கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மூன்று கவிதைகள்

Thursday, May 22, 2008

(காலம், இதழ்-30 -எஸ்.பொ சிற‌ப்பித‌ழில்- வெளிவந்தவை)

சேற்றில் சேமிக்கப்படும் நேசத்தின் கதகதப்பு

சிக்கலான ஆட்டமொன்றின்
புதிர்களாகும் நாம்
நிசங்களை
சுவரிலேறும் எறும்புகள் இழுத்துச்செல்வதை
கனவுகளெனப் பெயரிட்டோம்

சரசரவென்று வாழையைப்போல
வளர்ந்த நமது அறிதல்
எல்லா விரிசல்களும் சிறுவதிர்வில் தொடங்குவதான வரிகளை
வாழை பொத்தியாய் வெளித்தள்ளியவோர்
பருவமழைநாளில் வடிந்துபோயிற்று

அடியோடு வாழையை இல்லாமலொழிக்க
கீழே வளரும் புகையிலைக்கன்றுகள் விடுவதில்லை
இலைகிழித்து நாருரித்து காற்றின் வசைச்சொல் கேட்டு
நிலைத்திருப்பதன் வேதனையில்
சிறுமீன்குளத்து ஆம்பல்களும் சோர்கின்றன

வோட்டர்பம்ப் இறைக்க
மண்ணெண்ணெய் வாசனை நுகர்ந்து
பாத்திகளில் சேறப்ப
நீரைப்போலச் சுழித்தோடிய சிறுவனுக்கு
குறி ஒரு அடையாளமாவதில்லை

தண்ணென்றிருக்கும்
ஈரப்பலா முலைகளில்
முகம் புதைதிருக்குமென்னிடம்
நீ பிரிந்து போவதற்கான கடைசிவார்த்தைகளை அவிழ்க்கிறாய்
வாசனையற்று உதிர்கின்றன மல்லிகைப்பூக்கள்.

(May 14, 2007)
---------------------------------------
கொழும்பு
(அல்லது A Tale of Hell City)

வந்திறங்கியபோது
எழும்பிய இரண்டு கிபீர்கள்
இது என் நாடல்லவென்ற குரலை
இரைச்சலில் நெரித்துச் செரித்தன
வாசலில்நின்று கப்பம்கேட்டு கடத்திச்செல்லும் சகோதரமுகங்கள்
அந்நியனெனும் அடையாளத்தை
மரணத்தின் மொழியிலென் பயணப்பொதிகளிலெழுதிப்போந்தனர்
இங்கேதான்... இப்படித்தான்... வாழ்ந்துகொண்டிருக்கின்றோமென
தெருக்களில் குருதிதேடியலையும் வெயில்
வீட்டிற்குள் நுழையாதிருக்கும் ப-த-ட்-ட-த்-து-ட-ன்
சாளரங்களை இறுக்கிச் சாத்துகிறாய்
தாபத்தை வியர்வை கரைத்துக்கொண்டிருந்த நிசப்தப்பெருவெளியில்
நெருங்கிய உதடுகளை
வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த சுவர்ப்பல்லி
தீராப்பசியுடன் விழுங்கிற்று
'இனந்தெரியாதோரால்' கொல்லப்பட்ட மூவரின் உடலங்களை.

(Oct 03, 2007)
---------------------------------------
வதை

நா பிடுங்கப்பட்டு
வார்த்தைகள் சிதைக்கப்பட்ட நாளில்
மூன்று சிறகுகளுடைய பறவையொன்று
மொழியைக் காவியபடி பறக்கக்கண்டேன்
என்னைப் பிரகடனப்படுத்துவதென்பது
உனதிருத்தலை மறுப்பதல்லவெனும் கதகதப்பான சொற்களை
காற்றின் நாவுகள் ஈவிரக்கமில்லாது விழுங்கிச்செல்கின்றன
எப்போதுமித்தனிமையும் அலட்சியமும்
யாரையோ காயபடுத்திக்கொண்டிருக்க
மொழியைச் சாம்பர்வானத்தில் தூவிச்செல்லும் பறவைமீது
கல்லெறிந்து தம் வன்மத்தைக் கரைத்துக்கொள்கின்றனர்
மூன்றிலொரு சிறகை இலையுதிர்காலவிலையாய்
நீளுமிரவுகளின் மீது உதிர்க்குமென் பிரியபறவையின் செஞ்சொண்டறியும்:
சொற்களோடு இடையறாது போரிட்டுத்தோற்பதை
தனிமையெனப் பெயரிட்டென்னைத் தேற்று'வதை'.

(Oct 23, 2007)

போத்ரியாரும், 'தீவிரவாதமும்'

Thursday, May 08, 2008

-ழான் போத்ரியாரின் The Spirit of Terrorism & Other Essays தொகுப்பை முன்வைத்து-

நாமின்று நான்காவது உலகப்போர்க் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதாக ழான் போத்ரியார் கூறுகின்றார். முதலாவது உலகப்போரும், இரண்டாவது உலகப்போரும் நேரடியான செவ்வியல் போர் முறைகளைக் கொண்டதுபோலவன்றி மூன்றாம் நான்காம் உலகப்போர்கள் வேறு முறையில் நிகழ்ந்தன/ நிகழ்ந்துகொண்டிருக்கின்றன என்கின்றார். முதலாம் உலகப்போர் ஐரோப்பிய நாடுகளின் மேலாதிக்கத்தையும், காலானியாதிக்கத்தையும் முடிவுக்கு கொண்டுவந்ததுபோல, இரண்டாம் உலகப்போர் நாஸிசத்தை முடிவுக்கு கொண்டு வந்ததென்கின்றார். அதேபோன்று, மூன்றாம் உலகப்போர், பனிப்போரும் (cold war), அதைத் தடுப்பதுமாக நிகழ்ந்தது எனவும், அதன் இறுதியில் கொம்யூனிசம் முடிவுக்கு வந்தது என்ற அவதானங்கள் அவரால் முன்வைக்கப்படுகின்றன. நான்காம் உலகப்போர் உலகமயமாதலின் மூலம் நிகழ்கின்றதெனக்கூறும் போத்ரியார், 'வெற்றி கொள்ளப்பட்ட ஒவ்வொரு உலகப்போரின் பின்னாலும்' நாங்கள் ஒற்றை உலக ஒழுங்கிற்குள் (single world order) செல்ல மிகவும் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றோம் என்பதோடு, நிகழ்ந்துகொண்டிருக்கும் நான்காம் உலகப்போர் பெரும் நெருக்கடிகளை நம் எல்லோருக்கும் கொண்டுவரும் எனவும் எச்சரிக்கிறார்.


போத்ரியார், 'தீவிரவாதத்தை' மீமெய்யின் (hyper-real) மூலம் வரையறுக்க முயல்வதோடு, மேற்கின் தத்துவவியல், அறிவொளிக்காலத்தின் தவறான விளங்கிக்கொள்ளல்கள் மூலம் ஆரம்பிக்கின்றதென்கின்றார். அதாவது அறிவொளிக்காலத்தில் நல்லது x தீயது (Good X Evil) என்பதற்கான ஊடாடல்களே அதிகம் விவாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதைக் கவனப்படுத்துகிறார். 'நல்லதை' எல்லா இடங்களிலும் பரவச்செய்வதன் மூலம் 'கெட்டதை'த் தோற்கடிக்க முடியும் என்று அங்கே சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் உண்மையில் நல்லதும் கெட்டதும் ஒன்றாய்ச் சேர்ந்தே வளர்கின்றது. 'நல்லது' என்பது ஒருபோதும் 'தீயதை' வெற்றிகொள்வதில்லை; அதேபோன்று 'தீயதும்', 'நல்லதை' வெற்றி கொள்வதில்லை. இவையிரண்டும் எதிரெதிரான முனையில், ஆனால் ஒன்றையொன்று சார்ந்து -ஒன்றில்லாது மற்றதில்லை என்பதுமாதிரி- இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆகவே உண்மையில் 'நல்லதை' எவ்வளவுக்கு எவ்வளவு வளர்க்கின்றோமோ அதேயளவு 'தீயதும்' தானாகவே அதனோடு சேர்ந்து வளரத்தொடங்கிவிடுகின்றது என்ற அபாயத்தை நாமனைவரும் மறந்துவிடுகின்றோம் என்கிறார் போத்ரியார். அதற்கான ஒரு எளிய உதாரணமாய் 9/11 பின் ஆப்கானிஸ்தான், ஈராக்கில் நடந்த அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்களைக் குறிப்பிடுகின்றார். 'தீவிரவாதத்தை' அழித்து 'நல்லதை' நிலைநாட்ட எனக்கூறப்பட்ட தாக்குதல்கள் இனனுமின்னும் அதிகமாய் 'கெட்டதை', அதாவது 'தீவிரவாதிகளாய்' மாற வழிவகுத்தது என்கிறார்.

ஒரு வழக்கான பிரபஞ்சத்தில் நல்லதும் கெட்டதும் ஒரு சமநிலையில் (equilibrium) தங்களுக்கான இடங்களில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவ்வாறு குழப்பமடையாமல் இயங்கும் சூழலே உலகின் அரசியல்களுக்கும் அவசியம், ஆனால் அது பனிப்போர்க்காலத்தில் இரண்டு வல்லரசுகளால் பேணிக்காக்கப்பட்ட சமநிலை போன்றது அல்ல என்கிறார் போத்ரியார். ஏனெனில் அவ்வாறான சமநிலை (ஒரு வல்லரசின் மேலாதிக்கம்) குழப்பப்பட்டபோது இன்னொரு வல்லரசின் மேலாதிக்கத்தால் அது சொல்வது/செய்வது மட்டுமே 'நல்லது' என்பதை நாம் எல்லோரும் வலிந்து ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம் என மேலும் குறிப்பிடுகிறார். இவ்வாறான ஒற்றைத்தன்மைக்குள் போனபடியால், கெட்டது நமக்குப் புலப்படாத இடங்களிலிருந்து வளர்ந்து 'தீவிரவாதமாய்' வெடித்துக் கிளம்பியிருக்கின்றது என்பது அவரது கருத்தாகிறது.

இவ்வாறான புள்ளிகளிலிருந்தே 'தீவிரவாதம்' உருவாகின்றது என விளக்க முயல்பவர், இன்று இஸ்லாம் -அமெரிக்காவுக்குப் பதிலாக- மேலாதிக்க நிலையில் இருந்திருந்தால் கூட இஸ்லாமிற்கெதிரான 'தீவிரவாதம்' உருவாகியிருக்கும் எனக் குறிப்பிடுகின்றார். உலகமயமாதலின் துரித வளர்ச்சியால் இன்றைய 'தீவிரவாதம்', அமெரிக்கா X இஸ்லாம் என்ற எல்லையைத் தாண்டிச் சென்றுவிட்டதென கூடவே எச்சரிக்கவும் செய்கின்றார். போத்ரியாரால் முன்வைக்கப்பட்ட, பலரால் மிகவும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட, 'வளைகுடாப் போர் நிகழவேயில்லை' என்பதன் தொடர்ச்சியிலிருந்து போத்ரியார் 9/11 தாக்குதல்களைப் பார்க்கின்றார்.. அதில் அவர், வளைகுடாப்போர் களத்தில் நிகழ முன்னரே, ஊடகங்களால் தீர்மானிக்கப்பட்டு, இப்படியிப்படி நிகழப்போகின்றதென்றது என ஒழுங்கமைக்கப்பட்டுவிட்டது. எனவே அவ்விதத்தில் பார்க்கும்போது, வளைகுடாப் போர் நிகழவில்லை அல்லது 'உண்மையான போர்' நிகழ முன்னரே ஊடகங்களால் போர் நிகழ்த்தப்பட்டு முடிந்துவிட்டதென்கிறார். அவ்வாறு கூறியவர், 9/11 தாக்குதல்தான் இவை எல்லாவற்றுக்குமான தாய்ப் போர் என்கிறார். ஏனெனில் 9/11 போர் எவராலும் எதிர்பார்க்கப்படாத, இப்படி நிகழுமென்ற எந்த சாத்தியங்களுமற்று நிகழ்ந்ததென்கிறார்.

உண்மையில் இன்று மேற்கு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 'தீவிரவாதம்' மேற்கு நாடுகளாலேயே உருவாக்கப்பட்டது. அது எப்படியெனில் ஒரு அமைப்பு தன்னளவில அளவுக்கதிகமான அதிகாரங்களைக் கொண்டிருக்கும்போது, அவ்வமைப்பு தீர்க்கமுடியாத/விடையளிக்க முடியாத பல சவால்களைச் சந்திக்கத் தொடங்குகின்றது. அப்படிப்பட்ட சவால்களின் மூலம் எதிர்முனையில் வளர்ச்சியடைந்தவர்களே 9/11 தாக்குதல்களின் மூலம் மேற்குக்கு எதிர்வினை ஆற்றியுள்ளார்கள் என்கிறார் போத்ரியார். அதன் ஆரம்ப அதிர்வு, கணக்கிட்டுப் பார்க்கமுடியாத எண்ணற்ற விளைவுகளை உலகெங்கிலும் உருவாக்கியிருக்கின்றதென்கிறார்.

இதுவரை தமது ஆட்டத்தை, தமக்கான விதிகளுடன் தம்பாட்டில் ஆடிக்கொண்டிருந்தவர்களை, இத்தாக்குதல் (9/11) மூலம் குழப்பியவர்கள், மேற்கு தனது ஆதிக்கமாய் வைத்திருந்த அதன் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி அவற்றை அவர்களுக்கு எதிராகவே 'தீவிரவாதிகள்' பயன்படுத்தியுள்ளார்கள் என மேலும் கூறுகிறார். அது எப்படியெனில் மேற்குலகின் விமானங்கள், கணனி தொழில்நுட்ப அறிவு போன்றவற்றோடு, தாக்குதலுக்கான நேரம் வரும்வரை அவர்கள் மேற்குலகில் ஒருவராகவே உண்டு உறங்கி மேற்குலகோடு இருந்திருக்கின்றார்கள் (அதாவது இனி தனியே 'தீவிரவாதிகள்' என்று தேடுவதோ, அழித்தலோ முழுதாய் சாத்தியப்படாது அல்லது அப்படி கூறி நடந்துகொண்டிருக்கும் 'தீவிரவாதத்திற்கான போர்' ஒரு ஏமாற்று வித்தையே என்பதைப் போத்ரியார் கவனப்படுத்த விரும்புகின்றார் என்பதாகவும் நாம் வாசித்துக்கொள்ளலாம்). உலகின் வர்த்தக மையமாகக் கொள்ளப்பட்ட இரட்டைக் கோபுரங்களின் மீது துல்லியமாகத் தாக்குதல்கள நடத்தி, உலகமயமாதலிற்கும், மேற்கின் முதலாளித்துவத்திற்கும், அதன் கலாசாரத்திற்கும் எப்போதும் எங்கேயும் தாக்குதல்களை நடத்திக் குழப்பமுடியும் என்பதை 'தீவிரவாதிகள்' நிரூபித்துள்ளார்கள் என்பதை போத்ரியார் குறிப்பிடுகிறார்.

மேற்குலகந்தான் தீவிரவாதத்தை உருவாக்கியது என்று விவாதிக்கும் -இத்தொகுப்பிலுள்ள -The spirit of Terrorism & Requiem for the twin towers -ஆகிய கட்டுரைகளுக்காய், போத்ரியார் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றார் என்று பலரால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோது அவர் அதை மறுத்திருக்கிறார். 'நான் ஒருபோதும் இவ்வாறான கொலைகாரத் தாக்குதல்களை விதந்து உரைத்ததில்லை; அது முட்டாள்தனமானதுங்கூட. தீவிரவாதம், ஒடுக்குதலுக்கும், முதலாளித்துவதற்கும் எதிராகப் போராடக்கூடிய ஒரு புரட்சிக்குரிய வழியுமல்ல. அது எந்த வகையான கருத்தாக்கத்தையோ, ஒடுக்குதலுக்கு எதிராய் போராடக்கூடிய உரிய வழியைக் கொண்டதோ அல்ல, இன்னுஞ் சொல்லப்போனால அடிப்படைவாத இஸ்லாமால் கூட, இதை விளங்கப்படுத்த முடியாது. நான் எதையும் பெருப்பிக்கவில்லை, எவரையும் குற்றஞ்சாட்டவுமில்லை, எதையும் நியாயப்படுத்தவுமில்லை. நான், எல்லைகளற்று விரிந்து கொண்டிருக்கும் உலகமயமாதல் அதன் அழிவிற்கான காரணங்களைத் தனக்குள் உருவாக்கத் தொடங்கிவிட்டதென மட்டுமே இந்நிகழ்வுகளின் மூலம் (9/11) ஆராய முயன்றிருக்கின்றேன்' என்கிறார்.

போத்ரியாரின் இந்த நூலைப்போலவே, நோம் சோம்ஸ்கியின், 9/11 நூலும், அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட தீவிரவாதம் குறித்து மிக விரிவாக -நேரடியாக- பேசுகிறது 1995-ஒக்லஹோமா குண்டுவெடிப்பில் அமெரிக்க புலனாய்வுத்துறை குண்டு வைத்தவருக்கும், இஸ்லாமுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்று கண்டுபிடிக்க மிகவும் பிரயத்தனப்பட்டது எனவும் அவ்வாறு ஒரு சிறு துரும்பு கிடைத்திருந்தால் கூட, அப்போதே அமெரிக்கா எண்ணெய் வளமிருக்கும் ஏதேனுமொரு இஸ்லாமிய நாட்டை ஆக்கிரமித்திருக்கும் என்றும் சோம்ஸ்கி குறிப்பிடுகிறார். இன்னும் ஒக்லஹோமா குண்டுவெடிப்பு நிகழ்த்தியவரை தனியே பிரித்தெடுத்து அவரைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியது போலவன்றி ஏன் 9/11 தாக்குதலை முழு இஸ்லாமிற்கும் எதிரான போராக பிரகடனப்படுத்தி நாடுகளை ஆக்கிரமிக்கவேண்டும் எனவும் சோம்ஸ்கி கேட்கச் செய்கிறார். இவ்வாறான முரண்பாடுகளை, விம்பங்களைப் பெருக்குவதில் ஆர்வங்காட்டும் ஊடகங்கள் கவனிக்காது, ' தீவிரவாதத்திற்கான போர்' என்று அலறிக்கொண்டே பார்க்கும்/கேட்கும் எங்களையும் விம்பங்களின் உலகில் வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன என்பதும், நாமும் அவையேதான் உண்மையென நம்பிக்கொண்டிருப்பதுந்தான் எவ்வளவு கவலையானது.


...தொடர்பாய் வாசித்தவை/உதவியவை:
(i) 9/11, Noam Chomsky

(ii) America, Jean Baudrillard
(iii) Baudrillard, Globalization and Terrorism, Douglas Kellner
(iv) போத்ரியாவை மறந்துவிடுங்கள், ரவிக்குமார் (காலச்சுவடு)
(v) ஐந்தாண்டுக்காலப் போர்-2,
நாகார்ஜூனன் (திணை, இசை, சமிக்ஞை)

(வைகறைக்காய் எழுதியது)

நினைவுகள், நிகழ்வுகள், விசனங்கள்

Thursday, May 01, 2008

சிறுவர்களுக்கான புத்தகங்கள் இப்போது எந்தளவில் வெளிவந்துகொண்டிருக்கின்றன என்று அவ்வப்போது யோசித்துப் பார்ப்பதுண்டு. தமிழில் வந்த அம்புலிமாமா, கோகுலம், இரத்தினபாலா, ராணி கொமிக்ஸ் (காமிக்ஸ்), முத்து கொமிக்ஸ், லயன் கொமிக்ஸ், மற்றும் வாண்டு மாமா, அழ. வள்ளியப்பா(?) போன்றவர்களின் நூற்களோடு, ராதுகா பதிப்பகத்தால் மிக நேர்த்தியாய் பதிப்பிக்கப்பட்ட சோவியத்து சிறுவர் இலக்கியங்களுக்கும் எனது சிறுவயது வாசிப்பில் முக்கிய இடமுண்டு. அதேபோன்று யாழ்ப்பாணத்திலிருந்து பொ.ஜங்கரநேசனால் வெளியிடப்பட்ட நங்கூரமும், செங்கை ஆழியான் எனப்படும் செ.குணரத்தினம் ஆசிரியர்களில் ஒருவராய் இருந்த அறிவுக்களஞ்சியமும் நினைவில் வருகின்றன. தொடர்ச்சியாக போர்மேகங்கள் மூடப்பட்டிருந்த காலகட்டத்தில் இவையெல்லாம் வாசிக்கக் கிடைத்திருக்கின்றன என்பது ஒரளவு வியப்புக்குரிய விடயந்தான். பாடசாலையிலும் சில பாடங்களில் முதலிடம் பெறும்போது பரிசளிக்கும் வைபவத்தில் அதிகமாய் சோவியத்து சிறுவர் நூற்களையே பரிசாக வழங்குவார்கள்.. மேலும் எனது சகோதரர்களும் வாசிப்பில் விருப்புடையவர்களாய் இருந்ததால் அவர்களின் சேகரிப்பிலிருந்து எனக்கு இவ்வாறான சஞ்சிகைகள்/புத்தகங்கள் கிடைப்பது இல்குவாகவும் இருந்தது (அப்படி படங்களைப் பார்த்து பார்த்து -ஆங்கிலம் அவ்வளவு பரீட்சயமில்லாது- விளங்கிக்கொள்ளமுயன்ற புத்தகங்கள் ரின்ரின்னுடையவை).

இன்னுஞ் சொல்லப்போனால் போர்ச்சூழலுக்குள் அள்ளுப்பட்டு திரிந்தாலும், போரை நேரடியாக அறிமுகப்படுத்தியது சோவியத்து இலக்கியங்களே என்றுதான் கூறவேண்டும். முழங்காலைத் தாண்டிய நீண்ட அங்கிகளை (coats) அணிந்தபடி நீண்ட துவக்குகளை (ஏகே47) நீட்டியபடி இருக்கும் வீரர்களை முதலில் தரிசித்ததும் சோவியத்து இலக்கியங்களிலேயேதான். கிராமம் கிராமமாய் செஞ்சேனையினர் (Red Army) கால்நடையாகவும், குதிரைகளிலும் அணிவகுத்துப்போகும்போது அவர்களின் பின்னால் போவது மாதிரியும், நாம் மாட்டுப்பட்டுப்போன போரிலிருந்து எங்களை விடுவிக்க எமது போராளிகள் செஞ்சேனை வீரர்களைப்போல அணிவகுத்து வருவார்களெனவும் -முக்கியமாய் இந்திய இராணுவக் காலத்தில்- கனவுகள் கண்டிருக்கின்றேன்.

இவ்வாறான சிறுபராயத்து நினைவுகளை மீண்டும் கிளர்ந்தெழச் செய்தது சரவணனின் ஏழுநிறப்பூ என்ற வலைப்பதிவு. அதன் நீட்சியில், இன்றைய கால சிறுவர்களுக்கு எங்களுக்குக் கிடைத்ததுபோன்று அல்லாது, அவர்கள் வயதுக்குரிய சஞ்சிகைகள்/நூல்கள் மிக அரிதாகக் கிடைக்கின்றன என நண்பரொருவருடன் கவலைப்பட்டுக் கதைத்துக்கொண்டிருந்தேன். எனது அண்ணா ஒருவரின் வீட்டுக்குப்போகும்போதெல்லாம், அவர்கள் வீட்டில் நிரம்பியிருக்கும் அற்புதமான வடிவமைப்பிலிருக்கும் ரஷ்ய/உக்ரேனிய சிறுவர் நூற்களைப் பார்க்கும்போது, ரஷ்ய மொழியில் பரீட்சயமுள்ள அவரை, இக்கதைகளை மொழிபெயர்த்துத் தாருங்கள் -எப்போதாவது ஒருகாலத்தில் வெளியிடமுயற்சிக்கலாம்- என்று அடிக்கடி தொந்தரவுபடுத்திக் கொண்டிருப்பேன்.

தமிழில் என் மனதுக்கு மிக நெருக்கமான மொழிநடையைக் கொண்டவரான எஸ்.ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் வந்த, அலிஸூம் அற்புத உலகமும் நூலை வாசித்தபோது அதன் எழுத்துநடை வறட்சியாக இருந்தது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. பிறகு சிறு சிறுகதைகளை மொழிபெயர்த்து வந்த எஸ்.ராவின் 'கால் முளைத்த கதைகள்' தொகுப்பை, கொழும்பில் அக்காவின் மகளுக்கு வாங்கிக்கொடுத்தபோது அதை முழுமையாக வாசிக்க முடியாமற் போனாலும் -வாசித்தளவில்- அது எனக்குப் பிடித்திருந்தது. ஜெயமோகனின் பனிமனிதன் குறித்து இரண்டு வேறுபட்ட கருத்துக்களைக் கேட்டிருக்கின்றேன். எனினும் நெருங்கிய நண்பரொருவர் ஜெயமோகனை பனிமனிதனில் வாசிக்கத் தொடங்கி வந்த ஆர்வத்தால், ஜெயமோகனின் மற்ற நாவல்களையும் வாசித்து அவரது எழுத்து நடையை தொடர்ந்து வியந்துகொண்டிருப்பவர் என்றபடியால், நல்லதொரு வாசிப்பனுபவத்தை சிறுவர்களுக்கு பனிமனிதன் கொடுக்கக்கூடியது என்றே நம்புகின்றேன். அதுமட்டுமில்லாது நீயும் இப்படி என்னைப் போன்ற வாசிப்புப் புள்ளியிலிருந்து தொடங்கியிருந்தாய் என்றால் ஜெமோவை இந்தளவுக்குத் திட்டிக்கொண்டிருக்கமாட்டாய் என்றும் அந்த நண்பர் கூறுவார். என்ன செய்ய, நான் ஜெயமோகனை வாசிக்கத் தொடங்கியபோது அவரது நாவிற்குள் விஷ்ணு புரண்டு படுக்கத்தொடங்கிய கலிகாலமாயிற்றே!

மேலும் தமிழில் பதிப்பிக்கப்படும் சிறுவர் நூற்களை, இங்கே (புலம்பெயர்ந்த நாட்டில்) பிறந்த சிறுவர்களுக்கு அப்படியே வாசித்துக் காட்டவும் முடியாது. கிழமைக்கு ஒருமுறை -சில மணித்தியாலங்கள்- தமிழ் படிக்கப்போகும் அண்ணாவின் எட்டு வயது மகனுக்கு தமிழைச் சொல்லிக் கொடுககும்போதுதான் தமிழ் எவ்வளவு கடினமான முறையில் கற்பிப்பதற்கு இருக்கின்றது என்று விளங்குகின்றது. எனினும் கிழமைக்கு ஒருமுறை தமிழ் படித்தாலும், அவனுக்கு இருக்கும் ஆர்வத்தால் தமிழை ஒரளவு எழுதவும் வாசிக்கவும் செய்கின்றான் என்பது ஆறுதல் தரும் விடயம். அண்மையில் தெரிதா பற்றிய கட்டுரையை கணனியில் தட்டிக்கொண்டிருந்தபோது, நான் எழுதியவற்றைத் தான் வாசிக்கப்போகின்றேன் எனத் தட்டுத்தடுமாறி ஒரு பந்தியை வாசிக்கத் தொடங்கியிருந்தான். அதைத் கேட்டுக்கொண்டிருந்த அம்மா, 'உனது தமிழ் மானாட மயிலாடவில் நமீதா கதைக்கும் தமிழ் போல இருக்கிறது' என்றார் (அப்படியென்ன நமீதா தமிழ் கதைக்கிறார் என்று மானாட மயிலாடவின் ஒரு எபிசோட் பார்த்தபோது பூஜா நடுவராக வந்திருந்தார் என்பது வேறு விடயம்).

ஈழத்தில் படித்த பாடசாலையில் நூலக வசதி இருந்தாலும், ஓ/எல் வகுப்பு வரும்வரை அதற்குக் கீழேயுள்ள மாணவர்களை அதைப் பயன்படுதத விடமாட்டார்கள் (யாழ்ப்பாணத்துக்காரர்களுக்கு இருக்கும் சொத்துச் சேகரிக்கும் பழக்கம்போல அல்லது வைக்கல் பட்டறை நாய்போல எனவும் இதை வாசிக்கலாம்). அதுமட்டுமில்லை, வகுப்பறையில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கூட, புத்தகங்களை வாசிக்க விடமாட்டார்கள். அவ்வாறு வாசிக்கும்போது பின் பக்கத்தால் வந்து உளவறிந்த ஆசிரியர்களிடம் பிடிபட்டு அடிவாங்கிய நாட்கள் நிறையவுண்டு. நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே பாடசாலை சொந்த இடத்தை விட்டு அகதியாய் எங்களோடு அலையத் தொடங்கிவிட்டது. வாசிப்பதற்கு நூலகம் என்ற ஒன்றில்லாதபோது, ஏன் நானே தொடங்கக்கூடாது என்று நடமாடும் நூலகம் ஒன்றை நான் இன்னொரு நண்பனுடன் சேர்ந்து ஆரம்பித்திருந்தேன். பன்னிரெண்டு பதின்மூன்று வயதிற்குள் எனக்கு கொமிக்ஸ் புத்தகங்கள் மீதிருந்த ஆர்வம் போய்விட்டிருந்தது. எனவே என்னிடமிருக்கும் கொமிக்ஸ் புத்தகங்களை விற்றுவிட்டு அதில் வரும் காசைக்கொண்டு அறிவுக்களஞ்சியம், நங்கூரம், தளிர் (இந்தியாவிலிருந்து வந்ததென நினைக்கிறேன்) போன்ற சஞ்சிகைகளையும் பிற நூற்களையும் வாங்கத் தொடங்கினேன். நூலகத்திற்கு அல்பேர்ட் ஐன்ஸ்டீன் என்று கூட பெயர் வைத்திருந்தேன்.

பழைய கொமிக்ஸ் புத்தகங்களை தனக்குரியதாக வைத்திருக்க விரும்பிய நண்பனொருவன் ஆர்வத்தில் நிறைய வாங்கி, பின் பணவசதியில்லாததால் முழுப்பணத்தைத் தரவுமிலலை. அவனுக்குத் திருப்பித் தர பண்ம் இல்லையென்பதை நேரடியாகச் சொல்லாமல் அவன், நாங்கள் பணத்தை நிலத்தில் புதைத்து வைத்திருக்கின்றோம் தோண்டியெடுத்தவுடன் திரும்பித் தருகின்றேன் என்று காரணம் சொன்னதை உண்மைதானென அந்தப்பொழுதில் நமபியதை நினைக்க இப்போது சிரிப்பாக இருக்கிறது. எனினும் அப்படியும் மனிதர்கள் யாழில் இருந்தார்கள் என்பதைப் பின்னாட்களில் அறிந்திருக்கின்றேன். யாழில் 95ல் நிகழ்ந்த இடப்பெயர்வின்போது தங்களில் பலர் நகை/பணம் என்பவற்றை தங்கள் வளவில் புதைத்துவிட்டு வந்திருந்தோம் என்று நண்பர்கள் இஙகத்தைய வளாக வாழ்வில் சொல்லியிருக்கின்றார்கள். நல்லவேளை நாங்கள் இடம்பெயர்ந்தபோது அதைச் செய்யவில்லை. எங்களிடம் பணமும் நகையும், எங்கள் வீட்டு வளவை விட அளவுக்கதிகமாய் இருந்ததால் புதைக்க இடங்காணாது என்றுதான் எங்களோடே எடுத்து வந்திருந்தோம்.

எமது நடமாடும் நூலகத்திற்கு நிதித்தேவையை நிவர்த்தி செய்வற்காய் இரண்டு விடயங்களைச் செய்திருந்தோம். ஒன்று மாதந்தோறும் பொது அறிவுப்போட்டி நடத்துவது. ஒவ்வொரு வினாக்கொத்துக்கும் (question paper) இரண்டு ரூபாய் அறவிடுவது. அதேபோன்று புத்தகங்கள் திருப்பித் தருவது தாமதமானால் தாமதக் கட்டணம் என்று ஒன்றை வசூலிப்பது. புத்தக வாடகைக்கு இரண்டு ரூபாய் என்றால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ரூபாய் என்று கந்துவட்டிக்காரனே திகைக்கும்படி கட்டணம் அறவிட்டிருந்தோம். காலம் பிந்திய புத்தகங்களோடு எங்களுக்கு பிடித்த பெண்கள் சிரித்தபடி நின்றாற்கூட, கட்டணம் வசூலிப்பதில் ஒருபோதும் பின்னின்றதில்லை (பெண் என்றால் பேயும் இரங்கும் என்ற சொல்லாடலை நாங்கள் இந்த விடயத்தில் தவறென்றுதான் நிரூபித்திருக்கின்றோம் போலும்). நான் யாழில் இருந்தவரை இந்த நடமாடும் நூலகம் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள இயங்கியிருந்தது. பிறகு மற்ற நண்பர்கள் அக்கறை காட்டவில்லை என்பதைவிட, பின்னாளில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் எதிர்ப்பாலினரை அறிந்துகொள்வதற்கு, அதிக நேரம் வேண்டியிருந்ததால் செயலிழந்துபோயிருக்கலாம் எனத்தான் தோன்றுகின்றது.


................
அண்மைய நளினி - பிரியங்கா சந்திப்புப் பற்றி பரபரப்புச் செய்திகளுக்குப் பஞ்சமேயில்லை. விகடன், குமுதம் போன்ற சனங்களுக்குத் தீனிபோட்டு தமது வணிகத்தைப் பெருக்கிக்கொள்ளும் சஞ்சிகைகள் பற்றிச் சொல்லத்தேவையேயில்லை. விகடனின் முகப்பில் வந்த தலைப்பே, இப்படித்தான் 'நளினி....துரோகி நீ : கனல் கக்கும் கணவர் முருகன்.' சரி தலைப்பு இப்படிப் போட்டிருக்கின்றார்களே, முருகனையோ நளினியையோ நேரடியாகச் சநதித்திருக்கின்றார்கள் போலும் என்று உள்ளே தேடினால் அப்படி எதுவுமேயில்லை. ஏதோ சிறைச்சாலைக் காற்றுவாக்கில் கேள்விப்பட்டதை வைத்து, முருகன் நேரடியாகச் சொன்னதாய் எழுதுவதைப் பத்திரிகா தர்மம் என்று நியாயப்படுத்துபவர்களைக் கூப்பிட்டு -உங்களுக்குச் சம்பந்தப்பட்டவர்களாயிருப்பின் இப்படி எழுதுவீர்களா- என்று கோபத்துடன் கேட்கத்தோன்றுகின்றது. கிட்டத்தட்ட 18 வருடங்களாக சிறைக்குள்ளிருப்பவர்களின் உளவியல் குறித்த எந்தக் கரிசனமுமில்லாது இவ்வாறு எழுதும் அரைகுறைகளை வேறு என்ன தான் செய்வது? இதில் நகைச்சுவை என்னவென்றால் அதே வாரம் வந்த குமுதத்தில் நளினியின் பேட்டி வருகின்றது. அதில் இது வடிகட்டின பொய் என்றும், முருகனோடு உறவு சுமுகமாய் இருப்பதாகவும். முருகன் இச்சந்திப்புக்காய் நன்றி சொல்லி பிரியங்காவுக்கு கடிதம் எழுதியதாகவும் நளினி சொல்கின்றார். ஆக, முன்னட்டையில் -சம்பந்தப்பட்ட முருகனோ நளினியோ நேரடியாகச் சொல்லாமல்- 'நளினி....துரோகி நீ' எனப் பிரசுரித்த விகடன் இப்போது என்ன செய்யப்போகிறது?

நளினி - பிரியங்கா சந்திப்புப் பற்றி சாரு நிவேதிதா
நல்லதொரு கட்டுரை எழுதியுள்ளார். சாருவோடோ, இரவிக்குமாராடோ முரண்படுவதற்கு எத்தனையோ புள்ளிகள் இருந்தாலும், இவ்வாறான விடயங்களில் சாருவோ, இரவிக்குமாரோ வேறு சிலரை மாதிரி அபத்தமாய் உளறிக்கொண்டிருக்கமாட்டார்கள் என்பது அவர்களைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம்.

'பரிக்ஷா' ஞாநிதான் இன்னுந் திருந்துகின்றபாடில்லை. சுபவீக்கு எழுப்பிய கேள்விகளுக்கு அதி அசுரன் போன்றவர்கள் கொடுத்த பதிலடிக்கு மவுனம் சாதித்துக்கொண்டு அடுத்த வேலைக்கு/வேளைக்கு நகரும் ஞாநிகளுக்கு, இப்போது ஏன் ஜெயவர்த்தனாவைக் கொல்லாது ராஜீவ்வைக் கொன்றார்கள் என்று அதிபுத்திசாலித்தனத்தமான கேள்வி ஞானம் வருகின்றது ('ஜெயவர்த்தனாவுக்கு எதிராக ஒரு கொலை முயற்சி கூட புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாக நான் எங்கும் படித்ததில்லை (குமுதம்: ப 140)).

ஞாநி போன்றவர்களின் முக்கிய பிரச்சினையே ஒன்றைப் பேசும்போது மற்றதைப் முன்னிறுத்திப் பேசுவது என்பதே. சுபவீ பிறதோழர்களோடு சேர்ந்து சிங்கள இயக்குநனரைத் தாக்கியிருந்தால் அது குறித்துப் பேசவேண்டுமே தவிர, ஏன் நீ அதைத் செய்யவில்லை. அதைச் செய்தால்தான் இதைச் செய்யலாம் என்பது மாதிரியான 'அறிவுஜீவி'க்கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தால் நாம் சமூகத்தில் எந்த விடயத்துக்கும் எதிர்வினை செய்யமுடியாது (சிங்கள இயக்குநரைத் தாக்கியது எனக்கு உடன்பாடில்லை என்பதையும் குறிப்பிட்டுவிடுகின்றேன்). இப்படி கேட்டுக்கொண்டிருப்பதற்குத்தான் அதி அசுரன்
பலமான அடிபோட்டிருந்தார்...

தீண்டாமை என்பது இரட்டை டம்ளரில் மட்டுமல்ல. கோவிலிலும் இருக்கிறதல்லவா? இந்து மதத்தில், சாஸ்திரங்களில், பார்ப்பனர்களிடத்தில் ஒட்டு மொத்தமாக இருக்கிறதல்லவா? இவற்றை எல்லாம் ஒழிக்கச் சொல்ல வேண்டியதுதானே?

ஞானி அவர்களே நீங்கள் எப்படிக் கேட்டிருக்க வேண்டுமென்றால், துசாரா பெய்ரீசை தாக்கிய சுபவீ, சாதிவெறிக்கு அடையாளமான பார்ப்பனர்களின் பூணூலை அறுப்பாரா? சங்கர மடத்திற்கு வெடிகுண்டு வைப்பாரா? சங்கராச் சாரியை வெட்டிக் கூறுபோடுவாரா? மனு நீதி நூலை ஊர்வலமாக எடுத்துச் சென்று எரிப்பாரா? இராமயணத்தைச் வீட்டு வீட்டுக்குச் கொடுத்து செருப்பால் அடிக்கச் செய்வாரா?

இப்படி எல்லாம் ஒரு நாளும் ஞாநி யாரைப் பார்த்தும் கேட்டதில்லையே ஏன்? இரட்டைக்குவளை உடைப்பு என்ற தீண்டாமையோடு மட்டும் மோதச் சொல்கிறீர்களே, தீண்டாமைகளுக்கு அடிப்படையான சாதியோடும், மதத் தோடும், மதத் தலைர்களோடும், கடவுளோடும் போராடச் சொல்லாதது ஏன்?

இப்போது ஞாநி தினமும் பொழுதும் கருணாநிதியைச் சொறிந்து விளையாடிக்கொண்டிருக்கும்போது, நாங்களும், ஞாநி இந்தந்த விடயங்கள் இன்னும் தீவிரமாக இருக்கின்றன, எனவே அவற்றைப் பேசிவிட்டு வந்தால்தான் உங்களுக்கு கருணாநிதியை விமர்சிக்க உரிமை இருக்கின்றது என்று சொன்னால் பரிக்ஷா ஞாநி காது கொடுத்துக் கேட்பாரா? எங்கே இடங்கிடைக்கிறதோ அங்கே தான் சொன்ன/கடைப்பிடித்த கொள்கைகளை கைகழுவிவிட்டு, உள்நுழையும் நுட்பந்தெரிந்த ஞாநியிடம் இப்படியெல்லாம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருப்பது கூட சற்று அதிகப்படியோ என்றுதான் தோன்றுகின்றது.

ஒரு கொலையை, பழிக்குப் பழி வாங்கலைக் கண்டிக்கலாமே தவிர, ஏன் ஜெயவர்த்தனாவைக் கொல்லவிலலை என்று கேட்பது, அவராலும் 'இந்தியத் தேசியப் பெருமிதங்களிலிருந்து' இன்னும் முழுமையாக வெளிவரமுடியவில்லையோ எனத்தான் யோசிக்கவேண்டியிருக்கிறது. இப்போது எனக்கிருக்கும் கேள்வி என்னவென்றால், ஜெயவர்த்தனா கொல்லப்பட்டிருந்தால், ஞாநி ராஜீவின் கொலையை - ராஜீவும் அவரது 'அமைதிப்படையும்' ஈழத்தில் செய்த எல்லா அட்டூழியங்களுக்காய்- அவசியமான ஒரு கொலைதான் என ஏற்றுக்கொண்டிருப்பாரா என்பது? ஆக இப்படித்தான் இவர்களின் நடுநிலைமை அவர்களுக்கு ஏற்றபடி ஆடிக்கொண்டிருக்கிறது. ராஜீவின் கொலையை ஒரு துன்பியலாக மட்டும் எடுத்துக்கொண்டு மட்டும் கவலைப்படமுடியாது எனும் ஞாநிக்குச் ஒன்றைச் சொல்லவேண்டியிருக்கிறது. ஒரு படுகொலை என்றவளவில் ராஜீவின் கொலையை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதே தவிர, ராஜீவின் கொலையை இந்திய மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாதற்கு இருக்கும் காரணத்தை விட, அதை நியாயப்படுத்த -இந்திய இராணுவ காலத்தில் ஈழத்தில் வாழ்ந்த என்னைப்போன்றவர்களுக்கு - பத்து மடங்கான காரண்ங்கள் வலிகளுடனும் வாதைகளுடனும் உறைந்து இருக்கின்றன என இறுக்கமான குரலில் சொல்லவேண்டியிருக்கிறது. அதேவேளை முழுக்கட்டுரையை வாசிக்கும்போது இரு தரப்பினரும் பழையவற்றை மறந்து நேசக்கரம் நீட்டவேண்டும் என்ற ஞாநியின் அக்கறையை நான் மறுக்கப்போவதில்லை. ஆனால் அதை வெளிக்காட்ட இப்படி புத்திசாலித்தனமாய் சிந்திக்கின்றோம் என்று அபத்தமான கேள்விகளைக் கேட்பதைத் தவிர்க்கவேண்டும் என்பதற்காகவே மேலுள்ளவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

இந்த வெகுசன ஊடகங்களைப் பற்றிய இன்னொரு குறிப்பையும் சொல்லவேண்டும். அண்மையில் ஷோபாசக்தியிடம் நீங்கள் எப்படி இப்படியான சஞ்சிகைகளுக்கு எல்லாம் நேர்காணல் கொடுக்க்முடிகின்றது அறஞ்சாரந்த விடயமல்லவா என்றரீதியில் யாராலோ (யமுனா ராஜேந்திரனா?), கேள்வி எழுப்பப்பட்டபோது, ஷோபாசக்தி, என்ன செய்வது, என்னுடைய நண்பர்கள் அச் சஞ்சிகைகளில் இருக்கின்றார்கள் அதனாற்றான் அவற்றில் வெளிவந்திருக்கின்றன என்றொரு சப்பைக்காரணத்தைத் தந்திருந்தார். ஷோபாசக்தி எப்போது இந்தியா போகின்றார் வருகின்றார் என்ற விபரத்தை நாம் அறிந்துகொள்ள அவருக்குத் தொலைபேசி அழைத்து பணத்தை விரயமாக்க வேண்டியதில்லை; இந்தியா ரூடே, குமுதம், விகடன் என்பவற்றைப் புரட்டிக்கொண்டிருந்தாலே போதுமானது. இப்போது என்னிடமிருக்கும் கேள்வி என்னவென்றால் 'எதிரிகள்'/'துரோகிகள' எங்கேயும் இருப்பதுபோல, நண்பர்களும் கூட எங்கேயும் இருக்கக்கூடுமல்லவா? நாளை ஷோபாசக்தியின் நண்பர்களில் சிலர் தலித்துக்களை கேவலமாக எழுதுகின்ற சஞ்சிகையிலோ, ஆர்.எஸ்.எஸ் சார்புகள் உள்ள பத்திரிகைகளிலோ இருந்தாலும், ஷோபாசக்தி தனது நேர்காணல் வெளிவரும்போது இதே காரணத்தைத்த்தான் சொல்லித் திரிவாரா என்பது? தமது குருவென அ.மார்க்ஸைக் கைகாட்டுகின்ற (சுகனா ஷோபாசக்தியா அப்படிச் சொன்னது என்று மறந்துவிட்டது) ஷோபாசக்தி, இந்தியா ரூடேயிற்கு பேட்டியோ அல்லது கருத்தோ கூறும்போது, -வெங்கட்சாமிநாதன் விவகாரத்தில்- அ.மார்க்ஸ் மலந்துடைத்து இந்தியா ரூடேக்கு அனுப்பிய காகிதத்தைத் திருப்பவும் அ.மார்க்சின் முகத்திலேயே திருப்பி அடிப்பதற்கு நிகரானது என்றுதான் நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது. பெரியாரைத் தங்களின் வழிகாட்டிகளில் ஒருவராக வரித்துள்ள ஷோபாசக்தி பெரியார்- இராஜாஜி நட்பிலிருந்து, 'நண்பர்களோடு' எநதெந்தப் புள்ளிகளில் உடன்பட்டும் விலகியும் இருப்பது என்பதைக் கற்றுக்கொள்ள முயற்சித்தால் ஷோபாசக்திக்கு நலந்தரும்; மேலும் நல்லதொரு படைப்பாளி என்று ஷோபாசக்தியில் நம்பிக்கை கொள்கின்ற எங்களுக்கும் அது வழிகாட்டும்.

------------------------

பெரியார் பற்றி ஜெயமோகன் கொள்கின்ற காழ்ப்புணர்வும், தேவையில்லாத பயங்குறித்தும் அதிகம் இங்கே சிலாகித்து எழுதவேண்டியதில்லை. பெரியாரை முதன்மையான பாத்திரமாகக் கொண்டு ஜெயமோகன் இன்னும் ஒரு நாவல் எழுதாமல் இருக்கின்றாரே என்பதுதான் எனக்கு ஆச்சரியம் தரக்கூடிய ஒருவிடயம். ஜெயமோகன் ஒரு மலையாளி என்று இனத்துவேசத்தோடு எழுகின்ற குரல்களைக்கூட, அப்படி ஜெயமோகனை நிராகரித்தல் மிக அபத்தமானது என்ற புரிதலை என்னைப்போன்றவர்களுக்கு (திண்ணை விவாதக்களத்தில் நான் எழுதியதாய் நினைவு) ஏற்பட்டதே பெரியார் கற்பித்த மத, இன, மொழி, சாதி அபிமானங்களை விட்டுத்தள்ளுகின்ற தன்மையால் என்று சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. இப்போது
இந்தப்பதிவில் பெரியார் வன்முறையைத் தூண்டக்கூடியவர் என்ற அபத்தமான ஒரு புள்ளியை ஜெமோ வந்தடைக்கின்றார் (எனக்கு ஈ.வே.ரா அவர்கள் மீதுள்ள முக்கியமான மாற்றுக்கருத்து இரண்டுதான். அவரது எதிர்மறை நோக்கு அழிவுத்தன்மை கொண்டது. அடிப்படையில் தீங்கு விளைவிப்பது. இரண்டு அவர் ஒரு மக்கள்க்கூட்டம் மீது முன்வைத்த வெறுப்பு மிக மிக அபாயகரமானது. எந்நேரமும் வன்முறையாக மாறக்கூடியது. வரலாற்றின் தவறுகளை ஒருபோதும் ஒருவகை வரலாற்றுச் சதிகளாகக் காணலாகாது. அவை வரலாற்றின் போக்கில் பலவேறு காரணிகளால் உருவாகி வருபவை. உலகின் மாபெரும் வன்முறைகள் அனைத்துமே வரலாற்றுச் சதி என்ற பிரச்சாரத்தில் இருந்து தொடங்குபவையே...) பெரியார் பற்றி இங்கே வலைப்பதிவுகளில் நண்பர்கள் எழுதிய எத்தனையோ பதிவுகளில் கூட பெரியார் வன்முறையை ஒருபோதும் ஏற்றுக்கொண்டவரில்லை என்பது பற்றி விரிவாகவே எழுதப்பட்டிருக்கின்றன. பார்ப்பனியம் மீது க்றாரான விமர்சனங்களை பெரியார் முன்வைத்தபோதும், எங்கேயும் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்று துவேசக்கருத்துக்களைக் கூறியதாய் நான் வாசித்ததில்லை. ஏன் பெரியாரின் பின் திரண்ட இளைஞர் கூட்டத்தை, பெரியார் விரும்பியிருந்தால் பிராமணர்கள் மீது வன்முறையை பிரயோகிக்க கூடிய கூட்டமாய் மாற்றியிருக்க முடியுந்தானே? உணர்ச்சியும் கோபமும் கொப்பளிக்க பேசிய பெரியார் தன்னை நம்பி வந்தவர்களிடம், அது வன்முறையாக மாற்றக்கூடிய ஆபத்தைத்தரும் என்கின்றபோதும் அவ்வாறு நிகழாது மிகுந்த கவனத்துடன் இருந்திருக்கின்றார் என்றால் பெரியாரின் ஆளுமையைப் பாராட்டவேண்டுமே தவிர ஜெமோ மாதிரி அபத்தமான கணிப்புக்களை/கருதுகோளைக் கூறிக் கொண்டிருக்கத் தேவையில்லை. இன்று பிற மதத்தினர் மீது வன்மத்துடன், கொலைகளையும், பாலிய்ல் வன்புணர்வுகளையும் செய்துகொண்டிருப்பது பெரியாரிய நண்பர்களல்ல, மாட்டை அடித்துச் சாப்பிடுவதே பாவம் என்று சொல்லிக்கொண்டே மனிதர்களைக் கொன்று குவிக்கின்ற, வன்முறையைப் பயில்விக்கின்ற ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மீதும், அதன் தலைவர்கள் மீதுந்தான் ஜெமோ இந்தக் குற்றச்சாட்டுக்களை வீசியிருக்கவேண்டும். ஆனால் ஜெமோ அப்படிச் செய்யமாட்டார்; பெரியார் தமிழ்ச் சமூகத்தைக் கெடுக்கவந்த கடப்பாரை என்ற வகையில்தான் எழுதி இன்புற்றுக்கொண்டிருப்பார். ஆக, இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய் என்று பெரியார் விடயத்திலிருக்கும் ஜெமோவை, நாகர்கோயிலுக்கு அருகில் கன்னியாகுமரியில் உயர்ந்து நிற்கும் அய்யன் வள்ளுவன் தன் ஞான ஒளியைப் பாய்ச்சி உய்விக்கவேண்டுமென நாமும் இறைஞ்சுவோமாக.