கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தற்செயல்களின் அழகு

Sunday, July 27, 2014

-அ.முத்துலிங்கத்தோடு ஒரு சிறு சந்திப்பு-

'In Our Translated World' வெளியிடப்பட்டு மாதங்கள் சில ஆகிவிட்டபோதும், அதன் பிரதியைப் பெறுவதில் ஒவ்வொர்முறையும் ஏதோ 'சகுனப்பிழை' ஏற்பட்டு கையில் கிடைக்காமலே போய்க்கொண்டிருந்தது. அடிக்கடி அ.முத்துலிங்கத்திற்கு -வந்து பெறமுடியுமா- என மின்னஞ்சல் அனுப்பவதும், பிறகு ஏதேதோ காரணங்கள் போகாமல் விடுவதும் நிகழ்ந்திருக்கிறது.

அவருக்கும் காத்திருந்து காத்திருந்து அலுப்பு வந்திருக்கவேண்டும். அண்மையில் இங்கு பா.கிருஷ்ணனுடன் நடந்த சந்திப்பில் எனக்கான பிரதியைக் கையோடு கொண்டு வந்திருக்கின்றார். அப்போது நான் இன்னொரு நாட்டில் இருந்துகொண்டு, இன்று நான் பார்த்த பெண்களில் அதிகம் கவர்ந்திழுத்தவர் யார் என்ற தீவிர ஆராய்ச்சியில் மூழ்கியிருந்திருக்கின்றேன். கடந்த ஞாயிறும், 'வருகிறேன்' என அ.முவிற்குச் சொல்லிவிட்டு, மாலையில் கவிதைகளை விட, ஏரியில் மறையும் சூரியனைப் பார்ப்பதே முக்கியமென நண்பருடன் புறப்பட்டுவிட்டேன்.

நேற்றுத்தான் எனக்குச் 'செவ்வாய் தோசம்' முடிந்திருக்கவேண்டும். வாய்ப்புக் கிடைத்தது.

ஐந்து நிமிடங்களுக்குள் பிரதியைப் பெற்றுவிட்டு திரும்பிவிடலாம் என நினைத்துக்கொண்டுதான் போனேன். உரையாடத் தொடங்க அது ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக நீடித்துக்கொண்டு போனது. இதுநாள் வரை சந்திக்கும்போதெல்லாம் வணக்கமும் சுகமும் விசாரித்துவிட்டு நகர்ந்துகொண்டிருந்த நான் இவ்வளவு நேரம் அ.முவோடு உரையாடியது ஓர் ஆச்சரியமான நிகழ்வுதான்..

இப்போது அவர் வாசித்துக்கொண்டிருந்த நாவல்களை தன் Ipad த் திறந்து காட்டிக்கொண்டிருந்தார். முதலாவதே நிரோமி டீ சொய்சாவின் 'தமிழ்ப் பெண்புலி'. அது குறித்து எதையோ சொல்ல வாயெடுத்தேன், பிறகு ஏதேதோ நினைவுகள் பயமுறுத்த அமைதியாகிவிட்டேன். 'தமிழ்ப் பெண்புலி' குறித்த என் பார்வையை எழுதியதற்கே நிரோமி 'பணம் கொடுத்தார்' என்றெழுதிய ஒருவர் என்னை விட அ.முவோடு 'அதிக நட்பாய்' இருக்கின்றபடியால், இதையும் அறிந்தால், அ.முவை இன்னும் 'புகழ்ந்து' அவர் எழுதிவிடுவார் என்பதால் இந்நூல் பற்றித் தொடர்ந்து கதைப்பதைத் தவிர்த்துவிட்டேன்.

மைக்கல் ஒண்டாச்சி, ஷியாம் செல்வதுரை, ஜூம்பா லகிறி, சிமமண்டா அடீட்சி என நாங்கள் நிறையக் கதைத்துக்கொண்டிருந்தோம். English Patient, Funny boy போன்ற சிறந்த நாவல்களை எழுதிய மைக்கல் ஒண்டாச்சியும், ஷியாமும் பின்னைய நாவல்களில் சரிவு நிலைக்கு வந்துவிட்டார்கள் போலத் தோன்றுகிறதென அ.மு சொன்னார்.எல்லாப் புக்ழபெற்ற எழுத்தாளர்களுக்கும் முக்கியமான படைப்பாய் ஒரு நாவலே அதிகம் இருக்கிறதென்றேன். மேலும், அ.மு Hungry Ghosts ஐ அரைவாசிக்கு மேலாய்த் தாண்டமுடியவில்லை என்றபோது, நானும் இந்நாவலில் நிறைய எதிர்பார்த்தேன், முக்கியமாய் முடித்தவிதத்தில் நாவல் எங்கையோ தவறிவிட்டதென என் பார்வையைச் சொன்னேன். மொழியில் சாகசம் செய்யவேண்டும், ஷியாமின் இந்த நாவலில் குறிப்பிடத்தக்கதாய் எதுவுமில்லையென, அண்மையில் நியூயோர்க்கரில் வந்த கதையொன்றில் தனக்குப் பிடித்த வாக்கியங்களைத் தான் அடிக்கோடிட்டிருந்தவற்றை எடுத்துக் காட்டினார்.

Interpreter of Maladies எழுதிய ஜூம்பா லகிறியின் அண்மையில் வந்த நாவலான Lowland ம் அப்படியே என்றார். எனக்கு வாசித்தவளவில் அது சற்று சுவாரசியமாக இருந்தது. அதையின்னும் முடிக்காததால் எதையும் தீர்க்கமாய் இப்போது சொல்லமுடியவில்லை என்றேன். ஜூம்பா லகிறியின் The Namesake' ஐ மீரா நாயர் திரைப்படமாக அழகாக மாற்றியிருந்தார் என அ.மு வியந்து சொன்னார். முக்கியமாய் நாவலில் தாய் பாத்திரம் சிறிது; மகன் பாத்திரமே கதை சொல்லும். ஆனால் திரையில் தாய் பாத்திரம் விரிவாக்கப்பட்டு தாயினூடாக கதை சொல்லும் முறையாக மாற்றப்பட்டதென்றார். நாவலைப் படமாக்குவதில் அநேகம் நாவலே திரைபடத்தை விட நன்றாக இருக்கும், ஆனால் மீரா நாயரினால் நாவலை விட திரைப்படம் அழகாக வந்திருக்கிறதென்றார் (மீரா நாயரின் அண்மைய திரைப்படமான The Reluctant Fundamentalistம் நாவலை அடிப்படையாகக் கொண்டது. படம் பார்த்துவிட்டேன். நாவல் எப்படியிருக்குமென வாசித்துப்பார்க்கவேண்டுமென ஆவலைத் தந்த திரைப்படம்).நான் Namesake திரைப்படத்தை மாத்திரமே பார்த்தவன் என்பதால் இந்த நுட்பமான வித்தியாசம தெரியவில்லை, என்றாலும் லகிறியின் unaccustomed earth என்னை அவ்வளவாய் கவர்ந்ததில்லையெனச் சொன்னேன்.

ஒண்டாச்சி, லகிறி போன்றவர்களின் நாவல்கள் ஏற்கனவே சிறுகதை வடிவில் நியூயோர்க்கரில் வநது வாசித்திருந்ததால், பிறகு நாவலாக வந்தபோது ஈர்க்கவில்லையோ தெரியாதென அ.மு சொன்னார். அநேகமானவர்கள் நாவல்களை எழுதிக்கொண்டிருக்கும்போது அதிலிருக்கும் சிலபகுதிகளை சிறுகதைகளாக்கியோ அல்லது சுருக்கியோ வெளியிடுவது இயல்புதானே, ஹருக்கி முரகாமியின் 18Q4 கூட நாவலாக வரமுன்னர் இப்படி வந்தபோது வாசித்திருக்கின்றேன் என்றேன். சிலவேளைகளில் ஒண்டாச்சியோ, லகிறியொ, முரகாமி செய்ததைப் போல நாவலின் பல்வேறு அத்தியாங்களைக் கோர்த்து சிறுகதையாக்கியது போல அல்லாது, அப்படியே தங்களின் நாவலின் பகுதிகளை முன்னரே வெளியிட்டதால் நாவல் வாசிக்கும் சுவாரசியம் இல்லாமற் போய்விட்டதோ தெரியவில்லை.

நாவல்களின் பகுதிகளை முன்னரே வெளியிடுவது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான் என்று அ.மு சொன்னபோது, விகடனில் அவர் எழுதும் தொடரில் இறுதியாய் வந்த அத்தியாயத்தை நான் ஏற்கனவே வேறெங்கோ வாசித்து பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். இப்படியே நம் கதை திசையெட்டும் அலைந்தபோது , நாஞ்சில்நாடனின் விகடன் பட்டியலில் உமது படம் வரவில்லை? நான் தேடிப்பார்த்தேன், ஏன்?' என்று அ.மு கவலைப்பட்டார். எனக்கும் கவலைதான் இல்லையா என்ன? அடிக்கடி முன்னட்டைகளில் எனக்குப் பிடித்த அஸினின் வர்ணப்படம் வருகின்ற ஒரு பத்திரிகையில் பாஸ்போர்ட் சைஸிலாவது என் படம் வருகின்றபோது அவரின் தீவிர இரசிகனாக எனக்கும் பெருமிதமாகத்தானே இருக்கும். ஆனால் இது எனக்கும், அ.முவிற்கும் புரிகிறது. விகடன்காரர்களுக்கு இது விளங்கவில்லையே? (இப்படி எதையும் முகநூலில் எழுதவும் இப்போது பயமாயிருக்கிறது. 'பட்டியல் சர்ச்சை' பற்றி ஜூலை அம்ருதா கட்டுரையில் நான் முகநூலில் எழுதிய ஒரு சிறுபதிவைப் பிரசுரித்திருக்கின்றார்கள். அதுகூடப் பரவாயில்லை, அதில் நண்பர் யாருக்கோ சொன்ன பதிலான, 'எனக்கு இரசிகைகள் கூடிவிடுவார்கள் எனத்தான் விகடன் படம் போடாது இருட்டடிப்புச் செய்திருக்கின்றது' என்று எழுதிய கொமண்டையும் அல்லவா சேர்த்துப் பிரசுரித்திருக்கின்றார்கள்)

முகநூலிலிருந்து, டொமினிக் ஜீவாவிற்குக் கொடுத்த இயல்விருதுவரை, கோணங்கியிலிருந்து, எனக்கு மிகப்பிடித்த ரமேஷ்-பிரேம் வரை..., எழுதத் தொடங்கும்போது பாவித்த சொற்களையே திரும்பத் திரும்பப் பாவிக்கின்றேன் என வருகின்ற என் சோர்வுவரை நிறையத் தொடர்ந்து கதைத்துக்கொண்டிருந்தோம். வைதேகியின் தமிழ்ப்பற்றும், அவர் மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் பழந்தமிழ் இலக்கிய நூற்கள் பதினெட்டையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் விதத்தையும் பற்றியும் நிறைய அ.மு சொன்னார். தமிழ் என்பது தொடர்ந்தும் தனிமனிதர்களாலே தொடர்ந்து வளர்க்கப்பட்டு வந்திருப்பது குறித்தும், உதாசீனம் செய்யும் அரசு/நிறுவனங்கள் குறித்தும் பேசினோம்.

வைதேகி போன்று தமிழ் மீது பற்று வைத்திருப்பவர்கள் குறித்து உங்களைப் போன்றவர்கள் விரிவாக எழுதவேண்டும் என அ.மு சொன்னபோது. என் சங்க இலக்கிய அறிவு மிகவும் குறைவானது எனக்குறிப்பிட்டேன்., இப்போதும் நான் 'காலம்' செல்வத்தின் தொலைபேசி அழைப்புக்களை எடுக்காமல் தவிர்ப்பதற்கு செல்வம் நீ இப்போது சங்க இலக்கியத்தில் என்ன படிக்கிறாய் எனக்கேட்டு, கமபன் பாடிய ஏதாவது ஒரு பாட்டிற்குப் பொருள் சொல்லெனக் கேட்டுவிடுவாரோ என்ற அச்சத்தினால் என்பதை அ.முவிடம் சொல்லாமல் தவிர்த்துவிட்டேன்.

இப்படி எல்லாப் பக்கமும் கதைத்த நாம், எங்களிருவருக்கும் மிகவும் பிடித்த ஜெயமோகனைப் பற்றிக் கதைக்காமல் விட்டுவிடுவோமா என்ன?

நாங்கள் பேசிக்கொண்டிருந்த மேசையிலேயே 'முதற்கனல்' கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. அதை, முதலாவது முறை வாசித்துவிட்டு இரண்டாந்தடவையாக வாசித்துக்கொண்டிருந்தார். அ.மு, ஜெமோ குறித்து வியக்காமல் இருந்தால்தான் வியப்பு. நானும், ஜெயமோகன் எழுதும் வேகத்தைப் பற்றி வியந்து சொல்லிக்கொண்டிருந்தேன். சிறுவயதில் திருமூலர்தான் மனதின் வேகத்தை விட எழுதக்கூடியவர் என்று அறிந்திருக்கின்றேன். பதின்மவயதில் எனக்குப் பிடித்தவரான பாலகுமாரன் இப்படி நிறைய எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் ஜெயமோகனின் வேகத்திற்கு முன்னே எனக்குத் தெரிந்த எவ்ரும் நிற்கவேமுடியாது என் உறுதியாய்ச் சொன்னேன். வேகமாய் எழுதுவது மட்டுமில்லை, சொன்னதைத் திருப்பி எழுதாது, அதிகம் வேற்றுமொழிக்கலப்பில்லாது எழுதுவதுதான் இன்னும் வியப்பைத் தருகிறதென்றார் அ.மு.

ஜெயமோகன் மகாபாரதம் எழுதும் வேகத்தையும் ஆழத்தையும் பார்க்கும்போது, ஒரு குழுவே பின்னால் இருந்து இயங்குவது போலிருக்கிறது என்றுதான் எங்கள் இருவருக்கும் சந்தேகம் வந்தது. மகாபாரதம் எழுதுவதோடு மட்டுமின்றி, அதே நேரத்தில் திரைப்படங்களிற்குக் கதை எழுதுகிறார், இரண்டு பேரோடு சண்டைபிடிக்கிறார், மேலும் மூன்று பேருக்கு அறிவுரை கூறுகிறார், இதெல்லாம் ஒரு தனிமனிதரால் செய்யக்கூடியதா என்ற கேள்வி எனக்கும் நிறைய நாளாக உண்டு. இதற்குள் அ.மு, ஜெயமோகன் இப்படி தினம் தினம் எழுதிக்கொண்டிருந்தாலும், அவர் இணையத்தில் பிரசுரிப்பதைவிட ஒரு மாதம் முன்னே பிரசுரிப்பதற்கான அத்தியாயங்களை கைவசம் வைத்திருக்கின்றார் என்றபோது அ.மு அன்போடு தந்த கேக்கைச் சாப்பிட்ட கொண்டிருந்த நானப்படியே உறைந்துவிட்டேன்.

ஏதாவது புதிதாய் என் புத்தகம் வெளிவருகிறதா எனக்கேட்டார். சென்ற வருடம் 2 புத்தகங்கள் கொண்டு வருவதற்கான முயற்சியில் இருந்தேன். இந்த வருடத்திற்குள் எதையாவது ஒன்றையாவது செய்யும் விருப்பமிருக்கிறதென்றேன். நானோ, என் பதிப்பாளரோ இம்முறையேனும் உறங்குநிலைக்குப் போகாதிருக்கக் கடவ.

'உங்களை எல்லோரும் இந்தியாவிற்கு வர அழைக்கின்றார்களே நீங்கள் போகலாமே?' எனக் கேட்டேன். கனடாவிற்கு வந்ததன்பிறகு இன்னும் இந்தியா போகவில்லை, ஆனால் அங்கே போக சற்றுப் பயமாயிருக்கிறது. நிறையக் குழுக்கள் இருக்கின்றார்கள். சர்ச்சைகளில் சிக்கவேண்டியிருக்கும் என்றார். 'நீங்கள் அங்கே போய் நிரந்தரமாகத் தங்கப் போவதில்லைத்தானே. இதெல்லாம் பெரியவிடயமில்லை' என்றேன். அண்மையில் கூட, ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளுக்காய், விமான ரிக்கெட்டோடு தங்குமிட வசதியெல்லாம் தங்கள் செலவிலே செய்து தருகின்றோம் என்று கேட்டிருக்கின்றார்கள். நான் தான் போகவில்லை' என்றார். 'நிச்சயம் ஒருமுறை செல்லுங்கள். முக்கியமாய் புத்தகக்கண்காட்சிகள் நடக்கும் நேரங்களில் போனீர்களென்றால் நிறையப் பேரை ஒரேயிடத்தில் சந்திப்பதும் எளிதாக இருக்கும்' என்றேன். அப்படிப் போகும்போது தனியே போக அலுப்பாயிருக்கும், ஓர் உதவியாளர் தேவையென்று கூறி என்னையும் செலவில்லாது அழைத்துச் செல்லுங்கள் எனச் சொல்ல நினைத்தேன். அவரும், நானும் சேர்ந்து போய் ஜெயமோகனைச் சந்தித்து மகாபாரத வேகத்தையும் சற்றுக் குறைக்கலாம். வாசிப்பவர்களும் பாவமல்லவா. அவர்களுக்கும் சற்று ஓய்வு வேண்டுமில்லையா?

இதை எல்லாவற்றையும்விட, அ,முவின் எழுத்துக்களை மட்டுமின்றி அவர் சார்ந்தியங்கும் இயல்விருதுவரை விமர்சனங்கள் வைத்து, அவர் எழுதிய ஒரேயொரு நாவலையும் அது நாவலில்லையென கிழித்து எழுதியவனோடு ஒரு மணித்தியாலத்திற்கு மேலாய் அதன் சுவடுகள் இன்றி அவரால் இயல்பாய் உரையாட முடிந்திருந்ததும் என்னளவில் சற்று வியப்பானது. மேலும் In our translated worldன் colourful hardcover/normal copy என இரண்டு பிரதிகளைப் பத்திரமாய் வைத்துத் தரவும், முதற்கனலின் ஜெயமோகன் கையெழுதிட்ட செம்பதிப்பையும், வைதேகியின் நூலையும் மனமுவந்து தந்து வழியனுப்பியபோது ஒரு மெல்லிய நெகிழ்வு எனக்குள் பரவியிருந்தது.

தற்செயலான நிகழ்வுகள் அழகானவை மட்டுமில்லை. எமக்கான பிரமைகளைச் சிலவேளைகளில் தகர்க்கவும் தாண்டவும் வைக்கக் கூடியவையாகவும் இருக்கின்றன போலும்.

(முகநூலில்-Elanko Dse- ஜூலை 24 எழுதியது)

கள்ளி

Wednesday, July 16, 2014


தோ ஒரு வாசனை என்னைப் பின் தொடர்ந்து வந்தபடியே இருந்தது. அந்த வாசனையை முதலில் எங்கே நுகர்ந்தேன் என்பது சரியாக நினைவினில் இல்லை. அநேகமாய் நிரம்பி வழியும் மாலைநேரத்து சப்வேயில்தான் அந்த நறுமணம் எனக்குள் நுழைந்திருக்க வேண்டும். பிதுங்கித் ததும்பும் மனிதக் கூட்டத்திடையே, காலையோ கையையோ கூட சற்றும் நகர்த்த முடியாத பொழுதொன்றில் இப்படியான வாசத்தை நினைவில் கொண்டிருத்தல் என்பதே சற்று அதிகப்படியானதுதான்.  ஆனால் நான் விடும் மூச்சே மற்றவரின் காதுக்குள் நுழைந்துவிடும் அபாயமுள்ள நெரிசலில் எனக்கு இந்த வாசத்தை பின் தொடர்வது சற்று ஆசுவாசமாயிருந்தது. மேலும் இந்த நறுமணம் யாரோ ஒரு பெண்ணிலிருந்துதான் வருகின்றது என எண்ணிக்கொள்வது இன்னும் குதூகலத்தைத் தருவதாயிருந்தது. மனித உடல்களின் கடலில் இருந்து, கவனத்தைத் திசை திருப்பி இந்த வாசம் இதுவரை அறியாத இன்னொரு உலகிற்கு மெல்ல மெல்ல என்னை அழைத்துச் சென்றுகொண்டிருந்தது.

நாட்கள் செல்லச் செல்ல அந்த வாசம் என்னைத் தொடர்வதை விட,  நான் அதற்குப் பின்னே தொடர்ந்து போகின்ற நிலை ஏற்படத் தொடங்கியது. அந்த வாசத்திற்காகவே சரியாக நேரத்தைக் கணக்கிட்டு மாலை நேரத்துச் சப்வேயில் ஏறுபவனாக மாறிப்போனேன். சிலவேளைகளில் பாதாளச் சுரங்கத்திற்குள் முன்னரே வந்திருந்தாலும், சரியான நேரம் வரும்வரை காத்திருந்து முன்னர் வரும் இரெயின்களை எல்லாம் போகவிட்டு, குறிப்பிட்ட ரெயினில் மட்டும் ஏறிச் செல்லத் தொடங்கினேன். ஆனால் இந்த நேரக்கணக்கிலும் ஒரு சிக்கல் வந்திருந்தது. உலகிலேயே வாழ்வதற்கு மிகவும் செலவு கூடிய நகர்களில் ஒன்றான ரொறொண்டோவில்தான், உலகில் மிகவும் மோசமான பாதாள இரயில் சேவையும் இருக்கிறது. அவ்வப்போது சேவை தாமதமாவதும், அதற்கு மாற்றீட்டாய் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதும் வழமையான ஓரு நிகழ்வு. தொடக்கத்தில் சேவைகள் குழம்பும்போது கெட்ட வார்த்தைகளால் மனதிற்குள் திட்டிய நானும் நாட்போக்கில் களைப்படைந்து, பின்னர் ஒரு பபிள்கம்மை எடுத்து வாயில் போட்டு எனது கோபத்தையும் சேர்த்து சப்பத்தொடங்கிவிடுவேன்.

இவ்வாறாக வாசத்தைப் பின் தொடர்வது பின்னேரங்களில் மட்டுமில்லாது எந்நேரமும் ஆக அது ஆகிப்போனதில்தான் எனக்குப் பிரச்சினை வரத் தொடங்கியது. இரவுகளில் கூட கனவுகளில் நான் அந்த வாசத்தைப் பின் தொடர்கின்றவனாய் மாறத் தொடங்கியிருந்தேன். இதுவரை என் கனவுகள் எழுந்தமானமாய் என்னால் கட்டுப்படுத்த முடியாது வெளிக்கிளம்பியதைப் போலவன்றி இந்த வாசம் என் கனவுகளைக் கட்டுப்படுத்தவும், திசைகளைத் திருப்பவும் தொடங்கியிருந்தது.. இக்கனவுகளில் எப்போதும் சூரியகாந்தித் தோட்டங்களின் இடையிலோ அல்லது லாவண்டர் தோட்டங்களில் நடுவிலேயோ ஒரு பெண் ஓடிக்கொண்டிருப்பவளாகவும், அவளின் முகம் எப்படி இருக்கும் எனக் கண்டுபிடிப்பதில் நான் தோற்றுக் கொண்டிருப்பவனாகவும் இருந்துகொண்டிருந்தேன். என்றேனும் ஒருநாள் அந்தப் பெண்ணின் முகத்தைக் கண்டுபிடித்தால் நான் இந்த வாசனையைப் பின் தொடர்வதைக் கைவிட்டு விடுவேன் என நம்பவும் தொடங்கியிருந்தேன்.

னவுகளுக்குள் நுழைந்து இன்னுமிச்சிக்கலை ஆழப்படுத்துவதை விட, இவ்வாசனை வந்த மூலத்தில் வைத்தே பிரச்சினையைக் களைவோம் என ஒருநாள் முடிவு செய்தேன். முதலில் மாலை நேரத்து பிதுங்குத்தள்ளும் ரெயினில் நான் அடிக்கடி சந்திக்கும் பெண்களை மனதிற்குள் பட்டியலிட்டுக் கொள்ளத் தொடங்கினேன். இந்த வாசனையைப் பரப்பக் கூடியவர்கள் என்று நான் நம்பியவர்களை, நினைவில் வைத்திருப்பதற்காய் அவர்கள் ஒவ்வொருவரிலும் வித்தியாசமாக என்னைக் கவர்ந்த விடயங்களை ஒரு பேப்பரில் எழுதத் தொடங்கினேன். விஞ்ஞான பாடத்திற்கு அத்தியாவசியமான மூலகங்களின் ஆவர்த்தனப்பட்டியலைப் போல, இயற்கையாகவே தலைமயிர் பொன்னிறம் உடையவர், புருவத்தில் ரிங் குத்தியிருப்பவர்,  அடர்ந்த சிவப்பு நிறத்தில் உதட்டுக்கு வர்ணம் பூசுபவர், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தன் தலைமயிரின் வடிவத்தை மாற்றிக் கொண்டிருப்பவர், குதியுயர்ந்த காலணிகளை அணிந்தபடி எப்போதும் நெரிசலில் யாரோ ஒருவரின் காலை மிதித்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருப்பவர், பின்னங்கழுத்தில் டிராகன் டட்டூ குத்தியவர் என இப்படி அட்டவணைப்படுத்திக் கொண்டு போகவே, பேப்பர் ஒரு பக்கத்தையும் தாண்டி நீண்டு கொண்டிருந்தது. இதை இன்னும் எளிதாக்க என் கடந்தகால வாழ்க்கையில் சிலிர்க்க வைத்த பெண்களின் பெயர்களை இவர்களுக்குச் சூட்டத் தொடங்கினேன். தமிழே பேசமுடியாத முகங்களுக்கு தமிழ்ப் பெயர்கள் வைப்பது அபத்தம் தான் என்றாலும் தரணியெங்கும் தமிழ்ப் பரப்பும் பணியை இன்னொருவிதத்தில் செய்துகொண்டிருந்ததில் எனக்குள் கொஞ்சம் சந்தோசமும் எட்டிப்பார்த்தது.

பெயர்களை வைப்பது எளிது. ஆனால் இவர்களில் யாரிடமிருந்து வாசனை வருகிறதென்பது கண்டுபிடிப்பதுதான் கடினம். என் மூக்கின் மேல் எனக்கு அபார நம்பிக்கை இருந்தாலும், ஆகக் குறைந்து சற்று அருகில் நெருங்கிப்போய்ப் பார்த்தால் 'உண்மை'யைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் இந்தச் சன நெரிசலுக்குள் எப்படி ஒவ்வொருத்தருக்கும் அருகில் போய் நின்று மூக்கைச் சுழட்டித் துழாவிப் பார்க்க முடியும். இரண்டு கால்களை நெருக்கி வைக்கவே சிறு இடம் கண்டுபிடிப்பதே பெரும்பாடாய் இருக்கையில், எப்படித்தான் நினைத்த இடத்திற்கு நகர முடியும். தலைக்கு மேலே தொங்கும் ஒன்றிரண்டு கம்பிக்கே சனம் -கடைசியாய் இருக்கும் ஒரு ரிக்கெட்டுக்காய் தியேட்டரில் அடிபடுவது போல- அல்லற்பட்டுக் கொண்டு நிற்கும்போது, வாசத்தின் ரிஷிமூலத்தைத் தேடுவதென்பது பகல் கனவாய்த்தானிருக்கும். 

இப்படி சப்வேயில் பயணிக்காத பொழுதுக்கும், வாசனையைப் பின் தொடரும் கனவுகள் வராத இரவுகளுக்கும் இடையில் கிடைத்த சொற்பநேரத்தில், யோசிக்க முடிந்ததில் ஒரு தீர்வைக் கண்டடைந்தேன். இப்படியான வாசத்தைப் பின் தொடர்பவனாக நான் மட்டும் இருக்கமுடியாது. வேறு பலரும் இருப்பார்கள். ஆகக் குறைந்தது இந்த வாசனையின் ஊற்றின் இருப்பிடமாய் இருப்பவர், தான் அனுப்பும் சமிக்ஞையை யார் கவனத்தில் கொள்கிறார் எனப் பார்க்கவும் விரும்புவார் அல்லவா? அவரைக் கண்டுபிடிப்போம் எனத் தீர்மானித்து சனம் மிதமாக இருக்கும் ஒரு வாரவிறுதியைத் தேர்ந்தெடுத்தேன். மாலை நேரந்தான். ஆனால் இப்போது பிதுக்கித் தள்ளும் சனம் இல்லை. வழமைக்கு மாறாய் ஒன்றிரண்டு இருக்கைகள் காலியாகக் கூட இருந்தன. நானேறும் குறிப்பிட்ட அந்த நேரத்து ரெயினிற்குள் நுழைந்தபோது எனக்குப் பரிட்சயமான வாசம் வந்துகொண்டிருந்தது. சுற்று முற்றும் விழிகளை எறிந்து பார்த்தேன். வழமையாகச் சந்திக்கும் முகங்கள் எதையும் காணவில்லை. அப்படியாயின் இந்த நறுமணம் நான் நினைக்கின்ற பெண்களிடமிருந்து வரவில்லையா என்கின்ற ஏமாற்றந்தான் முதலில் என்னைத் தாக்கியது. 

இரக்கூன் தெருவைக் கடக்கும்போது தன் தற்காப்புக்காய் மிக மோசமான நாற்றத்தை சுரந்துவிட்டுப் போகும். ஆனால் அது கடந்தபின்னும் நீண்ட நேரத்திற்கு அந்த வாசனை பரவியபடியே இருக்கும். சிலவேளை அவ்வாறுதான் இந்தச் சப்வேயிலும் நான் தேடிய பெண் தன் வாசனை விட்டுவிட்டுப் போய்விட்டாரோ என யோசித்தேன். ரெயினுக்கான டோக்கனைப் போட்டுவிட்டு உள்ளே வந்தாயிற்று அதற்காகவேனும் கொஞ்சத் தூரமாவது பயணித்துவிட்டுத் திரும்புவோம் எனத் தீர்மானித்து 'நவ்' பேப்பரையும் எடுத்துக்கொண்டு காலியிருக்கையொன்றில் அமர்ந்தேன்.

எனக்கு எப்போதும் ஓரு பழக்கமிருக்கிறது. புதுப் புத்தகம் என்றால் என்ன புதுப் பத்திரிகை என்றால் என்ன உடனேயே நுகர்ந்து விடுவது. அந்த வாசனை நான் அந்தப் புத்தகத்திற்குள் இருக்கும் எழுத்துக்களோடு பரிட்சயம் ஆக முன்னரே என்னோடு நட்பாகிவிடும். பிறகு புத்தகத்தை வாசித்து முடிக்கும்வரை ஒரு துணையாக வந்திருக்கும். ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒவ்வொரு வாசனை. சிலவேளைகளில் அந்த வாசனையே ஒரு புத்தகம் நல்லதொரு வாசிப்பைத் தருமா இல்லையா என்பதைக் கூட சொல்லிவிடக்கூடும்.

'நவ்' 'வை எடுத்த போதும், உடனேயே நுகர்ந்து பார்க்க ஆசையிருந்தும் ஆட்கள் பார்த்துவிடுவார்களே என்ற தயக்கத்தில் அதை ஒத்திப் போட்டேன். பக்கங்களைப் புரட்டுவதும் அவ்வப்போது சில செய்திகளை வாசித்தபடியும் இருந்தபோது, பக்கத்து இருக்கையில் இருந்த பெண்ணின் கண்களும் இந்தப் பக்கங்களில் மேய்வதைக் கண்டேன். '.நவ்'வின் பிற்பக்கங்களில் அழகான பெண்கள் மிகக் குறைந்த ஆடைகளுடன் 'எங்களை அழையுங்கள்' எனக் கூறியபடி சிரித்துக்கொண்டிருப்பார்கள். அழைத்துப் பேசுவதற்கு மட்டும் இவ்வளவு கட்டணமா என்று ஒரு காலத்தில் வாய் பிளந்துண்டு. ஆனால் எல்லா வியாபார விளம்பரங்களிலும் சொல்லப்பட்டதை விட சொல்லப்படாததில்தான் நிறைய விடயங்கள் உட்பொதிந்து இருக்கின்றன என்பதைப் பின்னர் அறிந்தபோது திறந்த வாய் தானாய் மூடிக்கொண்டது.  ஒரு சஞ்சிகையை முழுதாய் வாசிக்காமல் வைப்பதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை.  எனினும் பக்கத்திலொரு பெண் இருக்கும்போது, 'அழைப்புவிடும் பெண்களின்' பக்கங்களைப் பார்ப்பது சற்று அந்தரமாக இருக்கும். அந்தப் பக்கங்களைப் புரட்டாமலே மடியில் சஞ்சிகையை வைத்துக் கொண்டு கண்களை மூடினேன். கொஞ்சம் கொஞ்சமாக எனக்குப் பிடித்த வாசத்தைப் பின் தொடரத் தொடங்கியிருந்தேன்.

'நீ வாசிக்கவில்லையெனில் பேப்பரைக் கொஞ்ச நேரம் இரவல் பெற முடியுமா?' என ஒரு குரல் ஒலித்தது.

சூரியகாந்தித் தோட்டத்திலும் லாவண்டர் நிலப்பரப்புக்களிலும்,  நான் பின் தொடரும் பெண்தான் இன்று கதைக்கவும் தொடங்கிவிட்டாரோ என்றுதான் முதலில் நான் நினைத்தேன்.

'ஓ...! நீ உறங்கிவிட்டாய் போலும்!' என மன்னிப்புக் கோரும் மெல்லிய குரல் கேட்கவும் நான் விழிகளை விரித்துப் பார்த்தேன்.

அருகிலிருந்த பெண்தான் கதைத்திருக்கின்றார். நான் அதற்குள் வழக்கமான என் கனவுக்குள் மூழ்கிவிட்டிருக்கின்றேன்..'தாராளமாக, நீ வாசிக்கலாம்' என பேப்பரை அவரிடம் நீட்டினேன்.

நாம் எந்தப் பக்கங்களைத் தவிர்த்தேனோ அவர் அந்தப் பக்கங்களுக்கே நேரடியாகப் போய், யாருடையதோ தொலைபேசி இலக்கத்தைத் தேடுவது போல நிதானமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார். எனக்கும் அந்தப் பக்கங்களை அவரோடு சேர்நது பார்க்க மனம் குறுகுறுத்தாலும், அவர் அதைப் பார்த்துவிட்டால் என்ன நினைப்பாரோ என்கின்ற அந்தரமும் ஒருங்கே சேர, கொதிக்கின்ற உலையாய் தவித்துக்கொண்டிருந்தேன். இவரும் 'எங்களை தொலைபேசியில் அழையுங்கள்' எனக்கூறும் பெண்களைப் போலத் தொழில் செய்கின்றாரோ என என் மனம் விழித்துக்கொண்டது.

இப்படி நான் அல்லாடிக்கொண்டிருக்கையில், திடீரென்று அவர் 'வாசனைகளைப் பின் தொடர்ந்து போய்க்கொண்டிருப்பது என்பது குதூகலமும் துயரம் ஒருங்கே சேர்ந்ததுதான் அல்லவா?' என்றார்.

எனக்கு அவர் என் மனதை இப்படியாக வாசித்தது, அவர் நவ் பேப்பரின் இறுதிப்பக்கங்களைப் பார்த்ததைவிட இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதை எளிதாக நம்பவும் முடியவில்லை.

ப்படித்தான் சில வருடங்களுக்கு முன் ஹவானா போயிருந்தபோது மந்திரக்காரி மாதிரியான தோற்றத்தில் பெரும் ஹவானா சுருட்டைப் பிடித்தபடி ஒரு மனுசி இருந்தார். அவர் எங்களுக்கான சீட்டுக்களை எடுத்து வாசித்து எதிர்காலத்தைக் கணிப்பார் என்றும் எங்களின் சுற்றுலா வழிகாட்டி கதை மேல் கதை சொல்லி நம்பவும் வைத்திருந்தார். அவரிடம் எனக்குப் பிடித்த நடிகையான அஸினை நான் எப்போதாவது சந்திக்க வாய்ப்பிருக்கா என்கின்ற முக்கியமான கேள்வியைப் பத்து பெஸோ கொடுத்துக் கேட்டேன். அடுத்த வருடத்திற்குள் அஸின் கனடா வருவார், நீ சந்திக்க மட்டுமில்லை அவரோடு சேர்ந்து டின்னருக்குப் போவாய் என உறுதியாய்க் கூறியிருந்தார். இதைக் கேட்ட சந்தோசத்தில் இன்னும் ஐந்து பெஸோ மேலதிகமாய் அந்த மனுசிக்குக் கொடுத்து விட்டு வந்திருந்தேன். ஆனால் அஸினோ அடுத்த வருடம் கனடா வரவில்லை. இலங்கைக்குத்தான் போயிருந்தார். என்னோடு டின்னர் வருவதற்குப் பதிலாக இலங்கை ஜனாதிபதியின் துணைவியாரோடு எங்கையோ போய்ச சாப்பிட்ட படமும் வெளிவந்ததைக் கண்டு நான் நொந்து போனதுதான் மிச்சம்.


ஆக கடந்தகால வரலாற்றிலிருந்து பாடத்தைக் கற்றுக்கொண்ட நான், இன்னொரு முறை இப்படி 'மனதைப் படிப்பவர்களிடம்' ஏமாறத் தயாராக இருக்கவில்லை. என்றாலும், அவரிடம் 'எப்படி நான் வாசனைகளைப் பின் தொடர்கின்றவன் என்று உனக்குத்த் தெரியும்?' எனக் கேட்டேன். 'வாசனைகளைப் பின் தொடர்பவர்கள் தங்களுக்கென்று சில தனித்துவமான சமிக்ஞைகளை வைத்திருக்கின்றார்கள். என்னால் அவற்றை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். மேலும் நானும் அவ்வாறாக வாசனையைப் பின் தொடர்பவர்களில் ஒருத்தி தான்' என்றாள்.

வாசனைகளைப் பின் தொடர்வது ஒருவிதமான நோயோ என நினைத்துக்கொண்ட எனக்கு அப்படி வேறு சிலரும் இருக்கின்றார்கள் என்பதை அறிந்ததில் சற்று ஆறுதலாக இருந்தது.

'ஆம்,  நான் பஞ்சாப்பில் இருந்தபோது சிறுவயதில் இருந்தே கோதுமைகளின் வாசனையை எங்கு சென்றாலும் பின் தொடர்பவளாக இருந்திருக்கிறேன். அதுவும் கோதுமை அறுவடைக் காலத்தில் மிகவும் உச்சமான குதூகலத்தையும், அறுவடை முடிந்தபின் மிகப் பெரும் வெறுமையையும் அனுபவித்திருக்கின்றேன். பின்னாளில் வாசனை இல்லாது என் வாழ்வு முழுமையடையாது போல ஏதோ ஒரு வாசனையைப் பின் தொடர்ந்தபடியே இருக்கின்றேன். உனக்கு அப்படி சிறுவயது நினைவுகள் இல்லையா?' என என்னைப் பார்த்துக் கேட்டாள்.

நினைவுகளைச் சுழற்றிப் பார்க்கையில், சிறுவயதில் பனம்பழத்தினதும் விளாம்பழத்தினதும் வாசனையைப் பின் தொடர்ந்தவனாக நானும் இருந்தது தெரிந்தது.  எங்கள் வீட்டில் இருந்து மூன்று வீடுகள் தள்ளி இருந்த விளாமரத்தில் பழங்கள் பழுப்பதை என்னால் நுகர முடிந்திருக்கிறது.. இப்படி வாசனையை மோப்பம் பிடிப்பதைப் பார்த்து, ‘உனக்குப் பாம்பின் தன்மையடா' என அம்மாவே அடிக்கடி கூறியிருக்கின்றார்.  இவளுக்கு இதைச் சொன்னால் நானொரு பாம்பு மனிதன் என நினைத்துக்கொள்வாளோ என்கிற அச்சத்தில் அப்படியேதும் குறிப்பிடும்படியாக எதுவுமில்லையென இதை மறைத்தேன். மேலும் பிறகான காலத்தில் ஆட்லறிகளினதும், கிபீர்க் குண்டுகளினதும் வாசனையை நுகர்வதே வாழ்வதற்கான ஒரேயொரு வழியாக ஆகிப்போனதை எப்படி இவளுக்கு உணர வைப்பது. எனினும் அரசியல் இன்றி இவ்வுலகில் எதுவும் அசையாது என்பதால், 'உங்களின் இராணுவம் எங்களின் நாட்டுக்குள் வந்தபோது அவர்களிடமிருந்து தனித்துவமான மணம் வந்ததை அறிந்திருக்கின்றேன். ஆனால் அது எனக்குப் பிடிக்காத வாசம், வெறுப்பைத் தருகின்ற நாற்றம்' என்றேன். சற்று நேரம் முன்னரே அறிமுகமான ஒருத்தியிடம் இப்படிக் காட்டமாகக் கூறியது தவறோ என சொன்னதன் பிறகுதான் உறைத்தது.


னக்கு இந்திய இராணுவ கால அனுபவத்தினால் பஞ்சாபிகள் மீது  சற்று வெறுப்பு இருந்தது. ஆனால் இவள் மீது ஏனோ அதையும் தாண்டி ஏதோ ஈர்ப்பு ஏற்பட்டது போலத் தோன்றியது. ஆனால் அவள் ஏன் 'நவ்' பேப்பரின் பிற்பக்கங்களை உற்றுப் பார்த்தாள் என்பது மர்மமாயிருந்த்து. சிலவேளை இவளும் அவர்களைப் போன்ற தொழில் ஏதேனும் செய்கின்றாளோ என்கின்ற சந்தேகம் வந்தது. வாய் விட்டுக் கேட்கலாந்தான், ஆனால் இப்படிக் கேட்டுவிட்டால், நான் இதுவரை கஷ்டபட்டுக் கட்டியமைத்த ‘நல்ல மனுஷன்' பிம்பம் காற்றில் பறந்துபோய்விடுமே என்பதுதான் சங்கடமாய் இருந்தது.

 பூடகமாய்த்தான் இதைக் கேட்க வேண்டும் என நினைத்து 'நீ என்ன வேலை செய்கின்றாய்?' என்றேன்.

 'நான் 'நவ்' பேப்பரின் பிற்பக்கங்களைப் பார்த்ததால் உனக்கு இப்படிக் கேட்கவேண்டும் போலத் தோன்றியதா என்றாள் சட்டென்று.

இது எனக்கு இரண்டாவது அதிர்ச்சி. இவள் எப்படி என் மனதில் தோன்றுவதை எல்லாம் உடனே உடனே அறிந்து கொள்கிறாள்?

'இல்லை, நானும் வேலை ஒன்று தேடிக்கொண்டிருக்கிறேன்....அதுதான் கேட்டேன்' எனச் சமாளித்தேன்.

'சரி, நீயென்ன எனது உறவா இல்லை என்னைக் காதலிப்பவனா... உண்மையைச் சொல்வதில் நானேன் தயங்கவேண்டும். ஆமாம் நானும் இந்தப் பெண்களைப் போலத்தான் தொழில் செய்து சம்பாதிக்கின்றேன், அதிலேதும் உனக்குப் பிரச்சினையா?' என்றாள்.

மயிர் நீக்கின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை நம் பரம்பரை எனச் சொல்லித் தரப்பட்ட எனக்கு இதற்குப் பிறகு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனவே மவுனத்தைத் தேர்ந்தெடுத்தேன். அவள் மேலும் தொடர்ந்தாள்...

'ஆனால் நான் என் வாடிககையாளர்களை நேரடியாகச் சந்திப்பதில்லை. தொலைபேசியில் மட்டுமே உரையாடுவேன். உங்களைப் போன்ற ஆண்களுக்குத்தானே சற்றுக் கிறக்கமாய்க் கதைத்தாலே எல்லாவற்றிலும் உச்ச நிலைக்குப் போய்விடுவீர்களே. கொஞ்சம் குரலில் கிறக்கமும், மொழியில் நெருப்பும் இருந்தால் போதும். ஆதனால் இந்த வேலை பெரிய கஷ்டமில்லை' என்றாள்.

எனக்கு அவள் இப்படிச் சொன்னது இன்னும் அந்தரமாகப் போய்விட்டது. ஏதோ என் வீட்டுக்குள் வந்து பார்த்தது மாதிரியல்லவா எல்லாவற்றையும் போட்டுடைக்கிறாள். இனி இவளோடு கவனமாகக் கதைக்கவேண்டும் என எச்சரிக்கை நிலைக்குப் போயிருந்தேன்.

'இப்படி நான் இந்தத் தொழிலைச் செய்கிறேன் என்றால் எல்லா ஆண்களும் நிறையக் கேள்விகள் கேட்பார்கள். நீயின்னும் அதைத் தொடங்கவில்லையே?' என்றாள்.

ஏற்கனவே என் இரகசியங்களை அறிந்த அவளின் முன் அம்மணமாக நிற்பதாய் உணர்ந்துகொண்டிருக்கின்றவனுக்கு இது ஒரு கேடா என நினைத்துக்கொண்டேன்..செஸ்டர் ஸ்ரேசனை ரெயின் நெருங்கிக்கொண்டிருந்தது. இது, தான் இறங்குவதற்கான தரிப்பிடம் என அவள் சொன்னாள். என்னைப் போல வாசனைகளைப் பின் தொடர்கின்றவள் என்பதில் ஒரு நெருக்கத்தை உணர்ந்து அவளிடம் தொலைபேசி இலக்கத்தைக் கேட்போமோ என முதலில் யோசித்தேன். அது அவ்வளவு நல்லதில்லையென நினைத்து எனது இலக்கத்தை 'நவ்' பேப்பரின் ஓரத்தில் கடகடவென எழுதிவிட்டு அவளிடம் கிழித்துக் கொடுத்தேன். 'நீயும் அவர்களில் ஒருவன் தானோ' என நினைத்தாளோ தெரியாது, ஆனால் வாங்கிக் கொண்டாள்.

வள் என்னை எப்போதாவது தொலைபேசியில் அழைப்பாளென எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் அழைப்பு வரவில்லை. என்னைப் போல எத்தனை பேரைக் கண்டிருப்பாள். நான் கொடுத்த இலக்கத்தை அந்தக்கணமே  கசக்கியெறிந்துவிட்டுப் போயிருக்கக் கூடும். ரெயில்கள் ஒரு தரிப்பிடத்தில் மட்டும் தங்கி நிற்காதது போல, அவளைப் போன்றவர்களும் ஓடிக் கொண்டிருக்க விருப்பமுடையவர்களாக இருக்கக்கூடும். என்னைப் போன்ற பயணிகள் தான் ஏதோ ஒரு தரிப்பிடத்தில் தினமும் இறங்கி சலித்துப் போன வாழ்க்கையை வாழவேண்டியிருக்கிறது..

அடுத்த வாரவிறுதி வந்தபோது, வீட்டிலிருந்தால் பஞ்சி இன்னொரு போர்வையாய் என்னைப் போர்த்திவிடுமென்பதால் அவசரமவசரமாய் வாசனையை நுகரப் புறப்பட்டேன். வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. மரங்கள் எல்லாம் மஞ்சளாய் இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தன. நான் இரெயினுக்குள் என்னுடைய வழமையான நேரத்திற்கு ஏறிப் பயணித்தபோது, அவள் செஸ்டர் ஸ்ரேசனில் ஏறுவதைப் பார்த்தேன். 'என்ன ஆச்சரியமாக இருக்கிறதா' என்றாள். ' அப்படி இல்லையே...' என, அவள் என்னை இதுவரை தொலைபேசியில் அழைக்காத ஏமாற்றத்தை மறைத்துப் பதில் சொன்னேன். அவளுக்கு இது விளங்கியதோ என்னவோ தெரியாது. 'வாசத்தைப் பின் தொடரும் நமக்கு தொலைபேசி அழைப்புக்கள் அவ்வளவு முக்கியமில்லை. வாசம் சொல்லாத செய்தியையா தொலைபேசி சொல்லிவிடும்? என்றாள். உண்மைதான், இந்த நறுமணம் எனக்கு ஏதோ இரகசிய அழைப்புக்களை விடுத்துக்கொண்டிருப்பதால்தானே மற்ற அனைத்தையும் மறுத்து இதன் பின்னால் நான் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறேன் என நானும் நினைத்துக் கொண்டேன்.

இவ்வாறாக ஒவ்வொரு வாரவிறுதியும் சந்தித்துக்கொண்டிருந்தோம். நாங்கள் வாசனைகளினூடாக அனுப்பப்படும சிக்கலான சமிக்ஞைகளை அறிவதில் இன்னும் தேர்ச்சி பெறுவதைப் பற்றி நிறையக் கதைத்தோம். எனது நாட்கள் வாசனைகள் நிரம்பிய அழகிய உலகமாய் இருந்தது. நான் கொஞ்சங் கொஞ்சமாய் நண்பர்களை வழமையாகச் சந்திக்கும் கோப்பிக்கடைகளில் சந்திப்பதைத் தவிர்க்கத் தொடங்கினேன். வருகின்ற தொலைபேசி அழைப்புக்களையும் தவிர்த்து, வாசத்தின் மொழியினூடு வரும் அழைப்புக்களோடு பேசவும் தொடங்கியிருந்தேன். ஒருமுறை அவளிடமிருந்து கோதுமை வாசம் வருவது போலத் தோன்றியது. 'நீ கோதுமை மணத்தை உடையவள்' என்றேன். இல்லை நான் நீராலானவள். உன்னைப் போன்றவர்கள் நினைக்கும் வாசங்களுக்கு ஏற்ப மாறிவிடக் கூடியவள்' எனச் சிரித்துக் கொண்டு சொன்னாள்.

ருநாள் அவளைச் சந்தித்தபோது சற்றுப் பதற்றமாயிருந்தாள். வாசங்களைப் பற்றிக் கதைப்பதை மறந்து விட்டு, யாரோ அவளைப் பின் தொடர்வது போன்ற அச்சத்திலிருந்தாள். மெல்லிய குரலில் 'உன்னோடு கொஞ்ச நாளைக்கு வந்து தங்கியிருக்க முடியுமா?' என்றாள். நான் அப்போது ஒரு தமிழ்க் குடும்பத்தின் வீட்டின் நிலவறையில் வாடகைக்கு இருந்தேன். ‘அதுவல்ல பிரச்சினை, உன்னை என்னறையில் வைத்திருக்கலாம். ஆனால் நான் நேசித்துக்கொண்டிருப்பவள் நோர்வேயில் தற்சமயம் படித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது?' எனக் கேட்டேன். 'நீ அவளுக்கும் வாசனையின் மொழியைச் சொல்லிக் கொடுத்திருக்கவேண்டும். அது தெரிந்திருந்தால் அவள் எதற்காய் நான் இப்படிக் கேட்கிறேன் என்பதை மட்டுமில்லை, என்ன சிக்கலில் மாட்டியிருக்கின்றேன் என்பதையும் புரிந்திருப்பாள்' எனச் சொல்லிவிட்டு எனக்கொரு முத்தத்தைத் தந்துவிட்டு செஸ்டர் ஸ்ரேசனில் இறங்கிப் போகத் தொடங்கினாள். இந்த முறை பனம்பழத்தின் வாசனை அவளிலிருந்து வீசுவது போலத் தோன்றியது. இரெயின் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது. நான் அவள் இறங்கிப் போகும் ஸ்ரேசனிலிருந்து பனம்பழத்தின் வாசனையைப் பின் தொடரத் தொடங்கியிருந்தேன்.

அதன் பிறகு அவளை நான் சந்திக்கவில்லை என்பது மட்டுமின்றி எனக்குப் பிடித்த அந்த வாசனைகளும் எனனை விட்டுபோய்விட்டன. மீண்டும் மீண்டும் நினைவிலும் நுகர்விலும் கொண்டு வர எத்தனை பிரயத்தனப்பட்டாலும் என்னால் அந்த வாசனையை மீளக் கொண்டுவர முடியவில்லை. இப்போது எல்லாம் சனம் பிதுங்கும் நெரிசலில் மனிதர்களின் வியர்வை நாற்றத்தைத்தான் என்னால் நுகர முடிந்தது. அவளும் இல்லாது போனதன்பின், வாரவிறுதிகளில் குறிப்பிட்ட ரெயினுக்காய் காத்திருந்து வாசனையைத் தேடிப் போவதை எல்லாம் நிறுத்திவிட்டிருந்தேன். நான் சந்தித்த அந்தப் பெண் தான் இந்த வாசனையைக் காவிய கடைசிப் பெண்ணாக இருந்திருக்க வேண்டும். ஒரு முதியவர் இறக்கும்போது ஒரு நூலகமே இல்லாமற் போய்விடுகின்றதெனும் சீனப் பழமொழியைப் போல இந்த நறுமணத்தின் இறுதித் தூதுவர் செஸ்டர் ஸ்ரேசனில் இருந்து நீங்கிப் போயிருக்க வேண்டும். ஆனால் அவள் நேரடியாக இருக்காதபோதும் முன்னர் எப்படி என்னால் அந்த வாசனையை சப்வே ரெயினுக்குள் நுகர முடிந்தது என்பதுதான் அதிசயமாயிருந்தது. சிலவேளைகளில் அவளோடு தொலைபேசியில் கதைக்கும்  வாடிக்கையாளர்களின் மூலந்தான் ரெயினில் வாசம் பரவியபடி இருந்ததோ தெரியவில்லை. நேரே சந்திக்காமல் காற்றலைகளினூடு பேசுவதன் மூலம் நறுமணத்தைப் பரப்பவர்கள், வாசனையில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்கள் என்பதைப் பிறகு அறிந்துகொண்டேன்.  அவர்களால் வாசனையைக் கொண்டு எதுவும் செய்யமுடியும். அதனால்தான் ஒவ்வொரு முறையும் நான் விரும்பும் வாசத்திற்கேற்ப அவளால் வாசனைப் பரப்ப முடிந்திருக்கிறதென நினைத்துக் கொண்டேன்.

ஒரு வெள்ளிக்கிழமை, வாரவிறுதியில் வரப்போகும் ஓய்வை எண்ணித் திளைத்தபடி ரெயினில் 'மெட்ரோ' பேப்பரை வாசித்துக்கொண்டு போனேன். இலங்கையில் யாரோ ஒரு ராஜபக்சே தன் மனைவி நாய் வேண்டியதற்காய் ஐரோப்பாவிற்கு தனி விமானம் அனுப்பியிருந்ததை ஒரு செய்தியாய்ப் போட்டிருந்தார்கள். மனைவி மீது இவ்வளவு பிரியமாயிருக்கும் ராஜபக்சேக்கள் தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் சற்றேனும் மனிதாபிமானத்தோடு இருந்திருக்கலாமென நினைத்துக் கொண்டேன். செஸ்டர் ஸ்ரேசனைத் தாண்டும்போது அவளின் ஞாபகம் வந்தது. எனது தொலைபேசி இலக்கதைக் கொடுத்திருந்தபோதும் அவள் ஏன் என்னை அழைக்கவில்லை எனவும் யோசித்தேன். ஆகக் குறைந்தது அவளிடம், நான் நீண்டகாலம் தேடி அலைந்த வாசனையை அவளை இறுதியாச் சந்தித்தபின் காணாமற் போய்விட்டதென்பதைச் சொல்ல வேண்டுமென நினைத்திருந்தேன். ஒரேயொரு முறையாவது எனக்குப் பதின்மங்களில் பிடித்த ஈரப்பலா வாசனையை அவளின் உடலில் இருந்து நுகர்ந்து பார்க்கவேண்டுமெனவும் ஆசை கிளர்ந்தது.

இவ்வாறு நினைவுகள் அலைக்கழிக்க, மெட்ரோவின் அடுத்த பக்கத்தைப் புரட்டினேன்.  பஞ்சாப்பில் பிறந்த ஜஸ்மீட்ற் என்பவர் வன்கூவரில் நீண்டகாலம் வசித்தவர் என்றும், அங்கே முஸ்லிம் இளைஞர் ஒருவரைக் காதலித்ததால் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளாததால் வீட்டை விட்டு ஓடிவந்தவர் எனவும், ரொரண்டோவிற்கு சிலமாதங்களுக்கு முன் வந்து தலைமறைவாக வாழ்ந்த அவரை யாரோ நேற்று இரவு டொன்வெலி வீதியிலுள்ள பாலத்தின் கீழே கொன்று போட்டிருக்கின்றனர் எனவும் போடப்பட்டிருந்தது. செய்தியோடு பிரசுரிக்கப்பட்ட புகைப்படம் நான் சந்தித்த பெண்ணின் சாயலில் இருந்ததைப் பார்த்து மனம் அதிர்ச்சியில் உறைந்தது.  மேலும் இது தற்செயலாய் நடந்த கொலையல்லவெனவும், கெளரவக் கொலையாக இருக்குமெனவும் கிடைக்கப்பெறும் ஆதாரங்களினூடாக பொலிஸ் சந்தேகிப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது.

அவளை யாரோ பின் தொடர்கிறார்கள் என்று சந்தேகித்ததால் தான் என்னோடு கொஞ்சநாள் வந்து இருக்கலாம் எனக் கேட்டிருக்கின்றாள் போலும். நான் தான் அவளின் சிக்கலை விளங்கிக் கொள்ளாமல், என் கெளரவத்தைப் பார்த்து அவளைக் கைவிட்டிருக்கின்றேன். அவளைக் கொன்றவர்கள் மட்டுமில்லை,  நானுங்கூட என் கெளரவத்தின் பொருட்டு ஒரு கொலை நிகழக் காரணமாயிருக்கின்றென நினைக்க மிகுந்த கவலையாயிருந்தது.

ஒரு பெண்ணின் அகால மரணம் நிகழும்போது உலகில் இருந்து ஒரு வாசனை இல்லாமற் போகின்றது. நம் இதிகாசத்திலும் சூர்ப்பணகையின் மூக்கை வெட்டியது கூட அவள் தனக்குப் பிடித்தமான ஒருவனின் வாசனையைப் பின் தொடர்ந்து போய்விடக்கூடாது என்கின்ற அச்சத்தினால்தான் நிகழ்ந்திருக்கின்றது போலும்.

பொறுப்பற்றதன்மையால் ஒருத்தியைக் கொலை செய்துவிட்டென குற்றவுணர்வுடன் நோர்வேயில் படித்துக்கொண்டிருந்த காதலிக்கு நடந்ததைத் தொலைபேசியில் சொல்லிக் கொண்டிருந்தேன். கணங்கள் கழியக் கழிய என் அறை எங்கும் கோதுமையின் வாசனை பரவத் தொடங்கியது. எனக்குத் திடீரென்று, அருகில் இல்லாமலே காற்றலைகளினூடு பேசுவதன் மூலம் நறுமணத்தைப் பரப்புபவர்கள் நினைவில் வந்தார்கள். மேலும் வாசனையில் மிகுந்த தேர்ச்சி பெற்ற அவர்களால் வாசனையைக் கொண்டு எதுவும் செய்யமுடியும் என்பதும் ஞாபகத்தில் வந்தது. அப்படியாயின் என் காதலி இவர்களில் ஒருத்திதானோ? ஆக தொலைவில் இருக்கும் அவள் என்னை வாசனைகளால் எந் நேரமும் பின் தொடந்து கொண்டிருக்கின்றாளா? இப்போது கோதுமை வாசம் போய் ஈரப்பலா வாசம் கமிழத் தொடங்கியிருந்தது. எனக்குப் பயத்தில் உடல் வேர்க்கத் தொடங்கியது.. அப்படியாயின் நான் உண்மையாகவே அந்தப் பஞ்சாபிப் பெண்ணைச் சந்திக்கவேயில்லையா?

.......................
('அம்ருதா' - ஜூலை, 2014)
நன்றி: ஓவியம்: ராஜா சேகர்

காலமற்ற வெளியில் மிதந்தபடியிருக்கும் முத்தங்கள்

Wednesday, July 02, 2014

ரான் பாமுக் இன்னமும் திறக்காத அப்பாவின் சூட்கேஸை உற்றுப்பார்த்தபடி இருக்கின்றார். அதில் பிரியங்கள் இருக்கின்றதா அல்லது கடக்கமுடியாத் துயரங்கள் இருக்கின்றதா என்கின்ற பதற்றங்களுடன் 'அப்பாவின் சூட்கேஸை'ப் பற்றி தன் நோபல் பரிசு உரையை அவர் நிகழ்த்துகின்றார். தனது இருபதுகளில் ஓர் எழுத்தாளனாய் வரவேண்டுமென விரும்பி எல்லாவற்றையும் உதறித்தள்ளி -நான்கு வருடங்கள் செலவழித்து- முதல் நாவலை எழுதியபோது எந்த மனோநிலையில் ஓரான் இருந்திருப்பார். 'எனது பெயர் சிவப்பில்' வரும் நுண்ணோவியர்களில் ஒளிந்திருப்பது ஓவியராக வரவிரும்பி தோற்றுப்போன இன்னொரு ஓரான் தானா?

ஒரானின் அப்பா மகன் வாசிப்பதற்காய், இதுவரை காலமும் தான் எழுதியவற்றைத் தன் சூட்கேஸிற்குள் போட்டு கொடுத்துவிட்டுப் போகின்றார். ஒரானின் தகப்பனாரும் ஒருகாலத்தில் கவிஞனாக வர விரும்பி தன் முயற்சியில் தோற்றுப் போனவர். நினைத்தபோதெல்லாம் ஓரானையும் தன் குடும்பத்தையும் விட்டுவிட்டு பாரிஸிற்கும் அமெரிக்காவிற்கும் பயணமாகிக்கொண்டிருந்தவர். இந்தப் பயணங்கள் தான் விரும்பியதை எழுதுவதற்கான சூழலையும், காலத்தையும் தருமென நம்பி அடிக்கடி காணாமற் போய்க்கொண்டிருந்தவர். அப்பாவை நினைவு கொள்ளும் ஓரான்,  ஓர் எழுத்தாளராக அப்பா வர முடியாவிட்டாலும் தனது வாழ்க்கையை நண்பர்களோடும் குடும்பத்தோடும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு மறைந்து போயிருக்கின்றார் எனக் குறிப்பிடுகின்றார். தன்னால் தனது தந்தையைப் போல உற்சாகமாகவும், நிம்மதியாகவும் வாழ்க்கையை எதிர்நோக்க முடியவில்லை என்பதைத்தான் மறைமுகமாக அப்பாவை நினைவுகூர்வதன் மூலமாக ஓரான் சொல்ல வருகின்றாரா?

எழுதுபவர்களெல்லாம் தம்மை எவரும் தொந்தரவுபடுத்தாத ஓர் அறையில் தனித்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள். ஆனால் தனித்திருக்கும் கொஞ்ச நேரத்திலேயே தங்களால் மனிதர்கள் அருகில் இல்லாமல் நிம்மதியாக இருக்கமுடியாது என்பதும் அவர்களுக்குப் புரிந்துவிடுகின்றது. காதல் வேண்டாம் என வரும் உறவுகளை உதறித்தள்ளிவிட்டு, தனித்திருக்கும்போது காதல் தங்கள் கதவைத் தட்டாதா என எதிர்பார்க்கும் சாதாரண மனிதர்களின் மனதுதான் இந்த எழுத்தாளர்களுக்கு உரித்தானதோ?

சல்மான் ருஷ்டி முதல் நாவல் வெளியிட்டு வந்த 700 பவுண்ட்ஸோடு இந்தியாவைச் சுற்றியலைகிறார். அந்தப் பொழுதில் முளைத்ததே 'நள்ளிரவின் குழந்தைகளை' எழுதும் யோசனை. மீண்டும் இங்கிலாந்து திரும்பும்போது அவரிடம் பணமேயில்லை. ஒரு விளம்பரக் கம்பனியில் வேலைக்குச் சேர்ந்துகொள்கிறார். ஒருகட்டத்தில் எழுதுவதே முக்கியமென வேலையை உதறித்தள்ளும்போது நிறுவன அதிபர் 'ஊதியத்தை இன்னும் உயர்த்துகிறேன், வேலையில் இரு' என்கிறார்.  பணத்திற்காக அல்ல, எழுதுவதற்காகவே வேலையை விடுகிறேன் என  ருஷ்டி கூறுகின்றபோது, அந்த நிறுவன அதிபர் இவன் பிழைக்கத்தெரியாதவன் என்றுகூட நினைத்திருக்கலாம்.

எழுத்தாளர்கள் எப்போதும் பித்துப்பிடித்தவர்கள் போலும். எதற்காய் இவர்கள் இப்படியான முடிவுகளை எடுத்தார்கள் என்பதை விளங்கிக்கொள்வதே கடினமானதுதான். மேலும் எந்த நாட்டில் எழுத்தாளர்கள் இருந்தாலும், தம்மை வாசிக்காத மதிக்காத ஒரு நாட்டில்/சமூகத்தில் தான் தாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என அநேகர் கவலைப்படவும் செய்கின்றார்கள். ஆனால் அவர்கள் அறியாத தேசத்திலிருந்து, தினந்தோறும் புதுப்புது வாசகர்களை அவர்களை வாசித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிவதில்லை.

மொழியை, கலாசாரத்தை, நாடுகளின் எல்லைகளைத்தாண்டி ஒவ்வொரு படைப்பும் எங்கோ தொலைவிலிருக்கும் பல்லாயிரம் வாசகர்களைத் தீண்டிக்கொள்ள அல்லவா செய்கிறது? அந்த வாசகர்கள் இவர் எங்கள் எழுத்தாளரென கோப்பிக்கடைகளிலும், வீட்டு வரவேற்பறைகளிலும் விவாதிக்கொண்டல்லவா இருக்கின்றார்கள். பெயர் தெரியாத தேசமொன்றில் ஒரு வாசகர் ஒரு பிரதியைக் கொண்டாடுகின்றபோது எழுத்தாளர்கள் தம் மொழியை/பண்பாட்டை/கதை நிகழும் புதிய நிலப்பரப்பை அறிமுகப்படுத்தும் பெரும்பணியை தெரிந்தோ தெரியாமலோ செய்தும் விடுகின்றார்கள்.
கலாச்சாரங்களையும், தேசங்களின் எல்லைகளையும் தாண்டி மனிதர்களுக்குள் இருக்கும் நுண்ணுணர்வுகளோடு ஒவ்வோர் படைப்பும் உரையாடுகிறதல்லவா? சிலவேளைகளில் அருகிலிருக்கும் மனிதர்களை விட தூரதேசத்திலிருக்கும் ஓர் எழுத்தாளரோடு நாம் அதிகம் நேசம் கொள்கின்றோமல்லவா? நாமெல்லோருந்தான் ஈற்றில் தூசுகளைப் போல இந்தப் பிரபஞ்சத்தில் கரைந்துவிடப் போகின்றோம். ஆனால் எழுதுபவர்கள் நம் ஆன்மாவைத் தீண்டும்போது அவர்களின் நினைவுகளுமல்லவா நம்மோடு கலந்துவிடுகிறது?  .

ஆனால் அவர்களின் வாழ்வு சந்தோசமாய் இருந்ததா?  காலம் முழுதும் துயரில் தோய்ந்தொழுகிய வாழ்க்கையை அல்லவா தாஸ்தவேஸ்கி வாழ்ந்திருகின்றார். நறுக்கான சொற்களில் கதைகளைச் சொல்லிய ரேமண்ட் காவருக்கோ, புதுமைப்பித்தனுக்கோ அவர்கள் விரும்பிய வாழ்வு கிடைத்ததா? பீடில்ஸ் கலாசாரத்தில் முக்கியமானவரும், பயணிப்பதையே வாழ்வின் உன்னதமாய்க்கொண்டவருமான ஜாக் கீரோவிற் (Jack Kerouac) ஏன் அத்தனை இளமையில் இறந்து போகின்றார்?  ஜாக்கைப் போல தன்னையே பிரதிகளில் சிதைத்துப் பார்த்த ரோபார்ட் பாலானோவை (Robert Bolano)  அவர் வாழ்ந்த காலத்தில் யார் கண்டுகொண்டார்கள்?

ருவகையில் இந்த எழுத்தாளர்கள் எல்லாம் தாம் வாழ்ந்த அந்தக் கணத்தில் வாழ முயற்சித்திருப்பார்களோ போலத் தோன்றுகிறது. நம்மைப் போல என்றுமே வரமுடியாத ஒரு பொற்காலத்திற்காய்க் காத்திருக்கவில்லைப் போலும். இல்லாவிட்டால் அவர்கள் தம் கனவுகளைப் பெருக்கி பெருக்கி எதையும் எழுதாமற் போயிருக்கக்கூடும். அவர்கள் அந்தக் கணத்திலே வாழமுடிந்ததால் தான், தாம் விரும்பியதைச் செய்திருக்கின்றார்கள். மகிழ வேண்டிய கணத்தில் மலர்ந்து, துயரம் சூழந்த பொழுதுகளில் சோர்ந்து அதையதை அந்தக் கணங்களில் அனுபவித்துப் போயிருக்கின்றனர். மதுவினதும் போதைப்பொருட்களினது பாவனை சிலரை உச்சத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது, பலரைச் சிதைக்கவும் செய்திருக்கிறது
எழுதுபவர்களில் அநேகர் எப்போதுமே எல்லாவற்றையும் உற்றுப் பார்த்தபடியும், கேள்விகளை எழுப்பியபடியும் இருக்கின்றார்கள். எல்லோராலும் வாழ்வை அனுபவிக்கமுடியும், ஆனால் கலைகளினூடாடு தாம் உணர்பவற்றை முன்வைக்க சிலராலேயே முடியும். அதிலும் சிலரால்தான் இன்னும் நுட்பமாகவும் ஆழமாகவும் முன்வைக்கமுடியும். ஆகவேதான் இந்த எழுத்தாளர்கள் மற்ற விடயங்களில் மிக மிகச்சாதாரணமாய்த் தெரிந்தாலும் அவர்களின் படைப்புக்களின் மூலம் நமக்குள் உயர்ந்து நிற்கின்றனர் அவர்களை மேலும் மேலும் நேசிக்க முடிகிறது.

இவர்கள் பிற எல்லாவற்றிலும் தோற்றவர்கள் என்றாலும் தம் படைப்பின் மூலம் மினுங்கிக்கொண்டிருப்பதால்தான் அவர்களைச் சலிப்பின்றி பின் தொடர்ந்து செல்ல முடிகிறது. ஆகவேதான் யாருமற்றவர்களாய் எதுவுமற்ற சூனியத்தில் அலைகிறோமென எப்போதாவது அவர்களின் உள்மனக்குரல்கள் பேசுகின்றபோது நாம் அவர்களை கதகதப்பாய் அணைந்துவிட விரும்புகிறோம்.

மேலும், காலமற்ற வெளியில் அவர்களுக்கான எமது  முத்தங்கள் என்றென்றும்  மிதந்தபடியே இருக்கின்றன.

(நன்றி: 'உரையாடல்' இதழ் -01)