கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

குறிஞ்சிப்பூ

Thursday, August 31, 2006

பயணஞ் செய்தலை ஓடுகின்ற ஆற்றுக்கு உவமிக்கலாம் போலத் தோன்றுகின்றது. இப்போது ஓடுகின்ற ஆறு முன்னர் ஓடியது போன்றதல்ல என்பது போல ஒவ்வொரு பயணமும் புதுப்புது அனுபவங்களை, சிலிர்ப்புக்களை தந்துகொண்டேயிருக்கின்றன. ஒரே நேர்கோட்டில் நகர்ந்துகொண்டிருக்கும் நாளாந்த வாழ்வை இடைவெட்டி ஒழுங்கைக் குலைக்கச் செய்கின்ற பயணங்கள் எப்போதும் சுவாரசியந்தரக்கூடியனதான். வீட்டில், வீட்டின் அறைகளுக்குள் மட்டுமே மர்மச்சுழிகள் பெருகிக்கொண்டிருக்கின்றன எனக்கற்பிதம் செய்து, பொழுதை வெயிலோடு பந்தென எறிந்து அலுப்புடன் ஆட்டம் ஆடுகின்றவனுக்கு வெளியே கால்களை முன்னகர்த்தும் எந்த அனுபவமும் அலுக்கப் போவதுமில்லை.

வாழ்வை ஒரு கொண்டாடும் நகர் அது. தம் பண்பாடுகளை கலாச்சாரங்களை செழிப்புடன் வைத்திருக்க விரும்புவர்கள் எனினும் தமது நம்பிக்கைகளை எவர் மீதும் திணிக்க விரும்புவதில்லை அந்நகர் வாழ் மக்கள். தேவாலயங்கள், ஆடுகின்ற கிளப்புக்கள், நிர்வாண விடுதிகள், தெருவில் சிகரெட் பிடித்தபடி,ஒளிரும் தோள்பைகளை தாங்கியபடி மனிதநாகரிகத்தின் 'ஆதித் தொழில்' செய்யும் பெண்கள், ஒரினப்பாலாருக்கான் கேளிக்கை அரங்குகள், 'பெண்களுக்கு மட்டும் அனுமதி'யென அழைப்புவிடுக்கும் விடுதிகள் எல்லாமே/எல்லோருமே நிரம்பக் கிடைக்கும் உங்கள் நம்பிக்கைக்களுக்கேற்ப, நீங்கள் வரிந்துகொண்ட வாழ்வின் பாதைக்கேற்ப எதையேனும் ஒன்றைத் தெரிவுசெய்யலாம்; இல்லையெனில் விலத்திப்போகலாம். ஆனால் எவரும் எவரையும் மிரட்டமுடியாது; எவரும் எவர் மீதும் ஏறி மிதித்துக்கொண்டு போய்விடவும் முடியாது.

e4

ஆமாம் அந்த ஆண்டு
மலர்கள் நிறையப் பூத்திருந்த ஓர் ஆண்டு
கண்ணுக்கு மைதீட்டிய பலபெண்கள்
அந்த ஆண்டில்
வீதிகளில் உலவினர் தேர்போல
(ப 10)


ஊரில் இருந்தவரை பழமை வாய்ந்த கோயில்களின் மீது ஈர்ப்பிருந்தது. வருகின்ற வருமானத்துக்கேற்ப வர்ணங்களைப் பூசி, இன்னுமின்னும் மனிதர்களை வர்ண'ஜிகினா'க்காட்டி உள்ளிழுக்கும் கோயில்களைவிட, பழமை ஊறிய, பாசி படிந்த, சிலைகளின் செப்பு துருவேறிய தலங்கள் மீது அதிக ஈர்ப்புண்டு. அதுவரை சாதாரணமாய் தெரிந்த பெண்கள் எல்லாம் கோயிலுக்கு வரும்போது விபரித்துச் சொல்லமுடியாத உணர்வுகளை மனதுக்குள் கிளர்த்திக்கொண்டிருக்கின்றார்கள். . 'உன் கடைக்கண் பார்வை பெற்றால்...' எல்லாவற்றையும் சாதித்துவிடுவேன் என்று பாரதி எழுதும்போது அவன் கோயிலொன்றுக்கு அருகிலிருந்திருக்கவும் கூடும். சனநெரிசல்களிடையே,மூலஸ்தானக் கடவுளைக் காண்பது எவ்வளவு கடினமானதோ, அவவளவு கடினமானது தோழிகளுடன், பெற்றோருடன், சகோதரகளுடன் வரும் ஒரு பெண்ணுடன் கோயிலில் வைத்து இயல்பாய் உரையாடுவதும். எனினும் இத்தகைய இறுக்கங்களிடையேயும் பார்வைகள் பரிமாறப்படுகின்றன், மவுன பாசைகள் கற்றலையில் அதிர்வெண்ணாகின்றன, திருநீறு சந்தனம் பிடித்தமான கைகளுக்கு மாறுகின்றன. இவ்வாறான பொழுதுகளில் மனம் மிகச் சாந்தியடைந்து உலகம் தழுவிய அன்பு பெருக்கெடுத்து ஓடவும் தொடங்குகின்றது. கடவுளர்களும் தமது இருப்பிறகான ஒரே நோககம் -இனங்களை மொழிகளை மதங்களைத்தாண்டிய - இவ்வாறான பொழுதுகளை உருவாக்குதலேயென மனம் நிறைந்து புன்னகைக்கக்கூடும்.

காலம் செல்லச் செல்ல கோயில்கள் மீதும் கடவுளர் மீதும் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் உதிர்ந்துபோய் சித்தர்களோடும் யோகிகளோடும் இப்போது எஞ்சி நிற்கின்றது. சிறுவயதில் உனக்குப் பிடித்தமான கார்த்திகேயன் பின்பான பொழுதுகளில் உலர்ந்துவிட்டான். என்னைப் போலன்றி, உனக்குள் கடவுளின் மரணம் விரைவில் நிகழ்ந்தமைக்கு, உனது பரந்த வாசிப்பும், இடதுசாரிக் குடும்ப பின்புலமும் ஒரு காரணமாய் இருக்கக்கூடும். குறிஞ்சி மலையில் குமரன் புன்னகை ததும்ப வீற்றிருக்கின்றான். அவனைப் பார்க்க எல்லாப் பருவங்களிலும் மலையேறிப் போய்விடமுடியாது. பனிக்காலங்களில் -மனிதர்களைப்போல-குளிர் தாங்காது தன் தலம் நீங்கி மலையடிவாரம் சென்றுவிடுவான் போலும். கோயிலுக்குள் போக விரும்புவர்களை கோயிலுக்குள் போகச் சொல்லிவிட்டு, காட்டை ஊடுருவி மலையடிவார ஆச்சிரமத்தை அடையும் ஒற்றையடிப் பாதையில் நடக்கத் தொடங்குகின்றோம். கோயிலின் சாம்பிராணிப் புகை நம்மைப் பின் தொடர்கின்றது போலும்.

e2

உனக்குத் தெரியுமா? தமிழக நிலப்பரப்பிலிருந்த் மனிதர்களின் ஆதிக்கடவுளாய் முருகன் இருந்திருக்கின்றான், அவனுக்கு அப்போது வள்ளி என்ற குறத்தி மட்டுமே துணையாக இருந்திருக்கின்றாள்; பிறகு இந் நிலப்பரப்புக்களை ஆக்கிரமித்தவர்களால் முருகன் அவர்களினதும் கடவுள் ஆக்கப்பட்டு தெய்வானை என்ற இன்னொரு துணையும் உருவாக்கப்பட்டார் என்று எங்கையோ வாசித்திருக்கின்றேன் என்கின்றேன். எங்கே போனாலும் உன் குதர்க்கப் புத்தி மாறாதாக்கும் என்று ஒரு முறைப்புப் பார்வை பார்த்துவிட்டு மலையினிலிருந்து வெண்பஞ்சைப் போல இறங்கிக்கொண்டிருக்கின்றாய். இப்போது மழை மெல்லியதாய் தூறத் தொடங்குகின்றது. மலையில் மழையில் கருஞ்சாம்பர் வானப்பின்னணியில் பசுமை விரிந்த நிலஙகளினுடாக நடந்து செல்லுவது மிகவும் இதமானது. தியான மணடபத்துடன், மரத்தால் செய்யப்பட்ட சிறு கோயில்கள், தங்குமிட விடுதிகளுடன் அந்த ஆச்சிரமம் தென்படத் தொடங்குகின்றது.

ஒவ்வொரு நாளும் எழுதலாம்
வெவ்வேறு விதமாக இந்த மழையை
முகில் கவிந்திருந்தபோது
அண்ணாந்து பார்த்து
வானம் விழப்போகுதென்று
நீ சொன்னபோது
இந்தப் பத்தாவது பாடல் பிறந்தது
மழைபற்றிய
பதினொராவது பாடலுக்கான ஆயத்தங்களுடன்
(ப 35)


தியானம் பழகுகின்றவர்களின் நிசப்தத்தினூடே இவ்வழகிய பூந்தோட்டங்களில் அலைந்து திரிவது இதுவரை அனுபவித்திராத அனுபவம். நெற்றியில் விழுந்த மழையின் துளியொன்று இறங்கி உன் உதட்டில் மினுங்குகையில் எமக்கான காலம் உறைகின்றது. நானும் நீயும் சேர்ந்து நனைவதற்காய் வருடங்களாய் காத்திருந்த பெருமழை இப்போது பொழியத் தொடங்குகின்றது.


கவிதைகள்: சோலைக்கிளியின் 'என்ன செப்பங்கா நீ' யிலிருந்து

புத்தக வாசிப்பு

Monday, August 28, 2006

சொல்வதால் வாழ்கிறேன் - அ.மார்க்ஸ்

நல்ல புத்தகங்கள் எப்போதும் நல்லதொரு வழிகாட்டியாக வாசிப்பவருக்கு அமைந்துவிடுகின்றன. சிறுகதைகள் பற்றி எஸ்.பொ ஒருமுறை விவரிக்கும்போது, ஒரு வாசகர் கதையை வாசித்துக்கொண்டிருக்கும்போது 'சா நான் சொல்ல நினைத்ததை இந்தப்படைப்பாளி சொல்லிவிட்டாரே' என்று ஒரு வாசகரை வாயூறச் செய்துவிட்டால் அந்தப் படைப்பு வெற்றிபெற்றுவிடுகின்றது என்று கூறியிருப்பார். அப்படி ஒரு மனோநிலையுடன் வாசித்து முடித்த தொகுப்பு அ.மார்க்ஸின் 'சொல்வதால் வாழ்கிறேன்' என்று கட்டுரைகளின் தொகுப்பு.

File0001

அ.மார்க்ஸ் பலவேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. சொல்ல வந்த விடயங்களை ஆக அதிகம் நீட்டி முழங்காமல் நறுக்குத் தெரித்தாற்போல சுருக்கமாகவும் எளிமையாகவும் அ.மார்க்ஸ் எழுதி முடித்து விடுகின்றார். ஒரே கருத்தை ஒன்பது விதமாய் எழுதி 9X9 தத்துவ/அரசியல் விமர்சனக்கட்டுரைகள் எழுதுகின்றவர்கள் அ.மார்க்ஸின் பரந்த வாசிப்பையும் அவ்விடயங்களைச் சொல்ல அவர் பயன்படுத்தும் -வாசகரைப் பயமுறுத்தாத- மொழி குறித்தும் நிதானமாய் யோசித்துப் பார்க்கலாம்.

கடந்து சென்ற நூற்றாண்டின் பக்கங்களை எழுந்தமானமாய் எட்டிப்பார்க்கும் முதலாவது கட்டுரை(தொகுப்பில் இருப்பதில் இதுதான் சற்று நீளமான கட்டுரை) பல விவாதத்திற்கான புள்ளிகளைக்கொண்டுள்ளது. அதேபோன்று பிரமீளின் கதைகளை வைத்து எழுதப்பட்ட கட்டுரை வித்தியாசமான கோணத்தில் பிரமீளை அணுகுகின்றது. பிரமீளுக்கு ஆன்மீகம் மீதான நம்பிக்கை இருந்தாலும் அவர் பிற ஆன்மீக எழுத்தாளர்களைப் போல எழுதவில்லை எனவும், தமிழில் பன்முகத்துடனும், விளிம்புநிலை மனிதர்களை முக்கிய கதாபாத்திரங்களாய் கொண்டும் எழுதியிருக்கின்றார் என்று ஒரு கட்டுரை பேசுகிறது. அதே போன்று இந்துத்துவவாதிகளின் பெருந்தெய்வ வழிபாடுகளுக்கு எதிராய் சிறுதெய்வ வழிபாடுகளை நாம் முன்னிறுத்த வேண்டிய அவசியமிருந்தாலும், அவை மட்டுமே எல்லாவற்றுக்குமான தீர்வாக அமைந்துவிட முடியாது என அ.மார்க்ஸ் விவாதிக்கின்றார். வள்ளலார், நாராயணகுரு போன்றவர்கள் மதங்களுக்குள் மட்டும் தேங்கிப்போனவர்கள், அதற்கப்பால் அவர்களால் நீட்சியடையமுடியவில்லை என்பது போன்ற அவதானங்கள் முக்கியமானவை.

பெளதீகப் பேராசிரியராக இருந்த அ.மார்க்ஸ், ஈழப்போராளியொருவரின் பாதிப்பில் அரசியல்/இலக்கிய திறனாய்வுத்தளத்துக்கு வந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். ஒவ்வொரு மனிதருக்கு, ஒவ்வொரு அமைப்புக்கு என்று தனிப்பட்ட அரசியல் உள்ளதுபோல, காலச்சுவடுக்கு, ஜெயமோகன்-வசந்தகுமார்-தேவசகாயகுமார் & கோவுக்கு, திண்ணை & விளக்கு கோவுக்கு உள்ள அரசியல் போல என்னால் அதிகளவு உடன்பட முடிகின்ற அரசியலைப் பேசுகின்ற குழு நிறப்பிரிகைக்குழுதான். குழுவாக இயங்கியபோது மட்டும் அல்ல, இப்போது தனித் தனியாக இயங்கும்போதும் அவர்களது ஆளுமைகள் மிகவும் வசீகரிக்கின்றன. (அ.மார்க்ஸ், ரமேஷ்-பிரேம், ரவிக்குமார், பொதியவெற்பன், பொ.வேல்சாமி, சமயவேல்....).

எந்த அமைப்பும் சிறிது சிறிதாக வளர்ந்து காலத்தின் தேவைக்கேற்ப உச்சத்தை அடைந்து பிறகு பிளவுபடுவதும் வெடிப்பதும் இயற்கையானது. அந்த அளவில் நிறப்பிரிகை குழுவின் பிளவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. எனினும் இன்று தனித்தனியாக இயங்கும் நிறப்பிரிகை நண்பர்கள் தமக்குப் பின்பான அடுத்த சந்தியினர் குறித்தும் அக்கறைப்படவேண்டும். தமது சிந்தனைகளின் நீட்சிகளை தொடர்ந்து வரும் சந்தியினருக்கு வழங்க, ஆகக் குறைந்தது இவ்வாறான் உரையாடல்களையும், கட்டுடைப்புக்களையும் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டாவது இருக்கவேண்டும்.

'சொல்வதால் வாழ்கிறேன்' தொகுப்பில் -நான்- அடிக்கோடிட்டு வாசித்த சில பகுதிகள் கீழே

-பின் நவீனம் எதையும் இயற்கை என ஏற்றுக்கொள்வதில்லை. எந்த விவரணமும், சொல்லும் முறையும் நடுநிலையானதல்ல. எல்லாமே கலாச்சார ரீதியாகக் கட்டமைக்கப்படுபவை, கருத்தியல் தளத்தில் கட்டப்படுபவை. இதைப் புரிந்து ஏற்றுக்கொள்ளுதல் என்பது ஒரு அரசியல் நிலைப்பாடு. எல்லாவிதமான கதை சொல்லாடல்களையும் 'இயற்கை நீக்கம்' (de-naturalisede-toxing) செய்தல் என்பது ஒரு அரசியல் செயல்பாடு.
(ப 53)

-இலங்கைத் தமிழர் பிரச்சினை என்கிற வரலாற்றுப் பின்னணியைச் சார்ந்து எழுதப்பட்ட கதைகள் முக்கியமானவை (ஆலா, லங்காபுரி ராஜா, கோடரி...முதலியன). சிங்கள இனவெறியை எதிர்த்துத் தமிழர்கள் நிற்கவேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தையும் அதே சமயத்தில் இறுக்கமான அடையாளங்களுடன் இனவிடுதலை என்கிற பெருங்கதையாடலை முன்வைத்துக் 'குழு மனிதவாதிகளாக' அவர்கள் மாறும்போது மாற்று இனத்தாருக்கு மட்டுமின்றிச் சொந்த இனத்திற்கெதிரான வன்முறையாளர்களாகவும், அடாவடிக்காரர்களாகவும் மாறிப்போகின்ற நிலையையும் புனைவு நியாயங்கள் சிதறாமல் செதுக்கித் தருகின்றார். 'தத்துவம் ஒவ்வொன்றும் கோடரிதான்' என்பது அவர் கூற்று. புத்த பகவான் சொன்னதுபோல (இப்படிப் பெருங்கதையாடலாக இறுகும்) ஒவ்வொரு வழிகாட்டு நெறிமுறையும் மற்றவர்களைக் கொலை செய்யவே பயன்படும்.
(ப 44)

-இந்த நூற்றாண்டில் சுயமாய்ச் சிந்தித்த ஒரே தமிழ்ச் சிந்தனையாளர் எனச்சொல்லத்தக்க ஈ.வெ.ராமசாமிப் பெரியார் தன் வாழ்நாள் இறுதிவரை (1973) தேசப்படம், தேசியக்கொடி, அரசியல் சட்டம், கடவுளரின் புனித உருவங்கள், கம்ப இராமாயணம் உள்ளிட்ட இதிகாசங்கள் ஆகியவற்றை அழிப்பவராகவும் அவமானம் செய்தவராகவும் இருந்தார் என்பதும் தேசத்திற்கும், மொழிக்கும், மரபுகளுக்கும், இந்து மதத்திற்கும் விசுவாசமற்ற சுயமரியாதை மிக்கத் தன்னிலைகளை உருவாக்குவதாகவே அவரது செயற்பாடுகள் அமைந்தன என்பதும் இங்கே நினைவுகூரத்தக்கன. பன்நூற்றாண்டுகளாக இங்கே மேலாண்மை செய்துவந்த பார்ப்பனியம் சற்றே கதிகலங்கியது இந்த நூற்றாண்டில்தான், அதுவும் பெரியாரைக் கண்டுதான்.
(ப 21)

-'டாட் காம்' களில் குறிப்பாகத் 'திண்ணை' டாட்காமில் எழுதிக் குவிக்கும் எழுத்தாளர்கள் பலரின் எழுத்துக்களில் உள்ளார்ந்து நெளிந்து செல்லும் இந்துத்துவ இழையை, கலாச்சார ஏக்கத்தை 'டாட் காம்' வாசகர்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும்.

தமிழக எழுத்துலகை ஆக்கிரமித்திருக்கும் உயர்சாதி எழுத்தாளர்களின்/அறிவுஜீவிகளின் பிடி சற்றே நெகிழத் தொடங்கியுள்ளதையும், இதுகாறும் ஒடுக்கப்பட்டு கிடந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த அறிவுஜீவிகள் தன்னம்பிக்கையோடு செயற்படத்தொடங்கியிருப்பதையும் கண்டு, பழைய பீடங்கள் விசத்தையும், வெறியையும் கக்கத் தொடங்கியிருக்கின்றன....
(ப 88)

-மதநீக்கம் - பார்ப்பன நீக்கம் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தைச் சரியாக வற்புறுத்தியவர் பெரியார். அரசியல் சமூகக் களத்தில் பார்ப்பன நீக்கம் என்ற குரலை திராவிட இயக்கம் முன் வைத்தது. தமிழ் இலக்கியத் தளத்தில் நவீனங்கள் பேசிய நமது உயர்சாதி எழுத்தாளர்கள் இத்தகைய பார்ப்பனீய நீக்க முயற்சியை மிகக் கடுமையாக எதிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வியக்கத்தக்க அளவிற்கு சர்வதேசப் பார்வை கொண்டவரும், இரசியப் புரட்சியை கூர்ந்து அவதானித்து வாழ்த்தியவருமான பாரதியால் கூட இங்கே உருவான பார்பனரல்லாதோர் இயக்கத்தைச் செரிக்க முடியவில்லை. கடும் வார்த்தைகளால் சாடுகிறார். தமிழ் நவீனத்துவத்தின் எல்லைக் கல்லாகச் சுட்டிக்காட்டப்படும் 'மணிக்கொடி' இதழ் பார்ப்பனரல்லாதவர் இயக்கத்தைக் கடுமையாகச்சாடி வந்தது. 'சுயமரியாதைக்காலிகள்' எனத் தொடர்ந்து எழுதியது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியது. 'தலைவர் அவர்களேங் தாமில்ப் பெருங்குடி மக்களேய்ங்....' எனத் திராவிட இயக்க மேடைப் பேச்சைக் கேலி செய்து கவிதைகள் எழுதினார் ஞானக்கூத்தன். ஏதோ திராவிட இயக்கம் என்றாலே வெறும் மேடைப் பேச்சுதான் என்பதைப்போல, இன்றைய இந்துத்துவவாதிகளுக்குச் சற்றும் குறையாத தொனியுடன் மதமாற்றத்தையும் கிண்டலடித்தார் புதுமைப்பித்தன். மார்க்சீய அணுகுமுறையையும் அடித்தள மக்கள் இலக்கியங்களையும் 'முற்போக்கு' என்றும் 'வரட்டுத்தனம்' என்றும் இவர்கள் அளவிற்கு இழிவு செய்தவர்கள் எவருமில்லை
(ப 72)

-நம்மைப் பொறுத்தவரை பாரதி மீதோ, பித்தன் மீதோ அதீதப் பற்றுக் கொண்டவர்கள் அல்ல. பாரதியில் ஒலிக்கும் பார்ப்பனீயத்தையும், புதுமைப்பித்தனில் வெளிப்படும் சாதீய, மதவாதக் கூறுகளையும் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் நம் கண்டிக்காதிருந்ததில்லை. அதேசமயத்தில் இவர்களின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிட்டதும் இல்லை. இலக்கியத் 'திருஉரு'க்களை (icons) விமர்சனம் செய்யக்கூடாது என்பது எத்தனை மோசமோ அத்தனை மோசம் அவர்களின் எழுத்துக்களை ஏகபோகம் ஆக்குவது. நாம் இரண்டையும் எதிர்ப்போம்.
(ப 94)