன‌மொழியில் பேசுவ‌தில் வ‌ல்ல‌வ‌ராய் இருப்ப‌துட‌ன், த‌ன் த‌ம‌க்கைக்கு நேர் எதிரான‌ குண‌ங்க‌ளுடைய‌வ‌ராக‌ இருக்கிறார்.

த‌ன் வீட்டை விட்டு ஓடிவ‌ந்திருக்கின்றாரா அல்ல‌து யாரையாவ‌து ச‌ந்திக்க‌ வ‌ந்திருக்கின்றாரா என்கின்ற‌ எவ்வித‌த் தெளிவும் இல்லாது, க‌ஃபேயில் ஆறுத‌லாக‌ புத்த‌க‌ம் ஒன்றை வாசித்துக்கொண்டிருக்கும் ஒருவ‌ராக‌ மேரி, ஹ‌ருக்கி முர‌காமியால் வாச‌க‌ர்க‌ளுக்கு அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்றார். அங்கே த‌ற்செய‌லாய் ஓரு இளைஞ‌னை மேரி ச‌ந்திக்கின்றார். அவ‌ன் மேரியின் ச‌கோத‌ரியான‌ எரியை அறிந்த‌வ‌ன். மேலும் மேரியையும், எரியோடு சேர்த்து சில‌வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் நேர‌டியாக‌ச் ச‌ந்தித்துமிருக்கின்றான். ஆனால் மேரிக்கு இந்த‌ இளைஞனை அவ்வ‌ள‌வு ஞாப‌க‌ம் இல்லை. இளைஞ‌ன் மேரியோடு பேசுவ‌தில் ஆவ‌லாக‌ இருப்ப‌வ‌னாயிருப்பினும் மேரிக்கு அவ‌னோடு அள‌வ‌ளாவுவ‌தில் அவ்வ‌ள‌வு விருப்ப‌மில்லை. இளைஞ‌ன், எரி இப்போது எப்ப‌டி இருக்கின்றார் என‌க் கேட்கிறார். மேரி, தன் ச‌கோத‌ரி நீண்ட உற‌க்க‌த்தில் இர‌ண்டு மாத‌ங்க‌ளாய் இருக்கின்றார் என்கின்றார்.  இதைக் கேட்கும் அந்த‌ இளைஞ‌னுக்கு ம‌ட்டுமில்லை, வாசிக்கும் ந‌ம‌க்கும் எப்ப‌டி ஒருவ‌ர் இர‌ண்டு மாத‌ங்க‌ளாய் -கோமாவும் இல்லாம‌ல்- நீண்ட‌ உற‌க்க‌த்திலிருக்க‌ முடியும் என்ற‌ விய‌ப்பு ஏற்ப‌டுகிற‌து.

இப்போது க‌தை மூத்த‌ ச‌கோத‌ரியான‌ எரியை நோக்கித் திரும்புகின்ற‌து. அவ‌ர் மேரி கூறிய‌தைப் போல‌வே நீண்ட‌ தூக்க‌த்திலேயே இருக்கின்றார். வாசிக்கும் எம்மை ந‌க‌ரும் விடீயோக் க‌ம‌ராவைப் போல‌ எரியை அவ‌தானிக்கும்ப‌டி முர‌காமி அழைத்துச் செல்கின்றார். எரியுட‌ன் அவ‌ரைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு ம‌னித‌னும் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்றான். அவ‌னுக்கு வாசிக்கும் எங்க‌ள் வ‌ச‌திக்காய் 'முக‌மில்லாத‌ ம‌னித‌ன்' (The man without face ) என‌ ஒரு பெய‌ரை முர‌காமி த‌ருகின்றார்.  ஏன் எரி இப்ப‌டி நீண்ட‌ தூக‌த்தில் இருக்கின்றார்? யார் அந்த‌ 'முக‌மில்லாத‌ ம‌னித‌ன்'?  நாவ‌ல் முடியும்வ‌ரை அவை சுவார‌சிய‌மான‌ புதிர்க‌ளாய் அவிழ்க்க‌ப்ப‌டாம‌ல் இருக்கின்ற‌ன‌.

இப்போது மீண்டும் க‌தை, க‌ஃபேயிலிருக்கும் மேரியை நோக்கித் திரும்ப‌ தொட‌ங்குகின்ற‌து.  வ‌ந்த‌ இளைஞ‌ன், தான் த‌ன் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் இந்ந‌ள்ளிர‌வு முழுக்க‌ இசைநிக‌ழ்வுக்காய் ப‌யிற்சி எடுக்க‌ப்போகின்றேன் என‌வும் பயிற்சியின்போது இன்னொரு இடைவெளி எடுக்கும்போது மேரி க‌ஃபேயிலிருந்தால் வ‌ந்து தான் ச‌ந்திப்ப‌தாக‌வும் கூறி விடைபெறுகின்றான். நேர‌ம் ந‌ள்ளிரவைத் தாண்டியும் விட்ட‌து. ந‌க‌ரிலிருந்து புற‌ப்ப‌டும் க‌டைசி ரெயினும் போய்விட்ட‌து. இனி விடிகாலை வ‌ரை மேரி த‌ன் வீட்டுக்குத் திரும்ப‌முடியாது என்ப‌தும் அந்த‌ இளைஞ‌னுக்குத் தெரியும்.

மேரி இப்போது ஏற்க‌ன‌வே தான் வாசித்துக்கொண்டிருக்கும் புத்த‌க‌த்தில் ஆழ்ந்துவிடுகின்றார். அப்போது அசாதார‌ண‌ உய‌ர‌மும், எடையும் கொண்ட‌ ஒரு பெண்ம‌ணி மேரியைத் தேடி அந்த‌க் க‌ஃபேயிற்கு வ‌ருகின்றார். மேரியிட‌ம், தான் ஒரு சிக்க‌லில் மாட்டிக்கொண்டிருக்கின்றேன், உன‌க்குச் சீன‌மொழி பேச‌முடியுமென‌ உன்னை ஏற்க‌ன‌வே ச‌ந்தித்துச் சென்ற‌ இளைஞ‌ன் கூறியிருக்கின்றான். உன்னால் என‌க்கொரு மொழிபெய‌ர்ப்பாள‌ராக‌ இருந்து உத‌வ‌முடியுமா? என‌க் கேட்கின்றார். இத‌ற்கு முன் அறிமுக‌மேயில்லாத‌ பெண்ணோடு மொழிபெய‌ர்ப்பாள‌ராக‌ச் செல்வ‌தா அல்ல‌து வேண்டாமா என‌ மேரி முத‌லில் யோசித்தாலும் ஹ‌ரோக்கி என்கின்ற‌ அப்பெண்ம‌ணியோடு அவ‌ர் நிர்வாகிக்கும் 'ல‌வ்' ஹொட்ட‌லுக்குச் செல்கின்றார்.

போகும் வ‌ழியில் ஹ‌ரோக்கி தான் ஒரு ம‌ல்யுத்த‌ வீராங்க‌னையாக‌ (Wrestler)  இருந்த‌தாக‌வும் போட்டிக்களுக்காய்ப் ப‌ல‌ நாடுக‌ளுக்குச் சென்ற‌தாக‌வும், ஒரு நிக‌ழவில் த‌ன் முள்ள‌ந்த‌ண்டு பாதிக்க‌ப்ப‌ட்ட‌திலிருந்து போட்டிக‌ளில் தொட‌ர்ந்து ப‌ங்குபெற‌ முடியாம‌ல் போய்விட்ட‌து என்கின்றார். இப்போது வ‌ருமான‌ம் ஏதுமில்லாம‌ல், இந்த‌ ல‌வ் ஹொட்ட‌லை நிர்வகிப்ப‌வ‌ராக‌ வேலை செய்கின்றார் என‌வும் கூறுகின்றார் ஹ‌ரோக்கி. மேலும், 'இந்ந‌க‌ரில் ந‌ள்ளிர‌வில் என்ன‌ செய்துகொண்டிருக்கின்றாய்?' என‌ மேரியிட‌மும் கேட்கின்றார். மேரி மெள‌ன‌மாய் இருப்ப‌தைப் பார்த்து, 'உன்னைப் போன்றே பதின்ம‌ங்க‌ளைத் தாண்டியே நானும் வ‌ந்திருக்கின்றேன். உன்னைப் போன்ற‌ பெண்க‌ள் இக்க‌ளியாட்ட‌ப் பிர‌தேச‌ங்க‌ளுக்கு ந‌ள்ளிர‌வுக‌ளில் வ‌ர‌க்கூடாது. எதுவுமே ந‌ட‌க்க‌லாம். ப‌க‌லில் பார்க்கும் இட‌ம் போல‌ இது இர‌வில் இருப்ப‌தில்லை. இர‌வில் இத்த‌கைய‌ இட‌ங்க‌ள் இன்னொரு முக‌மூடியை அணிந்துகொள்கின்ற‌ன‌' என்கிறார் ஹ‌ரோக்கி. மேலும் தான் நிர்வாகிக்கும் ல‌வ் ஹோட்ட‌ல்க‌ளில் அநேக‌மாய் இர‌வைக் க‌ழிக்க‌ இணைக‌ளும், பாலிய‌ல் தொழிலாள‌ர்க‌ளுமே வ‌ருவார்க‌ள் என‌வும் கூறுகின்றார்.

2.
ல‌வ் ஹொட்ட‌லின் நான்காம் மாடியில், சீன‌மொழி ம‌ட்டும் பேச‌க்கூடிய‌ பெண் அடிவாங்கி இர‌த்த‌க் காய‌ங்க‌ளோடு மூலையில் ஒடுங்கிக்கிட‌க்கிறார்.  மேரி, தான் பொலிஸின் ஆளில்லை, த‌ன்னை ந‌ம்பிக் க‌தைக்க‌லாம் என்கின்ற‌போதும் முத‌லில் அந்த‌ச் சீன‌ப் பெண் த‌ய‌ங்குகின்றார். இறுதியில் அந்த‌ப்பெண் தான் இந்த‌ நிலைக்கு வ‌ந்த‌ நிலைமை ப‌ற்றிக் கூறுகின்றார். பாலிய‌ல் தொழில் செய்வ‌த‌ற்கென‌ ஜ‌ப்பானில் இய‌ங்கும் ஒரு சீன‌க்குழுவால் அவ‌ர் ஜ‌ப்பானுக்கு க‌ள்ள‌மாக‌ வ‌ர‌வ‌ழைக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார். அந்த‌ப் பெண்ணுக்கும் மேரியின் வ‌ய‌தே இருப்ப‌தால் மேரிக்கும் அவ‌ர் மீது ஒருவித‌ப் ப‌ரிவு வ‌ருகிற‌து.

அன்று வாடிக்கையாள‌ரோடு வ‌ந்த‌ இப்பெண்ணுக்கு மாதாந்த‌ உதிர‌ப்பெருக்கு ஏற்ப‌ட்டுவிட‌, வாடிக்கையாள‌ ஆண் கோப‌த்தில் இவ‌ரைத் தாக்கிவிட்டு இவ‌ர‌து உடைக‌ள் உட்ப‌ட‌ அனைத்து உடைமைக‌ளையும் எடுத்துக்கொண்டு போயிருக்கின்றார். உடைகளை எடுத்துச் சென்ற‌துகூட‌ -இந்த‌ வ‌ன்முறையை- உட‌னேயே வேறு யாருக்குத் தெரிவித்து எவ‌ரும் வ‌ந்துவிட‌க்கூடாது என்கின்ற‌ முற்பாதுகாப்பிற்காக‌வே ஆகும். ஆடைக‌ளில்லாதுவிடின் உட‌னேயே வெளியே ஓடிப் போய் இப்பெண் எவ‌ரிட‌மும் உத‌வி கேட்க‌முடியாத‌வ‌ல்ல‌வா?

இறுதியில் அப்பெண்ணுக்கு மாற்றுடை கொடுத்து, அவ‌ர் யாருடைய‌ க‌ட்டுப்பாட்டில் இருக்கின்றாரோ அந்த‌ச் சீனக்குழுவுக்கும் செய்தி கொடுக்க‌ப்ப‌ட்டு அப்பெண்ணை அந்த‌க்குழு பொறுப்பெடுத்துக் கொள்கின்ற‌து. த‌ன‌து ஹொட்ட‌ல் அறைக்கு உரிய‌ ப‌ண‌ம் த‌ராத‌ற்கு ம‌ட்டுமின்றி, ஒரு பெண்ணின் மீது மூர்க்க‌த்த‌ன‌மாய் தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌த‌ற்குமாய் அந்த‌ வாடிக்கையாள‌ர் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌வேண்டுமென‌ வீறாப்பில், ஹ‌ரோக்கி பாதுகாப்புக் க‌ம‌ராக்க‌ளை பின்னோக்கிச் சுழ‌ற்றி அந்த‌ வாடிக்கையாள‌ரைக் க‌ண்டுபிடித்து ப‌ட‌த்தைப் பிர‌தி எடுத்தும் கொள்கின்றார். மேலும் சீன‌க்குழுவிற்கும் தொலைபேசி அழைத்து அந்த‌ வாடிக்கையாள‌ர் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌வேண்டுமென்ப‌த‌ற்காய் அந்த‌ப் புகைப்ப‌ட‌த்தையும் அவ‌ர்க‌ளிட‌ம் ஹ‌ரோக்கி கொடுத்துவிடுகின்றார்.

இத‌ற்கிடையில் மேரியைக் கொண்டுபோய் க‌ஃபேயில் மீண்டும் விட்டுவிடும் ஹ‌ரோக்கி, இர‌வில் த‌ங்குவ‌த‌ற்கு ஓரிட‌ம் வேண்டுமென்றால் த‌ன் ஹொட்ட‌லுக்கு எந்த‌ நேர‌மும் வ‌ர‌லாம் என‌ அழைப்பையும் விட்டுச் செல்கின்றார். மீண்டும் தேநீரும்,பாட‌லும், புத்த‌க‌ம் வாசிப்ப‌துமாய் மேரி இருக்க‌, இசைப் ப‌யிற்சிக்குப் பின்பான‌ இடைவேளையில் முத‌லில் மேரியைச் ச‌ந்திக்க‌ அந்த‌ இளைஞ‌ன் வ‌ருகின்றான். அவ‌ன், தான் இனி இசைக்குழுவை விட்டு முற்றுமுழுதாக‌ வில‌கி, விரைவில் ச‌ட்ட‌ம் ப‌டிக்க‌ப் போவ‌தாய்க் கூறுகின்றான். அதைத் தேர்ந்தெடுத்த‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ளையும், த‌ன் எதிர்கால‌க் க‌ன‌வுக‌ளையும் மேரியுட‌ன் ப‌கிர்கிறான். மேரி முத‌ற் ச‌ந்திப்பைப் போல‌வ‌ன்றி, இப்போது அவ‌னோடு அளவ‌ளாவ‌த் தொட‌ங்குகின்றார். அப்போதுதான், அவ‌ன் மேரியின் ச‌கோத‌ரியான‌ எரி ஒருநாள் த‌ன்னோடு சில‌ த‌னிப்ப‌ட்ட‌ விட‌ய‌ங்க‌ளைப் ப‌கிர்ந்தாள் என்கின்ற‌ விட‌ய‌த்தைக் கூறுகின்றான். அத்துட‌ன் அவ‌ள் நிறைய‌ மாத்திரைக‌ளையும் எடுத்துக்கொண்டிருக்கின்றாள் என்ப‌தையும் தெரிவிக்கின்றான். மேரிக்கு த‌ன் த‌ம‌க்கை எளிதில் வெளிவ‌ர‌முடியாத‌ பெரும் சிக்க‌லில் மாட்டியிருக்கின்றாள் என்ப‌து விள‌ங்குகின்ற‌து.

3.
க‌தை இப்போது சீன‌ப்பெண்ணை மூர்க்க‌மாய்த் தாக்கிய‌ வாடிக்கையாள‌னைச் சுற்றி ந‌கர‌த்தொட‌ங்குகின்ற‌து. அவ‌னொரு மென்பொருள் நிறுவ‌ன‌த்தில் வேலை செய்கின்றான். அதிக‌மாய் இர‌வில் த‌ன் வேலைத்த‌ல‌த்தில் த‌ங்கி நெடுநேர‌ம் வேலை செய்யும் ஒருவ‌னாக‌ இருக்கின்றான். அன்றும் த‌ன‌க்குக் கிடைத்த‌ இடைவெளியில்தான் சீன‌ப்பெண்ணைக் கூட்டிக்கொண்டு ல‌வ் ஹொட்ட‌லுக்குப் போயிருக்கின்றான். மீண்டும் த‌ன் வேலைத்த‌ள‌த்திற்கு வ‌ரும் அவ‌ன் நிதான‌மாக‌ வேலையை முடித்து, யோகா செய்து ச‌வ‌ர‌ஞ்செய்து வீட்டுக்குப் புற‌ப்ப‌டுகின்றான். போகும்வ‌ழியில் ம‌னைவி பால் வாங்கி வ‌ர‌ச் சொன்ன‌து நினைவுக்கு வ‌ருகின்ற‌து. பால் வாங்கும் க‌டையின் முன்னாலிருக்கும் குப்பை போடும் இட‌த்தில், தான் அப‌க‌ரித்து வ‌ந்த‌ சீன‌ப்பெண்ணின் ஆடைக‌ள் தோற்பை உள்ளிட்ட‌ எல்லாவ‌ற்றையும் வேறொரு பையினுள் பாதுகாப்பாய்ப் போட்டு வைத்துவிடுகின்றான். ஆனால் அந்த‌ப் பெண்ணின் கைத்தொலைபேசியை ம‌ட்டும் வேண்டுமென்றே க‌டையிலுள்ள‌ விற்ப‌னை பொருட்க‌ளிடையே ம‌றைத்து வைத்தும் விடுகின்றான்.

மேரியோடு க‌தைத்துக் கொண்டிருந்த‌ இளைஞ‌ன் மீண்டும் இசைப்ப‌யிற்சி செய்வ‌த‌ற்காய்த் திரும்புகின்றான். மேரியை காலைச் சாப்பாட்டுக்காய்க் கூட்டிக்கொண்டு போக‌ விரும்புவ‌தாய்க் கூறிவிட்டுப் போகின்றான். அவ‌னும் சில‌ பொருட்க‌ளை வாங்க‌ வேண்டி க‌டையொன்றுக்குப் போக, அந்த‌க்க‌டையில் ம‌றைத்து வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ கைத்தொலைபேசி ஒலிக்க‌, யாரோ த‌வ‌றவிட்டுச் சென்றுவிட்டார்க‌ள் போலும், போனைத் தேடுகின்றார்க‌ள் போலும் என‌ தொலைபேசி அழைப்பை எடுக்கின்றான். எதிர்முனையில், 'நீ என்ன‌ செய்துவிட்டுப் போனாய் என்று எங்க‌ளுக்குத் தெரியும், இத‌ற்கான‌ விலையை நீ ஒருநாள் கொடுப்பாய்' என‌ அச்சுறுத்தும் குர‌ல் கேட்கின்ற‌து. இந்த‌ இளைஞ‌னுக்கு விய‌ப்பாயிருக்கிற‌து. த‌ன் நிலையை விள‌ங்க‌ப்ப‌டுத்த‌வும் அவ‌னுக்கு எதிர்முனையில் பேசிய‌வ‌ன் ச‌ந்த‌ர்ப்ப‌ம் கொடுக்க‌வில்லை. ப‌ய‌த்தோடும் ப‌த‌ற்ற‌த்தோடும் அந்த‌க்க‌டையை விட்டு இந்த‌ இளைஞ‌ன் ந‌க‌ர்ந்து செல்கின்றான்.

...இவ்வாறாக‌ நாவ‌ல் இன்னும் நீளும். ஹ‌ருக்கி முர‌காமியின் நாவ‌ல்க‌ளில் வ‌ரும் முக்கிய‌ ஆண்பாத்திர‌ங்க‌ள் அநேகமாய் த‌னிமைப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாய் அல்ல‌து த‌னிமையை விரும்புவ‌ர்க‌ளாய் இருப்ப‌வ‌ர்க‌ளாய் ப‌டைக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தைப் போல‌ இதில் வ‌ரும் இளைஞ‌னும் இருக்கின்றான். முக்கிய‌மாய் பெண்க‌ள் மீது ஈர்ப்பிருப்பவ‌ர்க‌ளாய் இருப்பினும் அவ‌ர்க‌ளை க‌வ‌ர‌முடியாத் தாழ்வுண‌ர்ச்சியுட‌ன் இருப்ப‌வ‌ர்க‌ளாய் முர‌காமியின் அநேக ஆண்பாத்திர‌ங்க‌ள் ப‌டைக்க‌ப்ப‌ட்டிருக்கும். இந்நாவ‌ல் ந‌ள்ளிர‌வில் தொட‌ங்கி விடிகாலையில் முடியும் குறுகிய‌ கால‌ப்ப‌குதிக்குரிய‌ க‌தை என்றாலும் ஹ‌ருக்கி முர‌காமி த‌ன் எழுத்தால் எம்மையும் அந்த‌ச் சூழ‌லுக்குள் ஒரு பார்வையாள‌ரைப் போல‌ ஆக்கிவிடுகின்றார்.

மேரி ஒவ்வொரு பாத்திர‌த்தையோ, ச‌ம்ப‌வ‌ங்க‌ளையோ ச‌ந்திக்கும்போது ந‌ம‌க்கு அடுத்து என்ன‌ ந‌ட‌க்க‌ப்போகின்ற‌தோ என்கின்ற‌ ப‌த‌ற்ற‌ம் வ‌ந்துவிடுகின்ற‌து. அதேபோல் மேரியின் ச‌கோத‌ரியான‌ எரி ப‌ற்றி விப‌ரிக்கப்ப‌டும்ப‌குதிக‌ள் முழுதுமே ஒருவித‌ மாய‌ ய‌தார்த்த‌த்தில் எழுத‌ப்ப‌ட்டிருக்கும். மேரி, எரி த‌ங்க‌ள் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கின்றார் என‌த்தான் கூறுகின்றார். அப்ப‌டியாயின் அவ‌ர் தூங்குவ‌தைப் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த‌ 'முக‌ம‌ற்ற‌ ம‌னித‌ன்' யார்? அதும‌ட்டுமில்லாது ஒரு அத்தியாய‌த்தில், தூக்க‌த்திலிருந்து ச‌ற்று விழிக்கும் எரி, நில‌த்திலிருக்கும் ஒரு பென‌சிலை எடுக்கின்றார். பிற‌கு பார்த்தால் அதே பென்சிலே சீன‌ப்பெண்ணைத் தாக்கிய‌ வாடிக்கையாள‌ன் வேலை செய்யும் மேசையில் இருப்ப‌தாய்க் கூற‌ப்ப‌ட்டிருக்கும். இவ்வாறாக‌ எரியின் உற‌க்க‌மே ப‌ல்வேறு வித‌மான‌ விசித்திர‌ப்புதிர்க‌ளால் நெய்ய‌ப்ப‌ட்டிருக்கும். இருநூறு ப‌க்க‌ங்க‌ளுக்கும் குறைவான‌ நாவ‌ல் என்றாலும் வாசிப்புச் சுவார‌சிய‌த்திற்கு குறைவே இல்லாத‌து.

ஹ‌ருக்கி முர‌காமிக்குப் பிடித்த‌மான‌ பூனைக‌ள் இந்நாவ‌லிலும் முடிவ‌த‌ற்கு சில‌ அத்தியாய‌ங்க‌ள் முன் பூங்காவில் தோன்றுகின்ற‌ன‌. மேரியும், அந்த‌ இளைஞனும் ரூனா மீனை அப்பூனைகளுக்கு சாப்பிட‌க் கொடுத்து அவைக‌ளை வ‌ருடிய‌படி இருக்கின்ற‌ன‌ர். ஒருவ‌கையில் பார்த்தால் இந்த‌ப் பூனைக‌ளைப் போல் நாமும் வாழ்வில் யாருடைய‌தோ அர‌வ‌ணைப்புக்காக‌ காத்திருக்க‌வோ அல்ல‌து அலைக்க‌ழிய‌வோ வேண்டியிருக்கிற‌து அல்ல‌வா?
............

Photos: Thanks to Google Images (search words: after dark, haruki murakami)

ஓர் அநாம‌தேய‌த் தீவு by Yi Mun-Yol

Thursday, October 06, 2011

-வாசிப்பு-

கொரிய‌ எழுத்தாள‌ரான‌ ஜி முன்-யோல் (Yi Mun-Yol) எழுதிய‌ 'ஓர் அநாம‌தேய‌த் தீவு' (An Anonymous Island) சிறுக‌தை அண்மையில் நியூயோர்க்க‌ர் இத‌ழில் வெளிவ‌ந்திருக்கின்ற‌து. இதுவே நியூயோர்க்க‌ரில் வெளிவ‌ந்த‌ முத‌லாவ‌து கொரிய‌க் க‌தை என்கிறார்க‌ள்.  ஜி முன்-யோல் 1948ம் ஆண்டு சியோலில் பிற‌ந்த‌வ‌ர்.

'ஓர் அநாம‌தேய‌த் தீவு' க‌தை, ஆணொருவ‌ர் தொலைக்காட்சியைப் பார்த்து இன்றைய‌ இளைஞ‌ர்க‌ள் எல்லாம் கெட்டுப் போய்விட்டார்க‌ள் என்று அங்க‌லாய்ப்ப‌துட‌ன் தொட‌ங்குகின்ற‌து. கிள‌ப்பில் ந‌ட‌ன‌மாடும் இளைஞ‌ர்க‌ளைக் கூட‌,  'ந‌ட‌ன‌மாடுப‌வ‌ர்க‌ள்' என்று கூறாது தொலைக்காட்சி 'உட‌ல்க‌ள் உர‌சுப‌வ‌ர்க‌ள்' என‌ப் புதுப்பெய‌ர் சூட்டி விம‌ர்சிக்கின்ற‌து. ஆணும்((க‌ண‌வ‌ர்), தொலைக்காட்சியும் இப்பெண்ணுக்கு ப‌ழைய‌ நினைவுக‌ள் சில‌வ‌ற்றைக் கிள‌றிவிடுகின்ற‌ன‌.

சில‌ கால‌த்திற்கு முன், இப்பெண் ஆசிரிய‌த்தொழில் பார்ப்ப‌த‌ற்காய் ந‌க‌ர‌த்தை விட்டொதுங்கிய‌ ஒரு தொலைதூர‌ ம‌லைக்கிராம‌த்திற்குச் செல்கின்றார். அக்கிராம‌த்திற்குச் சென்றிற‌ங்கும்போது ஒரு க‌டைக்கார‌ர், அழுக்கான‌ ஆடையுட‌னும் தாறுமாறான‌ த‌லைம‌யிருட‌னும் இருக்கும் ஒருவ‌னைத் திட்டிக் கொண்டேயிருக்கின்றார். அவ‌ன் அதைப் ப‌ற்றிக் க‌வ‌லைப்ப‌டாது எதுவும் பேசாது த‌ன்பாட்டில் இருக்கின்றான்.  இப்பெண், தான் இங்குள்ள‌ பாட‌சாலைக்கு புதிய‌ ஆசிரிய‌ராக‌ வ‌ந்திருக்கின்றேன் என்கின்றார். கிராம‌ம் ஓர் ஒதுக்குப்புற‌த்தில் இருக்கின்ற‌தென்றால் ம‌றுப‌க்க‌ம் பாட‌சாலையும் இன்னும் மோச‌மான‌ நிலையில் இருக்கிற‌து. ஆசிரிய‌த் தொழிலில் ஒன்றிப்போகும் இப்பெண், அந்த‌த் த‌றுத‌லை இளைஞ‌ன் எவ்வித‌ வேலையும் செய்யாம‌ல், த‌ங்குவ‌த‌ற்கு ஓர் ஒழுங்கான‌ வீடும் இல்லாம‌லும் வாழ்ந்து கொண்டிருப்ப‌தைக் காண்கிறார். ஆனால் அவ‌னுக்கு மூன்று நேர‌மும் சாப்பாடும், த‌ங்கிப் ப‌டுப்ப‌த‌ற்கு இட‌ங்க‌ளும் அந்த‌ ஊரில் கிடைத்துக்கொண்டிருப்ப‌துதான் இவ‌ருக்கு இன்னும் ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கின்ற‌து.  எந்த‌ வீட்டுக்குச் சாப்பாடு வேண்டும் என்று போனாலும் அங்கிருக்கும் பெண்க‌ள் அவ‌னுக்கு ம‌ன‌முவ‌ந்து உண‌வு ப‌ரிமாறுகின்றார்க‌ள். த‌டை எதுவும் கூறாம‌ல் ஆண்க‌ளும் அவ‌னைத் த‌ங்க‌ள் வீட்டுக்குள் அனும‌திக்கின்ற‌ன‌ர்.

நாட்க‌ள் செல்ல‌ச் செல்ல‌ ஓர் உண்மையை இந்த‌ ஆசிரிய‌ர் க‌ண்டுகொள்கின்றார். இக்கிராம‌ம் முழுதும் ஒரேயொரு இன‌க்குழு (Clan) ம‌ட்டுமே இருக்கின்ற‌து. ஆக‌ எல்லோருக்கும் எல்லோருமே உற‌வின‌ர்க‌ளாக‌வோ, தெரிந்த‌வ‌ர்க‌ளாக‌வோ இருக்கின்றார்க‌ள். இந்த‌ இளைஞ‌ன் ம‌ட்டுமே வெளியில் இருந்து வ‌ந்த‌வ‌னாக‌ இருக்கின்றான். அப்ப‌டியெனில் எப்ப‌டி இவனை இவ‌ர்க‌ள் ஏற்றுக்கொண்டார்க‌ள்? எத‌ற்காய் ம‌ன‌ங்கோணாம‌ல் மூன்று வேளையும் உண‌வு ப‌ரிமாறுகின்றார்க‌ள்?

இந்த‌ இளைஞ‌னுக்கும் அந்த‌ ஊரில் இருக்கும் அநேக‌ பெண்க‌ளுக்கும் இடையில் இர‌க‌சிய‌(?) உற‌வு இருக்கின்ற‌து.  சில‌ பெண்க‌ளுக்குப் பிற‌க்கும் குழ‌ந்தைக‌ள் கூட‌ அவ‌னின் சாய‌லுட‌ன் இருப்ப‌தாய் ஊர்ப்பெண்க‌ள் த‌ங்க‌ளுக்குள் கிசுகிசுத்தும் கொள்கின்றார்க‌ள். அவ‌னிட‌ம் எழுத‌ப்ப‌டாத‌ ஒரு கொள்கை இருக்கின்ற‌து. அநேக‌மாய் ம‌த்திய‌ வ‌ய‌தில் இருக்கும் பெண்க‌ளோடே உற‌வு கொள்கின்ற‌வ‌னாக‌வும், ஒரு முறை உற‌வு கொண்ட‌ பெண்க‌ளிட‌ம் மீண்டும் சென்று அவ‌ர்க‌ளை சிக்க‌லில் மாட்டிவிடாம‌லும் இருக்கின்றான். இப்போது இந்த‌ ஆசிரிய‌ருக்கு அவ‌ன் இங்கே இருப்ப‌த‌ற்கான‌ அரைவாசிக்கார‌ண‌ம் புரிந்துவிடுகின்ற‌து; பெண்க‌ள் எத‌ற்காக‌ அவ‌னைத் த‌ங்க‌ளுக்கு அருகாமையில் வைத்துக் கொள்ள‌ விரும்புகிறார்க‌ள் என்ப‌தை.  ஆனால் அவ‌ன் இவ்வாறு த‌ம் பெண்க‌ளுட‌ன் உற‌வு கொள்கின்றான் என்று தெரிந்தும் ஆண்க‌ள் ஏன் அவ‌னை அடித்துத் துர‌த்தாம‌ல் த‌ங்க‌ள் கிராம‌த்திற்குள் வைத்திருக்கின்றார்க‌ள் என்ப‌தைத்தான் இந்த‌ ஆசிரிய‌ரால் புரிந்துகொள்ள‌ முடியாதிருக்கின்ற‌து.

இந்த‌ ஆசிரிய‌ர் ப‌டிக்கும் கால‌த்திலேயே ஒருவ‌ரைக் காத‌லிக்கின்றார். திரும‌ண‌ நிச்ச‌யார்த்த‌ம் முடிந்திருக்கும் பொழுதில் காத‌ல‌னுக்கு விய‌ட்னாமில் யுத்த‌ம் செய்வ‌த‌ற்கான‌ அழைப்பு வ‌ருகின்ற‌து. ஒருமுறை இவ‌ரின் காத‌லன் விடுமுறையில் இவ‌ரைப் பார்க்க‌ இந்த‌ ம‌லைக்கிராம‌த்திற்கு வ‌ருவ‌தாய்க் க‌டித‌ம் எழுதுகின்றார். காத‌ல‌ன் வ‌ந்திற‌ங்க‌வேண்டிய‌ அந்த‌க் கிராம‌த்திற்கான‌ க‌டைசிப் பேரூந்தும் வ‌ந்து போய்விட்ட‌து. இந்த‌ப் பெண் ப‌ஸ் நிலைய‌த்தில் காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துட‌ன் த‌ன் வீட்டுக்குத் திரும்புகின்றார். ம‌ழை பொழிய‌த்தொட‌ங்குகின்ற‌து.  கிடைக்காத‌ தாப‌ம் ம‌ன‌திற்குள் பெருக‌த் தொட‌ங்குகிற‌து.

ஓரிட‌த்தில் ம‌ழைக்காய் ஒதுங்கும்போது ஓருட‌ல் த‌ன்னை இழுத்து அணைப்ப‌தைக் காண்கிறார். ஆசிரிய‌ர் த‌ன் எதிர்ப்பைக் காட்டுகின்றார். யாரென‌ முக‌த்தைப் பார்க்கும்போது அது அந்த‌ த‌றுத‌லை இளைஞனாக‌ இருப்ப‌தைக் காண்கின்றார். 'நீ என்னைத் துர‌த்தாதே, உன‌து உட‌ல் இன்னும் கொதித்துக் கொண்டிருப்ப‌தை என்னால் உண‌ர‌முடிகின்ற‌து. நீ யாரையோ எதிர்ப்பார்த்து அவ‌ர் வ‌ர‌வில்லையென்ற‌ ஏமாற்ற‌த்துட‌ன் இருப்ப‌தையும் நான் அறிவேன்' என்கின்றான். இவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் இடையில் உட‌லுற‌வு நிக‌ழ்கிற‌து. இப்போது நினைத்துப் பார்த்தால், 'அந்த‌ முய‌க்க‌ம் நினைவில் நிற்க‌க்கூடிய‌ ம‌கிழ்ச்சி த‌ரும் விட‌ய‌மாக‌ இல்லாவிட்டாலும், அவ‌ன் என்னை வ‌ற்புறுத்திப் புண‌ர‌வில்லை; அந்த‌ நேர‌த்தில் அது என‌க்கும் தேவையாக‌ இருந்த‌து' என‌ இப்பெண் நினைத்துக் கொள்கின்றார். இந்த‌ உற‌வு நிக‌ழ்ந்து முடிந்த‌பின் இப்பெண் இவன் த‌ன் உற‌வைப் ப‌ற்றிக் கிராம‌த்த‌வ‌ர்க‌ளிட‌ம் கூறிவிடுவானோ என்று அஞ்சுகின்றார். அவ‌ன் வேறு எவ‌ருக்கும் இவ‌ர்களின் உற‌வைச் சொல்லாத‌தைப் போல‌, பிற‌கு ஒருமுறை கூட‌ இந்த‌ ஆசிரிய‌ரைத் தேடி மீண்டும் உற‌வுக்காய் வ‌ர‌வும் இல்லை.

இப்போது இந்த‌ ஆசிரிய‌ருக்கு, யார் எது கேட்டாலும் அவ‌ன் வாய் திற‌ந்து பேசாது ம‌வுன‌மாய் இருப்ப‌த‌ன் கார‌ண‌ம் விள‌ங்குகின்ற‌து. அவ‌ன் த‌ன‌து இர‌க‌சிய‌ங்க‌ளை யாருக்கும் சொல்ல‌ விரும்புப‌வ‌னும் இல்லை, யாரையும் காட்டிக் கொடுப்ப‌வ‌னும் இல்லை. இறுதியில் இந்த‌ இளைஞ‌னை அந்த‌ ஊர் ஆண்க‌ள் ஏன் ச‌கித்துக் கொள்கின்றார்க‌ள் என்ப‌தற்கான‌ கார‌ண‌மும் தெரிகிற‌து. இந்த‌க் கிராம‌ம் முழுதும் ஒரேயொரு இன‌க்குழு  ம‌ட்டும் இருப்ப‌தால், ஒரு பெண் வேறு ஆணைத் தேடிப் போனால் அது உட‌னே கிராம‌த்திற்குத் தெரிந்துவிடும்; தேவையில்லாத‌ சிக்க‌ல்க‌ள் உற‌வுக‌ளுக்குள் ஏற்ப‌ட்டுவிடும்.  ம‌ற்ற‌க் கார‌ண‌ம், இவ்வ‌ள‌வு அல‌ங்கோல‌மான‌ ஒருவ‌னைத் தேடி ஒரு பெண் போகின்றாள் என்றால், அப்பெண்ணின் க‌ண‌வ‌ன் பாலிய‌ல் விட‌ய‌த்தில் எவ்வ‌ள‌வு செய‌ல‌ற்ற‌வ‌னாக‌ இருக்கின்றான் என்ப‌து விள‌ங்கும். ஆக‌ இந்த‌ விட‌ய‌த்தை பொதுவில் வெளிப்ப‌டுத்த‌ ஆண்க‌ள் ஒருபோதும் விரும்புவ‌தில்லை; எனெனில் பிற‌கு அவ‌ர்க‌ளின் ம‌திப்புச் ச‌மூக‌த்தில் இல்லாம‌ற் போய்விடும் (அதாவ‌து இந்த‌ த‌றுத‌லையிட‌மே உன‌து ம‌னைவி போகின்றாள் என்றால் உன‌து பெறும‌தி தான் என்ன‌?' என‌ பிற‌ர் கேள்விக‌ளால் துளைத்துவிடுவார்க‌ள்). ஆக‌ இந்த‌க்காரண‌ங்க‌ள்தான் ஆண்க‌ளும் அந்த‌ இளைஞ‌னை விரும்பியோ விரும்பாம‌லோ ஏற்றுக்கொள்கின்றார்க‌ள்.

இறுதியில் இந்த‌ ஆசிரிய‌ர் த‌ன் காத‌ல‌னை ம‌ண‌முடிப்ப‌த‌ற்காய் இக்கிராம‌த்தை விட்டு ந‌க‌ர‌த்திற்குத் திரும்புகின்றார். இவ‌ர் போகும்போது, புதிய‌ ஓர் ஆசிரியை ஊருக்குள் வ‌ருகின்றார். இவ‌ர் கிராம‌த்திற்கு முத‌ற்த‌ட‌வை வ‌ந்த‌போது எப்ப‌டி அந்த‌ இளைஞ‌னைக் க‌ண்டு முக‌ஞ்சுழித்தாரோ அப்ப‌டியே இந்த‌ப் புதிய‌ ஆசிரியையும் அவ‌னின் த‌றுத‌லைக் கோல‌ங்க‌ண்டு முக‌ஞ்சுழிக்கின்றார். அவ‌னைப் ப‌ற்றி தான் அறிந்த‌ எல்லா விட‌ய‌ங்க‌ளையும் இவ‌ருக்குக் கூறிவிடுவோமா என‌ இந்த‌ ஆசிரிய‌ர் நினைக்கின்றார். இறுதியில் அவ‌ராக‌வே அவ‌ருக்குரிய‌ தேர்வைப் பொறுத்து அவ‌னை அறிந்துகொள்ள‌ட்டுமென‌ நினைத்து ஒன்றும் கூறாம‌ல் இந்த‌ ஆசிரிய‌ர் கிராம‌த்தை விட்டுப் போகின்றார். அவ‌ன் ஓர் அர‌ச‌னைப் போல‌ புன்ன‌கைத்து ஆசிரிய‌ருக்கு விடைகொடுக்கின்றான். அந்த ஊரில் அவ‌ன் ஓர் 'அநாம‌தேய‌த் தீவாக‌'  என்றும் இருப்பான் என்ப‌தாய்க் க‌தை முடியும்.
..........
Sep 23/2011(இந்த‌க் க‌தையை நியூயோர்க்க‌ரில் வாசித்துவிட்டு அதுப‌ற்றிச் சில‌ குறிப்புக்க‌ளை எழுதிவைத்திருந்தேன். ஐரோப்பாவிலிருக்கும் என் ந‌ண்ப‌ர், த‌ன‌து கொரிய‌ ந‌ண்ப‌ருக்கு அவ‌ர‌து காத‌ல‌ன் அழ‌கான‌ காத‌ற்க‌டித‌த்தை த‌ன் கைப்ப‌ட எழுதியிருக்கின்றார் (அந்த‌க் காத‌ல‌ன் கொரிய‌ இராணுவ‌த்தில் இருக்க்கின்றார்; அது அவர்க‌ளுக்கு க‌ட்டாய‌ ஒரு சேவை) நீயும் இருக்கின்றாயே என்ன‌ என‌க்குச் செய்தாய்? என‌க் கேட்டிருந்தார். என்னால் ஒரு க‌டித‌ந்தான் எழுத‌ முடிய‌வில்லை, ஆக்க‌குறைந்த‌து வாசித்த‌ க‌தையைப் ப‌ற்றியாவ‌து எழுதி ந‌ண்ப‌ருக்கு அனுப்புவோம் என‌ இதை அனுப்பியிருந்தேன். ஆக‌, என் ந‌ண்ப‌ருக்கும் இக்க‌ண‌த்தில் ந‌ன்றி)

ஹருக்கி முரகாமியின் 'பூனைகளின் நகரம்'

Monday, September 26, 2011

-வாசிப்பு: Town of Cats by Haruki Murakami-

ஹ‌ருக்கி முரகாமியின் புதிய‌ சிறுக‌தையான‌ 'பூனைக‌ளின் ந‌க‌ர‌ம்' (Town of Cats), ஒரு த‌ந்தையிற்கும் ம‌க‌னிற்கும் இடையினான‌ உற‌வையும் வில‌க‌லையும், விடை காண‌முடியா சில‌ கேள்விக‌ளையும் முன்வைக்கிற‌து. மிக‌ ஏழ்மையில் வாழ்ந்த‌ த‌க‌ப்ப‌ன் த‌ன் ம‌க‌னையும் ஏழ்மை தெரிந்து வாழ‌வேண்டும் போல‌ வ‌ள‌ர்க்கின்றார். த‌க‌ப்ப‌ன் ஒரு ஜ‌ப்பான் தொலைக்காட்சி நிறுவ‌ன‌த்திற்கு, அவ‌ர்க‌ளின் வாடிக்கையாள‌ரின் வீடுக‌ளுக்குச் சென்று சேவைக்கான‌ ப‌ண‌த்தை சேக‌ரிக்கும் தொழிலைச் செய்கின்றார். எல்லோரும் விடுமுறையில் இருக்கும் ஞாயிற்றுக்கிழ‌மைக‌ளில் கூட‌ வீடுக‌ளைத் த‌ட்டி ப‌ண‌த்தை அற‌விடுகின்றார். ஞாயிற்றுக்கிழ‌மைக‌ளில் பாட‌சாலை இல்லாத‌தாலும், சிறுவ‌ன் பிற‌ந்த‌ சில‌ மாத‌ங்க‌ளிலே தாய் இற‌ந்துவிட்ட‌தால் வீட்டில் ஒருவ‌ரும் இல்லையென்ற‌ப‌டியாலும், ம‌க‌னையும் ஞாயிற்றுக்கிழ‌மைக‌ளில் த‌ன் வேலைக்குத் த‌க‌ப்ப‌ன் கூட்டிச்செல்கின்றார்.

த‌ன் வ‌ய‌தொத்த‌ சிறுவ‌ர்க‌ள் எல்லாம் ஞாயிறுக‌ளில் குதூக‌ல‌மாய்க் க‌ழிக்க‌ தான் ம‌ட்டும் இப்ப‌டித் த‌ந்தையோடு அலைய‌வேண்டியிருக்கிற‌தே என‌ இச்சிறுவ‌ன் வ‌ருந்துகின்றான். வ‌ள‌ர‌ வ‌ள‌ர‌த் த‌ந்தை த‌ன்னை ஒருவ‌கையில் த‌ன் தொழிலுக்குப் பாவிக்கின்றார் என‌வும் இச்சிறுவ‌ன் எண்ணிக்கொள்கின்றான். எனெனில் வீடுக‌ளைத் த‌ட்டும்போது, சிறுவ‌னை முன்னேவிடும்போது ப‌ண‌ம் கொடுக்காது சும்மா சாட்டுச் சொல்ப‌வ‌ர்க‌ள் கூட‌ குறுகுறுப்புட‌ன் உரிய ப‌ண‌த்தைக் கொடுத்துவிடுகின்றார்க‌ள். த‌ந்தையுட‌ன் இனியும் ஞாயிறுக‌ளில் வ‌ர‌ப்போவ‌தில்லையென‌ ப‌தினொரு வ‌ய‌தில் ம‌கன் ம‌றுத்துக் கூறுகின்றார். அப்ப‌டி வ‌ர‌வில்லையெனில் உன‌க்கு உண‌வுமில்லை, த‌ங்குவ‌த‌ற்கு வீடுமில்லை என‌த் த‌ந்தை கூறுகின்றார். இந்த‌ விட‌ய‌ம் அந்த‌ச் சிறுவ‌னின் ஆசிரிய‌ருக்குத் தெரிந்து அவ‌ர் த‌ந்தைக்கும் ம‌க‌னுக்கும் இடையில் ச‌ம‌ர‌ச‌ம் செய்கின்றார். ஆனால் அன்று தொட‌ங்கிய‌ தகப்பனிற்கும் மகனிற்குமான விரிச‌ல் வாழ்வில் என்றுமே ஒட்ட‌முடியாத‌ சம்ப‌வ‌மாக‌ ஆகிவிடுகின்றது.

வ‌ருட‌ங்க‌ள் பல உருண்டோடிவிட்ட‌ன. இப்போது த‌க‌ப்ப‌ன் டோக்கியோவை விட்டுத் தொலைவில் வயதானவர்களைப் ப‌ராம‌ரிக்கும் விடுதியொன்றில் இருக்கின்றார். அவ‌ர் அங்கே போய்ச் சேர்ந்த‌த‌ன்பின் ஒன்றிர‌ண்டு த‌ட‌வைக‌ள்தான் ம‌க‌ன் போய்ப் பார்த்திருக்கின்றார். ந‌ல்ல‌ வேலையில் இருக்கும் ம‌க‌ன் ஒரு ஞாயிற்றுக் கிழ‌மை த‌ன் த‌ந்தையைப் பார்க்க‌ப் போக‌லாம் என்று வெளிக்கிடுகின்றார். ரெயில் ப‌ய‌ண‌த்தில் ஒரு ஜேர்ம‌னிய‌ நூலை வாசிக்க‌த் தொட‌ங்குகின்றார். அந்த‌ நாவ‌லின் பெய‌ரே 'பூனைக‌ளின் ந‌க‌ர‌ம்'.

Haruki Murakami
ஒரு ந‌க‌ரில் ஒருவ‌ன் இருக்கின்றான். அவ‌ன் ப‌ய‌ண‌ம் செய்ய‌ விரும்புகின்ற‌வ‌னாக‌வும், எந்த‌த் திட்ட‌மிட‌ல் இல்லாம‌ல் இட‌ங்க‌ளுக்குப் ப‌ய‌ணித்துக் கொண்டிருக்கின்ற‌வ‌னாக‌வும் இருக்கின்றான். ஒருமுறை ரெயினில் போகும்போது, ஒரு அழ‌கான‌ இட‌த்தைக் கண்டு அந்த‌ இட‌த்தில் இற‌ங்கிவிடுகின்றான். இவ‌ன் ம‌ட்டுமே அந்த‌ புகைவ‌ண்டி நிலைய‌த்தில் இற‌ங்கி ந‌ட‌ந்து போகின்றான். அந்த‌ ந‌க‌ர‌த்தில் எவ‌ர‌து ந‌ட‌மாட்ட‌ங்க‌ளையும் காண‌முடிய‌வில்லை. ஏதோ பெரிய‌ அழிவு ந‌ட‌ந்து ம‌க்க‌ள் எல்லாம் இட‌ம்பெய‌ர்ந்து போய்விட்டார்க‌ள் என‌ நினைத்துக் கொள்கின்றான். ம‌னித‌ர்க‌ள் ந‌ட‌மாட்ட‌மில்லாத‌தால் அடுத்த‌ இரெயினில் ஏறிப்போகலாம் எனவும் நினைத்துக்கொள்கின்றான். இரவாகின்ற‌து. அந்த‌ ந‌க‌ர‌த்துக்குப் பூனைக‌ள் வெவ்வேறு இடங்க‌ளிலிருந்து வ‌ர‌த் தொட‌ங்குகின்ற‌ன‌. அவை ம‌னித‌ர்களைப் போல் மூட‌ப்ப‌ட்ட‌ க‌டைக‌ளைத் திற‌க்கின்ற‌ன‌. வியாபார‌ம் செய்கின்ற‌ன‌. உண‌வுக்க‌டைக‌ளில் உண‌வ‌ருந்துகின்ற‌ன‌. தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. ந‌க‌ர‌ம் இப்போது க‌ளைக‌ட்டி விட்ட‌து. பூனைக‌ளின் ந‌க‌ர‌த்தை அந்த‌ ந‌க‌ரிலிருக்கும் ம‌ணிக்கூட்டு கோபுரத்துக்கு மேலே ஏறியிருந்து இவ‌ன் வேடிக்கை பார்க்கின்றான். இவ்வாறான‌ பூனைக‌ளின் ந‌க‌ரைப் பார்த்து விய‌ப்ப‌டைந்து அடுத்த‌ நாளும் த‌ங்கி நின்று பூனைக‌ளை நடவடிக்கைகளை இலயித்துப் பார்க்கின்றான்.

மூன்றாவ‌து நாளும் இப்ப‌டி ம‌ணிக்கூட்டுக் கோபுர‌த்தில் இருந்து வேடிக்கை பார்க்கும்போது அத‌ன் கீழே இருந்து பெரிதாகச் ச‌த்த‌ம் வ‌ர‌, அங்கே கூடும் பூனைக‌ள் ம‌னித‌வாச‌னை வ‌ருவ‌தை அறிந்து ம‌ணிக்கூட்டு கோபுர‌த்தின் உச்சிக்கு ஏறி வ‌ருகின்ற‌ன‌. அவை ப‌டை ப‌டையாக‌ வ‌ருவ‌தைக் க‌ண்டு இவ‌ன்,த‌ன்னை அவை தாக்க‌ப்போகின்ற‌தென‌ அஞ்சி ஒடுங்கிய‌ப‌டி இருக்கின்றான். ஆனால் பூனைக‌ளால் அவனைக் காண முடியவில்லை. ம‌னித‌வாச‌னை வ‌ருகின்ற‌து என்று ம‌ட்டும் அவை தங்களுக்குள் கூறிக்கொண்டு போகின்ற‌ன‌. இப்ப‌டிப் பூனைக‌ளைச் ச‌ந்தேக‌ப்ப‌ட‌வைத்த‌தால் இனியும் இங்கு இருந்தால் ஆப‌த்து என‌ அடுத்த‌ நாள் வ‌ரும் ரெயினில் ஏறிப் போக‌த் த‌யாராக‌ ஸ்ரேச‌னுக்குப் போகின்றான். அவ‌னைக் க‌ட‌ந்து ம‌தியமும் மாலையும் ரெயின் போகின்ற‌து. ஆனால் அவ‌னுக்காக‌ ஸ்ரெச‌னில் ரெயின் நிற்க‌வேயில்லை. அந்த‌ ரெயினை ஓட்டும் எஞ்சினிய‌ரைக் கூட‌ அவ‌னால் அவ‌தானிக்க‌ முடிகிற‌து; ஆனால் அவன் அங்கே நிற்ப‌தாக‌வோ அல்ல‌து அங்கே ஓரு ஸ்ரேச‌ன் இருப்ப‌தாக‌வோ எதையும் க‌ண‌க்கெடுக்காது ஒவ்வொரு முறையும் ரெயின் இவனைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கின்ற‌து. இறுதியில் அவ‌ன் முற்றுமுழுதாக‌த் தான் 'தொலைந்துவிட்டேன்' என்பதை உண‌ர்கிறான். மேலும் இது பூனைக‌ளின் ந‌க‌ர‌ம‌ல்ல‌. இது ஒருவ‌ர் த‌ன்னைத்தானே தொலைத்துக் கொள்வதற்கான ந‌க‌ர‌மே என்ப‌தைக் க‌ண்ட‌டைகிறான். இனி எந்த‌ ரெயினும் நிற்க‌ப்போவ‌தில்லை. தான் ஏற்க‌ன‌வே வ‌ந்திருந்த‌ உல‌கிற்கு த‌ன்னால் ஒருபோதும் இனி என்றைக்குமாய்த் திரும்ப‌முடியாது என்ப‌தை உண‌ர்கின்ற‌தாய் அந்த‌ ஜேர்ம‌னிய‌க் க‌தை முடியும்.

இக்க‌தையை வாசித்த‌ப‌டி த‌ந்தை வ‌சிக்கும் ந‌க‌ருக்கு ம‌க‌ன் போகின்றான். இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாய்த் த‌ந்தையைப் பார்க்க‌வில்லை. த‌ந்தையோ அவ‌னை யாரென்று கேட்கின்றார். 'உங்க‌ள் ம‌க‌னைத் தெரிய‌வில்லையா? என‌ இவ‌ர் கேட்க‌, 'என‌க்கு ஒரு ம‌க‌னும் இல்லை' என்கின்றார் தந்தை. 'நான் உங்க‌ள் ம‌க‌னில்லை என்றால், நான் யார்?' என்கின்றார் இவர். த‌ந்தையோ 'You were nothing, you are nothing, and you will be nothing.” என்கிறார். த‌ந்தை இப்ப‌டிக் கூறிய‌வுட‌ன் இவ‌ருக்குத் தான் வாசித்த 'பூனைக‌ளின் ந‌கர‌த்தில்' கதாபாத்திரமாய் வ‌ந்த‌ தொலைந்த‌ ம‌னித‌னைப் போல‌ ஆகிவிட்டேன் போல‌த் தோன்றுகின்ற‌து.

இதுவ‌ரை ஓர் இர‌க‌சிய‌மாக‌ தனக்குள் வைத்திருந்து, த‌ந்தையிட‌ம் கேட்காத‌ கேள்வியைக் கேட்கின்றார், 'நான் உங்க‌ள் சொந்த‌ ம‌க‌ன் இல்லையா?'. எனெனில் உண்மையில் ம‌க‌னிற்குத் தெரியும், த‌ன‌து தாய் தான் பிற‌ந்த‌வுட‌ன் இற‌க்க‌வில்லை. அவ‌ர் கிட்ட‌த்த‌ட்ட‌ ம‌க‌ன் பிறந்து ஒன்ற‌ரை வ‌ருட‌ங்க‌ளுக்குப் பின்தான் இற‌ந்திருக்கின்றார் என்று. ஆனால் எப்போது த‌ன் தாயைப் ப‌ற்றிக் கேட்டாலும் த‌ந்தை தாயைப் ப‌ற்றிக் க‌தைப்ப‌தை ஒருபோதும் விரும்புவ‌தில்லை என்ப‌தையும் மகன் நினைவில் கொள்கிறார். ம‌க‌னின் நினைவுக‌ளில் தாய்...
Tengo fundamentally disbelieved his father’s story. He knew that his mother hadn’t died a few months after he was born. In his only memory of her, he was a year and a half old and she was standing by his crib in the arms of a man other than his father. His mother took off her blouse, dropped the straps of her slip, and let the man who was not his father suck on her breasts. Tengo slept beside them, his breathing audible. But, at the same time, he was not asleep. He was watching his mother.

உண்மையை அறிவ‌த‌ற்கு இதுதான் த‌ருண‌ம் என‌ த‌ந்தையிட‌ம் தொட‌ர்ந்து ம‌க‌ன் கேள்விக‌ளைக் கேட்கின்றார். த‌ந்தையோ சாம‌ர்த்திய‌மாய் இவ‌ரின் கேள்விக‌ளைத் த‌விர்த்த‌ப‌டி வேறெதுவோ பேசியப‌டி இருக்கின்ரார். த‌ந்தையிற்கு மகன் 'பூனைக‌ளின் ந‌க‌ர‌ம்' க‌தையை வாசித்துக் காட்டுகின்றார். இறுதியில் 'ஒரு வெற்றிட‌ம் எப்போதும் வெற்றிட‌மாய் இருப்ப‌தில்லை, அது எதையாவ‌து கொண்டு தன்னைத்தானே நிரப்பிக் கொள்கிறது, அப்ப‌டித்தான் தானும்' என்கின்றார் த‌க‌ப்ப‌ன். ஆனால் தான் உண்மையான‌ ப‌யோலாஜிக்க‌ல் ம‌க‌னா என்பத‌ற்கான‌ ப‌திலை த‌க‌ப்ப‌ன் மகனுக்கு கூற‌வேயில்லை. உன்னால் 'ஒரு விள‌க்க‌மில்லாது ஒன்றை விள‌ங்கிக்கொள்ள‌ முடியாவிட்டால், ஒரு விள‌க்கம் இருந்தால் கூட‌ அதை உன்னால் விள‌ங்கிக் கொள்ள முடியாது' என்பதை ம‌ட்டும் அடிக்க‌டி கூறும் த‌ந்தையின் வாச‌க‌த்தோடு ம‌க‌ன் விடைபெற க‌தை முடிகின்ற‌து.

ஹ‌ருக்கி முராகமி இந்த‌க்க‌தை, எவ்வ‌ள‌வு சிக்க‌லில்லாத‌ வ‌ச‌ன‌ங்க‌ளுட‌ன் உள்ம‌ன‌தின் ஆழ‌ங்க‌ளுக்குச் செல்ல‌ முடியும் என்ப‌த‌ற்கு ஓர் உதாரண‌ம். அவ‌ரின் மொழியின் அழ‌கிற்கு இந்த‌ப் ப‌குதியை வாசித்துப் பார்க்க‌ வேண்டும்.
While math was like a magnificent imaginary building for Tengo, literature was a vast magical forest. Math stretched infinitely upward toward the heavens, but stories spread out before him, their sturdy roots stretching deep into the earth. In this forest there were no maps, no doorways. As Tengo got older, the forest of story began to exert an even stronger pull on his heart than the world of math. Of course, reading novels was just another form of escape—as soon as he closed the book, he had to come back to the real world. But at some point he noticed that returning to reality from the world of a novel was not as devastating a blow as returning from the world of math. Why was that? After much thought, he reached a conclusion. No matter how clear things might become in the forest of story, there was never a clear-cut solution, as there was in math. The role of a story was, in the broadest terms, to transpose a problem into another form. Depending on the nature and the direction of the problem, a solution might be suggested in the narrative. Tengo would return to the real world with that suggestion in hand. It was like a piece of paper bearing the indecipherable text of a magic spell. It served no immediate practical purpose, but it contained a possibility.

தந்தைகளுக்கும் மகன்களுக்குமான உறவென்பது எப்போதும் விசித்திரமானதே. அன்பு காட்ட விரும்புகின்ற தருணங்களில் கூட விலத்தி நிற்கும் பொழுதுகளே பலருக்குச் சாத்தியமாகின்றது. அண்மையில் ஓர் ஆய்வின்படி, ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால் பெற்றோருக்கு ஒரு பிள்ளை மட்டும் அதிகப் பிடித்த பிள்ளையாகி விடுகின்றது என்பது இயல்பு எனக் கூறுகின்றார்கள் (இறுதியாய் வந்த Timeஇல் இது பற்றிய கட்டுரை உள்ளது). சிலவேளைகளில் வளர்ந்த மகனுக்கும் தகப்பனுக்கும் இருக்கின்ற விலகல் கூட இயல்போ எனக்கூட எமக்குத் தோன்றக்கூடும். காஃப்கா தன் தந்தைக்கு எழுதி அனுப்பாத கடிதமும் இந்தக்கணத்தில் நினைவுக்கு வருகின்றது.
......................

நியூயோர்க்கரில் வந்த கதை
Timeல் வந்த கட்டுரையோடு சம்பந்தப்பட்ட விடீயோ
ஓவியம்: நன்றி  The New Yorker

துயில் - 02

Monday, September 05, 2011

(இதன் சுருக்கிய வடிவம் 'தீராநதி' செப்ரெம்பர் இதழில் வெளியாகியது)
3.
எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் 'யாம‌ம்' நாவ‌லுக்கு விம‌ர்ச‌ன‌ம் எழுதிய‌போது, 'யாம‌ம்' கால‌னித்துவ‌த்தை ஒரு எதிர்ம‌றையாக‌ ம‌ட்டும் பார்க்கின்ற‌து என்ற‌ குறிப்பை எழுதியிருந்தேன். ஆனால் 'துயிலில்' கால‌னித்துவ‌த்தின் இருப‌க்க‌ங்க‌ளும் மிக‌ அவ‌தான‌மாக‌ முன் வைக்க‌ப்ப‌டுகின்ற‌து என்ப‌தைக் குறிப்பிட்டாக‌ வேண்டும். உதார‌ண‌த்திற்கு தொக்காட்டை அண்டியிருக்கும் ஒரு பூசாரி (அவ‌ரே வைத்திய‌ராக‌வும் அம்ம‌க்க‌ளுக்கு இருக்கின்றார்) ம‌ன‌ம் பிற‌ழ்ந்த‌ ஆண்/பெண்/குழ‌ந்தைக‌ளைச் ச‌ங்கிலியால் க‌ட்டி தான் அவ‌ர்க‌ளின் நோய்க‌ளைத் தீர்க்கின்றேன் என‌ ச‌வுக்கால் தின‌ம் அடிக்கின்றார். இத‌னை அவ‌தானிக்கும் ஏல‌ன்ப‌வ‌ர் இது மிருக‌த்த‌ன‌மான‌து என‌ வ‌ருந்துகின்றார். ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌த்தை இப்ப‌டியே தொட‌ர‌விடாது நிறுத்த‌வேண்டும் என‌ பாதிரியாரிட‌ம் முறையிடும்போது, நாங்க‌ளும்(வெள்ளைய‌ர்க‌ளும்) அப்ப‌டித்தானே க‌ட‌ந்த‌கால‌ங்க‌ளில் நோயாளிக‌ளுக்கு ம‌ருத்துவ‌ம் செய்திருக்கின்றோம் என‌ப் பாத‌ர் குறிப்பிடுகின்றார். எப்போதும் கீழைத்தேய‌ ம‌க்க‌ளைக் 'காட்டுமிராண்டிக‌ளாய்' விம‌ர்சிக்கும் வெள்ளையின‌த்த‌வ‌ர்க‌ளின் தோன்ற‌ல்க‌ள்தான் மிக‌க்கொடூர‌மான‌ சிலுவைப்போர்க‌ளை நிக‌ழ்த்தினார்க‌ள் என்ப‌தையும், தேவால‌ய‌ங்க‌ளுக்கு எதிரான‌ க‌ருத்துரைத்த‌ பெண்க‌ளைச் சூனிய‌க்காரிக‌ளாய் உயிரோடு எரித்த‌வ‌ர்க‌ளும் என்ப‌தையும் நாம் ம‌ற‌ந்துவிட‌முடியாது அல்ல‌வா?

அதுதான் இங்கே நினைவூட்ட‌ப்ப‌டுகின்ற‌து. அதேபோன்று இந்திய‌(த‌மிழ்)ம‌ன‌ங்க‌ளில் அக‌ற்ற‌முடியாக் க‌ச‌டாய் ஒளிந்திருக்கும் சாதி ப‌ற்றியும் துயிலில் நுட்ப‌மாக‌ப் பேச‌ப்ப‌டுகின்ற‌து. ஏல‌ன் ப‌வ‌ர் த‌ன்னிட‌ம் வ‌ரும் நோயாளிக‌ளை ஒரே மாதிரியாய் ந‌ட‌த்துவ‌து தொக்காடு கிராம‌த்திலிருக்கும் உய‌ர்சாதியின‌ரால் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட‌ முடியாதிருக்கின்ற‌து. ஏல‌ன் ப‌வ‌ரோடு வேலை செய்யும் சீபாளியின் குடும்ப‌ம் கிறிஸ்த‌வ‌ம‌த‌த்திற்கு மாறிய‌பின்ன‌ர் கூட‌, சீபாளி எல்லோரும் வ‌ழிப‌டும் தேவால‌ய‌த்தினுள் உள்ளே வழிப‌ட‌ அனும‌திக்க‌ப்ப‌டாம‌ல்தான் இருக்கின்றார். இந்த‌ச் சாதியின் அர‌சிய‌லை அங்கே மேற்கிலிருந்து வ‌ரும் பாதிரியார் கூட‌ ம‌த‌ம் மாற்ற ந‌ட்வ‌டிக்கைக்காய் அவ‌ர்க‌ளைத் த‌ந்திர‌மாய்ப் பிரித்து வைத்தே பாவிக்கின்றார் என்ப‌தையும் நாம் க‌வ‌னித்தாக வேண்டும். ஆனால் மானுட‌த்தின் மீதான உண்மையான‌ அக்க‌றையுள்ள‌ ஏல‌ன் ப‌வ‌ரால் அதை ஒருபோதும் ஏறுக்கொள்ள‌ முடிய‌வில்லை. இவ்வாறு எல்லா ம‌க்களையும் சாதி அடிப்ப‌டையில் பகுக்காது, ம‌னித‌த்தின் அடிப்ப‌டையில் ஒன்றாக‌ப் பாவித்த‌தே இறுதியில் ஏல‌ன் ப‌வ‌ரின் உயிரையும் ப‌றித்திருக்கின்ற‌து என்ப‌தை நுட்ப‌மாய் எஸ்.ரா நாவ‌லில் எழுதியிருக்கின்றார்.

ஊர் ம‌க்க‌ள், த‌ங்க‌ளுக்கு சீக்கு நோயைப் ப‌ர‌ப்புகின்றார் என்ற‌ குற்ற‌ச்சாட்டின்பேரில் ஒரு பாலிய‌ல் தொழில் செய்யும் பெண்ணை உயிரோடு அடித்துக்கொல்லும் முய‌ற்சியில் ஈடுப‌டுவ‌தை ஏல‌ன் ப‌வ‌ர் த‌டுத்து நிறுத்துகின்றார். அந்நிகழ்வே அதுவ‌ரை அவ‌ரை த‌ங்க‌ளில் ஒருவ‌ராக‌ நினைத்த‌ ஊர்ம‌க்க‌ளிட‌மிருந்து ஏலன் ப‌வ‌ரை வில‌த்தி வைக்கின்ற‌து ம‌ட்டுமின்றி, க‌த்தோலிக்க‌ச் ச‌பையிலிருந்தும் அவ‌ரை நீக்க‌ச் சொல்லியும் க‌ட்ட‌ளையும் இட‌ப்ப‌டுகின்ற‌து. ஒரு முக்கிய‌மான‌ பாத‌ரால் ஏல‌ன் ப‌வ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌தால் வ‌ங்காள‌த்திலிருந்து ஒரு உய‌ர்ம‌ட்ட‌க்குழு இச்ச‌ம்ப‌வ‌த்தை தீர‌ விசாரிக்க‌ தொக்காட்டிற்கு அனுப்ப‌ப்ப‌டுகின்ற‌து. அக்குழு இறுதியில் என்ன‌ முடிவை எடுத்த‌து என்ப‌தும், ஏல‌ன் ப‌வ‌ரின் இன்னொரு க‌னவான‌ க‌ல்வி க‌ற்க‌ வாய்ப்பேயில்லாத‌ அம்ம‌க்க‌ளுக்கு ஒரு பாட‌சாலை அமைத்துக்கொடுத்த‌ல் நிக‌ழ்ந்த‌தா என்ப‌தையும் வாசிப்ப‌வ‌ர்க‌ளுக்காய் விட்டுவிட‌லாம்.

தொக்காடு தேவால‌ய‌த்தின் திருவிழாவிற்காய் ப‌ல‌ர் ப‌ல்வேறு திசைக‌ளில் இருந்து வ‌ந்துகொண்டிருக்கின்றார்க‌ள். தொக்காடு தேவால‌ய‌த்திற்கென‌ ஒரு ஜ‌தீக‌ம் உண்டு. நோயாளிக‌ள் த‌த்த‌ம் இட‌ங்க‌ளிலிருந்து கால்ந‌டையாக‌வே ந‌ட‌ந்து திருவிழாவிற்கு வ‌ந்துசேர்ந்தால் அவ‌ர்க‌ளின் தீர்க்க‌முடியாப் பிணிக‌ள் எல்லாம் தீர்ந்துவிடும் என்ப‌து. ஆக‌வே ப‌ல்வேறு வித‌மான‌ நோயாளிக‌ள் திருவிழாவிற்காய் ந‌ட‌ந்து வ‌ந்துகொண்டிருக்கின்றார்க‌ள். அவ்வாறு வ‌ந்து சேரும் நோயாளிக‌ள் இடையில் த‌ங்கிச்செல்லும் இட‌மாக‌ எட்டூர் இருக்கின்ற‌து. அங்கே 'அக்கா' என‌ எல்லோராலும் அன்பாக‌ அழைக்க‌ப்ப‌டும் பெண்ம‌ணி எல்லா நோயாளிக‌ளையும் ப‌ரிவாக‌க் க‌வனிக்கின்றார்; அவ‌ர்க‌ளுக்கு உண‌வூட்டுகின்றார், ஆறாத‌ காய‌ங்க‌ளைச் சுத்த‌ம் செய்கின்றார்; எல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ நோயாளிக‌ள் ம‌ன‌ந்திற‌ந்து பேசுவ‌தை பொறுமையாக‌ இருந்து கேட்கின்றார். அக்கா ஒரு ம‌ருத்துவ‌ர‌ல்ல‌, ஆனால் நோயுற்ற‌வ‌ர்க‌ள் எல்லோரும் த‌ம‌து நோய்க‌ள் ப‌ற்றிப் பேச‌வும், த‌ம்மோடு பிற‌ர் ப‌ரிவோக‌ இருப்ப‌தையும் விரும்புகின்ற‌வ‌ர்க‌ள் என்கிற‌ நோயாளிக‌ளின் உள‌வியிய‌ல் ந‌ன்க‌றிந்த‌வ‌ர்.

பிணியின் பாதி தீர்வது, நோயாளிக்குத் தான் த‌னியாள் அல்ல‌ என்ப‌தை உண‌ர‌ச்செய்வ‌து, மிகுதிப் பாதியை கொடுக்கும் ம‌ருந்துக‌ள் தீர்க்கும் என்ப‌தை அக்கா ந‌ன்க‌றிந்த‌வ‌ர். ஆக‌வே நோயாளிக‌ளை ம‌ன‌ந்திற‌ந்து பேசும்போது அவ‌ர்க‌ள் ஏற்க‌ன‌வே த‌ம் வாழ்வில் செய்த‌ பாவ‌ங்க‌ளும் கூட‌த்தான் ஒரு நோயாக‌ கூட‌ இருந்து உறுத்திக்கொண்டிருக்கின்ற‌து என்ப‌தை அக்கா அவ‌ர்க‌ளுக்குப் புரிய‌ வைக்கின்றார். பாவ‌ங்க‌ளிலிருந்து விடுப‌ட‌ல் என்ப‌து நாம் பாவ‌ம் செய்த‌து யாரிட‌மோ அவ‌ர்க‌ளைத் தேடிச்சென்று எம‌து த‌வ‌றுக‌ளைக் கூறி ம‌ண்டியிடுவ‌துதான் என்கின்றார். அக்காவைத் தேடி தொழுநோயாளிக‌ள் ம‌ட்டுமின்றி ப‌ல்வேறு பிணிக‌ளோடு இருப்ப‌வ‌ர்க‌ளும் வ‌ருகின்றார்க‌ள். ஒருமுறை எப்போதும் போதையில் மித‌ந்த‌ப‌டி இருக்கும் ஒரு குடிகார‌னைச் ச‌ந்திக்கின்றார் அக்கா. ஆனால் அவ‌ன் த‌ன‌து அன்பு புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்ட‌தாலேயே குடியைக் கார‌ண‌ங்காட்டி எல்லோரையும் வெறுக்கின்றான் போன்ற‌ த‌ந்திர‌த்தைச் செய்கின்றான் என்ப‌தை அக்கா அவ‌னிட‌ம் க‌ண்டுபிடிக்கின்றார். தான் இதுவ‌ரை நுட்ப‌மாய் ம‌றைத்துவைத்திருந்த‌ உண்மையை அக்கா ச‌ட்டென்று க‌ண்டுபிடித்த‌தைக் குடிகார‌னால் தாங்க‌முடியாதிருக்கின்ற‌து. ஆக‌வே அக்காவை மூர்க்க‌மாய்த் தாக்குகின்றான். அதேபோன்று த‌ம‌து 50 வ‌ய‌துக‌ளில் வீட்டால் துர‌த்த‌ப‌ட்ட‌ 70 வ‌ய‌துக‌ளில் இருக்கும் இரு முதிய‌வ‌ர்க‌ளும் அக்காவைத் தேடி வ‌ருகின்றார்க‌ள். அவ‌ர்க‌ள் தாங்க‌ள் அக்கா செய்யும் ந‌ல்ல‌ப‌ணிக‌ளைக் கேள்விப்ப‌ட்டு அவ‌ருக்கு சில‌ நாட்க‌ள் உத‌வ வ‌ந்த‌தாக‌க் கூறுகின்றார். அக்கா நெகிழ்கின்றார். 50 வ‌ய‌துவ‌ரை தாங்க‌ள் வேலை, குடும்ப‌ம் என‌ ஒரு குறுகிய‌ வ‌ட்ட‌த்திற்குள் வாழ்ந்துகொண்டிருந்தோம், வீட்டிலிருந்து துர‌த்த‌ப்ப‌ட்ட‌பின் தான் உல‌க‌ம் எவ்வ‌ள‌வு விரிந்த‌து என்று தெரிகிற‌து என‌ச்சொல்லும் அம்முதிய‌வ‌ர்க‌ள் முதுமையிலும் வாழ்வு அழகுதானென‌க் கூறுகின்றன‌ர். இப்ப‌டி அக்காவின் எட்டூர் ம‌ண்ட‌ப‌த்திற்கு வ‌ருகின்ற‌ ப‌ல‌ரின் க‌தைக‌ள் கூற‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒவ்வொருவ‌ரின் க‌தைக‌ளும் ஏதோ ஒருவ‌கையில் ந‌ம்மைப் பாதிக்க‌ச் செய்கின்ற‌தோடு அவ‌ர்க‌ள் எம‌க்கு ஏற்க‌ன‌வே தெரிந்த‌ ந‌ம்மோடு உலாவுகின்ற‌ ம‌னித‌ர்க‌ள் போன்ற‌ நெருக்க‌த்தையும் வாசிக்கும் ந‌ம‌க்குள் ஏற்ப‌டுத்த‌வும் செய்கின்ற‌ன‌ர்.

4.
இவ்வாறு இருநூற்றாண்டுக‌ளில் நிக‌ழும் க‌தைக‌ள் வெவ்வேறு மாந்த‌ர்க‌ளினூடாக இந்நாவ‌லில் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. தொக்காடு கிராம‌த்தில் எப்ப‌டி கிறிஸ்த‌வ‌ம் ப‌ர‌வுகின்ற‌து என்ப‌திலிருந்து, தொக்காடு தேவால‌ய‌ம் எவ்வாறு க‌ட்ட‌ப்ப‌ட்ட‌து என்ப‌து வ‌ரை நுண்ணிய‌மான‌ த‌க‌வ‌ல்க‌ளால் துயிலில் எழுத‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. ஒவ்வொரு த‌னிம‌னித‌னும் தன் வாழ்வையும் தான் ச‌ந்தித்த‌ ம‌னித‌ர்க‌ளையும் ப‌ற்றியும் எழுத‌த்தொட‌ங்கினாலே அது எவ்வ‌ள‌வோ ப‌க்க‌ங்க‌ளுக்கு நீள‌க்கூடிய‌தாக‌ இருக்குமென்றால், இரு நூற்றாண்டுக‌ளுக்கு முன் எழுப்ப‌ப்ப‌ட்ட‌ தேவால‌ய‌த்தைப் ப‌ற்றிய‌ க‌ட‌ந்த‌கால‌த்தையும் நிக‌ழ்கால‌த்தையும் எழுத‌த்தொட‌ங்கினால் ஒருபோதுமே முடிவ‌டையாத‌ அள‌வுக்கு க‌தைக‌ள் என்றுமேந் நுரைத்துத் த‌தும்ப‌க் கூடிய‌ன‌தான். என‌வேதான் தொக்காடு தேவால‌ய‌த்தை ஒரு முக்கிய‌ மைய‌மாய் வைத்து எழுத‌ப்ப‌ட்ட‌ துயில் நாவ‌லும் அது கூறுகின்ற‌ க‌தைக‌ளை விட‌ சொல்ல‌ப்ப‌டாத‌ க‌தைக‌ளைத் த‌ன்ன‌க‌த்தில் உள்ள‌ட‌க்கியிருக்கின்ற‌து என்ப‌தை நாம் உய்த்துண‌ர்ந்து கொள்ள‌லாம். துயிலில் விட‌ப்ப‌ட்ட‌ இடைவெளிக‌ளைக் கொண்டு நாம் எம‌க்கான‌ க‌தைக‌ளைக் கூட‌ க‌ட்டியெழுப்பிக்கொள்ள‌லாம். உதார‌ண‌மாக‌ துயில் நாவ‌லில் வ‌ருகின்ற‌ முக்கிய‌ பாத்திர‌மான‌ அக்கா ஒரு குடிகார‌னால் தாக்க‌ப்ப‌ட்டு ம‌ய‌க்க‌ம‌டைவ‌தோடு இந்நாவ‌லிலிருந்து இல்லாம‌ற் போய்விடுகின்றார். ஆனால் அக்காவின் பாத்திர‌த்தை வாசிக்கும் ந‌ம‌க்கு, அந்த‌ அக்காவிட‌ம் ந‌ம‌க்குச் சொல்வ‌த‌ற்கு இன்னும் நிறைய‌க் க‌தைக‌ள் இருக்குமென்ப‌தை அறிவோம். அழ‌க‌ரின‌தோ, ஜ‌க்கியின‌தோ சிறுவய‌து அனுப‌வ‌ங்க‌ள் விரிவாக‌ச் சொல்ல‌ப்ப‌ட்ட‌துபோன்று அக்காவின‌து க‌ட‌ந்த‌கால‌ம் துயிலில் கூற‌ப்ப‌டாது விட‌ப்ப‌ட்டிருக்கும் இடைவெளியைக் கூட‌ நாம் ந‌ம‌க்குத் தெரிந்த‌ ஒரு அக்காவின் நினைவுக‌ளை ந‌ன‌விடைதோயச் செய்வ‌தாக‌க்கூட‌ மாற்றிக்கொள்ள‌லாம்.

19ம் நூற்றாண்டின் இறுதிப்ப‌குதியில் ஒரு பெண் அநியாய‌மாக‌ தொக்காடு தேவால‌ய‌ முன்ற‌லில் கொல்ல‌ப்ப‌டுகின்றார். அவ‌ரின் அதுவ‌ரை கால‌ச்சேவையை நினைவூட்டிக்கொண்டிருந்த‌ க‌ட்ட‌ட‌மும் பின்னாட்க‌ளில் அடையாள‌மின்றிப்போகின்ற‌து. ஆனால் அவர் எழுதிக்கொண்டிருந்த‌ க‌டித‌ங்க‌ளின் மூல‌ம் அவ‌ரின் நினைவுக‌ள் மீண்டும் தூசி த‌ட்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌. க‌டித‌ம் ஒரு முக்கிய‌ ஆவ‌ண‌மாய் க‌ட‌ந்த‌கால‌ வ‌ர‌லாற்றை மீள‌க் க‌ட்டியெழுப்புகிற‌து. அதேபோன்று கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு நூற்றாண்டுக்குப் பின்னாலும் தொக்காடு தேவால‌ய‌ச் சூழ‌லில் கொலையொன்று நிக‌ழ்கின்ற‌து. ஆனால் சென்ற‌ நூற்றாண்டைப் போல‌ல்லாது, த‌ன‌க்குச் செய்ய‌ப்ப‌டும் அநியாய‌ம் க‌ண்டு பொங்கியெழுந்து ஒரு பெண்ணே அக்கொலையைச் செய்கின்றாள். ஒரு நூற்றாண்டு இடைவெளியில் கால‌ம் மாறிக்கொண்டிருப்ப‌தை இதைவிட‌ நுட்ப‌மாக‌ உண‌ர்த்தி விடமுடியுமா என்ன‌?

துயில் நாவ‌ல் நோய்மையை ம‌ட்டும் பேசாது வெவ்வேறுவித‌மான‌ ம‌ருத்துவ‌முறைக‌ள் ப‌ற்றியும் ஆழ‌ விவாதிக்கின்ற‌து. மேலைத்தேய‌ ம‌ருத்துவ‌ முறையில் தேர்ச்சி பெற்ற‌ ஏல‌ன் பவ‌ர், கீழைத்தேய‌ நாடுக‌ளில் த‌லைமுறை த‌லைமுறையாக‌ குறிப்பிட்ட‌ குடும்ப‌ங்க‌ளிடையே க‌ற்றுக்கொடுக்கப்ப‌டும் கீழைத்தேய‌ ம‌ருத்துவ‌ முறைக‌ளைப் ப‌ற்றி அறிய‌வும் ஆவ‌ல் உள்ள‌வ‌ராக‌ இருக்கின்றார். இம்ம‌ருத்துவ‌முறை இந்திய‌ ச‌மூக‌ங்க‌ளில் ஒதுக்க‌ப்ப‌ட்ட‌ சாதிக‌ளிடையே இருந்து வ‌ருவ‌தையும் அதனால் இவ‌ர்க‌ளிட‌ம் சிகிச்சை பெற‌ உய‌ர்சாதி ம‌க்க‌ள் விரும்புவ‌தில்லை என்ப‌தையும் அவ‌தானிக்கின்றார். மேலும் இந்திய‌ ம‌ருத்துவ‌முறைக‌ள், மேலைத்தேய‌ ம‌ருத்துவ‌த்தைப் போல‌ த‌னிப்ப‌ட்ட‌ நோயிற்கு ம‌ட்டும் சிகிச்சையைத் தேடுவ‌தை விடுத்து, அது முழுமனித‌னுக்குமான‌ உட‌ல்ந‌ல‌த்தைக் க‌வ‌ன‌த்தில் கொள்கின்ற‌து என்கின்ற‌ புரித‌லுக்கும் ஏல‌ன்ப‌வ‌ர் வ‌ருகின்றார். இய‌ற்கையோடு அதிக‌ம் வாழும் இந்திய‌ ம‌க்க‌ள் த‌ம‌து ம‌ருந்துக‌ளையும் இய‌ற்கை வ‌ள‌ங்க‌ளிலிருந்து பெற்றே த‌யாரிக்கின்றார்க‌ள் என்ப‌தையும், அவ்வாறு மேலைத்தேய‌ ம‌ருந்துக‌ள் த‌யாரிக்க‌ப்ப‌டுவ‌தில்லை என்கின்ற‌போது, துயிலில் வ‌ரும் உள்ளூர் ம‌ருத்துவ‌ர் அதை ந‌ம்ப‌முடியாத‌வ‌ராக‌ இருக்கின்றார் என்ப‌தும் குறிப்பிட‌ப்ப‌டுகின்ற‌து.

மேலும் துயில் நாவ‌லில் தொக்காடு தேவால‌ய‌த்தின் திருவிழா ப‌ற்றிய‌ வ‌ர்ண‌னைக‌ள் வித‌ந்து கூற‌க்கூடிய‌து. தேர்ந்த‌ ஒரு ஒளிப்ப‌திவாள‌ர் காட்சிப்ப‌டிம‌ங்க‌ளாக்குவ‌தைப் போன்ற‌ நேர்த்தியுட‌ன் திருவிழா நாட்க‌ள் எஸ்.ராவின் எழுத்தால் காட்சிப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌. இன்னுஞ்சொல்ல‌ப்போனால் தேவால‌ய‌த்தின் உள்ளே நிக‌ழும் திருவிழாவைவிட‌, அத‌ன் சுற்றுச்சூழ‌லே அதிக‌ம் வ‌ர்ணிக்க‌ப்ப‌டுகின்ற‌து. ஒருவ‌கையில் பார்த்தால் இந்நாவ‌ல் விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளை முக்கிய‌ பாத்திர‌ங்க‌ளாக‌க் கொண்டே க‌ட்டியெழுப்ப‌ப்ப‌டுகின்ற‌து என‌க்கூட‌ச் சொல்ல‌லாம். ஓரு நிர‌ந்த‌ரமான‌ இருப்பில்லாது எப்போது அலைந்துகொண்டிருக்கும் அழ‌க‌ர், பாலிய‌ல் தொழில் செய்யும் ஜ‌க்கி ம‌ற்றும் டோலி, நோயாளிக‌ளைப் மிக‌க் க‌னிவுட‌ன் ப‌ராம‌ரித்து அனுப்பும் அக்கா, த‌ன‌க்கான எல்லா வ‌ச‌தி வாய்ப்புக்க‌ளையும் உத‌றிவிட்டு சேவை செய்வ‌த‌ற்கென‌ வ‌ரும் ஏல‌ன்ப‌வ‌ர் என‌ அனைவ‌ருமே விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளாக‌ இருக்கின்றார்க‌ள், அல்ல‌து விளிம்புநிலை மனித‌ர்களோடு சேர்ந்து வாழ‌ விரும்புகின்ற‌வ‌ர்க‌ளாக‌ இருக்கின்றார்க‌ள். மேலும் எஸ்.ராவின் அநேக‌ நாவ‌ல்க‌ளில் வ‌ருப‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள் இய‌ல்புக்கு அப்பால் சென்று த‌ங்க‌ளைப் ப‌ற்றி அல‌ட்டிக் கொள்வ‌துமில்லை. அவ‌ர்க‌ளின் தின‌வாழ்வென்ப‌தென்ப‌தே புற‌ நெருக்க‌டிப் பெருஞ்சுழிக‌ளுக்கு எதிராக‌த் துடுப்புப் போடுவ‌தாக‌ இருக்கும்போது உள்ம‌ன‌த் த‌ரிச‌ன‌ங்க‌ளுக்காய் நின்று நிதானிக்க‌வும் முடியாது. அந்த‌ இய‌ல்பு துயிலின் பாத்திர‌ங்க‌ளுக்கு இருப்ப‌தால் தான் நாவ‌ல் வாசிப்ப‌வ‌ர்க‌ளை உள்ளிழுத்துக் கொள்கிற‌து.

இந்நாவ‌லை வாசித்துக்கொண்டிருந்த‌போது காண‌க்கிடைத்த‌ சில‌ எதிர்ம‌றையான‌ புள்ளிகளையும் குறிப்பிட‌வேண்டும். ஒவ்வொரு அத்தியாய‌த்திலும் ஒரு சில‌ எழுத்துப் பிழைக‌ளென‌ நாவ‌ல் முழுதும் எழுத்துப்பிழைக‌ள் ம‌லிந்து கிட‌க்கின்ற‌ன‌. எஸ்.ராவின் 'உப‌பாண்ட‌வ‌ம்' வாசித்த‌ நாட்க‌ளிலிருந்து இதை அவ‌தானிக்கின்றேன் என்றாலும், இவ்வ‌ள‌வு க‌டும் உழைப்போடு எழுத‌ப்ப‌டும் ஒரு நாவ‌லில் இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளையும் க‌ளைய‌வேண்டுமென‌க் க‌றாராக‌ கூற‌வேண்டியிருக்கின்ற‌து. அதைவிட‌, சில‌வேளைக‌ளில் பாத்திர‌ங்க‌ளில் பெய‌ர்க‌ள் மாற்றி மாற்றி வ‌ந்திருக்கின்ற‌ன‌. உதார‌ண‌த்திற்கு ஜ‌க்கி தான் அவ‌ரின் த‌க‌ப்ப‌னோடு மிக‌வும் நெருக்க‌மாயிருக்கின்றார். ஆனால் சில‌ ப‌க்க‌ங்க‌ளைத் தாண்டிய‌பின் ஜ‌க்கியின் த‌ங்கையான‌ டோலிதான் த‌க‌ப்ப‌னுக்கு நெருக்க‌மாயிருக்கின்றார் என்ப‌துபோல‌ பெய‌ர் ஆள்மாறாட்ட‌ம் ந‌ட‌ந்திருக்கும். இவ்வாறான‌ விட‌ய‌ங்கள் வாசிப்ப‌வ‌ரை நிச்ச‌ய‌ம் குழ‌ப்ப‌வே செய்யும்.

எங்கோ தொலைவில் முற்றிலும் வேறுப‌ட்ட‌ ப‌ண்பாட்டுச் சூழலில் பிற‌ந்து இந்தியாவிற்கு சேவையாற்ற‌ வ‌ரும் ஏல‌ன் ப‌வ‌ர், த‌ன் துணையை விலத்திவிட்டுப் போவ‌த‌ற்கான‌ எத்த‌னையோ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் வாய்த்தும், த‌ன்னைப் ப‌ய‌ன்ப‌டுத்துகின்றான் க‌ண‌வ‌ன் என்கின்ற‌ புரித‌லோடு அழ‌க‌ரோடு அலையும் சின்ன‌ராணி, நோயாளிக‌ளை ஆற்றுப்ப‌டுத்த‌வும், அவ‌ர்க‌ளுக்கு விருந்த‌ளிப்ப‌துமே த‌ன் க‌டனென‌ அத‌ற்காய் த‌ன் வாழ்நாளை முற்றுமுழுதாக‌ செல‌வ‌ழிக்கின்ற‌ன‌ கொண்ட‌லு அக்கா...என‌ இந்நாவ‌லில் முக்கிய‌ பெண் பாத்திர‌ங்க‌ள் அனைத்துமே த‌ம் வாழ்வைப் பிற‌ருக்காய் அர்ப்ப‌ணித்து அதில் ஏதோ ஒருவ‌கையில் நிறைவைக் காண்ப‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள். த‌னிந‌ப‌ர் சார்ந்து எல்லாமே வ‌லியுறுத்த‌ப்ப‌டும் இன்றைய‌ உல‌க‌ ஒழுங்கில் மேற்குறித்த‌ பாத்திர‌ங்க‌ள் சில‌வேளைக‌ளில் விசித்திர‌ப் புதிர்க‌ளாக‌ வாசிப்ப‌வ‌ர்க‌ளுக்குத் தெரிய‌வும் கூடும். அத‌ன் நிமித்த‌ம் வ‌ரும் விய‌ப்பே, அண்மையில் வாசித்த‌வ‌ற்றில் 'துயிலை' ஒரு முக்கிய‌ நாவ‌லாக‌ வைத்துப் பார்க்க‌த் தோன்றுகின்ற‌தோ தெரிய‌வில்லை.

எழுதியது: ஆனி/2011
நன்றி: தீராநதி- புரட்டாதி/2011

எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் 'துயில்'

1.
நாம் எத்த‌னையோ இட‌ங்க‌ளுக்கு நம் வாழ்வில் ப‌ய‌ணித்திருப்போம். அவ்வ‌வ்விட‌ங்களின் இய‌ற்கையின‌தோ, க‌ட்டிட‌க்க‌லையின‌தோ அழ‌கைக் க‌ண்டு ம‌ன‌ஞ்சிலிர்த்து இர‌சித்துமிருப்போம். ஆனால் எப்போதாவ‌து நாம் நின்று இர‌சிக்கும் இட‌த்தின் நில‌விய‌லும் வாழ்விய‌லும் எவ்வாறு சில‌ தசாப்த‌ங்க‌ளுக்கோ, நூற்றாண்டுக‌ளுக்கு முன்னே இருந்திருக்கும் என்று யோசித்த‌துண்டா?  அவ்வாறு பிர‌பல்ய‌ம் வாய்ந்த‌ ஒரு தேவால‌ய‌த்தின் வ‌ர‌லாற்றையும், அத‌னோடு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளையும் விரிவாக‌ப் பேசுகின்ற‌ ஒரு நாவ‌ல்தான் எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் 'துயில்'.

இத்தேவால‌ய‌ம் பிற்கால‌த்தில் (அல்ல‌து நிக‌ழ்கால‌த்தில்) நோய்மையுற்ற‌வ‌ர்க‌ளுக்கு ந‌ம்பிக்கை த‌ரும் ஓரிட‌மாய்த் திக‌ழ்வ‌தால் நோய்மை ப‌ற்றியும் இந்நாவ‌லில் பேசப்ப‌டுகின்ற‌து. ஆக‌ ஒரு தேவால‌ய‌த்தின் வ‌ர‌லாற்றை ம‌ட்டுமின்றி நோய்மையுற்ற‌வ‌ர்க‌ளின‌தும், நோய் தீர்ப்ப‌வ‌ர்க‌ளின‌தும் உள‌விய‌லையும் பேசுவ‌தால் த‌மிழில் த‌வ‌ற‌விடாது வாசிக்க‌வேண்டிய‌ ஒரு நாவ‌லாகிவிடுகின்ற‌து 'துயில்'. தொக்காடு என்ற‌ தேவால‌ய‌மே இந்நாவ‌லில் வ‌ரும் அனைத்துப் பாத்திர‌ங்க‌ளையும் இணைக்கும் மைய‌ச் ச‌ர‌டாக‌ இருக்கிற‌து. தொக்காடு தேவால‌ய‌த்தின் திருவிழாவிற்குச் செல்வ‌த‌ற்கு த‌யாராகும் மாந்த‌ர்க‌ளோடு தொட‌ங்கும் நாவ‌ல், இறுதியில் தொக்காடு தேவால‌ய‌த்தின் தேர்த்திருவிழாவோடு நிறைவுபெறுகிற‌து. இந்த‌ இடைவெளியில் ஐநூறு ப‌க்க‌ங்க‌ளுக்கும் மேலாய் நீளும் நாவ‌லில் ப‌ல்வேறு திசைக‌ளில், ப‌ல்வேறு மாந்த‌ர்க‌ளினூடாக‌ க‌தைக‌ள் ந‌க‌ர்கின்றன‌ ம‌ட்டுமின்றி இருவேறு நூற்றாண்டுக‌ளுக்கும் அத்தியாய‌ங்க‌ள் மாறி மாறி அலையுறும்போது வாசிப்பு இன்னும் சுவார‌சிய‌மாகின்ற‌து.

தொக்காடு தேவால‌த் திருவிழாவில் க‌ட‌ற்க‌ன்னி ஷோ நட‌த்துவ‌த‌ற்காய் த‌ன் ம‌னைவி சின்ன‌ராணி ம‌ற்றும் ம‌க‌ள் செல்வியோடு புகைவ‌ண்டிக்காய் காத்திருக்கின்ற‌ அழ‌க‌ரோடு க‌தை ஆர‌ம்பிக்கின்ற‌து. தொலைவிட‌ங்க‌ளிலிருந்து தொக்காடு போகின்ற‌ அனைவ‌ரையும் இணைக்கின்ற‌தாய் இந்த‌ ரெயில் ப‌ய‌ண‌ம் இருக்கின்ற‌து. அந்த‌ ரெயில் முழுதும் அழ‌க‌ர் குடும்ப‌த்தோடு ப‌ல்வேறு பிணிகளால் பீடிக்க‌ப்ப‌ட்டு ச‌மூக‌த்தால் வில‌த்த‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌ர் ப‌ய‌ணிக்கின்ற‌ன‌ர். அழ‌க‌ருக்கு எப்ப‌டி தான் க‌ட‌ல்க‌ன்னி ஷோ திருவிழாவில் ந‌ட‌த்தி நிறைய‌ப் ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌லாம் என்கின்ற‌ க‌ன‌வு இருக்கின்ற‌தோ அதேபோன்றே இந்நோயாளிக‌ளும் இத்தேவால‌ய‌த்திற்குப் போவ‌தென்ப‌து த‌ம் பிணியை ஏதோவொரு வ‌கையில் தீர்க்கும் அல்ல‌து குறைக்கும் என்கின்ற‌ ந‌ம்பிக்கையைத் த‌ம் வ‌ச‌ம் வைத்திருப்ப‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள். நீளும் இந்த‌ ரெயில் ப‌ய‌ண‌த்தில் பிற‌கு தேவால‌ய‌த்திற்குக் காணிக்கை கொடுப்ப‌வ‌ர்க‌ளும் ஏறிக்கொள்கின்றார்க‌ள். கூட‌வே வெயிலும்/வெம்மையும் ஒரு பாத்திர‌மாய் எல்லா நிலைக‌ளிலும் வ‌ந்து கொண்டிருக்கின்ற‌து. எஸ்.ராம‌கிருஷ்ணனின் அநேக‌ படைப்புக்க‌ளில் வெயில் ஒரு முக்கிய‌ இட‌த்தை எடுத்திருப்ப‌தை அவ‌ர‌து நாவ‌ல்க‌ளை வாசிக்கும் நாம‌னைவ‌ரும் அறிவோம். வெயிலை இந்த‌ள‌வு விரிவாக‌வும் உக்கிர‌மாக‌வும் எஸ்.ராவைப் போல‌ வேறெந்த‌ப் ப‌டைப்பாளியும் த‌மிழில் எழுதியிருக்கமாட்டாரென‌வே ந‌ம்புகின்றேன். நாவ‌லின் பாத்திர‌ங்க‌ளினூடாக‌ வெயில் விப‌ரிக்க‌ப்ப‌டும்போது வாசிக்கும் ந‌ம் விழிகளிலும் விர‌ல்க‌ளிலும் வெம்மை ஏறுவ‌து போன்ற‌ உண‌ர்வைத் த‌விர்க்க‌வும் முடிவ‌தில்லை.

அழ‌க‌ரின் ம‌க‌ள் செல்வி இர‌யில் பெட்டியெங்கும் காற்றைப்போல‌ சுழித்துச் சுழித்து ஓடிக்கொண்டிருக்கின்றாள். நோயாளிக‌ள்/நோய‌ற்ற‌வ‌ர்க‌ள் என்ற‌ பாகுபாடில்லாது எல்லா ம‌னித‌ர்க‌ளோடும் ஒட்டிக்கொள்ளவும் அவ‌ள் செய்கின்றாள். அவ்வாறான‌ ஒரு பொழுதில் ஒரு தொழுநோயாளியால் செல்விக்கு க‌தையொன்று சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. தொக்காடு தேவால‌ய‌த்திற்கு அருகில் ம‌ர‌ங்க‌ளின் திருவிழா வ‌ருட‌ந்தோறும் ந‌டைபெறும் என‌வும், அத்திருவிழாவில் எல்லா இட‌ங்க‌ளிலிருந்தும் ம‌ர‌ங்க‌ள் சென்று அங்கே ஒன்று கூடுமென‌வும், தான் அந்த‌ திருவிழாவை த‌ன் சிறுவ‌ய‌தில் க‌ண்டிருக்கின்றேன் என‌வும் அந்த‌த் தொழுநோயாளி செல்விக்குக் க‌தை கூறுகின்றார். செல்வி இந்த‌க்க‌தையை எவ்வாறு எடுத்துக்கொள்கின்றார் என்ப‌தை விள‌ங்கிக்கொள்ள‌ நாம் துயிலில் இறுதி அத்தியாய‌ங்க‌ள் வ‌ரை காத்திருக்க‌ வேண்டும்.

நீளும் இந்த‌ ரெயில் ப‌ய‌ண‌த்தோடு அழ‌க‌ரின் சிறுவ‌ய‌துக் க‌தையும் கூற‌ப்ப‌டுகின்ற‌து. அழ‌க‌ர் த‌ன் தாயை சிறுவய‌திலேயே இழ‌ந்துவிடுகின்றார். அவ‌ரின் த‌ந்தையார் ஒரு தியேட்ட‌ரில் காவ‌லாளியாக‌ வேலை செய்கின்ற‌வ‌ராக‌ இருக்கின்றார். அழ‌க‌ரின் வீட்டில் ச‌மைய‌ல் ஒருபோதும் நிக‌ழ்வ‌தில்லை; அருகிலுள்ள‌ ஒரு சாப்பாட்டுக் க‌டையிலேயே மூன்று நேர‌மும் அழ‌க‌ர் சாப்பிட‌ த‌ந்தை ஏற்பாடு செய்திருக்கின்றார். குடிகார‌ராக‌வும் இருக்கும் அழ‌க‌ரின் த‌க‌ப்ப‌ன் தியேட்ட‌ரில் இர‌வுக்காட்சிக‌ள் முடிந்த‌வுட‌ன் அதிக‌வேளையில் அங்கேயே இர‌வில் உற‌ங்கிவிடுப‌வ‌ராக‌வும் இருக்கின்றார். த‌னியே வீட்டில் உற‌ங்கும் அழ‌க‌ருக்கு இர‌வு அச்ச‌மூட்டுவ‌தாக‌வே இருக்கின்ற‌து. ஒருநாள் இர‌வு அழ‌க‌ர் த‌ந்தை த‌ங்கும் தியேட்ட‌ருக்கு இர‌வில் போகின்றார். அங்கேயே உற‌ங்கிவிடும் அழ‌க‌ருக்கு, அவ்விர‌வில் த‌ன் த‌க‌ப்ப‌னாருக்கும் சாப்பாட்டுக்க‌டைக்கார‌ரின் ம‌னைவிக்கும் இருக்கும் இர‌க‌சிய‌ உறவு தெரிந்துவிடுகின்ற‌து. த‌க‌ப்ப‌னும் அப்பெண்ம‌ணியும் ச‌ல்லாபிக்கும் காட்சியையும் அழ‌க‌ர் க‌ண்டுவிடுகின்றார். அப்பெண்ம‌ணி அவ்விட‌த்தை விட்டு ந‌க‌ர்ந்த‌தும், த‌க‌ப்ப‌ன் அழ‌க‌ர் த‌ம்முற‌வைக் க‌ண்ட‌த‌ற்காய் அடித்து உதைக்கின்றார். அத‌ன் நிமித்த‌ம் கோப‌ம் கொள்ளும் அழ‌க‌ர் சாப்பாட்டுக்க‌டைக்கார‌ரின் வீட்டுக்குக் கல்லெறிகின்றார். இனியும் இங்கிருந்தால் த‌க‌ப்ப‌ன் த‌ன்னைக் கொல்லாம‌ல் விட‌மாட்டார் என‌ அஞ்சும் அழ‌க‌ர் ஊரைவிட்டு ஓடுகின்றார். அன்று தொட‌ங்கும் அழ‌க‌ரின் ஓட்ட‌ம் நாவ‌ல் முடியும்வ‌ரையில் ஓரிட‌த்தில் த‌ங்க‌முடியாத‌ வாழ்வின் ஓட்ட‌மாய்ப் ப‌டிம‌மாக்க‌ப்ப‌டுகின்ற‌து.

இவ்வாறாக‌ ஊரை விட்டோடும் அழ‌க‌ர் இன்னொரு ந‌க‌ர‌த்திலுள்ள‌ சாப்பாட்டுக் க‌டையில் வேலை செய்ய‌த் தொட‌ங்குகின்றார். அந்த‌ச் சாப்பாட்டுக்க‌டையும் த‌ன் வீழ்ச்சியைச் ச‌ந்திக்கும்பொழுதில் ஜ‌க்கி என்னும் பெண்ம‌ணியைச் ச‌ந்திக்கின்றார். அப்போது அழ‌க‌ருக்கு ப‌தினாறு வ‌ய‌து. த‌ன‌க்கு உத‌வி செய்ய‌ த‌ன்னோடு கூட‌ வ‌ந்துவிடுகின்றாயா என‌க் கேட்கும் ஜ‌க்கியோடு அழ‌க‌ர் போய்விடுகின்றார்.

ஜ‌க்கி, த‌ன‌து த‌ங்கை டோலி ம‌ற்றும் ப‌ல‌ பெண்க‌ளையும் இணைத்து பாலிய‌ல் தொழில் செய்கின்றார். அவ‌ர்க‌ளுக்கு வேண்டிய‌ எல்லா உத‌விக‌ளையும் செய்கின்ற‌வ‌ராக‌ இருக்கும் அழ‌க‌ருக்கு முத‌ன்முத‌லான‌ பாலிய‌ல் உற‌வும் அங்கிருக்கும் பெண்க‌ளில் ஒருவ‌ரோடு நிக‌ழ்கிற‌து. வாடிக்கையாள‌ரின் விருப்ப‌த் தேர்வாக‌ இருக்கும் ஜ‌க்கியின் த‌ங்கை டோலி ஒருநாள் காணாம‌ற்போக‌ ஜ‌க்கி ம‌ன‌ம் உடைந்து போகின்றார். இறுதியில் தான் இனித் தொழில் செய்ய‌ப்போவ‌தில்லையென‌ த‌ன்னிட‌ம் இருக்கும் பெண்க‌ளுக்குப் ப‌ண‌த்தைப் பிரித்துக் கொடுத்து அவ‌ர்க‌ளை அனுப்பிவிடுகின்றார். த‌ன் பூர்வீக‌ ஊர் போகும் ஜ‌க்கியோடும் தானும் வ‌ர‌ப்போகின்ற‌தாய் கூறும் அழ‌க‌ரை 'என்னோடு வ‌ந்தால் உன் வாழ்வு சீர‌ழிந்துவிடும் என்னைவிட்டுப் போய்விடு' என‌ ஜ‌க்கி அழ‌க‌ருக்கு அறிவுரைகூறி அனுப்பி வைக்கின்றார். அழ‌க‌ர், தான் முத‌ன் முத‌லில் உட‌லுறவு வைத்துக்கொண்ட‌ பெண்ணோடு சேர்ந்து ஊரூராய்ச்சென்று நாக‌க‌ன்னி ஷோ ந‌ட‌த்துகின்றார். ஒருநாள் அந்த‌ப்பெண்ணும் அழ‌க‌ரைக் கைவிட்டு விட்டு வேறு யாரோ ஒருவ‌ரோடு ஓடிவிடுகின்றார். இறுதியில் தான் செய்யும் வேலையை மாற்றிக் கூறி சின்ன‌ராணியைத் திரும‌ண‌ஞ் செய்கின்றார். திரும‌ணத்தின்பின்னே சின்ன‌ராணிக்கு அழ‌க‌ரின் உண்மை முக‌ம் விள‌ங்குகின்ற‌து.  வேறு வ‌ழியில்லாத‌ கார‌ண‌த்தால் அழ‌க‌ரின் வ‌ற்புறுத்த‌லில் த‌ன‌து வாழ்வை நொந்த‌ப‌டி க‌ட‌ற்க‌ன்னியாக‌ வேட‌ம் போட்டு ஊரூராய் சின்ன‌ராணி அழ‌க‌ரோடு செல்ல‌த் தொட‌ங்குகின்றார்.

இன்னொரு கிளைக்க‌தையாக‌ ஜ‌க்கி, டோலியின் சிறுவ‌ய‌துக் க‌தைக‌ள் கூற‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஜ‌க்கி/டோலியின் த‌ந்தை ஒரு த‌மிழ‌ராக‌வும், தாய் ஒரு ம‌லையாளியாக‌வும் இருக்கின்றார்க‌ள். த‌ந்தையின் மீது பெருவிருப்புள்ள‌ ஜ‌க்கியால் த‌ந்தை நோயுற்று ம‌ர‌ண‌முறுவ‌தைத் தாங்கிக்கொள்ள‌ முடிய‌வில்லை. வ‌றுமையாலும், உரிய‌ உத‌வியுமில்லாத‌தால் ஜ‌க்கியும் டோலியும் பாலிய‌ல் தொழில் செய்ய‌த் த‌ள்ள‌ப்ப‌டுகின்றார்க‌ள் என்ப‌தாய் அவ‌ர்க‌ளின் க‌தை நீளும்.

2.
இவ்வாறு அழ‌க‌ர்,சின்ன‌ராணி, செல்வி, ஜ‌க்கி, டோலி என‌ 1980க‌ளில் நிக‌ழும் ப‌ல‌ க‌தைக‌ள் ச‌ங்கிலி இணைப்புக்க‌ளாய் நீளும்போது, இவ‌ற்றுக்குச் ச‌மாந்த‌ர‌மாய் 1870க‌ளில் நிக‌ழும் ஏல‌ன் ப‌வ‌ர் என்கின்ற‌ இயேசுவிற்கு த‌ன்னை அர்ப்ப‌ணித்த ம‌ருத்த‌வ‌ரின் க‌தையும் கூற‌ப்ப‌டுகின்ற‌து. ஏல‌ன் ப‌வ‌ர் அமெரிக்காவில் ம‌ருத்துவ‌ம் ப‌டித்த‌வ‌ர். அங்கேதான் அவ‌ர் முத‌ன்முத‌லாக‌ ம‌ருத்துவ‌ம் ப‌டிக்க வ‌ருகின்ற‌ இந்திய‌ப் பெண்ணைச் ச‌ந்திக்கின்றார். சேவை செய்வ‌தில் மிகுந்த‌ விருப்புள்ள‌ ஏல‌ன் ப‌வ‌ர் உல‌கின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் ம‌ருத்துவ‌ராக‌ப் ப‌ணியாற்றி, இறுதியில் தொக்காட்டிற்கு வ‌ருகின்றார்.

வெயில் எரிக்கும் தொக்காட்டில் எவ‌ருமே, (ஆங்கிலேய‌) ம‌ருத்துவ‌ம் அறிந்த‌ ஏல‌ன் ப‌வ‌ரைத் தேடி வ‌ர‌வில்லை.  ஏல‌ன் ப‌வ‌ரும் அவ‌ருக்கு உத‌வியாய் இருக்கும் சீபாளி என்கின்ற‌ சிறுமியும் நோயாள‌ர்க‌ளுக்காய்ப் ப‌ல‌ மாத‌ங்க‌ளாய் காத்திருக்கின்றார்க‌ள். ஏல‌ன் ப‌வ‌ருக்கு ம‌ருத்துவ‌ம் செய்ய‌ இட‌த்தை ஒழுங்கு செய்யும் பாத‌ருக்கும் ஏல‌ன் ப‌வ‌ர் மீது ஒருவ‌கையான‌ வெறுப்பே இருக்கின்ற‌து. த‌ம‌க்கான‌ நோயையும் த‌ம் வாழ்வின் ஒரு ப‌குதியாக‌ ஏற்றுக்கொண்டிருக்கும் தொக்காட்டு ம‌க்க‌ளுக்கு நோயிலிருந்து விடுத‌லை என்ப‌து குறித்து அக்க‌றைய‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ இருக்கின்றார்க‌ள். த‌ன்னிட‌ம் ம‌ருத்துவ‌ம் பார்க்க‌ வ‌ருவ‌த‌ற்கு ம‌க்க‌ளை ஈர்க்க‌வேண்டுமென்றால் முத‌லில் அவ‌ர்க‌ளின் ந‌ம்பிக்கையைப் பெற‌வேண்டும் என்கிற‌ புரித‌லை ஏல‌ன்ப‌வ‌ர் க‌ண்ட‌டைகின்றார். ஆனால், தேவால‌ய‌த்திற்கு அருகிலிருக்கும் ம‌ருத்துவ‌னைக்கு வ‌ந்தால் பாத‌ரைப் போல‌ ஏல‌ன் ப‌வ‌ரும் த‌ங்க‌ளை ம‌த‌ம் மாற்றிவிடுவார் என‌ ம‌க்க‌ள் அஞ்சுகின்ற‌ன‌ர். அந்த‌ அச்ச‌த்தைப் போக்கி, தான் மத‌ம் மாற்ற‌மாட்டேன் நீங்க‌ள் உங்க‌ள் ம‌த‌ந‌ம்பிக்கையுட‌ன் இருந்த‌ப‌டியே ம‌ருத்துவ‌ம் பார்க்க‌ வ‌ர‌லாம் என்கின்றார் ஏல‌ன் ப‌வ‌ர். கால‌ப்போக்கில் அம்ம‌க்க‌ளின் ந‌ம்பிக்கைக்குரிய‌வ‌ராக‌வும், அவ‌ர்க‌ளில் ஒருவ‌ராக‌வும் மாறிவிடும் ஏல‌ன்ப‌வ‌ர், எது ந‌ட‌ந்தாலும் த‌ன் இற‌ப்புவ‌ரை தொக்காடு ம‌க்க‌ளோடு இருக்க‌ப் போவ‌தாய் நினைத்துக்கொள்கின்றார்.

த‌மது நோய் குறித்து அறியாமையால், நீண்ட‌கால‌மாய் இருந்த‌ ம‌க்க‌ளின் சில‌ நோய்க‌ளைத் தீர்த்து வைக்கின்றார் ஏல‌ன்ப‌வ‌ர். ஆனால் இதைத் தேவால‌ய‌த்தின் பாத‌ர், இயேசுவின் அருளாலேயே இந்த‌ அற்புத‌ங்க‌ள் நிக‌ழ்கின்ற‌ன என‌ ம‌த‌ம் மாற்றும் த‌ன் பிர‌ச்சார‌த்திற்குப் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்கின்றார். இந்நோய்க‌ள் அறிவிய‌லால்தான் தீர்ந்திருக்கின்ற‌ன‌ ம‌த‌த்தினால் அல்ல‌ என்ற‌ குழ‌ப்ப‌ம் ஏல‌ன் ப‌வ‌ருக்கு வ‌ந்தாலும் அவ‌ர் இவ்விட‌ய‌த்தை அத‌ன்போக்கிலேயே விட்டுவிடுகின்றார்.

(இன்னும் வ‌ரும்)
ஆனி/2011
 நன்றி: தீராநதி (செப்ரெம்பர்/2011)

கொட்டியா - இறுதிப்ப‌குதி

Friday, July 22, 2011

கொட்டியா: முத‌ற்பகுதியிற்கு...

4.
ஆமி அப்ப‌டி அவ‌னின் குறியைப் பிடித்த‌து, பிற‌கு சோத‌னை என்ற‌ பெய‌ரில் த‌ட‌விய‌து எல்லாம் பெரிய‌ விட‌ய‌ம‌ல்ல‌. ஏன் இவ‌னே தன் குறியைப் பிடித்து சுய‌மைத்துன‌ம் செய்ப‌வ‌ன் தான். ஆனால் அப‌த்த‌மான‌ சூழ‌லில் துவ‌க்கிருக்கும் துணிச்ச‌லில் இவ‌ன‌து ச‌ம்ம‌த‌ம் இன்றி அப்ப‌டி ஆமி த‌ட‌விய‌துதான் இவ‌னுக்குள் கோப‌த்தை விதைத்திருந்த‌து. ஓர் இத‌மான‌ சூழ‌லில், அதிகார‌த்தின் நிழ‌ல் ப‌டியாது, இதே ஆமி விரும்பிக் கேட்டிருப்பாயின் இவ‌ன் த‌ன் குறியை ஆமிக்குக் கொடுப்ப‌திலோ அல்ல‌து அவ‌னின‌து குறியைத் தான் த‌ட‌வி விடுவ‌தையோ மறுக்காது செய்திருக்க‌க் கூடும். பிறகு யோசித்தபோது, ஆமியும் என்ன‌வித‌மான‌ பாலிய‌ல் வ‌ற‌ட்சியில் இருந்திருப்பானோ தெரியாது என‌வும் நினைத்தான். இவ‌னுக்காவ‌து ஒரு ந‌டிகை அணிந்திருந்த‌ க‌றுப்பு லெத‌ர் ஆடைகளைப் பார்த்த‌ப‌டியாவ‌து தான் விரும்பிய‌தைச் செய்ய‌ முடிந்திருக்கிற‌து. ஆமிக்காரன் ஒருபுற‌த்தில் மேலே இருந்த‌ ஆட்சியாள‌ருக்குப் ப‌ய‌ந்தும், இன்னொரு புற‌த்தில் கொட்டியாவுக்கு அஞ்சியும் இதையெல்லாம் செய்ய‌ நேர‌மில்லாது இருந்திருக்க‌வும் கூடும். ஆனால் ஒரு வீட்டுக்குள் அந்நிய‌ன் ஒருவ‌ன் அத்துமீறி நுழைவ‌தைப்போல‌, ஆமிக்கார‌ன் த‌ன‌து ச‌ம்ம‌த‌ம் இல்லாது த‌ன் உட‌லைப் ப‌ரிசோத‌னைக்க‌ள‌மாய் ஆக்கிய‌தைத்தான் இவ‌ன் ம‌ன‌தார‌ வெறுத்தான். பின்ன‌ர் இந்த‌ வெறுப்பு என்றும் க‌ரைக்க‌முடியாக‌ காழ்ப்பாய் 'ஆமிக்கார‌ன் என்றாலே இப்ப‌டித்தான்' என்று உறுதியான‌ இட‌த்தில் ஒட்டிக்கொண்ட‌து.

இவ‌னின் ஏஜென்சிக்கார‌ன் கொண்டு இற‌க்கும் ரூட்டுக்க‌ள் எல்லாம் ஒன்றின் பின் ஒன்றாக‌ப் பிடிப‌ட, அனுப்பப்பட்டுக் கொண்டிருந்த ஆட்கள் எல்லாம் இடைநடுவில் அகப்பட்டு இலங்கைக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். ம‌ற்ற‌ ஒரு ஏஜென்சிக்கார‌னோடு ஏற்ப‌ட்ட‌ ச‌ண்டையின் நிமித்த‌ம்தான் அந்த‌ ஏஜென்சிக்கார‌ன் 'உள‌வு' வைத்து இதைச் செய்துகொண்டிருக்கிறான் என்ற‌ ஒரு க‌தையும் அடிப‌ட்ட‌து. த‌மிழ‌ர்க‌ளினால் உண‌வில்லாது வாழ்ந்தாலும் உள‌வுப்ப‌டை இல்லாது வாழ‌முடியாது என்று இவ‌ன் நினைத்துக்கொண்டான் இப்ப‌டியே ஒன்றும் செய்யாது சும்மா இருந்தால் ஆமிக்கார‌ன் தன்னையும் புலியின் ஆளென‌ அள்ளிக்கொண்டு போய்விடுவான்  என‌ப் ப‌ய‌ந்து  ஒரு பாட‌சாலைக்குப் போக‌த் தொட‌ங்கினான். அது ஒரு சிங்க‌ள‌ப் பிர‌தேச‌த்தில் இருந்த‌ பாட‌சாலை. முன்னொருகாலத்தில் நன்கு இய‌ங்கி 83 க‌ல‌வ‌ர‌த்தில் எரிக்கப்பட்டு, பிறகு அதன் ஒரு சிறுப‌குதி ம‌ட்டும் பாடசாலையாக‌ இயங்கிவ‌ந்த‌து. இவ‌னைப் போன்று, எப்போது வெளிநாட்டுக்கு அந்த‌ர் ப‌ல்டி அடிக்கலாமென்று காத்துக்கொண்டிருந்த‌ பல‌ரே அங்கு ப‌டித்தார்க‌ள். மிச்ச‌ப் பெடிய‌ங்க‌ளில் அநேக‌ர் பாணந்துறைப் ப‌க்க‌ங்க‌ளிலிருந்து வ‌ந்துகொண்டிருந்த‌வ‌ர்க‌ள். அவ‌ர்க‌ளின் பெற்றோர்க‌ள் மிக‌க் குறைந்த‌ ஊதிய‌த்திற்கு இற‌ப்ப‌ர்த்தோட்ட‌ங்க‌ளில் க‌டும் வேலை செய்துகொண்டிருப்பவ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள். தான் மேலேயேற‌ ப‌க்க‌த்தில் இருப்ப‌வ‌னை கீழே உதைத்துத்த‌ள்ளும் த‌மிழ்ப்புத்தியின் சாய‌ல் கொஞ்சங்கூட‌ இல்லாது அந்த‌ப் பெடியங்கள் மிக‌ அருமையாக‌ இவ‌னோடு ப‌ழ‌கினார்க‌ள். அவர்களுக்குப் புலிக‌ளில் மிக‌ப்பெரும் ம‌திப்பும் ந‌ம்பிக்கையும் இருந்த‌து. புலிக‌ளை அருகில் பார்த்த‌ இவ‌னிட‌மிருந்து புலிக‌ளின் க‌தைக‌ளைக் கேட்க‌ ஆர்வ‌மாயிருந்தார்க‌ள். தாங்க‌ள் புலியில் சேரவிரும்பினால் த‌ங்க‌ளையும் இய‌க்க‌த்தில் சேர்ப்பார்க‌ளா என‌ அப்பாவியாய்க் கேட்டார்கள். அவர்களோடு ப‌ழ‌கி ப‌ழ‌கி யாரும் சிங்க‌ள‌த்தில் க‌தைத்தால் விள‌ங்கிக்கொள்ள‌வும், திரும்பிச் சிங்களத்தில் பதில் சொல்லவும் இவனால் முடிந்த‌து.

இவ்வாறாக‌ பாட‌சாலைக்குப் போய்க்கொண்டிருந்த‌ கால‌த்தில் அவ‌ள் ப‌ஸ்சினுள் அறிமுக‌மானாள். இவ‌னது பாட‌சாலைக்கு அருகிலிருந்த‌ சிங்க‌ள‌ப் பாட‌சாலைக்குச் சென்றுகொண்டிருப்பவளாக அவள் இருந்தாள். தொட‌க்க‌ நாட்க‌ளில் 'இவ‌னொரு கொட்டியா, இவ‌னுக்குப் புலிவால் எங்கிருந்து முளைக்கும்?' என‌ச் ச‌ந்தேக‌த்தோடு பார்ப்பவ‌ள் போல‌த்தான் தெரிந்தாள். பிற‌கு க‌தைக்க‌த் தொட‌ங்கிய‌ நாட்க‌ளில், 'கொட்டியா கொழும்பில் இருந்தால் எப்ப‌டிக் க‌ண்டுபிடிப்ப‌து?' என‌க் கொக்கி போட்டும் அவ‌ள் பார்த்தாள். 'கொட்டியா சாதார‌ண‌ ம‌னித‌ர்க‌ளல்ல‌, அவ‌ர்க‌ள் இராவ‌ண‌னின் ப‌ர‌ம்ப‌ரையைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள். ப‌த்துத் த‌லையோடு எவ‌ரையும் பார்த்தால் அது கொட்டியா என்ப‌து உறுதி' என‌ இவ‌னும் பெரிய‌ க‌ண்டுபிடிப்பாள‌ன் போலப் ப‌தில் சொன்னான். எப்போதும் போல ஒவ்வா முனைகளே கவர்வதைப் போல இவர்கள் இருவருக்கும் நெருக்கம் காலப் போக்கில் அதிகரிக்கத் தொடங்கியது. பாடசாலைக்குப் போகும்போது பஸ்சில் என்றில்லாது வேறு பல இடங்களிலும் சந்திக்கத் தொடங்கினார்கள்.

கொங்கேர்ட்டில் அப்போது 'காதலன்' படம் ஓடத்தொடங்கியிருந்தது. அவளையும் கூட்டிக்கொண்டு பல்கணி சீற் வாங்கிப் படம் பார்த்தபோது முதன் முதலில் அவளை முத்தமிட்டான். அந்த முத்தம் ஜானகி 'கோழிக்குஞ்சு தேடி வந்த கோபாலா' என ஹஸ்கிக்குரலில் பாடிக்கொண்டிருந்த‌போது நிக‌ழ்ந்திருந்த‌து. அதே காலப்பகுதியில்தான் அவனது பாடசாலையில் ஓ/எல் பரீட்சை நடந்துகொண்டிருந்தது. வெளிநாட்டுக்குப் போகும் கனவில் பாடசாலைக்கு வேண்டா வெறுப்புக்கு போய்க்கொண்டிருந்தவன் ஓ/எல் பரீட்சையையும் பொழுதுபோக்காகவே எழுதினான். 'காதலன்' படத்திற்கும் தன் காதலுக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு இருக்கின்றதென யோசித்து, சைவசமய பரீட்சை நடந்தபோது அவளோடு மீண்டும் படத்தின் பகல்காட்சியிற்குப் போனான். குறைந்த சனம் இருந்த தியேட்டரில் அவன் நினைத்தவற்றைச் செய்யமுடிந்தது. அவளை முத்தமிட்டபோது அவனின் தோளை வளைத்த அவளின் கரங்களைப் பிடித்து தனது குறியைத் தடவச்செய்தான். ஒருவித அதிர்ச்சியுடன் விலத்தியவளை 'எனக்கு அப்படிச் செய்வது பிடிக்கும், செய்துவிடமாட்டாயா?' என்றான். அவள் இதமாக அங்கே தடவத்தொடங்கினான். தன் விருப்புக்கு எதிராக தன் குறியைத் தடவிய ஆமியின் நினைவு இடையிடையே அவனுக்குள் வந்துபோனது. தனக்குப் பிடிக்காததைச் செய்த அவனின் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்தான் தன்மீது பிரியங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறாள் என்ற எண்ணம் வர அந்த ஆமியை மன்னிக்கத்தொடங்கினான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சம்பவத்தை மறக்கவும் விரும்பினான்.

5.
ஏஜென்சிக்காரன் மீண்டும் ஆட்களை கொண்டிறக்கத் தொடங்கியிருந்தான். இந்த முறை எல்லாம் சரிவருமென இவனை அனுப்பிவைக்க இவன் மலேசியாவில் பிடிபட்டு திருப்பி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டான். இனி வெளிநாட்டுக்குப் போவதென்றால் மீண்டும் காசு கட்டவேண்டும். ஏற்கனவே கொழும்பிலிருக்கும் செலவை நோர்வேயிலிருந்த சித்தப்பாதான் அனுப்பிக்கொண்டிருந்தார். யாரிடம் கையேந்துவது என்பதும் தெரியாது மனம் சிதறி அவன் அலைய‌த் தொட‌ங்கினான். 'என்னை விட்டுப் பிரியக்கூடாது என்றுதான் இதெல்லாம் நடக்கிறது' என அவள்தான் அவன் மனதை வேறுதிசைகளில் தேற்றினான். வெளிநாட்டுக்குபோனால் இவளைக் கைகழுவிவிடுவது என்ற யோசனையில்தான் இவன் இருந்தான் என்பதே உண்மை. ஆனால் அது விரைவில் நடக்காது போல இருக்கிறதே என மனதில் சலித்துக்கொள்ளவும் தவறவில்லை.

அவள் இப்போது உயர்தரத்தில் படித்துக்கொண்டிருந்தாள். இவன் ஓ/எல்லிலேயே குழப்பியதால் மேலே படிக்க முடியாதிருந்தது. சும்மா கொம்பியூட்டர் கிளாஸ்களுக்கு மட்டும் ஆமிப்பிரச்சினைகளில் இருந்து தப்புவதற்காய்ப் போகத் தொடங்கினான். ஒருநாள் மாலை அவளோடு கடற்கரைக்குப் போனபோதுதான் அங்கே இருந்த ஒரு சோடியில் தெரிந்த முகம் தெரிகிறதென உற்று உற்றுப்பார்த்தான். 'அட இது எங்களின் குதிரையல்லவா? குதிரை எப்படி கொழும்புக்குப் பாய்ந்து வந்தது?' என யோசித்தான். எனினும் ஒரு இளைஞனோடு பேசிக்கொண்டிருந்த குதிரையைக் குழப்ப அவன் விரும்பவில்லை; ஆனால் சற்றுத் தொலைவில் இருந்தபடி அவர்களை அவ்வப்போது பார்த்துக்கொண்டிருந்தான். குதிரையோடு கதைத்த இளைஞன் ஒரு தொலைபேசி அழைப்பு வர, அங்கிருந்து வெளிக்கிட்டுப் போனான். இப்போது குதிரை இவனை நோக்கி நடந்து வந்து, 'நீ xxxx கொலிஜீல் படித்த xxx தானே?' என்றது. ஓமென்றான். குதிரை, இவனைக் கண்டு நான்கு வருடங்களுக்கு மேலிருக்கும். தானும் வெளிநாடு போகத்தான் கொழும்புக்கு வந்திருக்கின்றேன் என்றார். பக்கத்தில் இருந்து அவளை அறிமுகப்படுத்தியபோது, 'என்னடா... ஊரில் சிங்களவனால் இவ்வளவு வாங்கி அனுப‌வ‌ப்ப‌ட்ட‌ பின்னும், இப்ப‌டிச் சிங்களப் பெட்டையோடு திரிகிறாய்' எனச் சொன்னார். 'அக்கா, மெல்லமாகக் கதையுங்கோ, அவளுக்குக் கொஞ்சம் தமிழ் விளங்கும்' என‌ இவ‌ன் கிசுகிசுத்தான். ஒருநாள் ஆறுத‌லாய் தான் இருக்கும் இடத்துக்கு வா என்று முகவரியையும் தொலைபேசி நம்பரையும் குதிரை இவனுக்குக் கொடுத்தார்.

குதிரை இருந்த வீட்டிற்கு இவன் அவ்வப்போது பிறகு போகத் தொடங்கினான். அவர்கள் இருவருக்கும் த‌ம் ஊர் ப‌ற்றியும் பாட‌சாலை ப‌ற்றியும் க‌தைக்க‌ நிறைய‌ விட‌ய‌ங்க‌ள் இருந்த‌ன‌. இவனால் ந‌ன்கு சிங்களம் பேசமுடியும் என்பது குதிரைக்கு ஆச்சரியமாக இருந்தது. பிறகான குதிரையுடனான சந்திப்புக்களில் அவளையும் கூட்டிக்கொண்டுபோனான். 'சிங்களத்தி' என்று தொடக்கத்தில் வெறுப்பு இருந்தாலும் போகப்போக குதிரைக்கும் அவளைப் பிடித்துப் போனது. எல்லோரும் சேர்ந்து அடிக்கடி வெளியே போய்வருபவர்களாக இருந்தார்கள். ஆமிக்காரன் வீதியில் நின்று சோதனைக்காய் மறித்தாலும் அவளின் சிங்கள தேசிய அடையாள அட்டை இவ‌னையும் குதிரையையும் எளிதாய்க் காப்பாற்றிக் கொண்டிருந்தது. ஒருநாள் விகாரைக்கு இவர்கள் எல்லோரும் போனபோது குதிரை, 'ஏன் எங்கடை சைவக்கோயில்கள் இப்படி அமைதியாய் இருப்பதில்லை?' என‌ அடிக்க‌டி சொல்லி விய‌ந்துகொண்டிருந்தார்.

மீண்டும் தேர்தல் வரத்தொடங்கியது. தேர்தல் பிரச்சாரங்கள் எல்லா இடத்திலும் அமளி துமளிப்பட்டது. கொஞ்ச நாட்களாய் குதிரையைத் தொடர்பு கொள்ளவில்லை. நேரில் போய் குதிரை இருந்த வாடகை அறையில் பார்த்தபோதும் அவர் எங்கோ கண்டிக்குச் சுற்றுலா போய்விட்டாரென வீட்டின் சொந்தக்காரர் கூறினார். தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பலப்பட்டதால் கண்டபடிக்கு ரோட்டிலும் இவனால் திரியமுடியவில்லை. திடீரென்று கொழும்பின் சூழல் மாறத்தொடங்கியது. நிறைய இடங்களில் குண்டுகள் அங்குமிங்குமாய் வெடிக்கத் தொடங்கின. ஒருநாள் அவள் வெளிறிய முகத்தோடு இவனைக் காண வந்தாள். 'அஸ்வயா அக்கா செத்துப்போனா....அவதான் xxxx ஐ கொல்லப்போன தற்கொலைக் குண்டுதாரி என பொலிஸ் சொல்கிறது' என்றாள். இவனுக்கு அது அதிர்ச்சியாகவும் நம்பமுடியாததாகவும் இருந்தது. இவன் 'குதிரை அப்படியிருக்க முடியாது, அவா தான் இயக்கத்தில் இருக்கிறேனென எனக்குச் சொல்லவே இல்லை' என்றான். 'என்னதான் என்றாலும், இனி அவவோடு தொடர்புடைய எங்களைத்தான் ஆமி தேடும், கெதியாய் எங்கையாவது போய் ப‌துங்கு' என்றாள் அவ‌ள். இவனுக்கு கொழும்பில் எங்கே போய் ஒளிவது என்றும் தெரியவில்லை. தனக்கு வாழ்க்கையே இனி பூசாவில்தான் என்ற அச்சம் இவனுக்குள் பரவத்தொடங்கியது. கடைசியில் அவள்தான் தங்களின் உறவுக்காரர் இருக்கும் இரத்தினபுரியில் கொண்டுபோய் தங்கவைத்தாள். 'என்ன காரணம் கொண்டும் வெளியில் திரியவேண்டாம், கதைப்பதென்றாலும் சிங்களத்தில் மட்டும் கதை, நான் வந்து அவ்வப்போது சந்திக்கின்றேன்' என்று சொல்லிவிட்டுப்போனாள். 'நீ ஏன் கொழும்புக்கு போகின்றாய்? உன்னையுமல்லவா விசாரிப்பார்கள்' என்று இவன் கேட்டதற்கு, 'நான் அதைச் சமாளிப்பேன். நீ கவனமாயிரு' என்றாள்.

விசாரித்து விசாரித்து கடைசியில் ஆமி அவளையும் கண்டுபிடித்துவிட்டது. விசாரணைக்கு என்று இரண்டு நாள் தடுப்புக்காவலில் வைத்து அவளை 'எல்லாவித'மாயும் விசாரித்திருக்கின்றார்கள். அவள் தனக்கு இவனைத்தான் நன்கு தெரியும், குதிரையும் இவனும் ஒரே ஊர் என்றபடியால்தான் குதிரையோடு பழக்கம் என்றிருக்கிறாள். 'இவன் எங்கே?' என்று கேட்டபோது 'குதிரை இப்படிச் செய்துவிட்டதால், ஆமி தன்னைப் பிடித்துவிடும் என்பதால் புலியின் பகுதியிற்குள் தப்பி ஓடிவிட்டான்' என்றும் அவள் சொல்லியிருக்கின்றாள். இவன் கொழும்பில் வாடகைக்கு இருந்த இடத்துக்கு அவளையும் கூட்டிக்கொண்டு போய், இவனுக்கும் புலிக்கும் தொடர்பிருக்கிறதா எனத் தேடியிருக்கின்றனர். அங்கே அவன் படித்துக்கொண்டிருந்த புத்தகங்களையும், 'வயது வந்தவர்களுக்கான' சஞ்சிகைகளையும் தவிர வேறு எதுவும் தேடப்போனவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவளை விடுதலை செய்தபோது, எப்போது விசாரணைக்குக் கூப்பிட்டாலும் வரச்சொல்லி அனுப்பி வைத்திருந்தார்க‌ள்.

இதெல்லாம் நடந்து மூன்று கிழமைக்குப் பிறகு அவள் இவனைத் தேடி இரத்தினபுரிக்கு வந்தாள். 'இப்படியே இங்கே ஒன்றுமே செய்யாமல் ஒளிந்துகொண்டிருந்தால் பைத்தியம் பிடித்துவிடும், கொழும்புக்கு வந்தாலும் ஆமி அப்பிக்கொண்டு போய்விடுவான், எதையாவது செய்யவேண்டும்' என இவன் அந்தரப்பட்டுக்கொண்டிருந்தான். வெளிநாட்டுக்கு என்ன விலை கொடுத்தாலும் தப்பிப்போவதே ஒரேயொரு வழியெனத் தெரிந்தது. நோர்வேச் சித்தப்பாவும் தன்னால் கொஞ்சப் பணமே தரமுடியுமெனச் சொன்னார். என்ன செய்வதென குழம்பியபோது தான் மிச்சக் காசைக் கொண்டுவருகின்றேன். நீ பொறுமையாக இரு என‌க் கூறிவிட்டு அவள் கொழும்புக்குப் போனாள்.

6.
இரண்டு வாரத்தில் உரிய பணத்தை அவள் கொண்டுவர, ஏஜென்சிக்காரனை எல்லாம் தயார் செய்யச் சொல்லி, நேரடியாக இரத்தினபுரியில் இருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்குவதாய் இவன் சொன்னான். கொழும்பில் கொஞ்ச நேரம் இருப்பதைக் கூட சூழலின் தீவிரம் காரணமாய்த் தவிர்க்கவே விரும்பினான். அவளிடம் இவனுக்கு அவசியமான மிச்ச ஆவணங்களை காசு கொடுத்து கள்ளமாகச் செய்து தரச் சொன்னான். மூன்றாம் முறை எல்லாவற்றையும் தயார் செய்து விட்டு அவள் அவனைச் சந்தித்தபோது 'அஸ்வயா அக்கா நேரடியான தற்கொலைக் குண்டுதாரி இல்லையாம். ஆனால் அதற்கான வழியைக் கிளியர் செய்து கொடுத்த ஒருவராம்' என்றாள். எப்படியெல்லாம் இவளுக்கு நுட்பமான தகவல்கள் கிடைக்கிறதென இவனுக்கு வியப்பாயிருந்தது. நூறு மீற்றரை மின்னலாய்க் கடக்கும் குதிரை, தாக்குதலுக்கான‌ வழியைக் காட்டிவிட்டு ஏன் த‌ப்பிப் போய்விடவில்லை என இவன் யோசித்தான். சுகதாசா அரங்கில் எல்லோரும் வியக்க ஓடியிருக்கவேண்டிய குதிரை இறுதியில் ஓர் அரசியல் மேடையில் எவரும் உரிமை கோராத உடலமாகச் சிதைந்துபோனதை இவனால் க‌ற்ப‌னை செய்துபார்க்கவே முடியாதிருந்தது. தனது கனவைப் போரின் மூலம் சிதைத்தவர்களைப் பழிவாங்கத்தான் குதிரை இயக்கத்தில் சேர்ந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் குதிரைக்கு மாலைசூட நூறுமீற்றருக்கும் அப்பால் நீண்ட வரிசையில் நின்ற ஆண்களை எல்லாம் உதறித் தள்ளிவிட்டுப்போக குதிரைக்கு பைத்திய‌மா என்ன?

இவனது, வெளிநாடு போவதற்கான இரண்டாவதான முயற்சி வெற்றிகரமாய் நிகழ்ந்துவிட்டது. இடையில் பிடிபட்டு இலங்கைக்குத் திருப்பியனுபினால் பூசா முகாமும் நாலாம் மாடியும்தான் வாழ்வு என்ற பயமே எல்லாக் கள்ளவிடயத்தையும் கவனமாகக் கடந்துவரச் செய்திருந்தது. அந்தப் பயணமே ஒருவன் மாடியுயரத்தில் ஒற்றைக் கயிற்றில் நடந்துபோவது போலத்தான் இருந்தது. எங்கேயும்... ஓரிடத்தில் பிசகினால் எல்லாமே முடிவுக்கு வ‌ந்துவிடும். மரண பயத்திற்குத்தான் எவ்வளவு வலிமை, வாழ்வில் செய்யமுடியாச் செயல்களையும் எல்லாம் அது செய்யத் தூண்டிவிடுகின்றது. முழுப் பயணமுமே ஒரு கொடுங்கனவாய்த்தான் இருந்தது. அதை ஒரு ஆறுதலான பொழுதில் இருந்து கூட ஒவ்வொரு பகுதிகளாய் மீண்டும் நினைத்துப் பார்க்க அவன் விரும்பவில்லை. இயக்கங்களில் இருந்து ஆட்களைச் சுட்டுவிட்டு வெளிநாடுகளில் வேறு சூழல்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களும் அப்படித்தான் இருப்பார்கள் போலும்.

முதல் வெளிநாட்டு முயற்சியின் போது அவளைக் கைகழுவி விட்டுப் போகவேண்டும் என்றிருந்தவனுக்கு அவள் பிறகு செய்த உதவிகள் எல்லாம் மனதை மாற்றிவிட்டது. இன்னும் திருத்தமாய் தமிழ் செண்டிமெண்டலில் சொல்லவேண்டுமென்றால், 'இபோதைய வாழ்வு அவள் இட்ட பிச்சைதான்'. அவள் அன்றைய பொழுதில் அருகில் இருந்திருக்காவிட்டால் எல்லாமே சூன்யமாகத்தான் முடிந்திருக்கும். அவளையும் சில வருடங்களுக்குப் பிறகு அவன் ஸ்பொன்சர் செய்து வெளிநாட்டுக்குக் கூப்பிட்டான். 'இலங்கையில்தான் கொட்டியாவோடு காலம் தள்ளவேண்டியிருக்கிறதென்றால் நீ வெளிநாட்டுக்குப் போயும் கொட்டியாவோடு வாழ‌ப் போகின்றாயா?' எனத் தலையிலடித்து அவளது குடும்பம் அவளை அனுப்பி வைத்திருந்தது. குதிரை, கொட்டியாவாக இருந்ததால் அவனும் கொட்டியாதான் என்பதில் அவளது குடும்பத்திற்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. அவர்களாவது பரவாயில்லை, வேறு சில சிங்களவருக்கு முழுத்தமிழருமே 'ப‌த்துத்த‌லை' கொட்டியா போல‌வே தெரிந்தார்கள்.

7.
கட்டுநாய‌க்கா விமான‌த்த‌ள‌த்தைப் புலிகள் அடித்துக் கொண்டிருந்தார்கள். செய்திகள் எல்லாத் திசைகளிலும் சுடச்சுடப் பரவிக்கொண்டிருந்தது. இதையறிந்த அவள், 'ஏன் இரத்மலானைக்கு அடிக்காமல் கொட்டியா கட்டுநாயக்காவிற்கு அடிக்கிறது?' எனத் தீவிரமான யோசனையுடன் கேட்டாள். 'உனது கேள்வியைப் பார்த்தால் இங்கே ரேடியாவில் அரசியல் ஆய்வாளராகும் தகுதி தெரிகிறது. தமிழைக் கொல்லாது கதைத்தால் அதற்கு முயற்சிக்கலாம்' என்றான் இவன் நக்கலுடன். அவளுக்கு இப்படிச்சொன்னது சுட்டுவிட்டது போலும், 'உனக்கு பிசுதா...உன்னை வெளிநாட்டுக்கு அனுப்ப எப்படிக் காசு வந்தது எனத் தெரியுமா?' என்றாள். 'நீதானே உங்களுக்கிருந்த ஏதோ ஒரு காணியை விற்றுத்தான் அந்தக்காசு வந்தது எனச் சொன்னாய்' எனக் கூறவும், 'இப்பவும் உன்னைக் கொட்டியா என நம்புகிற எங்களின் குடும்பம் அப்படிக் காணியை விற்க விட்டிருப்பார்களா?' என்றாள். 'சா....ஏன் நான் இந்த‌த் திசையில் யோசித்துப் பார்க்க‌வில்லை' என்று அவனுக்கு அவமானமாய் இருந்தது. 'இந்தச் சிங்களப் பெட்டையோடு திரிந்து திரிந்து தன் குறுக்குத்தனமான த‌மிழ்ப்புத்தி மழுங்கிவிட்டதாக்கும்' என நினைத்தான். 'அப்படியெனில் உனக்கு எப்படி அவ்வளவு பணம் வந்தது?' தோற்றுவிட்ட தொனியில் கேட்டான் அவன்.  'சொல்கிறேன், ஆனால் பிறகு கோபப்படக் கூடாது சரியா?'  அறிவு மழுங்கி ஏற்கனவே அவமானப்பட்டவன் இனி கோபப்படவா முடியும்?  'ம்... ' என்றான்.

'அஸ்வயா அக்காவோடு நான் நல்ல நெருக்கமல்லவா? நான் சிங்களத்தி என்பதால் அக்காதான் கேட்டா, இரத்மலானை விமான நிலையம் பற்றி தகவல் சேகரித்து தரச்சொல்லி....அத்தோடு அங்கே எங்கள் மாமா ஒருவரும் வேலை செய்துகொண்டிருந்தார்.  அஸ்வ‌யா அக்கா சிங்களம் தெரிந்த அண்ணா ஒருவரையும் என்னோடு தொடர்புபடுத்தியிருந்தார். நான் தான் முடியாது முடியாது என மறுத்துக்கொண்டிருந்தேன். பிறகு அஸ்வயா அக்காவின் பிரச்சினையில் நீ மாட்டுப்பட்டதால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. அவர்களிடம் சம்மதம் சொல்லி அந்த வேலைக்காய் காசை வாங்கிக்கொண்டேன்' என்றாள்.  இவனுக்கு தானோர் சூறாவளிக்குள் அகப்பட்டதுபோல எல்லாம் குழப்பமாய்த் தெரிந்த‌து. தமிழாக்கள் சோற்றுக்கு வழியில்லாவிட்டாலும் உளவு பார்க்காமல் உயிர் வாழமாட்டார்கள் என்ற கலாசாரத்தை சிங்களவர்களுக்கும் தொற்ற வைத்துவிட்டார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. 'நாசமாய்ப் போச்சு வேண்டாம் வேண்டாம் என்று தப்பியோடினாலும் என்னைச் சுற்றி எப்போதும் கொட்டியா வந்துகொண்டேயிருக்கிறது. இதுகூடத் தெரியாம‌ல் நான் என்ன‌ மயிரா புடுங்கிக்கொண்டிருக்கின்றேன்' என்று தன் இயலாமையைப் பெருங்குரலில் கத்திக் காண்பித்தான். பிறகு எல்லா அதிர்வெண்ணும் அடக்கி அக்கம் பக்கம் பார்த்து மெல்லியகுரலில் 'நீயும் புலியா?' என‌க் குழ‌ப்ப‌த்துட‌ன் அவ‌ளைப் பார்த்துக் கேட்டான். 'இன்ன‌மும் இல்லை. மிச்ச‌முள்ள‌ ஒன்ப‌து த‌லைக‌ளும் முளைத்தால்தானே உண்மையான‌ கொட்டியா, இல்லையா?' என‌க் க‌ண்ணைச் சிமிட்டிய‌ப‌டி ப‌டுக்கைய‌றைக்குள் போனாள் அவ‌ள்.
----------------------

*யாப்பா பட்டுவா - யாழ்ப்பாணப் பட்டின‌ம்
*கொட்டியா - புலி
*அஸ்வயா - குதிரை


(2010)
நன்றி: அம்ருதா(ஆடி/2011)
 
(போர்ச்சூழ‌லும், ம‌ர‌ண‌ங்க‌ளும் வ‌ராத‌ ஒரு க‌தையை எழுத‌மாட்டேனா என‌ எதிர்பார்த்திருக்கும் தோழிக்கு...)

கொட்டியா

Thursday, July 21, 2011

நன்றி: அம்ருதா(ஆடி/2011) 

1.
அவ‌ர்க‌ள் அப்ப‌டி அவ‌னைப் பிடித்து எழுப்பிய‌போது அதிர்ச்சியாக‌ இருந்த‌து. அதிர்ச்சியை விட அருவ‌ருப்பாய் இருந்த‌து என‌த்தான் சொல்ல‌வேண்டும். அதிர்ச்சி அருவ‌ருப்பு இர‌ண்டும் திர‌ண்டு கோப‌மாய்ப் பொங்க‌த் தொட‌ங்கிய‌போது, அதை நேர‌டியாக‌க் காட்ட‌முடியாதத‌ற்கு அவ‌ர்க‌ளின் தோள்க‌ளில் தொங்கிய‌ துப்பாக்கிக‌ள் ஒரு கார‌ண‌மாய் இருந்த‌து. ச‌ருவ‌ச்ச‌ட்டியைக் க‌விழ்த்துப் போட்டாற்போல‌ இரும்புக் க‌வ‌ச‌ங்க‌ள் அவ‌ர்க‌ளின் த‌லைக‌ளில் தொங்கிக்கொண்டிருந்த‌ன‌. இரு காதுக‌ளையும் இணைத்து நாடியைச் சுற்றியோடிய‌ க‌றுப்பு நாடா 'ச‌ருவ‌ச்ச‌ட்டி' த‌லையில் இருந்து விழாது தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்த‌து. அந்த‌க் க‌றுப்பு நாடாவை அறுத்து, க‌ழுத்தில் இறுக்கி அவ‌ர்க‌ளைக் கொன்றால் என்ன‌ என்ற‌ எண்ண‌ம் அந்த‌ அப‌த்த‌மான‌ நேர‌த்திலும் அவ‌னுக்குள் ஓடிய‌து. அன்றைய‌ ச‌ம்ப‌வ‌த்தின்பின் தான் அவ‌னுக்கு க‌ரும் ப‌ச்சை நிற‌த்திலும், ஆண்க‌ள் அணியும் நீண்ட‌ கால‌ணிக‌ள் மீதும் வெறுப்பு வ‌ந்திருக்க‌ வேண்டும்.

கொழும்பில் எல்லா வீதிக‌ளுக்கும் த‌லையான‌ வீதி என‌ ந‌ம்ப‌ப்ப‌டும் காலி வீதியில் வெள்ள‌வ‌த்தையும் தெஹிவ‌ளையும் பிணைந்துகொள்ளும் விகாரை வீதிக்கு அருகில்தான் அவனது தற்காலிக வசிப்பிடம். காலி வீதியின் முக‌ப்பில் 'சிலோன் இன்' மெல்லிய‌ நீல‌ நிறத்தில் உய‌ர்ந்து நின்று எல்லாவற்றையும் விடுப்புப் பார்த்துக்கொண்டிருக்கும். இன்னும் துல்லிய‌மாக‌ச் சொல்வ‌தென்றால் அனுர‌த்த‌ ர‌த்வ‌த்த‌ யாப்பா ப‌ட்டுவாவில் சிங்க‌க் கொடியை ஏற்ற‌ இன்னும் சில‌ மாத‌ங்க‌ளே இருந்த‌தான‌ கால‌ப் பொழுது அது.

சிலோன் இன் இலிருந்து உள்ளே ந‌ட‌க்க‌த் தொட‌ங்கினால் சில‌ ப‌ல‌ச‌ர‌க்குக் க‌டைக‌ளையும் பெட்டிக் க‌டைக‌ளையும் க‌ட‌க்க‌ வேண்டியிருக்கும். அதைச் சற்றுத் தாண்டினால் பெரு நகரத்து நெரிச‌லுக்கும், ஆரவாரத்திற்கும் த‌ன‌க்கும் எவ்விதத் தொட‌ர்புமில்லையென‌ ஆழ்துயிலில் நிற்கும் வெள்ளைநிற‌ விகாரை வரும். அங்கே மாலையில் -சூரியன் மறைகிறதோ இல்லையோ- தாம‌ரையும் அரளியும் காவியபடி கூந்தல் நீர் விசுக்கிப் போவர், பெண்கள். பிறகு வருவது வ‌ல‌ப்புற‌த்தில் தைய‌ல்க‌டையும், எதிரே சிகை அல‌ங்கார‌க் க‌டையையும். ச‌லூனுக்குள் 'காத‌லன்' ந‌க்மாவும் 'வீரா' ரோஜாவும் வ‌ழுவ‌ழுப்பான‌ தாளில் இர‌ண்ட‌டி உய‌ர‌ச்சுவ‌ரில் -புத்த‌ர் ப‌ற்றிய‌ நினைவுக‌ளைக் க‌லைத்து விட‌வேண்டுமென்ப‌த‌ற்காக‌வே- சிரித்துக்கொண்டிருப்பார்க‌ள். இனி வ‌ரும் பாதையினுள் முத‌ன்முத‌லாக‌ நுழையும் ஒருவ‌ராக‌ இருப்பின் அவ‌ர் த‌ன் மூக்கினைப் பொத்திக் கொள்பவ‌ராக‌ இருப்பார். ஏனெனில் இப்போது க‌ளுபோவிலையின் 'புக‌ழ்பெற்ற‌' கால்வாயைக் க‌ட‌க்க‌ வேண்டியிருக்கும். உருக்கி ஊற்றும் தார்க்க‌லரிலேயே ஓடும் நீர் இருக்கிற‌தென்றால் அத‌ன் ந‌றும‌ண‌ம் ப‌ற்றி வித‌ந்துரைக்க‌த் தேவையில்லை.

பாலத்தைத்தாண்டினால் வருவது ஐந்து வீதிச்ச‌ந்தி. உட‌னேயே இட‌துப‌க்க‌ம் திரும்பிக் கால்வாயோடு ச‌மாந்த‌ர‌மாய் ந‌ட‌ந்தால் அவ‌னிருக்கும் வாட‌கை வீட்டை எளிதில் அடையாள‌ங் காண‌லாம். இஃதொரு விதானையின் பெரிய‌வீடு. அவ‌ர் சின்ன‌ வீட்டிலிருந்துகொண்டு இதை ப‌குதி ப‌குதியாய்ப் பிரித்து வாட‌கைக்குக் கொடுத்திருக்கிறார். 'ப‌' வ‌டிவ‌த்தில்தான் இவ்வீடு இருக்கிற‌து. ஆனால் இவ‌ன் குடியிருந்த‌து 'ப‌' வ‌டிவில் உள்ள‌ட‌க்கிய‌ ப‌குதியில் அல்ல‌. 'ப‌'னாவிற்குக் குற்றுப் போட்டு 'ப்' ஆக்கியிருந்த‌ க‌ராஜ் கொட்ட‌கைக்குள்தான் அவ‌னின் இருப்பு. ஏதாவ‌து ஏஜென்சியிட‌ம் காசைக் கொட்டிக் கொடுத்துவிட்டு வெளிநாடொன்றுக்கு ஓடுவ‌த‌ற்கு அவ‌னைக் குடும்ப‌ நிலவ‌ர‌மும் நாட்டு நிலைமைக‌ளும் த‌ள்ளிவிட்டிருந்த‌து. அவ‌ன் தனது ப‌தினைந்தாவ‌து வ‌ய‌தை ச‌ங்குப்பிட்டிப் ப‌ட‌குத்துறையில் கழித்துக் க‌ட‌ந்துவ‌ந்திருந்தான். அத‌ற்கு முத‌ல்நாள் ப‌க‌லில்தான் இர‌ண்டாந்த‌வ‌ணைக் க‌ணித‌ப் ப‌ரீட்சையை எழுதி, க‌டைசிவ‌ரை த‌ன் ப‌ய‌ண‌த்தை மிக‌ இர‌க‌சிய‌மாக‌ வைத்துக்கொண்டான். ப‌ரீட்சைத்தாளை வைத்து எழுதும் (பைல்)ம‌ட்டையில் பிள்ளையார் என்றும்போல‌ முக‌ம் ம‌ல‌ர‌ப் பிர‌காச‌மாக‌ இருந்தார். இட‌துப‌க்க‌த்தில் அவ‌னுக்குப் பிடித்த‌ பெண் த‌ன் இள‌முலை மேசையில் தொட‌ குனிந்து தீவிர‌மாய் ப‌ரீட்சையை எழுதிக்கொண்டிருந்ததாள். 'நான் கொழும்புக்குப் போகிறேன், இனி என்றென்றைக்குமாய் உங்க‌ளைக் காண‌முடியாது' என‌ப் பிரியாவிடை அவளிடம் பெற‌முடியாப் புற‌ச்சூழ‌லின் துய‌ர‌ம் அவ‌னுக்குள் ஒரு க‌ருங்க‌ற்பாறையாக‌ க‌ன‌த்துக் கிடக்கிறது.

2.
அவ‌னோடு அந்த‌ க‌ராஜ் வீட்டை இன்னுமிர‌ண்டு பேர் ப‌கிர்ந்துகொண்டிருந்தன‌ர். ஒருவ‌ர் ப‌ம்ப‌ல‌ப்பிட்டியிலிருந்த‌ சாப்பாட்டுக்க‌டையில் வேலை செய்துகொண்டிருந்தார். ம‌ற்ற‌வ‌ர் மொற‌ட்டுவ‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்திற்கு போய்க்கொண்டிருந்தார். சாப்பாட்டுக் க‌டையில் வேலை செய்த‌வ‌ர் அவ‌னுக்கு உற‌வின‌ராய் இருந்த‌தால் இந்த‌ இட‌ம் எளிதாக‌ அவ‌னுக்குக் கிடைந்திருந்த‌து. இருந்த‌ க‌ராஜ் வீட்டிற்கு வெளிக்கதவுக்கு மட்டுந்தான் பூட்டு இருந்த‌து. உள்ளே ஒப்புக்கு இர‌ண்டு அறைக‌ளாய் ம‌ர‌ப்பல‌கைக‌ளை வைத்துப் பிரித்துவைத்திருந்தார்க‌ள், ஆனால் கதவுகளில்லை. ஆமி செக்கிங்கிற்காய் வ‌ருகின்றார்க‌ள் என்றால் ஒரே அம‌ளி தும‌ளியாக‌த்தான் இருக்கும். நிறைய‌க் குடும்ப‌ங்க‌ள் இந்த‌ 'ப்' வீட்டில் இருப்ப‌தால் ஒரு வீட்டில் ஆமி நுழைந்துவிட்டான் என்றால் எல்லா வீடுக‌ளும் ச‌ட‌ச‌ட‌வென்று விழித்துத் த‌யார் நிலைக்கு வ‌ந்துவிடும். ஆமி பூட்டிய‌ க‌த‌வை 'த‌ட‌த‌ட‌'வென‌ ஓங்கி அறைய‌முன்ன‌ரே கத‌வைத் திற‌ந்துவிட்டு -நிவார‌ண‌த்திற்கு வ‌ரிசையில் நிற்ப‌துபோல‌- ஆமியின் ப‌ரிசோத‌னைக‌ளுக்காய் த‌யாராகிவிடுவார்க‌ள். இப்ப‌டி அடிக்க‌டி இர‌வுக‌ளில் ஆமி சோதனைக்கு செய்வ‌தால் அவ‌ர்க‌ளுக்கு இது ப‌ழ‌க்க‌மாகி விட்டது.

இவன் கொழும்பில் இருந்தபோது, ஆமி முதன்முதலாய் செக்கிங்கிக்காய் வந்தது மறக்கமுடியாத ஓர் அனுபவம் எனத்தான் சொல்லவேண்டும். ஆமிக்காரர்கள் வருகின்றார்களென‌ அண்ணாக்கள் க‌ராஜ் வீட்டின் கதவைத் திறந்துவிட்டு ஆமியின் சோதனைக்குத் தயாராய் நிற்க‌ இவ‌னோ ஆழ்ந்த‌ நித்திரையில் இருந்தான். ப‌தினைந்து வ‌ய‌துக்கார‌ன் தானே, ப‌டுத்திருக்கின்றான் கிட‌க்க‌ட்டுமென‌ அந்த‌ அண்ணாக்க‌ளும் இவ‌னை எழுப்ப‌வில்லை. அறைக்குள் நுழைந்த‌ ஆமி இவ‌னை அப்ப‌டிப் பிடித்து எழுப்புவான் என்று இவன் நினைத்தே பார்க்கவேயில்லை. இடுப்பில் க‌ட்டியிருந்த‌ சார‌மும் அவிழ்ந்து கிட‌க்க‌, உட‌லில் எத்த‌னையோ இட‌மிருக்க‌ குறியில் கை வைத்து எழுப்பியதுதான் இவ‌னுக்கு அதிர்ச்சியாக‌ இருந்த‌து. ஆமியையும் அவ‌ன் பிடித்திருந்த‌ இட‌த்தையும் க‌ண்டு திடுக்கிட்டு சார‌த்தை இறுக்கிக் க‌ட்ட‌ முய‌ன்ற‌போது 'செக்கிங் ப‌ண்ண‌வேண்டும் அப்ப‌டியே சுவ‌ரோடு போய் நில்' என்றான் ஆமிக்காரன். சார‌மும் இல்லாது உட‌ல் முழுதும் நிர்வாண‌மாக‌த் தெளிவாக‌த் தெரிய‌, இவ‌ன் என்ன‌ இத‌ற்குள் பூனாவையா தேட‌ப்போகிறான் என்ற‌ கோப‌ம் வ‌ர‌, ஆற்றாமையுடன் சுவ‌ரைப் பார்த்த‌ப‌டி போய் நின்றான். ஆமிக்கார‌ன் நாலைந்து நிமிட‌ங்கள் ஆறுத‌லாக‌ த‌ன் 'ப‌ரிசோத‌னை'யைத் த‌ட‌விச் தடவிச் செய்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போலப்போனான். பிற‌கு எல்லா வீடுகளையும் சோதனை செய்து விட்டுக் கடந்து போகும்போது ஏதோ ஆமிக்கார‌ன் சிங்க‌ள‌த்தில் சொன்னான். என்ன‌ சொல்கிறான் என்று கேட்ட‌போது, 'இப்ப‌டி புதிசாய் ஒரு பெடிய‌ன் இங்கே வ‌ந்திருக்கின்றான் என்று எங்க‌ளுக்குத் தெரியாதே; இனி அடிக்க‌டி வாறோம்' என்று சொல்லியிருக்கின்றான் எனச் சொன்னார்க‌ள். 'ஏன் அண்ணை, ஆமிக்கார‌ன் வாறான் என்று என்னை எழுப்பிவிட‌க்கூடாதே' என‌க் கோப‌த்துட‌ன் அண்ணாக்க‌ளைப் பார்த்து இவன் சொன்னான். அன்றைய இரவில், பிறகு இவனால் ஒழுங்காய் நித்திரை கொள்ளமுடியவில்லை. காமமோ சித்திர‌வ‌தையோ அவைய‌வை த‌ம் குறிக்கோள்க‌ளை குறியில் போய் இறுதியில் பூர்த்தி செய்கின்ற‌தென‌ இவன் த‌ன‌க்குள் நினைத்துக்கொண்டான்.

3.
அவ‌ருக்கு அழ‌கான‌ நீண்ட‌ த‌மிழ்ப் பெய‌ர் இருந்த‌து. ஆனால் 'குதிரை' என்ற‌ ப‌ட்ட‌ப்பெய‌ரே இய‌ற்பெய‌ர் போல‌ ஆகிவிட்டிருந்த‌து. மைதான‌த்தில் நூறு மீற்ற‌ரும், இருநூறு மீற்ற‌ரும் அவ‌ர் ஓடும்போது உண்மையில் பிட‌றி சிலிர்த்து ஓடும் குதிரையைப் போல‌த்தான் காட்சிய‌ளிப்பார். அவ்வ‌ள‌வு வேக‌ம். குதிரைதான் அவ‌னின் க‌ல்லூரியில் ப‌ல‌ புதிய‌வைக‌ளை அறிமுக‌ப்ப‌டுத்தினார். அவ‌ரின் காற்று வேக‌ ஓட்ட‌த்திற்காய் பாட‌சாலை நிர்வாக‌மே த‌லைவ‌ண‌ங்கி நின்ற‌தில் விய‌ப்பில்லைத்தான். அதேபோல் அவ‌ரைக் காத‌லிக்க‌ நின்ற‌ பெடிய‌ங்க‌ளின் வ‌ரிசையும் நூறு மீற்ற‌ர்க‌ளுக்கு அப்பாலும் நீள‌க்கூடிய‌து. அவ‌னும் மூன்று வ‌ருட‌ம் முந்திப்பிற‌ந்திருந்தால் அந்த‌ வ‌ரிசையில் முன்னே நிற்க‌ சண்டை பிடித்திருக்கக் கூடும். குதிரையின் ஓட்ட‌த் திற‌மை க‌ண்டு, அதை வ‌ள‌ர்க்க‌ ந‌ல்ல‌தொரு ப‌யிற்சியாள‌ர் இருந்தார். எல்லாப் பெண்க‌ளும் ஒற்றைச் ச‌டையில் அல்லது இர‌ட்டைச் சடையில் பின்னி வ‌ர‌வேண்டுமென்ற‌ பாட‌சாலை விதி கூட, குதிரையின் 'போனி ரெயிலுக்காய்' கொஞ்சக்காலம் த‌ள‌ர்த்த‌ப்ப‌ட்ட‌து. முத‌ன் முத‌லாய் 'ஸ்ராட்டிங் ப்ள‌க்' வைத்து, ம‌ண்ணிற‌ க‌ல‌ர் ர‌ன்னிங் சோர்ட்சில் ப‌ளப‌ள‌ப்பான தொடை தெரிய‌ குதிரை ஓடிய‌போது அவ‌னுக்கு வ‌ந்த‌ க‌ன‌வு வித்தியாசமாக இருந்தது. த‌ன‌க்குத்தான் அந்த‌க் க‌ன‌வு முதலில் ப்ரஷாய் வ‌ந்த‌தா அல்லது அன்றைய‌ நாளில் நூறு மீற்ற‌ர் நீண்ட‌ வ‌ரிசையில் நின்ற எல்லாப் பெடிய‌ங்க‌ளுக்குள் நுழைந்து கடைசியாகத்தான் தனக்கு அந்த‌க் க‌ன‌வு நுழைந்த‌தா எனவும் இவன் குழம்பியிருக்கின்றான்.

ஒவ்வொரு நாள் மாலையிலும், க‌டிகார‌மும் கையுமாய் ஏன் ப‌யிற்சியாள‌ர் ஒரிரு ம‌ணித்தியால‌ங்க‌ள் இவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ப‌யிற்சி கொடுக்கிறார் என்ப‌தை இவ‌னால் முத‌லில் விள‌ங்கிக்கொள்ள முடியவில்லை. ஓடுவ‌த‌ற்கு யாரும் இவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ப‌யிற்சியெடுப்பார்களா என ஏள‌ன‌மாய்த்தான் இதை அவ‌ன் பார்ப்ப‌துண்டு. குதிரையும், ப‌யிற்சியாள‌ரும் சேர்ந்து திட்ட‌மிட்டு த‌ங்க‌ளைப் போன்றவ‌ர்க‌ளுக்கு பிலிம் காட்டுகின்றார்க‌ள் எனத்தான் இவன் முதலில் எண்ணிக்கொண்டான். ஓடுவ‌த‌ற்கு ப‌யிற்சி பெற‌வேண்டுமென்றால், இவனின் வீட்டு ஒழுங்கைக்குள் குதிரையை விட்டாலே ந‌ல்லாய்ப் ப‌யிற்சி எடுக்க‌லாமே. ஒழுங்கைக்குள் நாய்க‌ள் 'இந்தா பார் உன்ரை குண்டியைக் க‌டிக்கிறேன்' என‌ வாயை ஆவென்றுகொண்டு நீர் வ‌டிய‌த் துரத்த துர‌த்த, அந்தப் ப‌ய‌த்தில் ஓடி ஓடித்தானே இவ‌ன் நன்கு ஓட்ட‌ப்ப‌யிற்சி எடுக்கின்ற‌வ‌ன்.

இதையே ஒருநாள் குதிரையிட‌ம் நேர‌டியாக‌ப் போய்ச் சொல்லியும் விட்டான். இர‌ண்டு மூன்று வ‌ய‌து குறைவாக‌ இருப்ப‌தும் ஒருவகையில் நல்லதுதான். குதிரையோடு நெருங்கிப் ப‌ழ‌க‌லாம், தூர‌த்தில் நூறுமீற்ற‌ர் வ‌ரிசையில் நின்று, குதிரைக்கு க‌டிவாள‌ம் போட‌ அலைகின்ற‌ பெடியங்களுக்கு, தான் இப்ப‌டி குதிரையோடு பேசித்திரிவ‌து வ‌யிற்றில் நெருப்பைப் பற்றி எரிக்க‌ச் செய்யும் என்ப‌தும் இவ‌னுக்கு ந‌ன்கு தெரியுந்தான். இப்ப‌டி தான் ஒழுங்கைக்குள் ஓடிப் ப‌யிற்சி பெறும் இர‌க‌சிய‌த்தை இவன் சொன்ன‌தும் குதிரைக்கு ஒரே சிரிப்பு. 'அப்ப‌டியா! அங்கே பார் சைக்கிளில் நான்கை பேர் எங்க‌ளைப் பார்த்துக்கொண்டு நிற்கிறான்க‌ள் அல்ல‌வா, அவ‌ங்க‌ளிட‌ம் போய்ச் சொல்லு! இப்ப‌டிச் சும்மா பொழுதைக் க‌ழிக்காது, உங்க‌டை ஒழுங்கை நாய்க‌ளோடு ரெயினிங் எடுத்து, ப‌ள்ளிக்கூட‌த்துக்கு மெட‌ல் வாங்கிக்கொடுக்க‌ச் சொல்' என்றார் குதிரை. இவ‌னும் ந‌ல்ல‌ பிள்ளையாக‌ குதிரை கூறிய‌தை அச்ச‌ர‌ம் பிசகாது அப்படியே போய் அவ‌ர்க‌ளிட‌ம் ஒப்புவிக்க ஒரே தூச‌ண‌ம‌ழை பொழிய‌ப்ப‌ட்ட‌து. இப்ப‌டியாக‌த்தான் அவ‌ன் த‌மிழிலிருந்த அனைத்துச் 'செந்த‌மிழ்' வார்த்தைக‌ளையும் க‌ற்றுக்கொண்டான். இத‌ற்காக‌வேனும் அவ‌ன் குதிரையை என்றும் ந‌ன்றியுட‌ன் நினைவுகூர‌த்தான் வேண்டும்.

இவ‌ன் நாய்க‌ளோடு ஓடி ப‌யிற்சி பெற்ற‌தைப் போல‌ அன்றி, ஒழுங்காய்ப் ப‌யிற்சி பெற்ற‌தாலோ என்னவோ குதிரை எல்லா இட‌ங்க‌ளிலும் ந‌ன்றாக‌ ஓடினார். பாட‌சாலை தாண்டி வ‌ல‌ய‌ம், வ‌ட்டார‌ம் என‌ உய‌ர‌ங்க‌ளைத்தாண்டி மாவ‌ட்ட‌த்திலும், எவ‌ரும் ஜெயிக்க‌ முடியாத‌ புரவியென குதிரை சாதித்துக் காட்டிய‌து. இனி அகில‌ இல‌ங்கைதான் மிச்சம். பயிற்சியாள‌ருக்கு ந‌ம்பிக்கை இருந்த‌து, பாட‌சாலை முழுவதற்கும் ந‌ம்பிக்கை இருந்த‌து. இவ‌ர்க‌ள் எல்லோரையும் விட‌ குதிரைக்கு இன்னும் த‌ன்னில் ந‌ம்பிக்கையிருந்த‌து. குதிரை அகில‌ இல‌ங்கையில் தம் ''ப‌ட்டிக்காட்டு'ப் பாட‌சாலையின் புக‌ழைப் ப‌ர‌ப்ப‌, ப‌த‌க்க‌ம் வெல்வார் என இவன் உட்பட எல்லோரும் ந‌ம்பிக் காத்திருக்க‌த் தொட‌ங்கினார்கள்.

-2010-
(இன்னும் வ‌ரும்)

செவ்வ‌ர‌த்த‌ம்பூ குறிப்புக‌ள்

Monday, June 06, 2011

1. வானம்
அண்மையில் வெளிவ‌ந்த‌ ப‌ட‌ங்க‌ளில் 'வான‌ம்' க‌வ‌னிக்க‌த்த‌தொரு ப‌ட‌ம். ஐந்து வெவ்வேறான‌வ‌ர்க‌ளின் க‌தைக‌ள் அந்த‌ந்த‌ கதாபாத்திர‌ங்க‌ளின் பின்புல‌ங்க‌ளில் வைத்து மிக‌ இய‌ல்பாக‌ச் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. அட‌க்க‌முடியாக் குதிரையாய் த‌ன் ப‌ட‌ங்க‌ளில் திமிறிக்கொண்டிருக்கும் சிம்புவை இப்ப‌டி ஒரு பாத்திர‌த்திற்குள் பார்ப்ப‌து கூட‌ சில‌வேளைக‌ளில் க‌ன‌வுபோல‌த்தான் இருக்கிற‌து. இவ்வ‌ள‌வு சிர‌த்தையாக‌ திரைக்க‌தைய‌மைத்த‌வ‌ர்க‌ள், இப்ப‌ட‌த்தின் முடிவை வேறுவித‌மாக‌ எடுத்திருந்தால் இன்னும் பாராட்டியிருக்க‌த் தோன்றியிருக்கும். இதையேன் கூறுகின்றேன் என்றால் முஸ்லிம்க‌ள் மீதான் பொதுவான பிம்ப‌ம் எப்ப‌டியிருக்குமோ அத‌ன் வ‌ழியே ப‌ட‌த்தின் முடிவில் காட்டுகின்றார்க‌ள். ஆர்.எஸ்.எஸ்சின் அடாவ‌டித்த‌ன‌ங்க‌ளையுந்தானே இப்ப‌ட‌த்தில் காட்டுகின்றார்க‌ள் என‌ ஒருவ‌ர் எதிர் விவாத‌ம் இவ்விட‌த்தில் செய்ய‌க்கூடும். ஒடுக்க‌ப்ப‌டும் சிறுபான்மையின‌ர்/விளிம்புநிலையின‌ரை நாம் பொதுவெளிக்கு எடுத்துவ‌ரும்போது அவ‌ர்க‌ள் ப‌ற்றிய‌ சித்த‌ரிப்புக்க‌ளை நாம் மிக‌வும் க‌வ‌ன‌மாக‌ முன்வைக்க‌வேண்டும் என்ப‌தை முத‌லில் அவ‌ர்க‌ளுக்கு நினைவூட்ட‌ விரும்புகின்றேன்.

முஸ்லிம்க‌ளின் ஒருப‌குதியின‌ர் தீவிர‌ அடிப்ப‌டைவாத‌த்திற்கு செல்கின்றார்க‌ள் என்ப‌து உண்மையே. ஆனால் அந்த‌ அடிப்ப‌டைவாத‌ம் நோக்கிப் ப‌ய‌ணிப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ள் சிக்க‌லான‌தும், ஆழ‌மான‌தும் என்ப‌தை நாம் ம‌ற‌ந்துவிட‌க்கூடாது. இப்ப‌ட‌த்தில் பிர‌காஷ்ராஜின் த‌ம்பி ஒரு 'தீவிர‌வாதி'யாக‌ மாறுவ‌த‌ற்குக் கார‌ண‌ம் ஆர்.எஸ்.எஸின் விநாய‌க‌ர் ச‌துர்த்தியும்(?) பொலிஸ் அராஜ‌க‌மும்தான் என‌க் கூற‌ப்ப‌டுகின்ற‌து. அவ்வாறு வ‌ன்ம‌ம் கொள்ளும் ஒருவ‌ர் பொலிஸையும், ஆர்.எஸ்.எஸ்சையும் தாக்க‌/கொல்ல‌ முய‌ற்சிப்ப‌ரே த‌விர‌ எல்லா ம‌த‌ ம‌க்க‌ளும் கூடும், ஒரு வைத்திய‌சாலைக்குப் போய் எல்லோரையும் போட்டுத்த‌ள்ள‌ விரும்பியிருக்க‌மாட்டார் என‌ அவ‌ர்க‌ளின் எளிய‌ வாத‌த்தை நாமும் எளிய‌ ஒரு கேள்வி மூல‌ம் இல்லாம‌ற் செய்துவிட‌லாம்.  பொதும‌க்க‌ள் கூடும் இட‌ங்க‌ளின் குண்டுவெடிப்புக‌ள்/தாக்குத‌ல்க‌ள் என்ப‌தை அதை யார் செய்தாலும் எத‌ன் பொருட்டும் நாம் நியாய‌ப்ப‌டுத்த‌முடியாதுதான். ஆனால் 9/11 தாக்குத‌லின் பின்னும் கூட‌, அமெரிக்கா/க‌ன‌டா போன்ற‌ நாடுக‌ளில் நாம் ஒரு 'தீவிர‌வாத‌'த் தாக்குத‌லினால் கொல்ல‌ப்ப‌டுவ‌தை விட‌, மோட்டார் வாக‌ன‌ விப‌த்தால் கொல்ல‌ப்ப‌டும் ச‌ந்த‌ர்ப்ப‌மே அதிக‌ம் இருப்ப‌தாக‌ த‌ர‌வுக‌ளின்ப‌டி நிரூபிக்க‌முடியும். இதை இங்கே ந‌கைச்சுவையாக‌ 'நாம் ஒரு தீவிர‌வாதியை எண்ணிக் க‌ல‌க்க‌முறுவ‌தைவிட‌ தெருவில் போகும் காரை நினைத்தே அதிக‌ம் க‌வ‌லைப்ப‌ட‌வேண்டும்' என்பார்க‌ள்.

இந்த‌த் 'தீவிர‌வாதிக‌ள்' என்ப‌வ‌ர்க‌ள் கூட்ட‌மாய் ஒரே நேர‌த்தில் தாக்குத‌ல்க‌ள் ந‌ட‌த்தும்போது அவை மிக‌ப்பெரும் நிக‌ழ்வாக‌ ஊடக‌ங்க‌ளால் காட்ட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. ஆனால் அதேச‌ம‌ய‌ம் இந்திய‌ இராணுவ‌மோ/ அமெரிக்க இராணுவ‌மோ நாளாந்த‌ம் காஸ்மீர், ஈழ‌ம், ஈராக், ஆப்கானிஸ்தானில் செய்த‌/செய்யும் கொலைக‌ள்/தாக்குத‌ல்க‌ள்/பாலிய‌ல் வ‌ன்புண‌ர்வுக‌ளை ஒரு வ‌ருட‌த்திற்கு,,, என்ற‌ எல்லையில் வைத்துப் பார்த்தால் நாம் 'தீவிர‌வாதிக‌ள்' என‌ அழைக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளை விட‌ இவ்வாறான‌ இராணுவ‌ங்க‌ளின் அட்டூழிய‌த்தால் பாதிக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளே எண்ணிக்கையில் அதிக‌மாய் இருப்பார்க‌ள் என்ற‌ முடிவுக்கு வ‌ர‌முடியும்.

இதைத்தான் 'வான‌ம்' பட‌மும் முஸ்லிம்க‌ள் என்கின்ற‌ சிறுபான்மையின‌ரை பொதுவெளிக்குள் வைக்கும்போது த‌வ‌றவிட்ட‌ விட‌ய‌ம் என‌ நினைக்கின்றேன். இது முஸ்லிம்க‌ள் என்ற‌ விட‌ய‌த்தில் ம‌ட்டுமில்லை, இந்தியா இராணுவ‌ம் ஈழ‌த்தில் செய்த அட்டூழிய‌ங்க‌ளைப் ப‌ற்றிப் பேசும்போது இராஜீவ்காந்தியின் கொலையை அத‌ற்கு நிக‌ராய்ச் ச‌ம‌ன‌ப்ப‌டுத்தி எல்லா அழிவுக‌ளையும் ம‌றைக்க‌ முய‌ல்வ‌தையும் க‌வ‌ன‌ப்ப‌டுத்த‌ விரும்புகின்றேன். ஆக‌வேதான் ஆர்.எஸ்.எஸ்/பொலிஸ் என்ப‌வை முஸ்லிம்க‌ளை எப்ப‌டி ஒடுக்குவ‌தை ஒரு உள்ளூர‌ள‌வில் காட்ட‌ப்ப‌ட்ட‌தோ அத‌ற்கு நிக‌ரான‌ த‌ள‌த்தில் வைத்தே முஸ்லிம் பிர‌ச்சினையும் இப்ப‌ட‌த்தில் பேச‌ப்ப‌ட்டிருக்க‌ வேண்டுமே த‌விர‌, அவ‌ர்க‌ளை ஒரு ச‌ர்வ‌தேச‌ 'தீவிர‌வாத‌' அளவில் வைத்துப் பேசுவ‌து (நிறைய‌ ந‌வீன‌ ஆயுத‌ங்க‌ளோடு வைத்திய‌சாலையைத் தாக்குவ‌து) அப‌த்த‌மான‌து என‌க் குறிப்பிட‌ விரும்புகின்றேன்.

இப்ப‌ட‌த்தைப் பார்க்கும் ஒரு முஸ்லிம், இப்ப‌டி எங்க‌ளின் ஒருப‌குதியின‌ரை மிலேச்ச‌ன‌த்த‌ன‌மான‌ தீவிர‌வாதிக‌ளாய்ச் சித்த‌ரிக்கின்றீர்க‌ளே, அப்ப‌டியெனில் ஏன் உங்க‌ளால் இப்ப‌ட‌த்தில் ஒரு இட‌த்தில் கூட‌ குஜ‌ராத்தில் ந‌ட‌ந்த‌ கொடூரமான‌ ப‌டுகொலைக‌ளைக் காட்ட‌வில்லை எனக் கேள்வி எழுப்பினால் 'வான‌ம்'  ப‌ட‌த்தோடு ச‌ம்ப‌ந்த‌ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ப‌திலேதுமின்றி ம‌ண்ணுக்குள் தீக்கோழிபோல‌த் த‌லையைப் புதைக்க‌த்தான் வேண்டி வ‌ரும். மேலும் முஸ்லிம் 'தீவிர‌வாத‌' இய‌க்க‌ம் எங்காவ‌து வைத்திய‌சாலையில் தாக்குத‌லைச் செய்ததா என்பதை நான் அறியேன். ஆனால் உல‌கின் மிக‌ப்பெரும் ஜ‌ன‌நாய‌க‌ நாடென‌ப் பெருமித‌ப்ப‌டும் இந்தியாவின் இராணுவ‌ம் யாழ் வைத்திய‌சாலைக்குள் உள்நுழைந்து வைத்திய‌ர்/தாதிக‌ள்/நோயாளிக‌ள் என‌ எந்தப் பிரிப்புமில்லாது சுட்டுக்கொன்றிருக்கின்ற‌து. 2009ல் ஈழ‌த்தில் இறுதியுத்த‌த்தில் இல‌ங்கை இராணுவ‌ம் துல்லிய‌மாக‌க் குறிபார்த்து த‌ன் ப‌ல்குழ‌ல் ஆட்லறித்த்தாக்குத‌ல்க‌ளை வ‌ன்னியிலிருந்த‌ வைத்தியசாலைக‌ளை நோக்கி ந‌ட‌த்தியிருக்கிற‌து. ஆனால் இவ‌ர்க‌ள் எவ‌ருமே தீவிர‌வாதிக‌ள் இல்லைத்தானில்லையா?

2.ஆடைக‌ள் அணிவ‌த‌ற்கான‌ சுத‌ந்திர‌ம்
ஒவ்வொரு அர‌சும் காவ‌ல்துறை, இராணுவ‌ம் என‌ த‌ன் நாட்டு ம‌க்க‌ளைப் பாதுகாக்க‌வும், ச‌ட்ட‌ஒழுங்கை நிலை நிறுத்தவும் வைத்திருக்கின்ற‌து. காவ‌ல்துறை/இராணுவ‌ம் இல்லாவிட்டால் ச‌மூக‌த்தில் ந‌ம்மால் நிம்ம‌தியான‌ ம‌னித‌ர்க‌ளான‌ வாழ‌முடியாது என‌ க‌ற்பிக்க‌ப‌ட்டு, இதையே முற்றுமுழுதாக‌ ந‌ம்புகின்ற‌ நிலைக்குள் நாம் த‌ள்ள‌ப்ப‌ட்டும் விட்டோம். உண்மையில் இவ்வாறான‌ அதிகார‌ ம‌ற்றும் க‌ண்காணிப்பு நிறுவ‌ன‌ங்க‌ள் இல்லாது ந‌ம்மால் வாழ‌ முடியாதா என்கின்ற‌ கேள்வியை ஜோஸ் ச‌ர‌மாகோவின் 'Blindness'  ம‌ற்றும் 'Seeing' ஆகிய‌ இரு நாவ‌ல்க‌ளும் முன்வைக்கின்ற‌ன‌. எந்த‌ ஒரு அர‌சையும் தேர்ந்தெடுக்க‌ விரும்பாது த‌ம்பாட்டில் வாழ‌ விரும்பும் ம‌க்க‌ளை எப்ப‌டி அர‌சும்,இராணுவ‌மும் த‌ங்க‌ளின் க‌ட்டுப்பாட்டுக்குள் கொண்டுவ‌ர‌ முய‌ற்சிக்கின்ற‌ன‌ என்ப‌தை இந்நாவ‌ல்க‌ள் பேசுகின்ற‌ன‌. த‌மிழில் இந்நாவ‌ல்க‌ளுக்கு எஸ்.வி.ராஜதுரை எழுதிய‌ அறிமுக‌த்தை ஆர்வ‌முள்ள‌வ‌ர்க‌ள் நிச்சய‌ம் வாசிக்க‌வேண்டும்.

இவ்வாறு க‌ண்காணிப்பாள‌ர்க‌ளாக‌வும், க‌ட்டுப்ப‌டுத்துப‌வ‌ர்க‌ளாக‌வும் நிறுவ‌ன‌ம‌ய‌மாக்க‌ப்ப‌ட்ட‌ மைய‌ங்க‌ள் ம‌ட்டுமில்லாது, த‌னிப்ப‌ட்ட‌ ஒவ்வொரு ம‌னித‌ர்க‌ளுமே நாள‌டைவில் ச‌மூக‌த்தில் காவ‌ல‌ர்க‌ளாகி விடுகின்றார்க‌ள். அதுவும் ஆண்க‌ளாகிய‌ எம‌க்கு 'க‌லாசார‌ காவ‌ல‌ர்க‌ளாகி' விடுவ‌தென்ப‌து ந‌ம் 'ம‌ர‌ப‌ணுக்க‌ளிலே'யே புகுத்த‌ப்ப‌ட்டுவிடுகின்ற‌து போலும்.  ந‌ம் வீட்டுக்குள் இருக்கும் பிர‌ச்சினைக‌ளைத் தீர்ப்ப‌திலும் பார்க்க‌, ப‌க்க‌த்துவீட்டுக்கார‌ர் வீட்டுப்பிர‌ச்சினைக‌ளுக்குள் நுழைவ‌திலும், ஆலோச‌னை கூறுவ‌திலும், கிசுகிசுப்ப‌திலும் ந‌ம‌க்கு நாமே முன்னோடிக‌ள்தான்.

அண்மையில் யோர்க் வ‌ளாக‌த்தில் பாதுகாவ‌ல‌ர்க‌ள் ப‌ற்றிய‌ வ‌குப்பில் உரையாற்றிய‌ ஒரு பொலிஸ் 'பெண்க‌ள் தாம் பாதிக்க‌ப்ப‌டுவ‌திலிருந்து த‌விர்க்க‌வேண்டுமென்றால் ஒழுக்க‌ம‌ற்ற‌ பெண்க‌ளைப் போல் ஆடைக‌ள் அணிவ‌தைத் த‌விர்க்க‌வேண்டும்' ("women should avoid dressing like sluts in order not to be victimized") என்றிருக்கின்றார்.

இந்த‌க் க‌ருத்து மிகுந்த‌ ச‌ர்ச்சைக்குள்ளாகி, ரொற‌ண்டோ பொலிஸ் தலைமை அதிகாரியே த‌லையிட‌வேண்டிய‌ நிலை வ‌ந்த‌தும், குறிப்பிட்ட‌ பொலிஸ்கார‌ர் த‌ன‌து க‌ருத்துக்காய் பிற‌கு ம‌ன்னிப்புக் கேட்ட‌தும் ப‌ல‌ரும் அறிந்திருக்கூடிய‌தே. எனினும் இவ்வாற‌ க‌ருத்துக்க‌ள் த‌னிந‌ப‌ர் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌த‌ல்ல‌; பொலிஸ் துறையிலே இவ்வாறான‌ க‌ருத்துக்க‌ளே ஆழ‌மாய் வேரூன்றியிருக்கின்ற‌தென‌, இத‌ற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிர‌த்திற்கும் மேற்ப‌ட்ட‌ பெண்க‌ள் ஏப்ர‌ல் மாத‌த்தில் ரொறொண்டோவில் ஆர்ப்பாட்ட‌ம் செய்திருந்த‌ன‌ர். அத‌ற்கு அவ‌ர்க‌ள் வைத்த‌ பெய‌ரே 'Slut Walk' என்ப‌தாகும்.

முத‌லில் நாம் இந்த‌ப் பொலிஸ்கார‌ர் கூறிய‌ க‌ருத்தை ச‌ற்று ஆழ‌மாய்ப் பார்க்க‌வேண்டும். பெண்க‌ள் உட‌ல்/ம‌ன‌ ரீதியாக வ‌ன்முறைக்குள்ளாக்க‌ப்ப‌டுவ‌தில் இவ்வாறு பெண்க‌ள் 'அப்ப‌டியும் இப்ப‌டியுமாக‌' ஆடைக‌ள் அணிவ‌துதான் முக்கிய‌ கார‌ணிக‌ளில் ஒன்றாக‌ இருக்கின்ற‌தாக‌ இதில் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. அதாவ‌து பெண்க‌ள் ஒரு 'இர‌க‌சிய‌மான‌' ச‌மிக்ஞையை இவ்வாறு வ‌ன்முறை செய்யும் ஆண்க‌ளுக்கு த‌ம‌து ஆடைக‌ள் மூல‌ம் தெரிவிக்கின்றார்க‌ள் என்ப‌து இத‌ன் உட்கிடை. அதைவிட‌ இன்னொரு முக்கிய‌மான‌ விட‌ய‌த்தைத்தான் நாம் இன்னும் அதிக‌ம் க‌வனிக்க‌வேண்டும். அதாவ‌து எந்த‌ப் பெண்ணும் 'ஒழுக்க‌ம‌ற்ற‌ ஒரு பெண்ணை'ப் போல‌ ஆடை அணிந்தால் அவ‌ரைச் சிதைக்க‌ எந்த‌ ஆணுக்கும் உரிமை இருக்கின்ற‌து என்கின்ற‌ தொனி பொலிஸின் க‌ருத்தில் ஆழ‌ உட்பொதிந்து இருக்கின்ற‌து. இந்த‌க்க‌ருத்தை நாம் எப்ப‌டி க‌ட்டவிழ்ப்புச் செய்ய‌வேண்டும் என்றால், முத‌லில் 'யார் ஒழுக்க‌ம‌ற்ற‌ பெண்?' எனக் கேட்க‌ வேண்டும். ஒழுக்க‌மான‌/ஒழுக்க‌ம‌ற்ற‌ பெண் என்று பிரிக்க‌ உங்க‌ளுக்கு யார் அந்த் அதிகார‌த்தைத் த‌ந்த‌து என்ற‌ புள்ளியில் உரையாட‌த் தொட‌ங்கினாலே அத‌ற்கு பின்னால் வ‌ரும் எந்த‌க்க‌ருத்தும் அப‌த்த‌ம் என‌த் தெரிய‌வ‌ரும்.

அவ‌ர்க‌ள் 'ஒழுக்க‌ம‌ற்ற‌ பெண்'ணிற்கு ஒரு வ‌ரைவில‌க்க‌ண‌த்தைத் த‌ந்து இன்னும் அடம்பிடிப்பார்க‌ளாயின் 'ஒழுக்க‌ம‌ற்ற‌ ஆணை' வ‌ரைய‌றுக்க‌ச் சொல்லி நாம் கேட்க‌லாம். அவ்வாறு வ‌ரைய‌றுக்க‌ப்ப‌ட்ட‌ 'ஒழுக்க‌ம‌ற்ற‌ ஆண்' அப்ப‌டியும் இப்ப‌டியுமாக‌ ஆடை அணிவ‌தில்லையா?' என‌க் கேட்க‌லாம். அப்ப‌டி ஆடைய‌ணிந்து ச‌மிக்ஞை கொடுத்தும் எந்த‌ ஆணுக்கும் உட‌ல்/உள‌ரீதியில் ஏன் எந்த‌ப் பெண்ணுமே பாதிப்பை ஏற்ப‌டுத்துவ‌தில்லை என‌க் கேட்க‌லாம். இறுதியில் ச‌மூக‌த்தின் உய‌ர்நிலையில் (hierarchy) ஆண்க‌ளே இருந்து எல்லாவ‌ற்றையும் தீர்மானிக்கவும் க‌ட்டுப்ப‌டுத்த‌வும் செய்கின்றார்க‌ள் என்ற‌ புரித‌லுக்கு எளிதில் வ‌ந்துவிட‌லாம்.

ரொற‌ண்டோவில் தொட‌க்க‌ப்ப‌ட்ட‌ Slut Walk ப‌ல்வேறு நாடுக‌ளிலும் எதிரொலித்திருக்கின்ற‌ன‌. உல‌கில் ஆண்க‌ளாகிய‌ நாம் எங்கு வாழ்ந்தாலென்ன‌, எல்லோரும் ஒரேமாதிரியாக‌த்தானே இருக்கின்றோம். என‌வே எல்லா இட‌ங்க‌ளிலும் பெண்க‌ள் த‌ம் எதிர்ப்பைக் காட்ட‌த்தான் விரும்புவார்க‌ள். விரைவில் இதே பெய‌ரில் நியூயோர்க்கிலும் இல‌ண‌ட‌னிலும் பெண்க‌ள் ஆர்ப்பாட்ட‌ம் செய்ய‌ப் போகின்றார்க‌ள் என்ற‌ செய்தியையும் வாசித்தேன். ரொறொண்டோவில் 'Slut Walk' ந‌ட‌ந்த‌போது எத்த‌னையோ எரியும் விட‌ய‌ங்க‌ள் இருக்கும்போது ஏன் இதை பெரிதுப‌டுத்துகின்றார்க‌ள் என‌ ப‌ல‌ர் க‌ருத்துத் தெரிவித்திருந்த‌ன‌ர். ஒருவ‌கையில் ஏற்றுக்கொள்ள‌க்கூடிய‌ க‌ருத்துத்தான். ஆனால் பின் ந‌வீன‌த்துவ‌ச் சூழ்நிலையில் வாழ்கின்ற‌ நாம் எங்கிருந்தும் ஒரு எதிர்ப்பைத் தொட‌ங்கலாம். அத‌ற்கு ஒரு தெளிவான‌ தொட‌க்க‌மோ அல்ல‌து முடிவோ இருக்க‌வேண்டும் என்கின்ற‌ எந்த‌ அவ‌சிய‌மும் இல்லை. மேலும் ஒரு எதிர்ப்பை உறுதியாக‌க் காட்டுகின்றோம் என்றால் இனி இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளில் எழுந்த‌மான‌மாய்க் க‌ருத்துச் சொல்ல‌ விழைப‌வ‌ர்க‌ளை ச‌ற்று யோசிக்க‌வைக்கும், நிதான‌மாய்ப் ப‌தில‌ளிக்க‌ வைக்கும். இவ்வாறான‌ எதிர்ப்புக்க‌ள் எம் த‌மிழ்ச்சூழ‌லில் சாதி/பெண்/த‌ற்பாலின‌ர்/மூன்றாம்பால் போன்ற‌ விட‌ய‌ங்க‌ளில் தொட‌ர்ச்சியாக‌ வைக்க‌ப்ப‌ட்டிருந்தால் நாம் எத்த‌னையோ அப‌த்த‌மான‌ க‌ருத்துக்க‌ளை இன்று வாசிக்க‌வோ/கேட்க‌வோ வேண்டியிருக்காது அல்ல‌வா?

இந்தச் செய்தியோடு தொட‌ர்பில்லாதுவிட்டாலும், 'சுட‌ருள் இருள்' நிக‌ழ்வில் வ‌.கீதா கூறிய‌ ஒரு க‌ருத்துதான் நினைவுக்கு வ‌ந்த‌து. த‌மிழ்ச்சூழ‌லில் த‌னித்து பெண்ணிய‌ம் சார்ந்து பேசுவ‌து என்ப‌து மிக‌வும் க‌டின‌மான‌து. அத‌ற்கான‌ வெளியை ஒருபோதும் த‌மிழ்ச்சூழ‌ல் த‌ந்த‌தில்லை என்றார். என‌வே வேறு எத‌னோடு இணைத்துத்தான் பெண்ணிய‌த்தைப் பேச‌வேண்டியிருக்கின்ற‌து. த‌ன‌க்குப் பெரியாரைக் க‌வ‌ச‌மாக்கித்தான் பெண்ணிய‌த்தைப் பேச‌க்கூடிய‌தாக‌ இருக்கின்ற‌து எனக் கூறியிருந்தார். த‌னித்துப் பெரியாரிய‌த்தைப் பேசுவ‌தைப் போல‌ த‌னித்துப் பெண்ணிய‌த்தைப் பேசினால் கேட‌க்க‌க்கூடிய‌வ‌ர்க‌ள் சொற்ப‌மான‌வ‌ர்க‌ளே இருப்பார்க‌ள் என‌ த‌மிழ்ச்சூழ‌லின் அவ‌ல‌த்தைத் த‌ன்பேச்சில் க‌வ‌ன‌ப்ப‌டுத்தியிருந்தார். தான் கூட‌ பொதுச்சூழ‌லில் ஒரு பெண்ணிய‌லாராக‌ அன்றி, பெரியாரிய‌ வாசிப்பாள‌ராக‌வே அதிக‌ம் க‌வ‌ன‌ப்ப‌டுத்துவ‌தாக‌ த‌ன‌து பேச்சில் வ‌.கீதா வெளிப்ப‌டுத்தியிருந்தார். த‌மிழ்ச்சூழ‌லில் அறிய‌ப்ப‌ட்ட‌ பெண்ணிய‌லாள‌ரான‌ கீதாவே இவ்வ‌ள‌வு ஆத‌ங்க‌த்தையும், த‌டைக‌ளையும் கொண்டிருக்கின்றார் என்றால் சாதார‌ண‌ ஒரு பெண் தான் விரும்பிய‌தைப் பேசுவ‌த‌ற்கு இருக்கும் வெளி குறித்து நாம் யோசித்துப்பார்க்க‌லாம்.

ப‌ல்வேறு ‌புள்ளிக‌ளில் வைத்து விவாதிக்க‌வேண்டிய‌ இன்னொரு செய்தி இருக்கின்ற‌து. க‌ன‌டாவிலேயே பொறியிய‌ல் ப‌டிப்புக்குப் பிர‌பல்ய‌ம் வாய்ந்த‌ ஒரு ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌மாக‌ வோட்ட‌லூ வ‌ளாக‌ம் இருக்கின்ற‌து. ஒவ்வொரு வ‌ருட‌மும் ச‌ர்வ‌தேச‌ அள‌வில் மாண‌வ‌ர்க‌ளுக்கிடையில் ந‌ட‌க்கும் ப‌ந்த‌ய‌க் கார் போட்டியில் வோட்ட‌லூ பொறியிய‌ல் மாண‌வ‌ர்க‌ளும் ப‌ங்குப‌ற்றுவார்க‌ள்.மிக‌க்குறைந்த‌ செல‌வில், புதிய‌ க‌ண்டுபிடிப்புக்க‌ளுட‌ன் விலையுய‌ர்ந்த‌ உய‌ர்த‌ர‌ ப‌ந்த‌ய‌க்காரைப் போன்று ஒரு வ‌டிவ‌த்தை உள்ளூர் அள‌வில் வ‌டிவ‌மைப்ப‌தே இப்போட்டியின் நோக்க‌ம். மாண‌வ‌ர்க‌ளும் ப‌ல‌மாத‌ங்க‌ளாய் இத‌ற்காய் ஆய்வுகூட‌த்தில் உழைப்பார்க‌ள். இவ்வாறு கடுமையாக‌ உழைத்து போட்டியில் ப‌ங்குபெற‌ சில‌ மாத‌ங்க‌ளே இருக்கும்போது இந்த‌ வ‌டிவமைப்புக் குழு, வோட்ட‌லூ ப‌ல்க‌லைக்க‌ழ‌க நிர்வாக‌த்தால் போட்டில் ப‌ங்குபெறுவ‌திலிருந்து நிறுத்திவைக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. இத‌ற்கான‌ கார‌ண‌ம் இந்த‌ வ‌டிவ‌மைப்புக் குழுவிலிருந்த‌ ஒரு பெண் ப‌ந்த‌ய‌க்காருக்கு முன் பிகினியுட‌ன் நின்று காட்சிய‌ளித்த‌ ஒரு புகைப்ப‌ட‌ம். இந்த‌ப் பெண்ணும் அவ‌ர‌து ந‌ண்ப‌ரும் புற்றுநோயுக்கான‌ நிதி திர‌ட்டும் ஒரு நிக‌ழ்வுக்காய் இந்த‌ப் புகைப்ப‌ட‌த்தை எடுத்திருக்கின்றார்க‌ள். அதைப் புகைப்ப‌ட‌த்தை எடுத்த‌ ந‌ண்ப‌ர் த‌ன் இணைய‌த‌ள‌த்தில் இதைப் பிர‌சுரிக்க‌ விட‌ய‌ம் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ துணைவேந்த‌ர் வ‌ரை சென்று இந்த‌ வ‌டிவ‌மைப்புக் குழு ஆய்வுகூட‌த்திற்குள் (அதாவ‌து போட்டி முடியும்வரை) நுழைவ‌து த‌டுக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. இப்பெண் மீது ஒழுக்காற்று விசார‌ணை ந‌ட‌க்கிற‌து என‌ நினைக்கின்றேன்.

இந்த‌ விட‌ய‌த்தை ப‌ல்வேறு நிலைக‌ளில் வைத்து விவாதிக்க‌லாம் எனினும் இவ்விட‌ய‌ம் குறித்து பெண்க‌ள் என்ன‌ கூறுகின்றார்க‌ள் என்ப‌தே என‌க்கு முக்கியமாக‌ப்ப‌ட்ட‌து. அவ்வாறான‌ ஒரு தேடுத‌லில் இந்த‌ச் சுவார‌சிய‌மான‌ க‌ட்டுரையை வாசிக்க‌ நேர்ந்த‌து. மேற்ப‌டி க‌ட்டுரையை எழுதிய‌வ‌ர் ஒரு பெண் ம‌ட்டுமில்லாது ஒரு வ‌ரைப‌ட நிபுண‌ருமாவார். அவ‌ர் குறிப்பிடும் ஒரு முக்கிய‌ ஒரு புள்ளி சுவார‌சிய‌மான‌து. பொதுப்புத்தியில் பொறியிய‌ல் ப‌டிக்கும் பெண்க‌ள் எல்லாம் Tom Boy வ‌கையைச் சார்ந்த‌வ‌ர்க‌ள் என்ற‌ விட‌ய‌ம் புகுத்த‌ப்ப‌ட்டுவிட்ட‌து. ஆண்க‌ள் ஆதிக்க‌ம் செலுத்தும் பொறிய‌ல்துறையில் பெண்க‌ள் அறிவாளிகளாக‌வும், த‌ம் உட‌லை ஆராதிப்ப‌வ‌ர்க‌ளாக‌வும் இருப்ப‌தை ஆண்க‌ள் ம‌ட்டுமில்லை பிற‌ பெண்க‌ளும் கூட‌ பொறாமையாக‌த்தான் பார்க்கின்ற‌ன‌ர்; இந்த‌ப் பொதுப்புத்தி சார்ந்த‌ சிந்த‌னையே எவ்வித‌ முறையான‌ விசார‌ணைக‌ளுமின்றி உட‌னேயே இப்பெண்மீதும் அவ‌ர் சார்ந்திருந்த‌ வ‌டிவ‌மைப்புக்குழு மீதும் வ‌ளாக‌ நிர்வாக‌ம் த‌ண்ட‌னை வ‌ழ‌ங்கியிருக்கின்ற‌து என்கின்றார். இது கூட‌ ஒரு பெண் தான் விரும்பிய‌ ஆடையை அணிவ‌த‌ற்கான‌ சுத‌ந்திர‌ம் என்ற‌வகையில் நீண்ட‌ விவாத‌திற்குரிய‌ ஒரு ச‌ம்ப‌வ‌ந்தான்.

3.பூச‌ல்
எழுத‌ப்ப‌டும் விம‌ர்ச‌ன‌ங்க‌ள் ஏதோ ஒரு பாதிப்பிலிருந்து எழுகின்ற‌து என்ப‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம். அது நிச்ச‌ய‌ம் நேர்ம‌றையாக‌ இருக்க‌வேண்டும் என்கின்ற‌ அவ‌சிய‌மில்லை; எதிர்ம‌றையாக‌க் கூட‌விருக்கலாம். அந்த‌வ‌கையில் ஜெய‌மோக‌ன் எழுதிய‌ இந்த‌ விம‌ர்ச‌ன‌த்திற்கு முத‌லில் ந‌ன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவ‌ர் அதில் என‌க்காய்க் கூறிய‌வ‌ற்றை க‌வ‌ன‌மாக‌ உள்வாங்கிக்கொள்கின்றேன். எந்த‌க் க‌ருத்தோ/சிந்த‌னை நிலையோ எப்போதும் நிர‌ந்த‌ன‌மான‌த‌ல்ல‌; மாறிக்கொண்டேயிருப்ப‌ன‌. என‌வே இப்போது ந‌ம்மிருவ‌ருக்குமான‌ அலைவ‌ரிசை ஒத்திய‌ங்காவிட்டாலும், என்றேனும் ஒருகால‌த்தில் இடைவெட்ட‌க்கூடிய‌ புள்ளி இருந்தால் அத்த‌ருண‌த்தில் அவ‌ரின் ப‌திவை ந‌ன்றியுட‌ன் மீண்டும் நினைவுகூர்வேன் என‌ ம‌ட்டும் இப்போதைக்கு கூறிக்கொள்ள‌ விழைகின்றேன்.

இந்த‌க்க‌ட்டுரை குறித்த‌ இர‌ண்டு புள்ளிக‌ளை ம‌ட்டும்....! 
(i) "டி.செ.தமிழன் மறக்க வேண்டியது அவர் நெஞ்சில் நிறைந்திருக்கும் அந்த அரசியல் காழ்ப்புகளையே. எளிய தரப்புகளாக அனைத்தையும் பிரித்துப் பார்க்கும் பார்வையை. அந்த பார்வையைக் கொண்டு அவரால் ஒரு நல்ல நாலு வரி கவிதை கூட எழுதி விட முடியாது." என‌ ஜெய‌மோக‌ன் எழுதியிருக்கின்றார்.

இவ்விட‌த்தில் நான் எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் 'யாம‌ம்' நாவ‌லுக்கு எழுதிய‌ விம‌ர்ச‌ன‌த்திற்கு எஸ்.ரா எழுதிய‌ பின்னூட்ட‌த்தை நினைவூட்ட‌ விரும்புகின்றேன்.

"எனது நாவல் யாமம் குறித்து நீங்கள் எழுதிய விமர்சனகட்டுரையை வாசித்தேன். மிக நுட்பமாகவும் கூர்ந்த விமர்சனப் பார்வையோடும் எழுதப்பட்டிருக்கிறது. நாவலின் விடுபடல்கள் மற்றும் இடைவெளிகள் குறித்து உங்கள் சுட்டிகாட்டுதல் கவனத்திற்குரியவை.

ஆனால் ஒருநாவலாசிரியனாக இதை திருத்திக் கொள்கிறேன் என்று ஒரு போதும் கூறமாட்டேன். மாறாக நாவல் எழுத்து என்பது முன்கூட்டிய திட்டங்கள் மற்றும் கணக்குகள் கோட்பாடுகள் மீறவேண்டிய பட்டியல்கள் வழியாக உருவாவதில்லை. அதை ஒரு கவிஞராக நீங்கள் உணர்வீர்கள். நாவலை வாசகர்கள் எவ்விதம் அணுகுவார்கள் என்பது குறித்து எந்த விமர்சன முடிவுகளும் நாவலின் வாசிப்பை தடை செய்யப்போவதில்லை. அது தான் எப்போதும் நடைபெற்று வருகின்றது.

தங்கள் கவிதைகள் மற்றும் கட்டுரைகளை தொடர்ந்து உங்கள் வலைப்பக்கத்தில் வாசித்து வருகிறேன். சமீபமாக நான் படித்த கவிதைகளில் வெகு தனித்துவமானவை உங்கள் கவிதைகள். குறிப்பாக நீங்கள் கையாளும் மொழி மற்றும் கவிதையின் வழி பீறிடும் உள்ளார்ந்த கோபம் கவிதையை மிக நெருக்கமானதாக்குகிறது."

என இதில் "எழுத்து என்பது முன்கூட்டிய திட்டங்கள் மற்றும் கணக்குகள் கோட்பாடுகள் மீறவேண்டிய பட்டியல்கள் வழியாக உருவாவதில்லை" என‌ எஸ்.ரா குறிப்பிடுவ‌தையே ஜெய‌மோக‌னும் த‌ன் க‌ட்டுரையில் எழுதியிருக்கின்றார் என‌ நினைக்கின்றேன்.  அதேபோன்றே என்னாலும் எஸ்.ராவிற்கு என் க‌விதைக‌ள் பிடிக்கின்ற‌ன‌ என்ப‌த‌ற்காய் அதேபாணியில் வ‌லிந்து எழுதுத‌ல் எவ்வ‌ள‌வு சாத்திய‌மில்லையோ அவ்வாறே ஜெய‌மோகனிற்குப் பிடிக்க‌வில்லை என்ப‌த‌ற்காய்  நான் எழுதுப‌வ‌ற்றை மாற்றிய‌மைக்க‌ வேண்டும் என்கின்ற‌ அவ‌சிய‌மில்லை என்றே -அவ்வ‌ப்போது- எழுதுகின்ற‌வ‌ன் என்ற‌வ‌கையில்  புரிந்துகொள்கின்றேன்.

இர‌ண்டாவ‌து, ஜெய‌மோக‌ன் ஓரிட‌த்தில் 'வளரும் எழுத்தாளனுக்கு பூசல் போல தீங்களிப்பது எதுவுமே இல்லை. அவன் உளச்சக்தி முற்றாகவே வீணாகும்.' என்கின்றார். பூச‌ல் என்ப‌தை எந்த‌ அர்த்த‌த்தில் ஜெய‌மோக‌ன் கூறுகின்றாரே தெரியாது. நான் அதை விவாத‌ம் என‌ எடுத்துக்கொள்கின்றேன். ஆனால் ஜெய‌மோக‌னின் த‌ள‌த்தைத் தொட‌ர்ந்து வாசிக்கும் ஒருவ‌ர், அவ‌ர் இள‌ம்ப‌டைப்பாளிக‌ள் பிற‌ப‌டைப்பாளிக‌ளுட‌ன் உரையாட‌லைச் செய்ய‌வேண்டும் என்று வ‌லியுறுத்துப‌வ‌ராக‌வே இருக்கின்றார் என‌வே நினைப்பார். ஜெய‌மோக‌ன் கூட‌ த‌ன் ஆளுமை, தான் சுந்த‌ர‌ ராம‌சாமியோடும், நித்யாவோடும் விவாதித்த‌வைக‌ளின் அடிப்ப‌டையில் உருவாகிய‌வை என்று ப‌ல‌ இட‌ங்க‌ளிலும் குறிப்பிட்டுச் சொல்கின்றார். ஆக‌,  இது ஒன்றுக்குப் பின் முர‌ணாக‌ இருக்கிற‌தே? இத‌ற்கும் ஜெய‌மோக‌ன் ஏதேனும் விள‌க்க‌ம் வைத்திருக்க‌க்கூடும். அதைத் தெளிவுப‌டுத்தினால் ந‌ன்று.  ச‌ந்த‌ர்ப்ப‌ம் வாய்த்தால் க‌ன‌டாவிற்கு வ‌ரும் ஜெய‌மோக‌னிட‌ம் இதை நேரில் கேட்டுப்பார்க்க‌ முய‌ற்சிக்கின்றேன்.