கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

என்னுடைய பின்-நவீனத்துவ புரிதல்கள்

Wednesday, February 21, 2007

(அல்லது பின்-நவீனத்துவமும் எனக்குப் பிடிக்கப்போகும் சனியும்)

தமிழ்ச்சூழலில் காலத்துக்காலம் பலவேறு இசங்கள் தீவிரமாய் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. காலத்தின் நீட்சியில் சில தங்கியும் பல உதிர்ந்தும் போயுமிருக்கின்றன. structuralism (அமைப்பியல்), existentialism(என்ன தமிழில்? இருத்தலியம்), magical realism (மாய/மாந்திரீக யதார்த்தம்), post-modernism (பின்-நவீனத்துவம்) போன்றவை அவற்றில் சில. இன்றையகாலத்தில் பின்நவீனத்துவம் தீவிரமாய் விவாதிக்கப்பட்டும், அதனூடாக மூடப்பட்ட இருண்ட பக்கங்களின் தாழ்ப்பாள்கள் திறக்கப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன. பின்நவீனத்துவத்தை ஒரு சாரார் ஏற்றுக்கொண்டும், இன்னொருசாரார் அது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தபடியும் தமிழ்ச்சூழலில் இருக்கின்றனர்.

இக்கட்டுரை(?) தகவல்களின் அடிப்படையில் எழுதப்படப்போவதில்லை. ழாக் டெரிடாவையும், ஸர்த்தரையும், நீட்சேயையும் தேடிக்கொண்டு போகப்போவதுமில்லை(உண்மையைச் சொல்வதனால் இவர்கள் எழுதிய எந்த மூலநூலையும் நான் வாசித்ததுமில்லை). என்னுடைய வாசிப்பு மற்றும் அனுபவங்களினூடாக நான் புரிந்துகொள்பவற்றை இயன்றளவு எளிமையாக பகிர்ந்துகொள்கின்றேன். தவறுகள் முழுமனதோடு ஏற்றுக்கொள்ளப்படும்; திருத்தங்கள் வரவேற்கப்படும்.

2000 ஆண்டளவில் பின்நவீனத்துவம் என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் எனக்கு பரீட்சயமாயிருக்கவில்லை. வளாகத்தில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்த காலம் அல்லது அப்படி பாசாங்கு செய்துகொண்டிருந்த நேரம். சக்கரவர்த்தியின் நேர்காணலொன்று இங்குள்ள 'முழக்கம்' பத்திரிகையில் வெளிவந்திருந்தது. அதற்கான எதிர்வினையில்தான் முதன்முதலில் பின்நவீனத்துவம் குறித்து எனது சந்தேகங்களை முன்வைத்திருந்தேன். நேர்காணலில் சக்கரவர்த்தி 'கட்டவிழ்ப்பு' என்ற சொல்லை முன்வைத்து சில்வற்றை உரையாடியதாய் நினைவு. அந்தக் கடிதத்தில் நான் கூறியது இதுதான், 'சமூகக் கட்டமைப்பை (structure of society) உடைப்பதற்கு முன் மீள நிர்மாணிப்பதற்கான காரணிகள் தென்படவேண்டும். இல்லாவிடின் அதைவிட ஆபத்தான சீரழிவுகளைத்தான் சமூகம் சந்திக்கவேண்டியிருக்கும்....' என்றவாறு எனது அக்கடிதம் நீளும். அன்றையபொழுதுகளில் பின்நவீனத்துவம் குறித்த எதுவுமே எனக்குத் தெரியாது. இது ஒரு சாதாரண வாசக மனநிலையில் சிந்தித்த விடயம். இன்னும் தெளிவாகக் கூறுவதென்றால், அமெரிக்கா ஈராக்கில் நுழைந்தபோது பெரும்பானமையான மக்கள் 'கொடுங்கோலன்' சதாம் ஹுசைனிலிருந்து விடுதலை என்று கொண்டாடியிருந்தனர். அதே மக்கள்தான், நாங்கள் சதாமின் ஆட்சியில் இவ்வளவு கொடுமையான சூழ்நிலையில் இருக்கவில்லை என்று இப்போது கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஆக, சதாமைவிட இன்னொரு நல்லவர் வரப்போகின்றார் என்று தீர்க்கமாய் தெரியாதவிடத்தில், அகற்றுவது ஆபத்தாய் அல்லவா இருக்குமென சிந்தனை அப்படியொரு திசையில் விரிந்திருந்தது. ஆனால் இந்தச்சிந்தனையை ஒரு பின்நவீனத்துவவாதி(?) இலகுவாய் நிராகரிப்பார். எனெனில் கட்டவிழ்ப்பு என்ற சொல் இவ்வாறான அர்த்தத்தைக் கொள்வதல்ல.

''அரசியல் என்பது வெறும் காத்திருப்பு அல்ல. கட்டவிழ்ப்பு என்பது எதோ ஒருவகையில் இடதுசாரி அரசியலுக்குப் பயன்படவேண்டும் என்கிறார் டெரிடா. தனது கட்டவிழ்ப்பு மார்க்சியப் பராம்பரியத்திற்குப் புறநடை அல்ல எனவும் அவர் கருதுகிறார். மேற்குறித்த புரிதல்களின் அடிப்படையில் நீதிக்காகவும், சனநாயகத்துக்காகவும் எடுக்கப்பட்ட முடிவே நமது அரசியலை ஆற்றுப்படுத்த வேண்டும். இங்கு நீதியில்லை, சனநாயகம் இல்லை என்கிற புரிதலே, புரிதலின் அடிப்படையிலான நமது இருப்பே, செயல்களே நீதி, சன்நாயகம் ஆகியவற்றிற்கான காத்திருப்பு ஆகும். பழைய மொழியின் கட்டமைப்பில் சிக்கி அரசியல் இழந்து நிற்கும் நமது இடதுசாரி அரசியலை மறு அரசியலாக்கம் செய்வதே கட்டவிழ்ப்பின் இன்றைய பணியாகும். அதுவே இன்றைய அரசியலைச் செயலுக்கு உந்தும். எனவே சனநாயகம்/நீதி குறித்த இன்றைய மொழியை நாம் அழிக்க வேண்டும். எல்லா அரசியலையும் மீள் அரசியலாக்கம் செய்ய வேண்டும். எல்லா மதிப்பீடுகளையும் மறு மதிப்பீக்குள்ளாக்க வேண்டும்' என்று 'கறுப்பு' தொகுப்பின் கட்டுரையொன்றில் அ.மார்க்ஸ் கூறுகின்றார்.

பின்நவீனத்துவம் ஒரு கருதுகோள்(?) (condition). இன்னும் எளிமையாக்கினால் மார்க்ஸிசத்தின் போதாமைகளை/இடைவெளிகளை நிரப்புவதற்காய் தோன்றியது என்றும் கூறுலாம் (எல்லா இடங்களிலும் பிரயோகிக்கமுடியாது). பின்நவீனத்துவம் மார்க்ஸிசம் போல தீர்க்கமான வரைபுகளை முன்வைப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. எனெனில் அது தன்னளவில் சிதைவுகளை ஏற்றுக்கொள்வதோடு, சட்டகங்களை நிராகரிக்கின்றது. உதாரணத்திற்கு விக்கிபீடியாவை எடுத்துக்கொள்வோம். ஒருவர் ஒரு விடயம் எழுதும்போது, பிறகு வரும் பலர் அதில் பல திருத்தங்களை செய்து கொண்டிருக்க்கின்றார்கள். எனவே முதலாவதை அடிப்படையாக வைத்து -அவற்றைச் சிதைத்தபடி- திருத்தங்கள் செய்யப்படுகின்றன. பின்நவீனத்துவம் இதை 'மறுவாசிப்பு செய்தல்' என்கின்றது (please note that the above example is not a good example of this word, i just simplified it). அதே சமயம் இப்படி பலர் ஒரு பிரதியை வாசிக்கும்போது பலவேறு வாசிப்புக்கள் வரச்செய்கின்றன. எனவே எது உண்மை என்ற குழப்பம் வருகின்றது. பின்நவீனத்துவம் முடிந்த உண்மை என்ற ஒன்றே இல்லையென்று நிராகரிப்பதோடு பல உண்மைகள் (பேருண்மைகள்?) என்ற கதையாடலை முன்வைக்கின்றது.

(2)
பின்நவீனத்துவம் என்றால் என்னவென ஆறேழு வருடத்துக்கு முன் -என் வாசிப்பையும் எழுத்தையும் ஊக்குவித்துக்கொண்டிருந்த- நண்பரொருவரிடம் கேட்டிருந்தேன். 'எல்லாவற்றையும் சந்தேகிக்க வேண்டும்' என்று பின்நவீனத்துவம் கூறுகின்றது என்றார். பிறகு வேறொரு நண்பருடன் மின்னஞ்சல் வழியே நிகழ்ந்த -பெரியார், திராவிடம், etc- விவாதத்தின்போது, நண்பர் 'ஆசிரியர் இறந்துவிட்டார்' என்ற சொல்லை பாவித்தார் (நீட்சே தான் கடவுள் இறந்துவிட்டார் என்ற வாதத்தை முதன்முதலில் முன்வைத்தவர்). 'பிரதியைப் பார்; பிரதி எழுதியவரைப் பார்க்காதே' என்பதுதான் இதன் அர்த்தம். ஒரு நல்ல பெண்ணியப்பிரதியைக்கூட தனது மனைவியை வதைத்துக்கொண்டிருக்கும் ஒருவன் எழுதக்கூடும் என்ற கருத்தாக்கத்தை நண்பர் முன்வைத்து உரையாடியபோது, நான் அறம் சம்பந்தமான திசையில் சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஒருவன் தன் மனைவியைச் சிதைத்துக்கொண்டுதான் இப்படியொரு நல்லபிரதியை எழுதியிருக்கின்றான் என்றால் எனது பார்வைகளை மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கும்; அந்தப்பின்புலத்தில்தான் என்னால் பிரதியை அணுகமுடியும் என்ற வகையில் நான் உரையாடிக்கொண்டிருந்தேன். நணபர் அப்படியில்லை -ஆசிரியர் இறந்துவிட்டார்- என்று வகையில் பாரென்று மற்றொரு திசையில் விவாதிப்படியிருந்தார். இன்றும் என்னால் தீர்க்கமான முடிவுக்கு வரமுடியாத ஒரு முக்கியபுள்ளி இது.

பின்நவீனத்துவம் உண்மை என்பது ஒன்றே ஒன்று என்பதை ஏற்றுக்கொள்வதேயில்லை. உண்மைகள் பல என்கின்றது. உதாரணத்திற்கு, சி.புஸ்பராஜா எழுதிய 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற நூலை எடுத்துக்கொள்வோம். சி.புஸ்பராஜா தனக்குத் தெரிந்த 'உண்மையை' கூறுகின்றார். சி.புஸ்பராஜாவை வாசித்த ஒரு வாசகருக்கு தமிழரசன் சத்தியக்கடதாசியில் எழுதுகின்ற எதிர்வினை வேறொரு 'உண்மையை'த் தருகின்றது. அதேபோன்று சாத்திரி என்பவர் 'ஒரு பேப்பரில்' எழுதுகின்ற தொடரை வாசிக்கும்போது வேறொரு 'உண்மை' துலங்குகின்றது. இதை எழுதுகின்ற மூவரும் தாங்கள் உண்மையைத்தான் எழுதுகின்றோம் என்கின்றார்கள். ஆனால் இவற்றை வாசிப்பவருக்கு ஒரு சம்பவத்திற்கே பலவிதமான கோணங்களில் உண்மைகள் இருப்பது புரிகின்றது. எனவே இதைத்தான் பின்நவீனத்துவம் பல உண்மைகள் இருக்கின்றன என்று கூறுகின்றது; ஒரேயொரு உண்மை என்பதை நிராகரிகின்றது.

பெருங்கதையாடல்கள், சிறுகதையாடல்கள் என்பது பின்நவீனத்தில் அதிகம் புழங்கும் வார்த்தைகள். பெருங்கதையாடல்கள் கட்டமைத்ததற்கு ஒரு உதாரணமாய், எனக்கு சிறுவயதில் ஆறுமுகநாவலர் சைவத்தை கட்டமைக்க வந்த ஒரு தேவதூதராக கற்பிக்கப்பட்டது. யாழ் இந்துக்கல்லூரியில் படிப்பவர்க்கு இப்பவும் அப்படித்தான் அவர் கட்டியமைக்கப்படுகின்றார் (படித்த சொற்பகாலத்தில் அதைக் கண்டிருக்கின்றேன்). இப்பெருங்கதையாடல்களை -ஆறுமுகநாவலர் சாதித்திமிர் பிடித்தவர்- என்ற சிறுகதையாடல்கள் அதை கட்டவிழ்ப்பு செய்கின்றன. ஆறுமுகநாவலர் பற்றி இதுவரை சொல்லப்பட்ட கருத்துக்களை மீள் அரசியலாக்கும்செய்யும்படி இச்சிறுகதையாடல்கள் கோரி நிற்கின்றன. இதற்கு இன்னொரு அருமையான உதாரணமாய் இப்போது வாசித்துக்கொண்டிருக்கின்ற ந.முத்துமோகனின் 'இந்திய தத்துவங்களின் அரசியல்' நூலிருந்து சிறு பகுதியைத் தரலாம்.

'...மேற்குறித்த பகுப்பில் ஆரியர் வருகைக்கு முந்திய சிந்துவெளி நாகரீகம் குறித்த தகவல்களெல்லாம் அடையாளமின்றி முழுவதும் அழித்தொழிக்கப்படுகின்றன. வேதங்களிலிருந்துதான் எல்லாமே தொடங்கின என்பது போன்ற மாயச் சித்திரம் உருவாக்கப்படுகின்றது. சிந்துவெளி நாகரீகத்தில் முறைப்படுத்தப்பட்ட தத்துவங்கள் தோன்றவில்லை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அந்தப் பண்பாடு எங்கே போய்த்தொலைந்தது? தத்துவம் என்பதைவிட பண்பாடு என்பது அதிக அடிப்படையான யதார்த்தம் அல்லவா? சிந்து வெளி நதிக்கரையிலும் இன்றைய ஆப்கானிஸ்தானிலிருந்து உத்திரப்பிரதேசத்தின் மேற்குக் கரையோரம் வரை பரவிக்கிடந்த அந்த நாகரீகத்திற்கு என்ன ஆயிற்று? இத்தனை அகலமாகப் பரவிக்கிடந்த ஒரு பண்பாடு எந்தத் தடயமும் இன்றி செத்து ஒழிந்து போய்விடுமா? சமணர்கள் 24 தீர்த்தங்கரர்கள் என ஒரு வரலாற்றைக் கூறுகின்றார்களே, அதனை முழுவதும் புறக்கணிப்பது எப்படி? வைதீகம்/ அவைதீகம் என்ற பகுப்பு இக்கேள்விகளுக்கெல்லாம் எந்தப் பதிலையும் தராது.'

ஆக, வேதங்கள்/ஆகமங்கள் என்று கூறப்பட்ட பெருங்கதையாடல் மீது ஆரியர்களின் வருகைக்கு முன்னர் வாழ்ந்தவர்களின் பண்பாட்டுக்கு என்ன நடந்தது என்ற சிறுகதையாடல் மூலம் ந.முத்துமோகன் குறுக்கீடு செய்கின்றார்.

இனி பின் நவீனத்துவம் பெண்ணியம், தலித்தியம் போன்றவற்றிற்கு எப்படி உறுதுணை புரிகின்றது என்று பார்க்கலாம். தலித்துக்களை ஒடுக்கிய ஆதிக்கச்சாதிக்காரகள் அனைவரும் பெருங்கதையாடல்களின் மூலம் தமது இருப்பை நிலைநிறுத்தியிருக்கின்றார்கள். தலித்துக்கள் தமது சிறுகதையாடல்கள் மூலம் -கேள்விகள் எழுப்புவதன் மூலம்- பெருங்கதையாடல்களை சிதைக்கின்றார்கள். ஆதிக்கசக்திகளின் அரசியலை மீள் வாசிப்புச் செய்து தமக்கான அரசியலை தலித்துக்கள் உருவாக்கிக் கொள்கின்றார்கள். பெருங்கதையாடல் எது என்பதற்கு உலகமயமாதல் நல்லதொரு உதாரணம். அது பல்வேறு இனங்களின் மொழியை கலாச்சாரத்தை, பண்பாட்டுக்கோலங்களை தனக்குள் விழுங்கிக்கொள்கின்றது. ஒரே மொழி, ஒரே கடவுள், ஒரே ஜனாதிபதி எதிர்காலத்தில் பூமி முழுவதுக்குமாய் இருக்கும் சாத்தியங்களை ஒற்றைத்தன்மையை) இந்த உலகமயமாதல் உருவாக்குகின்றது (உலகமயமாதலால் எல்லாவற்றிலும் பாதகமே என்பதில் எனக்கு உடன்பாடுமில்லை). பின்நவீனத்துவம் பன்மைத் தன்மையை வரவேற்கின்றது. ஒவ்வொரு மனிதரும் தனது பண்பாட்டுடன், தனக்கான மொழியுடன் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றது. ஆகவே உலகமயமாதல் நோக்கி கடும் விமர்சனங்களை -மார்க்சிசம் போல- பின்நவீனத்துவம் முன்வைக்கின்றது.

பெண்ணியநோக்கில் பார்க்கும்போது, பின் நவீனத்துவம் கூறும் 'ஆசிரியர் இற்ந்துவிட்டார்' என்ற கருத்தாக்கம் மிகப்பெரும் சுதந்திரத்தை பெண்களுக்குக் கொடுக்கின்றது. இன்றைய தமிழ்ச்சூழலில் பெண்கள் எதை எழுதினாலும் அது அவர்களின் சொந்தக்கதை என்று வைத்து கிழிகிழியென்று கிழித்தும், கிசுகிசுக்களை உருவாக்கும் நம் சமூகத்தில் பெண் படைப்பாளிகளுக்கு 'பிரதியை மட்டும் பார்; அதற்குப்பின்னாலுள்ள எங்களைப் பார்க்காதே' என்று தீர்க்கமான மொழியில் பேசும் வெளியை பின்நவீனத்துவம் வழங்குகின்றது. அதே போன்று தலித்துக்களுக்கு வழங்குவதைப் போல இதுவரை சொல்லப்பட்ட ஆணாதிக்கப்பெருங்கதையாடல்களை தகர்க்கின்ற இன்னொரு வெளியையும் பின்நவீனத்துவம் பெண்ணியத்துக்கு தருகின்றது.

அண்மையில் 'வைகறை'யில் சுமதி ரூபன்(கறுப்பி), சா.கந்தசாமி பற்றிய ஒரு பதிவை எழுதியிருந்தார். சா.கந்தசாமி ரொரண்டோ வந்தபோது அவரது வைகறை நேர்காணலையும், இலக்கியக்கூட்டத்தில் பேசிய பேச்சையும் கேட்டு அவரைப் பற்றி கடும் விமர்சனம் இருந்தது என்கின்றார். ஆனால் பின் சா.கந்தசாமியின் 'அவன் அதுவானது'(?) என்ற நாவலை வாசித்தபோது அவரா இதை எழுதியது என்ற வியப்பு வருகின்றது என்கின்றார் சுமதி ரூபன். அதேபோன்று உயிர்மையில், அ.முத்துலிங்கம் அயர்லாந்து எழுத்தாளர் ஒருவரின் படைப்புக்களை வாசித்து அவரில் பெருமதிப்பு வைத்திருந்ததாய் கூறுகின்றார். எனினும் அவரை நேரில் சந்தித்தபோது படைப்புகளில் இருந்ததற்கு எதிர்மாறான விம்பம் தனக்கு கிடைத்தது என்றும்... இனி அந்த எழுத்தாளரை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்தால் எதிர்த்திசையில் பயணிப்பேன் எனவும், ஆனால் அவரின் படைப்புக்களை வாசிப்பதை நிறுத்தமாட்டேன் என்றும் கூறுகின்றார். சுமதி ரூபனும், அ.முத்துலிங்கமும் இதற்கு என்ன அர்த்தத்தில் கருத்துக் கூறுவார்களோ தெரியாது, ஆனால் பின்நவீனத்துவத்தை விளங்கிக்கொள்கின்ற ஒருவர் இதை - ஆசிரியர் இறந்துவிட்டார் - என்பதைத்தான் இவர்கள் கூறுகின்றார்கள் என்று இலகுவாய் கூறிவிட்டு நகர்வார்.

(3)
கட்டவிழ்ப்பு அல்லது ஒப்பாரி

பின் நவீனத்துவத்துவத்தின் மிகவும் சுருங்கிய வடிவம் என்பது 'எதையும் சந்தேகித்தல்' என்பதற்கிணங்க, இன்று சத்தியக்கடதாசியில் ஏற்றப்பட்ட தமிழரசனின் அனுமான் வாலாய் நீளும் (கவனிக்க: பின்நவீனத்துவம் எள்ளல்/பகிடி செய்வதை மிகவும் வரவேற்கின்றது) கட்டுரையை வாசித்துக்கொண்டிருந்தேன். அது இன்னொரு மார்க்சியருக்காய் எழுதப்பட்டதுபோன்ற தோற்றத்தைத் தருகின்றது. இருவரும் தாங்கள்தான் மார்க்சிசத்தை கரைத்துக்குடித்தவர்கள் என்றவகையில் ஒருவர் இன்னொருவருக்கென மாறிமாறி பாடம் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். 'என்னுடையது மட்டுமே மார்க்சிசம் வேறொருவரும் பேசக்கூடாது' என்று சொந்தங்கொண்டாடி 'பாசிசம்' நோக்கி இவர்கள் இருவரும் நகராத வரை எதையும் பேசிக்கொள்ளட்டும். 'பாசிசம்' இது வித்தியாசங்களை மறுக்கின்றது. ஒரு வகையிலான மொழியையும், ஒரு குறிப்பிட்ட வகையிலான சிந்தனை முறையையும் மட்டுமே நிறுவனப்படுத்துவதில் அது வெற்றி கண்டுவருகின்றது என்கின்றார் அ.மார்க்ஸ் (கறுப்புத் தொகுதி). எனது கேள்வி என்னவென்றால், மார்க்சிசம் மட்டுமே ஒரேயொருவழியென்று தமிழ்ச்சூழலில் அடம்பிடிப்பவர்கள் ஒருகாலத்தில் அதிகாரம் கையில் கிடைத்தவுடன் பாசிசவாதிகளாய் ஆகமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? (கடந்த காலம் உதாரணம் ஸ்ராலின்?) .

சரி கேள்விக்கு வருவோம். தமிழரசன் இதுவரை உலகில் எந்தத் தேசியப்போராட்டங்களும் வெற்றி பெற்றதில்லை என்கின்றார். நான் என்னுடைய மூளையை 'விருத்தி' செய்யும் நோக்கில் இறக்கியிருந்த மார்க்சிசம் சம்பந்தமான நூல்களை வாசித்துக்கொண்டிருந்தபோது... 'மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை' நூலில் (ப 78) வியட்நாமில் நடந்த மக்களின் போராட்டம் ஒரு தேசியப்போராட்டம் என்று கூறுகின்றார் ஜோர்ஜ் தொம்ஸன்(மொழிபெயர்ப்பு: எஸ்.வி.ஆர்). அது மட்டுமில்லாது மா சேதுங் அமெரிக்காவில் நடந்த கறுப்பினத்தவர்களின் போராட்டத்தை அது ஒரு தேசியப்போராட்டமும் வர்க்கப்போராட்டமும் என்கின்றார். அத்துடன் மல்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்கள் கறுப்பு தேசியத்தை வலியுறுத்தியிருக்கின்றார்கள் என்று வாசித்திருக்கின்றேன். ஏதோ ஒருவகையில் கறுப்பின மக்களை உயர்த்தியதில் கறுப்புத் தேசியம் மிகப்பெரும் பங்களித்ததுள்ளது என்று கடந்தகால வரலாறு கூறுகின்றது.

எனவே எமக்கேற்றவாறு 'தேசிய'ப்பெருங்கதையாடல்களை திரித்தல் நியாயமா என்று எல்லாம் தமிழரசனைக் கேட்கமாட்டேன். எனெனில் முன்பு விருப்புடன் தமிழரசனை (சி.புஸ்பராஜாவிவின் நூலிற்கான எதிர்வினைவரை) வாசித்து வந்த என்னை, 'நாங்கள் (தமிழர்கள்) எல்லோரும் சிறிலங்கா அரசின் பக்கம் சேரவேண்டும்' என்று ஒரு கட்டுரையில் மிகப்பெரும் குத்துக்கரணத்தை நிலவைத் தொட்டுவிட்டு நிலத்தில் தமிழரசன் அடித்தபோது, 'அய்யா நீங்கள் தான் எங்களை இரட்சிக்கவந்த கடவுள்' என்று மெய்சிலிர்க்க விழுந்துவிட்டேன். நான் ஒரு பின்நவீனத்துவவாதி(?) இல்லையென்றபடியால் கடவுள் இறந்துவிட்டார் என்ற நீட்சேயை யாரும் சாட்சிக்கு அழைக்கவும் முடியாது.

இன்னும் எந்த இசமும் கலக்காத ஒரு கேள்வி உண்டு. அருமைத்தோழர் ஏன் தேசியவாதிகள் கொழும்பில் தமிழர்கள் குடியேறுவதை விமர்சிப்பதில்லை என்று வினாவுகின்றார் (சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு இதைப்பற்றி ஏன் பேசுவதில்லை என்று தமிழரசுக்கட்சியினரை நோக்கி கேள்விகேட்கின்றார்). தமிழரசு கட்சிகளை விடுவோம். நானொரு தேசியவாதியும் அல்ல; அதற்காய் தேசியவாதத்தை எல்லாப்பொழுதிலும் அ.மார்க்ஸ் போன்றவர்கள் போல நிராகரிப்பவனுமலல்ல. நீ தமிழன் என்று சிங்களப்பெருங்கதையாடல் என் இருப்பின் மீது வன்முறையைத் திணிக்கும்போது நான் தமிழன்தான் நீ என்ன செய்வாய் என்று எதிர்ப்பைக்காட்ட எனக்குத் தேசியம் தேவைப்படுகின்றது. மற்றும்படி சாதியை மறுப்பவன், இனத்தையும் மொழியையும் கட்டிக்காத்துக்கொண்டிருக்கமுடியாது. அவற்றையும் மறுதலிக்கத்தான் வேண்டும். அதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.

என்னுடைய எளியகேள்வி என்ன என்றால், நாங்கள் எங்கள் ஊரை விட்டு 90களின் ஆரம்பத்திலேயே -முஸ்லிம்களை துரத்தியடித்த சொற்பகாலத்திலேயே- அகதிகளாய் அலையத்தொடங்கிவிட்டோம். சிங்களக்குடியேற்றங்களை செய்த அரசு என்ன செயதது? சனத்துக்கு காணியும், வீடும் இலவசமாய்க் கொடுத்ததுதானே (அதற்காய் அந்த ஏழ்மையான சனங்களை கீழிறக்குவது என்று அர்த்தமல்ல). அப்படியெனில் கொழும்பில் இருக்கும் தமிழ் சனத்துக்கு எல்லாம் வாங்கோ வாங்கோ என்று அழைத்து அரசாங்கம் வீடும் காணியும் சும்மாவோ கொடுத்தது? தீவுச்சனம் பலவந்தமாய் எழுப்பப்பட்டபோது 'காற்றுவெளிக்கிராமம்' பாட சு.வி என்றொரு கவிஞராவது இருந்தார். எங்களுக்கு அந்தக்கொடுப்பினை கூட இல்லையே தலைவா? எப்போதோ பூர்வீக நிலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட எங்களுக்கு அலரி மாளிகையில் எல்லாம் வேண்டாம்; காலி முகத்திடலில் ஒரு குடிசை போடவாவது ஒரு துண்டு நிலம் சிங்களப் பேரின்வாத அரசிடம் வாங்கித்தாருங்கள். பிறகு மகிந்த மாத்தையாவுக்கு நானும் கால் கழுவி... வேண்டுமெனில் நக்கிக்கொண்டிருக்கின்றேன் (பார்க்க: எனது நாய் பற்றிய கிறுக்கல்; நாயானால் நக்கத்தானே வேண்டும்).

முஸ்லிம்களை யாழிலிருந்து துரத்தியடிக்கப்பட்டதற்கு நாங்கள் நேர்மையான விவாதங்களை உருவாக்கவேண்டியதுபோல, அமபாறையிலிருந்தும், கிழக்கின் எல்லைக்கிராமங்களிலிருந்தும் அப்புறத்தப்பட்ட தமிழ்மக்களுக்கும், 'சமாதான காலம்' வந்தும்கூட ஊரைப் பார்க்கமுடியாது உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அடக்கப்பட்ட -எங்களைப்போன்றவர்களின் குலைக்கப்பட்ட வாழ்வு குறித்தும்- நேர்மையாகப் பேசப்படவேண்டும் ஆனால் தேசியர்கள் ஒருபக்கத்தை மறைத்து உரையாடுவதைப்போல எதிர்த்தேசியர் (அல்லது நவீன தேவதூதர்கள்) இன்னொரு பக்கத்தை லாகவமாய் மறைத்தபடி உரையாடுவது கண்கூடு. ஒன்றை மறைத்து இன்னொன்றைப் பேசுவது நியாயமாகாது. இப்படிப்பேசினால்தான் தமிழ்நாட்டுப்பத்திரிகைகள் நேர்காணல் கண்டு படமும் போட்டும் வரவேற்பார்களா என்ற என் நெடுநாள் -சிறுகதையாடலை- இங்கே முன்வைக்கின்றேன்.

புலிகளின் இன்றைய இருப்பு - இவ்வளவு கடுமையான வீழ்ச்சிகள், விமர்சனங்களுடன் - புலிகள் இன்னும் தாக்குப்பிடிப்பதற்கு சிங்களப்பேரினவாதம் மட்டுமே காரணம் என்பது புரியவில்லையா தோழரே? உங்களின் வார்த்தைகளில் கூறுவதால் புலிகளின் பாசிஸத்தை உடைத்து அவர்களின் இருப்பை இல்லாமற்செய்ய..... மிக எளிதான ஒரு வழி இருக்கின்றது. அது சிங்களப்பேரினவாதத்தை தமிழர்களையும் தனது மக்களாய் ஏற்றுக்கொள்ளச்செய்வது. தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகளை சிங்கள அரசு வழங்கும்போது மக்களே புலிகளை இல்லாமற்செய்து சிங்கள அரசோடு இணைந்துவிடுவார்கள். இந்த எளிய புரிதல் கூட இல்லாமல் தோழரே உங்களைப்போன்றவர்கள் வர்க்கப்புரட்சிக்கனவுகள் பேசிக்கொண்டிருப்பததால் என்ன பயன்? புலிகள் ஒழிக்கப்பட்டாலும் தமிழரின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் இன்னொரு இயக்கம் உருவாகும். அது வரலாற்று நியதி.

பேரினவாதம் தமிழருக்கு எல்லா இடத்திலையும் அடிக்கும்போது ஏன் இன்னும் கொழும்பில் கைவைக்கவில்லை என்பதற்கும் உந்தப் பெருங்கதையாடலில் வரும் உலகமயமாதல்தான் காரணம். கொழும்பில் தமிழருக்கு கைவைத்தால், வெளிநாட்டு தூதரங்களுக்குத் தெரிந்துவிடும் வெளிநாட்டு பத்திரிகைகள் பெரிதாக்கிவிடும் எல்லோ. பிறகு கடனுதவி என்று சிங்கள அரசுக்கு -weapons வாங்கக்கொடுக்கின்ற பிச்சைக்காசை- எங்கடை பிக் பிரதர்ஸ் எல்லோரும் கொடுக்கமாட்டினம் எல்லோ... தலைவா தலைவா! சித்தாந்தப் பெருங்கதையாடல்களை நிறுவமுன்னர் யதார்த்தச் சூழ்நிலைகளையும் 'ஞானக்கண்'ணாலாவது பார்க்குக.

.....ஆக இவ்வாறாக பின்நவீனத்துவம் -ஒரு பிரதியை- கட்டவிழ்ப்பும் சிறுகதையாடலும் நக்கலும் நையாண்டியுமாய் விரும்பிய எதையும் செய்யும் சுதந்திரத்தை தருகின்றது என்க.

(4)
பின்நவீனத்துவம் பன்மைத்தன்மையை முக்கியமாய் வலியுறுத்துகின்றது. எல்லோருடைய தனித்துவங்களும் இருப்பும், இயல்பாய் பேணவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. வாசிக்கும் உங்களுக்கு இன்னும் குழப்பம் கூடலாம் அல்லது இது தனியொருவனின் புலம்பல் என்று கூடத்தோன்றலாம். ஆனால் பின்நவீனத்துவம் அந்த தனியொருவனி/ளின் புலம்பலைக்கூட கவனத்தில் எடுத்துக்கொள்ளத்தான் சொல்கின்றது. பிறகு அதை மறுவாசிப்பு செய்யச் சொல்கின்றது. அதிகாரத்தின் குறிப்புகள் இருந்தால் அரசியல் நீக்கம் செய்து மீள் அரசியலை கட்டியமைக்கக்கோருகின்றது.

நான் வாசித்தவளவில் பெரியாரை தமிழ்ச்சூழலின் மிகச்சிறந்த பின் நவீனத்துவவாதியாகச் சொல்லமுடியும் (அதாவது தத்துவம் என்றரீதியில் பின்நவீனத்துவத்தை அணுகி அதனால் பின்நவீனத்துவவாதி என்று கூறவரவில்லை, அப்படியெதுவும் பின்நவீனத்துவத்தில் இல்லை). பெரியார் எல்லாவற்றை நோக்கியும் கேள்விகள் எழுப்பினார். பலவற்றை மறுவாசிப்பு செய்வதற்கான புள்ளிகளைத் தமிழ்ச்சூழலில் ஆரம்பித்துவைத்தவரும் அவரே. உதாரணத்திற்கு 'தமிழ் ஒரு நீசபாசை' என்று பெரியார் கூறியதற்கு பெரியாரிய எதிரிகள பலவித வியாக்கியானங்களை செய்வதை (வலைப்பதிவிலும்தான்) காண்கின்றோம். பெரியார் நீசபாசை என்று கூறியது தமிழ்மொழி தன்னளவில் புராணங்களையும், இதிகாசங்களையும், வேதங்களையும் போற்றிக்கொண்டிருப்பதோடு, அதனூடாக தாழ்த்தப்பட்டவர்களை, பெண்களை இன்னும் ஒடுக்கிக்கொண்டிருக்கின்றது என்ற நோக்கிலேதான். ஆகவே தமிழ்மொழியில் உள்ளவற்றை மறுவாசிப்பு செய்து மீள் அரசியலாக்கம் செய்யத்தான் பெரியார் இதன்மூலம் கூறவிரும்பினார் என்று
பின்நவீனத்தினூடு வாசிப்புச் செய்யலாம்.

இறுதியாய் ஒரு எளிய பின்நவீனத்துவ (?) உதாரணத்தைக் கூறி முடிக்கின்றேன். கனடா குறித்து எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் இது ஒரு பல்கலாசார நாடு (multicultural country) என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.. ஒவ்வொரு சமூகமும் தனது மொழி, கலாசாரம் போன்றவற்றோடு இருப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பதில்லை. சிலவேளைகளில் இவற்றைப்பேணக்கூட நிதி உதவி செய்கின்றது. அந்தவகையில் பன்மைத்தன்மையை வரவேற்கின்றது என்று வரவேற்கலாம். ஆனால் அதேசமயம் இங்கிருந்த பூர்வீகக்குடிகளுக்கு அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என்ற சிறுகதையாடலின் மூலம் அரசின் இன்னொருமுகத்தையும் நாம் கட்டவிழ்க்கலாம். இவ்வாறான சிறுகதையாடல்களின் மூலம் விவாதத்தை உருவாக்கி கனடிய அரசின் கொள்கைகளை மீள் அரசியலாக்கம் செய்யும் நிர்ப்பந்தத்தை கனடிய மக்கள் கொடுக்கலாம்.

(பின்-நவீனத்துவம் குறித்து எனது அரைகுறையான புரிதல்களோடு எழுதப்போகின்றேன் - என்னை உடைபதற்கு பெரும் ஆளுமைகள் காத்துக்கொண்டிருக்கக்கூடும் என்ற என் 'பெரும்பயத்தை' முன்வைத்தபோது, 'எதையென்றாலும் உனக்குச்சரியென்றுபடுவதை எழுது என்று உற்சாகப்படுத்திய' - என்னுடடைய பல 'பெருங்கதையாடலகளை' தனது சிறுகதையாடல்களால் கட்டவிழ்க்கும்- பிரிய தோழிக்கு)

சமாதானம் மிக அழகானது

Sunday, February 18, 2007

-இவ்வழியால் வாருங்கள் (A9 Highway) படத்தை முன்வைத்து-

சக மனிதரை நேசிப்பதென்பதைப் போன்று இவ்வுலகில் அழகானது எதுவேமேயில்லை. இனங்களை, மொழிகளை, நிறங்களை மீறி மனிதாபிமானம் என்ற புள்ளி நம் எல்லோரையும் ஒரு புள்ளியில் இணைத்துவிடக்கூடும். எங்கோ ஒரு நாட்டில் தன் சொந்த ஊரை இழந்துகொண்டிருப்பவனின் துயரம்..., ஒடுக்கப்படும் மக்களின் இருப்பிற்காய் இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் போராளியின் மனவுறுதி..., உயிர்களை, உடலுறுபுக்களை இழந்துகொண்டிருக்கின்ற மக்களின் அவலம்... இவையெல்லாம் போர் நடந்துகொண்டிருக்கும் எந்தப்பகுதியிற்கும் பொதுவானது. அதேபோல் அதிகாரமும் ஆயுதமும் வைத்திருப்பவர்களின் ஒடுக்குவதற்கான ஆதிக்கமும் சிந்தனைகளும் நாடுகளுக்கிடையில் அவ்வளவாய் வித்தியாசப்படுவதுமல்ல. இவ்வழியால் வாருங்கள் என்று ஏ9 நெடுஞ்சாலையை ஊடுருவிச் செல்லும் இப்படத்தில் எல்லா இன மக்களும் வருகின்றார்கள். போரை அவரவர்களின் பார்வைகளால் பார்க்கின்றார்கள். இறுதியில் தாம் நினைத்துக்கொண்டிருப்பது மட்டுமல்ல சரியான பார்வை; நாம் அறியாத இன்னும் பல விடயங்களும் இருக்கின்றன என்ற புரிதல்களையும் பெற்றுகொள்ளுகின்றார்கள்.

சமாதானம் வந்து, ஏ9 நெடுஞ்சாலை திறக்கப்படுவதிலிருந்து கதை ஆரம்பிக்கின்றது. சமாதானம் வந்து ஏ9 திறக்கப்பட்டாலும் தமது உரிமைகள் முற்றுமுழுதாக தரப்படாதபோது இந்நெடுஞ்சாலை திறக்கப்படக்கூடாது என்று -தன் சக போராளிகளின் இழப்புக்களை நினைத்தபடி- கதறும் ஒரு போராளியின் காட்சிகளோடு படம் ஆரம்பிக்கின்றது. புத்தர் வாழ்ந்திருக்கக்கூடும் என்ற நாகதீபத்தை(நயினாதீவை) பார்க்க ஒரு சிங்களக்குடும்பமும், 90களில் யாழிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு புத்தளத்தில் வாழும் ஒரு முஸ்லிம் குடும்பமும் ஏ9 பாதையினூடாக பயணிக்கின்றது. சிங்களக் குடும்பம் கிட்டத்தட்ட அரசாங்கத்தின் செய்திகளைக் கேட்டு தமக்கான அரசியலை வைத்துக்கொண்டிருப்பவர்கள். அவர்களின் மகள் பlகலைக்கழக இறுதியாண்டு மாணவி, ஜே.வி.பி சார்பு நிலைகொண்டவர். அவரது தம்பியோ சராசரி இளைஞன். அக்காவின் புரட்சிக்கனவுகளை தொடர்ந்து பகிடி செய்துகொண்டேயிருப்பவன். அவனுக்கு கல்பனா என்று பாடுகின்ற ஒரு சிங்களப்பெண்ணின் மீது ஈர்ப்புண்டு. இவர்கள் ஏ9 பாதையின் இடைநடுவில் முஸ்லிம் குடும்பத்தைச் சந்திக்கின்றார்கள். முஸ்லிம் குடும்பம் தாம் தமது பூர்விக நிலங்களிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட துயர்களை பகிர்கின்றார்கள். நதி (வளாக மாணவி) தான் தமிழர்களைப் பற்றி நினைத்தது சரியென்ற இன்னும் தீர்க்கமான முடிவுக்கு வருகின்றார்.

இரவில் தங்க இடமில்லாது சிங்களக்குடும்பம் யாழ்ப்பாணத்தில் தவிக்கையில், நதியோடு கொழும்பு வளாகத்தில் படித்து சில வருடங்களில் படிப்பை நிறுத்திவிட்டு யாழ் போன தனது (தமிழ்)தோழன் ஒருவரை வீதியில் நதி காண்கின்றார். அந்த இளைஞன் நதியுடன் பேசுகின்றபோதும், அவர் தமிழரென்றபடியால் நதிக்கு -அவரில் நம்பிக்கையில்லாது- அவரின் வீட்டில் போய் தங்கவிரும்பமில்லாது இருக்கின்றார். அந்த இளைஞர் NGO ஒன்றில் வேலை செய்துகொண்டு ஒரு ஆசிரியரின் வீட்டில் தங்கியிருக்கின்றார். ஆசிரியரின் மகன் இயக்கத்துப்போய் சமாதானம் வந்ததால் -இயக்கத்திலிருந்து விலகி- வீட்டுக்கு வருகின்றார். போராளியாக இருந்தவருக்கு இப்படி சிங்களக் குடும்பம் தங்கள் வீட்டில் வந்து நிற்பது அவ்வளவு உவப்பானதில்லை. எனவே அவர் தொடர்ந்து வீறாப்பாய் திரிந்துகொண்டிருக்கின்றார்.

அந்த ஆசிரியரின் மகளுக்கு NGO வில் வேலை செய்யும் இளைஞர் மீது ஈர்ப்புண்டு. ஆசிரியரின் மகள் பக்கத்து வீட்டில் இருக்கும் சிறுமிக்கு நடனம் சொல்லிக்கொடுக்கின்றார். நடனப்போட்டியில் பங்குபற்றுவதற்கான கனவில் இருக்கும் சிறுமிக்கு, மிதிவெடியில் கால் போகின்றது. அந்தக் காட்சியை நேரடியாகப் பார்க்கின்ற சிங்களக் குடும்பத்தினருக்கு -முக்கியமாய் ஜேவிபி ஆதரவாய் இருக்கும் நதிக்கு- தனது போர் குறித்த பார்வைகளை மீளாய்வு செய்யவேண்டிய அவதி வருகின்றது. தமிழ் ஆசிரியரும், அந்த சிங்கள குடும்பத்தலைரும் தொடர்ந்து அரசியல் குறித்து உரையாடிக்கொண்டிருக்கின்றார்கள். அந்த தமிழ் ஆசிரியர் ஒரு முன்னாள் சமசமாஜக் கட்சி உறுப்பினர். எப்படி பண்டாரநாய்க்கா குடும்பம் தமிழர்களின் உரிமைகளைச் சூறையாடுகின்றது என்று விரிவாக உரையாடுகின்றார். எனினும் சிங்களக் குடும்பத்தலைவருக்கோ, எப்படி தமிழர்கள் பண்டாரநாயக்கா குடும்பத்தினரை தாழ்த்தலாம் என்ற கெளரவப்பிரச்சினை அல்லது இனப்பிரச்சினை(?).

நோயுடன் இருக்கின்ற சிங்களக் குடும்பத்தலைவருக்கு, மிதிவெடியில் அந்தச்சிறுமி கால்களை இழந்ததைப் பார்த்தவுடன் இதய அழுத்தம் கூடி சில நாட்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கவேண்டியதாய்ப் போகின்றது. இதற்கிடையில் நதிக்கு, அந்த NGO இளைஞர் மீது ஈர்ப்பு வருகின்றது, இளைஞருக்கும்தான். எனினும் இறுதியில் இளைஞருடனான ஆசிரியரின் மகளின் காதல் வென்றுபோகின்றது.

மீளவும் குடியேறுகின்ற முஸ்லிம் குடும்பத்தினரை வறுமை விரட்டுகின்றது. தங்கள் வீட்டில் இன்னமும் மிதிவெடிகள் அகற்றப்படாததால் பக்கத்துவீட்டில் தங்கியிருக்கின்றார்கள். அவர்களுக்கு இருப்பதற்கு இடமிருக்கின்றதே தவிர, பசிக்கு உணவிருப்பதில்லை. பக்கத்து வீட்டிலிருக்கும் பெண்மணியோ சற்று மனப்பிறழ்வான இளைஞனை பணஞ்சம்பாதிக்கத் துரத்துகின்றார். வேறு வழியில்லாத அவர் ஒரு திருடனாகின்றார். இனியும் பட்டினி தாங்க இயலாது என்கின்ற நிலை வருகின்றபோது பக்கத்துவீட்டு பெண்ணிடம் அகதி முகாமிலிருந்தபோது செய்த பாலியற்தொழிலை தனக்கும் கற்றுத்தாவென்று புத்தளத்திலிருந்து வந்த குடும்பத்தின் மகள் கதறியழுகின்றார். இப்படியாக நமது நிலை போய்விட்டதேயென்று பித்துப்பிடித்தபடி மிதிவெடி அகற்றப்படாத வீட்டிற்குள் அந்த பெண்ணின் தகப்பன் கதறியபடி ஓடுகின்றார்.

பல்வேறு கிளைகளாய் கதை நகரும் இப்படத்தில் அடிநாதமாய் ஓடிக்கொண்டிருப்பது போர் தந்த வலிகளும், அதிலிருந்து எப்போதாவது மீள்வோம் என்று நம்பிக்கொண்டிருக்கும் மக்களின் அசையமுடியாத நம்பிக்கையும்தான். இனங்களை, மொழிகளை மீறி நம் அனைவருக்குள்ளும் ஓடிக்கொண்டிருப்பது மனித நேயமே என்று கூறியபடி படம் முடிகின்றது. கடந்தகாலத்தை இனி மாற்றமுடியாது ஆயினும் நமது எதிர்காலத்திலாவது போரில்லாது வாழும் சிந்தனையாவது நாமெல்லோரும் வளர்க்கவேண்டும் என்ற சிறுவிதையை இப்படம் விதைக்கின்றது. சமாதானம் மிக மிக அழகானதுதான். வேறு வழியில்லாது பாலியல் தொழில் செய்தாவது பிழைப்போம் என்று கதறுகின்றபோது அந்த முஸ்லிம் பெண் சொல்வார்.... சமாதானமாம் சமாதானம் மண்ணாங்கட்டி! அதுதான் நம் நிகழகாலமாய்ப் போய்க்கொண்டிருப்பதுதான் மிக அவலமானது.

இப்படத்தின் உரையாடல்கள் மிகக் கூர்மையானவை. உரையாடுகின்றபோது மொழிப்பிரச்சினை வருகின்றபோது நதிக்கு, தமிழ் இளைஞர் கூறுவார், அரசகரும மொழியாக இருக்கும் மொழியையே நீங்கள் கற்றுக்கொள்ள முன்வராதபோது எப்படி எங்களுக்கான உரிமைகளை புரிந்துகொள்ளுவீர்களென்று. அதேபோன்று போரின் அழிவுகள் குறித்து உங்களுக்கு என்ன தெரியும்....? கொழும்பில் குண்டுவெடிக்கும்போதும், கனத்தை மயானத்தில் இராணுவ உடல்கள் எரியூட்டப்படும்போதும் மட்டுமே கொழும்பிலிருப்பவர்களுக்கு போர் நடப்பது தெரிகின்றது. மற்றும்படி போரின் அழிவுகளை உணர்ந்திருக்கின்றீர்களா? என்பது கத்தியாய் இறங்கும் வசனம்.


இன்னொரு காட்சியில் குளித்துவிட்டு நதி குங்குமப்பொட்டை வைத்து அழகுபார்க்கும்போது, அந்த இளைஞன் சலனமடைந்து அவரைத் தொட முயல்வார். அதற்கான காரணமாய் இளைஞன் கூறுவார், உனது குங்குமப்பொட்டு என்னைச் சலனமடையச் செய்துவிட்டது என்று. அதற்கு நதி, எந்தப்பொண் குளித்துவிட்டு வந்தாலும் எந்த ஆணும் ஆசைப்படத்தான் செய்வான்; உன் தமிழ் அடையாளத்தை சாட்டாய் வைத்து அதை நியாயப்படுத்தாதேயென்று கூறுவார். அதுபோல், தமது மகன் இரவில் எங்கையோ போய்விட்டார் என்று சிங்களக்குடும்பம் தெருவில் தேடிக்கொண்டிருக்கின்றபோது, அதைப் பார்த்து ஒரு தமிழ்த்தாய், என்னுடைய மகனும் இப்படித்தான் பாடசாலைக்குப் போகின்றேன் என்று போனான் இன்னும் திரும்பிவரவில்லை, யாராவது கண்டுபிடித்துத் தாருங்கள் என்று கதறும்போது (செம்மணியையும் இணைத்துப்பார்க்கலாம்) எல்லாத் தாய்மார்களின் சோகமும் ஒன்றுதான் என்பது புரியும். இன்னொரு காட்சியில் காலிழந்து இருக்கும் சிறுமியை சிங்கள இளைஞன் சந்திக்கும்போது, அந்தச் சிறுமி சொல்வார், 'அண்ணா கொழும்பு போனாப்பிறகு ஒரு கால் அனுப்புவீங்களா? நான் நடனம் ஆடவேண்டும்.' இந்த வார்தைகளின் பின்னிருக்கும் பெருஞ்சோகத்தை வேறு எது சொல்லிவிடும்? படத்தில் படிமமாய் ஒரு பெண் சிவப்புச் சேலை கட்டியபடி போய்க்கொண்டிருக்கின்றார். சிலருக்கு மட்டுமே - போராளி இளைஞனுக்கு, சிங்களக் குடும்பத்த் தலைவருக்கு, அவரின் மகனுக்கு- மட்டும் தெரியவதாய்க் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அந்தப் பெண்ணை பார்க்கும் நாம் சமாதானமாய் உருவகித்துக்கொள்ளலாம். கண்ணுக்கெட்டும் தூரத்திலிருந்தாலும் ஒவ்வொருமுறையும் நழுவியபடி இருக்கின்றது சமாதானம் என்றவகையிலும் விளங்கிக்கொள்ளலாம்.

இப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு, எளிமையான உரையாடல்களால் கூட மிகப்பெரும் அரசியல் புள்ளிகளைக்கொண்டுவரும் நெறியாள்கையாளரின் படைப்புத்திறன் எவ்வளவு நுட்பமானது என்பது புரியும். இதைப் படமாய்ப் பார்த்தாலும், ஒரு தொலைக்காட்சி தொடராய் இது எடுக்கப்பட்டது என்று வாசித்திருக்கின்றேன். எந்த முறையில் எடுக்கப்ப்ட்டாலும் பார்க்கும்போது அது நம்மை பாதிக்கின்றதா இல்லையா என்ற கேள்விதான் முக்கியமானது. அந்தவகையில் இந்தப்ப்படைப்பு வெற்றி பெறுகின்றது. எல்லா நடிகர்களும் மிக இயல்பாய் நடிக்கின்றார்கள். யாழ்ப்பாணத்தில் நடக்கும் காட்சிகளில் வரும் உரையாடல்கள் எல்லாம் அப்படியே ஊரின் பேச்சு வழக்கை நமக்கு நினைவூட்டுகின்றன. புலம்பெயர்ந்த நாட்டில் எடுக்கப்பட்ட எத்தனையோ படங்களில் கூட செயற்கைத்தனமான உரையாடல்கள் இருக்கும்போது ஒரு சிங்கள இயக்குனரால் இதிலெல்லாம் எப்படி கவனம் எடுக்க முடிந்தது என்ற வியப்பு வராமல் இருக்க்முடியவில்லை என்பது மட்டுமில்லை இப்படி யதார்த்தமாய் சின்ன சின்ன காட்சிகளின் மூலம் போர் தந்துகொண்டிருக்கும் அழிவுகளை நம் எல்லோரையும் பாதிக்கச் செய்வதைப்போல ஏன் எந்தவொரு தமிழ் படைப்பாளியாலும் எடுக்க முடியவில்லை என்ற ஆதங்கம் வருகின்றது. இன்னமும் தேசியம் X எதிர்த்தேசியம் என்ற உரையாடலை விட்டு வெளியேறாத ஈழத்தமிழ்ச்சூழ்லிருந்து இதையெல்லாம் எதிர்ப்பார்ப்பது கூட சற்று அதிகப்படியோ என்றுதான் தோன்றுகின்றது.

படைப்பாளி என்றவகையில் A Lankan Mosaic என்ற தொகுப்பிலிருந்து அசோக ஹந்தகமவின் ஒரு கதையை (Don't Open the door Parvathi) அண்மையில் வாசித்தேன். அது இந்திய இராணுவ காலத்தில் இந்திய இராணுவத்தால் ஒரு தமிழ்ப்பெண் பாலியல் வன்முறைக்குள்ளாகும் புள்ளியுடன் முடிகின்றது. அதில், இந்திய இராணுவத்தில் நம்பிக்கை கொள்ளும் தமிழ் மக்களை நோக்கி படைப்பாளி ஒரு கேள்வி எழுப்புவார். இத்தனை காலம் சொந்தமண்ணிலேயே இருக்கும் இராணுவமே இத்தகை கொடூரங்களைச் செய்ததைப் பார்த்தபின்னும் எப்படித்தான் இந்தமக்கள் இன்னொரு நாட்டு இராணுவத்தின் மீது நம்பிக்கை கொள்கின்றார்கள் என்று. இதிலிருந்து, நாம் அருகிலிருக்கும் சிங்கள மக்களையும், முஸ்லிம் மக்களையும் புரிந்துகொள்ளாது வேறு நாடுகள் நமக்கு விடுதலையைப் பெற்றுத்தந்துவிடும் என்று நினைத்துக்கொண்டிருப்பதன் அரசியலையும் ஒருமுறை மீளாய்வு செய்யலாம்.

கலைஞர்களுக்கு இனம், மொழி என்ற பாகுபாடு இருப்பதில்லை. மானிட நேசம் என்பதே அவர்களின் விரிந்த எல்லையாக இருக்கும். நாம் நமது நடுநிலை என்ற புள்ளிகளை நிரூபிப்பதற்கு பெரும்பாடு பாடுவதை விடுத்து, உண்மைகளை முன்வைத்து உரையாடல்களை ஆரம்பிப்பதே உன்னதமாயிருக்கும்.

அசோக ஹந்தகமாவின் பிற படங்கள்:
Chanda Kinnari
Me Mage Sandai (This is my Moon)
Thani Thatuwen Piyambanna (Flying with one wing)
Aksharaya (Letter of Fire)

?

Monday, February 05, 2007

பனியைப்போல குவிந்துகொண்டிருக்கிறது
பகிர முடியாத நம் வலிகள்

கொடுங்காற்று வீச
தெருவில் சறுக்கிவீழ்ந்த அகதியொருவன்
தன்னை பனிப்புலத்தில் தள்ளிவிட்ட
போரை
கெட்டவார்த்தையால் திட்டுகிறான்

உன்னை
காரின் பின்சீட்டில்
புணர்ந்துகொண்டிருக்கையில்
யோனியில்
கிரனைட் வைத்து சிதைக்கப்பட்டவள்
குறுக்காய் கடந்துபோகின்றாள்.

.......................

மூச்சுவிடமுடியாது நீருக்குள் அமிழ்ந்ததுபோல
கழுத்தை நெருக்கும் சுருக்குக் கயிறாய்
வார்த்தைகள் வார்த்தைகள்

ஒவ்வொருவரின் நியாயங்களும்
அழகாய்த்தானிருக்கின்றன
தவறுகளேயிருப்பதேயில்லை

கமபளிப்போர்வைக்குள்
உன் வெப்பந்தேடி
அலைந்துழல்கையில்
கால்விரல்களில் படியும்
பிரிவின் வாதைகள்

எல்லாவற்றையும் செரிக்க
எல்லோரையும் நேசிக்க
இப்பனிக்காலம் கற்றத்தருவதைப்போல
போகாதேயென்று
ஒரு வார்த்தையால் தடுத்து நிறுத்தியிருக்கலாம்

வாசிப்பு
என்னை மோசமாய்த் தோற்கடிக்கும் காலத்தில்
நீ விட்டுச்சென்ற
கண்ணீர்த்துளியில் சுருக்கிட்டு
தற்கொலை செய்வேன்.
............................

கடிகாரத்தின்
இருமுட்களுக்குமிடையில் சிக்கிய
பல்லி நான்

முன்னே நகரும் முள் நீ
பின்தொடரும் முள் கடந்தகாலம்

கடந்தகாலத்தில் தன்னைத் தேடிக்கொண்டிருப்பவனுக்கு
வாய்ப்பதில்லை
நிகழ்காலமும் நீயும்.

(Feb 04, 2007)