கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

புத்தரும், அவனும் - 01

Saturday, February 20, 2010

நீண்ட‌நாள் காணாம‌ற் போயிருந்த‌ புத்த‌ரை இன்று மீண்டும் அவன் தன‌து க‌ண‌னி மேசைக்க‌டியில் ஒளிந்திருப்ப‌தைக் க‌ண்டான். ப‌னிக்கால‌ம் தொட‌ங்கி அறையெல்லாம் சில்லிட்டுக்கொண்டிருக்க‌ புத்த‌ர் ந‌டுந‌டுங்கிய‌ப‌டி இருந்தார். காடு, ம‌லை, ம‌ழை எல்லாவ‌ற்றையும் புறக்கணித்து நெடுந்தூர‌ம் அலைந்து திரியும் புத்த‌ர் இப்ப‌டிப் ப‌ய‌ந்து ஒடுங்கிய‌ப‌டி அவனது அறைக்குள் இருந்த‌த‌ற்கு இந்த‌ப் பனிக்கால‌ம் ம‌ட்டும் கார‌ண‌மாயிருக்காது என்ப‌து தெளிவாக‌ப் புரிந்த‌து.

புத்த‌ரை இறுதியாய்ச் ச‌ந்தித்த‌ பின்பான‌ இடைவெளியில், நிக‌ழ்ந்த‌ எத்த‌னையோ விட‌ய‌ங்க‌ளை அவ‌ரிட‌ம் ப‌கிர்வ‌த‌ற்கு தன்னிடம் இருக்கின்ற‌து என்ற‌ எண்ண‌ம் அவனுக்குள் நிறைந்து வ‌ழிய‌ ஆர‌ம்பித்த‌து. எனினும் வ‌ழ‌மைபோல‌ அவன‌து வீட்டுக்கு வ‌ருகைத‌ருப‌வ‌ரைப் போல் இன்று புத்த‌ர் இருக்க‌வில்லை.... அது ஏன் என்ற‌ கேள்வி அவனுக்குள் ச‌ஞ்ச‌ல‌த்தை உருவாக்க‌த் தொட‌ங்கியிருந்த‌து. வ‌ருகின்ற‌ வ‌ழியில் எங்கையேயாவ‌து ஆற்றில் அவனுக்காய் வெள்ளைத் தாம‌ரைக‌ளை ஆய்ந்து வ‌ர‌ புத்த‌ர் ஒருபோதும் ம‌ற‌ப்ப‌தேயில்லை. இன்றைய‌ நாளில் அவனுக்காய் எந்த‌ப் பூவையும் கொண்டுவ‌ர‌வில்லை என்ப‌தோடு அவர‌து க‌ர‌ங்க‌ள் சிவ‌ப்பு நிறமாய்க் க‌ண்டிப்போய் இருந்த‌தைப் பார்க்கும்போது ம‌ன‌திற்குள் சிறுவ‌லி மின்ன‌லாய் வெட்டிவிட்டுப்போயிருந்த‌து.

அவன‌து சகோதரர்களின் பிள்ளைக‌ள் ஓடிப்பிடித்து விளையாடும்போது மேசைக்க‌டியில் ஒளிந்திருப்ப‌துபோல‌ புத்த‌ரும் க‌ண்ணை மூடிக்கொண்டு இருந்த‌து அவனுக்கு ஒருமாதிரி இருந்த‌து (க‌ண்ணை மூடினால் எவ‌ரும் க‌ண்டுபிடிக்காமாட்டார்க‌ள் என்ப‌து குழ‌ந்தைக‌ளின் ம‌ன‌த்துணிபு). சிறிய‌வ‌ர்களோடு என்றால், அவ‌ர்க‌ள் ஒளிந்திருக்கும் இட‌த்தைக் க‌ண்டுபிடித்தாலும், காணாத‌துமாதிரி ந‌டிக்க‌முடியும், ஆனால் புத்த‌ரோடு அப்ப‌டியெல்லாம் விளையாட‌முடியாது அல்ல‌வா? இந்தத் த‌ருண‌த்தை எப்ப‌டி எதிர்கொள்வ‌து என்ற‌ ஒரு திணறல் ப‌னிக்கால‌த்தில் உரிய‌ ஆடைக‌ளை அணியாது வெளியே போன‌து போன்ற‌ நிலைக்கு நிகராய் அவனுக்குள் உருவாகக‌த் தொட‌ங்கிவிட்ட‌து

சாதார‌ண‌மாய் ச‌ந்திக்கும் புத்த‌ர் என்றால் இப்போது கிண்ண‌ங்க‌ளில் வைனையோ அல்ல‌து கிழ‌க்காசியாவிலிருந்து பிர‌த்தியேக‌மாக் புத்த‌ர் த‌ன‌து காவித்துணியில் ம‌டித்துக்கொண்டுவ‌ரும் தேயிலையையோ வைத்து.... உருவாக்கிய‌ தேநீரையோ அருந்திக்கொண்டு உரையாடிக்கொண்டிருப்பார்கள். திர‌வ‌ங்க‌ள் நிறைந்த‌ கிண்ண‌ங்க‌ள் காலியாக‌ ஆக‌ ம‌ன‌தும் விருப்பு வெறுப்பும‌ற்ற ஒரு வெற்றிட‌மாய் மாறிக்கொள்ள‌த் தொட‌ங்கும். பிற‌கு எல்லாமே புதிதாய்த் தோன்றுவ‌துமாதிரியும் எதையும் எதிர்கொள்ளலாம் என்ற‌ தெம்பும் அந்த‌க்க‌ணங்க‌ளில் பொங்கித் த‌தும்ப‌த் தொட‌ங்கியிருக்கும். ஆனால் இப்போது புத்த‌ரின் நிலைமையைப் பார்த்தால் அத‌ற்கான‌ சாத்திய‌மே எதுவும் இல்லாத‌து போல‌த் தோன்றிய‌து..

புத்த‌ர் நிறைய‌ விட‌ய‌ங்க‌ளை க‌ற்பிக்கின்றோம் என்ற‌ பிர‌க்ஞையில்லாது அவனுக்குள் ஊட்டியிருக்கின்றார். அவன் க‌ண்ட‌ க‌ன‌வுக‌ளைக் கூட‌ சில‌ இட‌ங்க‌ளில் நிஜ‌மாக்கியிருக்கின்றார். ஒரு ம‌ழைநாளில் வ‌ந்த‌ புத்த‌ரோடு உரையாடிக்கொண்டிருந்த‌போது முளைத்த‌, க‌ண‌வ‌னால் கைவிட‌ப்ப‌ட்ட‌ பெண்ணையும் அவ‌ளின் குழ‌ந்தையும் நிஜ‌மாக‌வே -3 வ‌ருட‌ங்க‌ளின் பின்- அவன் தன் வாழ்வில் ச‌ந்தித‌த‌போது அவனுக்கு மிக‌வும் விய‌ப்பாயிருந்த‌து. இன்று அவ‌ளும் அவ‌ள் குழ‌ந்தையும் துய‌ர் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளைக் க‌ட‌ந்து ஒரு இள‌வேனிலுக்காய்க் காத்திருக்கின்றார்க‌ள் என்ப‌தைப்ப‌ற்றியும் புத்த‌ருட‌ன் ப‌கிர‌வேண்டும் என‌ நீண்ட‌நாட்க‌ளாய் நினைத்துக்கொண்டிருந்தான்.


புத்த‌ருட‌ன் ஓர் இர‌வு
-இளங்கோ

மழைத்தூறல் ஓய்ந்து
ஈரம் இரவை
சிறகுகளால் கோதிக்கொண்டிருந்தபோது
வீட்டுக்கு வந்திருந்தார்
புத்தர்

Santa மட்டுமே
புகைக்கூண்டுக்குள்ளால் இறங்குவார்
என்றெண்ணிய
என் நான்கு வயது மகளுக்கு
கோடையில்
சாம்பர் பூத்திருந்த அடுப்பிலிருந்து
தூசி தட்டியபடி
புத்தர் வந்தது வியப்பாயிருந்தது

நான் அருந்துவதற்கு
மிதமாய் கலந்துவைத்திருந்த
வோட்காவை பகிர்ந்தபோது
ஒவ்வொரு மிடறும்
தாகத்திற்கு இதமாய் இருக்கிறதென்றார்

அரசியல் சினிமா
ஜென் செக்ஸ் என
ஒரு பட்டத்தைப்போல
திசையில்லாது உரையாடல் அசைந்துகொண்டிருக்கையில்
புத்தர் திடீரென வினாவினார்
கடந்துபோன காலத்தில்
நீ இழைத்த தவறுகளுக்கு
வருத்தம் கூற விரும்புகின்றாயாயென

நான்
பாவங்கள் விளைவித்த
மனிதர்கள் நிரையாக நிற்க
வெட்கிக் குனிந்தபடி
நடுங்கும் குரலில்
கோருகின்றேன் மன்னிப்பு

இப்போது
மனது மேகமாய் மிதந்து
குதூகலம் மழைநீராய் திரண்டபோது
DJ drop the s*** என்றலறியபடி
ராப் பாடலுக்கு ஆடத்தொடங்குகின்றோம்
நானும் புத்தரும்

நேரம் நள்ளிரவைக்கடந்தபோது
வெறுமையான மதுக்கோப்பைகளையும்
சில நட்சத்திரங்களையும்
துணைக்கு விட்டுவிட்டு
புத்தரும்
எனது நான்குவயது மகளும்
காணாமற்போயிருந்தனர்.

2.
மதியவுணவு
இடைவெளிகளின்போதுதான்
முகையவிழ்த்திருந்தது அவளுடனான நட்பு

அவளையும் இரண்டுவயதுக் குழந்தையையும்
சில மாதங்களுக்கு முன் கைவிட்டு
இன்னொரு பெண்ணுடன்
தன் துணைவன்
வாழத்தொடங்கியிருக்கின்றான்
என்றாள் விழிநீரைத்துடைத்தபடி

எனக்கு வாய்த்ததைப் போல
புத்தர்
அவள் வீடு தேடி
ஓர் இரவில் போகக்கூடும்
அல்லது
அவளிடமும் அவள் குழந்தையிடமும்
நான் புத்தரையும்
காணாமற்போன என் நான்கு வயதுக்குழந்தையும்
என்றேனும் ஒருநாள்
அடையாளம் காணவும்கூடும்.

(Aug 25/2005)

ந‌ன்றி: வைக‌றை (தை, 2010)

நீ இன்னும் அழ‌வில்லை

Friday, February 12, 2010

1.
நேச‌த்தின் க‌ச‌ப்பு
ம‌ர‌ங்க‌ளில் துளிர்த்து
நில‌வொன்று த‌ன்னை
தீமூட்டிக் கொன்ற‌ க‌ரிய‌விர‌வொன்றில்
இத்தெருக்க‌ளின் விளிம்புக‌ளில் தொலைந்திருக்கிறேன்
புராத‌ன‌த்து ம‌ண‌த்தை
*வ‌ளாக‌த்துப் புறாக்க‌ள் சிற‌க‌டித்து ப‌ர‌ப்பிய‌
தேவால‌ய‌த்தின் வாச‌லில்
நாட‌ற்ற‌வ‌னாக‌வும்
ஒருத்தியின் வெறுப்புக்குரிய‌வ‌னாக‌வும்
ஒருபொழுதில் கிட‌ந்துமிருக்கிறேன்.

த‌ன் மூதாதைய‌ர் நெய்துகொடுத்த‌
போர்வையைப் ப‌கிர்ந்த‌ பூர்வீக‌க்குடி
த‌ங்க‌ளின் க‌ள‌வாட‌ப்ப‌ட்ட‌ நில‌ங்க‌ளின்மேல்
க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ இப்பெருந‌க‌ர‌த்தின
வ‌ர‌லாற்றைத் துப்புகையில்
சூரிய‌ன் யாரையோ தொலைவில்
சுட்டுவிட்டு த‌லைம‌றைவாவ‌து தெரிந்த‌து
வான‌ம் க‌ருஞ்சாம்ப‌லைப் போர்த்திய‌ப‌டி
கொல்ல‌ப்ப‌ட்ட‌ உட‌லைத்தேடி
ப‌க‌லில் இர‌க‌சிய‌மாய் அலைந்த‌து

இன்ன‌மும் உல‌ர்ந்துவிடாத‌
உயிர்த்த‌லுக்கான‌ ப‌ச்சைய‌த்தை
நேசமாயொருத்தி ப‌கிர வ‌ந்த‌போது
நாட‌ற்ற‌வ‌ர்க‌ளான நாமிருவ‌ரும்
இன்ன‌முமித்தெருக்க‌ளில்
திசைக‌ள‌ற்று அலைவ‌த‌ற்கான‌
ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் விழித்திருக்கின்ற‌தென்ற‌ப‌டி
விடைத‌ந்தார் பூர்வீக‌க்குடி

2.
இன்று
நிக‌ழ்கின்ற‌ ஊழிப்பெருங்கூத்தில்
நின்று அழுவ‌த‌ற்கான‌ கால‌ங்கூட‌ இல்லை
விழி நிர‌ப்புகின்ற‌ க‌ண்ணீர்த்துளிக‌ளை
குர‌ல்க‌ளிலும் ப‌தாதைக‌ளிலும்
ம‌றைத்து வைத்து
எவ‌ருமே செவிம‌டுக்காத‌ சூனிய‌த்தில்
எங்களைக் காப்பாற்றுங்க‌ளென‌க் கெஞ்சுகின்றோம்

ப‌‌டுகொலைக‌ளை நிறுத்த‌ச்சொல்லி
எங்க‌ளோடு கூட‌வே
உர‌த்துக் க‌த்தும் 9 வ‌ய‌து கீர்த்தி
த‌மிழ் ம‌க்க‌ளைக் காப்பாற்ற‌
ஏனோர் சீன‌ப்பெருஞ்சுவ‌ர் க‌ட்டியிருக்க‌க்கூடாதென்கிறான்
சிறுவ‌ர்க‌ளுக்கு க‌ட‌ந்த‌ கால‌மோ
யார் ந‌ல்ல‌வ‌ர் கெட்ட‌வ‌ரென்ற‌
ப‌குப்பாய்வுக‌ளுக்கோ அவசிய‌மிருப்ப‌தில்லை
இருள்கின்ற‌ இக்க‌ண‌த்து வான‌த்திலிருந்து
தெறிக்குமொரு மின்ன‌லைப்போல‌
இற‌ந்த‌வ‌ர்க‌ள் நாளை உயிர்ப்பார்க‌ளென‌
க‌ன‌வு காண்கிறார்க‌ள் அவ‌ர்க‌ள்

பிரிய‌ கீர்த்தி,
என்றேனும் ஒருநாள்
எல்லோரும் நிதான‌மாய்க் கேட்க‌க்கூடிய‌
உன‌க்கதிகார‌முள்ள‌ ச‌பையிலிருந்து...
நெடுஞ்சாலையில் வாத்துக்க‌ள் ந‌ட‌ந்துபோனாலே
கார்க‌ளை ம‌ணிக்க‌ண‌க்கில் நிறுத்தி
வ‌ழிவிடும் இம்ம‌க்க‌ள்
ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கானோர் அழிவின்போது
ம‌வுன‌ம் சாதித்து த‌ங்க‌ளை நிர்வாண‌மாக்கிய‌தையும்
எங்க‌ளைப் ப‌க‌டைக‌ளாக்கி
சூதாடிய‌ வ‌ல்ல‌ர‌சுக‌ள் அடையாள‌மின்றி
உடைந்து போன‌தையும்
என் க‌ல்ல‌றை முன்வ‌ந்து செப்பு

அப்போது ஓர் ஊற்றாய் அழுது தீர்க்கிறேன்
ஏன் சிச்சியா
எல்லோரும் அழும்போதும்
நீயின்னும் அழ‌வில்லையெனும் உன் கேள்விக்கு.


May 10, 2009
*Toronto Campus

(அர‌சிய‌ல் முர‌ண்க‌ளிற்கு அப்பாற்ப‌ட்டு,  தீக்குளித்த‌ முருக‌தாச‌னின் ஓராண்டு நினைவுக‌ளிற்கு Feb 12, 2009)

'ஏலாதி' விருதிற்கான‌ ஏற்புரை

Monday, February 01, 2010

பொய்த்துப் போன பருவங்கள்

'...சிறுவர்கள்
தொலைந்துகொண்டிருக்கும் நாட்டை
பூர்வீகமாய்க் கொண்டவர்க்கு
நேசித்தல் என்பது கூட
நம்மை நாமே சிதைத்து உருவழிப்பதுதான்...'


சிறுவ‌ய‌திலேயே உயிருக்காய் த‌ப்பியோடி ஓடி அக‌தி வாழ்க்கை ப‌ழ‌க்க‌மாயிற்று விட்ட‌து. ப‌தினமூன்று வ‌ய‌துக்குப் பிற‌கு முற்றாக‌ நான் வாழ்ந்த‌ ஊருக்குப் போக‌ முடியாத‌ அள‌வுக்கு போர் மிக உக்கிர‌மாகியிருந்தது. அவ்வ‌ப்போது 'ச‌மாதான‌ச் சூழ‌ல்' வ‌ந்து ஆக‌க்குறைந்த‌து தாம் வாழ்ந்த‌ இருப்பிட‌த்தைப் பார்க்கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் ப‌ல‌ருக்கு வாய்த்தாலும் என்னைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு, இராணுவ‌ உய‌ர்பாதுகாப்பு வ‌ல‌ய‌ம் (High Security Zone) ப‌குதிக்குள் வ‌ருவ‌தால் ஒருபோதும் ஊரையோ வாழ்ந்த வீட்டையோ பின்னாட்களில் பார்க்க‌ முடிந்ததில்லை. இஃதொரு பெரிய‌ இழ‌ப்புமில்லை. இன்றைய‌ கால‌க‌ட்ட‌த்தில் போர் ‍ -நான் ஈழ‌த்தில் வாழ்ந்த‌ கால‌க‌ட்ட‌த்தைவிட‌ - இன்னும் ப‌ல‌ம‌ட‌ங்கு உக்கிர‌மாய் ப‌ல நூற்றுக்க‌ண‌க்கான‌வ‌ர்க‌ளை ப‌லி கொண்டும், இட‌ம்பபெய‌ர்க்க‌வும் செய்து கொண்டிருக்கும்போது என‌க்காய் விதிக்க‌ப்ப‌ட்ட‌ அகதி வாழ்வில் நான் ஒர‌ள‌வு 'ஆசிர்வ‌திக்க‌ப்ப‌ட்ட‌வ‌ன்' என்றுதான் சொல்ல‌வேண்டும். ஏனெனில் இன்று ஆக‌க்குறைந்த‌து, உயிருக்காவ‌து உத்த‌ர‌வாத‌ம‌ளிக்கும் ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்க‌ முடிகிற‌து; எறிகணை வீச்சினதோ, விமானத்தாக்குதலினதோ அச்சமில்லாது விரும்புகின்றபோது அவ்வவ்போது எழுதிக்கொண்டிருக்க முடிகின்றது.

போரிற்குள் சிறுவ‌ய‌திலிருந்து வாழ்ந்ததாலோ என்ன‌வோ, மூர்க்க‌மாய் விம‌ர்ச‌னங்க‌ளை வைக்க‌வும் எதிர்கொள்ள‌வும் ப‌ழ‌கிய‌ அள‌வுக்கு பாராட்டுக்க‌ளையோ வாழ்த்துக்க‌ளையோ எப்ப‌டி ஏற்றுக்கொள்வதென்று தெரிய‌வில்லை. எழுதிய‌ ஒரு ப‌டைப்புக்கு எப்போதாவது சிறு பாராட்டுக் கிடைக்கும்போது மிகுந்த‌ ப‌த‌ற்ற‌ங்க‌ளோடே அதை உள்வாங்கிக்கொள்ள‌ முடிகின்ற‌து.

எழுதுவ‌தில் பிரிய‌முடைய‌ ஒருவ‌ருக்கு தான் எழுதிக்கொண்டிருப்ப‌து ம‌லையிடுக்குக‌ளில் ச‌ல‌ன‌ம‌ற்றுப் போய்க்கொண்டிருக்கின்ற‌தோ என்ற‌ நினைப்பை, எவ‌ரின‌தோ க‌டுமையான‌ விம‌ர்ச‌ன‌மோ, சிறு பாராட்டோ நெகிழ‌ச் செய்துவிடுகின்ற‌து. பிற‌ர் த‌ன‌து எழுத்தைக் க‌வ‌னிக்கின்றார்க‌ள் என்ற‌ நினைப்பு தொடர்ந்து பொறுப்பாக‌ எழுதுவதற்கான ஒருவிதமான மனோநிலையைத் தரத்தான் செய்கின்றது.

ஒரு புதிய‌வ‌னுக்கு, அவ‌ன் யாரென்று அவ‌ன‌து பின்புல‌ங்க‌ள் அறியாது, அவ‌ன‌து ப‌டைப்பை ம‌ட்டுமே முன்னிறுத்தி வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் ஒரு விருது என்ற‌வ‌கையில், த‌மிழ்நாட்டு க‌லை இல‌க்கிய‌ ம‌ன்ற‌ம் - தக்கலை சார்பாக‌ ந‌ண்ப‌ர்க‌ள் நீங்க‌ள் என‌து தொகுப்பான‌ 'நாட‌ற்ற‌வ‌னின் குறிப்புகளுக்கு' வ‌ழ‌ங்கும் 'ஏலாதி இலக்கிய விருதை' ஏற்றுக்கொள்கின்றேன். இவ்விருதை என‌க்கான‌ அங்கீகார‌மாய் அல்லாது, இனி எழுதுகின்ற‌போது பொறுப்போடும், முதிர்ச்சியை நோக்கி செல்வ‌துமாக‌ எழுத‌வேண்டுமென்ற‌ நினைவூட்ட‌வே -இவ்விருதை- ஏற்றுக்கொள்கின்றேன் என‌க் கூறிக்கொள்ள‌ விரும்புகின்றேன்.

இவ்விருதை வ‌ழ‌ங்கும் ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் தேர்வுக் குழுவிற்கும் ந‌ன்றி சொல்கின்ற‌ அதேவேளை 'அடையாள‌ம்' சாதிக்கிற்கும் என‌து த‌னிப்ப‌ட்ட‌ நன்றியைச் சொல்ல‌ப் பிரிய‌ப்ப‌டுகின்றேன். எழுதுகின்ற‌ ஒருவ‌னுக்கு ஒரு ந‌ல்ல‌ ப‌திப்பாள‌ர் ‍அதுவும் த‌மிழ்ச்சூழ‌லில் கிடைப்ப‌து அரிது. எவ்வ‌ள‌வோ தொலைவிலிருந்தாலும், என‌து க‌விதைக‌ளைத் தொகுப்பாக்க‌ வேண்டுமென்று பிரிய‌ப்ப‌ட்ட‌போது, எந்தத் தயக்கமுமில்லாமல் வெளியிட முன்வந்தவர் சாதிக். அது ம‌ட்டுமில்லாது, இவ்விருதுக்கும் பிர‌திக‌ளை எனது அனுமதியிற்குக் காத்திருக்காது, தனது சுயவிருப்பில் அனுப்பியும் வைத்து உதவியவர். இவ் இனிய கணத்தில் சாதிக்கின‌தும், உங்க‌ள் அனைவ‌ரின‌தும் க‌ர‌ங்க‌ளை நெகிழ்வுட‌ன் ப‌ற்றிக்கொள்கின்றேன். இறுதியாக‌, நான் சிறுவ‌ய‌தில் அக‌தியாய் அலைந்ததைவிட‌ மிக‌க் கொடுமையான‌ சூழ்நிலைக்குள் இன்று ஈழ‌த்திலும் உல‌கெங்கிலும் சிறார்க‌ள் அக‌திக‌ளாக்க‌ப்ப‌ட்டுக் கொண்டிருக்கின்றார்க‌ள். அகதிகளாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அச்சிறார்களுக்கு இவ்விருதைச் சமர்ப்பிக்கின்றேன். இன்னும் இவ்விருதுட‌ன் வ‌ழ‌ங்கும் பணமுடிப்பைத் த‌மிழ‌க‌த்திலுள்ள‌ ஆத‌ர‌வ‌ற்ற‌ குழ‌ந்தைக‌ள் காப்ப‌க‌ம் ஏதாவ‌தொன்றுக்கு வ‌ழ‌ங்குமாறு என் சார்பின் இவ்விருதைப் பெற்றுக்கொள்ளும் 'அடையாள‌ம்' சாதிக்கிடம் கேட்டுக்கொள்கின்றேன். ந‌ன்றி.

(Aug 15, 2008)