கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இளங்கோவின் ‘மெக்ஸிக்கோ’ நாவல் குறித்து - Shathir Ahamed

Wednesday, December 30, 2020

பிரபஞ்சன் நினைவுப்பரிசு பெற்ற நாவல் (என்று Sabry நாநா கூற கட்டாயம் வாசிக்கிறேன் என்று)வாங்கிவந்தேன். பிரபஞ்சனின் என்ற பெயர் கூறுகையில் ஞாபகம் வருவது “இவ்வளவுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது” என்ற வரிகள் தான். மனதை நெகிழ்சியுற வைக்கும் எழுத்துக்களில் பிரபஞ்சனுடையதும் என் பிரையோரிட்டி வரிசையில் வந்துவிடும். அதே நெகிழ்ச்சியை தரவல்ல ஓர் படைப்பாகத்தான் ‘மெக்ஸிக்கோ’ வும் அமையப்பெற்றிருக்கிறது. Enrique iglesias,Murakami,Bukowski,Zedd,Passenger என என் மனதுடன் ஒன்றிய பலரையும் எழுத்தாளர் கையாண்ட விதம் அபாரம்.

பயணக்குறிப்பாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்ற வாசகனின் ஏக்கத்தை பூர்த்தியாக்கிவிட்டார் எழுத்தாளர். முக்கியமாக புத்தரைப்பற்றியான வசனக்குறிப்புகள் அன்த்துமே fபெர்ஸ்ட் கிளாஸ்.
//இன்னும் சொல்லப்போனால் புத்தர் தன்னை பின்தொடரவேண்டும் என்று எவரையும் வலியுறுத்தியவருமில்லை.கடவுள் என்ற சொல்லையே எந்தப் பொழுதிலும் பாவிக்க மறுதலித்த அவரை இன்று கடவுளாக்கியதுதான் மனிதர்கள் அவருக்குச் செய்த மிகப்பெரிய அவமானம்// என்றெல்லாம் எழுத ஒருவகைத் துணிச்சல் அவசியமாகிறது.
இடைக்கிடையே பெண்கள், வாழ்க்கை, திருமணம் என்ற தலைப்புகளில் இடம்பெறும் உரையாடல்கள் யதார்த்தத்துடன் ஒன்றித்துப்போகின்றன.விட்டுச்சென்ற பெண்ணின்மீதான மரியாதையைத்தொலைக்க கூடாது என்ற கருத்திலான வசனங்கள் கூட அழகுதான். வாழ்வில் அவர் சந்தித்த சில குடிகாரர்களை பற்றிய குறிப்பு புதிதல்ல,ஆனால் குறிப்பிட்ட முறைதான் புதிது. பிரிவின் வாதையை van Gogh மற்றும் Frida Kahlo உடன் சேர்த்துக்கூறியதும் நல்ல உத்திதான்.
கிளைமாக்ஸ் நன்றாகப் பொருந்திப்போயிருக்கிறது.இந்த நாவலைப்பற்றி சுருக்கமாக கூறுவதாயின்; வேலைசெய்து மூளை களைத்த பின் தேவைப்படும் விடுமுறையில் வாசிக்க ஏற்ற ஒரு மாஸ்டர் பீஸ்.

(Nov 28, 2020)
நன்றி: Shathir Ahamed

இச்சாவும், சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்களும்..

Monday, December 28, 2020

1.

கடந்த சில நாட்களாய் இந்த இரண்டு நாவல்கள் பற்றிய விவாதங்கள் அனல் பறந்துகொண்டிருக்கின்றன. ஒன்று இன்னொன்றின் பாதிப்பில் எழுதப்பட்டது என்று எங்கையோ புகையத் தொடங்கியிருக்கின்றது. இதை எழுதியவர்களுக்குரிய இரண்டு தரப்புக்களும் தமது சட்டங்களுக்குள் நின்று களமாட, இன்னொரு தரப்போ இந்தப் பிரதிகளை வாசிக்காது தமக்கான புதிய புனைவுகளை இந்தப் பிரதிகளை முன்வைத்து புனைந்து கொள்ளவும் தொடங்கிவிட்டனர்.


நமது தமிழ்ச்சூழலில் எழுதப்படுபவற்றை முழுமையாக வாசிக்காது முடிவுகளை எடுப்பதில் வல்லவர்கள் நாம்.  அத்தோடு நான் இந்தத் தரப்புக்களின் வாதங்களுக்குள் போய் ஆராய்ந்து பார்க்கவும் விரும்பவில்லை. இந்த இரண்டு நாவல்களையும் இப்போது வாசித்துவிட்டதால் என் வாசிப்பில் தோன்றிய சிலதைச் சொல்லலாம் என நினைக்கின்றேன்.


இந்த நாவல்களின் சில பகுதிகளில் ஒற்றுமைகள் இருக்கின்றன. அதை மறுக்கத் தேவையில்லை. ஆனால் அது ஒன்றை இன்னொன்று தழுவியதால் வந்ததென எடுத்துக் கொள்ளவும் தேவையில்லை. அது - நமது ஈழப்போராட்ட வரலாறு என எதை எழுதினாலும் ஒத்தபுள்ளிகளில் இசைந்து வரக்கூடிய பகுதிகளாகும். இந்த நாவலில் உறுத்தக் கூடிய ஒற்றுமை, ஒரு போராளிப்பாத்திரத்தின் இரண்டு விதமான வாழ்க்கை முறை சொல்லப்படுகின்ற பகுதிகளாகும். அதாவது போராளி/போர்க்கால வாழ்வு, பின்னர் புலம்பெயர் வாழ்வு. 


போராளியின் வாழ்க்கையெனச் சொல்லப்படும் பகுதிகளில் கூட பெரிதாக ஒற்றுமைகளைக் காணவில்லை. எங்கே ஒற்றுமை துருத்திக் கொண்டிருக்கின்றது என்றால், இந்தப் போராளிப் பாத்திரம், போர் முடிந்தபின் புலம்பெயர்ந்த ஆண் ஒருவரால் இந்தப் பெண் போராளி தடுப்பு முகாமில் இருந்து காப்பாற்றப்பட்டு வெளிநாட்டுக்கு அழைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்படும் பகுதிகளாகும். அதேபோன்று இந்த இரண்டு நாவல்களிலும் ஆலா/சாதனா பாத்திரங்களின் புலம்பெயர் வாழ்வுப்பகுதி விரிவாகச் சித்தரிக்கப்பட்டாலும் இறுதியில் இது உண்மையில் நடக்கவில்லையென சந்தேகத்தன்மையுடன் நாவலில் கட்டியமைக்கப்பட்ட பகுதிகளை உடைத்து விழுத்துகின்ற பகுதிகளிலும் ஒத்தவகையில் இருக்கின்றன.


இதைத் தவிர்த்து இந்த நாவல்கள் இரண்டுமே எழுதப்பட்ட/வடிவமைக்கப்பட்ட அமைப்பு முற்றிலும் வேறுவிதமானவை. ஆங்கிலத்தில் 'நீங்கள் அப்பிள்களையும் தோடம்பழங்களையும் ஒப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். அவ்வாறே இந்த இரண்டு நாவல்களையும் தனித்தனியாக வைத்து பிரதிக்குள் வைத்து அலசிப் பார்க்கவே விரும்புவேனே தவிர ஒன்றை ஒன்றுடன் ஒப்பிட்டுக் கொள்ள என் வாசிப்பின் வழி விரும்பமாட்டேன். இன்னும் தெளிவாகச் சொன்னால் ஷோபாசக்தியினதும், சேனனினதும் முன்னைய நாவல்களோடு அவர்களின் நாவல்களை ஒப்பிட்டுக் கொள்ள விரும்புவேனோ தவிர இந்த இரண்டு நாவல்களையும்  அருகருகில் வைத்து ஒப்பிட்டுப் பார்ப்பதில் எனக்கு ஒப்புதலுமில்லை.


2.


ஷோபாவின் 'இச்சா'வினை வாசித்து அன்று எழுதிய சிறுகுறிப்பில், 'இச்சா' தவிர்க்காது வாசிக்கவேண்டிய நாவல் எனினும், 'இச்சா'வினை ஷோபாவினது முக்கிய நாவல்களில் ஒன்றாக முன்வைக்கமாட்டேன் என்றும் எழுதியிருப்பேன். ஏனெனில் எனக்கு அவர் அதற்கு முன் எழுதிய 'பொக்ஸ்: கதைப்புத்தகம்' , 'இச்சா'வினை விட முக்கியமானதாக இருந்தது. அது என் வாசிப்பு. இன்னொருவர் என் வாசிப்பை மறுத்து 'இச்சா' மிகச்சிறந்த நாவலென தனது வாசிப்பை முன்வைக்கலாம். அவ்வாறுதான் ஒவ்வொரு படைப்பும் தனக்கான இடத்தை காலத்தின் மேல் வைத்து நகர்ந்து கொள்ளும்.


சேனனின் 'சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்களை' வாசிக்கும்போது நான் அவரின் 'லண்டன்காரரை' முன்வைத்தே என் வாசிப்பை முன்வைப்பேன். அந்தவகையில் இந்தப் புதிய நாவல் அதைவிட்டு முன்னகர்ந்திருக்கின்றது எனச் சொல்வேன். லண்டர்காரருக்கு ஒரு புனைவுக்கான அமைதி வந்து சேராததைப் போல, இந்த நாவலிலும் அதே சிக்கல் இருக்கின்றது என்பதையும் சொல்வேன். ஆனால் பன்மைக்குரல்களை ஒலிக்கவைத்ததில், அதிலும் தொடர்ந்து தமிழில் யதார்த்தக் கதைகளை முக்கியமாய் நமது போராட்டப் படைப்புக்களில் அலுக்க வைத்து எழுதிக்கொண்டிருப்போர்க்கு இடையில்- சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள் கவனத்துக்குரியது. அதேசமயம் அந்தப் பன்மைக்குரல்கள் வெறும் வாக்குமூலங்களாகவும், பின்னர் கலைத்துப் போடுகையில் கூட அவை அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தாது, முழுமையடையாது வீணே உதிர்ந்து போவதையும் காண்கின்றோம். 


இந்த நாவலைத் தொடங்கமுன்னர் சேனன் நிறையப் பேர்களுக்கு விரிவாக நன்றி சொல்லி, சில பக்கங்களை அதற்காய் ஒதுக்கி இருப்பார். இதை இவ்வளவு பேர் வாசித்தார்களா, கருத்துக்களைப் பகிர்ந்தார்களா என  வியப்பேற்பட்டாலும், ஆகக்குறைந்தது இந்த நீண்ட பட்டியலில் இருப்பவர்களில் ஒருவராவது இந்த நாவலில் இருக்கும் எழுத்துப்பிழைகளைப் பார்ப்பதற்காய்க் கொஞ்ச நேரம் செலவழித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்தளவு எழுத்துப் பிழைகள்.  சாதாரணமாகப் பாவிக்கின்ற உண்மை, இலையான் என்று வருகின்ற இடங்களிலேயே உ'ன்'மை, இ'ளை'யான் என்று  எல்லா இடங்களில் வரும்போது அந்தப் பட்டியலில் இருப்பவர்களை, இதையெல்லாம் கவனிக்காது வாசித்து நன்றிகொன்றவர்கள் என நினைத்துக்கொண்டேன்.


நான் 'இச்சா'வுக்கு இன்னொரு இடத்தில் வைத்திருந்த விமர்சனங்களில் முக்கியமானது, பின்னட்டையில் பாவிக்கப்பட்ட சேலையணிந்த சிறுமி ஒருவரினது புகைப்படம். புனைவு என்று எழுதிவிட்டு இப்படியெல்லாம் வாசகரைச் சுத்துமாத்துச் செய்யத் தேவையில்லை என்று சொல்லியிருப்பேன். ஷோபாவைப் பற்றிக் கொஞ்சம் விமர்சித்து எழுதினாலே அவருக்காய் எல்லா இடங்களிலும் பேசவல்ல நண்பரொருவர் வந்து அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண் இப்போது இந்தியாவில் இருக்கின்றார். அவரின் அனுமதி கேட்டுத்தான் இதில் பிரசுரிக்கப்பட்டதென்றும் அந்தப் பொழுதில் கூறியிருந்தார்.. அப்படிப் பார்த்தால் ஒரு எளிய வாசக மனம், இந்தப் பெண்தான் அந்த ஆலா அல்லது ஆலாவின் சாயல் என நினைத்துக் கொள்ளலாம். 


அப்படியெனில் யாரோ தெரிந்த பெண்ணுக்கு நடந்த கதையைத்தான் ஷோபா எழுதியிருக்கின்றார் என முடிவு செய்வதற்கான வாசிப்புச் சுதந்திரமும் இதில் இருக்கிறது.  அந்தவகையில் வைத்துப் பார்த்தால், அதே பெண்ணின் கதை சேனனுக்கும் தெரிந்திருக்கலாம் (ஒரே ஊர்க்காரர், ஒருவகையில் இருவரும் உறவினர்கள் என்றும் சொல்கிறார்கள்). ஆக தெரிந்த ஒரு பெண்ணின் கதையைத்தான் இருவரும் எழுத முயன்றிருக்கலாம் என ஒருவர் வேண்டுமெனில் ஒரு வாதத்திற்காய்ச் சொல்லலாம். ஆகவேதான் புனைவைப் புனைவாக எழுதுங்கள். Auto biography ஐ  Auto biography  ஆக எழுதுங்கள்.  Memoirஐ Memoirஆக எழுதுங்கள் எனத் திரும்பத் திரும்பச் சொல்கின்றேன். ஆட்டுக்குள் மாட்டைக் கொண்டு வந்து விட்டால்  எப்போதேனும் வேறு திசையில் இதைபோலச் சிக்கல்கள் வந்து சேரக்கூடும்.


3.


என் வாசிப்பில் இந்த நாவல்களில் சில வகையில் ஒற்றுமைகள் இருக்கின்றன என்று சொல்வேனே தவிர, இச்சா, சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்களின் பாதிப்பில் எழுதப்பட்டதெனச் சொல்ல அவ்வளவு எளிதில் துணியமாட்டேன். அப்படிப் பார்த்தால், இன்னொருவகையில் ஷோபாவின் பாதிப்பில் கதைகளும் நாவல்களையும் எழுதத் தொடங்கியோர் என்று கூட ஒரு பட்டியலிட முடியும். நாம் அங்கெல்லாம் போகத் தேவையில்லை.

 

நிலையற்ற யுத்தக்காலங்களில் பல்வேறு வதந்திகளும்/புனைவுகளும் இயல்பு என்பதை -அது அப்படித்தான் என- எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இரண்டு நாவல்கள் ஒத்தசாயலாக இருக்கின்றது என்று பேச்சு வந்தால், கொஞ்சம் பொறுமையாக இருந்து இரண்டு நாவல்களையும் வாசித்துவிட்டு கருத்துக்களைச் சொல்வதால் எதையும் நாம் இழக்கப் போவதில்லை. 


மற்றது இந்த எழுத்தாளர்களின் ஆதரவாளர்கள், இந்த இரண்டு நாவல்களையும் வாசித்து ஒப்பிட்டு எழுதாமல் விட்டால் கூடப் பரவாயில்லை, ஆகக்குறைந்தது ஏன் தமக்கு இந்த நாவல்கள் முக்கியமானது என்று விரிவாக எழுதுவது அவர்கள் தமக்குப் பிடித்த படைப்பாளிக்குக் கொடுக்கும் மரியாதையாக இருக்கும். அவ்வாறு எழுதப்படுவதை வாசித்து நமது நேரமும் பிரயோசனமாகப் போனது என்று நாமும் அவர்களை நன்றியுடன் நினைவில் இருத்திக் கொள்வோம்.

....................................................

(Sep 06, 2020)

சூரன் சுயசரிதை

Saturday, December 26, 2020

வரலாற்றை வாசித்தல் - 05 

1.

"எனது பிள்ளைகள் வருவார்கள். அவர்கள் கோயிலுக்குள்ளே செல்லட்டும். ஆனால் நான் உங்கள் கோயில்களுக்கு வரமாட்டேன். ஏனெனில் உங்கள் கோயில்களுக்குள்ளே சுத்தம் மிகக்குறைவு" என்று ஒடுக்கப்பட்ட மக்களை   கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கலாமா என்ற விவாதங்கள் 1940களில் நடந்தபோது சூரன் அவர்கள் கூறிய கருத்து ஒருகாலத்தில் பிரபல்யமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவ்வளவு தீர்க்கமாய்க் கூறிய சூரன் நம் இலங்கை வரலாற்றில் முக்கியமானவர். ஒருவகையில் பண்டிதர் அயோத்திதாசர் போல மறைக்கப்பட்ட யாழ்ப்பாணத்துக்காரர்  என அவரைச் சொல்லலாம். சூரனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் 1900களின் தொடக்ககாலங்களில் ஒடுக்கப்பட்டோரின் வரலாற்றின் குறுக்குவெட்டு முகத்தைப் பார்க்கலாம். 


சூரனின் முக்கியத்துவம் என்பது, ஒடுக்கப்பட்டவர்கள் சைவப்பாடசாலைகளில் கற்க மறுக்கப்படுகின்ற கொடுஞ்சூழலில், அவர்  தனது மக்களுக்காக 1914ம் ஆண்டு கட்டுகின்ற பாடசாலையாகும். பின்னர் தேவரையாளி இந்துக்கல்லூரியாக அது வளர்ச்சி பெற்று இன்று நிமிர்ந்து நிற்கின்றது. அதைக் கட்டியதோடு அல்லாது, அந்த நிகழ்வுகளை அப்படியே எழுத்தில் பதிவு செய்திருப்பதே நமக்கு இங்கே முக்கியமாகின்றது. கிட்டத்தட்ட இது எழுதப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகே அச்சில் (2004இல்) ஏறுகின்றது  என்றாலும் நமக்கு ஒரு அரிய ஆவணம் சாட்சியமாக 'சூரன் சுயசரிதை' கிடைத்த மகிழ்வு வருகிறது.


சூரன் காலத்தில் ஒருபக்கத்தில் சைவ ஆதிக்கசாதிச்சக்திகள் ஒடுக்கப்பட்டோருக்கான கல்வியை மறுக்கின்றது. இன்னொருபுறத்தில் அமெரிக்க மிஸனரிகளால் ஒடுக்கப்பட்டவர்கள் ஆரம்பக்கல்வியைக் கற்பதற்கான பாதைகளைத் திறக்கப்பட்டாலும், அவர்களுக்கும் சாதி ஒழிப்பைவிட மதம் மாற்றுதல் என்பதே ஒரு முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருக்கின்றது. இந்த இரண்டு தரப்புக்களும் இடையில் திணறுகின்ற சூரன் சைவத்தின் மீது பற்று இருக்கின்ற ஒருவராகத் தன்னை முன்னிறுத்துகின்றார்.  வதிரி பூவற்கரை அண்ணாமர் கோயிலில் நடந்த வேள்வியில் ஆடுகளுக்கும் வெட்டுபவருக்கும் இடையில் நின்று அங்கு நடந்த வேள்வியை நிறுத்திய துணிச்சற்காரரும் கூட.


'சூரன் சுயசரிதை' என்கின்ற இந்தநூலில் அவர் தன்னைப் பற்றிய தனி விபரங்கள் எதையும்  பெரிதாய்ப் பேசவில்லை. பாடசாலையை 1910களில் தனித்து,  மேலும் நான்கு ஒடுக்கப்பட்ட நண்பர்களோடு சேர்ந்து கட்டுகின்ற தகவல்களையும், அதன் நிமித்தம் சந்திக்கும் சிக்கல்களையுமே விரிவாகப் பதிவு செய்கின்றார். பாடசாலை கட்டத் தொடங்கும் காலத்தில், அருகிலிருக்கும் அமெரிக்க மிஷன் கல்லூரி யாராலோ எரிக்கப்பட, சூரன் உள்ளிட்ட சிலர்  இவர்களே அதை எரித்தார்கள் எனக் குற்றவாளியாக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர். பின்னர் பாடசாலைக்கென நிதிசேகரிப்பிலும் சிக்கல்கள் வருகின்றன. 


இவற்றையெல்லாம் தாண்டி பாடசாலையைக் கட்டி, ஒருமாதிரியாகப் பிள்ளைகள் சிலரை பாடசாலைக்கு படிக்கச் சேர்த்ததன் பிறகு இன்னொரு சிக்கல் வருகின்றது. அன்றையகாலத்தில் வாழ்ந்த எந்த ஆதிக்கசாதி ஆசிரியர்களும் கல்வி கற்பிக்க வர முன்வரவில்லை. எனினும் மனந்தளராது ஆதிக்கசாதி ஆசிரியர் ஒருவருக்கு அவர் மற்றப்பாடசாலையில் வாங்கும் சம்பளத்தை விட இரண்டரை மடங்கு ஊதியம் கொடுத்து அவரை அழைத்துவருகின்றனர்.எனினும் ஆதிக்கசாதிகளில் இருந்து வரும் எந்த அதிபரும் ஒழுங்காக இல்லாததுகண்டு, ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்களே  அங்கே  ஆசிரியர்/அதிபராக வரவேண்டும் என்று சூரனைப் போன்றவர்கள் நினைக்கிறனர்.


2.


இங்கேதான் யாழ் சமூகத்தில் மிக முக்கியமான ஒரு பாய்ச்சல் ஒடுக்கப்பட்டோரிலிருந்து நிகழ்கின்றது. இந்த நூலில் மிக முக்கியமான ஆவணப்பதிவாக  இதையும் இணைத்துச் சொல்லவேண்டும். அது - முதன்முதலாக ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிக்கு வல்லிபுரம் என்கின்ற ஆசிரியர் செல்கின்ற நிகழ்வாகும். வல்லிபுரம் சூரனின் உறவினர் என்பதால் அப்போது நிகழ்ந்த நிகழ்வுகளை அருகில் இருந்து பல பக்கங்களில் சூரன் இந்த நூலில் எழுதிச் செல்கின்றார்.


ஒடுக்கப்பட்டவரையே படிக்க அனுமதிக்கா யாழ் ஆதிக்க சமூகம் ஒரு ஆசிரியர் முதன்முதலில் பயிற்சிக்காகப் போகும்போது எப்படி வரவேற்கும். மூர்க்கமாய் எதிர்க்கின்றது. அதை மீறியும் வல்லிபுரம் போனபின் அவர் கோப்பாய் விடுதியில் இருந்து வெளியேறவிடவேண்டும், இல்லை என்று கொல்லப்படுவார் என ஆதிக்கசாதி காடையர்களால் எச்சரிக்கப்படுகின்றனர். 


அன்று சமஆசன சமபந்தி சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டதால் வல்லிபுரம் என்ற ஒடுக்கப்பட்டவரோடு சேர்ந்து படிக்கும் 40 ஆதிக்கச்சாதி மாணவர்களும் வெளிநடப்புச் செய்கின்றனர். அவர்கள் விடுதியிலிருந்து வெளியேறுகின்றனர். வெளியே சென்று சாப்பிடுகின்றனர். வல்லிபுரம் வீட்டுக்குத் திரும்பவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு இந்த ஒருவருக்காக 40 பேரைப் பகைக்கமுடியாது என்று முதலில் அங்கிருந்து அகற்றப்படுகின்றார்.  


எனினும் வல்லிபுரத்தின் தந்தையார் மற்றும் சூரன் போன்ற சிலரின் வற்புறுத்ததால் வல்லிபுரம் திருப்ப கலாசாலைக்கு எடுக்கப்பட்டாலும், வல்லிபுரத்தை ஒரு கடிதத்தை -அந்த 40 ஆதிக்காசாதி மாணவர்களுக்காய்- அவர் வெளியில் சென்று சாப்பிடுவதாக எழுதித் தரச் சொல்லித் தரச்சொல்கின்றனர். இப்படி எழுதிக் கொடுத்தால் பிறகு வல்லிபுரம் பயிற்சிக்கல்லூரியில் இருந்து கற்கமுடியாது போய்விடும் என்று சூரனைப் போன்றவர்கள் தயங்குகின்றனர். இதற்காய் சூரனைப் போன்றோர் எந்தச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்பதையும் இந்த நூலை நாம் வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம்.


பல்வேறு வகைகளில் வெளியில் மட்டும் அல்லாது, அவரின் ஊரிலுள்ள ஆதிக்கசாதியினரும் வல்லிபுரத்தை வீட்டுக்கு எடுக்கும்படி சூரனைப் போன்றவர்களிடம் வற்புறுத்துகின்றார்கள். இவ்வாறான நெருக்கடிகளை மீறி வல்லிபுரம்  கற்றுத்தேர்ந்து வெளியில் வருவது ஒரு பெரும் பாய்ச்சல் எனத்தான் சொல்லவேண்டும். அன்றைய சூழலில் ஒடுக்கப்பட்ட ஒருவர் கோப்பாய் கலாசாலைக்குள் நுழைந்தது பெரும் விடயமாக எல்லாத் தரப்பாலும் நிச்சயம் பேசப்பட்டிருக்கும் 



இந்த சமாசன சமபந்தியின் தாக்கம் எந்தளவுக்குப் போனது என்பதை க.சிவத்தம்பி இன்னும் விரிவாக (இந்நூலில் சூரன் அதைக் குறிப்பிடாவிட்டாலும், சிலவேளை ஆதிக்கசாதிகளின் சூழ்ச்சியின் எல்லை தெரியாததாலும் சூரனுக்கே இது தெரிந்திருக்காதும் இருக்கலாம்) குறிப்பிடுகின்றார். அதாவது  சேர் பொன்னம்பலம் இராமநாதனே இந்த ஆசிரிய கலாசாலை சமபோசன விடயத்தில் தலையிட்டதைப் பற்றியதாகும். இந்த சமபோசனம் கலாசாலையில் அனுமதிக்கப்படக்கூடாது என்று சேர் இராமநாதன் தேசாதிபதிக்கு ஒரு பெட்டிசன் அனுப்பியிருக்கின்றார். இந்த விடயம் ஜோன் ரஸல் என்பவர் எழுதிய Communal Politics Under the Donoughmore Constitution: 1931-1947' என்ற நூலில் குறிப்பிடப்பட்டதாக கா.சிவத்தம்பி அவர்கள் குறிப்பிடுகின்றார். உண்மையில் 1920களில் நடந்த இந்த ஆசிரிய கலாசாலை சமாசன சமபோசன பிரச்சினை என்பது யாழ் சமூகத்தில் சாதியொழிப்பு விடயத்தில் முக்கிய மைல்கல்லாகும். இது குறித்து இன்னும் விரிவாக அந்தக் காலத்தில் நிகழ்ந்தவற்றின் தரவுகளுடன் நிறைய ஆய்வுகளும், ஆக்கங்களும் கட்டாயம் வரவேண்டும்.


இப்படி கஷ்டப்பட்டு சமாசன சமபந்தியில் ஒடுக்கப்பட்டவர்கள் சாதித்துக் காட்டியதைப் பின்னர், தீண்டாமை ஒழிப்பு இயக்கங்கள் 1960களில் கோயில் நுழைவுப் போராட்டங்களையும், தேநீர் கடைப் பிரவேசங்களையும் செய்தபோது, தமிழரசுக்கட்சியினர் இந்த சமாசன சமபந்தி நிகழ்வுகளை கேலிக்கூத்தாக்கி சாதியொழிப்புப் போராட்டத்தைத் தாங்களும் செய்கின்றனர் என்று காட்ட முயற்சித்ததும் கடந்தகாலத்தில் நிகழ்ந்தவைதான். 


3.


சூரனின் முக்கியத்துவம் என்ன என்பதற்கு இன்னொரு உதாரணத்தை இங்கே கட்டாயம் குறிப்பிடவேண்டும். அது அன்று 1920களில் இலங்கை வாலிபர் காங்கிரஸ், காந்தியின் சுயராஜ்ஜியத்தின் மீது ஈர்ப்புக்கொண்டு இலங்கையில் இயங்கத் தொடங்குகின்றனர்.  தனியே சுயராஜ்ஜியத்துக்காக மட்டுமின்றி சாதி வேறுபாட்டிற்காகவும் ஹண்டி பேரின்பநாயகம் போன்ற வாலிப காங்கிரஸ்காரர்கள் போராடினார்கள். அந்தவகையில் அவர்கள் 1929, 1930களில் நடந்த மாநாடுகளுக்குச் சூரனை உரையாற்றுவதற்கு அழைத்திருக்கின்றனர். அத்துடன் சூரனைத் தமது அங்கத்துவரும் ஆக்கி அவருக்கான இடத்தையும் கொடுத்திருக்கின்றனர். இவ்வாறு மாநாட்டுக்குப் போன சூரன், அங்கே நடந்த கலவரத்தில் இறந்துவிட்டதாக ஊரில் ஆதிக்கசாதிகள் வதந்திகளைப் பரப்பியதாகவும் சூரன் இந்த நூலில் குறிப்பிடுகின்றார்


இற்றைக்கு நாவலரை தமது முகமாகக் கொள்கின்ற யாழ் இந்து சமுகம் ஒருபோதும் சூரனைக் கவனத்தில் கொள்வதே இல்லை. நாவலர் போன்ற சாதிமான்களை விட, தனது ஆதிமதம் சைவமே என்று மதமும் மாறாமல், அதேவேளை இந்து ஆதிக்க சாதிமான்களின் வெறுப்பையும்/ஒடுக்குதல்களையும் சம்பாதித்துக்கொண்டு தனது வேரிலிருந்து தடம்புரளாத சூரனை அல்லவா நாம் யாழ் சமூகத்தின் முகமெனக் கொள்ளவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலந்தான் நாம் சற்றாவது யாழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களெனப் பெருமிதங் கொள்ளலாம். இந்த நூலின் முன்னுரையிலும் கா.சிவத்தம்பி 90களில் இலங்கைப் பாடத்திட்டங்களில் சில மாற்றங்களைக் கொண்டு வரும்பொருட்டு, பெரியவர்கள் சிலரை இணைக்கவேண்டும் எனக் கேட்டபோது ஹண்டி பேரின்பநாயகம், சூரன் போன்றவர்களை இணைக்கவேண்டுமெனப் பரிந்துரை செய்ததாகக் குறிப்பிடுகின்றார். அது இற்றைவரை நிகழாமலே இருக்கின்றதெனவே நினைக்கின்றேன்.


சூரன் ஒரு ஆசாரியாகவும் இருந்தவர். அவரது இருபதுகளில் கரவெட்டி தேவமாதா கோயிலுக்கு மாதா சிலை வைக்க ஒரு கண்ணாடிக்கூட்டைச் செய்து கொடுக்கின்றார். அப்போது  ஒரு கிறிஸ்தவ வெள்ளாளர் இதை ஒடுக்கப்பட்டவரான சூரன் செய்ததாக வெளியில்  சொல்லவேண்டாம், அப்படிச் சொன்னால் சைவ வேளாளர்கள் தங்களை மதிக்கமாட்டார்கள் என்று சொல்கின்றார். சூரன் தேவாலயத்தில் இல்லை என்று நினைப்பில் சொல்லப்பட்ட இதை சூரன் கேட்டுவிடுகின்றார். 'எனக்கு ஒன்றும் இந்தச் சிறப்பு வேண்டாம்' என்று அவரின் முகத்திற்கு நேரே சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார். அப்போது அவருக்குச் சற்று கிறிஸ்தவச் சாய்வு இருந்திருக்கின்றது. எனினும் பிற்காலத்திலும்  வதிரி வேதக்கோயிலுக்கு சூரன் இரதம் செய்துகொடுத்திருக்கின்றார். இதன்மூலம் சூரன் ஒரு தீவிர சைவக்காரராக இருந்தாலும் மாற்று மதங்களை வெறுத்து ஒதுக்கவில்லை என்பதும் நமக்குப் புலப்படுகிறது.


ஆசாரியர் சூரன் தனியே இந்த விடயங்களில் மட்டுமில்லாது, அவரே பாடல்களை எழுதி பாடுகின்றவருமாவார். அதை நூலாக்கி பின்னர் பாடசாலைக்கான நிதிக்காய் கொழும்பு, காலி உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு இடங்களுக்கு அலைந்தபோது இவற்றைக் கொண்டு சென்று விற்பனை செய்துமிருக்கின்றார். அத்துடன் அவர் நெல்லியடியில் அன்று இருந்த மகாத்மா தியேட்டரில் காந்தி கொல்லப்பட்டபோது நிகழ்ந்த அஞ்சலி நிகழ்விலும் உருக்கமாய் காந்தி பற்றிய பாடல்களைப் பாடியதாக கா.சிவத்தம்பி குறிப்பிடுகின்றார். இதைவிட சுவாரசியமானது பராசக்தி திரைப்படம் வந்து, சூரனின் பகுதியில் பல இளைஞர்கள் நாத்திகம் பேசித் திரிந்தபோது, பராசக்தி நாத்திகத்தையல்ல, பக்தியைத்தான் விதந்தோத்துகிறது என்று பராசக்தி பற்றி ஒரு எதிர் விமர்சனமும் எழுதியிருக்கின்றார். இந்த நூலைப் பதிப்பித்த ராஜ சிறிகாந்தன் அந்தக் கட்டுரை தன்னிடம் இருப்பதாகக் குறிப்பிட்டாலும் இந்த நூலில் அதைச் சேர்க்காமல்விட்டது நமக்கு ஓர் இழப்பே. சூரன் கதை என்று அவர் சுயசரிதை வந்ததுபோல, அவர் எழுதிய கட்டுரைகள், அவரைப் பற்றிப் பிறர் எழுதிய பதிவுகள் தொகுக்கப்படவேண்டும். அதன்மூலம் சூரனின் ஆளுமை இன்னும் சிறப்பாக வெளிக்கொணரப்படக்கூடும்.


அன்று இப்படி ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒருவர் பாடசாலை  தொடங்கியிருக்கின்றார் என்று அறிந்து அதை 'இந்துசாசனம்' தனது பத்திரிகையில் வெளியிடுகின்றது . அதேவேளை ஒருவாரம் இலங்கைக்குப் பயணஞ்செய்த கல்கி, சூரனைச் சந்தித்ததைப் பதிவு செய்கையில் ஈழத்து நந்தன் என்று அவரைக் குறிப்பிட்டு எழுதியிருக்கின்றார்


ஒடுக்கப்பட்ட சமுகத்தில் 1881ல் பிறந்த சூரன் 1956இல் மரணமடைகின்றார். சூரன் சுயசரிதையை அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதி முடித்திருந்தாலும் விபரங்களை, சம்பவங்களை, வழக்குகளை காலக்கிரமாக தெளிவாகக் குறிப்பிடுகின்றார். ஒன்று அவர் ஏற்கனவே குறிப்புகளாக இவற்றை எழுதி வைத்திருக்கவேண்டும் அல்லது இவ்வளவும் அழியாத நினைவுகளாக அவருக்குள் உறைந்து இருந்திருக்கவேண்டும்.


இன்றைக்கும் சாதியைக் கடந்துபோய் விடாத யாழ் சமூகத்திற்கு, சூரன் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் செய்த விடயங்களின் மூலம், ஒரு பெரும் சவாலாக நம் எல்லோர் முன்னும் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கின்றார்.

.....................................................

(Jun 08, 2020)

மெக்ஸிக்கோ - நிரோஜினி

Wednesday, November 25, 2020

தனித்து பயணிக்கும் ஒரு எழுத்தாளனின் பயணம் ஒவ்வொருவரை சந்திக்கும்போதும், வெவ்வேறு இடங்களுக்கு செல்லும்போதும் ஒரு கவிதையாய் அல்லது கதையாய் அவனுக்குள்ளே உருவாகி, சிலது அச்சிடப்படுகின்றன. பல நினைவுகளுக்குள்ளே நிரந்தரமாகிவிடுகின்றன.

சிலருக்கு வாழ்க்கை என்பது நல்ல கல்வி, தொழில், திருமணம், சொந்த வீடு, வாகனம் இன்னும் சிலருக்கு சில அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் என்பதாக மட்டுமே சுருங்கி விடுகிறது. வெகு சிலருக்கு வாழ்க்கை கொண்டாட்டம், ஒரு முடிவில்லா பயணம், புதிய மனிதர்களை புதிய புத்தகங்கள் போலே படித்தறியும் ஆவல் கொண்டிருப்பர். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு உலகம், சிலது பறந்து விரிந்தும் மிகச் சிலது குறுகியதும் அந்தகாரம் நிறைந்ததுமாய். மெக்சிக்கோ நோக்கி செல்லும் இந்த பயணி புத்தகங்ளை தனக்கு கவசமாக பயன்படுத்திக்கொண்டு கடந்த காலத்திற்குள் தன்னை சிறைப்படுத்தியிருக்கும் ஒருவன், அவனது உலகை வெளியே நின்று பார்க்கும் ஒரு கொண்டாட்டக்காரி சில நாள் பயணத்தில், காதலில், மதுவும் முத்தமும் நிறைந்த கடற்கணங்களில் அவனை விடுவிக்க எத்தனிக்கிறாள். அவனும் எப்போதோ மறந்துபோயிருந்த அம்மாவின் புடவை வாசத்தினை இவள் அருகாமையில் உணர்கிறான்.

பெண் என்பவள் நிகழ்கணங்களில் வாழ்பவள். சமூகம் விதித்திருக்கும் இத்தனை கட்டுக்களும் தான் மீது சுமத்தப்பட்டிருந்தாலும், அவள் நதியைப்போலே நகர்ந்து செல்கிறாள். பூக்காடுகளில் பிரியப்பட்ட ஊதா பூவாய் மிளிர்கிறாள். இந்த ஆணின் மீது அவள் பரிதாபம் கொள்ளவில்லை, காதல் வயப்படுகிறாள். நிகழ்காலங்களில் அவனை நிதானிக்க வைக்கிறாள்.
மெக்ஸிக்கோ படித்து முடிக்கும் வரைக்கும் சுவாரசியம் குறையாத, ஆழ்மனதின் உணர்வுகளை தெளிவாக விபரித்திருக்கும் ஒரு பயணக்கதை. பயணங்களை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும், புதிய மனிதர்களை சந்திப்பதில் ஆர்வமுள்ள அனைவருக்கும் சிறந்த விருந்து.கிட்டத்தட்ட சுவாரசியம் குறையாமல் மெக்ஸிகோவின் அதிசயங்களை படித்தாயிற்று ஒருமுறை பயணப்பட்டு போனால் போதுமானது. ஏற்கனவே போனவர்கள் இந்த மெக்ஸிகோவினை படித்த பின் போகும் பயணம் வேறுபட்டதாயிருக்கும். யார் கண்டார் ஒரு அம்பராவையோ, ஒரு கிறுக்கு வாசகனையோ சந்திக்க நேரும். ஒரு நாவல் இத்தனை சிறிய மாற்றத்தையேனும் நிகழ்த்தாதிருப்பதில் நியாயமில்லை தானே
அம்பாரோ வுக்கும் அவள் காதலனுக்கும் அவனுக்குள்ளிருக்கும் அந்தக்குழந்தைக்கும் ஆயிரம் முத்தங்கள்.
..............

(Oct 15, 2020)

நன்றி: நிரோஜினி

Killing Commendatore By Haruki Murakami

Wednesday, November 11, 2020

 1.

ந்நாவலின் முக்கிய பாத்திரம் ஓர் ஓவியன். கதை, அவன் தனது மனைவியை விட்டுப் பிரிந்து, நகரத்திலிருந்து மலைப்பாங்கான பிரதேசத்துக்கு வருவதோடு தொடங்குகின்றது. அந்த ஓவியன் அந்த மலைநகரத்திலிருந்து கொமிஷனுக்காய் பிறரைப் பார்த்து ஓவியங்களை வரைந்து கொடுக்கின்றான். அவன் தங்கியிருக்கும் வீடு ஒரு பிரபல்யம் வாய்ந்த ஓவியரின் வீடு. அந்த ஓவியர் இப்போது தன் வாழ்வின் அந்திமக் காலத்தில் ஒரு நேர்ஸிங் ஹோமில் வசித்துக் கொண்டிருக்கின்றார்.



வழமைக்கு மாறாக நள்ளிரவில் இந்த மலை நகரத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தினமும் மணியொலிக்கத் தொடங்கின்றது. அந்தச் சத்தம் எங்கிருந்து வருகின்றது எனத் தேடும் இந்தக் கதைசொல்லி, ஒரு மறைக்கப்பட்ட ஓவியத்தை வீட்டின் இருண்ட பகுதிக்குள் கண்டுபிடிக்கின்றார். அதற்கான பெயரே Killing Commendatore இருந்தும் தொடர்ந்து மணிச்சத்தம் கேட்க, அயலிருப்பவரின் உதவியுடன் ஓர் இடத்தை அகழ்ந்து பார்க்க, அங்கே வித்தியாசமான விடயங்கள் வெளிவரத்தொடங்கின்றனஅது ஒரு காலத்தில் புத்த பிக்குக்கள் தியானம் செய்த இடமாகவும், தியானத்தின் போதே அவர்கள் உயிரைவிட்ட இடமாகவும் தோண்டிய அந்த இடம் இருக்கின்றது. மறைத்து வைக்கப்பட்ட ஓவியமும், புதைந்து கிடந்தததை அகழ்வராய்ந்த இடமும் இப்போது நடக்கும் பல்வேறு மர்ம நிகழ்வுகளுக்குக் காரணங்களாக ஆகின்றன. அந்த மர்மங்களின் முடிச்சுக்களில் சிலதை அவிழ்த்து, பிறதை அவிழ்க்காமலும், முரகாமி வாசிக்கும் நமக்குக் காட்டுகின்றார்.



மறைக்கப்பட்ட ஓவியத்திலிருந்து கதை ஐரோப்பாவுக்கு நகர்கின்றது. அந்த ஓவியத்தை வரைந்த பிரபல்யம் வாய்ந்த ஓவியரான Tomohiko Amanda வின் வாழ்வு பின்தொடரப்படுகின்றது. அமெண்டா ஓவியராக ஆஸ்திரியாவில் கல்வி கற்றுக்கொள்ளும்போது 2ம் உலக மகாயுத்தம் நிகழத்தொடங்கின்றது. அவரின் காதலியான பெண், நாஸிகளுக்கான எதிரான இயக்கமொன்றில் இருக்கின்றார். ஆனால் அந்தப் பெண்ணும், அந்த மாணவர் இயக்கமும் நாஸிகளால் கண்டுபிடிக்கப்பட்டு மோசமாக சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுகின்றார். அதிஷ்டவசமாக அமெண்டா சில வருடச் சிறைத்தண்டனையுடன் அன்றைய ஜேர்மனியுடன், ஜப்பானுக்கு இருந்த நட்புறவால் உயிர் தப்புகின்றார்.



இதேகாலகட்டத்தில் அமெண்டாவின் சகோதரர் கட்டாயமாக ஜப்பானிய இராணுவத்தில் சேர்க்கப்படுகின்றார். ஜப்பான் சீனாவை ஆக்கிரமிப்பைச் செய்யும்போது, ஜப்பானியர்கள் சீனர்களைச் செய்யும் படுகொலைக்குச் சாட்சியமாக இருக்கின்றார். அதன் விளைவாக, ஒரு பியானோ இசைஞனாக அமெண்டாவின் சகோதரர் தன் கைவிரல்களை ஒவ்வொன்றாக வெட்டிவிட்டு யுத்ததின் முடிவில் தற்கொலை செய்துகொள்கின்றார்.



2.

இவ்வாறு யுத்தத்தின் நிமித்தம் தனது காதலியையும், சகோதரனையும் பலிகொடுத்த அமெண்டா இந்தச் சம்பவங்களின் பின் எதையும் தன் குடும்பத்தோடோ நண்பர்களோடோ பகிராமல் தனக்குள்ளேயே எல்லாவற்றையும் மூடிவைத்துக்கொல்கின்றார். ஆனால் அவர் பேசவிரும்பும் விடயத்தை/வாதையை ஓர் ஒவியமாக வரைந்து யாருக்குந் தெரியாமல் மறைத்துவைத்திருக்கின்றார். இந்த ஓவியத்தையும், அடைக்கப்பட்ட குரல்களையுந்தான் நமது கதைசொல்லியான இந்த இளைய ஓவியன் கண்டுபிடிக்கின்றான்.



இப்போது demons அவிழ்க்கப்பட்டுவிட்டன. அவை நிகழ்காலத்தில் இருக்கும் மனிதர்கள் மீது தமது நிழல்களைக் கவிழ்க்கின்றன. அதனால பல்வேறு மனிதர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அமெண்டாவின் ஓவியத்திலிருக்கும் பாத்திரங்கள் உயிருடன் நடமாடத் தொடங்கின்றன. அவை சிலது நல்லவையாகவும், சில தம்மைப் பலிகொடுத்து பிறருக்கு உதவுவதாகவும், சில இன்னும் பழிவாங்கும்தன்மையோடும் இருக்கின்றன.



3.

கதைசொல்லியான இந்த ஓவியன் வழமையாக வரும் முரகாமியின் ஒரு தனிமைப்பட்ட பாத்திரம். தனக்கான உணவைத் தயாரித்து, பூனைகளோடு வாழ்ந்து, நாளாந்த வாழ்க்கையிலிருந்து விலத்தி பிறரோடு அவ்வளவு ஓட்டாத ஒரு உயிரி. ஆனால் அந்தத் தனிமைப்பட்ட உயிரிக்குக் கூட ஏதேதோ விடயங்கள் நடந்து வாழ்க்கை சுவாரசியமாகிவிடுகின்றது. மலைநகரத்தில் இருக்கும் காலத்தில் கதைசொல்லிக்கு ஒரு பதின்மூன்று சிறுமியுடன் நடபு முகிழ்கின்றது. அந்தச் சிறுமியில் 12 வயதில் இறந்துபோன தன் தங்கையை இந்த 36 வயதான கதைசொல்லி காண்கின்றார். பிறர் எவருக்கும் தென்படாத அமெண்டாவின் ஓவியப் பாத்திரங்கள் கதைசொல்லிக்கும், இந்தச் சிறுமிக்கு மட்டுமே தென்படுகின்றனர்.



சிறுமியின் வீட்டைக் கண்காணிக்கும் ஒரு பணக்கார புதிரான பாத்திரத்தில் இன்னொரு கதாபாத்திரம் வருகின்றது. இந்தச் சிறுமியின் தாயார் இப்போது இறந்துவிட்டாலும், இந்தச் சிறுமியின் தாயோடு அந்தப் பணக்கார ஆணுக்கு ஒருகாலத்தில் தொடர்பிருக்கின்றது. இந்தச் சிறுமி தனது மகள்தானென இந்தச் சிறுமியைத் தொடர்ந்து கண்காணித்தபடி அந்தப் பணக்காரர் இருக்கின்றார். இந்தச் சிறுமி அந்த பணக்கார ஆணின் மகள்தான் என்று வாசிக்கும் நமக்கு ஒரளவு புரிந்தாலும், அந்தச் சிறுமியை இப்போது வளர்க்கும் பெண்ணோடு இந்த ஆணுக்கு புதிய உறவொன்று முகிழ, அவர்களின் கதை வேறொரு தடத்தில் நகரத் தொடங்கின்றது. நாவல் முடியும்வரை இந்த உண்மை அந்த ஆணால் இந்தச் சிறுமிக்குச் சொல்லப்படுவதில்லை.



ஆனால் ஓவியரான கதைசொல்லி, இந்த உண்மையைத் தனது வாழ்வில் வேறுவிதமாய் எதிர்கொள்கின்றார். அவரின் மனைவிக்கு இன்னொரு ஆணுடன் உறவு வந்துவிட்டதென்று தெரிந்தே பிரிகின்றார். இவரது மனைவிக்கு விவாகரத்துக்கான பத்திரங்களை அனுப்பிவிட்டபோதும், சட்டென்று தனது மனைவியோடு சேர்ந்து இருந்தால் என்ன,

இதற்காய்க் கதைத்துப் பார்த்தால் என்ன என்று யோசிக்கின்றார். ஆனால் இப்போது அவரது மனைவி கர்ப்பமாகிவிட்டார். இந்தக் கதைசொல்லியா அல்லது இவரது மனைவி சந்தித்த புதிய ஆணாலா அவர் கர்ப்பமானார் என்ற குழப்பம் இருந்தாலும், குழப்பத்தோடு கூட வாழலாம் என்று ஒரு வழியை இந்த நாவல் இறுதியில் கண்டடைகின்றது.



இவ்வாறு பல்வேறு மர்மங்களும், குழப்பங்களும் இருக்க, நாவல் சுவாரசியமாக இருந்தாலும், ஏன் முரகாமி இதை 700 பக்கங்கள் வரை நீட்சித்து எழுதினார் என்று தலையைக் குழப்ப வேண்டியிருந்தது. 300-400 பக்கங்களுக்குள் இந்த நாவலை திருத்தமாக எழுதியிருக்கலாம்.. 600-700 பக்கங்கள் தாண்டினால்தான் கிளாசிக் என்று மதிப்பார்கள் என்று யாராவது தமிழ் வாசகர் சொல்லி அவரின் மனசையும் குழப்பிவிட்டார்களோ தெரியாது.



4.

நாவலின் ஓரிடத்தில் கதைசொல்லியின் நண்பன் பெண்கள் பற்றி தான் கண்டுபிடித்த ஓர் ஆய்வைச் சொல்வார். எந்த ஒரு பெண்ணினதும் முகத்தின் அரைவாசிப்பக்கம் மற்ற அரைவாசிப்பக்கத்தோடு ஒத்துவருவதில்லை என்று உறுதியாகச் சொல்கின்றார். அதாவது பெண்ணின் முகம், ஒரு அரைவாசி முகத்தில் இருந்து அந்த அரைவாசிக்கு ஏற்றமாதிரி இன்னொரு முகம் ஒத்துவருமே தவிர, அவர்களின் முகத்தில் இருக்கும் மற்றப்பக்கம் ஒருபோதும் ஒத்துவருவதில்லை என்று சொல்கின்றார்.



அதற்காய் அவர் பல பெண்களின் முகத்தை கணனியில் வெட்டி ஒட்டியெல்லாம் பரிட்சித்துப் பார்க்கின்றார். ஆக எப்போதும் பெண்கள் இரண்டு முகங்களோடு நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என்கின்றார். ஒரு பக்கம் அழகானதென்றால், இன்னொருபக்கம் அப்பாவியாக இருக்கின்றது என்கின்றார். இதில் எப்போது தனக்கு சிக்கல் வருகின்றதென்றால், ஒரு பெண்ணோடு முயங்கும்போது, அவளின் மற்றப்பக்கம் தன்னை உற்றுநோக்கின்றது என்றும், அது தனக்கு மிகவும் கஷ்டமாகவும், சிக்கலாகவும் இருக்கின்றது என்று நண்பர் சொல்கின்றார். இது பெண்களின் பிரச்சினையல்ல, உங்களின் மனோவியல் பிரச்சினை. இதற்கு ஆலோசனைதான் பெறவேண்டுமென கதைசொல்லி சொல்கின்றார். இல்லை நான் எல்லோரையும் போல் சாதாரணமாக இருக்கின்றேன் என்கின்றார் அந்த நண்பர். இப்படி நாம் சாதாரணமாக இருக்கின்றோம் என்று நம்புகின்றவர்கள்தான் மிகவும் பிரச்சினைக்குரியவர்கள் என்று F.Scott Fitzgerald எழுதியிருக்கின்றார் எனச் சிரித்தபடி கதைசொல்லி சொல்கின்றார்.



ஒருவகையில் இந்த நாவலில் எல்லோரும் சாதாரணமாக இருக்கின்றார்கள் போலத்தான் வெளிப்பார்வைக்குத் தெரிகின்றார்கள். உண்மையில் அவர்கள் சாதாரணமாகத்தான் இருக்கின்றார்களா இல்லையா என்பதை பல்வேறு சம்பவங்களினூடாகக் காட்டப்படுகின்றது. மேலும் கடந்தகாலத்தில் உளவியல் வடுக்களிலிருந்து அவ்வளவு எளிதாகக் கடந்து வந்துவிடமுடியுமா என்றும் இந்த நாவல் நம்மைக் கேள்விகேட்க வைக்கின்றது.



காஃப்காவின் எழுத்துக்களினூடாக பின்னர் Kafkaesque பிரபல்யமானது போல முரகாமியின் எழுத்துக்களிலிருந்தும் அவருக்கான தனித்துவமான பாணியைச் சிலாகிக்கும் காலம் எதிர்காலத்தில் வரும்போலத்தான் தோன்றுகின்றது.

............................

(Oct 13, 2020)