கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அம்பையின் 'ஒரு கறுப்புச் சிலந்தியுடன், ஓர் இரவு'

Wednesday, October 29, 2014

டைப்பாளிகள் பலரை முதலில் அவர்களின் படைப்புக்களை வாசித்து அறிமுகமாகித்தான், பின் அவர்கள் யாரெனத் தேடிப் பார்த்திருக்கின்றேன். விதிவிலக்காய் அம்பையை அறிந்துகொண்டது, தொண்ணூறுகளின் பிற்பகுதியில் வாசித்த காலச்சுவடின் நேர்காணல் ஒன்றின் மூலமாக. முன்னட்டையே இல்லாத காலச்சுவடை கண்டதும் வாசித்ததும் ஒரு தற்செயலான நிகழ்வு. ஆனால் முதன்முதலாக வாசித்த காலச்சுவடும், அம்பையின் நேர்காணலும் அதுவரை இருந்த வாசிப்பின் திசையை மாற்றியிருக்கின்றது. இப்படி ஒருவர் வெளிப்படையாகவும், விமர்சன பூர்வமாகவும் எல்லாவற்றையும் உடைத்துப் போடமுடியுமா என யோசிக்க வைத்த நேர்காணலது.

அப்போது பதின்மவயதுகளிலிருந்த எனக்கு அம்பை ஏதோ இருபதுகளில் இருப்பவரைப் போன்ற உற்சாகமுடையவராகத் தெரிந்தார். அவர் அப்போதே 50களில் இருந்திருக்கிறார் என்பதைப் பின்னர் அறிந்தாலும், நகுலனைப் போல அவர் ஒரு இளமையானவராகவே எனக்குள் இன்றுமிருக்கின்றார். அம்பையின் இறுதியாய் வந்த 'ஒரு கறுப்புச் சிலந்தியுடன், ஓர் இரவு' தொகுப்பை வாசிக்கும்போது அதே உற்சாகத்தையும், அவருக்குப் பின் வந்த/வரும் எந்தத் தலைமுறையும் நெருக்கங்கொள்ளும் கதைகளையுந்தான் எழுதியிருக்கின்றார் என்பதைக் கண்டுகொண்டேன்.

முரகாமியின் எந்த நாவலை வாசித்தாலும், அதில் வரும் பாத்திரங்களுக்கு எவ்வளவு வயதாயிருந்தாலும், அவர்களின் பதின்மப்பருவங்களை எங்கோ ஓரிடத்தில் முரகாமி தொட்டுச் செல்லாமல் கடந்து சென்றிருக்கமாட்டார். அதற்கு இறுதியாய் வந்த 'Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage' என்ற நாவலில் கூட, கதையில் Tsukuru Tazaki, 36 வயதாக இருந்தாலும், நாவலைத் தொடங்கும்போது sukuruயின் பதின்மமும், 20களில் தற்கொலையிற்கு த்யாராகும் மனோநிலையை விபரிப்பதுடனேயேதான் நாவல் தொடங்குகின்றது. அவ்வாறே அம்பையின் கதையை வாசிக்கும்போது, அதில் வரும் பாத்திரங்கள் எத்தகைய வயதுகளில் இருந்தாலும் -என்றுமே வயதுபோகாத- ஒரு இளம்பெண் கதைகளிற்குள் மறைந்தும் மறையாத மாதிரி இருப்பதை அவதானிக்க முடியும்.

இந்தத் தொகுப்பில் 'பயணம் - XX' என்ற இலக்கமிட்ட கதைகளே நிறைய இருக்கின்றன. இப்படி 'பயணம்' என தலைப்பிடப்பட்டு கடந்த தொகுப்பில் வந்த கதைகளின் நீட்சிதான் இதுவெனினும், ஒவ்வொரு பயணங்களும் வெவ்வேறு கதைகளைக் கூறுகின்றன. பாரிஸிற்குப் போய் மரபுவாதிகளிடம் சிக்குப்படுகின்ற இராவணன் கோட்டை என்றாலென்ன, 'திருவள்ளுவர்' சிலையுடன் நெருக்கம் கொள்கின்ற இங்கிலாந்துக் கதையாயிருந்தாலென்ன எல்லாமே பயணித்தலின் குறுக்குவெட்டு முகங்களே.

இந்தியாவிற்குள் பயணிக்கும்போது நிகழ்பவை சில சிரிப்பைத் தருகின்றன என்றால பல பதற்றங்களை ஏற்படுத்துகின்றன. பயணிப்பதில் பெண்களுக்கு இருக்கும் சிக்கல்கள் பற்றி பலர் நிறைய எழுதியிருக்கின்றனர்/ விவாதிருக்கின்றனர். ஒரு கதையில் வரும் பாத்திரம் நடுத்தரவயதுகளில் இருந்தாலும், இந்த வயதில் ஜூன்ஸ் அணிந்து பயணித்தாலும் ஆண்களின் கண்கள் எப்படி உற்றுப் பார்க்கும் என நினைத்து, ஜூன்ஸ் அணிவதைத் தவிர்க்கும்போதே, அம்பை இளம் பெண்களுக்கு இருக்கும் இடைஞ்சல்களை -ஆடையின் அரசியலை- மிக எளிதாக வாசிப்பவருக்குச் சொல்லிவிடுகின்றார்.

டெல்கியில் படிக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய இன்னொரு கதையில், அந்தப் பெண் டெல்கியிற்கு ரெயினில் பயணிக்கும்போது இன்னொரு பெண்ணைச் சந்திக்கின்றார். இந்த -மற்ற- பெண், தன் ஊரில் குடும்பத்தினர் பிடிக்காத யாரையோ ஒருவரைக் கல்யாணங் கட்டித்தரப்போகின்றனர் என்பதற்காய் வீட்டை விட்டு எவ்வித தயாரிப்புமின்றி ஓடிவருகின்றவர். ஆனால் டெல்கியைப் பற்றி ஒன்றுமே அறியாத இந்தப் பெண் எப்படி டெல்கியில் தப்பிப்பிழைக்க முடியும் என டெல்கி யூனிவசிட்டியில் படிக்கும இந்தப்பெண் பதற்றமடைகிறார். கடந்த வருடங்களில் படித்துக்கொண்டிருக்கும் அவரை நடந்துபோகும்போதே துப்பட்டாவைப் பிடித்து இழுத்து சில்மிஷம் செய்ய முயன்றிருக்கின்றனர். இன்னொரு நாள் ஆண் நண்பனோடு இரவில் உரையாடிக்கொண்டிருந்தபோது, அவனைத் தாக்கிவிட்டு இவரை நெருங்கமுயன்றபோது அருந்தப்பில் தப்பியவர். வேறொருநாள், வாகனத்தில் பயணம் போனபோது, ஒரு குழு அரைநிர்வாணமாய்ப் பெண்ணை சிதைத்து அவரை எங்கோ புதைக்கப் போய்க் கொண்டிருந்ததை கண்டுமிருக்கின்றார். அவரைக் காப்பாற்றவில்லையே என்ற குற்றவுணர்வு மட்டுமில்லை, அப்படி சிதைக்கப்பட்ட பெண்ணைப் பற்றி அடுத்தநாள் எந்தப் பத்திரிகையில் செய்தி வரவில்லை என்பதையும் அறிந்து, இப்படி அடையாளந்தெரியாது எத்தனை பெண்களின் உயிர்கள் பாலியலிற்காய் காவுகொள்ளப்பட்டிருக்கும் என்று நினைத்தும் கவலைப்படுகின்றார்.

வ்வாறான ஒரு பெருநகரிற்கு எவரையும் தெரியாது ஊரிலிருந்து தப்பிவந்து விட்டேன் என நினைக்கும் பெண் எவரின் துணையின்றி வாழமுடியுமா என இந்த வளாகப்பெண் அந்தரப்படுகின்றார். ஒருகட்டத்தில் 'தயவுசெய்து திரும்பிப் போய்விடு, இது நீ நினைக்கின்ற நகரமல்ல, இதே ரெயினிலேயே திரும்பிச் சென்றுவிடு' என்று வற்புறுத்துகின்றார். படிக்கும் இந்தப் பெண்ணே தனியே வீட்டைப் போவதே அவ்வளவு பாதுகாப்பானதல்ல என்பதால் அவரின் மாமா ஒருவரே கூட்டிப்போக ரெயில்வே ஸ்ரேசனில் வந்து நிற்கிறார். ஆனால் வீட்டை விட்டு ஓடிவந்த பெண் திரும்பிப் போகாது, பெருநகரிற்குள் -எங்கே போவதெனக் கூட தெரியாது- நுழையத் தொடங்குகின்றார். இறுதியில், கதை சொல்பவர் தன் உடல் சில்லிடுகின்றது என்கிறார். அதற்கு டெல்கி குளிர் மட்டுமே காரணமில்லை என்பதோடு கதை முடிகின்றது. நமக்குள்ளே இப்படி டெல்கி என்ற பெருநகருக்குள் வந்து விழுந்துவிட்ட அந்த மற்றப்பெண்ணுக்கு என்ன நிக்ழப்போகின்றது என்று ஆயிரத்தெட்டு கேள்விகள் எழுகின்றன.

இன்னொரு வடஇந்தியப் பயணத்தில், ஒரு முதியவர் ரெயினுக்குள் தண்ணீர் தாகத்தில் தவிக்கிறார். அந்தப் பெட்டி முழுதும் அவருக்குத் தெரிந்தவர்களே இருக்கின்றார்கள். அவர்களே அனைவரும் இவரை விட சாதியின் படிமுறைகளில் வேறுநிலைகளில் இருப்பார்கள். எனவே பயணிக்கும் இந்தப்பெண்ணிடம் தண்ணீர் கேட்கிறார். கதைசொல்லி தண்ணீரைக் கொடுத்தாலும், அந்த முதியவர் இவரின் என்ன சாதி எனக்கேட்கின்றபோது நான் உங்கள் சாதியல்ல என்கிறார். திரும்பத் திரும்ப சாதி என்ன என முதியவர் கேட்டாலும், இந்தப் பெண், தான் என்ன சாதியென்பதைச் சொல்லவேமாட்டார். இதனால் முதியவர் தண்ணீரை வாங்கிக் குடிக்காது தாகத்துடன் அடுத்த ஸ்டேசனில் இருக்கும் பைப்பில் தண்ணீரைக் குடிக்கிறார். பின்னர் அந்த முதியவர் இரெயினுக்குள் சாப்பிட்டுவிட்டு வெற்றிலை/பாக்குப் போடும்போது பாக்கு தொண்டைக்குள் சிக்குபட்டு மூச்சிவிடத் திணறத்தொடங்குவார். தண்ணீரை அவசரத்திற்கு இந்தப் பெண் குடுக்கும்போது, தண்ணீர் இதற்கு வேலை செய்யாது, எனச் சொல்லிவிட்டு, இன்னொருவருவர் அவர் உடலைத் வளைத்துப் பிடித்து, ஒருமாதிரியாக பாக்கை எடுத்துவிடுவார். இந்த முதியவரின் சிந்திய பாக்குச் சாறை அந்த நபரே சுத்தமும் செய்துவிட்டு, அந்த முதியவரிடம், பாத்ரூம் சுத்தமாய்த்தானிருக்கிறது, நீங்கள் போய்க் குளிக்கலாம் என்கிறார். உதவிய மனிதர் தலித் என்பதால், இப்படித் தொட்டுக் காப்பாற்றியதால், அவருக்குத் 'தீட்டு' வந்திருக்கும் என்பதை நன்கு அறிந்தவர் அவர்.

அந்த தலித், தானொரு வைத்தியர் எனவும், நீங்கள் ஒரு தலித்தில்லை எனத் தெரியும், பிறகும் ஏன் சாதியைச் சொல்லி தண்ணீர் கொடுக்க மறுத்தீர்கள் எனக் கேட்பார். இந்தப் பெண், 'அந்த முதியவருக்கு இவ்வளவு சாதிவெறி இருக்கும்போது, என்னால் இப்படித்தான் இருக்க முடியும்' என்கிறார். அப்போது அந்த தலித் டாக்டர், 'உங்களுக்கு சாதி அடையாளத்தை மறுக்கும் தெரிவிருக்கிறது, ஆனால் எங்களால் அப்படி முடியாது' எனச்சொல்வது கதையின் மிகக் கூர்மையான இடம். அது மட்டுமின்றி கதையின் முடிவில் அந்த முதியவர் துவாயை எடுத்துக்கொண்டு 'தீட்டு' க்கழிக்க பாத்ரூமைப் போவதுகூட, ஒருவரின் உயிரைத் தலித் காப்பாற்றினால் கூட, அவர்களால் எந்த்ப்பொழுதில் சாதிப்பெருமிதத்திலிருந்து வெளியேறிவிடமாட்டார்கள் என யதார்த்தை அறைந்து சொல்கின்ற இடம்.

ம்பையின் பல கதைகள் எனக்கு நெருக்கமானதற்கு, பெரும்பாலான கதைகள் தமிழ்பேசும் சூழலிற்கு வெளியே நிகழ்பவை என்பதும் ஒரு காரணம். வாழும் சூழல் எப்படியிருந்தாலும் அந்த இடத்தில் தமிழ்மனம் எப்படி இயங்கிக்கொண்டிருக்கும் என்பதை சினிமாப் பாடல்களாலோ தமிழிசைப் பாடல்களாலோ மெல்லியதாய்த் தொட்டுக்காட்டிக்கொண்டேயிருப்பார். மேலும் அம்பையின் பெண் பாத்திரங்களை தமக்கான விடுதலையின் வெளியைத் தேடுபவர்களாய் இருந்தாலும், அவர்கள் சந்திக்கும் ஆண்கள் எவ்வளவு மோசமானவர்களாய் இருந்தாலும் அவர்கள் மீது காழ்புணர்வைக் கொட்டுவதில்லை என்பதையும் குறிப்பிடவேண்டும். தனக்கான சொந்தக்காலில் நிற்கும் பெண் தனக்கான ஒரு உலகைச் சிருஷ்டிததுக்கொள்ளவும், அங்கே வாழவும் தலைப்படுகின்றபோது அவர்களுக்கு ஆண்கள் ஒருபெரும் பொருட்டாய் இருப்பதுமில்லை.

'நிலவைக் காட்டிய பெண்' எனக்குப் பிடித்த கதைகளில் ஒன்று. வளாக நாட்களில் தன்னோடு ஒத்த இரசனைகளுள்ள நண்பனோடு ஒரு பெண் நெருக்கமாகின்றார். அந்தப் பெண்ணை கறுப்பானவள் என்று பிறர் கேலிசெய்யப்படும்போது, இந்தப் பெண்ணைக் காப்பாற்றுபவனாக அவனேயிருக்கின்றான. ஒருமுறை இருவருக்கும் ஜரோப்பாவில்(வெவ்வேறு நகரங்களில்) சில மாதங்கள் தங்கிப்படிக்கும் வாய்ப்பு வரும்போது, உடலாலும் நெருக்கமாகின்றனர். திரும்பி வரும்போது அந்தப் பெண் தான் கர்ப்பமடைந்திருக்கின்றேன் எனச்சொல்லி, இந்தியா போனதும் திருமணம் செய்வோம் என்கின்றாள். 'நான் உன்னைத் திருமணம் செய்வதென்று நினைக்கவேயில்லை. உனது நிறத்தை நீயே பார்த்ததில்லையா?' என அவளின் அடியாழம்வரை சென்று வேதனை செய்கின்றான். இந்தியா திரும்பும் பெண், மிகவும் கஷ்டப்பட்டு அபோர்ஷன் செய்கின்றாள். அபோர்ஷனிற்கு வெளிநாட்டிலிருந்து காசனுப்பிய அவனை ஓரிடத்திற்கு கூப்பிட்டு, இந்தக் காசிற்கா நான் என்னை உன்னிடந்தந்தேனென செருப்பெடுத்து அடிக்கிறாள்.

காலம் நகர்கின்றது. இந்தப் பெண் பேராசிரியை ஆகிவிட்டார் மட்டுமில்லை, இப்படித் தன் மகன் செய்தான் என்பதை அறிகின்ற அந்த ஆணின் தாயோடு நெருக்மும் ஆகிவிட்டார். 'நீ அபோர்ஷன் செய்தது உன் தெரிவு. ஆனால் இப்படி உதவியில்லாது எங்கோ தொலைவில் போய் நின்று செய்யும்போதாவது என்னிடம் சொல்லியிருக்கலாம். நான் உனக்குத் துணையாயிருந்திருப்பேன்' என்கிறார் அந்த ஆணின் அம்மா. ஆனால் இந்தப் பெண்ணுக்கு தான் பிரியமாய் வளர்க்க விரும்பிய இரட்டைப் பிள்ளைகளை இப்படியான நிலைக்குப் போகச் செய்துவிட்டேன் என்கின்ற கவலையிருக்கிறது. அதை எப்படிக் கலைந்து தன் 'தாளத்தை' நிதானமாக்கின்றார் என்பதை அம்பை இந்தக் கதையில் அற்புதமாக எழுதியிருப்பார். அந்த ஆண் அப்படிச் செய்துவிட்டான் என்ற வேதனை அந்தச் சந்தர்ப்பத்தில் மட்டுமே இருக்கின்றது. அது குறித்த எந்த நிந்தித்தலும் பிறகு கதையில் எங்குமேயில்லை. எனெனில் இப்போது அந்தப் பெண் தனக்கான உலகில் வாழத்தொடங்கிவிட்டாள். ஆணின் இருப்பு அவளின் வாழ்வோ இருக்கிறதோ இல்லையோ அவர் முன்னர்போல வேதனைப்படப்போவதில்லை. இதுவும் சேர்ந்ததுதான் வாழ்க்கையென புரிந்துகொள்வதில் பெண்களைப் போல பல ஆண்களால் இருக்கமுடிவதில்லை.

இதைத்தான் இன்னொரு கதையான, 'ஒரு கறுப்புச் சிலந்தியுடன், ஓர் இரவில், குடும்பம் நெருக்குகிறதென, மூன்று வயதுப்பிள்ளையுடன் தன்னை விட்டுவிட்டுப்போன துணையை, ஒரு பெண் நினைத்துப் பார்க்கின்ற கதையும் வேறுவிதமாய்க் கூறுகின்றது. 'நீ ஏன் என்னை விட்டுப்போனாய், உனக்குப் பிறகு நான் சந்தித்த எந்த ஆணும் உன்னைப் போல இருந்ததில்லையே. ஒரு கறுப்புச் சிலந்தியைப் போலவாது என்னுடன் கூடவே இருந்திருக்கலாமே' என உடல்வலி மிகுந்த இரவில் தன் துணையை சிலந்தியாக உருவகித்துப் பார்க்கின்ற வித்தியாசமான கதை.

பெண்களுக்கு இருக்கும் துயரங்களையும், திணறல்களையும், தடுப்புச்சுவர்களைப் பற்றி அம்பையின் கதைகள் கூறினாலும், அவை ஒருபோதும் ஆண் வெறுப்பை எந்த இடத்திலும் ஊதிப் பெருக்குவதில்லை. இந்த உலகமும், இந்த ஆண்களும் எவ்வளவு சிக்கலாகவும், மோசமாகவும் இருந்தாலும் அதைத்தாண்டி பெண்களை வாழ உற்சாகப்படுத்துகின்ற குரல்களை அம்பையின் பல கதைகளில் காணலாம். பெண்களின் இருத்தலை இன்னும் சற்று உள்முகமாய் நிதானமாய் பார்க்கக் கோருகின்ற கதைகளில் இருந்து நம்மால் த்ப்பிப்போக முடியாது, கரைந்து நெகிழத்தான் முடிகிறது

(Oct 03, 2014)

ரொபர்டோ பாலனோ (Roberto Bolano)

Monday, October 20, 2014

1.
பெரும்பாலான படைப்பாளிகளைப் போல ரொபர்டோ பாலனோ, அவரின் மறைவின் பின்னே கண்டுபிடிக்கப்பட்டவர். அவரின் படைப்புக்களை வாசித்த மோகத்தில் பலர் அவர் வாழ்ந்த வாழ்வு எப்படியானது என்று தேடிக்கொண்டிருக்கின்றனர். அது இன்னும் மூடப்பட்ட பக்கங்களாய் இருக்கும்போது ரொபர்டோ இன்னுமின்னும் மர்ம்ம நிறைந்த ஒருவராய் தோற்றங்களை மாற்றியபடியிருக்கின்றார். அது மட்டுமின்றி அவரின் புனைவுகளின் வழி அவரின் குணாதிசயங்களைத் தேடுபவர்கள் கண்டுகொள்ளும் விம்பங்களையும் ரொபர்டோ அடிக்கடி குலைத்தபடியுமிருக்கின்றார்.

இப்போது கிடைக்கும் ஒரளவு தகவல்களின்படி 1953ல் சிலியில் டிரக் டிரைவருக்கும், ஆசிரியை ஒருவருக்கும் மகனாய்ப் பிறந்த ரொபர்டோ தன் பதினைந்தாவது வயதில் மெக்சிக்கோவிற்கு குடும்பத்தினருடன் புலம்பெயர்கின்றார். டைஸ்லக்‌ஷியாவால் பாதிக்கப்பட்டிருந்த ரொபர்டோ, கற்பித்தலை கேட்கவோ அல்லது கிரகிக்கவோ முடியாது திணறிக்கொண்டிருந்த மாணவனாய் இருந்தாரென அவரின் ஆசிரியர்களால் குறிப்பிட்டிருக்கின்றனர். மெக்சிக்கோவில் உயர்பாடசாலைக் கற்றலை உதறித்தள்ளிவிட்டு, பத்திரிகையாளராக தன்னை மாற்றிக்கொண்ட ரொபர்டோ, அங்கே கவிஞர்களுக்கான சிறு அமைப்பைக் கட்டியெழுப்பியிருக்கின்றார்.

தீவிர மார்க்சியவாதியான (டிரொஸ்கியவாதி) ரொபர்டோ பின்னாட்களில் மெக்ஸிக்கோவில் இருந்து சிலியிற்கு பினோச்சோவின் சர்வாதிகார அமைப்பிற்கு எதிராகப் போராடத் தன் தாய் நாட்டிற்குப் போகின்றார். அரசிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ரொபர்டோ கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கவும்படுகின்றார். அங்கே சிறைக்காவலர்களாய் வேலை செய்யும் அவரின் பழைய இரண்டு பாடசாலை நண்பர்களால் காப்பாற்றப்பட்டு சிலியை விட்டுத் தப்பியோடுகின்றார். இந்த நிகழ்வு குறித்து -இப்படி ரொபர்டோ சிலியிற்கு போய் தப்பி வந்தது- நிகழ்ந்ததா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படாது விவாதங்கள் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த தப்பித்தலில்போது இடையில் எல் சல்வடோர் சென்று அங்கே கவிஞர்களோடும், போராளிகளோடும் நட்பு கொண்டார் எனவும் கூறப்படுகின்றது.

தனது 24 வயதில் ஸ்பெயின் போகின்ற ரொபர்டோ, பார்சிலோனாவின் பல்வேறு கடலோர நகரங்களில் வாழ்கிறார். அவ்வாறான ஒரு நகரத்திலேயே (Barnes) அவர் தனது துணையான லோபஸைச் சந்தித்து கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாய் -இறக்கும்வரை- தனது துணையோடும் பிள்ளைகளோடும் Barnesலேயே வாழ்கிறார். அவரின் அநேக படைப்புக்கள் பல்வேறு பதிப்பகங்களினாலும், ஏஜெண்டுகளாலும் நிராகரிக்கப்பட்டபோதும் தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருந்திருக்கின்றார். அவரது துணை அவர் எழுதுவதற்கான சூழலை தொடர்ந்து எவ்விதத் தொந்தரவிற்கும் உள்ளாகாது கொடுத்திருக்கின்றார் என்பதும் கவனிக்கத்தக்கது. எனினும் ரொபர்டோவின் இறுதி வருடங்களில் அவர் தன் துணையை விட்டு தனித்து வாழ்ந்திருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது.

2.
ஏன் எனக்கு ரொபர்டோ மிக நெருக்கமானவராக ஆகிப்போகின்றார் என யோசித்துப் பார்க்கின்றேன். அவரைப் போன்ற பதின்ம வயதுகளிலேயே எனது புலம்பெயர்வு நிகழ்ந்து மட்டுமில்லை, அநேகமான புலம்பெயர்ந்தவர்கள் செய்யும் தொழில்களான கோப்பை கழுவுதல், குப்பை அள்ளுதல், கழிவறைகள் சுத்தம் செய்தல் போன்ற சாதாரண தொழில்களையே ரொபர்டோ தொடர்ந்து செய்துமிருக்கின்றார் என்பதும் ரொபர்டோவை நான் நெருங்கியதற்கான காரணங்களில் சிலவாய் இருந்திருக்கலாம்.. மேலும் ஒதுக்குபுறமான வாழ்வை வாழ்ந்தவர் என்றபடியாலும், எந்த நிலப்பரப்போடும் அதிகம் நெருக்கம் கொள்ளாத மனோநிலையாலும், சிலி நாட்டைச் சேர்ந்த பாப்லோ நெரூடாவிலிருந்து, இஸபெல் அலெண்டே வரை எல்லோரையும் விமர்சனங்களால் அடித்துத் துவைத்துமிருக்கின்றார். ஆகவே தன்னை எங்கும் பொருத்திக்கொள்ளாத அல்லது எவரையும் பின் தொடர விரும்பாத ஒருவரை இந்த்ச் சமூகம் அவ்வளவு எளிதாய் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதும் இயல்புதானில்லையா?

ரொபர்டோவின் எழுத்துக்களை வைத்து, அவர் ஒரு பெரும் குடிகாரனாகவும், போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்திருக்கலாம் என்று கட்டியெழுப்பட்ட விம்பத்தை அவரைப் பற்றி இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் ஆய்வுகள், அப்படியில்லையெனத் தெரிவிக்கின்றன. அது மட்டுமில்லாது அவர் தன்னை எப்போதும் கவிஞனாகவே நினைத்துக்கொண்டவர், அவரின் குடும்ப நிலையிற்காகவே பிற்காலத்தில் நாவலாசிரியராக மாறினார் எனக் கூறப்பட்டதைக் கூட, அப்படியல்ல அவருக்கும் நாவலாசிரிய்ராகும் கனவு நீண்டகாலமாய் இருந்தது என்பதை இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ள அவரின் தொடக்ககாலக் குறிப்பேடுகள் சில நிரூபிக்கின்றன.

3.
ரொபர்டோவின் படைப்புக்களை வாசித்து நெருக்கம் கொண்ட பலர் இப்போது ரொபர்டோ வாழ்ந்த பார்சிலோனாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றபடி இருக்கின்றனர். அப்படி அங்கே போய், ரொபர்டோவின் நீண்டகால வீடீயோ கடை நண்பருடன் உரையாடும் லிஸா எமக்கு இன்னொருவிதமான ரொபர்டோவைக் காண்பிக்கின்றார். எப்போதும், எங்கேயும் புத்தகங்களை வாசித்துக்கொண்டிருக்கும் ஒருவரையே, ரொபர்டோவிவின் நண்பர் மட்டுமில்லை வேறு பலரும் நினைவு கொள்கின்றனர். தோள்வரை நீளும் தலைமயிரும், அடர்த்தியான கண்ணாடியும் அணிந்த ரொபர்டோவேயே அவர்கள் தங்கள் ஞாபகங்ளினூடாக மீண்டும் நிகழிற்குக் கொண்டுவருகின்றனர். மகனை பாடசாலையில் இருந்து அழைத்து வரக் காத்திருக்கும்போதுகூட ரொபர்டோ புத்தகங்களை வாசிக்கும் ஒருவராக மட்டுமின்றி, சிலவேளைகளில் சினிமா தியேட்டருக்குள்ளும் நூலை வாசிக்கும் தீவிரமான ஒருவராக இருந்திருக்கின்றாரென அவரோடு ஒரு தசாப்தகாலததிற்கு மேலாய்ப் பழகிய நண்பர் நினைவுகூருகின்றார்.

மேலும், ரொபர்டோ ஒரு பெருங்குடியாளனோ அல்லது போதைமருந்து அடிமையோ அல்லவென குறிப்பிடும் அந்த நண்பர், ஆனால் இவ்வாறானவர்களின் வாழ்க்கையை அவதானிப்பதற்காய் மணித்தியாலக்கணக்கில் பார்களில் நேரத்தை ரொபர்டோ செலவழித்திருக்கின்றார் எனச் சொல்கின்றார். மற்றவர்கள் உரையாடுவதை அமைதியாக எப்போதும் கேட்க விரும்பும் ரொபர்டோவுடன் பின்னாட்களில் போதையிற்கு அடிமையான நிறையப் பேர் நண்பர்களாய் ஆகியும் இருக்கின்றனர். அவர்களின் கதைகளைக் கேட்ட்கும்போது நிறைய கோப்பியும், சிகரெட்டும் அருந்தும் ரொபர்ட்டோவைத்தான் தனக்குத் தெரியும் என்கிறார் அந்த நண்பர்.

இவ்வாறாக ரொபர்டோவைத் தேடிப்போகும் லிஸா, அவரின் நாவல்கள் மெக்சிக்கோவையோ, சிலியையோ பின்புலங்களாய்க் கொண்டவையாக இருநதாலும், அந்த நாவல்களில் அவர் தொலைந்துபோன கனவுகளையும், கடந்து போன வாழ்வையும் எழுதினாலும், அவர் அந்த நாவல்களின் சித்தரித்தவைகள், தான் ஸ்பெயினில் வாழ்ந்துகொண்டிருந்த நிலப்பரப்புக்களையும் வாழ்ந்த வாழ்வையுந்தான் என்கின்றார். இது ஒருவகையில் புலம்பெயர்ந்து வாழும் படைப்பாளிகள் உணர்கின்ற யதார்த்தமும் கூடத்தான்.

சிலவேளைகளில் நாம் நமது தாயகத்தைப் பற்றி எழுதும்போது, நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தேசத்தின் கதையைத்தான் எழுதிக்கொண்டிருக்கின்றோமோ என்ற தோற்ற மயக்கம் ஏற்படுவதும் இயல்புதானல்லவா? ஆனால் ரொபர்டோவிற்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் ரொபர்டோ சிலியை விட்டுப் பிரிந்தபின் ஸ்பானிஷ் பேசக்கூடிய நிறைய நாடுகள் தென்னமரிக்காவில் நிறைய இருந்தன. இறுதியாய் அவர் வாழத் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஸ்பெயினிலும் அவரை அவ்வளவு அந்நியப்படுத்தப்படாத அவரின் தாய்மொழியைப் பேசும் வாழும் மக்களின் நிலப்பரப்பில் வாழ முடிந்தது என்பதே.

கடந்த வருடம் ஒரு எழுத்தாள நண்பருக்கு புலம்பெயர்ந்திருந்து எழுதுவதில் வரும் சலிப்பைப் பற்றி ஒரு கடிதத்தில் நான் குறிப்பிட்டபோது, அவர் முதன்மையாகக் குறிப்பிட்டது, 'உங்களுக்கு உங்கள் மொழி பேசும் மக்கள் திரளிடையே வாழ முடியாதது பெரும் இழப்பு' என்றிருந்தார். கசப்பானது என்றாலும் அதுதான் உண்மை.

4
ரொபர்டோவின் நண்பரான விடீயோ கடைக்காரர், தானும் ரொபர்டோவின் மணிக்கணக்கில் அரசியல்,இலக்கியம், திரைப்படங்கள், பெண்கள் பற்றிப் பேசுக்கொண்டிருப்போம் என்கின்றார். படைப்பாளியாக இருந்தபோதும் எப்போதும் தன்னை யாரேனும் அளவுக்கதிகமாய்ப் பாராட்டினால் அவர்களை விலத்தி வரவே ரொபர்டோ விரும்பியிருக்கின்றார் எனவும், அதே சமயம் எழுத்தாளர்களுடன் எப்போது அளாவளாவ பிரியப்பட்டவராக இருந்திருக்கின்றார் எனவும் சொல்கின்றார். தாங்கள் வூடி அலனின் படங்கள் உள்ளிட்ட நிறையப் படங்களை விவாதித்ததாகவும், ரொபர்டோவிற்கு டேவிட் லிஞ்ச், நைட் ஷியாமளன் போன்றவர்களின் திரைப்படங்கள் அதிகம் பிடிக்கும் எனவும் குறிப்பிடுகின்றார்.

ரொபர்டோவின் படைப்புக்களை ஆய்வு செய்தும், அவர் யார் என்பது பற்றியும் நிறையப் புத்தகங்கள் இப்போது வரத்தொடங்கிவிட்டன. அதுமட்டுமின்றி இன்னமும் பிரசுரிக்கப்படாது ரொபர்டோவின் கையெழுத்துப் பிரதிகளாக இருந்தவைகளும் பிரசுரங்களுக்குத் தயாராகியும் கொண்டிருக்கின்றன. அண்மையில் ரொபர்டோவை இறுதியாய் நேர்காணல் செய்தவர், ரொபர்டோவிற்கு பிற்காலத்தில் ஒரு காதலி இருந்திருக்கின்றார் என்றும், அந்தப் பெண்ணையும் கவனத்தில் கொள்ளவேண்டுமென புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றார்.

எதுவென்றாலும் புதுவகையான எழுத்தை அறிமுகப்படுத்தும் ரொபர்டோ போன்றவர்களை அவரின் வாசகர்கள் கொண்டாடவே செய்வார்கள்.அதுபோலவே அவரைப் பற்றிய புதிர்களும் அவரைப் பற்றிய வசீகரத்தை இன்னும் அதிகரித்தபடியே இருக்கும். இறந்தபின்னும் ஆயிரம் பொன் என்பது யானைகளுக்கு மட்டுமில்லை, ரொபடர்டோ, வான்கோ போன்ற படைப்பாளி/ஓவியர்களுக்கும் பொருந்தும் போலும். ஆனால் இதையெல்லாவற்றையும் விட இந்தப் புகழ், பெயர் என்பவற்றைப் பொருட்படுத்தாது, தாங்கள் வாழும் காலத்தில் நிராகரிக்கப்பட்டிருந்தபோதும், தாம் விரும்பியதை எதன் பொருட்டும் கைவிடாது செய்துகொண்டிருந்தார்களே, அதைத்தான் ரொபட்டோவிடமிருந்தும், வான்கோவிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது.

(நன்றி: 'அம்ருதா', புரட்டாதி, 2014)


ஏற்கனவே எழுதியவையும்/ எழுதுவதற்கு உதவியவையும்:

(1) https://www.facebook.com/photo.php?fbid=10152513264238186&set=a.135912858185.111205.645983185&type=1&theater
(2) http://www.newyorker.com/magazine/2013/04/22/mexican-manifesto
(3) http://www.newyorker.com/magazine/2012/01/23/labyrinth-2
(4) http://www.salon.com/2013/06/24/myths_and_legends_of_roberto_bolano_exposed_in_new_exhibit_partner
(5) http://www.independent.co.uk/arts-entertainment/books/features/fame-after-death-why-roberto-bolao-became-a-literary-superstar-posthumously-8706107.html

நித்தியகல்யாணிப்பூ குறிப்புகள்

Wednesday, October 15, 2014

 1.
நேற்று மழைநாளோடு வாசித்து முடித்த நாவல், ஜீ.முருகனின் 'மரம்'. எனக்குப் பிடித்த (விரும்பிய அளவு நாட்களைக் கழிக்கவேண்டுமென பிரியப்படும்) திருவண்ணமலையைச் சுற்றி நடக்கின்ற கதையென்பதால் அங்கேயே போய்விட்டதென்ற உணர்வுடன் வாசித்துக்கொண்டிருந்தேன். கவிஞர்/ஓவியர்களின் வாழ்வைத் தொட்டு செல்வதோடு, நீட்ஷேயும், டால்ஸ்டாயும் பயமுறுத்தாமல்/நுட்பமாகப் பயன்படுத்தப்பட்டதால் இன்னுமின்னும் நாவல் ஈர்த்துக்கொண்டிருந்தது.

தனது துணைவியும் கவிஞருமான சந்திராவின் எல்லாத் 'துரோகங்களை'யும் மறந்துவிட்டு, டால்ஸ்டாயின் ஒரு பாத்திரம்போல மண்டியிட்டு அழவேண்டுமென கண்ணன் விரும்புவார்... "அது அவளுடைய துரோகங்களுக்கு உரிய பதிலீடாக,, பகை உணர்வையெல்லாம் அன்பாக மாற்றக்கூடிய உலைகளமாக அது இருக்கும்' எனவும் நம்புவார். டாஸ்டாய் எழுத நினைத்தும், மனிதன் கடவுளாக மாறும் தருணங்கள் இதுவேயெனவும் மேலும் யோசிப்பார். ஆனால் அவர் தன் துணையை நேரில் சந்திக்கும்போதெல்லாம், சராசரிக்கும் கீழான மனிதராகவே மாறிவிடுகின்றார். 'கிரஸ்லர் சோனட்டாவில் வரும் கணவனைப் போல கத்தியை எடுத்து அவளது வயிற்றில் சொருகும்' ஆசை'யே அவருக்குப் பெருகுகிறது. எமது அன்பானவர்களாக மாறும் விருப்பையும், பிறரை மன்னிக்க விரும்பும் மனோபாவத்தையும் எவை குலைத்துக்கொண்டேயிருக்கின்றன? ஏன் நம்மால் அவ்வளவு எளிதாக அப்படியாக மாறமுடியாதிருக்கின்றது எனத் தொடர்ந்து யோசிக்கவைக்கும் இவ்வாறான பாத்திரங்களே நாவல் முழுதும் நம்மைத் தொந்தரவுபடுத்தியபடியே இருக்கின்றன.

மாலையில் வாசிக்கத்தொடங்கியது அயோத்திதாச பண்டிதரைப் பற்றி டி.தருமராஜன் எழுதிய 'நான் பூர்வ பெளத்தன்'. அந்த முன்னுரையை கவனித்தாகவேண்டும். முக்கியமாய் ஒவ்வொருவரும் எழுதுவதற்குப் பல்வேறுகாரணங்கள் இருக்கக்கூடுமெனப் பட்டியலிட்டு, ஒரு தலித் எழுதத் தொடங்கும்போது, அவருக்கு முன்னாலுள்ள சவால், 'இதுவரை எழுதப்பட்டிருக்கும் அத்தனை அவதூறுகளுக்கும் எதிராக எழுதுவதே' என சொல்லப்பட்டிருப்பது எத்தகைய உண்மையான வார்த்தைகள். முக்கியமாய் பல்வேறுவிதமான மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு 1880களில், தமது கோரிக்கைகளை பிரிட்ஷாருக்கு அனுப்பும் மாநாட்டில், அயோத்திதாச பண்டிதர் ஒரு கோரிக்கையை வைக்கின்றார்.

சைவர்களாகவும், வைணவர்களாகவும் இருக்கும் பறையர்களை கோயில்களுக்குச் செல்ல வழிபட அனுமதிக்கவேண்டும். அந்தக் கோரிக்கை பிரிட்டிஷ்காரருக்குப் போகாமாலே, உயர்சாதியினரால், சிவனும் விஷ்ணுவும் எங்களுக்குரிய கடவுள்கள், உங்களுக்கென்றுதானே சுடலைமாடன்களும், காட்டாண்டிகளும்' இருக்கின்றதெனக் கூறி நிராகரிக்கின்றனர். ஆனால் அதேகாலகட்டத்திலேயே, இந்தியாவில் முதன்முதலாக குடிசன மதிப்பீடு செய்யப்படும்போது, சிவனையோ, விஷ்ணுவையோ இன்னபிற பெருந்தெய்வங்களை வழிபடாது தனக்குரிய குல/நாட்டார் தெய்வங்களை வழிபட்ட மக்களை ஆங்கிலேயோரோடு நின்ற உயர்சாதியினர் 'இந்துக்கள்' என்ற வகைக்குள் அடக்கச் சொல்கின்றனர்.

அயோத்திதாச பண்டிதரே இவ்வாறே பெருந்தெய்வங்களுக்கு வெளியே நின்ற ஒதுக்கப்பட்ட சாதிகளையும், பழங்குடிகளையும், 'ஆதித்தமிழர்' என்ற வகைக்குள் சேர்க்கச் சொல்லிக் குரல் கொடுக்கின்றார். எனினும் அவரின் குரல் செவிமடுக்கப்படாது, எல்லோரும் இந்துக்களாகவே சேர்க்கப்படுகின்றனர். இன்றும் சமஸ்கிருதமயமாக்கலில் நாட்டார் தெயவங்கள் பெருந்தெய்வங்களாக கலக்கப்படும் சூழலில் தலித்துக்கள் சமமான மனிதர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டா இவையெல்லாம் நடக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் எல்லாச் சூட்சுமமும் நமக்கு விளங்கும்.

 2.
நீங்கள் ................ அனுப்பியபொழுதில் தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வு பற்றிய நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் எப்படி உங்களால் காமத்தைக் கடந்து போக முடியவில்லை என்பதுபோல தஸ்தயேஸ்கியை வாசித்தபோது அவரால் ஏன் எந்தக் காலத்திலும் நிம்மதியாகவோ மகிழ்ச்சியாகவோ இருக்க முடியவில்லை, எப்போதும் தளும்பிக்கொண்டிருந்தார் என யோசித்துக்கொண்டிருக்கின்றேன். இத்தனைக்கும் மரணத்தை மிக அருகில் கண்டபின், இது மீளுயிர்ப்பு என விளங்கி வைத்திருக்கின்ற தஸதயேவ்ஸ்கியால் பிறகான காலங்களில் மகிழ்ச்சியைக் கண்டடைய முடியவே இல்லை.

அவர் தன்னை யாரென்று கண்டடையக்கூடுமென்றா அல்லது காமத்தின் மூலம் எதையாவது அடையக்கூடுமென்றா பெண்களைத் தேடிப் போயிருக்கின்றார் எனவும் தெரியவில்லை. ஆனால் அவரின் வாழ்வில் நிறையப் பெண்கள் வந்திருக்கின்றனர். எனக்கு மிக ஆச்சரியமென்னவென்றால் அவர் அன்னாவோடாவது மகிழ்ச்சியாக இருந்திருப்பாரென்றால், அன்னா பிற்காலத்தில் எழுதிய நினைவுகளின் தொகுப்பில் கூட தஸ்தயேவ்ஸ்கி துயரம் நிறைந்த ஒருவராக இருந்திருக்கின்றார் என்பதைத்தான் அடையாளங்காண முடிகின்றது. 'நான் தனியே இருக்கின்றேன், தனித்திருக்கின்றேன்' என்றே அடிக்கடி அன்னாவிடம் குறிப்பிடுகின்றார். அன்னாவின் முதற்குழந்தை சொற்ப மாதங்களில் இறந்துபோகின்றபோது 'மகிழ்ச்சியற்ற இந்த மனிதர் ஒரு பெண்ணைப் போல விசும்பி விசும்பி அழுதததைப் பார்த்தபோது என்னால் கூட சகிக்கமுடியாதிருந்தது' என்றே அன்னா எழுதியிருக்கின்றார்.

ஆனால் இவ்வளவிற்கும் அப்பால், மிகுந்த வலதுசாரித்தன்மையுடைய, ஜரோப்பாக் கலாசாரத்தையே (அன்றையகாலத்தில் மொஸ்கோ, பீட்டர்ஸ்பேர்க் என்ற இரண்டு வேறுபட்ட கலாசார வாழ்வு இருந்தன) வெறுக்கின்ற தஸ்தயேவ்ஸ்கியா இவ்வளவு அருமையான புத்தகங்களை எழுதியிருக்கின்றார் என்பதுதான் வியப்பளிக்கின்றது. இவ்வளவு துயரங்களுக்கும் பதற்றங்களுக்குமிடையில் இருந்து கொண்டு இப்படி எழுதமுடிகின்றதென்றால் அவருடைய மகிழ்ச்சியோ/நிறைவோ எழுதுவதில் மட்டுமே இருந்திருக்கின்றதெனப் புரிந்துகொள்கின்றேன்.

நீங்கள் காமத்தைக் கடக்கமுடியாதிருக்கின்றதென எழுதியதை வாசிக்கும்போது, ஜெயமோகன் ஓரிடத்தில் எழுதியது ஞாபகம் வருகின்றது. 'காமம் ஒரு நீலியைப் போல உங்களை தன் கண்களைப் பார் பாரென்று கேட்டுக்கொண்டேயிருப்பாள். நீங்கள் விழிகளை நிமிர்ந்து பார்த்தீர்களோ அப்படியே காமத்தோடு என்றுமே போராடிக்கொண்டிருக்கவேண்டும். ஆனால் நான் நீலியை நிமிர்ந்து பார்க்காது கடந்து போய்க்கொண்டிருக்கின்றேன்' என்றெழுதியிருந்ததாய் ஞாபகம். அதை வாசித்தபோது, இல்லை நான் காமத்தை அப்படிக் கடக்கப் போவதில்லை. நீலியின் கண்களை நிமிர்ந்து பார்ப்பேன். அதனோடு போராடியே தாண்டிச் செல்வேன் என நினைத்துக்கொண்டதுண்டு....

(நண்பரொருவருக்கு எழுதிய கடிதத்திலிருந்து...)

3.
னந்தவிகடன் கையில் கிடைக்கும்போதெல்லாம், தவறாது வாசிப்பது அ.முத்துலிங்கத்தின் 'கடவுள் தோன்றிய இடம்' தொடர்கதையும், ப்ரியா தம்பியின் 'பேசாத பேச்செல்லாம்' தொடரும் . ப்ர்யா தம்பியின் தொடரோடு, விகடனில் அதே வாரங்களில் வரும் பிறவற்றை ஒப்பிடுவது இன்னும் சுவாரசியமாக இருக்கும். பெண்களுக்குப் பொதுவாய் வெளிப்படையாய்/இயல்பாய்க் காதலைச் சொல்லும் ஆண்களைப் பிடிக்கும் என்று ஒரு தொடரில் எழுத, அதே இதழில் வா.மு.கோமு காதலை இறுதிவரை சொல்லாத ஆணை, ஒரு பெண்ணுக்கு அதிகம் பிடிப்பதாய்க் கதை எழுதியிருப்பார். இப்படி இரண்டு வேறுவிதமான உலகங்கள் உருண்டு கொண்டிருக்கின்றன என்பதை வாசிப்பது கூட சுவாரசியமானது.

இந்தமுறை ப்ரியா தம்பி, சினிமாவில் சித்தரிக்கும் 'க்ளிஷே' பெண்களுக்கும், யதார்த்ததில் இருக்கும் பெண்களுக்கும் இடையிலான வித்தியாசங்களையும், ஆனால் பெரும்பான்மையான ஆண்கள் எப்படி தன் நடைமுறைவாழ்வில், சினிமாவில் இருந்து பெண் கதாபாத்திரங்களை, தமக்குத் தெரிந்த பெண்களோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள் என்பதையும் விரிவாக எழுதியிருப்பார். அதில் 'இங்கிலிஷ் விங்கிலீஷ்' படத்தில் சிறிதேவி செய்யும் பாத்திரத்தை வியந்து எழுதியிருப்பார். அந்தப் படத்தைப் பார்த்த தருணத்தில் நானும் இப்படியான ஒரு நிலையில், பெண் பாத்திரம் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது எனவே நினைத்திருந்தேன். ஆனால் ஒரு தோழி 'இறுதியில் பார்த்தால் எவ்வளவுதான், தன்முயற்சியில் முன்னேறிய சிறிதேவியும், குடும்பத்திற்கு கட்டுபட்டு தன் திறமைகளை மறைக்கும் ஒரு பெண்ணைப் போலவே காட்டப்பட்டிருப்பார். இப்படிக் காட்டுவதே ஆண்களுக்குப் பிடித்தமானது' என்று ஒரு புள்ளியைத் தொட்டுக்காட்டியிருந்தார்.

ப்ரியா தம்பியியும் இதற்கு முன் வாரங்களில், எப்படி பிஎஜ்டி படித்த பெண்கள் எல்லாம், திருமணம் என்று வந்தவுடன் எல்லாவற்றையும் கைவிட்டு குடும்பப் பெண்களாகிவிடும் அபத்தத்தைக் குறிப்பிட்டதாய் நினைவு. எனவே இங்கிலீஷ் விங்கிலீஷ் எப்படி முடிக்கப்படுகிறது என்பது குறித்தும் நாம் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது என நினைக்கிறேன். இதையெல்லாவற்றையும் விட, இந்த வாரத் தொடருக்கு ஓவியர் வரைந்த படம் பற்றியது. ப்ரியா தம்பியின் தொடர் எப்படி ஆண்களின் புரிதல்கள் தவறென்று சொல்ல முயற்சிக்கிறதோ, அதை மறுதலிப்பதாய் இந்த ஓவியம் இருக்கின்றது. என் விளங்கிக்கொள்ளலில் இந்த ஓவியம், பெண்கள் இடப்பக்கத்தில் இருப்பது போல இருக்கின்றார்கள், ஆனால் திரைப்படங்கள் படச்சுருளில் இருப்பது போலச் சித்தரிக்கின்றதாக எடுத்துக்கொள்கிறேன். ஆனால் இப்படி உள்ளே அணிவதைக்கூட அப்பட்டமாய்த் தெரிவது போல ஓவியம் வரைவதே, தொடரில் எழுதப்பட்டிருக்கின்ற எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போய் விடுகின்றது. இதை அந்தத் தொடரை எழுதுகின்ற ப்ரியா தம்பியோ, விகடன் ஆசிரியர்களோ கவனத்தில் கொள்ளாமல் இருப்பது கவலைக்குரியது. இப்படித்தான் முன்பும் ப்ரியா தம்பியின் சிறுகதையிற்கும் ஏதோ அபத்தமான ஒரு ஓவியம் வரையப்பட்டிருந்தது நினைவில் வருகின்றது.

குங்குமத்தில் அசோகமித்திரன் எழுதும் தொடரையும் விடாமல் வாசிப்பதுண்டு. இம்முறை யு.அனந்தமூர்த்தி பற்றி எழுதியிருக்கின்றார். எல்லாவற்றையும் உடைத்துப் பார்க்க விரும்பிய ஆனந்தமூர்த்தி தன் வாழ்வில் பராம்பரியத்தைக் கைவிடாமல் இருந்தவர் எனக்குறிப்பிட்டு, அவரின் மகனொருவர் வேறொரு மதத்தைச் சேர்ந்த பெண்ணை மணம் செய்தபோது, அனந்தமூர்த்தி மகனிற்கு அன்றைய காலை உபநயனம் செய்தார் என அசோகமித்திரன் குறிப்பிடுகின்றார். எழுத்தைத் தாண்டிய அனந்தமூர்த்தி ஒரு மரபுவாதியாக இருந்திருக்கக்கூடும். பெரும் இடதுசாரித் தலைவர்களாய் இருந்தவர்களே இறுதியில் பூநூல் சடங்குகளுக்குள் பாய்ந்தவர்கள் என்பதைத்தானே கடந்தகாலம் நமக்குக் கற்றுத்தந்திருக்கின்றது.

ஆனால் அசோகமித்திரனின் இந்தத் தொடரை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம். அவருக்கு மார்க்சியவாதிகளோடு இருந்த நட்பைப் பற்றி. சோவியத்து இதழ் வந்தபோது தி.க.சியை அடிக்கடி சந்தித்தபடி இருந்ததைக் குறிப்பிடுகின்றார். தான் அயோவா சென்று எழுத்தாளர் பட்டறையில் கலந்துகொண்டதற்கு கைலாசபதியே முக்கிய காரணம் என்கின்றார். அனந்தமூர்த்தியோடு நட்பாய் இருந்தையும் விரிவாக எழுதுகின்றார். அசோகமித்திரனைப் பற்றியெழுதும் எவரும் இவற்றைக் குறிப்பிடுவதில்லை. மார்க்சியர்கள் அவர்களவில்/அவர்களின் கொள்கையில்பால் விமர்சிக்கப்படவேண்டியவர்களே. ஆனால் அவர்கள் தமது சட்டகங்களை மீறி பிறரை வரவேற்றிருக்கின்றார்கள் என்பதையும் கவனித்தாகவேண்டும். இன்றும் புதிதாக வரும் இளம் எழுத்தாளர்கள் பலர் இடதுசாரிப் பின்னணியில் இருந்து வந்திருக்கின்றோம் என்பதைக் குறிப்பிட்டும் இருக்கின்றார்கள். பிறகு அதற்குள் இருக்கின்றார்களா, மீறிப்போகின்றார்களா, விமர்சிக்கின்றார்களா என்பது அடுத்த நிலையில் வருவது. முதலடியிற்கு எப்போது மார்க்சியம் கைகொடுத்திருக்கின்றது, தன் சட்டகத்திற்குள் இல்லாதவர்களையும் அரவணைத்திருக்கின்றது என்பதை நாம் தவறவிட்டுவிட முடியாது.

அசோகமித்திரன் அயோவா போயிருக்காவிட்டால், எனக்குப் பிடித்த 'ஒற்றன்' உருவாகியே இருக்க முடியாது. ஒருவகையில் அசோகமித்திரனுக்கு மட்டுமில்லை கைலாசபதியிற்கும் நன்றி சொல்லத்தானே வேண்டும்.

நான், ஜெஸி மற்றும் நீங்கள்

Wednesday, October 08, 2014


நீங்கள் முன்பு படித்த வளாகத்திற்கு, பின் எப்போதாவது போனதுண்டா? ஒருகாலத்தில் உங்களுக்கு நெருக்கமாயிருந்த இடங்கள் அந்நியமாகிப் போயிருப்பதை உணர்ந்திருக்கின்றீர்களா? அல்லது புதிய மாணவர்களின் மலர்ச்சியான முகங்களைப் பார்த்தபின், இன்னும் கொஞ்சக் காலம் வளாகத்தில் இருந்து படித்திருக்கலாமோ என்று யோசித்திருக்கின்றீர்களா? கடந்த காலம் விட்டுச் சென்ற சுவடுகள் அழியாமல் இருப்பதும், ஆனால் அதை பின் தொடர்ந்து போக முடியாதென யதார்த்தம் உணர்த்தவும், என்ன செய்வதென்று திகைக்கவும் செய்கின்ற ஒருவராக நீங்கள் இருந்திருக்கின்றீர்களா? அப்படியாயின் நீங்கள் உங்களை ஜெஸியில் அடையாளங கண்டுகொள்ள முடியும்.



கலைத்துறையில் பட்டம் பெற்றுவிட்டு, இன்னொரு வளாகத்தில் புதிய மாணவர்களைச் சேர்க்கும் துறையில் ஜெஸி வேலை செய்துகொண்டிருக்கின்றார். வாழ்க்கையும் அவ்வளவு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. சேர்ந்து வாழ்ந்த காதலி பிரிந்து போகின்றார், ஆடைகளைத் துவைக்கச் செல்லும் இடத்தில் யாரோ ஒருவர் அனைத்து ஆடைகளையும் களவாடியும் செல்கின்றார். வாழ்க்கை என்பது ஆச்சரியங்களினால் மட்டுமில்லை, எதிர்பாராத நெருக்கடிகளினாலும் சூழ்ந்ததென சோர்ந்து போயிருக்கும் ஜெஸியிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.
அவருக்குக் கற்பித்த, மார்க்சியத்தில் ஈடுபாடுடைய பேராசிரியர் கற்பித்தலிருந்து ஓய்வுபெறப் போகின்றார் எனவும், தனது பிரிவு உபசார விழாவில் ஜெஸியும் கலந்துகொள்ளவேண்டுமென அழைப்பு விடுகின்றார். விழாவில் கலந்துகொள்ள அவ்வளவு பிரியப்படாதபோதும், வாழ்வின் தினசரி நெருக்கடியிலிருந்து தப்பிவிடலாமென்பதால் தான் படித்த வளாகத்திற்கு நீண்ட காலங்களுக்குப் பிறகு ஜெஸி போவதற்குச் சம்மதிக்கின்றார்.
பதின்மம் மெல்லியதாகக் கரைந்து முடிகின்ற ஒருகாலத்தில் வளாகம் சென்றிருக்கின்றீர்களா? அப்படியானால் என்னோடும், என்னை அடையாளங் கண்டுகொள்கின்ற ஜெஸியோடும் சேர்ந்து சற்று வாருங்கள். ஜெஸியைப் போலவே மீண்டும் நீண்ட காலங்களுக்குப் பின் வளாகம் செல்லும் உங்களையும் அந்தச் சூழல் வசீகரிக்கவே செய்யும். வாழ்வில் கசப்பான காலங்களைச் சந்தித்திருந்தாலும் வாழவு இன்னும் சலிக்காது உயிர்ப்புடன் இருப்பதைப் போல, உங்களுக்கு வளாகம் எவ்வகையான நினைவுகளைத் தந்திருந்தாலும், நீங்கள் நுழையும்போது உங்களையறியாது goosebumps களைத் தருவதை இப்போது உணர்கின்றீர்களல்லவா?
ஜெஸி வளாகத்திற்குள் நுழையும்போதே ஒரு பதினமராகிவிடுகின்றார். வழி நெடுக இருக்கும் பெஞ்சுகளில் ஏறிக்குதிக்கிறார். கடந்து போகும் அனைவரையும் பார்த்துப் புன்னகைக்கின்றார். உற்சாகமிகுதியில் புல்வெளியில் படுத்துக் கிடந்தபடி திறந்த வானத்தை மனம் நிறைந்து இரசிக்கிறார். இனி ஜெஸியைப் பிரித்துப் பார்க்கவே முடியாது. நீங்கள், நான், ஜெஸி எல்லோரும் கிட்டத்தட்ட ஒருவராகப் போய்விடுகின்றோம்.
நாம் இப்போது எமக்குப் பிடித்த பேராசிரியரைச் சந்திக்கின்றோம். பிரிவுபசார நிகழ்வில் பேராசிரியரின் நண்பர்களுடன் அளாவுகின்றோம். அங்கே தற்செயலாக அந்த நண்பர் ஒருவரின் மகளையும் சந்திக்கின்றீர்கள். அவளுக்கு நீங்கள் எப்படியும் பெயரிட்டுக் கொள்ளல்லாம். எளிதாக இருப்பதற்கு ஸிபி என அவளை அழைத்துக் கொள்கின்றேன். ஆரமப அறிமுகத்திற்குப் பிறகு அவளை நீங்கள் சந்திக்கும் எத்தனையோ பெண்களில் ஒருவரென மறந்தும் விடுகின்றீர்கள்.
இடையில் நீங்கள் நீளுமொருவிரவில் ஒரு வித்தியாசமான மனிதனை வளாகத்துப் பெஞ்சில் சந்திக்கின்றீர்கள். அவன் உங்களுக்கு விநோதமானவாத் தெரிந்தாலும், அவனை உங்களுக்குப் பிடித்துவிடுகின்றது. அவன் எளிதில் உங்களுடைய அலுப்பான வாழ்க்கையைக் கண்டுகொண்டதில் இன்னும் ஆச்சரியமடைகின்றீர்கள். இந்த இரவு இப்படியே முடிந்துவிடக்கூடாதென, இசை அதிரும் மாணவர்களின் கொண்டாடத்திற்குக் கூட்டிச் செல்கிறான். மகிழ்ச்சியாயிருக்கும் மாணவர்களிடையே உங்களை ஒருவராகப் பொருத்திக் கொள்ள முடியாதிருக்கின்றது. நீங்கள் அங்கிருந்து விடைபெற விரும்புகின்றீர்கள்.
அப்போது தற்செயலாய் ஸிபியை மீண்டும் சந்திக்கின்றீர்கள். அவளுக்கு உங்கள் வரவு ஆச்சரியமாயிருக்கின்றது. இவ்வாறான இடங்களிற்குரிய ஆடையை நீங்கள் அணிந்திருக்கவில்லையெனக் கூறிவிட்டு, உங்கள் கழுத்துப் பட்டியை நெகிழ்த்துவிடுகின்றாள். நெகிழ்ந்தது உங்கள் கழுத்துப்பட்டி மட்டுமல்ல, நீங்கள் இறுக்கி மூடியிருந்த இதயத்தின் வாசல்களுமே. எனினும் வெளியே போகவே இன்னும் விரும்புகின்றீர்கள்.விநோதமான உங்கள் நண்பன், ஸிபியிற்கு உங்கள் மீது ஏதோ ஈர்ப்பு இருக்கிறதெனச் சொல்லி, நீங்கள் சுதாகரிப்பதற்குள்ளேயே, ஸிபியுடன் அடுத்தநாள் காலை தேநீர் அருந்துவதற்கான சந்திப்பையும் ஏற்பாடு செய்துவிடுகின்றான்.
ஸிபியைச் சந்திக்கக் காத்திருக்கின்றீர்கள். இடையில், நீங்கள் வளாக காலத்தில் வாசித்த பெரும்புத்தகம் ஒன்றை வாசிக்கும் ஒருவனைக் கண்டு நெருக்கம் கொள்கின்றீர்கள். ஸிபி உற்சாகமாய் வருகின்றாள். தேநீருடன், அவளுடன் சேர்ந்து நடக்கத் தொடங்குகின்றீர்கள். உங்களுக்குப் பரிட்சயமான இடங்களுக்குச் செல்லும்போது உங்கள் கடந்தகால நினைவுகளை ஸிபியுடன் உற்சாகத்துடன் பகிர்ந்துகொள்கின்றீர்கள். ஸிபி இரண்டாமாண்டு மாணவி என்றாலும் அறிவுக்கூர்மையுடைய பெண். உங்களுக்கு நிகராக எல்லாவற்றையும் கதைக்க, நீங்கள் இன்னும் நெருக்கத்தை உணர்கின்றீர்கள். அவளுக்குப் பிடித்தமான நாடக மேடையில், அவள் தன் நினைவுகளைப் பகிர்கிறாள். மகிழ்ச்சியின் விளிம்பில் உங்களை முத்தமிட விரும்புகின்றாள். உங்களுக்கு அச்சமாயிருக்கின்றது. உங்கள் தயக்கத்தைப் புரிந்துகொண்ட ஸிபி நெற்றியிலும், கன்னங்களிலும் முத்தமிட அனுமதி கேட்கின்றாள்.
வளாகததிற்குள் இருந்த கொஞ்சநாட்களிற்குள் இந்த வாழ்க்கை இவ்வளவு அழகானதா என்று தோன்றுகின்றது. அதற்கு ஸிபிதான் முக்கிய காரணம் என்பதையும் நினைவுபடுத்தத் தேவையும் இல்லை. ஸிபியிடமும், வளாகத்திடமிருந்தும் விடைபெற்றுக் கொள்கின்றீர்கள். ஸிபி, உங்களுக்குக் கடிதம் எழுதச் சொல்கிறாள். கடிதம் என்பது மின்னஞ்சல்களோ, ரெக்ஸ் மெஸேஜ் போன்ற நவீன தொழில்நுட்பத்தினால் விளைந்தவற்றையல்ல அவள் குறிப்பிடுவது. கையால், மை நிறைந்து எழுதபட்ட எழுததுக்கள் என நினைவுபடுத்துகின்றாள். அதுமட்டுமில்லாது செவ்வியல் மற்றும் ஓபரா இசைகளை அறிமுகப்படுத்துகின்றாள். எப்படி உரிய முறையில் கேட்பது எனவும் கற்றுத் தருகின்றாள். எழுதும் கடிதங்களினால் மட்டுமே நீங்களிருவரும் தொடர்பில் இருக்கின்றீர்கள்.

ஸிபியின் கடிதங்கள் இப்போதும் உங்களின் வாழ்க்கையின் ஒருபகுதியாகிவிட்டது. கலை என்பது எப்படி வாழ்க்கையை இன்னொரு தளத்திற்குக் கொண்டு செல்லும் என்பதை நகர நெருக்கடி வாழ்க்கையிற்குள் இருந்தபோதும் தெளிவாக உணர்ந்துகொள்கின்றீர்கள். நகரத்தில் தனித்திருந்தாலும், வெளியில் காணும் எல்லோரையும் பார்த்து முகம் மலர்ந்து சிரிக்கின்றீர்கள். அவர்கள் பதிலாய்த் தரும் சிரிப்பில் ஸிபியை நினைவு கூருகின்றீர்கள்.

இப்போது சட்டென்று இந்த உறவு எங்கே போய் முடியப்போகின்றதென்று யோசிக்கத் தொடங்குகின்றீர்கள். 19 வயதில் இருக்கும் பெண்ணோடு 30களில் இருக்கும் உங்களுக்கான வயது வித்தியாசம் நெருடலைத் தருகின்றது. வெவ்வேறு காலங்களில் நீங்களும் அவளும் என்ன வய்தில் இருப்பீர்களென தாளில் எழுதியெழுதிப் பார்க்கின்றீர்கள்.நீங்கள் 80களில் இருக்கும்போது அவளுக்கு 70 வயதாக இருக்குமென நினைத்து அந்த நினைவுகளை சற்று ஒதுக்கி வைக்கின்றீர்கள்.

ஒருநாள் ஸிபி உங்களை நேரில் காணவேண்டும் என்று ஆசைப்படுகின்றாள். உங்களை அவளின் கடிதங்கள் நெகிழ்த்தியதுபோல, அவளையும் நீங்கள் எழுதியவை மலர வைத்திருக்குமல்லவா? உங்களுக்கு அவள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்ற தயக்கம் இருக்கிறது. நிறைய யோசித்தபின், வருவது வரட்டுமென ஸிபியைச் சந்திக்க, நீங்கள் படித்த வளாகத்திற்குச் செல்கின்றீர்கள். உங்கள் எதிர்பாராத வருகை ஸிபியை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

அவளது மாணவ அறையில் நீங்கள் இருவரும் இருந்து நிறையக் கதைக்கின்றீர்கள். தற்செயலாய் ஸிபி vampire வகை Twilight நாவல்களைப் படிப்பதைப் பார்த்து ஆச்சரியப்படும் நீங்கள் ஸிபியோடு ஒரு விவாதத்தைத் தொடங்குகின்றீர்கள். இவ்வளவு அறிவுக்கூர்மையுள்ள ஸிபி இவ்வாறான நாவல்களை வாசிப்பாள் என்பதை நம்பமுடியாதிருக்கின்றது. ‘இதையேன் வாசிக்கிறாய்?’ என்று கேட்கின்றீர்கள். ‘வாசிக்கும் எல்லாவற்றுக்கும் ஏதாவது காரணம் இருக்கவேண்டியிருக்கா, பிடித்திருக்கிறது வாசிக்கிறேன்’ எனகிறாள் ஸிபி. நீங்கள் தொடர்ந்து அது வாசிப்பதற்குரிய நாவலே இல்லை என விவாதிக்கின்றீர்கள். ‘நாவலை வாசிக்காமல், அது குறித்துக் கருத்துச் சொல்வது தவறு, உனக்குப் பிடிக்காதவை எல்லாவற்றையும் எரிக்கச் சொல்லிவிடுவாய் போலிருக்கிறது, இவ்வாறு விவாதிப்பதே ஆபத்து’ என்கிறாள்.

உங்களை ஏதோ ஒருவகையில் ஸிபி தீண்டிவிடுகிறாள். நான் இந்த நாவல்களை வாசிக்கும்வரை உன்னோடு பேசப்போவதில்லையென நாவலையெடுத்துக்கொண்டு போய் வாசிக்கத் தொடங்குகின்றீர்கள். அடுத்த நாள் ஸிபியைச் சந்தித்து, ‘வாசித்து முடித்துவிட்டேன், இதுவே நான் ஆங்கிலத்தில் வாசித்த மிக மோசமான நாவல் ‘என்கின்றீர்கள். ‘அப்படியாயின் மற்றமொழிகளில் இதைவிட மோசமான நாவல்கள் இருக்கின்றதா’ எனத் துடுக்குத்தனமாய் ஸிபி கேட்கிறாள். ‘தெரியவில்லை, ஆனால் இந்த நாவலை மற்ற நாவல்களில் மொழிபெயர்க்கும்போது இதுவே அந்தந்த மொழிகளிலும் மோசமான நாவலாய் இருக்கும் என்பது உறுதி’ என பதிலிறுக்கின்றீர்கள். இங்கேதான் நீங்கள் ஒரு வளாகத்து மாணவர் இல்லையென்பதையும், அதேபோல் நீங்கள் ஒரு முதிர்ச்சியடைந்த ஒரு ஆணாக மாறவில்லை என்பதையும் காலம் உங்களுக்குச் சுட்டி நிற்கின்றது.

அன்றிரவு ஸிபி தன்னோடு தங்கியிருந்த தோழியை வெளியே அனுப்பிவிட்டு, உங்களை தன் அறைக்கு அழைக்கிறாள். எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, ‘இதுதான் எனக்கு முதன்முறை என்னைக் கவனமாகக் கையாளு’ என்கின்றாள். உங்களுக்கு ஸிபி மீது நட்பை மீறிய காதல் இருக்கிறது. ஏன் காமம் கூட அவ்வப்போது தலைதூக்கிப் பார்ப்பதுண்டு. ஆனால் இத்தனை வயது வித்தியாசமுள்ள பெண்ணோடு, உறவுக்குப் போவது நெருடலாயிருக்கின்றது. நீங்கள் ஏதேதோ காரணங்கள் சொல்லித் தவிர்க்கப் பார்க்கின்றீர்கள். ‘எனக்கு எல்லாம் தெரியும், நான் நிறைய யோசித்தே மனமுவந்து என்னைத் தருகின்றேன்’ என்கிறாள் ஸிபி. நீங்கள் அவளை வேறு வழியில் திசை திருப்ப முயல்கின்றீர்கள். ஸிபியிற்கு தன் ஆசை நிராகரிப்பட்டதால் கோபம் வருகின்றது. இனி என்னைச் சந்திக்காதேயென உங்களை அறையை விட்டு வெளியே போகச் சொல்கின்றாள்..

ங்களுக்கு இந்த இரவு மிக நீண்ட இன்னொரு துயர் மிகுந்த இரவாய்ப் போய்விடுகின்றது. பாரிற்குப் போய் நிறைய மதுவை அருந்துகின்றீர்கள். அங்கே உங்களுக்கு ஆங்கில இலக்கியம் படிப்பித்த, புத்தகங்கள் மீது காதல் வரச் செய்த உங்கள் ஆங்கிலப் பேராசிரியையைச் சந்திக்கின்றீர்கள். அவருக்கும் அன்றைய இரவு நிம்மதியற்றதாக இருந்திருக்கும் போலும். இரவிரவாய் நிறையக் கதைத்து, பேராசிரியையின் வீட்டுப் படுக்கையறை வரை போகச் செய்கின்றது. நீங்கள் அவரோடு நெருக்கமாய் இருந்த பொழுதில், ‘நீங்கள்தான் கவிதையை இந்தளவிற்கு வாழ்வோடு நெருக்கம் கொள்ளமுடியும்’ என சொல்லித் தந்தவர் என நெகிழ்கின்றீர்கள். அவர், ‘கவிதையும் வாழ்க்கையையும் ஒன்றென முட்டாள்தனமாய் ஒப்பிட்டுக்கொள்ளாதே’ என் இன்னொரு பாடத்தைக் கற்பித்து விடியமுன்னரே தன் வீட்டை விட்டுத் துரத்திவிடுகின்றார்.

நீங்கள் இப்போது மீண்டும் உங்களின் அலுப்பான வாழ்க்கையிற்குள் நுழைந்துவிட்டீர்கள். இடையில் ஸிபியோடு சந்தித்த இன்னொரு மாணவனின் தற்கொலையைக் காப்பாற்ற படித்த வளாகத்திற்குச் செல்கின்றீர்கள். அவனுக்கு, ‘புத்திசாலியாக இருப்பதால் இளமையில் சாகலாம் என்று நினைக்காதே, வயது முதிர்ந்து கூட இயற்கையாகச் சாகலாம்’ என்று அறிவுரை கூறுகின்றீர்கள். நீங்கள் வளாக காலத்தில் கனதியான புத்தகங்களை வாசித்ததுபோல, வாசிக்கும் அவனிடம் இன்னும் மனச்சிக்கல்களை ஏற்படுத்தும் புத்தகங்களை பிடுத்தெறிந்துவிட்டு, மனதை இன்னொருபக்கம் திருப்பக்கூடிய, vampire வகை நூற்களை வாசிக்கச் சொல்கின்றீர்கள். ஆனால் இம்முறை நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான ஸிபியைச் சந்திக்கவே இல்லை.

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நீங்கள் திரும்பவும் புத்தக உலகிற்குள் மூழ்கின்றீர்கள். உங்களின் புத்தக வாசிப்பு, புத்தகக் கடையில் வாசிக்கும் பெண்ணொருத்தியுடன் நட்பைக் கொண்டு வருகிறது. புத்தகங்கள் எப்போதும் எங்களை வேறு உலகில் எங்களையறியாமலே வாழ வைக்கின்றன. புத்தகங்களுடன் எனக்குரிய உலகிற்குள் இருந்துவிட்டேன். இப்போதுதான் கொஞ்சம் வெளி வாழ்க்கையிற்கும், வெளி மனிதர்களோடும் பழக முயற்சிக்கின்றேன்’ எனத் தன் தவிப்பைச் சொல்லும் அனா உங்களுக்குரிய நெருக்கமான அலைவரிசையில் இருப்பதைக் கண்டுகொள்கின்றீரகள்.

பிறகான காலங்களில் உங்களுக்குரிய காதலை அனாவால் மட்டுமே தரமுடியுமென்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். ஆனால் ஸிபியின்றி, அனாவின் அருமையை உணர்ந்திருக்க முடியாது என்பதும் உங்களுக்கும் நன்கு தெரிகிறது. ஸிபி உங்கள் வாழ்வில் வந்ததை நினைவுகூருமுகமாகவும், அவள் தந்த அழகிய நாட்களுக்கு நன்றி செலுத்தவும் அவளுக்கு vampire வகையான ‘டிராகுலா’ புத்தகத்தை அனுப்பி வைக்கின்றீர்கள்.

ஸிபி அந்த நூலைப் பார்த்து மகிழ்ச்சியடையும் தருணத்தில் உங்களுக்கான இன்னொரு நாள் அழகாகின்றது. நீங்கள் ஸிபியையோ அல்லது ஸிபி உங்களையோ மறப்பது அவ்வளவு எளிதன்று. எனெனில் எதையும் எதிர்பார்க்காத காதல் என்பது அடியாழங்களில் புதையுண்டு போகாது என்றுமே உயிர்ப்புடன் இருப்பதுதானில்லையா?

( Liberal Arts திரைப்பட பாதிப்பில் எழுதியது)
நன்றி: எனில்