கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

போர்னோகிராபி தடை - ஒரு எதிர்வினை

Thursday, June 30, 2016

ஷோபாசக்தியிற்கு வரவர என்னவாயிற்றென புரியவில்லை. இப்போதெல்லாம் மிகவும் ஒற்றைப்படையாக எழுதிக்கொண்டே போய்க்கொண்டிருக்கின்றார். போர்னோகிராபியை தடைசெய்வது பற்றியெழுதிய அவரது பதிவு ஒருவகை 'உணர்ச்சி' வாசிப்பில் எல்லோருக்கும் உற்சாகமளிக்கக்கூடியது. ஆனால் ஆழமாகப் பார்த்தால் எவ்வளவு அபத்தமெனத் தெரியும்.

'தடை' என்ற வார்த்தையை மிக நிதானமாகவே நாம் பாவிக்கவும், அனுமதிக்கவும் வேண்டியிருக்கின்றது. அதிலும் மிகுந்த அதிகாரங்கள் நிரம்பிய 'அரசு' மற்றும் 'அரசாங்கம்' என்பவற்றினூடாக வரும் 'தடை' என்பவை குறித்து இன்னும் கவனமாகவும் இருக்கவேண்டியிருக்கிறது. எனெனில் அரசு தனக்குப் பிடிக்காத எல்லாவற்றையும் 'தடை'க்குள் கொண்டுவர இந்தத் 'தடை'கள் ஒருவகையில் எளிதாய்க் காரணமாகிவிடும்.

இன்று தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் 'டாஸ்மாக்' தடை போராட்டங்கள் குறித்து கருத்துச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒரு உதாரணத்திற்கு குடியினாலும் கூடத்தானே (தரவுகள் கூட ஆதாரமாய் இருக்கும்) நிறைய குடும்பவன்முறைகள் நடக்கின்றன, எத்தனையோ சிறுவர்களின் வாழ்க்கை பாழாக்கப்படுகின்றன எனச் சொல்லி இந்தியா முழுக்க முற்றாக குடியை அரசு 'தடை' செய்யவந்தால் ஷோபாவின் பதில் என்னவாக இருக்கும்? அவரின் 'போர்னோ லொஜிக்'கின்படி இதற்கும் ஆதரவாகவே இருக்குமெனவே நம்புகின்றேன். இதை இன்னும் நீட்சித்து மாடு சாப்பிடக்கூடாது, கோமியம் மட்டுமே குடிக்கவேண்டும் என்று நிறைய தடைகளைச் சொல்லிக்கொண்டு போகலாம். ஆகவேதான் மீண்டும் மீண்டும் 'தடை' என்பதை அதுவும் முக்கியமாய் அதிகாரம் நிறைந்த அரசிடம் இருந்து எழும்போது மிகக்கவனமாக இருக்கவேண்டும் எனச் சொல்ல விரும்புகின்றேன்.

போர்னோகிராபியில் பாவிக்கப்படும்/பண்டமாக்கப்படும் பெண்கள் குழந்தைகள் குறித்து எல்லோருமே கவலைப்படத்தான் வேண்டும் ஆனால் அதேசமயம் ஷோபா மென்மையாகக் குறிப்பிட்டு தப்பித்துச்செல்லும் இவ்வாறாக கடத்தப்படும் பெண்களும், சிறார்களும் அதிகளவில் பாலியல் தொழில்களுக்கே பயன்படுத்தப்படுகின்றனர் என்பதே உண்மை. ஏன் அரசோ அல்லது ஷோபாவோ போர்னோகிராபியைத் தடைசெய்யமுன்னர் அல்லது தடைசெய்கின்ற சமாந்தரத்தில் பாலியல் தொழிலையும் தடைசெய்யவேண்டுமென முதலில் கோரக்கூடாது. இன்னமும் இந்தியாவில் சில விதிமுறைகளுடன் பாலியல் தொழில் செய்யலாமெனவே சட்டம் சொல்கின்றது. கனடாவில் கூட பாலியல் தொழில் செய்யலாம், ஆனால் விதிமுறைகள் இருக்கின்றன. இந்த 'விதி'கள் கூட பாலியல் தொழிலாளர்க்கு எதிராகத்தான் இருக்கின்றதே தவிர, அவர்களைத் தேடிச் செல்வோருக்கு எதிராக அல்ல என்பதையும் நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளவேண்டும். ஆகவேதான் இங்கேயிருக்கும் பாலியல் தொழிலாளர்கள் விதிமுறைகளைத் தங்களுக்குச் சாதகமாய் மாற்றும்படி கனடா நீதிமன்றங்கள் எங்கும் ஏறியபடி இருக்கின்றனர்.

போர்னோகிராபியை விட பாலியல் தொழிலுக்காகவே பெண்கள் சிறுவர்கள் பல மில்லியன்களில் கடத்தப்படுகின்றனர். மிக மோசமாகச் சித்திரவதை செய்யப்பட்டு 'தொழிலுக்கு'ப் பழக்கப்படுத்தப்படுகின்றனர். சென்ற வாரம் கூட இது குறித்து நிறையத் தகவல்களுடன் ஒரு தேவாலயத்தின் முன் Human Trafficking ற்கு எதிராகக் கையெழுத்து வைக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தனர். எனக்கு கையெழுத்திடுவதில் மறுப்பபெதுவுமில்லையெனினும் மதம் சார்ந்தவர்களினூடாக -பல விடயங்களில் அவர்களின் நம்பிக்கையோடு ஒத்துவராததால்- முதலில் தயக்கமிருந்தது. எனினும் நல்லவை நடக்கும்போது முழுச்சித்திரத்தையும் பார்க்கத்தேவையில்லை என்ற அடிப்படையில் கையெழுத்திட்டிருந்தேன். கனடாவில் கூட இப்படி பெண்கள் கடத்தப்பட்டு தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றார்களா என கூடவே வந்த நண்பருக்கு வியப்பு. அந்த நண்பரைப் போலவே பலர் இன்னும் அப்பாவிகளாய் இங்கு இருக்கின்றனர் என்பது வேறு விடயம். கனடாவிற்குள்ளும் அமெரிக்காவிற்குள்ளும் இதற்காய் கடத்தப்படுகின்றவர்கள் உலகத்திலேயே பெரும் விகிதத்தில் இருக்கின்றார்களென்பதையே தரவுகள் சொல்கின்றன.

ஆக, போர்னோகிராபியை ஷோபா தடைசெய்யக் கோருவதைப் போல, நாம் பாலியல் தொழிலைத் தடை செய்ய இந்தியாவில் மட்டுமில்லை உலகெங்கும் கோருவோம். அவ்வாறே எழுதி ஆதரவு காட்டாது மட்டுமில்லாது, போர்னோவைத் தடைசெய்வதற்கு ஆதரவு கொடுத்து நமது 'பெருந்தன்மை'யைக் காட்டுவதைப் போல, ஆண்களாகிய நாம் பாலியல் தொழிலாளிகளைத் தேடிப் போவதையும் முதலில் நிறுத்தியும் கொள்வோம்.

றுதியாய் ஷோபா எழுதுவது இன்னொரு வகையான க்ளிஷே...
"நாளை நீங்கள் அல்லது உங்கள் பிள்ளைகள், துணையோடு சம்போகத்தில் ஈடுபடும் காட்சி இவ்வகை இணையத்தளங்களில் 'லைவ்'வாக ஒளிபரப்பப்படுவதற்கு எல்லாவகையான சாத்தியங்களும் உண்டென்பதை மறவாதீர்கள்."

இதைத்தான் பெண்கள் முகநூலில் படம்போடுவதிலிருந்து எல்லாவற்றுக்கும்... பெண்களே கவனம் எச்சரிக்கை என எல்லோரும் எழுதித் தீர்க்கின்றார்கள். நீங்களுமா ஷோபா? உடல் குறித்தோ செக்ஸ் குறித்தோ நாம் குற்றங் கொள்ளத்தேவையில்லை.

எமது உடல்களும் சம்போகங்களும் எந்தக்கணத்திலும் திறந்தவெளியில் அவிழ்த்துவிடப்படக்கூடிய அந்தரங்கமற்ற இன்றைய காலத்தில் அவ்வாறு சித்தரிக்கப்பட்டால்/காட்டப்பட்டால் அதற்காய் எமது காதலிகளோ மகள்களோ சகோதரிகளோ கவலையோ குற்றமோ -முக்கியமாய் உங்களை நீங்களே கொல்லத்தேவையில்லை என- அவர்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்வோம். அவ்வாறாக திறந்தவெளியில் இந்த விடயங்களை காட்சிப்படுத்துபவனே, தான் ஒரு சக மனிதப்பிறவியாக இருக்கச் சாத்தியவன் அல்ல என அவன் குற்றவுணர்வையும் வெட்கத்தையும் கொள்ளவேண்டுமே தவிர, உங்களில் எந்தத் தவறுமில்லையென நமக்குத் தெரிந்த பெண்களின் ஆழ்மனதில் பதிய வைப்போம்.

மேலும் இன்றைய சூழலில் போர்னோகிராபியால் மட்டுமல்ல நம்மைப் போன்ற ஒருகாலத்தில் காதலன்களாகவோ துணைவர்களாக நெருங்கிப் பழகிய ஆண்களாலேயே பல நெருக்கமான புகைப்படங்களும்/விடீயோக்களும் வெளியிடப்படுவதையும் நாம் மறந்துவிடவும் கூடாது.

ஆகவே எல்லோருடனும் சேர்ந்து தொபுக்கடீரென விழுந்து நம்மை நியாயவான்களாய்க் காட்டமுன், ஆண்களாகிய நாம் இவற்றை அதிகாரம் கொண்டு தடைசெய்வதைவிட, நம்மிலிருந்து எப்படித் தொடங்கலாம் என சிந்தித்துப் பார்க்கலாம்.

எனவே மீண்டும் கூறுகின்றேன் போர்னோகிராபியைத் தடை செய்வதற்கு முன் பாலியல் தொழிலைத் தடை செய்யுங்கள். இந்த இரண்டையும் செய்வதற்கு முன் ஆண்களாகிய நாங்கள் பாலியல் தொழிலாளிகளைத் தேடிப் போவதை முதலில் நிறுத்திக்கொள்வோம்.

(Aug 06, 2015)

ஷோபா சக்தியின் பதிவு: https://www.facebook.com/shoba.sakthi.1/posts/10207207104757453?hc_location=ufi

பெருமாள் முருகனின் 'ஆலவாயன்'

Wednesday, June 22, 2016


மாதொருபாகனில்' பொன்னா குழந்தையில்லாது பதினான்காம் திருவிழாவில் இன்னொரு ஆடவனோடு உறவுகொள்வதாகவும், காளி அதைக் கேள்விப்பட்டு கோபத்துடன் வீடு திரும்புவதுமாய் முடிகிறது. மாதொருபாகனில் எவ்விதமான முடிவை இறுதியில் காளி எடுக்கின்றார் என்பது வாசகருக்கு திறந்தவெளியாக விடப்பட்டிருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக பெருமாள் முருகனின் எழுதிய இரண்டு நாவல்களில் ஒன்றே 'ஆலவாயன்'. மற்றது 'அர்த்தநாரி'.

ஆலவாயன்' காளி தனக்கான முடிவை எடுத்து தூக்கில் தொங்குவதுடன் தொடங்குகின்றது. 'அர்த்தநாரி'யில் (அடுத்து வாசிக்க இருப்பது) காளி உயிருடன் இருப்பதாய் வைத்து எழுதப்பட்டிருக்கின்றது. உண்மையில் 'ஆலவாயன்' முழுக்க முழுக்க பெண்களை வைத்து எழுதப்பட்ட பிரதியெனச் சொல்லப்படவேண்டும். பொன்னா எப்படி காளியின் தற்கொலையைத் தாங்கிக்கொள்கின்றார், அந்தத் துயரிலிருந்து எவ்வாறு மீள்கின்றார் என்பதெல்லாம் மிக விரிவாக எழுதப்பட்டிருக்கின்றது. அவரது தயாரும், மாமியாரும் அவரைத் துயரிலிருந்து மீட்டெடுப்பது மட்டுமில்லாமல், பொன்னா பதின்காம் நாள் திருவிழாவிற்குப் போனதால்தான் காளி தற்கொலை செய்தார் என்பதையும் மிக நுட்பமாக வேறுகதையொன்றை கட்டியெழுப்பது மூலம் மறைத்து அவர்கள் பொன்னாவைக் காப்பாற்றுகின்றனர். துயரிலிருந்து மீளும் பொன்னா, எப்படி காளி செய்த தோட்ட(காட்டு) வேலைகளை தானே தனித்த்ச் செய்யத்தொடங்குகின்றார் என்பதையும், அவரின் தாயார்/மாமியார் எவ்வாறு அந்த மீளுயிர்ப்புக்கு ஒத்துழைக்கின்றனர் என்பதாகவும் கதை நீளும். இதற்கிடையில் பொன்னா கர்ப்பமாகுவதும், அதை காளியின் மூலமே பொன்னா கர்ப்பமானார் என்றமாதிரி தாயும்/மாமியும் ஊரை நம்பவைக்கின்றனர். இந்த உண்மை தெரிந்த வேறு சிலரும் அந்த உண்மையை வெளியே வரச்செய்யாது பொன்னாவைக் காப்பாற்றுகின்றனர்.

ருவகையில் பார்த்தால் இந்தக் கதை பொன்னா கர்ப்பமாவதிலிருந்து 'ஆலவாயன்' என்கின்ற தன் ஆண் குழந்தையைப் பிரசவிக்கின்றவரை நீள்கின்றதெனச்  சொல்லலாம். நாவலில் ஒரு குறிப்பிட்ட சாதியின் பழக்க வழக்கங்கள், உறவுகளுக்கிடையிலான ஊடாட்டங்கள், வாழ்வு முறையில் ஒருவகையான மானுடவியல் பிரதியாக பார்க்கக்கூடியதாய் இருக்கின்றதென்றாலும் சிலவேளைகளில் ஒரு நாவலுக்குரிய மீறிய சித்தரிப்புக்கள் தேவையா என அலுப்பும் வரத்தான் செய்கின்றது. ஆனால் நாவலுக்குள் நல்லாயன் என்கின்ற ஒரு பாத்திரம் வந்தவுடன் நாவல் சுவாரசியமாகிவிடுகின்றது. தான் தோன்றித்தனமாய் எங்கும் அலைந்து திரியும் நல்லாயன் பாத்திரத்தினூடாக அதே குறிப்பிட்ட சாதியின் கீழ்மைகளும், கள்ளத்தனங்களும் நகைச்சுவையாக எடுத்துரைக்கப்படுகின்றது.

ஒரு குறிப்பிட்ட சாதியின் கதையென்றாலும் அந்தச் சாதியின் காட்டில் வேலை செய்யும் பெண், சாமீ என்றும் கவுண்டச்சி எனவும் சாதிக்குரிய மரியாதை கொடுத்து அழைக்கும்போது பொன்னு என்று மட்டும் கூப்பிடு அது போதுமென பொன்னா சொல்லும்போது சாதியை மீறும் தருணங்களை பெருமாள் முருகன் சுட்டவிழைவது இதத்தைத் தருகின்றது.

இது முழுக்க முழுக்க பெண் பாத்திரங்கள் நடமாடும் பிரதியென்றபோதும், இவ்வளவு நுட்பமாய் பெண்களை எப்படிப் படைக்கமுடிந்ததென வியப்பே வந்தது. இந்த இடத்தில் இமையத்தின் பெண் பாத்திரங்கள் - முக்கியமாய் 'எங் கதெ' - ஏனோ நினைவிற்கு வந்தது. பெருமாள் முருகனின் அநேக நாவல்களை வாசித்தவன் என்றவகையில் அவரளவிற்கு பெண்களை சித்தரிக்கும் எல்லைக்கு வருவதற்கு இமையம் போன்றவர்க்கு நீண்டகாலம் எடுக்குமெனவே தோன்றியது.


தமக்குரிய அல்லது தமக்கு வழங்கப்பட்ட எல்லாப் பாடுகளையும் சகித்துக்கொண்டு அதற்குள்ளால் தமக்கான வாழ்வை வாழ்கின்ற பெண்களை மிக இயல்பாகக் கொண்டுவந்த பெருமாள் முருகனைத்தான் இனி எதையும் எழுதக்கூடாதென்று பயமுறுத்திய குரல்களை நினைக்கும்போது, அவர்கள் எந்தத்திசை நோக்கி தம் சமூகத்தைக் கொண்டுசெல்லவிரும்புகின்றார்கள் என்று யோசிக்காமல் இருக்கவும் முடியவில்லை.

(Jan 24, 2016)

புலம்பெயர் வாழ்வு பற்றிய ஓர் ஆய்வு

Thursday, June 16, 2016

  'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்' - த. வெற்றிச்செல்வன்

சிலவாரங்களுக்கு முன் நூலகத்திற்குச் சென்றபோது 'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்' என்ற ஆய்வுநூலைப் பார்த்தேன். இந்நூலை த.வெற்றிச்செல்வன் தனது முதுகலை ஆய்விற்காக எழுதியிருக்கின்றார். ஆய்வுப் பேராசிரியர்/ நண்பர்கள் இது அவ்வளவு எளிதான் காரியமில்லை என்றபோதும் சோர்வடையாது ஒரளவு பரவலாக வாசிக்கவும் தகவல்களையும் சேகரிக்கவும் வெற்றிச்செல்வன் செய்திருக்கின்றார் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. சுமதி, வசந்தி ராஜா, திருமாவளவன், செழியன், பிரதீபா, செல்வம் என கனடாவிலிருக்கும் நிறையப்பேரின் கவிதைகளும், ஏனைய பிற படைப்புக்களும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன. அண்மையில் காலமான திருமாவளவனின் கவிதைகள் நிறைய இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. திருமாவளவன் இந்த நூலைப் பார்த்திருப்பாரோ தெரியவில்லை. பார்த்திருந்தால் நிச்சயம் அவர் மகிழ்ந்திருப்பார்.

ஒரு கவிதைத் தொகுப்பை நான் வெளியிட்டதே எனக்கு கிட்டத்தட்ட மறந்துபோன நிலையில் எனது கவிதைகள் சிலவும் இந்த நூலில் காணக்கிடைத்தது என்னளவில் ஆச்சரியமே. ஆனால், நான் கொழும்பில் வசித்துக்கொண்டிருப்பதாய் உசாத்துணையில் தவறாக எழுதப்பட்டுமிருந்தது.

இதில் சேர்க்கப்பட்டிருக்கும் கவிதைகளில் ஒன்று இலங்கையில் இந்திய அமைதிப்படை வந்த காலங்களில் நிகழ்த்திய கொடுமைளையே பேசுகின்றது. அது மட்டுமின்றி என் சிறுகதைத் தொகுப்பில் முதலாவதாய் இருக்கும் கதையான 'ஹேமாக்கா' கூட இந்திய அமைதிப்படைக்காலம் பற்றியது. அதிகாரத்தை கையில் வைத்தபடி, அமைதிப்படை காலத்திலிருந்து இன்றும் தமிழகத்திலுள்ள அகதி முகாங்கள் வரை பெண்கள் மீதான் பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துகொண்டிருப்பதை பாலன் எழுதிய 'சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்' என்ற நூலில் கூடக் காணலாம். 

தமிழகத்திலிருக்கும் சில இலக்கிய/ அரசியல்வாதிகளுக்கு அவர்களின் தலையில் ஆணியடித்து இதைச் சொன்னால் கூட விளங்காது அல்லது விளங்காதமாதிரி நடிப்பார்கள். ஆனால் எனது கவிதையை உதாரணங்காட்டும் வெற்றிச்செல்வனால் கூட ஏன் இது இந்திய அமைதிப்படை நிகழ்த்திய அட்டூழியங்களென பதிவு செய்யமுடியாதிருக்கின்றது என யோசிக்கின்றேன். சிலவேளைகளில் அவரின் ஆய்வுச்சூழல் இடங்கொடுக்கவில்லையோ தெரியாது.

ஆனால் நாங்கள் என்றுமே மறந்துவிடாது -சொற்களால் எதுவும் நிகந்துவிடப் போவதில்லையெனினும்- தொடர்ந்து அதைப் பேசுவோம்.

அமைதியின் மணம்
-----------------------------

ஒவ்வொரு
பெருந்துயர்களின் பின்னும்
நீளும் நம்பிக்கையின் துளிர்ப்பிலே
வாழ்வு பெருகும் எமக்கு
நேற்றுப்பரவிய வெறுமை
துடைத்தெறித்து
நாளையை மீண்டும் சுகிக்க
எங்கிருந்தோ எழும் மிடுக்கு

அவ்வாறான மகிழ்வின்சாயல் கலந்துருகியகணத்தில்
புத்தரையும் காந்தியையும் குழைத்துப்பூசியபடி
அந்நியமான சிலர்
எங்கள் தேசத்தில் பரவினர்
எந்தக்கேள்விகளுமில்லாது
சிரித்தபடிவந்தவர்கள்
முகங்கள் இறுகியபடி
முள்ளுக்கம்பிகளுக்குள் புதைந்ததற்கு
காலம்மாறி வீசிய
அமைதியின் புயலும் காரணமெனலாம்

பிறகு எண்ணெய் மணமும்
அணிவகுப்புத்தடமும்
கலந்து பெருக பீதியில் உறைந்தன
தெருக்கள்
பொழுதெல்லாம் விழிமூடாது
ஊர்களின் அமைதிக்காய்
ஒற்றைக்கால் தவமியற்றியவர்கள்
அதிகாலையில் மட்டும்
துயின்றுபோகும் அதிசயம்
உருக்குலைந்த உடல்கள்
பனிப்புகாரில் மிதக்கையில் மட்டுமே நிகழ்ந்தன

சாரமும்
கைகள் பின்னே வளைக்கப்பட்டிருக்கும் கோலமும்
விழிகள் வெறித்தபடியிருக்கும் கோரமும்
அரணுக்குள்ளிருப்பவர்கள்
அழிவுகளில்லாது திரும்பிச்செல்லல் கூடாதென
நெஞ்சு விம்மித்தணியும்

எதிர்வீட்டு அக்காவின்
ஆடைக்குள் குண்டிருப்பதாய்
எச்சில் தெறிக்கும் பரிகசிப்புடன்
அமைதியானவர்கள் முலைகள்திருகி
கூட்டாய்ப்படர்கையில் அசையாய்ச்சாட்சிகளாவது
நானும் மதியவெயிலும்

நிகழ்வுகளின் தொடர்ச்சியில்
ஆழ்மனதின் துலங்கல்கள் சிதைவுற
மழலையாகிச் சிரித்தபடி
காணாமற்போனாள் அக்கா
ஓர்நாள்

இப்போது புலம்பெயர்வாழ்வு.
நினைவுகளின் செட்டையைக்கழட்டிவிட்டு
துருவக்கரடியின் தோலான போர்வைக்குள்
நடுநடுங்கியபடி விரகமெழும்
உறைபனிக்காலம்

நேற்று நடந்தவையெதுவும்
என்னைப்பாதிக்காதெனும் திமிருடன்
கொஞ்சம் கொச்சைத்தமிழும்
அதிகம் ஆங்கிலமும்
நாவில் சுழலும் அன்புத்தோழியுடன்
மரபுகளைச் சிதைத்தபடி
கலவியும் கிறங்கலுமாய்
கழிகிறது வாழ்வு

எனினும் அவள் முலைகள் சுவைத்து
முயங்கும்பொழுதெல்லாம்
எண்ணெய் பிசுபிசுக்கும்
அமைதியின் மணமும்
குறியென விறைத்துநிற்கும்
துப்பாக்கிமுனையின் நினைவும்
ஏனோ பீறிட்டெழுகிறது
எல்லாவற்றையும் புறக்கணித்து.

2001.11.02
அதிகாலை 4.04

நிலம் தாண்டி நீளும் மழை

Friday, June 10, 2016

 Maheshinte Prathikaaram & Charlie (மலையாளம்)

டந்த வாரவிறுதியில் அவ்வப்போது பெய்துகொண்டிருந்த மழையோடு (ஆலங்கட்டி மழை உட்பட) இரண்டு மலையாளப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். Netflixல் இனிப் பார்ப்பதற்கு நல்ல திரைப்படங்கள் இல்லையென, 'How to be Single' என பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டிருந்த எனக்கு 'Maheshinte Prathikaaram'ம் 'Charlie'யும் மிகுந்த குதூகலத்தைத் தந்திருந்தன. அந்தப் படங்களை பார்த்த நீட்சியில் 'கலை ஏன் நமக்குத் தேவை அல்லது எது கலையாகிறது' என ஒரு கட்டுரையை எழுதத் தொடங்கி, இடைநடுவில் எழுதுவதை விட அனுபவங்களோடு கரைதலே இனிதென வாரவிறுதியைக் கடந்து வந்தாயிற்று.

தமிழ்நாட்டு நிலப்பரப்பும், மக்களும் தொலைவிலிருந்த எனக்கு நெருக்கமானதிற்கு முக்கிய காரணம், சிறுவயதுகளிலிருந்து வாசித்த கலை, இலக்கியப் படைப்புக்கள் எனச் சொல்வேன். ஆனால் எழுத்தினூடாக எனக்குள் கட்டியமைக்கப்பட்ட நிலவரைவியலை தமிழகத் திரைப்படங்கள் எதுவுமே நெருக்கமாக நின்று கற்பிக்கவில்லை என்பது ஒருவகையில் துயரமானது. தமிழ்த்திரைப்படங்களில் கற்பித நிலப்பரப்புக்களே (அது தவறில்லையெனினும்) பெரும்பான்மையென்றாலும் அவைகூட என்னை அவ்வளவாகக் கவர்ந்ததில்லை.

ஆனால் மாறாக மொழியே பரிட்சயமில்லாத மலையாளத் திரைப்படங்கள் கேரளாவின் நிலப்பரப்புக்களை மிக விசாலமாகவும், ஆழமாகவும் எனக்குள் கட்டியெழுப்பியிருக்கின்றது. ஆகவேதான் தமிழ்நாட்டிற்குள் பயணிப்பதைவிட நிலம்சார்ந்து பயணிக்க கேரளா என்னை எப்போதும் ஈர்த்துக்கொண்டேயிருக்கிறது.

Maheshinte Prathikaaramலும் Charlieயிலும் கதைகள் மிக எளிமையானவை. ஆனால் கேரளாவின் நிலப்பரப்புக்களினூடும் அவர்களின் கலை/ கலாசாரங்களின் ஊடும் அவர்கள் அதை நம்மைப் பாதிக்கும் வகையாகக் காட்சிப்படுத்துகின்றனர். சார்ளியில் முக்கிய இரண்டு பாத்திரங்களும் ஒருமுறையேனும் இறுதிவரை சந்திக்கமாட்டார்கள். ஆனால் பல்வேறு சந்தர்ப்பங்களினூடாக தொய்வே ஏற்படாதமாதிரி கதையைக் கொண்டு சென்றிருப்பார்கள். துல்காருக்கு அவர் ஏற்கனவே நடித்த 'நீல ஆகாசம் பச்சைக்கடல் சுவர்ணபூமி' போல அலைகின்ற ஒருவனின் கதாபாத்திரந்தான் (இங்கே கேரளாவிற்குள் அலைகின்றார்). துல்காருக்கோ, பார்வதியிற்கோ உணர்ச்சிவசமான எந்த கடந்தகாலத்தையும் காட்டாமல் அலைகின்ற இருவர் என்கின்ற அலைவரிசையில் மட்டும் இணைவதைக் காட்டும் முறைகூட பிடித்திருந்தது.

Maheshinte Prathikaaram திரைப்படம் இன்னும் ஆழமாய் கேரளாவின் உட்கிராமங்களில் இறங்குகின்றது. சிறு ஊர்களிலிருந்து இருந்து பிறந்து வளர்ந்த நமக்குத் தெரியும், சிறுசிறு பிரச்சினைகளுக்கே உறவுகள்/நட்புகள் சண்டை பிடிப்பதும், பகைத்துக் கொள்வதும் பற்றி. இதில் ஊர்ச்சந்தியில் தற்செயலான நிகழும் ஒரு சண்டையைத் தடுக்கப்போகும் ஒருவன் இன்னொருவனால் அவமானப்படுத்துகின்றான். ஒரு அப்பாவியான அந்தப் பாத்திரம், எப்படி தன்னை அவமானப்படுத்தியவனை பழிவாங்குகின்றது என்பதையும் அந்தப் பழிவாங்குதல்வரை செருப்பைக் காலின் அணியமாட்டேன் என சூளுரைத்து செருப்புப் போடாமல் திரிவதுந்தான் முழுக்கதையும்.

துல்காருக்குள் இயல்பாகவே ஒரு துள்ளல் இருப்பதைப் போல, எனக்குப் பிடித்த பகத் ஃபாசிலுக்குள் எப்போதும் ஒரு தனிமை விரிந்துகொண்டிருக்கும் என எண்ணிக்கொள்பவன் நான். அவருடைய அநேக திரைப்படங்களில் எத்தகைய கதாபாத்திரமாய் இருந்தாலும், அந்தத் தனிமையை நாம் எளிதாகக் கண்டுகொள்ளமுடியும். இங்கே அவருக்கும் தந்தையிற்குமான அவ்வளவு பேசாத உறவு அந்தளவு இயல்பானது, அவரின் காதல் முறிவின்போது, 'நீ அவளை நிறைய நேசித்தாய் அல்லவா?' எனக் கேட்பது, ஊர் மக்கள் முன்னர் வேட்டி கழன்று விழ அடிவாங்க அவமானப்பட்டபின், 'அடித்தாயிற்று அல்லவா, இனி அவனை விட்டுவிடுங்கள், வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுங்கள்' என தந்தையிற்கும் மகனுக்குமான ஒரு இடைவெளி இருந்தாலும் அதை மீறி உள்ளேயூறும் நேசம் அருமையாக வந்திருக்கும்.

இந்த இரண்டு திரைப்படங்களிலும் நிலப்பரப்பு, நாயகர்கள் என்பதற்கு அப்பால் பெண்களின் பாத்திரங்களும் அருமையாக அமைக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதைகள் ஆழமாக இல்லாவிட்டால் கூட, கதாபாத்திரங்களை வலுவாக்கிவிட்டால் ஒரு திரைப்படம் நம்மால் எளிதில் கடக்க முடியாதவையாக மாறிவிடுகின்றது என்பதற்கு இவை நல்ல உதாரணங்கள்.
எது கலையாக மாறுகிறது அல்லது ஏன் கலை நமக்குத் தேவையாகிறது என்பதற்கு இந்த இரண்டு திரைப்படங்களும் சில புள்ளிகளை என்னளவில் விட்டுச் சென்றிருந்தன.

மகிழ்ச்சியான மனோநிலையின் தீற்றை ஏதோ ஒன்று உங்களில் பற்றவைத்துவிட்டால் அந்த நாள் இன்னும் அழகாவிடுகிறது. அந்தத் தருணங்களை உருவாக்கியவர்களை நன்றியுடன் நினைத்துக்கொள்ளத் தொடங்கிவிடுவீர்கள். மழை பிறகு மனதிற்குள்ளும் பொழியத் தொடங்கிவிடும்.

(மே 19, 2016)

நேசம் பற்றிய ஏழு குறிப்புகள்

Wednesday, June 01, 2016

1.

நீ வாசித்துப் புரியா மொழியில் நமக்கான காதலை எழுதிக்கொண்டிருக்கின்றேன். நமக்குப் பொதுவான மொழியில் எழுதினால்தான் என்ன என்கிறாய்.

தனித்திருந்து வாழ்வை, அதன் ஏகாந்தத்தை இரசிக்கத் தெரிந்தவனுக்கு, தன் காதல் உணர்வுகளையும் கட்டாயம் யாருக்கும் சொல்லவேண்டும் என்கின்ற அவசியமில்லை. பிறரோடு பகிராமலே எத்தனை அழகிய காதல்கள் ஒவ்வொருவருக்குள்ளும் முகிழ்ந்திருக்கின்றன, பொழுதுகளைச் சிலிர்க்க வைத்திருக்கின்றன.

எல்லாவற்றிற்கும் ஏதாவது காரணங்களை வைத்திருப்பவன் நீ என்றாய்
எல்லாவற்றின் மீதும் விமர்சனங்களை வைத்திருக்கும் உன்னை நெருங்கவே முடியாது என்பதன் கடந்தகாலத்தின் எதிரொலியா இது- தெரியவில்லை.

அன்பே, ஒரு முத்தம் சொல்லித்தருவதை விட இந்த மொழி எதைத்தான் நமக்கு கற்பித்துவிடப்போகிறது?


02.

வசந்தகாலத்தின் வருகையை முதலில் தெரிவிப்பது அந்த மரந்தான். எல்லா மரங்களும் பசுமையைத் தேடியலைய, இது மட்டும் இலையெல்லாம் மஞ்சளாக விரித்து சிரிப்பதென்பது ஓர் அதிசயந்தான். இன்னொருபுறத்தில் சாம்பல் நிறத்தில் ஒரு குருவி சிறுகச்சிறுக கூடு கட்டிக்கொண்டிருக்கின்றது.

நேசமென்பதும் மழைபெய்ய பறவையொன்று சட்டென்று சிறகை விரியவும், சிலிர்க்கவும் செய்கின்ற ஒரு நிகழ்வு. அதன் வருகையிற்காக கடந்தகாலத்தில் பெற்ற எல்லாத் துயரங்களையும் மறந்துவிடலாம் போலிருக்கின்றது.
மண்ணிறக்காரியான நீ மென்மஞ்சள் ஆடையுடன் வந்தபோது மஞ்சளாய் இலைகள் விரித்த மரத்தையும், சாம்பல் நிறக்குருவியின் கழுத்து ஆரத்தையும் மீண்டும் நினைவுபடுத்தினாய்.

உன்னை அணைத்தலென்பது இயற்கையை ஆரத்தழுவலும் கூட.


03.

கடல் எப்போதும் தனக்குள் சிறகு முளைத்து பறக்கத்துடிக்கும் பல்வேறு கதைகளைப் பதுக்கி வைத்திருக்கின்றது. கரைதொடும் அலைகளை வாஞ்சையோடு வருடத் தெரிந்தவர்க்கு அது தன் கதைகளை ஒவ்வொன்றாய் அவிழ்த்துக் காட்டுகின்றது. கடலோடு விடிகாலையில், வெயிலேறிய மதியத்தில், அந்தி சாயும் மாலையில், இருள்மூடிக்கிடக்கும் நள்ளிரவில் கலக்கத் தெரிந்தவர்க்கு - அது நகர்ந்து செல்கின்ற ஒரு போதிமரம்.

ஆதியிலே சொற்களில்லாத பெரும் மெளனம் இருந்தது. இரைந்து கொண்டிருக்கும் அலைகளுக்கிடையில் அமைதியைக் காண முடிந்தவர்க்கு, எட்டித் தொடுகின்ற தூரத்தில் ஒரு போதிசத்துவா காத்துக்கொண்டிருக்கின்றான்.

மனிதர்கள் நிழல்களைப் போல மறைந்துகொண்டிருக்கும் வாழ்வில் நாம் எதைத் தேடிக்கொண்டிருக்கின்றோம். நீரில் விழும் நிலவின் வர்ணத்தைக் கைகளில் பிடித்துவிட முடியுமென்று நம்பும் மழலையைப் போலத்தான் எல்லாப் பொழுதும் எதுவுமற்றுக் கரைகின்றனவோ?

கடக்கமுடியாத் தனிமையை இங்கேதான் கரைத்து மீளவும் எழுந்தேன் என கடலொன்றைக் காட்டிக்கொண்டிருக்கின்றேன். வெறுங்கால்களுடன் நடக்கும் எம் தடங்களை அலைகள் வந்து சுவடுகளின்றி அழித்தபடி போய்க்கொண்டிருக்கின்றன.

பூரணை நிலவு.

நிலவைச் சுட்டிக்காட்டும் விரல்களைப் பார்த்தபடி அழகிய நிலவை தவறவிட்ட கதைதானோ இதுவரை கடந்துவந்த வாழ்வு என நெஞ்சலறி அதிர்கின்றது. மனதின் தவிப்பு புரிந்தோ அல்லது புரியாமலோ என் விரல்களை இதமாய் கோர்த்துக்கொள்கின்றாய்.

அன்பே, நேற்று, நம்மிடையே கவிழ்ந்திருந்த பெரும் மெளனத்தினூடு நாம் இதுவரை கடக்காத்தூரங்களைப் பேசிக் கடந்தோம்.


04.

இலையுதிர்த்து உறங்குநிலைக்குப் போயிருந்த மரங்களிலெல்லாம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் மென்பச்சை துளிர்கள் தளிர்க்கத் தொடங்கிவிட்டன. இருக்கும் துண்டுநிலத்திலும் எதையாவது கட்டிவிடத்துடிக்கும் மனிதர்களின் பேராசையைப் பார்த்தபடியும் இன்னும் பச்சையம் இழக்காத இந்த மரங்கள்தான் எத்தகைய மகத்துவம் வாய்ந்தவை.

ஒவ்வொரு வருடமும் சொந்தமாக ஒரு சைக்கிளை வைத்திருக்கவேண்டும் என்கின்ற ஆசை இறுதியாய் நிறைவேறிவிட்டது. நமது சைக்கிள் சக்கரங்கள் உருண்டு கொண்டிருக்கின்றன, அதைவிட வேகமாய் 'விசையுறு பந்தினை'ப்போல மனம் விரைகின்றது. மேடும் பள்ளமான நிலங்கள் கடந்து, தான் தோன்றித்தனமாய் வளர்ந்திருந்த செடிகளின் பூக்களின் அழகில் கிறங்கி , வாவி நோக்கி பறக்கும் இரண்டு பறவைகளில் சிறகசைப்பை நிதானமாய் இரசித்து நீள உழக்கின்றோம் எமது சைக்கிள்களை.

இதுதான் நான் படித்த உயர்கல்லூரியென சூரியஒளி சுவர்களில் சிதறி மிதந்துகொண்டிருந்த ஒரு இடத்தைக் காட்டினாய். இங்கேதான் எனது முதல்காதல் முகிழ்ந்து இந்த இடத்தில்தான் எனது முதல் முத்தத்தைப் பெற்றேனென இரண்டு கட்டிடங்களுக்குள் இடையிலிருந்த பெருமரமொன்றைக் சுட்டினாய். எனது முதல் முத்தமும் மரத்தின் கீழேதான், ஆனால் கல்லூரியில் அல்ல, பூங்காவில் எனச் சொல்கிறேன்.

பூங்காக்களில் மறைந்துபோனவர்களின் ஞாபகமாய் மரங்களை நாட்டி பெயர்களைக் குறிப்பதுபோல, ஏன் நமது முத்தங்களின் நினைவுகளுக்கும் மரங்களை நடக்கூடாதென கேட்டேன். அவற்றுக்கு முத்தமரங்களென பெயர் சூட்டி, இங்கே முத்தமிடுவதற்கு மட்டுமே அனுமதியெனவும் எழுதி வைக்கலாமென சொல்லிச் சிரித்தாய் நீ .

அருகிலிருந்த DQ யில் வாங்கிய ஜஸ்கிறிமை பாடசாலை மைதானத்துப் பெஞ்சில் இருந்து குடித்துக்கொண்டிருந்தபோது, விளையாட்டுக்கள் மீதிருக்கும் பெருவிருப்பையும் எனக்குப் பிடித்த ஆட்டங்களையும் சொல்லிக்கொண்டிருந்தேன். வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயிக்காத விளையாட்டுக்கள் மீதே உனக்கு ஈர்ப்பிருக்கிறதெனக் கூறினாய். எதை நோக்கியோ அல்லது ஒரு முடிவை நோக்கி விரைந்துசெல்வதே வாழ்விற்குரிய இலட்சியமாகவும், இலட்சணமாகவும் நிர்ணயிக்கப்படுகின்ற காலத்தில் விளையாட்டுக்களும் அதையே எல்லைகளாகக் கொண்டிருப்பதும் பெரிய விடயமில்லை என்றாய். தோற்பதில் எந்த அவமானமில்லையென்றும் தோற்பவராலேயே புதிதாய் நிறையக் கற்றுக்கொள்ளமுடியுமெனவும் முன்னெப்போதோ எழுதியது எனக்குள் மின்னிவிட்டு மறைந்தது.

ஏற்றம், இறக்கம், சமதரையென எல்லா நிலப்பரப்புக்களையும் சைக்கிளால் கடப்பதுபோல ஒருநாள் வாழ்வென்பதும் அனைத்துத் தருணங்களையும் கொண்டது. இதுதான் நல்லதென எந்த இடத்திலும் நின்றுவிடமுடியாது. ஒவ்வொரு புள்ளியையும் வாழ்வு உருண்டோடிக் கடந்துகொண்டேயிருக்கின்றது.

ஒவ்வொரு நேசிப்பின் பின்னால் வெறுப்பும், ஒவ்வொரு உறவின் பின்னால் பிரிவும் எப்போதும் மறைந்துகொண்டிருக்கின்றது என்று நன்கறிந்தபின்னும் ஏன் நாம் நேசிக்க விழைகின்றோம். நமக்குள் பெருகிக்கொண்டிருக்கும் அன்பினைப் பிறருக்கு பகிர்தலே அற்புதமென காதலிக்கும் நாம் ஏன் அதைக்கொண்டே பின்னர் இன்னொருவரை கட்டிப்போட முயல்கின்றோம்.

எனக்கு முன்னே கேசம் காற்றில் பறக்க, கழுத்தில் வியர்வை வழிய, ஒற்றைக் காற்கொலுசோடு சைக்கிள் ஓடிக்கொண்டு போகும் உன்னைவிட என் கேள்விகள் இன்னும் வேகமாய் விரைகின்றன.

என்னுடைய பலவீனங்களுடன், எழுத்தில் வைக்கின்ற வாழ்வுநிலைக்கு இன்னமும் போகவே முடியாத நான், உன்னை நேசிக்காமலே இருந்திருக்கலாமோ எனச் சந்தேகங்கள் காற்றில் அலையத் தொடங்க சோர்ந்து போகின்றேன்.

காதலென்பது எதன்பொருட்டும் சமரசம் செய்யாதது மட்டுமல்ல, சுதந்திரத்தின் சிறுநுனியையும் கருக்காமல் இருப்பதும் கூட. எப்போதேனும் ஒருநாள் நாங்கள் பிரிந்துபோனாலும் இதே காதலுடன் உன்னை அனுப்பிவைக்கும் மனம் வாய்க்க வேண்டும்.


05.

எப்போதும் தனிமையிற்குள் புதைய விரும்பும் நான், அந்த மாலையை விரும்பியே உருவாக்கினேன். வருவதற்கு நேரமாகும் என்ற நீ சொன்னபோதும், காத்திருக்கின்றேன் என புத்தகத்தை விரித்து வைத்திருந்தேன்.

இம்முறை செல்லுமிடத்தை என்னைத் தீர்மானிக்கச் சொன்னாய். நாங்கள் அந்த pubற்கு நடந்து போய்க்கொண்டிருந்தபோது மாலைச்சூரியன் உன் பொன்முடிகளில் ஒளிர்ந்துகொண்டிருந்தது. மெல்லிருள் சூழ்ந்த மெல்லிசை கசிந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றோம். உனக்குப் பிடித்தமானது ஷெர்ரி மிதக்கும் cocktails என்றாலும் இன்றென் தேர்வென்பதால் பெருங்குவளை நிரம்ப பியருக்கு ஓடர் கொடுத்தோம்.

உன்னோடு மட்டுமின்றி பிறரோடும் ஒரு எல்லைக்கு மீறி எதுவும் தொடர்ந்து கதைக்கமுடியாது வந்துவிடும் அலுப்பு இன்றும் எட்டிப் பார்த்துவிடுமோ பயந்துகொண்டிருந்தேன். இப்படி எங்கையோ தொலைந்துவிடுவது என் இயல்பே தவிர, அது எதிரே இருப்பவரின் தவறுகளல்ல.

எமக்குத் தரப்பட்ட குவளைகளில் 'அலெக்ஸாண்டரை' நிரப்பிக்கொள்கின்றோம். மிதமாகப் பொரிக்கப்பட்ட இறால் துணைக்கு வந்து நிற்கின்றன. ஜோர்ஜ் எஸ்ராவின Budapest பாடலின்
"Give me one good reason/ Why I should never make a change/Baby if you hold me/Then all of this will go away" வரிகளில் நின்று நிதானித்து மீள்கின்றேன்.

பெற்றோர் இன்னொரு நாட்டிலிருக்க பதின்மத்தில் இந்நாடு ஏகியவள். இங்கே வந்த தொடக்கத்தில் நெருக்கமாயிருந்த தோழியொருத்தியை நெடுங்காலத்தின் பின் விலத்தவேண்டிய ஊடலைச் சொல்லிக்கொண்டிருந்தாய். நட்பென்பது அவ்வப்போது அடிபடுவதும் பிறகு அரவணைத்துக்கொள்வதுந்தானே. ஆனால் அதைச் சொல்லாது பியரை அவ்வப்போது நம் கிண்ணங்களில் நிரப்பியபடி பொறுமையாய்க் கேட்டுக்கொண்டிருந்தேன்.

மணித்தியாலங்கள் கழிவது தெரியாது நிறையக் கதைத்துக் கொண்டிருந்தோம். உணவருந்தி வெளியே வந்தபோது இரவு இன்னும் அழகாய்த் தெரிந்தது. பெருநகரத்தில் திசைகள் தொலைந்து சப்வேயைத் தேடி நடந்தபடியே இருந்தோம். ஆனால் அது அலுப்போ சோர்வோ தராத நடை.
சிலவேளை இந்தப் பொழுது இப்படியே கைநழுவிப்போய்விடக்கூடாது என்றுதான் திசைகளைத் தொலைத்தமாதிரி அலைந்து கொண்டிருந்தோமோ தெரியாது.

நீ இன்னும் அழகாய் இருப்பதாகவும், நான் இன்று நிறையச் சிரித்துக்கொண்டிருப்பதாகவும் இருவரும் மாறி மாறி நம்மைப் பாராட்டியும் கொண்டோம்.

என்றேனும் ஒருநாள் நெறியாள்கை செய்யும் என் நாடகத்திற்கு நீ கட்டாயம் வரவேண்டும் என அழைத்தேன். மொழி தெரியாவிட்டாலும் அரங்கிற்கு வந்து உன் ஆர்வத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றேன் என்றாய்.

அன்றைய என் தனித்த சப்வே பயணம் எனக்கு வழமைபோலில்லாது இனிமையாய் இருந்தது. Broadway ஸ்ரேசனைக் கடக்கும்போது ரொறொண்டோவின் அழகை மறைக்கின்றதாய் எரிச்சல் தரும் நெடிதுயர்ந்த கட்டடங்கள் ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை.

என்னிருக்கையிற்கு எதிரே முத்தமிட்டுக் கொண்டிருந்த இணையிற்கு, எப்போதாவது அரிதாய்த் தோன்றும் புன்னகையொன்றைப் பரிசளித்தேன்.

எவரது வெளியையும் எவரும் குறுக்கிடாத, எவர் மீது எவரும் சார்ந்திடாது, இது என்னவகையான உறவென்று தெரியா நேசம் இரவில் ஒரு மின்மினியைப் போல் இன்னமும் பறந்துகொண்டிருக்கின்றது.

இது போல ஒரு பொழுது இனி இப்படி வனப்பாய் அமையுமா தெரியாது. இதே அனுபவம் இன்னொருமுறை வாய்த்தால் இப்படி நிறைவாய் இருக்குமா என்றும் தெரியவில்லை.

நாங்கள் காதலர்களுமில்லை. நாம் காதலர்களாவதற்கான எந்தச் சிறு நிகழ்தகவும் ஒருபோதும் சாத்தியமுமில்லை.

காதலில் மட்டுந்தானா எல்லாம் தொலைந்து பறத்தல் சாத்தியம்?

இல்லை என்றது இந்த நாள் மற்றும் நீ.


06.

'எல்லாவற்றையும் பொதுவில் பகிரும் நீயேன் இதையும் பகிரக்கூடாது?'

'பகிர்வதில் எந்தப் பிரச்சினையுமே இல்லை. எனது விருப்பு மிக எளிதானது.'
'அப்படியெனில் சொல்லு...'

'எப்போதும் என் எல்லாப் பயணங்களிலும் உற்சாகமாய் வரக்கூடிய ஒரு சகபயணி. கொஞ்சம் தமிழ் வாசிக்கத் தெரிந்தால் நல்லது; மூக்குத்தி அணிய விருப்பமுடையவராய் இருப்பின் இன்னும் இனிது.'

'அவ்வளவுதானா?'

'இவ்வளவேதான்.'


07.

எப்போதாவது நின்று நிதானித்து உங்கள் கடந்தகாலத்தைத் திரும்பிப் பார்த்திருக்கின்றீர்களா? எதிர்காலத்தை எட்டிப் பிடிக்கவே நேரமில்லாதபோது, நிகழ்காலமே நழுவிப்போய்க்கொண்டிருக்கும்போது கடந்தகாலந்தான் இப்போது முக்கியமென நீங்கள் முறைக்கவும் கூடும். மேலும் கடந்தகாலம் தேவையில்லாத நினைவுகளையெல்லாம் குப்பைகளாய்க் கூட்டிக்கொண்டுவந்துவிடுமென முணுமுணுப்பதையும் அலட்சியம் செய்துவிடமுடியாதுதான். ஆனால் ஏதாவது புகைப்படத்தையோ அல்லது ஏதேனும் ஒரு நினைவையோ தற்செயலாய்ச் சந்திக்கும்போது உங்களிடம் ஒரு புன்னகை மலர்வதை மறைக்கமாட்டீர்களல்லவா?

நான் புன்னகை மலரச்செய்யும் அந்தக் கணத்தைத்தான் உள்ளங்கையில் பொத்திவைத்தபடி உங்களைத் தொடர்ந்து உரையாடக் கேட்கின்றேன். அந்த அழகிய கடந்தகாலத்தின் தருணம் - உங்கள் வாழ்க்கை கடந்தகாலத்தில் வீணாகப் போகவில்லை என மெல்லியகுரலில் ஒரு பாடலாய் இசைப்பது கேட்கின்றதா? எதுவுமே இறந்தகாலத்தில் செய்யவில்லையென்ற அலுப்பை, இல்லை நிறையவே கண்டும் அனுபவித்தும் வந்திருக்கின்றேன் என இந்தப்பாடல் உள்ளத்தைப் பூரிக்கச் செய்கின்றதா? வாழ்க்கையில் சின்னச் சின்னத் தருணங்கள் முக்கியமானவையென மீண்டும் மீண்டும் கடந்தகாலம் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றதல்லவா?

'நீ இந்த நள்ளிரவில் இன்னும் நித்திரைகொள்ளவில்லையா?'

'நானொரு ஆந்தை; ஆந்தைகள் ஆரவாரிப்பதற்கெனவே இரவுகள் வருகின்றன.'

'அப்படியா?'

'மிக மிக அமைதியான இரவில் மழைபொழிந்துகொண்டிருப்பதை மட்டுமின்றி அதனோடும் அதுவில்லாமலும் இருளில் கரையும் சிறிய சப்தங்களைக் கேட்பதும் எனக்கு மிகப்பிடித்தமானது.'

'நீ Paulo Coelhoவின் Alchemistல் வந்த protagonist ஐ எனக்கு நினைவுபடுத்துகின்றாய்'

'அந்த நூலைக் கேள்விப்பட்டிருக்கின்றேன். கதையும் ஒரளவிற்குத் தெரியும், ஆனால் வாசித்தில்லை.'

'அப்படியொருவனை என் வாழ்க்கையில் சந்திக்கவேண்டுமென விரும்பியிருந்தேன். உன்னைச் சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.'

'நன்றி. நான் அந்தளவு மகிழ்ச்சிகொள்வதவற்கு உரித்தானவனல்ல. இயற்கையை, சிறுசத்தங்களை இரசிக்கும், ஆலங்கட்டி மழையில் மனமும் உடலும் நனைகின்ற ஆயிரக்கணக்கான தறிகெட்டதுகள் இன்னும் இந்த உலகில் இருக்கின்றன.'

நாட்கள்; வாரங்கள்: மாதங்கள்.

கதை; சிரிப்பு; பகிர்தல்கள் மற்றும் பகிரல்கள்.

யன்னலோரம், நீ தந்த ஐந்தூரியம் பூக்கத் தொடங்கிவிட்டன. சாப்பாட்டு மேசை மூங்கில் குருத்துக்களும் சிரிக்கின்றன. அணில்கள் அந்தப் பழைய பைன்மரத்திலேறி ஏறி குருவிகளைத் துரத்துகின்றன. சென்றமுறை காயப்பட்ட ரெட் ரொபினை கராஜிற்குள் தனிமையில் விட்டு பூனையிடம் பலிகொடுத்தமாதிரி இல்லாது இம்முறை இன்னும் கவனமாக இருக்கவேண்டும்.

'நீ இப்பவாவது சொல்வாயென எதிர்பார்த்தேன்'

'என்ன?'

'இவ்வளவு காலமாய் கதைத்துக்கொண்டிருக்கின்றோமே?'

'நான் நெருக்கமாய்ப் பழகுபவர்கள் மிகக்குறைவு. அதிலும் அவர்களோடு நிறையப் பகிர்வதென்பது இன்னும் அரிது'

'அப்படியெனில் நான் அவர்களிலிருந்து வித்தியாசமானவள்.'

'நிச்சயமாக.. அதனால்தானே ஒருநாளின் சலிப்பிலிருந்து, துயரிலிருந்து, சட்டென்று புன்னகைக்க வைக்கும் தருணங்கள் வரை என எல்லாவற்றையும் உன்னோடு பகிர்ந்துகொண்டிருக்கின்றேன்.'

'எல்லாம் சரி. ஆனால் நீயின்னும் என்னிடம் அதை உரியமுறையில் கேட்கவில்லை.'

'எதை?'

'உண்மையிலே தெரியாதா?'

'சிலவேளைகளில் என்னால் உன் அலைவரிசையைச் சட்டெனப் புரிந்துகொள்ள முடிவதில்லை'

'Dont you ever think to propose me?'

'................'

மெளனம்...இடைவெளி.

பிடித்த விழிகளையே நேருக்குநேராயப் பார்க்கமுடியாத் தவிப்பு.

'ஒன்றுமே சொல்ல மாட்டாயா?'

'என்ன சொல்வதென்று தெரியவில்லை.'

மீண்டும் அமைதி.

சின்னச் சின்னச் சப்தங்கள் பிடிக்கும். ஆனால் இப்போதில்லை.

'உனக்கு மூக்குத்தி அணிபவர்களைத்தானே பிடிக்கும். அதுதான் என்னைப் பிடிக்கவில்லை.'

எழுந்து போகிறாய். இவ்வளவு காலமும் கதைத்ததைவிட இன்னும் நிறைய அந்த நேரத்தில் கதைக்கவிரும்பினேன். ஆனால் எதையும்  திரும்பிப் பேசாதது மட்டுமின்றி உன்னைப் போகவேண்டாமெனச் சொல்லவுமில்லை.

(நன்றி: ‘காலம்’ இதழ் 49, எப்ரல், 2016)