கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கடிதங்கள்

Monday, January 30, 2006

நினைவுகள்....பிரியங்கள்.....அக்கறைகள்

சில நாட்களுக்கு முன்னர் பழைய குப்பைகளைக் குடைந்தபோது பலவரிய மாணிக்கங்கள் கிடைத்தன. கடிதங்கள்.....ம்....அவை எத்தனை பொழுதுகளில் என்னை உற்சாகப்படுத்தி வாழ்வை நேசிக்கச் செய்திருக்கின்றன. இவற்றின் நுட்பமான வரிகள், எவ்வளவோ துயரங்களை சூரிய ஒளியில் சிதறிய பனித்துளிகளாய் கரைத்து மனதைத் தெளிவாக்கியிருக்கின்றன.

இந்தக் கடிதங்களில் அனேகமானவை ஜந்து வருடங்களுக்கும் முன்பானதும், சில பத்து வருடப் பழமையும் உடையன. இந்தக் கடிதங்களை எழுதிய அனேகர் ஆழமான வாசிப்பும் எழுத்துத் திறமையும் கொண்டவர்கள். ஒவ்வொரு மடல்களிலும், இவர்களின் ஆளுமை என்னை வசீகரித்து வியக்கச்செய்ததுண்டு. எனினும் இவர்களில் அனேகர், பொதுத்தளத்தில் எழுதவேண்டும், விவாதிக்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகமில்லாது ஒரு தெளிந்த ஆற்றைப்போல வாழ்வில் நகர்ந்துகொண்டிருப்பவர்கள். ஏன் எழுதுவதில்லை என்று வினாவுகின்றபோது, எழுத்து, இலக்கியம், விமர்சனம் என்பவற்றைவிட வாழ்வில் இரசிப்பதற்கான விடயங்கள் அதிகமுண்டு என்று கூறி என்னை மெளனிக்கச்செய்பவர்கள். தனிப்பட்டரீதியில் அது குறித்து அவர்கள் மீது சின்னதாய் கோபமும் உண்டு.

இங்கே பதியப்படும் கடிதங்களுக்கு எவரிடமும் உரிய அனுமதி பெறாமலே -இயன்றளவு தனிப்பட்ட விபரங்களை தவிர்த்து- பதிகின்றேன். இதைக் கூட பதிவு செய்யவேண்டும் என்ற ஆர்வம் வந்ததற்கு காரணம், விமர்சிப்பதற்கு ஓடிவரும் என்னைப் போன்றவர்கள், நல்லவிடயங்களை மனந்திறந்து பாராட்டுவதற்கு பின் தங்கி நிற்கின்றோம் என்ற நிலைப்பாட்டை ஒரளவாவது -என்னளவில்- உடைத்துப்பார்க்கவேண்டும் என்பது மட்டுமே.

கடிதங்கள் அழகானவை.... நாமும், நம்மிலும் பிரியம் வைக்கும் மனிதர்களைப் போல!

(1)
எந்த இடமும் எமக்காக உருவாக்கப்படவில்லை. நாம்தான் எமக்கான இடத்தை உருவாக்கவேண்டும். I love Bharathy, அவன் நல்ல கவிஞன் என்பதால். ஆனால் அவன் நல்ல கணவனா, தகப்பனா என்பது கேள்விக்குரியது. கடன் வாங்கிய அரிசியைக் குருவிகளிற்குப் போட்டு ரசித்தது முட்டாள்தனம். வாழ்க்கை யதார்த்தமானது. கவிதைகளை ரசிப்பதோ எழுதுவதோ மட்டுமில்லை அதை வாழ்ந்தும் பார்க்கவேண்டும். தமிழ் தாய்மொழி அதை மறப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைப் போல புகுந்த நாட்டு மொழியை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதும். பல மொழிகள் தெரிவது அறிவுக்கு ஊக்கம் தரும். பாரதிக்கும் ஆங்கிலம், பிரெஞ்சு, சமஸ்கிருதம் இன்னும் சில மொழிகளிலும் நல்ல தேர்ச்சியிருந்தது. இலக்குகளை நிர்ணயிப்பது நாம்தானே. பின்பு ஏன் அது கடினமாகப்போகிறது. கவனக்கலைப்பான்கள் பலவா? காலம் கடந்தாலும் இலக்குகளை அடைவதில் கவனமாக இரு.

உனக்கு ............. வர நல்ல தகுதியிருக்கிறது. ஆனால், 'அதிகம் கதைக்காமல் என்னைக் கவர்ந்தவளென்று' பொய் சொல்கிறாய் தம்பி. ரொம்பக் குழப்பத்தில் இருக்கிறாய் என்பதை உன் கையெழுத்தே சொல்கிறது. புத்தகங்கள் வாசி. கடிதம் எழுது. post பண்ணவேண்டுமென்று கூட அவசியமில்லை. புரிகிறதா? மனதில் இருப்பதை வெளிபடுத்த நல்லவழி கடிதம் எழுதுவதுதான்.

மிக முக்கியமான விடயம். உனக்குக் கிடைத்த சந்தர்ப்பம், இங்குள்ள உன் வயதொத்தவர்களில் ஆயிரத்தில் ஒருவருக்குத்தான். அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள். முதலில் உன்னை நிலை நிறுத்திக் கொள். பின்பு நீ எது செய்தாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.

வாழ்க்கை எப்போதும் அழகானதுதான். சில தேவையற்ற கவிஞர்கள்தான் சோகம் சுகமானது என்று சொல்லி எல்லோரையுஞ் சோம்பறியாக்கிறார்கள். கோபப்படாதே. தியானஞ் செய்யப் பழகு. எழுது எல்லாவற்றையும். Please try to write in English. மொழி கவிதைக்குத் தடையல்ல. Try it.
-----------------------------------------
(2)
நான் சிறுவயதிலிருந்து இன்றுவரையும் எனக்கென்று கடவுளிடம் மன்றாடுவதனால்....
-கடவுளே, நான் பெண் எப்படி இருக்கவேண்டும் என்று நீர் நினைக்கின்றீரோ அப்படி நான் நல்ல பெண்ணாக இருக்க வேண்டும்.
-மற்றவர்களுக்கு help பண்ணவேண்டும். அதற்கு அறிவைத் தாரும். நல்ல வேலையைத் தாரும். அப்பதான் நான் எல்லோருக்கும் help பண்ணமுடியும்.
என்று கடவுளிடம் மன்றாடுவேன்.

நான் மட்டும் அல்ல இப்படித்தான் பலபேர் கடவுளிடம் மன்றாடுவினம் என்று எனக்குத் தெரியும். எப்போதும், நல்ல பிள்ளையாய் இருக்கவேண்டும் என்பதே என் ஆசை. நான் எப்போதும் முயற்சிசெய்து என்னைப்பற்றி சுய அனுதாபம் கொள்வதை தவிர்த்துக்கொள்வேன். சுய அனுதாபம் கொள்வது எனக்குப் பிடிக்காது. அத்தோடு பிறர்முன் அழுவது அதுவும் பெண்கள் அழுவது எனக்கு கண்ணில் காட்டக்கூடாது. எனெனில் புரியாதவர்கள் கண்ணீர் பெண்களின் பலம், பலவீனம் என்பார்கள்.

எனக்கே என்ன சிரிப்பு என்றால் எனக்கு என்னில் சரியான விருப்பம். நேற்று வேலையில் ஒருவர் சொன்னார். கனடா வந்து 4 வருசம் ஒரு boy friend இல்லையென்றால் பொய் சொல்கின்றேனாம். அத்துடன் நான் style ஆக வேறு வெளிக்கிட்டு வாறேனாம். அப்போது நான் எல்லோருக்கும் முன்னால் சொன்ன்னேன். 'ஒருத்தி தன்னைத்தானே அழகுபடுத்தி வருகின்றாள் என்றால் அவள் தன்னைத்தானே விரும்புவதுக்காகவும் இருக்கலாம். not only for boyfriend. because தன்னை நேசிக்க முடிபவர்களால்தான் உலகை நேசிக்கமுடியும்' என்று. அவா இது, 'விதாண்டாவாதம்' என்றா. நான் சொன்னேன், 'அதைத்தான் நீங்களும் செய்கிறீர்கள்' என்று. அருகில் இருந்தவர்கள் வியப்புடன் என்னைப் பார்த்தார்கள். because நான் இவ்வளவும் கதைத்தது எங்கள் supervisorடம்.
-------------------------------------------------------
(3)
இன்று சர்வதேச ஆசிரியர் தினம்! இன்றுதான் முதன்முதலில் பள்ளியில் ஆசிரியர் தினம் மதியபோசனத்துடன் கொண்டாடப்பட்டது. நான் இசையமைக்க, அடிகள் கவிதைகள் புனைய பக்க வாத்தியமாக செந்தூரன் மிருதங்கம் இசைக்க பாடல் பாடினோம். இறுதியாக 'இந்துவின் ஆசிரியர்கள்' என்ற தலைப்பில் நகைச்சுவை நாடகத்தை (தாள லயத்தை) நாம் மூவரும் வழங்கினோம். நான், சகிலா ஆசிரியை, அதிபர் மன்மதன், ஹரிகரன் வாத்தி, சண் சேர் போன்றவர்கள் போல நடிக்க, அடிகள், சுசி ஆசிரியை, பிரியா ரீச்சர், வரதராஜன் மிஸ், சச்சிதானந்தன் ஆசிரியை போல நடிக்க செந்தூரன் பின்னணி இசையும் குரலும் கொடுக்க, விசில் சகிதம் பலத்த கைதட்டல் தோஸ்துகளிடமிருந்து கிடைத்தது.

அந்த தாளலயத்திலிருந்து ஒரு சில பாடல்கள் வருமாறு....
'நிப்பாட்டு Fanஐ நிப்பாட்டு, மின்சாரக் காசை உன் கொப்பரோ கட்டிறது
நிப்பாட்டு Fanஐ நிப்பாட்டு, தம்பிமார் watcher Fees கட்டியாச்சோ....'
-பிரின்ஸி

'சீதமதி குடைக்குள் செம்மை அறங்கிடப்ப Britainனில்
என் புருஷன்Broadcasting பண்ணப்போகிறார்
பிள்ளைகள் கதைக்க வேண்டாம்-குரல்
எனக்குச் சரியில்லை....'
-ரவி ஆசிரியை

'குச்சிவாத்தி நானெல்லோ குச்சொழுங்கை தாண்டிவாறன்....
சொகுசாக நான் வரேல்லை...சொய்சாவில் இருந்து வாறன்'
-ஹரிகரன் வாத்தி

இப்படி எல்லா ஆசான்களினதும் வசனங்களை எழுதப்போனால், கடிதம் 'ஆசான் ஸ்பெஷல்' ஆகிவிடும்.
-----------------------------------------------------------------------
(4)
உமது திறமைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப தகுதி பெறவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் ஏகலைவன் போலாகிவிட்டீர். ........... உம்மை நினைக்கும் போதெல்லாம் Exam hallல் நிற்கும்போது புளியின் கீழ் நின்ற காட்சிதான் நினைவுக்கு வருகிறது. நான் உம்மை அழைத்துக் கதைக்க எண்ணிவிட்டு நாளை கதைக்கலாம் என்றிருந்தேன். அந்த நாள் எனக்கு வரவேயில்லை. எனவே, 'நாளை என்று ஒத்திப்போடுவது நடைபெறாமலும் போகலாம்.' எதையும் ஒத்திவைக்காது அன்றன்று செய்து நற்பிரசையாக பார் போற்ற வாழக் கற்றுக்கொள்ளவும்.
------------------------------------------------------
(5)
'உனக்கான வாழ்வின் பகுதி
எவராலும் அபகரிக்கப்படாதிருக்கின்றதென்பதை
அறிக.'
இவை உங்கள் கவி வரிகள்தான். உங்களுடான சந்திப்பு நிகழ்ந்துபோன இந்த இரண்டு வருடங்களில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படாத, சந்தோசங்கள், துக்கங்கள், சந்தேகங்கள், அவமானங்கள், வலிகள் என எதுவுமேயில்லை என்னிடம். ஆனாலும் நண்பனே சில சமயங்களில் காதுகளை மட்டுமே என் செய்திகளுக்கு வழங்கிவிட்டு எதுவுமே செய்யாமல் எனை தனித்திருக்கச் செய்து, உன் பிரச்சினையை, உன் வலியை, உன் சந்தோசத்தை நீயே முழுதாய் அனுபவி என நீ விலகும் வேளையில் இமைகளைத் தட்டும் கண்ணீரை அடக்க மிகவும் கஷ்டமாய் இருக்கிறது.

உங்களைப் பொறுத்தவரை, 'எனக்குப் பசிக்கிறது, நான் சாப்பிடுகிறேன், உனக்கும் பசித்தால் நீயும் சாப்பிடு. உனக்கேதேனும் சோகமா, சந்தோசமா என்னவொன்றாலும் என்னிடம் சொல்லு எனது செவிகள் உனது வார்த்தைகள் செவிமடுக்க எப்போதும் தயார். ஆனால் அதற்கான solutionsஓ, அன்றேல் எனக்கான இனிய நிமிடங்களையோ அதற்காய் ஒதுக்கலோ சாத்தியமில்லை. உன் சந்தோசத்தை, துக்கத்தை முழுதாய் நீயே பங்கிட்டுக் கொள். எனக்கு எதுவும் வேண்டாம். உனக்காய் நான் பிரார்த்திக்கின்றேன்' அப்படித்தான் இருக்கமுடியும்.

அது உங்கள் இயல்பு. உங்களை எனக்கு ஏற்றமாதிரி மாறச் சொல்லல் மிக மிகத்தப்பு. என் சுயம் இழக்கச் சொல்கையில் எனக்கு எவ்வளவு கோபம் வருகிறது. அப்படித்தானே இருக்கும் உங்களுக்கும். உங்கள் நட்பு எனக்கு தந்த பலத்தை வேறு எதுவும் என் வாழ்க்கையில் தரவேயில்லை. எனக்கென்னவோ நானும் நீங்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவில்லை எனத்தான் தோன்றுகின்றது. ......... பிரச்சினையோ, அன்றேல் ......... உடனான பிரச்சினையோ உங்களிடம் சொன்ன போதெல்லாம் solution எதுவும் சொல்லாமல் வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தீர்கள் நீங்கள். இது உண்மையான நட்பல்ல.
---------------------------------
(6)
மேலும், தங்கள் கடிதத்தில் எனக்கு மிகவும் பிடித்த வரிகளான "எல்லாம் மனதிற்கு பிடித்தமாய் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றே நம்புகிறேன்” என்ற தயோகுணத்தில் இருந்தே நாம் சரிவரப் பேசிக்கொள்ள நிறைய விடயமிருக்கிறது.

எனது நம்பிக்கைகளை, கொள்கையை வழிமொழியாத அல்லது ஏற்றுக் கொள்ளாத ஒருவரது கொள்கையை நாம் எப்படி முட்டாள்தனமென்று கூறமுடியாதோ, அதேபோலத்தான் நாம் இன்று பெரிதுவக்கும் பல விடயங்களும் காலப்போக்கில் வேறொரு பரிமாணத்திற்கு நகர்ந்து எம்மைப்பார்த்து முட்டாள் என்று சிரிக்க வைக்கும். தமிழிலக்கிய, பண்பாட்டுப்பரப்பில் ஞானியின் சிந்தனைகள் போற்றப்பட வேண்டிய தொன்றாக இருப்பினும் அவரது தமிழியம், தமிழ்த்தேசியம் என்ற கருத்துருவங்கள் நெருடலாகவே எனக்குத் தோன்றுகின்றது. மாபெரும் மனிதநேயன் தேசியம் என்ற கற்பிதம் உதிர்ந்து போக வேண்டிய தொன்றாகவே கருதுவான். ஆதியில் இருந்து இற்றைவரை தேசியத்திற்கான தேவைகளும். வரையறைகளும் பாரபட்சமானதாகவும், சுயநலம் சார்ந்ததாகவும் இருப்பது கண்கூடு. சேர, சோழ, பாண்டியர் தம் எல்லைப்பரப்பிற்குள் எதற்காக இறுக்கமான இனத் தனித்துவத்தைப் பேணிக் கொண்டனர் என்று சிந்தித்துப் பாருங்கள். வரி, மானியம், கிரீடம் போன்றவைதான் அவர்கட்கு முக்கியமாகப்பட்டிருக்கும். மாறாக இனம்மாறி அவர்கள் பெண் கொண்ட சூழ்நிலைகளும் சுயநலம் சார்ந்த வழுவாகவே புலப்படும்.

நசுக்கப்படும் இனங்களின் விடிவுக்கு தேசியப்போராட்டம் ஒரு தற்காலிகத் தேவையே தவிர, மானிடர் என்பவர் எல்லைகளைக் கடந்த மனிதநேய ஒன்றல்களுக்குள் அணைத்துக் கொள்வதைத்தான் திரு. ஞானி பெரிதும் நம்பும் மார்க்சியமும் சொல்கிறது. சங்ககாலத்திலேயே கணியன்பூங்குன்றன் என்ற கவிஞன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று எல்லைகள், இனக்குழுக்கள் எல்லாவற்றையும் கடந்து உலகமக்கள் யாவரும் நமது சுற்றத்தாரே என்று பாடுகிறான்.
--------------------------------
(7)
சில நண்பர்கள் அவர்களுக்கான என் வீடு விசாலமானது. எப்போதும் வரலாம் எப்போதும் பேசலாம் எந்த வரையறைகளும் இல்லை. நிரம்ப பிரச்சனைகளில் இருந்த நண்பியுடன் விடிய விடிய கதைத்து பாடசாலை போகாத அநுபவங்களும் உண்டு. ஆதலால்,என் தம்பிகள் பற்றிய கவலைகளை விட இப்போது உங்களைப்பற்றி நிறைய யோசனையாய் இருக்கிறது. நீங்கள் காயமின்றி வெளிவரவேண்டும் அதற்கான எந்த உதவியையும் என்னிடம் கேட்கலாம். நானும் நீங்கள் சந்தோசமாக இருப்பதற்கு உதவியாக இருந்தேன் என்று நினைத்துக் கொள்வேன். எனக்கு இப்படியான நிலை ஏற்பட்டிருந்தால் உதவியிருக்க மாட்டீர்களா என்ன?

எழுதுவதை மட்டும் விட்டு விடாதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். கவிதை வரவில்லை என்றால் கதைக்குப்போங்கள் அதுவும் வரவில்லை என்றால் கனடா வாழ் அநுபவங்களை எழுதுங்கள். எழுத்து எவ்வளவோ விடயங்களை ஆற்றும் என்று நான் நினைக்கிறேன். ...... நீங்கள் மாற வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, ஆதிக்கமான ஒரு ஆணாய் இருப்பதை விட மற்றவர்களை புரிந்து வாழ்வது தான் நல்ல மனிதனாய் இருக்க முடியும் என்று நம்புகிறேன்.
---------------------------------------------
(8)
உனது கவிதைகள் பற்றி - ஆகா ஓகோவென்று புளுகி உன்னைப் பப்பாவில் ஏற்றுவதும் சரியல்ல. அதே நேரம், கவிதையைத் தாக்கி உன்னைப் பாதாளத்தில் தள்ளிவிடுவதும் சரியல்ல. நான் சொல்வேன்: உனது பருவத்துக்கு இது சிறப்பான கவிதை. ஆனால் இதுவே முழுமையான கவிதையல்ல. இன்னும் அனுபவத்தைச் சேர்த்து, சொற்களைத் தேர்ந்தெடுத்து, கவிதையை நீ செதுக்கப்பார். உனது அனுபவத்தினூடாக எழுதப்பார். அறிவால் எழுதாமல் உணர்வால் எழுத முயல். சேரன், இளவாலை விஜயேந்திரன், சு.வில்வரத்தினம், முதலானோரின் கவிதைகளை, பாரதியார், மகாகவி, நீலாவாணன், சண்முகம் சிவலிங்கம் முதலானோரின் கவிதைகளை தொடர்ந்து வாசிப்பது முக்கியமானது. 'சரிநிகர்' பத்திரிக்கையை தொடர்ந்து வாசிப்பது நல்லது. தொடர்ந்து வாசிக்கிறாயா?
-------------------------------------------------
(9)
தாய்மையென்பது பெண்மையின் அடையாளம்தான். என்னால் இன்னொரு உயிரை.., இன்னொரு ஜீவனை உருவாக்க முடிகிறதென்பது எத்தனை உன்னதமானதொரு விடயம். எனது உதிரத்தைக் கொண்டு அதற்கு உணவூட்ட முடிகிறதென்பது எத்தனை அற்புதம். உயிர்.. உயிர்.. இன்னுமொரு உயிர் என்னுடலில் தங்கி, ஊட்டம் பெறப்போகிறது. அதற்கு இந்த உலகத்தை நான்தான் அறிமுகப்படுத்தப் போகிறேன். ஒவ்வொரு உயிரும் எவ்வளவு பெறுமதியானவை. நாளைய உலகமொன்று என்னிலிருந்து உருவாகப் போகின்றது. ஒருகணம் கடவுளாய், இறைவியாய் மாறியதாயொரு உணர்வு. இதை இழக்க நான் தயாரில்லை.

'விடுதலையை எழுதுதல்' என்ற தனது நூலில் மாலதிமைத்ரி இப்படிச் சொல்லியிருப்பார்.
இந்தவுலகில் பெண் மேலாதிக்கம் நிலவுமானால் யுத்தம், உயிரிழப்பு, அழிவு எதற்குமே இடமிருக்காது. ஏனென்றால் ஒரு பெண்ணுக்குத் தெரியும் ஒரு உயிரின் பெறுமதி.. அழிப்பது சுலபம்.. ஆனால் ஒரு உயிரை உருவாக்குவதிலுள்ள சிரமம் பெண்ணுக்குத்தான் தெரியும். இதையேதான் நானும் நினைத்திருந்தேன். மாலதியின் நூலில் இவற்றைப் பார்த்ததும்தான் பெரும்பாலான பெண்கள் இப்படித்தான் சிந்திக்கிறார்களென விளங்கியது.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. எனது கர்ப்பப்பை, எனது சொத்து. வேறு எவனும் அதில் உரிமையெடுக்கவோ, தலையிடவோ நான் அனுமதிக்கப் போவதில்லை.
-------------------------------------------------

ஒன்பது வித்தியாசமானவர்களிடமிருந்து எனக்கு வந்து சேர்ந்த கடிதங்களில் சிறுபகுதிகள்தான் இவை. மேலே எழுதிய கடிதக்காரர்களில் அரைவாசிப்பேருக்கு மேல் இன்று எனக்குத் தொடர்பில்லை. ஆனால் அவர்களது நினைவுகள், எழுத்துக்களாய், சம்பாசணைகளாய் என்றும் எனக்குள் மிதந்துகொண்டேயிருக்கும்.

புளியமரங்களின் கதை

Monday, January 09, 2006

ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

(1)
ஒரு புளியமரத்தின் கதை, சுந்தர ராமசாமியின் முதலாவது நாவல். புளியமரமே முக்கிய பாத்திரமாய் நாவலின் மையவோட்டம் எங்கும் தன் வேர்களையும் கிளைகளையும் பரப்பியபடி நாவல் முழுதும் நகர்கின்றது. எழுச்சிகளையும், வீழ்ச்சிகளையும், குதூகலங்களையும், வக்கிரகங்களையும்- காலத்தால் ஒரு ஊரில் ஏற்படும் மாற்றத்தை- பேசாய்ச் சாட்சியாய் பார்த்தபடி இருக்கிறது, புளியமரம். நாவலின் முடிவில் புளியமரம் அழிக்கப்பட்டாலும், தொடர்ந்தும் அந்தச் சந்தி புளியமர ஜங்ஷன் என்றே அழைக்கப்படுவதாய் குறிப்பிடப்படுவது, மனிதனைப்போலல்லாது புளியமரத்துக்கு என்றும் அழிவில்லை என்பதாய்த்தான் வாசிப்பவருக்குத் தோன்றும். அனேக நவீன கதைகளுக்குள் உட்பொதிந்து இருக்கும் - மாற்றங்களை எப்படி ஏற்றுக்கொள்வது- என்ற வினாவைத்தான் கதைமுழுதும் பாத்திரங்களினூடாக சு.ரா கேட்டபடி இருக்கின்றார். ஒரு கதைசொல்லியாக தன்னையும் சு.ரா நாவலில் இணைத்துக்கொண்டாலும், பிற பாத்திரங்களில் தன் ஆளுமையைக்காட்டாது அவர்களை தம் இயல்பிலேயே விடுகின்றார். அனேக பாத்திரங்களை பலங்களுடன் காட்டுவதற்கு முயற்சிப்பதற்குப் பதில் பலவீனங்களுடன் காட்டத்தான் சு.ரா அதிகநேரம் செலவழிக்கின்றார். அதற்கு அவரது எள்ளல் நடை மிகவும் துணைபுரிகின்றது.

PA140010

(2)
சு.ராவின் புளியமரத்தின்கதையைப் போல, ஈழத்தில் எங்கள் ஊரிலும் ஒரு பழமைவாய்ந்த புளியமரம் இருந்தது. நாவலில் உள்ளதுபோல பல சம்பவங்கள் நான் அறிந்தும் அறியாமலும் அதைச்சுற்றியும் நிகழ்ந்திருக்கின்றது. நாவலிலுள்ள சிறுவர்களைப் போல, நாங்களும் கிளித்தட்டு, கிளிப்பொந்து போன்ற விளையாட்டுக்களை புளியமரத்தடியில் விளையாடியிருக்கின்றோம். பேய்கள், பிசாசுகள் எல்லாம் இரவில் நடமாடச்செய்யும் என்று இரவு நேரங்களில் புளியமரத்தடியை பயந்தபடி பலதடவைகள் ஓடிக்கடந்துமிருக்கின்றேன். பிறகு ஏதோ ஒரு காரணத்தினால் எத்தனையோ ஆண்டுகள் நிரம்பிய புளியமரத்தை வெட்டத்தொடங்கியபோது- ஊரிலிருந்தவர்களின் எதிர்ப்பில்- சில கிளைகள் தறிப்பதுடன் அழிவுவேலை நிறுத்தப்பட்டது. நாவலில் தாமோதர ஆசான் அப்படி ஒரு தடவை புளியமரம் தறிப்பதைக் காப்பாற்றுவதாய் ஒரு சம்பவம் சித்தரிக்கப்படும். எங்களூர்ப் புளியமரத்தடியிலும் (அருகில் வைரவர் கோயில் இருந்தது) கூட்டணியினரின், கொம்யூனிஸ்ட் கட்சியினரின் அரசியற்கூட்டங்களும், கலைப்பெருமனறத்தின் விழாக்களும் களைகட்டியிருக்கின்றன என்றும் சில வருடங்களுக்கு முன் கேள்விப்படவும் செய்திருந்தேன். பிறகொருபொழுதில், அருகிலிருந்த பாடசாலைக் கட்டடங்கள் எலலாம் இராணுவத்தின் குண்டுவீச்சால் சிதைந்துபோனபோதும் புளியமரம் நெஞ்சு நிமிர்த்தி நின்றதைப் பார்த்துச் சிலிர்த்துமிருக்கின்றேன். ஒரு புளியமரத்தின் கதையைப்போல ஒரு விரிவான தளத்தில் கதையை எங்களூர்ப் புளியமரம் தன்னகத்தில் வைத்திருக்காவிட்டாலும், அருகிலிருந்த பாடசாலையின் இரண்டாம் மாடியில் நடக்கும் உயர்தர மாணவர்களின் காதற்கதைகளையாவது தன் கிளைகளால் பார்த்து இரசித்து என்னைப் போன்றவர்களுக்கு பிற்கொருபொழுதில் கூறியிருக்க புளியமரம் விரும்பியிருக்கவும் கூடும். ஆனால் போர் அந்தச் சந்தர்ப்பதை என்னைப் போன்றவர்களுக்கு வழங்கிவிட விரும்பவில்லைப் போலும்.

நாவலின் முடிவில் வரும் பட்டுப்போன புளியமரத்தைப்போல, கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு (2004ல்), -ஊருக்குத் தொலைவில், மாடியொன்றில் நின்று பார்த்தபோது- எங்களூர்ப் புளியமரமும் பட்டுப் பாழாகியிருந்தது தெரிந்தது. என் ஊர்ச்சனம் இல்லா ஊரில் நானும் உயிர்த்திருக்க மாட்டேன் என்ற வைராக்கியமோ அல்லது குண்டு ஏதேனும் விழுந்து தன்னையும் மாய்த்துக்கொண்டதோ தெரியவில்லை. ஒரு பெரும் விருட்சமாய் நினைவில் தங்கியிருந்த புளியமரம், அகண்ட அடிப்பாகம் மட்டும் உயிர்ப்பிழந்து எஞ்சியிருததை நிஜத்தில் கண்டபோது மனது அந்தப்பொழுதில் கனக்கவும் செய்திருந்தது.

(3)
இந்நாவல் மிக மெதுவாகவே நகர்கின்றது (எழுதப்பட்ட ஆண்டு 1966 என்று கணக்கிலெடுத்து வாசித்தால் வேறுவிதமாய்த் தோன்றவும் கூடும்). ஜே ஜே சில குறிப்புக்கள் வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வின் எந்தத்துளியையும் இந்த நாவல் தராதது என்னளவில் மிகவும் ஏமாற்றமாயிருந்தது. அப்படியான ஒரு நிலைக்கு வருவதற்கு, ஜேஜே சிலகுறிப்புக்கள் வாசித்தபோது, சு.ரா குறித்து எந்த விம்பமும் இல்லாததும், எனது வாசிப்பின் ஆரம்ப கட்டத்தில் இருந்ததும் ஒரு காரணமாகவும் கூடும். ஒரு புளியமரத்தின் கதை ஒருமுறை வாசிக்கக்கூடிய நாவல் என்று மட்டுமே கூறமுடியும். இந்நாவலை நோபல் பரிசு பெறத்தகுதியான தமிழ் நாவல் என்று யாரோ ஒரு விமர்சகர் கூறியதாய் பின்னட்டையில் எழுதியிருப்பது சற்று அதிகப்படியானதாகும். சு.ராவின் சிறந்த நாவல் என்று நான் நினைப்பது ஜேஜே சில குறிப்புக்களே தவிர இந்த நாவல் அல்ல.

'திருத்தமாக வேலை செய்யும் சில தோட்டிகளும் இருக்கத்தான் இருக்கிறார்கள்' (ப 76), 'தேவதாசி பரம்பரையில் பூப்பெய்திய குட்டிக்குத் தொழில் நுணுக்கங்கள் படிவது மாதிரி ...'(ப 66) , 'ஒரு கிளையை இழந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது புளியமரம்....இழப்பதற்குப் பல்லிக்கு வாலும், பெண்ணுக்கு கற்பும், மனிதனுக்குக் கொள்கைளும், கடவுளுக்கு முகமூடியும் உண்டு'(..) போன்ற வாக்கிய அமைப்புக்களில் (உற்றுவாசித்தால் நிறையக் கிடைக்கலாம்) சு.ரா இன்னும் சற்றுக் கவனமாய் இருந்திருக்கலாம் போலத்தோன்றுகின்றது; ஆகக்குறைந்தது நான் வாசித்த ஜந்தாவது பதிப்பிலாவது.

Tuesday, January 03, 2006

தனிமையை
ஒரு பூச்செடியாய் வளர்க்கத்தொடங்குகையில்
இலைகளாகவும் கனிகளாகவும்
மலர வைத்தேன்
பகிரமுடியாத என் பிரியங்களை

எமினெமின் குழந்தைப்பாடல்களில்
நெகிழ்ந்து ஈரம் கசிகையில்
ஷகிராவின் இடுப்பசைவில்
கிறங்கி கால்களில் சுருதி சேர்கையில்
தன்னியல்பு மறந்து
கண்சிமிட்டத்தொடங்குகின்றது
செடியும்

மவுனக்கவிதையைப் போல
ஆயிரம் சனங்கள் ஆரவாரிக்கும் சபையிலும்
இதை காவிச்சென்றாலும்
என் வட்டத்துக்குள்
நுழைய அனுமதித்ததில்லை
எங்களைப் பிரித்து
வார்த்தைகள் எழுதவிரும்பும்
எந்த விரலையும்

வருடங்களாய்
எவரையும் அனுமதித்திராத
என் தோட்டமடையும்
புதர்படர்ந்த
ஒற்றையடிப்பாதையில்
நீ மலர்ந்துவந்து
பிரியம் கூறுகையில்
செவியிரண்டும் சிலிர்க்க
ஒரு சாம்பல்நிற முயலாய்
மாறிவிடுகிறது
எனது செடி

வரிவரியாய்
நீ தவறுதிருத்திய
என் கவிதைகளும்
வனப்புடன்
மிதக்கத் தொடங்குகின்றன
அதன் மேனியெங்கும்

வாழ்வைக் கனவாய்
களிப்பவனுக்கு
இதுவும்
பருவக்காற்றாய் தவழ்ந்து வந்து
மனதை நெகிழவைத்து
சடுதியாய்க் கலைந்துபோகும்
இன்னொரு
நெடுந்துயராகவும் இருக்கலாம்.

விலகிச்செல்லும் கணத்தில்
மிருதுவான முயலை
நீ எடுத்துப்போனாலும்
உலர்ந்துபோன செடியையாவது
மீதியாக விட்டுச்செல்க
எனக்கு.

தை 03, 2006