கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சட்டகங்களுக்கு அப்பால் மிஞ்சுபவை

Monday, November 13, 2023

 

Dead Poets Society  திரைப்படத்தில் ஆசிரியரான ரொபின் வில்லியம்ஸ் தனது மாணவர்களுக்கு ஏற்கனவே அந்தப் பாடசாலையில் படித்தவர்களின் கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்களை ஓரிடத்தில் காட்டுவார். இவர்கள் உங்களைப் போல இதே பாடசாலையில் 30 வருடங்களுக்கு முன்னர் படித்தவர்கள். என்னதான் முயன்றாலும் இறுதியில் இறப்பென்பது இவர்களைப் போன்று உங்களுக்கும் உறுதியானது. நீங்கள் இதற்கிடையில் எப்படி உங்களுக்கு விரும்பிய மாதிரி வாழப் போகின்றீர்கள் என்பதுதான் முக்கிய கேள்வி. ஆகவே உங்களது கற்பனைகளை, விருப்பங்களை ஒருபோதும் சமரசம் செய்யாதிருங்கள் என வில்லியம்ஸ் சொல்வார். அதற்கேற்ப கவிதைகளைப் பற்றிக் கற்பிக்கும்போது பாடப்புத்தகத்தில் இருக்கும் கலாநிதி ஒருவர் எழுதிய முன்னுரையை கிழித்துவிடுங்கள் எனச் சொல்லி குப்பைக்கூடையை ஒவ்வொரு மாணவரிடம் நீட்டியபடி போவார்.


மாணவர்கள் தமது ஆசிரியரின், மாணவ காலத்தை பழைய Year Book ஊடு கண்டுபிடிக்கும்போது, அவர் இரகசியமாக Dead Poets Society என்ற பெயரில் நடத்திய இலக்கியக் குழுவைக் கண்டுபிடிக்கின்றனர். அந்தக் குழுவின் கூட்டங்களை எப்படி கடந்தகாலத்தில் தேரோவின் 'நான் காட்டுக்குள் போனேன், ஏனென்றால் நான் உள்ளுணர்வோடு வாழ விரும்பினேன். வாழ்க்கையை அதன் (என்பு) மச்சை வரை உறிஞ்சி ஆழமாக வாழ விரும்பினேன்' எனச் சொல்லித் தொடங்குவார்களோ அப்படி இந்த மாணவர்களும் சொல்லி உற்சாகத்துடன் கவிதைகளைக் கொண்டாடத் தொடங்குகின்றார்கள். இப்படி Dead Poets Society என்ற பெயரை வைத்து கவிதைகளை ஆராதித்ததுமாதிரி, ரொபர்தோ பொலானோவின் நாவலான Salvage Detectives பதின்மர்கள் தொடங்கும் கவிதைக்குழுவின் பெயர் Visceral Realists என்பது நமக்கு நினைவுக்கு வரலாம்.


வ்வொருவருக்கும் வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருந்தாலும், நாளாந்த வாழ்க்கை என்பது பெரும்பாடாக அலைய வைக்கின்றது. கிருஷ்ணன் நம்பி 60களில் எழுதிய கதையான 'தங்க ஒரு..' வில் வருகின்றவன் ஒரு வீட்டை வாடகைக்குத் தேடி அலைகின்றான. கிராமத்திலிருக்கும் அவனது மனைவியும், குழந்தையும் இவனோடு சேரந்து வாழ நகரத்துக்கு வர விரும்புகின்றார்கள். வாரத்துக்கு இரண்டு மூன்று கடிதங்கள் எப்போது நாங்கள் வருவதென மனைவி கேட்டபடி இருக்கின்றாள். இவனின் குமாஸ்தா வேலையில் வரும் சம்பளத்தில் ஒரு உரிய வாடகை வீட்டைக் கண்டுபிடிக்க முடியாதிருக்கின்றது.

அப்போதுதான் 'ஒரு காலணிக்குள் வாழும்' ஒரு மனிதனை தேனாம்பட்டையில் இவன் சந்திக்கின்றான். அந்தக் குள்ள மனிதன் ஒரு காலத்தில் பொலிஸாக இருந்தவன். அவன் நகரம் கொடுக்கும் நெருக்கடிகளால் சிறிது சிறிதாக குள்ளமாகி, அவனின் பொலிஸ் காலணிக்குள்ளேயே குடும்பத்துடன் வாழ்கின்ற ஒருவனாக மாறிவிட்டான் என்று அந்தக் கதை நீளும்.

மனிதர்களுக்கு இந்த வாழ்க்கை கொடுக்கும் நெருக்கடிகளால் எவ்வாறெல்லாம் மனிதன் பரிமாணம் அடைகின்றான் என்பதுதான் கதை. அதில் ஓரிடத்தில் 'எதையும் கடைசி வரைத் தெரிந்து கொள்ளும் அக்கறை உள்ளவளாயிற்றே நீ. ஆனால் உலகத்தில் எதையும் கடைசி வரைத் தெரிந்து கொள்ள முடியாது என்பதை மீண்டும் உனக்குச் சொல்லுகிறேன். கடைசி கடைசி என்பதெல்லாம் வெறும் மயக்கம்' என்று இந்தக் கதைசொல்லி தன் மனைவிக்கு கடிதம் எழுதுவார்.

இந்தக் 'கடைசி வரை தெரிவது தோற்ற மயக்கம்' ஆக இருப்பது போலத்தான் நமது கைகூடாத ஆசைகளும் இருக்கின்றன. அவை கைகூடும்போது நமக்கு அதை ஆறுதலாக இருந்து அனுபவிக்க முடியாதபடி இன்னொரு ஆசை சிறகு விரித்துத் தொடங்கி விடுகின்றது. ஆக கடைசி என்ற ஒன்றுமே இல்லாது. மேலும் மேலும் பெருகிக் கொண்டிருப்பதற்கு எப்படி ஒரு எல்லை வகுத்துவிட முடியும்?

ஆனால் இந்த எளிய உண்மையை Promised Land  திரைப்படத்தில் லெமன் ஜூஸ் விற்கும் ஒரு சிறுமி உடைத்து விடுகின்றாள். ஒரு சிறு கிராமத்தில் இயற்கை வாயு கிடைக்கின்றது என்று அறிந்து ஒரு பெரிய நிறுவனம் தனது சார்பாக ஒருவனை அங்கே அனுப்புகின்றது. அவனது பணி, அந்த மக்களை நிலத்தினடியில் இருக்கும் இயற்கை வாயுவினால் அவர்களுக்கு பெரும் பணம் கிடைக்கப்போகிறதெனச் சொல்லி அவர்களின் விவசாய நிலங்களை அவர்களிடமிருந்து வாங்குவது/குத்தகைக்கு எடுப்பது. இறுதியில் தனது நிறுவனத்தின் தகிடுதித்தங்களை விளங்கி அந்த மக்களுக்கு உண்மையை உரைக்கப் போகும் அவன் இந்தச் சிறுமியிடம் லெமன் ஜூஸ் வாங்கிக் குடிப்பான்.

அவன் அந்த ஜூஸின் பணத்தை விட (25 சதம்), அதிக காசை அந்தச் சிறுமிக்குக் கொடுப்பான். அவள் மேலதிக பணத்தை வாங்க மறுத்து, 25 சதமே போதுமென்பாள். ஒருவகையில் மனிதர்களுக்கு இருக்கும் பணத்தாசை என்பதைவிட, நீங்கள் இந்தப் பூமியை உங்கள் வரம்பிற்கேற்பப் பாவித்துவிட்டு இந்தச் சிறுமியைப் போன்ற அடுத்த தலைமுறையும் அனுபவிக்க விட்டுச் செல்லுங்கள் என அது மறைமுகமாய்ச் சொல்வது போலத் தோன்றியது. நாம் நமது அளவற்ற ஆசைகளை நம் இருப்பிற்கான அவசியங்களாக ஆக்கி, நம்மையும் எதிர்காலச் சந்ததியையும் நட்டாற்றில் விட்டுச் செல்லும் மிகப் பெரும் நுகர்வோராக மாறிவிட்டோம். இன்னுமின்னும் வேண்டும் என்று நம் வாழ்வைக் கூட நிம்மதியாக வாழமுடியாது, அக/புற அழுத்தங்களினால் நாம் ஓய்வே இல்லாது ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

வசதி வாய்ப்புக்களில் கூடிய/குறைந்த மனிதர்கள் பலரைப் பார்க்கின்றோம். ஆனால் படிநிலைகள் எவ்வாறிருப்பினும் தமக்குள் தீர்க்கமுடியாப் பிரச்சனைகளோடும், ஆசைகளோடும் தான் அநேகர் இருக்கின்றார்கள். இப்படியான பிரச்சினைகளோடு வாழ்வதில் மட்டும் நாம் எல்லோரும் 'சமதர்ம' உலகில் வாழ்கின்றோம் என நினைக்கிறேன்.


தார்த்தவாதக் கதைகளே இப்போது நம் தமிழ்ச்சூழலில் மிகுந்த உணர்ச்சிவசமாக எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பிழியப் பிழிய உணர்வுகளைக் கொடுத்தால் அது ஒரு சிறந்த புனைவாக வந்துவிடும் என்று எழுதப்படாத விதி போலும். பலர் கடுமையாக தீவிர விரதத்தைப் போல அதைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்யதார்த்தவாதக் கதை என்றாலும் தமிழ்பிரபாவின் 'கோசலை' நல்லதொரு நாவல். அங்கே  உணர்ச்சிகளுண்டு, உணர்ச்சிவசப்படுவதற்கான சம்பவங்களும் இருக்கின்றன. ஆனால் தமிழ்ப்பிரபா அதை - மேலே லெமன் விற்கும் சிறுமி போல- வாசகர் புரிந்து அசைபோடுவதற்கான வெளிகளை விட்டுச் செல்வதால் அது மிகு உணர்ச்சியாகவோ/அதீத நாடகீயமாகவோ போகவில்லை. ஒருவகையில் கோசலையை கோசலையால் மட்டும் புரிந்துகொள்ள முடியும் என்கின்ற சிக்கலான ஒரு பாத்திரமாக அவர் படைக்கப்பட்டிருப்பார்.

இன்று எழுதப்படும் சிறுகதைகள் இப்படி உணர்ச்சிகளின் நெருக்கடியால் எழுதப்படுவதால் அவற்றை மேல் எழுந்த நுனிப்புல் வாசிப்போடு கடந்து போய்க்கொண்டிருப்பேன். புனைவில் கதையென்று தெளிவாக இல்லாமலே வாசகர் இரசிக்க , அதற்குள் ஊறி நின்று எழுதலாம் என்று ஒருமாதிரியான சட்டகங்களுக்கு எழுதுபவர்களின் தலையில் ஆணியடித்துச் சொல்லலாமோ என்று கூட நினைப்பதுண்டு. புதிதாக எழுதுபவர்களைக் கூட மன்னித்து மறந்துவிடலாம், ஆனால் எழுத்தாளர் என்ற பெயரை அடைந்துவிட்டவர்களுக்கு இந்தச் சிகிச்சை இனிவரும் காலங்களில் அவசியம் என்று நினைக்கின்றேன்.

அந்தவகையில் யுவன் சந்திரசேகரின் அண்மைக்கால கதைகளைத் தொகுத்து வந்த 'கடலில் எறிந்தவை'  ஒரு இதமான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. கதைகள் கிட்டத்தட்ட கட்டுரைக்கு நெருக்கமான எழுத்து வகையெனக் கூடச் சொல்லலாம். கதைகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான விடயங்கள் இருப்பதில்லை. ஏதாவது ஒன்றோ இரண்டு பக்கங்களில் கதை மாதிரியான ஒன்றைச் சொல்லிவிட்டு யுவன் இந்தத் தொகுப்பிலுள்ள அநேகமான கதைகளில் தன் கனவுகளையும், அலையும் மனவோட்டங்களையும்தான் பேசுகின்றார். ஆனால் அது அலுக்காதவகையில் எனக்கு சுவாரசியமாகத் தெரிந்தது.

மேலும் ஒரு சட்டகத்துக்கு வெளியே இருப்பதும், ஏதேனும் ஒரு குழுவுக்குள் ஜக்கியம் ஆகாமல் தன்னியல்பிலே இருப்பது என்பதும் சுவாரசியமானது.  ஆகவே அந்த உதிரிக் குரல்களை, விதிவிலக்குகளை நாம் தொடர்ந்து பேசுவோம்.Dead Poets Society இல் வந்த ஆசிரியரைப் போல, லெமன் விற்கும் சிறுமியைப் போல, நிறைய வசதிகள் பெருகும் என்றாலும் தனக்கு அறமென நினைப்பதை தயக்கமின்றிச் சொல்லி வேலையிலிருந்து துரத்தப்படும் அந்த Promised Land ஆணைப் போல,  நாம் புனைவுகளில் மட்டுமின்றி வாழ்விலும் நம்மைப் புதிதாய்க் கண்டுபிடிப்போம்.

**************

 

(நன்றி: 'அம்ருதா' - கார்த்திகை, 2023)

காலத்தின் முன் தொலைந்து போகாத படைப்பாளிகள்

Sunday, November 12, 2023

 

1.


நான் திரைப்படம் குறித்து எழுதிய முதல் விமர்சனம் ‘Finding Forrester’ என நினைக்கிறேன். இந்தத் திரைப்படத்தைப்  படித்துக் கொண்டிருந்தபோது பார்த்தேன். அதன் பாதிப்பில் ஒரு விமர்சனம் எழுதி, அது  வெளியான பத்திரிகையொன்றில் வெளிவந்தது. ஒரு கறுப்பின பதின்மனுக்கும், ஒரு எழுத்தாளருக்கும் இடையில் மலரும் நட்பைப் பற்றிய படமது. 


எழுத்தாளர் புலிட்ஸர் விருது பெற்ற படைப்பாளி என்றாலும் எல்லா வெளியுலகத் தொடர்புகளையும் மூடி தன் வீட்டுக்குள் வசிப்பவர். தன்னை திறந்து காட்டாத எழுத்தாளர் அந்த கறுப்பின பதின்மனுக்கு ஆங்கிலக் கட்டுரைகளைத் திருத்திக் கொடுக்கும் நண்பராகின்றார். இதில் Sean Connery எழுத்தாளராக நடித்திருப்பார். இது ஒரு கற்பனைப் பாத்திரம் என்றாலும், J.D.Salinger இன் பாதிப்பு இப்படத்தில் தனக்குள் இருந்ததென்று சீன் கானரி பின்னர் சொல்லியிருக்கின்றார்.


ஆங்கிலத்தில்  சாலிஞ்ஜர் (Salinger), ஹார்ப்பர் லீ (Harper Lee) போன்றவர்கள் தமது முதலாவது நாவல்களின் பெரும் வெற்றிகளுக்குப் பின் எதையும் எழுதாமல் அல்லது எழுதினாலும் நூலாக வெளியிடாமல் இருந்தவர்கள். ஆனால் அவர்களின் நாவல்கள் பெரும் பாதிப்பை வாசகர்களிடையே ஏற்படுத்தி அடுத்து என்ன நாவல்கள் எழுதுவார்களெனக் காத்திருக்க வைத்தவை. சாலிஞ்ஜரின் 'The Catcher in the Rye' பதின்மன் ஒருவனின் வாழ்க்கையைச் சொன்னாலும், பல நாடுகளில் அது தடைசெய்யப்பட்டது. அமெரிக்காவிலும் பல பாடசாலைகளில் கத்தோலிக்க மதத்தை நிந்தனை செய்வதாக படிப்பது தடை செய்யப்பட்டது. 1951 இல் வெளியிடப்பட்ட இந்த நாவல் மில்லியன கணக்கில் விற்கப்பட்டிருக்கின்றது. இத்தனை ஆண்டுகள் கழிந்தபின், இப்போதும் பல்லாயிரக்கணக்கில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. 


நான் கனடாவில் உயர்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது எங்களுக்கு இந்த நாவலும், ஹார்பர் லீயின் To Kill a Mockingbird உம் , பாடத் திட்டத்தில் இருந்தன. எங்கள் ஆசிரியர் ஹார்ப்பர் லீயைத் தெரிவு செய்ததால் நாங்கள் To Kill a Mockingbird ஐ வாசித்தோம். இப்போது ஹர்ப்பர் லீயின் நாவலும் கேள்விக்குட்படுத்தப்படுகின்றது. அமெரிக்கக் கறுப்பினத்தவர்களை காக்க வந்த ஒரு மீட்பராக அதில் வெள்ளையின Atticus Finch என்ற பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருப்பது  குறித்து கேள்வி எழுப்பப்படுகின்றது. கிட்டத்தட்ட 20 இடங்களில் மேல் கறுப்பினத்தவர்களை இழிவுசெய்யும் 'N' வார்த்தை பாவிக்கப்பட்டதை, 9/10ம் வகுப்பு மாணவர்கள் வாசிப்பு சரியா என்று சர்ச்சைகளும் போய்க் கொண்டிருக்கின்றன. 


ஹார்ப்பர் லீ என்ற வெள்ளையினப் பெண்மணி, Scouts என்கின்ற ஒரு வெள்ளைச் சிறுமி வயதுக்கு வருகின்ற பார்வையினூடு இதை எழுதினாலும், அந்தக் காலத்தில் இருந்த நிறவாதத்தை இனங்காட்டிய ஒரு முக்கியமான நாவல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்நாவல் 1960களில் வெளிவந்தாலும், 1930காலகட்டத்தைப் பிரதிபலிக்கின்றது. எனவே அந்தக் காலகட்டத்து உலகத்தைத்தான் ஹர்ப்பர் லீ பிரதிபலித்தார் என்பதும் சரியே. ஆனால் அதேசமயம் ஒடுக்கப்பட்ட மக்கள், நெடுங்காலமாக அடிமையாக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களின் வலிகளும், குரல்களும் முக்கியமானதே. 


ஒடுக்கப்படுவோர் குரல் என்றும் எங்கேயும் பிற எதையும் விட முதன்மை கொடுத்துச் செவிமடுக்க வேண்டியவை. இன்றைக்கு இந்த ஆங்கிலேய நாடுகளில் (அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா) கறுப்பின/பூர்வீக மக்கள் ஏற்கனவே நடத்திய பெரும் போராட்டங்களால்தான், எங்களைப் போன்ற மண்ணிறமக்கள் ஒரளவுக்குச் சுதந்திரமான மனிதர்களாக இந்த மேற்கத்தைய நாடுகளில் வாழ முடிகின்றது என்பதை நாம் உணர்ந்தால் நாம் யாரின் குரல்களோடு சேர்ந்து ஓங்கி ஒலிக்கவேண்டும் என்பது புரியும்.


0000000



சாலிஞ்ஜரும் 'Catcher in the Rye' எழுதியபின் பெரிதாக எந்த நாவலும் எழுதவில்லை. அதற்கு முன்னர் எழுதிய சில கதைகளைத் தொகுத்து ஒரு சிறுகதைத் தொகுப்பும், 'Franny and Zooey' ஒரு குறுநாவல் (+ சிறுகதை) தொகுப்பும் வெளியிட்டதைத் தவிர வேறு எதுவும் எழுதவில்லை. அதன்பிறகு ஒரு தலைமறைவு வாழ்க்கைக்கு சாலிஞ்ஜர் போய் விட்டிருந்தார். இப்படி தலைமறைவில் இருந்த சாலிஞ்ஜரோடு 90களின் நடுவில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட தொடர்புகளை வைத்து ஒரு நூல் வெளிவந்திருக்கின்றது. அது My Salinger Year. 


ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற Joanna Rakoff  ஒரு பதிப்பகத்தில் முகவராகச் சேர்கின்றார். அவர்களே சாலிஞ்ஜருக்கு முகவராக இருப்பதால், ஜோனாவுக்கு சாலிஞ்ஜரோடு தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் வருகின்றது. சாலிஞ்ஜரின் 1950 நாவலுக்கு, 1990களிலும் பல வாசகர்கள் கடிதம் எழுதிக் கொண்டிருக்கின்றனர். சாலிஞ்ஜர் தனது தலைமறைவு வாழ்க்கையால் எவரோடும் தொடர்பு கொள்வதில்லை. அவரது முகவரியோ/தொலைபேசி எண்ணோ எவருக்கும் கொடுக்கக்கூடாது என்று ஜோனாவின் நிறுவனம் ஜோனாவுக்கு எச்சரிக்கை செய்கின்றது. 


ஜோனாவின் பெரும்பாலான வேலை, Catcher in the Rye இற்கு வரும் வாசகர் கடிதங்களை வாசித்துவிட்டு குப்பைக் கூடைக்குள் எறிவதாகும். சிலருக்கு மட்டும், 'உங்கள் கடிதத்திற்கு நன்றி, ஆனால் சாலிஞ்ஜர் இந்தக் கடித்தை வாசிக்க விரும்பவில்லை' என்று பதிப்பகத்தினூடு ஒரு சிறுகடிதம் மட்டும் அனுப்பி வைக்கப்படுகின்றது.


ஒரு காலத்தில் எதையும் வாசிக்காமல் குப்பைத்தொட்டிக்கு கடிதங்களை எறிந்த பதிப்பகம் ஒரு அசம்பாவிதத்தின் பின், கடிதங்களை திறந்து வாசித்துவிட்டு குப்பைத் தொட்டிக்குள் எறிகின்றது. அது பீடில்ஸ் இசைக்குழுவின் ஜான் லெலனின் கொலைக்குப் பிறகாகும். ஜான் லெனனை சுட்டுக்கொன்ற கொலையாளி தன் கையில் வைத்திருந்தது சாலிஞ்ஜரின் இந்த நாவலையே. இந்நாவலே தன்னை இப்படி ஜான் லெனனைக் கொலை செய்யத் தூண்டியது என்று ஒரு வாக்குமூலத்தை அந்த கொலையாளி கொடுத்திருந்தார். 


அதன்பின் இந்த பதிப்பகம் சாலஞ்ஜருக்காய் வரும் எல்லாக் கடிதங்களையும் திறந்து வாசிப்பது என்று முடிவை எடுக்கின்றது. ஒருபோதும் எந்தக் கடிதத்திற்கும் சாலிஞ்ஜர் பதில் எழுதுவதில்லை என்கின்றபோதும் தினமும் கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒருகட்டத்தில் அந்தக் கடிதங்களின் உட்பொதிந்திருக்கும் சுவாரசியமான விடயங்களால், பதிப்பகத்திற்குத் தெரியாமல் ஜோனா பதில் கடிதங்களை இரகசியமாக எழுதத் தொடங்குகின்றார். சாலிஞ்ஜரோடு தொலைபேசியில் அவ்வப்போது பேசும் ஜோனாவின் எழுத்தாளராகும் கனவைக் கண்டு சாலிஞ்ஜர் அவரைத் தினமும் முப்பது நிமிடமாவது எதையாவது எழுதும்படி அறிவுறுத்துகின்றார். 


மேலும் நீ இந்த அலுவலகத்தில் இருந்து வரும் பிரதிகளை வாசித்து திருத்தங்களைச் செய்யும் ஒருத்தியல்ல, படைப்பாளி என்பதை ஒருபோதும் மறந்துவிடாதே என்கின்றார். தொழிலில் தேர்ந்து ஒரு சிறந்த எடிட்டராக/முகவராக ஒருகட்டத்தில் வரும் ஜோனா இந்த வேலையைத் துறந்து தனது எழுத்தாளராகும் கனவைப் பின்தொடர்ந்து போகின்றார். அந்த ஜோனா தன் சொந்த அனுபவங்களை வைத்து எழுதிய நூலே பின்னர் இதே பெயரில் (My Salinger Year) திரைப்படமாகவும் வந்திருக்கின்றது.


ஆக 1950களில் ஒரு நாவல் எழுதப்பட்டு இன்று 70 ஆண்டுகள் கழிந்தபின்னும் ஏதோ ஒருவகையில் இந்நாவல் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சாலிஞ்ஜர் இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பங்குபற்றியவர். அமெரிக்க உளவுத்துறையில் வேலை செய்தவர் எனவும் சொல்லப்படுகின்றது. ஆனால் இறுதிக்காலத்தில் தனது மகளிடம் 'நீ எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் உன்னால் எரிகின்ற தசையின் மணத்தை உனது மூக்கிலிருந்து ஒருபோதும் அகற்றமுடியாது' என போரின் கொடும் நினைவுகளில் இருந்து ஒருபோதும் தப்பிவிட முடியாதிருப்பது பற்றிக் கூறியிருக்கின்றார். 


சாலிஞ்ஜர் ஆகக்குறைந்தது இன்னமும் பதிப்பிக்காத இரண்டு நாவல்களை எழுதியிருக்கின்றார் எனச் சொல்லப்படுகின்றது. 'There is a marvelous peace in not publishing ... I like to write. I love to write. But I write just for myself and my own pleasure' என பதிப்பிப்பதை விட எழுதுவதையே அதிகம் விரும்பிய சாலிஞ்ஜரின் புதிய நாவல்கள் இனிவரும் காலங்களில் வெளிவரலாம். அப்போது சிலவேளைகளில் இன்னொருவகையான சாலிஞ்ஜரை நாம் அடையாளம் கண்டுகொள்ளவும் கூடும்.


மனிதர்களாகிய நாம் உதித்தும், மறைந்தும் போய்க் கொண்டிருக்கின்றோம். ஆனால் சிலரையே இந்த உலகம் நினைவில் நீண்டகாலம் வைத்துக் கொண்டிருக்கின்றது. எழுத்தாளர்களாக இருக்கும் பலர் தனி வாழ்வில் வறுமையிலும் வேதனையிலும் உழலக்கூடும், ஆனால் அவர்களின் படைப்புக்கள் காலம் கடந்தும் பேசப்படும் ஆசிர்வாதத்தையும் இதே எழுத்தே அவர்களுக்கு மனமுவந்து அளிக்கவும் செய்கின்றது.


***********


(நன்றி: 'அம்ருதா' - கார்த்திகை, 2023)


கார்காலக் குறிப்புகள் - 27

Sunday, November 05, 2023


வாழ்க்கையில் கடினப்பட்டுத்தான் ஒவ்வொரு படியும் மேலே ஏற வேண்டியிருக்கிறது. அவ்வாறு ஏறியும் கொஞ்சம் நிதானமாக அதை இரசிக்கவிடாது, இன்னொரு கனவு கிளைத்தெழும் அல்லது திருப்தியின்மை படரும். இவ்வாறு எத்தனங்களால் எத்தனப்படாத‌ ஒரு நிதானமான வாழ்வு எப்போது அமையுமென்று நண்பர்களோடு விவாதிப்பதுண்டு. நண்பரொருவர் ஆறு வருடங்கள் இங்கிலாந்தில் வேலை செய்துவிட்டு வந்திருந்தார். அதற்கு முன் இந்தியாவில் சில வருடங்கள் கழித்தவர். அவருக்கு இந்நகர் பெரும் மூச்சடைப்பைத் தருவதாகச் சொன்னார்.

இங்கிலாந்தின் ஒரு புறநகர்ப்பகுதியில் நடந்தோ/சைக்கிளிலோ அவர் வைத்தியராகப் பணிபுரியும் வைத்தியசாலைக்குப் போகையில், அருகிலேயே குதிரையில் பயணித்தபடியும் அயலவர்கள் வருவார்கள் என்று அவர் சொல்லும்போதே அந்நகரின் அழகும், அதன் அமைதியான பின்னணியும் எளிதில் விளங்கியது. பெருநகர் வாழ்வென்பது பெரும்பாலும் நமது நுண்ணுணர்வுகளைக் கொன்றுவிடுகின்றது. மனதுக்குள் கனவுகளுக்குப் பதிலாக ஆயிரமாயிரம் பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருக்க மனிதர்கள் இன்னுமின்னும் இறுக்கமாகிக் கொண்டிருக்கின்றார்கள்.

வேலைக்குப் போகும் ரெயில் பயணங்களில் யன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்ப்பவர்களையோ, புத்தகங்களை வாசித்தபடி தம்மை மறந்தவர்களையோ இப்போது காண்பது அரிதாகிவிட்டது. புத்துணர்ச்சி தரும் காலை வேளையாயினும் எல்லா முகங்களிலும் எதையோ தொலைந்துவிட்டதான கவலையின் ரேகைகள் ஓடுகின்றன. புன்னகைக்கும் விழிகள் எங்கேனும் தென்படாதா என்ற ஏக்கத்துடன் ரெயில் பயணங்கள் நிறைவடையும்.


ஸென்னை விளங்கிக் கொள்வது என்பது கடினமானது. ஸென் ஆசிரியர் எதையாவது சொல்லும் கணத்தில் அதைப் புரிந்துகொள்ளாவிட்டால் அதன் அர்த்தம் எப்போதைக்கும் நழுவிப் போய்விடும் என்பதற்கு ஸென் பல கதைகளை வைத்திருக்கிறது. மறைமுகமாக ஸென் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய மனதை இதனூடு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றது எனச் சொல்லலாம்.

அவ்வாறு கணங்களில் நழுவிப்போகும் அர்த்தங்களைக் கொண்ட ஸென்னை அதன் சுவடுகள் எதுவுமில்லாத மேற்குலகிற்கு அறிமுகப்படுத்தும்போது ஸென் ஆசிரியர்கள் கஷ்டப்பட்டிருக்கின்றார்கள். மேற்கிற்கு வந்த ஸென் ஆசிரியர்களில் முக்கியமானவரான ஸூசுகியிடம் ஒருமுறை 'ஏன் நீங்கள் ஸதோரியை (நிர்வாணம்) விளங்கப்படுத்துவதில்லை' எனக் கேட்கப்படுகிறது. அதற்கு ஸூசுகி 'என்னிடம் இருந்தால்தான் அதை விளங்கப்படுத்த முடியும், நிர்வாணம் என்னிடம் இல்லை, ஆகவே அதைப் பற்றிப் பேசுவதில்லை' என்கின்றார்.


ஞானமடைந்துவிட்டஸூசுகி ஏன் இப்படி நிர்வாணமடையவில்லை என்று சொல்கின்றார் என்பது பற்றி ஓஷோ பின்னர் விளங்கப்படுத்துகிறார். ஓஷோ தான் மாற்றமடைதல் (becoming) என்பது பற்றி பல இடங்களில் பேசினாலும் அது தவறான சொல் பிரயோகம் என்கின்றார். ஏதோ ஒன்றுக்காய் மாற்றமடையும் அல்லது உருமாறும் நாம் நம் இயல்பில் இருந்து இல்லாமல் போய்விடுகின்றோம் என்கின்றார். எதுவாகவோ இருக்கின்றோமோ அதுவே நாம். நாம் அதை விலத்தி வேறொன்றாக முயலும்போது நாம் இயல்பற்றவராகி விடுகின்றோம்.

ஒருவர் செல்வந்தராகஅதிகாரம்மிக்கவராக, கல்வி கற்றவராக மாற்றமடைய முடியும் ஆனால் ஒருபோதும் அவை எதுவும் ஒருவரின் இயல்பூக்கங்கள் அல்ல என்கின்றார். அதுபோலவே பரிநிர்வாணமடைந்த எவரும் ஞானத்தை தன்னகத்தை வைத்திருக்க அதுவொன்றும் 'பொருள்'அல்ல என்கின்றார் ஓஷோ. அதனால் ஷூகியிடம் ஏன் நீங்கள் ஞானமடைவதைப் பற்றி பேசுவதில்லை என்று கேட்கப்பட்டபோது 'நான் ஞானமடையவில்லை, அதனால் பேச முடியவில்லை' என்கின்றார்.
ஞானத்தை ஒரு பொருளாக, தன்னிலிருந்து விலத்தி உருமாறுவதாக எண்ணிக்கொள்ளும் கொள்ளும் ஒருவரே தன்னை ஞானமடைந்தவராக முன்வைப்பார்.

ஸூசுகி கூட, 'நான் நிர்வாணமடைந்துவிட்டேன். என்னால் அனுபவங்களினூடாக அதைச் சொல்லமுடியாது. ஆனால் அது எளிதானது' என்று சொல்லியிருக்கமுடியும். அது ஞானமடைந்தவர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் ஸுடோ ஆசிரியர்கள் சொல்வது. ஸூசுகி ஞானமடைந்து விட்டவர், எனவே அவர் உண்மையைத்தான் சொல்வார். அதே வேளை தன்முனைப்ப்புக்களால் நிறைந்திருக்கும் மேற்குலத்தவர்க்கு, இப்படிச் சொன்னதன் அர்த்தத்தை விளங்கிக் கொள்ள கடினமாக இருந்திருக்கும் என்கின்றார் ஓஷோ. 


ஞானமடையும்போது முதலில் ஒருவரிடம் இல்லாமற் போவது 'நான்' என்பது. அந்த 'நான்' இல்லாமற் போகும் ஒருவர் பின்னர் 'நான் ஞானமடைந்துவிட்டேன்' என எப்படிச் சொல்லமுடியும். இந்த ஞானம் அடைதல் என்பது ஒரு நீர்த்துளியானது கடலில் போய்ச் சேர்வது போன்றதாகும். அப்படி கடலோடு கடந்துவிட்ட துளி, ‘என்னிடம் கடல் இருக்கின்றதுஎன்று சொல்வது எவ்வளவு அபத்தமாக இருக்கும். அந்தத் துளியே கடல்தான்!

ஆகவேதான் 'நான்' என்பது இல்லாது போய் ஞானமடைந்துவிட்ட ஸூசுகியிடம் 'ஏன் ஞானமடைதல் பற்றி பேசுவதில்லை என்று கேட்கப்படும்போது, நான் ஞானமடையவில்லை' என்று அந்தக் கேள்வியைக் கடந்து போகின்றார். மேலும் ஸென் 'ஞானத்தை அடைதல் அல்லது அதைத் தன்னகத்தே வைத்திருத்தல்' என்பதை தொடர்ந்து நிராகரித்தபடியே வருகிறது.

நான் ஆசிரியராகக் கொள்கின்ற ஸென் மரபில் வந்த திக் தியாட் ஹானும் ஞானமடைந்தவர்தான். ஆனால் அவரிடம் ஞானமடைதல் பற்றியோ அல்லது அதனோடு சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கோ வேறு வகையாகத்தான் பதிலளிப்பார். 'இந்த உலகின் மிகப் பெரும் அற்புதம் என்ன‌' என்று அவரிடம் கேட்டால், 'இங்கே இரண்டு கால்களும் நிலத்தில்பட நடப்பதுதான் எனக்குப் பெரும் அற்புதமாக இருக்கிறது' என்று எளிய உதாரணங்களால் நம்மை வழிமறிப்பார். இதென்ன பெரிய அதிசயமா, தாய் நம்மை மடைமாற்றுகின்றார் என்று சலிக்காது, சிறிய விடயங்கள் என்று கடந்துபோகின்றவைகளில் இருக்கும் பேரதிசயத்தைப் பார்க்க நாம் கற்றுக்கொண்டால் நாம் நமக்கான அமைதியையும் மகிழ்ச்சியையும் சிலவேளைகளில் கண்டடையக்கூடும். அதைத்தான் என் ஆசிரியரான தாய் நமக்கு அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

எத்தனங்கள் எதுவுமில்லாது நம் இயல்பிலே இருப்பது எவ்வளவு எளிதானது. ஆனால் எளிதுதான் மிகவும் கடினமாகவும் இந்த உலகில் இருக்கிறது. யேசு தண்ணீரில் நடந்தார் என்பதைவிட அவர் நிலத்தில் பாவப்பட்ட மக்களை இரட்சிப்பதற்காகப் பல்லாயிரம் மைல்களைக் கால்களால் நடந்தார் என்பதுதான் இயேசு செய்த சாதனை. புத்தர் நாற்பதில் ஞானமடைந்துவிட்டு, மேலும் 40 ஆண்டுகள் தான் அடைந்த அனுபவத்தை நமக்குப் போதிப்பதற்காய் இந்த உலகில் வாழ்ந்ததுதான் எனக்குப் பேரதிசயம்.

********

என் எண்ணங்களோடோ இதுவரை பயணித்த உங்களுக்கு மிக்க‌ நன்றி. உங்களுக்குரிய காலையோ அல்லது மாலையோ அல்லது நள்ளிரவோ எதுவாகினும் இனிதாகட்டும்.

இந்தக் குளிர்காலத்தில் எனது ரெயில் பத்திரமாக என்னைக் கொண்டு வந்து இறக்கிவிட்டது. இனி இன்னொருவனாக உருமாறும் எத்தனத்தோடு இந்தப் பெருநகரின் சுழல் வட்டத்துக்குள் செக்கு மாடு போல இழுபடுவேன்.

இதுவரை வாசித்த நீங்கள் கடைசிப் பந்தியையும் வாசித்துவிட்டு நம்மைப் போன்ற ஒருவன் எனச் சலித்துக் கொண்டால், நீங்கள் இன்னும் சின்ன விடயங்களின் பேரதியங்களைத் தவறவிடுகின்ற ஒருவராக இருக்கக்கூடும். கடைசிப் பந்தியை வாசித்துவிட்டும் உங்களின் உற்சாகம் குறையவில்லை என்றால் நீங்கள் என்னோடு பகிர்ந்து கொள்வதற்கு நிறையவுண்டு.

*****

(Oct  16)

 

இந்தப் பதிவுக்கு வந்த சில பின்னூட்டங்கள்


வடகோவை வரதராஜன்:


எத்தனம்கள் எதுவுமின்றி எம் இயல்பில் இருப்பதுதான் எளிதானது மட்டுமல்ல .மகிழ்வானதும் கூட . எத்தனம்களை செய்யும் போது நாம் போலி முகமூடி அணிகிறோம் . அது எம் முகத்தை உறுத்துகிறது .இயல்பாக இருக்கிறவனுக்கு இந்த உறுத்தல் பெரும் கொடுமை

 

முருகேசு கனகலிங்கம்:


ஓஷோ வைப்பற்றிய குறிப்பிடல்கள் மகிழ்ச்சி அளிக்கிறது.ஜென்,தாவோ,சூபி யிசம் பற்றியெல்லாம் அவர் நிறையப் பேசியிருக்கிறார்.இவையெல்லாம் நுண்ணிய மன அனுபவங்கள் தாம்.எவரோடும் விவாதிப்பதற்கு இவைகளில் எதுவுமில்லை.அவ்வாறு (கற்ற)--புரிந்துகொண்ட ஒருவரை சந்திக்க நேர்ந்தால் அவரருகில் மௌனமாக அமர்ந்திருக்கவே என்னால் முடியும்.ஓஷோ வில் எனக்கு குறையுமுண்டு.உலகத்துத் தத்துவஞானங்களையெல்லாம் தேடித் தேடிக் கற்றிருக்கிறார்.ஆனால் தமிழின் பக்கம் அவர் தலை வைத்தும் படுக்கவில்லை.தமிழில் எண்ணற்ற ஞான நூல்கள் உள்ளன. பதினெண் சித்தர்கள், திருமூலர்,திருவள்ளுவர்,தாயுமானவர், பிற்கால ஞானிகள் பலரும் உள்ளனர்.அவை,அவருக்குக் கிட்டாத பொக்கிஷங்கள் என்றே நான் கூறுவேன்.ராமகிருஷ்ணரை,அரவிந்தரை,ரமணரை எல்லாம் தனது நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.தமிழ் ஞானச் செல்வம் அவருக்குக் கிட்டவில்லை. நல்லது, நன்றி.

 

சுகிர்தா இனியா:


சக மனிதர்களின் மீது இவ்வளவு வன்மத்தை ஏன் கக்குகிறார்கள்? ஒருவரை ஒருவர் ஏன் பிராண்டிக் கொள்கிறார்கள்? இத்தனை வெறுப்பை சுமந்து கொண்டு அலையும் மனம் எப்படி நிம்மதியாக நித்திரை கொள்கிறது என்றெல்லாம் நேற்று பொதுவாக எண்ணிக் கொண்டிருந்தேன். மனிதர்களிடமிருந்து வெளிப்படும் வன்மம் வாழ்க்கையின் மீது ஒரு அவநம்பிக்கையைக் கொடுப்பதாக இருக்கிறது. இந்த முகப்புத்தகம் ஒரு இளைப்பாறுதல், ஒரு அடைக்கலம் என்று இங்கே வந்த எனக்கு இப்போதெல்லாம் இதுவும் சராசரி மனிதர்களின் கூடாரமே என்று தோன்றுகிறது. எல்லா இடங்களிலும் போலவே இங்கேயும் மனிதர்கள் அதே சராசரித்தனத்துடன் தான் இருக்கிறார்கள். மனிதநேயமே அசாத்தியம் ஆகிவிட்டதோ என்ற அச்சம் மேவுகிறது. ஒருவர் வெறுப்பைக் கக்கினால் அது சங்கலித் தொடர் போல எல்லோரையும் பற்றிக் கொள்கிறதைக் கண்டு அதிர்ச்சியடைகிறேன். 


மனிதர்கள் தங்களைக் குறித்தே இருக்கிற தங்களுடைய ஆற்றாமையையோ அல்லது தங்களுடைய இயலாமையையோ எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்றால் எதிர்ப்படுபவர்களை எல்லாம் இப்படி ஒரு நிமிண்டல் அப்படி ஒரு நோண்டல். இது அவர்களுக்கு எந்த வித திருப்தியை அளிக்கிறது என்று என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. இதையெல்லாம் பார்த்து மனித சமூகத்தின் மீது நம்பிக்கை இழந்து இங்கே இருந்தும் ஓடிவிடலாம் என்று எண்ணும்போது இந்தக் காலையில் இளங்கோவின் இந்தப் பதிவு ஆறுதலாக இருக்கிறது. வெளி உலகைப் போலவே அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கும் நமக்கானவர்களை பொறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றி இளங்கோ! தொடர்ந்து எழுதுங்கள்.

****************

மெக்ஸிக்கோ

Sunday, October 29, 2023

 

ஒரு வாசிப்பு அனுபவம்

நன்றி: கிருஷ்ணா



வணக்கம் இளங்கோ,


ஆடி மாதம் மெக்ஸிக்கோவில்  வாசிப்போம் என்றிருந்த மெக்ஸிக்கோவை இப்போது தான் மகனை நீச்சலுக்கு விட்டு விட்டு காத்திருக்கும் நேரத்தில் வாசிக்கிறேன்.  அரை மணித்தியாலத்தில் ஒரே மூச்சாக பதினொரு அத்தியாயங்களை வாசித்து விட்டு இப்போது அசை போடுகிறேன்.  அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.


1 1/2 மணித்தியாலங்களில் 30 அத்தியாயங்களை முடித்து விட்டேன் . ஒரு சுகமான வாசிப்பனுபவம்.


..........


இப்போது வாசித்து முடித்து விட்டேன்.  எதிர்பாராத முடிவு.  கதைக்கு நன்றாக இருந்தாலும் ஏனோ இப்படி ஏன் முடித்தீர்கள் என்று இரண்டு நாட்களாக யோசிக்கிறேன்.  இன்னுமொரு முறை வாசித்தால் தான் கருத்து எழுத முடியும்.


வாசிக்கும் போது நான் நினைத்தேன் திரும்பவும் மெக்ஸ்சிக்கோ போகும் போது 'பொண்ட்' கதைகள் போல அவளைப் பற்றி அதுவரை வாசகனுக்குத் தெரியாததைச் சொல்லி கதையின் திருப்பத்தைச் சொல்லப் போகிறீர்கள் என்று. அல்லது பழைய காதல் தந்த துன்பத்தால் வேண்டுமென்றே மீண்டும் அப்படி ஒரு நிலைக்குப் போகாமல் இருப்பதற்காகவே சந்திக்கவில்லை என்று.  நான் மிகச் சாதாரண வாசகன்.  எனக்கு அப்படித் தான் கதை போகும் என்று ஊகிக்க முடியும்.


அந்த வகையில் நான் எதிர்பாராத ஒன்றைச் சொன்னது நல்ல உத்தியாகத் தான் இருந்தது.  அது தான் எல்லோரையும் கவர்ந்ததற்கான காரணமாக இருக்க வேண்டும்.


ஆனாலும் உங்களது இயல்பான எழுத்து நடைக்கு கடைசி ஓரிரண்டு அத்தியாயங்கள் கொஞ்சம் அன்னியமாக இருந்தன என்பது எனது அவதானம். 


இந்த ஆவலில் முன்பு தொடங்கி இடையில் நிற்பாட்டிய 'தாய்லாந்தை'  இனி வாசிக்கப் போகிறேன்.


00000000


(செப்ரெம்பர் 15, 2023)

கார்காலக் குறிப்புகள் - 26

Monday, October 23, 2023

 

சில வருடங்களுக்கு முன் எழுத்தாளர் பார்த்திபன் ஜேர்மனியில் இருந்து வந்திருந்தார். அவரைச் சந்தித்தபோது அவர் சேகரித்து வைத்திருந்த வெவ்வேறு மொழிகளில் நிகழ்த்தபட்ட concert காணொளிகள்/பாடல்கள்/திரைப்படங்கள் நிரம்பிய memory stick ஒன்றை எனக்கு அன்பின் நிமித்தம் தந்திருந்தார். தற்செயலாய் என் கணனியில் அதைத் திறந்து பார்த்தபோது, ஏ.ஆர்.ரஹ்மானின் 'நெஞ்சே எழு' என்ற பெயரில் சென்னையில் 2016இல் நடந்த நிகழ்வு இருக்க, இந்த மாலையில் அதைப் பார்த்து/கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.


நான் இசை என்றால், ஏ.ஆர்.ரஹ்மானோடு வளர்ந்து வந்தவன். இன்றைக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அன்றைய காலத்தில் வந்த இசைத்தட்டுக்களின் முகப்புகள் அப்படியே மறக்காமல் நினைவிலிருக்கின்றது. 'அலைபாயுதே'யில் கூந்தல் விரிந்தபடி நீலநிற உடையில் புல்வெளியில் படுத்திருக்கும் ஷாலினி, 'மின்சாரக் கனவில்' பச்சை நிற ஆடையில் இருக்கும் கஜோல் என இன்னும் இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம்.

அன்று அசல் இசைத்தட்டுக்களை ரெமி, ஐங்கரன் போன்ற நிறுவனங்கள் ஐரோப்பா/கனடாவில் வெளியிடும். அவற்றின் விலை அதிகமென்றாலும், இசையின் தரம் மிகச் சிறப்பாக இருக்கும். நான் அன்று கையில் பெரிதும் புழங்காது விட்டாலும் தேடித்தேடி இவற்றை வாங்கிச் சேகரித்திருக்கிறேன். ரஹ்மான்தான் முதன் முதலில் பாடகர்களைத் தாண்டி, தொழில்நுட்ப/பக்கவாத்திய கலைஞர்களின் பெயர்களை தனது இசைத்தட்டுக்களில் பதிவு செய்தவர்.

பின்னாட்களில் இளையராஜா, எஸ்பிபி- ஜேசுதாஸ், கார்த்திக் உள்ளிட்ட அண்மையில் பிரதீப்குமாரின் நேரடி இசை நிகழ்ச்சிகள் வரை எத்தனையோ பார்த்திருந்தாலும், ஏ.ஆர்.ரஹ்மானின் நேரடி இசை நிகழ்வுதான் எனக்கு மிக நெருக்கமானது. மற்றவர்களின் இசை/பாடல் தரங்குறைந்தது என்றெல்லாம் இல்லை, ஆனால் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களோடு தவழ்ந்து வளர்ந்தவன் என்பதால் எனக்கு அவரின் பாடல்களோடு -இன்றைய ஈராயிரக்குழவிகளின் மொழியில் சொல்வதென்றால் - vibe செய்வது எளிதாக இருக்கும். அதனால்தான் ஏஆர்ஆர் 'அந்த அரபிக் கடலோரம்' பாடலை இங்கு பாடியபோது சுற்றியிருந்த சூழலையெல்லாம் மறந்து எழுந்து ஆடியிருக்கின்றேன்.

இப்போதும் இந்த 'நெஞ்சே எழு' நிகழ்வைக் காணொளியாகப் பார்க்கும்போது, என்னையறியாமலே மனம் நிறைந்து சில இடங்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. பகலில் ஏதோ ஒரு சோர்வுக்குள் காரணமில்லாது போயிருந்தவனை உற்சாகமான மனோநிலைக்கு இது பின்னர் மாற்றியுமிருந்தது. அதைத்தானே நமக்குப் பிடித்த கலைஞர்/கலை நமக்குள் நிகழ்த்த வேண்டியது? அதனால்தான் அந்தப் படைப்புக்களோடு நெருக்கமாகவும், அதை வெளிப்படுத்திய கலைஞர்களோடு நேசமாகவும் இருக்கின்றோம்.

இப்போது ரஹ்மானின் பாடல்களை முந்திய 'வெறி'த்தனத்தோடு கேட்பதில்லை. அவர் கடந்த 10 வருடங்களில் வேறொரு தரத்துக்கு நகர்ந்து விட்டார் என நினைக்கின்றேன். நான் பத்து வருடங்களுக்கு முன் இருந்த ரஹ்மானோடு பின் தங்கி அங்கேயே நிற்கின்றேன். ஆனால் அதுவே எனக்கு ரஹ்மானை ஆராதிக்கப் போதுமாயிருக்கின்றது. எனக்கு அடுத்த தலைமுறைக்கு , சமகாலத்தைய ரஹ்மானின் பாடல்கள் நெருக்கமாக இருக்கக்கூடும்.

ரஹ்மான், இளையராஜா எல்லோரும் இசைக்குள்ளேயே மூழ்கிப்போனவர்கள். அவர்களை வெளியே இழுத்து அவர்களுக்குத் தொடர்பில்லாத உலகத்தைப் பற்றிக் கேட்பதெல்லாம் அபத்தமானது. அதைப் புரிந்துகொண்டால் அவர்களுக்கு மட்டுமில்லை நமக்கும் நல்லது. தேவையில்லாது வீணாய் பொங்கி எவரின் நேரத்தையும் வீணடிக்கவும் வேண்டியதில்லை. இளையராஜாவிடம் கடந்தகாலத்தில் பொப் மார்லி/கத்தார் மாதிரி அவர் இருக்கவேண்டும் என்று தமிழுலகம் விவாதித்து அடிபட்டது நினைவிருக்கிறது.

ரஹ்மானும் இசைக்காக ஆஸ்கார் விருது பெற்றபோது ஈழத்தில் மனிதவுயிர்கள் பல்லாயிரக்கணக்கில் யுத்தத்தில் அழிந்து கொண்டிருந்தன. ரஹ்மான் அப்போது ஈழத்தில் ஒரு கொடூர யுத்தம் நடக்கிறதென்று உலகின் முன்னிலையில் சொல்லியிருந்தால் ஒரு இரசிகனாய் அவரை இன்னும் உயரத்தில் கொண்டு போய் நான் வைத்திருப்பேன். ஆனால் ரஹ்மான் எப்படி என்று ஏற்கனவே தெரிந்ததால் எனக்கு அதில் எந்த ஏமாற்றமும் இருக்கவில்லை.

அதேவேளை தனது பாடல்களைப் போல அரசியலையும் வெளிப்படையாகப் பேசும் M.I.A என்கின்ற மாயா அதே எம்மி/ஆஸ்கார் நிகழ்வுகளில் தனது மேடையை ஈழத்துக்காய்ப் பகிர்ந்து கொண்டார். மாயா அதைச் செய்யாவிட்டால்தான் மாயாவின் தீவிர இரசிகன் என்றவகையில் நான் ஏமாற்றமடைந்திருப்பேன்; ரஹ்மான் இது குறித்து மட்டுமில்லை இந்தியாவில் இந்த்துத்துவம் எல்லை மீறிப்போகும் இந்தக்காலத்தில் எதுவும் பேசாதது மெளனமாக கடந்துபோவதைக் கூட என்னால் புரிந்து கொள்ளமுடியும். ஒரு கலைஞரிடம் அவர் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமென நாம் எதிர்பார்க்கலாம்; ஆனால் ஒருபோதும் இப்படித்தான் இருக்கவேண்டுமென அவர்களை வற்புறுத்துதல் நியாயமற்றது. (இதற்கும் தனிப்பட்ட பலவீனங்களால மற்றவர்களை மோசமாகச் சுரண்டல் செய்து அதைக் கலையின் பேரில் சுமத்திவிட்டுத் தப்புபவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.)

நான் ரஹ்மானின் காலத்தவன் என்பதால் இப்போது இன்னொரு சிக்கலையும் எதிர்கொள்கின்றேன். என் காலத்தைய ரஹ்மானின் பாடல்கள் எல்லாம் வைரமுத்துவோடு சம்பந்தப்பட்டது. வைரமுத்துவின் பாலியல் சீண்டல்கள் குறித்து பெண்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோது, இந்தப் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் இந்த அரசியலை எப்படிக் கடந்து கேட்பது என்று மனம் திண்டாடும். அந்த உறுத்தல் ஒவ்வொரு பொழுதும் ரஹ்மானின் பாடல்களைக் கேட்கும்போது ஏதோ ஒருவகையில் எனக்குள் வரும்.

அண்மையில் கூட நண்பரொருவர் மழைக்காலத்திற்கான பாடல்களென எனக்கும் ஒரு பாடலை tag செய்தபோது, அவருக்கு நன்றியாக ஒரு பாடலைப் பதிவு செய்யப்போனபோது ரஹ்மானும் வைரமுத்துவும் இணைந்த ஒரு மழைப்பாடலே எனக்கு உடனே நினைவுக்கு வந்தது அதனைப் பகிரப் போகும்போதுதான் அதைப் பொதுவெளியில் சொல்வதுகூட வைரமுத்துவின் பாலியல் சீண்டல்களை ஒருவகையில் ஏற்றுக்கொள்வது போலாகிவிடும் என்று அதைப் பகிராது பின் வாங்கியிருந்தேன்.

ஆனால் ரஹ்மான் இந்த விடயத்தில் ஒன்றைச் சொல்லாமல் செய்தார். வைரமுத்துவின் மீதான குற்றச்சாட்டுக்கள் பொதுவெளிக்கு வந்தபோது கிட்டத்தட்ட வைரமுத்துவிடம் இருந்து பாடல்களை வாங்குவதிலிருந்து அவர் முற்றிலும் விலகினார். அதேவேளை இந்தச் சர்ச்சையினால் திரைப்படப் பாடல் வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட சின்மயியைத் தன் பாடல்களில் தொடர்ந்து பாடவும் வைத்தார். அரசியல் நீக்கம் செய்தவராக இருக்கும் ரஹ்மான் செய்த இந்த விடயத்தைக் கூட நமது இலக்கியவாதிகள் செய்யவில்லை. கடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கூட வைரமுத்துவை மேடையேற்றி அழகு பார்த்தவர்கள் நமது இலக்கியச் சிம்மங்கள்.

இதையேன் இப்போது சொல்கின்றேன் என்றால் ரஹ்மானின் அண்மைய இசைநிகழ்வின் குழறுபடியால், அவரை எல்லாப் பக்கங்களாலும் அடித்துத் துவைத்துக் கொண்டிருக்கின்றார்கள் எனக் கேள்விப்பட்டேன். நான் பெரிதாக இந்த விடயங்களைப் பின் தொடர்ந்து பார்க்கவோ/வாசிக்கவோ இல்லை. நிகழ்வுக்கு நுழைவுச்சீட்டு எடுத்தும் அனுமதிக்கப்படாதவர்கள் கோபிப்பதில் நியாயங்கள் இருக்கின்றன. ரஹ்மானும் இது குறித்துத் தன் தரப்பைப் பேச வேண்டும் என்றாலும், அந்தப் பாரத்தை நிகழ்வை நடத்தியவர்களே பெரிதும் பொறுப்பெடுக்க வேண்டியவர்களாவர்.

அதேவேளை என் வாழ்க்கையில் இசையின் ஒரு பகுதியாய், அதிக நெருக்கமாக இருந்த ரஹ்மானை எந்தப் பொழுதில் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஏனெனில் அவரிடமிருந்து ஒரு சாதாரண இசை இரசிகனாய்ப் பெற்றதும், பெற்றுக் கொண்டுக் கொண்டிருப்பதும் நிறைய.

ஆகவே அவரோடு இருக்கின்றேன்.

இந்த 'நெஞ்சே எழு'வுடன் அலையலையாய்க் கடந்தகாலத்தில் பயணித்துக் கொண்டிருப்பவன், அதற்கு மூலகாரணியாய் இருப்பவரின் படைப்பாளுமையை 'மறக்குமா நெஞ்சம்'?

இல்லை. ஒருபோதும் மறக்காது!

**********************

(ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்வில் வந்த சர்ச்சைகளால், ரஹ்மானின் ஒரு தீவிர இரசிகன் என்றவகையில் எழுதத் தொடங்கியதை, வழமை போல சமூகவலைத்தளக் கொந்தளிப்புக்கள் அடங்கியபின் இப்போது பதிவிடுகின்றேன்)


(புரட்டாதி 15, 2023)


கார்காலக் குறிப்புகள் - 25

Saturday, October 21, 2023

 

-ஓர் இலையுதிர்கால நடை-


 

நிறம் மாறும் இலைகள். இலைகளை உதிர்க்கும் மரங்கள்.

 

வர்ணங்களின் பேரழகும், உதிர்வின் பிரிவும் இரண்டறக் கலந்து மனதை ஏதோ சொல்ல முடியாத உணர்வில் ஆழ்த்தும் இலையுதிர்காலம் இனி இங்கு.

 

கோடையைப் போல வெயில் புன்னகைக்கின்ற இந்த நாளில் நான் நடந்தபடியிருக்கிறேன். பச்சை/மஞ்சள்/சிவப்பு என எவ்வளவு பார்த்தும் ஒருபோதும் தெவிட்டா மரங்களின் மாயஜாலங்களையும், அவ்வப்போது இடைவெட்டுகின்ற மனிதர்களையும் கடந்தபடி போகின்றேன்.

 

இதமான காலநிலை என்பதால் சைக்கிளில் நிறையப் பேர் செல்கின்றார்கள். உலாத்தலின் நடுவில் சுற்றியிருக்கும் இடத்தின் வனப்பில் மயங்கி ஓர் புகைப்படத்தை வலையேற்றுகிறேன். 'என்னைக் கூட்டிச் செல்லாமல் எங்கே தனியே நடக்கிறாய்' என்று ஒரு மெஸெஜ். 'இன்னமும் இலைகள் உதிர்க்கவில்லையா?' என்று மற்றுமொரு மெஸேஜ்.

 

எல்லாப் பதில்களையும் புன்னகைத்து ஏற்று நீள நடக்கிறேன். காதில் ஹென்றி மில்லரின் 'The Hour of Man' ஐ கேட்கின்றேன். ஓரிடத்தில் ஒரு மத்திய வயதுக்காரரும் இளைஞரும் பேசிக்கொண்டிருப்பது கேட்கின்றது. 'வேலை மட்டும் வாழ்க்கையில்லை, அந்த எண்ணத்தை மறந்துவிடு' என்று சொல்லப்படுவதைக் கேட்கின்றேன். சிலவேளை ஒரு கவுன்சிலர் தன்னிடம் ஆலோசனை கேட்க வந்திருப்பவரை இப்படி மரங்கள் சூழ்ந்த இடத்திற்குக் கூட்டி வந்து, 'வாழ்க்கையை எளிதாகப் பார்' என்று சொல்லிக் கொண்டிருக்கின்றாரோ தெரியவில்லை. பிறகு அதே பாதையையில் திரும்பும் வழியிலும் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் காண்கிறேன். இம்முறை காதில் கேட்பதை நிறுத்திவிட்டு அவர்களின் வாழ்க்கை பற்றிய உரையாடலை உற்றுக் கேட்கின்றேன்.

 

 மரங்களின் மீள்நடுகையை இங்கே தொடங்குகின்றோம் என்ற ஓர் பலகையை கிட்டச் சென்று வாசிக்கின்றேன். இந்த மரங்கள் வளர ஒரு குறிப்பிட்ட காலம் எடுக்கும். தயவு செய்து இதற்குள் நுழைந்து இயற்கையின் சமநிலையைக் குழப்பிவிடாதீர்கள் என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது. மரங்கள் வளர்வது யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்.

 

ஒரு பெஞ்சில் சற்றுநேரம் இருந்து புகைப்படத்துக்கு வந்திருந்த கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேன். இன்ஸ்டாவில் ஏனோ அமலாபாலின் பக்கம் எட்டிப் பார்க்கிறேன். அவருக்குள் என்ன மாற்றம் நடந்து கொண்டிருக்கிறதோ தெரியவில்லை, விவாகரத்துக்குப் பின் சோர்ந்துபோகாமல் ஒரு உற்சாகமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பதை அவரது பக்கம் காட்டுகின்றது. மண் சிற்பங்கள் செய்வதாக அமலா மாடல் செய்த புகைப்படங்கள் அழகாக இருக்கின்றன என நினைத்தபடி மீண்டுமொருமுறை அவர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட பென்யாமினின் 'ஆடு ஜீவிதம்' பட முன்னோட்டதைப் பார்க்கிறேன். இன்னமும் அந்தத் திரைப்படம் திரைக்கு வரவில்லை என்பது நினைவுக்கு வரவும், பக்கத்தில் வந்து ஒரு இளைஞன் அமரவும் சரியாக இருக்கின்றது.

 

கொஞ்சம் அமைதியற்ற இளைஞன். அப்படி இல்லாவிட்டால் இளைஞர் என்று சொல்வதில் அர்த்தமில்லை. குடிப்பதற்கு ஏதோ கொண்டு வந்து வைத்துவிட்டு, நடப்பதும் பின் பெஞ்சில் அமர்வதுமாக இருந்தார். அவரைக் குழப்பாமல் அவரின் இயல்பில் அவரை விடுவதே நல்லதென என் நடையை மீள ஆரம்பிக்கின்றேன்.

 

நான் நிறையக் காலம் அணியும் ரீஷேர்ட்டைப் பார்த்து மருமகள் 'மாம்ஸ் தயவு செய்து இதை அணியாதை' என்றும், பெறாமகள் 'எப்போதுதான் இதைக் கைவிடுவீர்களோ?' என்று கேட்காத நாட்களில்லை. ஆனால் இப்படி குறும்பான வாசகத்தோடு இருப்பதால்தான் கொஞ்ச மனிதர்களாவது என்னைக் கவனித்துப் பார்க்கின்றார்கள் என்பது எனக்கு மட்டுந் தெரிந்த உண்மை. இதே ரீஷேர்ட்டோடு தோழியோடோ, காதலியோடு சேர்ந்து போனால் கூட, யாரேனும் பெண்கள் என்னை கொஞ்சம் ஏறெடுத்துப் பார்த்தால் அவர்களுக்கு மூக்கு வியர்த்துவிடும். என்னை அல்ல, இந்த ரீஷேர்ட்டைத்தான் உற்றுப் பார்க்கின்றனர் என்று நான் உள்ளதைச் சொல்லும்போது 'அதுதானே பார்த்தேன்' என்று அவர்கள் விடும் மூச்சில் என்னை ஒரு சதத்துக்கும் மதிப்பதில்லை என்ற உண்மை விளங்கும். ஆனால் நமக்குத்தானே எந்த வெட்கம் மான ரோஷம் எதுவும் இருப்பதில்லை. அன்பே என்று அவர்களின் காலடியில் சரணாகதி அடைவேன்.

 

இப்படி நடக்கையில் ஒரு வயது முதிர்ந்த இணை ஒன்று எதிரே நடந்து வந்து கொண்டிருந்தது. காதில் ஹென்றி மில்லர் இன்னமும் போய்க் கொண்டிருந்தார். அவர்களைப் பார்த்து ஹலோ சொன்னபோது, கையால் சைகையைக் காட்டி கொஞ்சம் நில் என்றனர். என் ரீஷேர்ட் வாசகத்தை வாசித்துவிட்டு, I love it என்றார் அந்தப் பெண்மணி. பிறகு இன்றைய நாள் அவ்வளவு வெம்மையாக அழகாக இருக்கின்றது அல்லவா என்று எங்கள் உரையாடல் போனது. இப்படியே நான் கடைக்குப் போய் என் மனைவிக்கு பிகினி வாங்கிக் கொடுக்கப் போகின்றேன் என்று நகைச்சுவையாக அந்த முதிய ஆண் சொன்னார். இன்னமும் வற்றிப் போக காதல் அவர்களிடையே ஊற்றெடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தல் அவ்வளவு இனிமை.

 

அவர்களிடம் விடைபெற்று நடந்தபோது மனம் நிறைந்திருந்தது. விழுந்திருந்த ஒரு இலையை எடுத்து சிறுபாலத்தைக் கடக்கும்போது ஒரு முனையில் நேசத்துடன் எடுத்து எறிந்தேன். அதை வீசிவிட்டு பாலத்தின் மறுகரையில் வந்து நின்று அந்த இலை மிதந்து போகின்றதா எனப் பார்த்தேன். அப்போது நீரைக் குனிந்து பாத்தபோது வானம் கீழே மிதந்தது. கூடவே இலைகள் விரிந்த மரமொன்றும் அழகாய்த் தெரிந்தது.

 

அந்த அழகைப் பார்க்கப் பார்க்க உள்ளே மகிழ்ச்சி ததும்பத் தொடங்கியது. மகிழ்ச்சி என்பதே எண்ணங்கள் ஏதுமில்லாமல் நாங்கள் தொலைவதுதான் என்பது புரிந்தது. இல்லாவிட்டால் மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க அழகும் மகிழ்வும் மறைந்துவிடும். ஹென்றி மில்லரின் எழுத்தில் -இராமகிருஷ்ணர் யானையைப் பற்றிச் சொல்லிய கதையொன்று- சொல்லப்பட்டுக் கொண்டிருந்தது.

 

நான் எறிந்த இலையைக் காணவேயில்லை. அப்போதுதான் நீரை உற்றுப் பார்த்தேன். அந்த சிற்றாறிலே இரண்டுவிதமான நீரோட்டங்கள் எதிரும் புதிருமாக ஓடிக் கொண்டிருப்பது தெரிந்தது. இரண்டிலும் இலைகள் இருவேறு திசையில் வந்து கொண்டிருந்தன. அப்படியெனில் எது போகின்றது எது வருகின்றது என எளிதாகக் கணிக்கமுடியுமா? தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை. எந்த ஒன்றும் உருவாவதுமில்லை, அழிவதுமில்லை என்ற துவிதங்களை மறக்கவும் மறுக்கவும் எளிதாக முடிவதில்லை. எனினும் சிலவேளைகளில் இப்படி ஓரு சிற்றாறு எளிய பாடமாக இவற்றைக் கற்பித்து விடுகின்றது.

 

உதிர்வும் அழகென்று இலையுதிர்கால வர்ண இலைகள் சொல்கின்றன. முதுமையில் கூட இந்த வாழ்வு பேரழகென்று உரையாடிய அந்தத் தம்பதியினர் சொல்லிச் சென்றனர். மூச்சை உள்ளிழுத்து, வெளியே விட்டு நாம் உயிர்த்திருக்கும்வரை, இந்த உலகில் எல்லாமே சாத்தியம் என்று எனது ஆசிரியரான தாய் அடிக்கடி நினைவுபடுத்துவார்.

 

நமக்கு நடப்பதற்கு கால்களும், வரவேற்பதற்கு மரங்களும், புன்னகைப்பதற்கு மனிதர்களும் இன்னமும் இருக்கின்றன/ர்.

 

*****************


(Oct 04, 2023)

கார்காலக் குறிப்புகள் - 24

Monday, October 09, 2023

 

ன்றைக்கு அப்பிள்களைப் பறிப்பதற்காக ஒரு பண்ணைக்குப் போயிருந்தேன். சில பண்ணைகளில் நம்மிடம் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை அறவிட்டு, எங்களை நாம் விரும்பிய மரக்கறிகளை, கனிகளைப் பறிக்க விடுவார்கள்.

நானும் நண்பரும் இந்தப் பண்ணைக்குப் போனபோது நாங்கள் எடுத்த நுழைவுச் சீட்டுக்கு பூசணிக்காயையோ (பரங்கிக்காய்), butternut squashயோ ஒவ்வொன்று பறித்துக் கொண்டு வீட்டுக்குப் போகலாம் என்று சொன்னார்கள். அப்பிள்களைப் பறித்து ஒரு பையினுள் நிரப்பிவிட்டு பூசணிக்காயைப் பறிப்பதற்கு பண்ணையின் மறுபுறத்திற்கு Wagon இல் அழைத்துச் சென்றார்கள். அப்போது தோட்டத்தில் நின்று பூசணியைப் பிடுங்கி படங்காட்டிக் கொண்டிருந்தபோது ஒரு குரல் பின்னிருந்து கேட்டது.

'இதென்ன இவ்வளவு சின்னப் பூசணியையா கொண்டு போகப்போகின்றாய், நீ பெரிய மனிதன், இன்னும் பெரிதாக பறித்துக் கொள்' என்று சொன்னது அந்தக் குரல். சிரிப்பதென்றாலே எப்படி என்று கேட்கும் எனக்கு, நன்கு தெரிந்தவரைப் போலச் சொன்ன தொனியும், அந்தச் சொற்களும் சிரிப்பை வரவழைத்தது.

பிறகு அதைவிட நன்கு பெரிய பூசணியைப் பிடுங்கிக் கொண்டு wagon இல் ஏறியபோது இந்தப் பெண்ணோடும், அவரது தாயாரோடும் கொஞ்சம் கதைக்க முடிந்தது. நானும் நண்பரும் எங்கிருந்து இந்தப் பண்ணைக்கு வந்தோம் என்று கேட்டனர். அவர்களை விட நாங்கள் தொலைவிலிருந்து வந்திருக்கின்றோம் என்று வியந்தபோது, இல்லை நாங்கள் காரில்தான் வந்தோம், தூரம் பெரிதாகத் தெரியவில்லை என்றோம். அவர்கள் கார் இல்லாதபடியால் ஊபரில் வந்தோம் என்றார்கள்.

000000

நான் நெடுங்காலம் காரைச் சொந்தமாக வைத்திருப்பதைக் கைவிட்டிருந்தேன். ஆனாலும் குளிர்காலத்தில் எனது பஸ்கள் நேரந்தவறி வரும்போது எரிச்சல் வரும். பத்து நிமிடத்தில் பேரூந்தில் போய்விடும் தூரத்தில் இருக்கும் வீட்டுக்காய் ஒரு மணித்தியாலம் எல்லாம் சிலவேளைகளில் காத்திருந்திருக்கின்றேன்.

இப்படி நான் பஸ்சுக்காய்க் காத்திருக்கும்போது அறிமுகமில்லாத ஒருவர் எனக்காய் தன் காரை நிறுத்தி ride தருவார். பின்னர் காலையில் அப்படி பஸ்சுக்காய்க் காத்திருக்கும்போது பலமுறை என்னை ஏற்றிக் கொண்டு அவர் போகும் தூரம் வரை கூட்டிச் செல்வார். அந்தக் கருணை எல்லாம் எல்லோருக்கும் எளிதில் கை வராதது.

நான் சிறுவயதுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது, சதுரங்கப் போட்டியில் பங்குபெற யாழ்நகருக்கு எங்கள் ஊரிலிருந்து செல்வேன். ஆஸ்மாவில் பீடிக்கப்பட்ட என்னைப் பெற்றோர் சைக்கிளோட அவ்வளவு அனுமதிப்பதில்லை. அத்துடன் சிறுவயது என்பதால் என்னை பக்கத்து வீட்டு அக்காதான் இந்தப் போட்டிகளுக்கு அப்பாவிற்கு நேரமில்லாதபோது அழைத்துச் செல்வார். அவருக்கு என்னை விட ஏழெட்டு வயது கூட இருக்கும். அப்படிப் போகும்போது (உயர்தரத்தில் வர்த்தகம் படித்துக்கொண்டிருந்தார்) எனக்குப் பல கதைகள் சொல்லி வருவார்.

ஒருமுறை 'உனக்குத் தெரியுமா, வெளிநாட்டில் காரில் வெறுமையான இருக்கைகளோடு போகும்போது, அவர்கள் காரை இடைநடுவில்   நிறுத்தி தெருவில் நிற்பவரை எல்லாம் அழைத்துச் செல்வார்கள்' எனச் சொன்னார். அது எனக்கு நன்கு மனதில் பதிந்துவிட்டது. ஆனால் அகதியாய் உள்ளூரில் அலைந்து பிறகு கனடாவுக்கு வந்தபோது இப்படியான ஒரு நிகழ்வையும் பார்க்காதது எனக்கு மிக ஏமாற்றமாயிருந்தது. நான் நினைக்கின்றேன் அந்த அக்கா Hitchhiking செய்வது பற்றித்தான் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று.

இப்போது அந்த அக்கா இலண்டனில் இருக்கின்றார். அவர் தன் சைக்கிளில் என்னை ஏற்றிக் கொண்டு சதுரங்கப் போட்டிகளில் பங்குபற்றிய கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம் இன்றும் 'உள்ளம்' என்ற நல்லதொரு இலக்கிய சஞ்சிகையை வெளியிட்டு பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்த அக்காவும், வளர்மதி சனசமூக நிலையமும் வாழ்க!

000000

பண்ணை wagonஇல் எம்மோடு வந்த இந்தப் பெண்ணிடமும் அம்மாவிடவும் நாங்கள் உங்கள் வீட்டுப் பக்கமாய்த்தான் போவோம், உங்களுக்கு சம்மதமெனில் நாங்கள் உங்களை அங்கே கொண்டு போய் இறக்கிவிடுகின்றோம் என்றோம். அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. வரும் வழியில் இந்தப் பண்ணை தனக்கு மிக நெருக்கமான உணர்வைத் தருகின்றது என்றார். எங்களுக்கும்தான் என்று இந்தப் பண்ணையில் நீண்டு விரிந்திருந்த சூரியகாந்தி தோட்டத்தில் கிறங்கிப் போயிருந்த எனது நண்பரும் சொன்னார்.

அந்தப்
பெண் தாங்கள் சீனாவில் (நகரின் பெயர் மறந்துவிட்டேன்) ஒன்றிலிருந்து வந்தவர்கள் என்றார். இந்த நகரத்து அப்பிள்களைப் போல, தங்கள் நகரம் லீச்சிகளுக்குப் பிரபல்யம் வாய்ந்தது என்றார். அப்படி தரமான லீச்சிகளைச் சுவைத்த தங்களுக்கு இங்கு கடைகளில் விற்கும் லீச்சிகளைச் சாப்பிடுவது என்பது அவமானமாய் இருக்கிறது என்றார். நானும், மாம்பழங்களோடு வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு இங்கு அதே சுவையுடன் மாம்பழங்கள் கிடைப்பதில்லை என்றேன். பிறகு எங்கள் பேச்சு இந்நகரின் மோசமான பஸ்/மெட்ரோ சேவைகள் பற்றிய விமர்சனமாக நீண்டது. அருகிலிருந்த நண்பருக்கோ, இவன் ஒன்று இலக்கியவாதிகளை திட்டுகின்றான், மிச்ச நேரத்தில் இந்த நகரைத் திட்டுகின்றான் என்று மனதில் சிந்தனை போயிருக்கும். ஆனாலும் என்ன நாய் வாலை நிமிர்த்தவா முடியும்?

மகளையும், தாயையும் அவர்களின் வீட்டுக்கு அருகில் இறக்கியபோது அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. நிறைய நன்றிகளைத் தெரிவித்தார்கள். இறுதியில் சிறுவயதில் அந்த அக்கா சொன்ன விடயத்தை நான் செய்துபார்த்துவிட்டேன் என்பதில் ஒரு சிறு நிறைவு. இவ்வாறான தருணங்களில்தான் வாழ்வு வேறெதையும் விட அதிகம் நுரைத்து பெருகுகின்றது என நினைக்கின்றேன்.

நான் குளிரில் நடுங்கும் நாட்களில் என்னைத் தன் காரில் ஏற்றிப் போன பெயர் தெரியாத அந்த அண்ணாவையும் நன்றியுடன் இந்தப் பொழுதில் நினைவுகூர்கின்றேன்.

**************


(Sep 15, 2023)