கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

'அரசியல் இஸ்லாம்'

Friday, August 17, 2012


1.
யமுனா ராஜேந்திரனின் 'அரசியல் இஸ்லாம்'  என்கின்ற கட்டுரைகளின் தொகுப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் இஸ்லாமோடு சம்பந்தப்பட்டு எழுதப்பட்ட கட்டுரைகளின் ஒரு தொகுப்பு எனலாம். பாலஸ்தீனப் பெருங்கவியான மஹ்முத் தர்வீஸிலிருந்து, ஈரானிய இயக்குநனரான அப்பாஸ் கியரோஸ்மியின் படங்களைப் பற்றி மட்டுமில்லாது,  ஃபூக்கோ, ழான் போத்ரிலார் போன்றோர் முஸ்லிம் நாடுகளின் மீது முன்வைத்த கருத்துக்களை இடையீடு செய்வதுவரை பல்வேறு தளங்களில் யமுனா எழுதியிருக்கின்றார். இன்றைய இஸ்லாம் பற்றி அறிய விரும்புகின்றவர்களுக்கு 'அரசியல் இஸ்லாம்' என்கின்ற நீண்ட கட்டுரை நல்லதொரு திறப்பெனலாம்.  இஸ்லாமிலிருக்கும் பன்மைக்குரல்களை தலிபானின் அடிப்படைவாதத்தால்  நாம் மூடி மறைக்க முடியாது என்பதற்காகவேனும் 'அரசியல் இஸ்லாமை'யும், 'சதாம் விட்டுச் செல்லும் மரபை' யும் வாசிக்க வேண்டும். அதேவேளை இஸ்லாமை முன்வைத்து ஒரு பகுதியாகப் பரவிய இஸ்லாமிய அடிப்படைவாதத்தை செப்ரெம்பர் பதினொன்றையும், இலண்டன் சுரங்கப் பாதையில் நடந்த குண்டுவெடிப்புக்களையும் முன்வைத்து விரிவாக யமுனா எழுதுகின்றார். அது மட்டுமின்றி ஈரானியப் புரட்சி 60களில் நிகழ்ந்தபோது ஃபூக்கோ முன்மொழித்த கருத்துக்கள், எப்படி பின்வந்த ஈரானிய அடிப்படைவாத அரசினால் நிராகரிக்கப்பட்டு ஈரானியப் பெண்ணியல்வாதிகளும், இடதுசாரிகளும் துடைத்தழிக்கப்பட்டார்கள் என்பதையும் இத்தொகுப்புக் கவனப்படுத்துகின்றது. 

'அழிவின் பின்பான பயணம்' என்கின்ற இலண்டன் சுரங்கப்பாதைக் குண்டுவெடிப்புக்குப் பிறகு யமுனா தான் பயணிக்கும் இலண்டன் சுரங்கப்பாதையினூடாக பயணித்து எழுதுகின்ற கட்டுரை வாசிப்பவருக்கு நெருக்கத்தைத் தரக்கூடியது. இக்குண்டு வெடிப்பிற்கான காரணங்களை எல்லாத் திசைகளிலிருந்தும் அலசும் யமுனா, இறுதியில் 'இம்மாதிரி இளைஞர்களும், தாய்மார்களும் நான் வாழும் இலண்டன் புறநகரில் மட்டுமல்ல பாக்தாத், பலூஜா பேருந்துகளிலும் மேட்ரிட்டிலும் நியூயோர்க் சுரங்க இரயில்களிலும் பயணம் செய்தபடிதான் இருப்பார்கள். நமது கண் முன்பே அவர்கள் மரணமுறுகிறபோது நமது மனம் சுக்கல் சுக்கலாகித்தான் போகிறது' என முடிக்கும்போது நாமிருக்கும் இடத்தின் அமைதிக்காய் மட்டுமில்லை உலகின் பதற்றமிருக்கும் எல்லா நாடுகளிலிருக்கும் மக்களைப் பற்றியும் யோசிக்கவேண்டும் என்கின்ற புரிதலுக்கு வந்திருப்போம். 

கலைஞர்களுக்கு இருக்கக்கூடிய சுதந்திரம் எதுவாக இருக்கும் என்பதை ஒரு அடிப்படைவாதியான தியோ வான்கோ, ஒரு முஸ்லிம் இனத்தவரால் ஹொலண்டில் கொல்லப்பட்டதை முன்வைத்து 'வின்செண்ட் வான்கோவின் இரத்தம்'  என்கிற கட்டுரை எழுதப்பட்டிருக்கின்றது. இஸ்லாமில் பெண்கள் பணிந்துபோதல் பற்றி எடுக்கப்பட்ட குறும்படமான Submissionற்காய் தியோ ஒரு முஸ்லிம் அடிப்படைவாதியால் கொல்லப்படுகின்றார். பெண் ஒடுக்குமுறை குறித்து உரத்துப் பேசப்படவேண்டும் என்பதில் மறுபேச்சில்லை என்றாலும், பெண்களை ஒடுக்குதல் முஸ்லிம் சமுகத்தில் மட்டுமா இருக்கின்றதா ஏனைய மத/இன மக்களிடையே இல்லையா என யமுனா எழுப்புகின்ற கேள்வியும் முக்கியமானது. இக்கட்டுரையில் சீக்கிய சமூகத்தின் வழிபாட்டிடமான குருத்துவாராவில் பாலியல் பலாத்காரமும் கொலைகளும் நடைபெறுகின்றன எனச் சித்தரித்து இலண்டனில் அரங்கேற்றப்பட்ட Dishonourஐ  நிகழ்த்தவிடாது எப்படி சீக்கியர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்பதையும் நாம் கவனித்தாகவேண்டும்.  இறுதியில் அந்நாடகத்தை அரங்கேற்றாது விலத்திக்கொள்வதாக அந்நாடகாசிரியர் தெரிவித்துமிருக்கின்றார். 

இத்தொகுப்பில் யமுனா குறிப்பிடாவிட்டாலும் இதே பிரச்சினைதான் தீபா மேத்தா வர்ணாசியில் 'வோட்டர்' படத்தை எடுத்தபோது இந்து அடிப்படைவாதக் கும்பல் படத்தை எடுக்கவிடாது தடுத்துமிருந்தது. ஆக, முஸ்லிம் மதமென்றில்லை, எல்லா மதங்களும் தம் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களை உதாசீனப்படுத்தி வன்முறையைத்தான் கையாள்கின்றது என்பதை நாம் கவனித்தாக வேண்டும். மேலும் பல்வேறு உதாரணங்களைக் கொண்டு எழுதப்பட்ட இக்கட்டுரை இஸ்லாம் பற்றிய வெறுப்புணர்வில் இருப்பவர்களை சற்றுத் தம் கோணங்களை மீறிச் சிந்திக்க வைக்கும் என்றே நினைக்கின்றேன். அதேபோன்று அடிப்படைவாதத்தை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்கின்ற கேள்வியையும் நாம் கேட்க வேண்டியவர்களாகின்றோம். ஒரு வன்முறைக்கு இன்னொரு வன்முறை எவ்வாறு தீர்வாக அமையாதோ அவ்வாறே ஒரு அடிப்படைவாததிற்கு இன்னொரு அடிப்படைவாதத்தால் நாம் தீர்வுகளைக் கண்டுவிடமுடியாது. இங்கே ஒருவர் முஸ்லிம் எதிர்ப்பைச் செய்து ஒரு அடிப்படைவாதியாக இருக்க, அவரைக் கொலை செய்கின்ற மற்றொருவரும் இன்னொரு அடிப்படைவாதியாக இருக்கின்றார்; இறுதியில் இருவரின் வாழ்க்கையும் பறிபோய்விடுகின்றன என்பதுதான் பரிதாபம். இக்கட்டுரைக்கு 'வின்செண்ட் வான்கோவின் இரத்தம்' என யமுனா தலைப்பிடுவதுதான் சற்றுக் குழப்பமாக இருக்கின்றது. கொல்லப்பட்ட அடிப்படைவாதியான தியோ வான்கோ, வின்செண்ட் வான்கோவிற்கு ஏதோ ஒருவகையில் உறவுக்காரராக இருக்கின்றாரே தவிர, இருவருக்கும் சிந்தனை அடிப்படையில் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றது; இவ்விருவரையும் புதிதாய் அறிகின்ற ஒரு புதிய வாசகருக்கு ஓவியரான வின்செண்ட் வான்கோ பற்றிய தவறான புரிதலை இதுதரக்கூடும்; தலைப்பை மாற்றியிருக்கலாம்.

 2.
ஃபூக்கோ பற்றியும் ழான் போத்திரிலார் பற்றியும் யமுனா எழுதிய கட்டுரைகள் சில புள்ளிகளில் முக்கியமானது என்றாலும் அவை ஏதோ முன்முடிவுகளோடு எழுதப்பட்டதோ என்கின்ற தொனியைத் தருகின்றன. ஃபூக்கோ ஈரானில் கலாசாரப் புரட்சி நிகழும்போது மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றார் என்பதை நாமனைவரும் அறிகின்ற உண்மை. அது பின்னாளில் அடிப்படைவாதத்தை நோக்கி நகர்ந்தபோது அதுகுறித்து வெளிப்படையாக ஃபூக்கோ ஓர் உரையாடலை நிகழ்த்தவில்லை என்பதை நாம் அவர் மீதான விமர்சனமாக முன்வைக்கலாம். ஆனால் ஃபூக்கோ தொடக்கத்தில் தெரிவித்த கருத்துக்களை நாம் விமர்சிக்க முடியாது. எனெனில் இன்று நம்மில் பலர் 'அரபு வசந்தங்களை' வரவேற்றபடிதான் இருக்கின்றோம். அவை நாளை எந்தப்புள்ளியில் போய்ச் சேரும் என்பது எவருக்குமே தெரியாது. அத்தகைய ஒரு புள்ளியிலேயே ஃபூக்கோவும் ஈரானியப் புரட்சியை அவர் விரும்பும் மிகப்பெரும் கலாசாரப் புரட்சியாக பெண்களுக்கு ஓரினப்பாலருக்கு அதிக நன்மைகளை விளைவிக்குமென நம்பி, தன் கருத்துக்களை முன்வைக்கின்றார்.

ஃபூக்கோவின் இந்நம்பிக்கையைப் புரிந்துகொள்ள எனக்கு தெரிதாவே உதவுகின்றார். எனெனில் அவரே 'எதிர்காலம் என்பதே நாம் நினைத்துக்கொண்டிருக்கும் எதிர்காலம் அல்ல' எனக் குறிப்பிட்டு விரிவாகப் பேசுகின்றவர். மேலும் 'எதிர்காலம் கணிக்கக்கூடியதும், திட்டமிடப்படக்கூடியதும், அட்டவணைப்படுத்தக்கூடியதும்.... ஓரளவு எதிர்வுகொள்ளக்கூடியதும்' என்பதை தெரிதா மறுக்கின்றார். இது எதிர்காலம் என்றாலும் எதிர்காலம் என்று நாம் நினைத்துக்கொள்கின்ற எதிர்காலத்தைத் தாண்டிய எதிர்காலமே (future beyond this known future), தான் குறிப்பிடுகின்ற 'எதிர்காலம்' என்கின்றார் ('மற்றதுகளின் வருகைக்காய் காத்திருத்தல்'). அதாவது முற்றுமுழுதாக எதிர்பாராத ஒரு வருகைக்காக காத்திருப்பதைப் போன்றதே எதிர்காலம் என்கின்றார் தெரிதா. ' (http://www.djthamilan.blogspot.ca/2008/02/blog-post_18.html). இதே நிலைப்பாடிலோ அல்லது இதற்கு கிட்டவாகவோ ஒரு எதிர்காலத்தை ஈரானியப் புரட்சியின்போது ஃபூக்கோவும் எண்ணியிருக்கக் கூடும். அதன்வழி தன் கருத்துக்களை முன்வைத்திருக்கவும் கூடும். 

ஆகவே ஃபூக்கோ மீது அவரது ஆரம்பக் கருத்துக்களுக்காய் நாம் விமர்சனம் வைப்பது எந்தளவுக்கு நியாயமானது என யமுனா யோசிக்கவேண்டும். அதே போன்று ழான் போத்ரிலாரைப் பற்றியும் 'பிம்ப அரசியலில்' மிகவும் எளிமைப்படுத்திய பார்வையை யமுனா முன்வைக்கின்றாரோ என எண்ணத் தோன்றுகின்றது.  ழான் போத்ரியாரைப் பற்றி நான் மிகவும் குறைவாகவே வாசித்திருக்கின்றேன். அவரின் ஒரு புத்தகம் பற்றிய என் வாசிப்பை இங்கே (http://www.djthamilan.blogspot.ca/2008/05/blog-post_08.html) பதிவு செய்திருக்கின்றேன். நான் வாசித்த போத்ரிலாருக்கும் யமுனா முன்வைக்கும் போத்ரிலாருக்கும் வித்தியாசங்கள் வாசிப்பில் இருக்கின்றன.


3.
யமுனாவை உயிர்நிழலில் அவரெழுதிய காலங்களிலிருந்து அவதானித்தே வருகின்றேன். அவரின் தொடக்கக்கால கட்டுரைகள் நீளமாகவும் மிகவும் வறட்சித்தன்மையாகவும் எனக்குத் தெரிந்தது என்பதை மறைக்காது குறிப்பிடவேண்டும். அன்றைய காலத்தில் மட்டுமின்றி இன்றும் அப்படியே நீளம் நீளமாகவும் உலர்ந்த தன்மையிலும் எழுதும் இன்னொருவர் புலம்பெயர் தேசத்தில் இருக்கின்றார். அவர் பெயரைக் கூறலாந்தான். ஆனால் தான் மட்டுமே செய்கின்ற புரட்சியைக் குலைக்க வந்த குரங்குகள் என வசை பொழிந்தொரு கட்டுரை எழுதிவிடுவார் என்பதால் அவர் பெயரை இங்கே தவிர்க்கின்றேன். ஆனால் பிறகான காலங்களில் யமுனாவின் கட்டுரைகளை ஆர்வத்துடன் வாசித்து வந்திருக்கின்றேன். என்னைப் பொறுத்தவரை அவரின் கட்டுரை மொழி பின்னாளில் மாறியிருக்கின்றதெனவே நினைக்கின்றேன். யமுனாவின் கட்டுரைகளில் சிலபொழுது விமர்சனங்கள் இருந்தாலும் அவரின் பரந்த வாசிப்பு, பல விடயங்களை ஒரு கட்டுரையில் இணைக்கின்ற நேர்த்தி என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆக நான் பின் தொடர்கின்ற ஒரு கட்டுரையாளர் பற்றிய எனது விமர்சனத்தையும் வைத்தாக வேண்டும் அல்லவா? 

புலம்பெயர்ந்த தேசத்துக்கு வரும் பல இந்தியப் படைப்பாளிகள் அவ்வப்போது சில அதிரடி அறிக்கைகள் விடுவார்கள். சிலர் இங்கே வரும்போது அறிக்கை எறிவார்கள், வேறு சிலர் இந்தியாவிலிருந்தே வெடிப்பார்கள். இதை வெங்கட்சாமிநாதன், இடையில் தேவசகாயகுமார், 'என்றும்' ஜெயமோகன் என இந்த வரிசையில் முன்னணியில் நிற்க அடிபடுபவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள். அந்த எறிகுண்டு எப்படியிருக்குமெனில்  'தமிழகத்திலேயே என்னைவிட வேறெவருமே ஈழப்படைப்புக்களை இந்தளவு விரிவாகவும் ஆழமாகவும் நிறையவும் வாசித்தவர்கள் இல்லை' என்பது. எனக்கு இவ்வாறான 'காமடிகளை'க் கேட்கும்போது, இனி இந்தியாவுக்கு இலங்கையிலிருந்தோ, சிங்கப்பூர், மலேசியாவிலிருந்தோ அல்லது புலம்பெயர்தேசங்களிலிருந்தோ செல்பவர்கள் இந்தியாவில் போய் இறங்கியவுடன், 'ஆமாம், என்னைவிட இந்தியப்படைப்புக்களை வேறெவரும் வாசித்ததில்லை, நாங்கள் கூறுவதே சரி, நீங்கள் ஒருவரும் எதிர்த்து வாய் திறக்கக்கூடாது' என உரத்துச் சொல்லவேண்டும் என நினைப்பேன். அப்போதெனினும் இவர்களின் வாய்த் துடுக்கு அடங்குகிறதா எனப் பார்க்கவேண்டும். ஆம் நண்பர்களே, இறுதியில் அதுதான் நிகழ்ந்தது. அண்மையில் கனடாவுக்கு வந்த யமுனாவும் இவ்வாறான ஒரு அதிரடி 'ஸ்டேட்மெண்டை' வீசினார் எனக் கேள்விப்பட்டபோது.....!
.............

புஷ்பராணியின் 'அகாலம்'

Tuesday, August 07, 2012

-புஷ்பராணியின் ஈழப்போராட்ட நினைவுக்குறிப்புகளை முன்வைத்து-


ஈழப்போராட்டத்தின் சாட்சிகளில் ஒன்றாய், முதன் முதன்முதலாக ஒரு
பெண்ணுடைய அனுபவங்களிலிருந்து 'அகாலம்' முகிழ்ந்திருக்கின்றது. ஈழப்போராட்டத்தின் தொடக்ககால முன்னோடியான புஷ்பராணியைப் பலர் ஏற்கனவே அறிந்திருப்பார்கள்.அவருடையஅனுபவங்களினூடாகவே 'அகாலம்' என்கின்ற இந்நூல் எழுதப்பட்டிருக்கின்றது.1970களில் ஈழத்தில் நடந்த அகிம்சைப் போராட்டங்களில் பங்குபெற்றி அதன் நீட்சியில் ஆயுதம் ஏந்திப் போராடுதலே விடுதலைக்கான ஒரு வழி என்கின்ற ஆரம்பப் புள்ளிவரை வந்த ஒரு செயற்பாட்டாளராக புஷ்பராணி தன்னை இந்நூலில் நிலை நிறுத்திக் கொள்கிறார்

இந்நூலில் 1975ம் ஆண்டு நடந்த உலகத் தமிழாராய்ச்சி படுகொலைகள் பற்றிய விபரங்களை நேரே நின்ற பார்த்த ஒரு சாட்சியாக புஷ்பராணி எழுதுவது மிக முக்கியமான ஒரு பதிவாகும். இதுவரை ஒருசாரார் தமிழாராய்ச்சி மாநாட்டில் இறந்த 9 பேரும் மின்சாரக் கம்பி தாங்கி இறந்தார்கள் எனவும், இன்னொரு சாரார் பொலிஸின் காட்டுமிராண்டித் தாக்குதலால்தான் இறந்தார்களெனவும் தமக்குத் தெரிந்தமாதிரி எழுதிக்கொண்டிருக்கும்போது புஷ்பராணி உள்ளதை உள்ளபடி 'அகாலத்தில்' உரைக்கின்றார். 1975ம் ஆண்டு ஜனவரி 10ல் 'மாநாட்டில் வந்த ஊர்திகளில் ஒரு ஊர்தியில் கட்டப்பட்டிருந்த உலோகத்தாலான கொடிக்கம்பம் மின்சாரக் கம்பியைத் தொட்டதினால் ஊர்தியில் வந்த இருவர் முதலில் பலியானார்கள். அதனால் ஏற்பட்ட குழப்பத்தைக் காவல்துறையினர் பயன்படுத்திக் கொண்டார்கள். மாநாடு குறித்து அரசிற்கு ஏற்கனவே இருந்த புகைச்சல் அங்கே கண்ணீர்ப் புகைக்குண்டுகளாகவும், துப்பாக்கிக் குண்டுகளாகவும் வெடித்தன. மொத்தமாக ஒன்பது தமிழர்கள் அன்று கொல்லப்பட்டனர் ('அகாலம்' 55)'.

இவற்றையெல்லாம் விட, தான் நம்பிய இயக்கத்திற்காய் புலோலி வங்கிக் கொள்ளையின் மூலம் கிடைத்த நகைகளைக் கொழும்புக் கடத்த உதவியதற்காய் புஷ்பராணி கைது செய்யப்பட்டு மிகக்கொடூரமான சித்திரவதை பொலிஸாரினால் செய்யப்படுகின்றார்தன் கடும் சிறை அனுபவங்களினூடும் புஷ்பராணி, தான் நம்பிய இயக்கத்து உறுப்பினர்களை காட்டிக் கொடுக்காது இலட்சியப் பிடிப்புள்ள உறுதியான ஒரு தோழியாக இருந்திருக்கின்றார்பின்பு வெலிக்கடைச் சிறையில் அத்தனை அவலங்களோடும் சிங்களத் தோழிகளோடு அவருக்கு முகிழும் நட்பு மற்றும் அனைவரையும் நேசிக்கும் மிகச் சிறந்த மனிதப்பண்பு என இந்நூலில் புஷ்பராணியின் அனுபவங்களை விரிவாக வாசிக்க முடியும்.

வெலிக்கடைச் சிறைக்கு புஷ்பராணி கொண்டு செல்லப்படும்போது அங்கே கைதிகளாக இருந்த தமிழ் இளைஞர்கள் புஷ்பராணியைச் சித்திரவதை செய்த பொலிஸாரைக் கொலை செய்வோமென சூளுரைக்கின்றார்கள். கூறியது போலவே அந்தப் பொலிஸ்காரர்கள் பின்னாளில் இயக்கங்களினால் கொல்லப்படுகின்றார்கள். இந்நூலில் அச்சம்பவங்களை விபரிக்கும் புஷ்பராணி இக்கொலைகளை ஏற்றுக்கொள்கின்றாரா அல்லது மறுதலிக்கின்றாரா என்பது வாசிப்பவருக்குச் சற்று மங்கலாகவே தெரிகிறது. அதே போன்று நூலை முடிக்கும்போது புஷ்பராணி கூட்டணியினர் மீது அதிகம் சாய்ந்து விடுபவராகச் சென்றுவிடுவதும் சற்று வியப்பாய்த்தானிருக்கிறது. உணர்ச்சியரசியலை ஊட்டி ஒரு தலைமுறையையே ஆயுதங்களின் பக்கம் திரும்பி, என்றுமே நிகழமுடியாத ஒரு பெருங்கனவைத் திணித்தவர்களான கூட்டணியினரை அவ்வளவு எளிதாக ஈழப்போராட்டம் என்னும் வரலாற்றிலிருந்து விடுதலை செய்துவிட முடியாது என்பதை நாமனைவரும் அறிவோம். கூட்டணியினர் ஏனைய இயக்கங்களைப் போல ஆயுதந்தாங்கியவர்கள் இல்லை என்றாலும் அடுத்த தேர்தலைத் தமிழீழத்தில் சந்திப்போம் என முழங்கி, பின்னால் வந்த எல்லா தலைமுறைக்கும் போர் என்னும் சாபத்தை வாங்கித் தந்தவர்கள் அவர்களல்லவா? இன்னும் நூலில் கூட்டணியினர் பலர் தொடக்க காலத்தில் புலிகள் மற்றும் ரெலோவினால கொல்லப்பட்டார்கள் என்பதைப் பதிவு செய்கின்ற புஷ்பராணி பிறகான காலங்களில் கூட்டணியில் இருந்தவர்கள் இலங்கை அரசாலோ அல்லது அதனோடு சேர்ந்தியங்கும் குழுக்களாலோ கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்பதை எங்கும் பதிவு செய்யவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

இவ்வாறான சில விமர்சனங்களுக்கு அப்பாலும், இந்நூலில் பல சம்பவங்களை, போராட்டத்திற்கு தம்மை அர்ப்பணித்து இன்று வரலாற்றில் இல்லாமலே போனவர்களை எல்லாம் விரிவாக புஷ்பராணி பதிவு செய்திருப்பதை மிக முக்கியமானதாய்க் கொள்ளவேண்டும். இறுதியில் புஷ்பராணி 'எனது அன்பான வாசகரே' என்ற அத்தியாயத்தில் 'ஆயுதப் போராட்டத்திற்கான எண்ணக் கருவை எமது சமூகத்தில் விதைத்த முன்னோடிகளில் ஒருத்தி என்றவகையில் நான் உங்கள் முன் வெட்கித்து நிற்கின்றேன். ஆயுதப் போராட்டத்தில் நல்ல போராட்டம், மோசமான போராட்டம் என்று எதுவுமே கிடையாது. ஆயுதம் மோசமானது மட்டுமே. அது எவர் கையிலிருந்தாலும் அழிவைத் தவிர வேறொன்றிற்கும் அது பயன்படாது' என்று கூறுவது கவனத்தில் கொள்ளவேண்டியது. இன்னமும் ஈழத்தில் முடிந்துவிடாத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஏதோ ஒருவகையில் முன்னேடுக்க விரும்பும் அனைவரும் -முக்கியமாய் ஈழத்தில் ஒடுக்குமுறைக்குள் வாழ்கின்ற அடுத்த தலைமுறை- புஷ்பராணியின் நூலிருந்து தனக்கான பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வரலாற்றின் இன்னொரு வட்டத்தில் நுழைந்து மீண்டுமொரு பேரழிவிற்குள் மக்களைக் கொண்டு செல்வதாகவே முடிந்துவிடும் அபாயமே நம் முன்னால் இருக்கின்றது.

புஷ்பராணியின் அரசியல் செயற்பாடு தொடங்குவதே, அன்று கீரிமலையில் புத்தவிகாரை கட்டப்பட்டதற்கும் அதைத் தொடர்ந்து சிங்களக் குடியேற்றங்கள் நடத்துவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தே தொடங்குகின்றது. இன்றும் மகிந்த ராஜபக்சே அதையேதான் இன்னொருவிதமாய்ச் செய்வதாக புஷ்பராணி இந்நூலில் குறிப்பிடுவும் செய்கின்றார். ஆக வரலாறு மீண்டும் ஒரு வட்டத்தில் முடிந்து அதே விதமான இன்னொரு வட்டத்தில் தொடங்குவதை நாம் அவதானிக்க முடியும். ஆனால் தமிழர்கள் தாம் கடந்தகாலத்தில் செய்த தவறுகளை இன்னொரு முறை செய்ய முடியாது. ஒடுக்குமுறைக்கும் அநியாயங்களுக்கும் எதிர்ப்புக் காட்டவேண்டுந்தான் ஆனால் அது கடந்த காலத் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து புதிய சிந்தனைகளின் வழி நகரவேண்டும் என்பதை முன் நிபந்தனையாகக் கொள்ளுதல் வேண்டும்இந்நூலில் இருந்து முக்கியமான ஒரு கற்றலாய் 'உணர்ச்சி அரசியலில்' இருந்து விடுபடுதலாக இருக்கவேண்டும்..இல்லாவிட்டால் இவ்வெதிர்ப்பு அரசியல் எதிர்காலத்தில் எளிதாக வன்முறை அரசியலுக்குள் நுழைந்துவிடுகின்ற அபாயம் இருப்பதை நாமனைவரும் அறிவோம்.

முன்னுரையில் கருணாகரன் குறிப்பிடுவதைப் போல புஷ்பராணி 'தன்னுடைய சாதி, தன்னுடைய குடும்ப நிலைமை, தன்னுடைய திருமண வாழ்க்கை எனச் சகலதைப் பற்றியும் அவர் முற்றிலும் வெளிப்படையாகவே பேசுகிறார். எதற்கும் அவர் கூச்சப்படவில்லை. எதையிட்டும் அவர் தயக்கங்களைக் காட்ட விரும்பவில்லை. எதையும் மறைக்கவேண்டும் என்று அவர் உணரவில்லை. திறக்கப்பட்ட புத்தகமாகவே தன்னுடைய அனுபவங்களை அவர் விரித்து வைக்கிறார்' என்பதை இந்நூலை வாசிக்கும் அனைவருமே எளிதாக அறிவர். இத்தகைய விடயங்களில் இதுவரை ஈழப்போராட்டத்தின் வரலாற்றை எழுதிய ஆண்கள் கூட சற்றுப் பின் தங்கியே நிற்கின்றார்கள் என்பதை ஒரு அவதானமாக நாம் முன்வைக்க முடியும். ஒரு ஆணுக்கு அரசியல் மட்டுமே உலகமாக இருக்கும்போது, ஒரு பெண்ணுக்கு அவளது அரசியலோடு முழு வாழ்க்கையையுமே தொடர்புபடுத்தப்பட்டிருப்பதால் எல்லாவற்றையும் பேசவேண்டியிருக்கின்றது என்பதே யதார்த்தம். அந்த வித்தியாசமே புஷ்பராணியின் 'அகாலத்தை' இன்னும் முக்கியப்படுத்துவதாய் இருக்கின்றது. நம் ஈழப்போராட்ட தலைமை முழுதுமே ஆண்களாலே காலத்துக்குக் காலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருக்கின்றது. ஒரு பெண்ணுக்கு அல்லது பெண்களுக்கு போராடத்தின் தலைமைக்கான வகிபாகம் உரியமுறையில் வழங்கப்பட்டிருந்தால்  எம் போராட்டம் இத்தகைய அழிவுக்குச் சென்றிருக்காதோ எனச் சிந்திப்பதற்கான தொடக்கப் புள்ளியாக புஷ்பராணியின் 'அகாலத்தை' நாம் எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஒரு நேர்காணலில் 'நான் எப்போது அடிமையாயிருந்தேன், விடுதலை பெற' என மிகுந்த ஓர்மத்துடன் கூறும் புஷ்பராணி என்கின்ற தொடக்ககாலப் போராளியிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கின்றது.

அதேபோன்று, நம்பிக்கை தராத இன்றைய காலத்து ஈழத்து நிலைமையை... 'எங்களது முற்றங்களிலிருந்து ஆயுதப்படையினர் எப்போது நீங்குவார்கள் என்பதும் தெரியாது. தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வுகள் கிட்டும் என்பதற்கான அறிகுறிகள் ஏதுமில்லைஇலங்கை அதிபரின் குரலில் சமாதானத்தின் தொனியை அல்லாமல் வெற்றியின் எக்காளத்தையே நான் காண்கிறேன் ( 192)' எனப் புஷ்பராணி எழுதுகின்றார். இது புஷ்பராணியின் குரல் மட்டுமில்லை இன்றைய ஈழத்து யதார்த்தம் அறிந்த பெரும்பான்மையானவர்களின் குரல்களாகவும் இவையே இருக்கின்றன என்பதே உண்மையாகும்.

(நன்றி: 'அம்ருதா, ஓகஸ்ட், 2012)