கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

குவளைப்பூ குறிப்புகள்

Tuesday, May 10, 2016

The Purple Rose of Cairo

நீங்கள் ஒரு திரைப்படத்தைப் பார்க்கின்றீர்கள். உங்களுக்கு அப்படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் பிடித்துவிடுகின்றது. அதற்காகவே மீண்டும் மீண்டும் அத்திரைப்படத்தைப் போய்ப் பார்க்கின்றீர்கள். திரையில் தோன்றும் அப்பாத்திரம் உங்கள் தீவிரத்தை உணர்ந்து ஒருநாள் திரையில் இருந்து வெளியே வந்து உங்களோடு உரையாடத் தொடங்கினால் எவ்வாறு இருக்கும்?

The Purple Rose of Cairoவில் ஒரு பெண்ணுக்காய் திரையிலிருந்து ஒரு பாத்திரம் நழுவி வருகின்றது. ஏற்கனவே திருமணமான பெண் என்றபோதும் அந்தப் பெண்ணை இந்தத் திரைப் பாத்திரம் நேசிக்கத் தொடங்குகின்றது. இப்போது ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் அடுத்த காட்சியிற்குப் போகமுடியாது தேங்கிவிடுகின்றது. பார்வையாளர்கள் குழம்புகின்றார்கள். திரையிற்குள் இருக்கும் மற்றப் பாத்திரங்கள் தங்களால், வெளியேறிச் சென்ற பாத்திரம் இல்லாது தொடர்ந்து நடிக்கமுடியாதென அப்படியே நின்று விடுகின்றார்கள்.
ஒரு நகரத்தில் இப்பாத்திரம் வெளியேறிவிட்டதை அறிந்ததும், இப்படம் திரையிடப்பட்ட மற்ற நகரங்கள் சிலதில் இருந்தும் இப்பாத்திரம் வெளியேறிவிடுகின்றது. இந்த விடயம், இப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநனருக்கும் மிகச் சிக்கலை ஏற்படுத்துகின்றது. எனெனில் திரையிலிருந்து வெளியேறிய இப்பாத்திரம் யதார்த்ததில் என்ன செய்தாலும் - அது கொலையோ, திருட்டோ என்ன செய்தாலும்- இவர்களே அதற்கு முழுப் பொறுபேற்கவும் வேண்டும்.

இவை எல்லாவற்றையும் விட இப்பாத்திரத்தில் நடித்து மெருகேற்றிய நடிகருக்கு இது பெரும் பிரச்சினையாக மட்டுமில்லாது, அவரின் நடிப்புத் தொழிலையே தொடர்ந்து செய்யமுடியாது போய்விடுகின்றது. எனெனில் அவரைக் கொண்ட உருவாக்கிய பாத்திரம் வெளியேறியதால், இனி அவர் நடிக்கும் புதிய படங்களிலிருந்தும் அவரது பாத்திரங்கள் வெளியேறாது என்பதற்கும் எந்த உத்திரவாதம் இல்லை. நடிகரும் தயாரிப்பாளர்களும் வெளியேறிய பாத்திரத்தை மீண்டும் திரைக்குள் நுழைத்துவிட்டு, நட்டமேற்பட்டாலும் எல்லாத் திரையரங்குகளிலிருந்து திரைப்படத்தை நிறுத்தி முழுப் பிரிண்டையும் அடையாளமின்றி எரித்துவிடுவது என்று தீர்மானிக்கின்றார்கள்.

திரைப்பாத்திரம் வெளியேறிய நகருக்கு அப்பாத்திரத்தில் நடித்த அசல் நடிகர் போகின்றார். வெளியேறிய பாத்திரத்தைச் சந்தித்து மீண்டும் திரைக்குள் போகச் சொல்லி மன்றாடுகின்றார். திரைப்பாத்திரமோ நான் இப்பெண்ணின் மீது காதலில் இருக்கின்றேன் திரும்பமுடியாது என அடம்பிடிக்கின்றது. இதற்கிடையில் அசல் நடிகருக்கும் இந்தப் பெண் மீது காதல் வந்துவிடுகின்றது.

ஏற்கனவே திருமணமாகி உறவு சுமுகமில்லாது இருந்த பெண் 'சென்ற வாரம் வரை காதல் எதுவுமின்றி இருந்தேன், இப்போது ஒரேமாதிரியான இரண்டு பேரின் காதல்களில் எதைத் தேர்ந்தெடுப்பதெனக் குழம்புகின்றேன்' என்கின்றார்..இறுதியில் அந்தப் பாத்திரம் மீண்டும் திரைக்குள் போகின்றதா? இந்தப் பெண் எந்தக் காதலை/காதலனை தெரிவுசெய்கின்றார் என்பதோடு வாழ்வின் இருத்தல்/இருப்பு பற்றிய கேள்விகளும் எழுப்பப்படுகின்றது.

இது எண்பதுகளில் எடுக்கப்பட்ட வூடி அலனின் திரைப்படம். இவ்வாறு நடக்குமா/நடக்காதா என்ற கேள்வியே பார்வையாளருக்கு எழாதவண்ணம் மிக அருமையாக திரைக்கதை இப்படத்தில் கொண்டு செல்லப்படுகின்றது, அதேபோன்று நடிக்கும் நடிகர்களும் மிகத் திறமையாகச் செய்திருக்கின்றார்கள்.

ஒருவேளை திரையில் தோன்றும் நமக்குப் பிடித்த பாத்திரங்கள் நம்முடைய நிஜவாழ்விற்குள் வந்துவிட்டால் என்னவெல்லாம் நிகழுமென எண்ணிப்பார்ப்பதே ஒரு வித்தியாசமான அனுபவமாய் அல்லவா இருக்கும்?

Borders

மாயா (M.I.A ) தனது Bordersஐ Apple Music ஊடாக வெளியிட்டாலும், சிலவேளை அதை எல்லோராலும் பார்க்க/கேட்க முடியாதென்பதால் யாரோ ஒருவரால் Youtubeல் பகிரப்பட்டிருக்கின்றது. விடீயோ வெளிவந்து மூன்றுநாட்களுக்குள் Youtubeலே கிட்டத்தட்ட 460,000 பார்வையாளர் பார்த்திருக்கின்றனர் என்றபோதும் அங்கே எழுதப்பட்டிருக்கும் பின்னூட்டங்கள் அநேகம் மாயா மீதும் அகதிகள் மீதான பெரும் வெறுப்பில் எழுதப்பட்டிருக்கின்றன. அகதிகள் 'கரப்பான்பூச்சி'கள் என்பது தொடக்கம், மாயா 'அகதிகள்' என்ற லெபிளை வைத்து பணம் சம்பாதிக்கின்றார்வரை எல்லாவிதமாகவும் காழ்ப்புணர்வில் எழுதப்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே இன்னொரு பதிவில் குறிப்பிட்டமாதிரி, மேற்குலகில் பலருக்கு அகதிகளாக வந்தவர்கள் தங்களுக்கு நிகராக வாழ்வதை அநேகபொழுதுகளில் ஏற்றுக்கொள்ள இலகுவாக இருப்பதில்லை. இந்தப் பாடல் வந்ததன் பிறகு மாயா, ஒரு நேர்காணலில் தனது மாமனார் பாலாவிற்கு நன்றி கூறியிருக்கின்றார். அவரின் உதவியில்லாவிட்டால் தான் இங்கிலாந்திற்கு வந்திருக்கமுடியாது என்கின்றார். இன்றைய வாழ்விற்கு அவரே முக்கிய காரணம் என தான் வந்த கதையை, உதவிய மனிதர்களை நன்றியுடன் அதில் நினைவுகூர்கின்றார். சிலவேளைகளில் மேற்குநாடுகளில் ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருப்பவர்களால் மட்டுமில்லை, முன்னொருகாலத்தில் 'அகதி'களாக வந்த பலருக்குக் கூட தங்கள் பழைய கதைகளை மறந்துவிட்டு புதிய அகதிகளை வெறுப்பதை ஒதுக்கிவைப்பதை அவதானிக்கமுடியும்.

தற்செயலாக எங்கோ ஒதுங்கியிருந்த 'அம்ருதா' வை இன்று கண்டடைந்தேன். 2010ல் அம்ருதாவில் 'மாயா' அல்பம் வந்தபோது எழுதிய பதிவு இது. அத்தோடு அவ்வளவு எளிதில் உட்பக்கங்களில் வர்ணப்பக்கங்கள் வராத 'அம்ருதா'வில் மாயாவின் வர்ணப்படமும் வெளிவந்திருக்கின்றது. இலக்கியச் சூழலில் ஒருகாலத்தில் பார்த்துப் பிரமித்தவர்கள் பலர் பின்னர் தடம்புரண்டபோது கோபத்தைவிட சலிப்பே வந்ததுண்டு. அவ்வாறான ஒரு சோர்வைத்தராத, மாயாவின் முதல் அல்பத்திலிருந்து, அவரது நேரடி இசை நிகழ்ச்சியைப் பார்த்ததிலிருந்து இற்றைவரை சரியான ஒருவரைப் பின் தொடர்ந்து வந்திருக்கின்றேன் என்பது மாயாவின் 'எல்லைகளை'ப் பார்க்கும்போதும் அவரின் நேர்காணல்களைப் படிக்கும்போதும் உற்சாகம் வருகின்றது.
(Nov 28,2015)

Lean On

'Clouds of Sils Maria' வைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, படத்தில் 'இழந்த அப்பாவித்தனத்தை இன்னொரு காலகட்டத்தில் மீளப்பெற முடியாது' என்று ஓரிடத்தில் வரும். அதுபோலவே, இசையிலும் இனி அசலான குரல்களைக் கேட்கமுடியாது போல தொழில்நுட்பம் ஒவ்வொரு குரல்களையும் கட்டுப்படுத்தவும், செதுக்கவும் தொடங்கி நீண்டகாலமாயிற்று இவ்வாறு 'செதுக்கப்பட்ட' குரலாயிருந்தாலும், இந்தப் பாடலை('Lean On') எப்ஃ எம்மில் கேட்டபோது பிடித்திருந்தது. எந்தப் பொழுதாயினும் தோளில் சாய்வதற்கு நமக்கெல்லாம் யாரோ தேவையாயிருக்கின்றார்கள் அல்லவா? 'எமக்கு வயதாகும்போது நாமென்ன செய்வோம்/ நாங்கள் அதே பழைய பாதைகளில் நடப்போமா/ நீ எனக்கு அருகாமையில் இருப்பாயா/ அலைகள் திரண்டு வரும்போது உறுதியாய் (எதிர்த்து) நிற்பாயா?' என்ற பாடல்வரிகளில் உருகாமல் இருக்க முடியுமா என்ன?

பிறகு பாடலை காணொளியாய்ப் பார்த்தபோதும் இந்தியாவில் பாடல் பாடமாக்கியது சற்று ஈர்த்திருந்தது. எனினும் திரும்பச் சில தடவைகள் பார்த்தபோது இன்னொரு கலாசாரத்தின் மீதான exploitation எல்லாவற்றையும் மீறி உறுத்தத்தொடங்கியது. வாழ்க்கையில் அப்பாவித்தனத்தோடு எல்லாவற்றையும் இரசிக்க முடிவது எத்தகை அற்புதமானது. ஆனால் நாமெல்லாம் அந்த அப்பாவித்தனத்தை மீளவும் பெறமுடியாத ஒரு காலகட்டத்திற்கல்லவா நகர்ந்துவிட்டோம்?
(Oct 03, 2015)

Inner flow (உள்ளோட்டம்)

Friday, May 06, 2016


'சென்ற வருடத்தின் தொடக்கத்தில் ஷங்கரின் (ஷங்கரராம சுப்பிரமணியன்) வீட்டுக்குப் போனபோது அன்பாய்க் கிடைத்தது Inner flow என்கின்ற இந்த நூல். ஓவியங்களும் கவிதைகளுமென மிக அருமையாக பாலாஜியால் தொகுக்கப்பட்டிருக்கின்றது. வாய்மொழி வழக்காக வந்துகொண்டிருந்த மகாபாரதக் கதை, 'சித்திரக் கத' வடிவில் மகாராஷ்டிரா, கர்னாடக எல்லைக் கிராமங்களில் இன்னொரு வடிவம் பெற்று கதையும் சித்திரமாகவும் காலங்காலமாய் வந்துகொண்டிருக்கின்றது என இந்நூலின் தொடக்கத்தில் குறிப்பிடுகின்றது. இதன் இன்னொரு வடிவமாய் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பாரதக் கூத்து நடைபெற்று வருதையும் நம்மில் பலர் அறிந்திருப்போம்.

'உள்ளோட்டம்' என்கின்ற இந்நூல் பாடல்களாகவும், இடைநடுவில் கதை சொல்லலாகவும் இருக்கின்ற பாரதக் கூத்தை வேறொருவகையில் இணைத்து பார்க்கின்ற முயற்சி. நாடோடிகளாய்த் திரிந்த தக்கார்ஸ் எப்படி சித்திரக்கத (சித்திரக்கதி)யை பல்வேறு பிரதேசங்களுக்குக் கொண்டு சென்றார்களோ அவ்வாறான ஒரு பரிசோதனைக் களனாக பாரதக் கூத்திலிருந்து பல்வேறு பகுதிகளை வரைந்து பார்த்தலே இந்தத் தொகுப்பின் நோக்கமென பாலாஜி குறிப்பிடுகின்றார்.

வெவ்வேறு விதமான ஆறு பெண்களும், ஒரு ஆணுமென ஏழு ஓவியர்கள் பாரதக் கதையிலிருந்து பல்வேறு சித்திரங்களை வரைந்திருக்கின்றார்கள். இந்த ஓவியங்களோடு ஒட்டியும் சிலவேளைகளில் தனித்துமாய் ஷங்கர் கவிதைகள் எழுதியிருக்கின்றார்.

வியங்களைப் பார்த்தும் கவிதைகளை வாசித்தும் போகும் எங்களை அவை இரண்டும் தங்களுக்குள் இணைத்தும் தனித்தும் விலத்தியும் பார்க்கச் செய்கின்றது. அதாவது இந்தக் கவிதையை இந்த ஓவியத்தோடு சேர்ந்து வாசிக்காதுவிட்டால் என்னமாதிரியான மனோநிலை இருந்திருக்கும்? அதேபோன்று கவிதை இல்லாது ஓவியத்தை மட்டும் பார்த்திருந்தால் என்னமாதிரியான உலகம் நமக்குள் விரிந்திருக்கும் என்பதே ஒரு சுவாரசியமான விளையாட்டாக எனக்கு இருந்தது.

கவிதைகளில் அநேகம் அருச்சுனன், அரவான், கர்ணன் பற்றியதாக இருக்கின்றது. எனக்கு மிகப்பிடித்த பகுதியாக அரவானின் கவிதைகள் வரும் பகுதி இருந்தது. முதற்கவிதையாக பாரதக் கதைகள் பற்றிய இந்நூலிற்கு ஏன் ஷங்கர் இராமனைப் பற்றிக் கவிதை எழுதினார் என்பது சற்று ஆச்சரியமாயிருக்கின்றது.

நேரடியாக தமிழகத்தில் நடக்கும் எந்தப் பாரதக் கூத்துக்களைப் பார்க்காததால் இந்தவகையான கூத்தில் இராமன் எங்கேனும் இடைவெட்டுகின்றாரா என்று தெரியவில்லை. ஓவியங்களோடு நிச்சயம் தொடர்புடையதாகத்தான் கவிதைகள் இருக்கத்தேவையில்லை என்று தெரிந்தாலும், நூல் தொடங்கும் முதல் ஓவியத்திலே இராமனை பற்றியொரு கவிதை வருவது துருத்திக்கொண்டு தொடர்பில்லாது அந்தரத்தில் நிற்பது போல எனக்குத் தோன்றியது.

அரவானைப் பலிக்குத் தயார் செய்கின்ற ஓவியத்திற்கு எழுதிய ஷங்கரின் கவிதை அருமையாக வந்திருக்கின்றது...

'தியாகிக்கு நிகழ்காலம் இல்லை
தியாகத்திற்கும் தான்
தியாகியின் மரணத்தின் பின்
உருவாகும்
சுதந்திரம்
அரசாட்சி
தேசம்
லட்சிய சமூகம்
எல்லாவற்றிலும் தியாகிக்கும் சிறுபங்குண்டு
ஆனால்
தியாகிகள் வனத்தின் நடுவில் சுடப்படுகின்றார்கள்
எரிந்து மாய்கின்றனர்
வரலாற்றுக்குத் தேவை
எப்போதும் என்போன்ற தியாகிகள்
நாங்கள் எதிர்காலத்தின் மீது
ஏக்கத்தோடு கண் வைத்திருப்பவர்கள்'

ன்னொரு ஓவியத்தில் துரியோதனன் போருக்குப் போக முன்னர் அதுநாள் வரை கண்களை மூடிவைத்திருந்த காந்தாரி கட்டுக்களை அவிழ்த்து துரியோதனை எவராலும் கொல்லமுடியாத சக்தியைக் கொடுக்கின்றார். உடலெங்கும் காந்தாரியின் சக்தி பரவ துரியோதனன் நிர்வாணமாக நிற்கின்றார். ஆனால் கிருஷ்ணர் தெரிந்தோ தெரியாதமாதிரி துரியோதனின் தொடையையும் ஆண்குறியையும் மறைக்கின்றமாதிரி ஒரு செடியைப் பிடித்தபடி இருக்கின்றார். பாரதத்தில் எளிதில் கொல்லப்படமுடியா துரியோதனை பீமன் கதாயுதத்தால் அடித்துக் கொல்வது தொடைப்பகுதி என்பதை பாரதம் வாசித்த நாமனைவரும் அறிந்திருப்போம் அல்லவா?

இந்த ஓவியத்திற்கு அழகாக வந்து விழுகின்றது ஷங்கரின் வார்த்தைகளும்...

'அம்மாவுக்கு
முன்னால் நிர்வாணம் காண்பிக்க
உனக்கு என்ன வெட்கம்...
இலைகொண்டு
பூ கொண்டு
அவளிடம் மறைக்க முடியக்கூடியதா
பிள்ளையின் நிர்வாணம்
நீ சிசுவாக வாழைப்பழம் போல
அவளிடம் தானே இருந்தாய்
ஞாபகம் இல்லையா
நீயும் உண்டாயா
அந்த விலக்கப்பட்ட கனியை?'

பாரத ஓவியமொன்றிலிருந்து நிகழ்கால மனிதனின் கதை விரிகின்றது. ஆனால் இறுதியில் இன்னொரு ஆதிக்கதையான பைபிளில் போய் நின்று நீயும் விலத்தப்பட்ட கனியை நீயும் உண்டாயா? என்கின்றது. வெவ்வேறு உலகங்களுக்கு அந்தரத்தில் மிதந்து நம்மை காலமற்ற காலத்திற்குள் கவிதையும் ஓவியமும் இழுத்துச் செல்கின்றது.

கிட்டத்தட்ட 50 அருமையான வர்ண ஓவியங்களுடனும் கவிதைகளுடனும் ஒருவகையான சித்திரக் கத வடிவில் வந்த இந்நூல் மிக முக்கியமான முயற்சியாகும். செவ்வியலும் நவீனமும் ஒன்றையொன்று இடைவெட்டும்/ஊடுபாவும் ஒரு புள்ளியில் எங்களை நிறுத்திவைக்கும் இந்த 'உள்ளோட்டம்' இன்னும் பரவலாக அவசியம் பேசவேண்டியதொன்றாகும்.

மரங்கள்...மழைக்காடுகள்

Thursday, May 05, 2016

இந்த வாரவிறுதியில் 'மரங்களை நட்டவன்' மற்றும் 'மழைக்காடுகளின் மரணம்' என்கின்ற இரு சிறு நூற்களை வாசிக்க முடித்தது. இரண்டையும் 'பூவுலகின் நண்பர்கள்' வெளியிட்டிருக்கின்றார்கள். 'சிறியதே அழகு' என்ற பெயரின் கீழ் இந்த நூற்களை வெளியிடப்பட்டதோடல்லாது, சூழலியலுக்கு சிநேகபூர்வமாக மண்ணிறத்தாளில் முகப்பிருப்பதும் பிடித்திருந்தது.

'மரங்களை நட்டவன்' என்பது ழான் ழியோனா எழுதிய ஒரு புனைவின் தமிழாக்கம். அல்பஸ் மலையடிவாரத்தில் தனித்து வாழும் ஒரு மனிதன் எப்படி தசாப்தகாலங்களாய் மரங்களை நட்டு ஒரு பெருங்காட்டை உருவாக்குகின்றான் என்பதே ழானின் கதை. இந்தப் புனைவை, கட்டுரை ஒன்று எழுதித்தரச்சொல்லிய ரீடர்ஸ் டைஜஸ்ட்டுக்கே ழான் அனுப்புகின்றார். முதலில் வியந்து அந்தக் அதைப் பிரசுரக்க ஏற்றுக்கொள்ளும் சஞ்சிகை, பிறகு அப்படியொரு மனிதர் அல்பஸ் மலையடிவாரத்தில் வாழ்ந்ததில்லையென நிராகரிக்கின்றது.  ழானோ 'கற்பனைப் பாத்திரங்களைப் படைப்பது எழுத்தாளனின் சுதந்திரம், அவனிடம், "நீ சந்தித்தவர்களில் மிகவும் வியக்கத்தக்கவர் யார்?" என வினாவினால் அவன் நிச்சயம் தன் கற்பனையில் சந்தித்த ஒருவரைப் பற்றியே பேசவேண்டியிருக்கும்' என்கின்றார்.

ஒரு காட்டை உருவாக்கியவன் இதில் புனைவாக இருந்தாலும், நாமறிய எத்தனையோ மனிதர்கள் மரங்களை நட்டு காட்டை உருவாக்கியதை அறிவோம். நிஜத்தில் வாழ்ந்த மனிதர்கள் பற்றிய விபரங்களை ழானின் கதையின் பின்பாக இந்த நூலில் இரா.கிருஷ்ணமூர்த்தியால் தரப்பட்டிருக்கின்றது. அண்மையில் கூட இந்தியாவில் வடக்கிலிருக்கும் ஒரு தீவில் ஒரு மனிதர் (Jadav Payeng) எப்படி பெருங்காட்டை உருவாக்கினார் என்பதை வாசித்து இங்கே பகிர்ந்திருக்கின்றேன். சென்ற வாரம் கூட, இந்தியாவில் ஒரு கிராமத்தில் பெண்பிள்ளைகள் பிறந்தால் நூறு மரங்களை நடுவதும் அதைக் கவனமாய்ப் பராமரிப்பதுமான வழக்கம் இருக்கிறதையும் கூட வாசித்திருக்கின்றேன். ழானின் இந்த நூலை, ஒரு புனைவென்றே அறியமுடியாது, வருடங்கள் குறிப்பிடப்பட்டும், மரங்களை நடும் மனிதர் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று ஊகிக்க முடியாவண்ணம் எழுதிச் செல்கின்றார்.

'மழைக்காடுகளின் மரணம்' என்பது நக்கீரன் அவர் பணி நிமித்தம் சென்ற தென்கிழக்காசியாவின் போர்னியோ காடுகள் பற்றியது. இன்றைக்கு ஏறக்குறைய அந்த காடுகளில் அரைவாசிப்பரப்பு அழிக்கப்பட்டுவிட்டது. காடுகளிற்குள் வேலை செய்யப் பிரியத்துடன் செல்லும் ஒருவர், அங்கே அவர் பணிபுரியும் நிறுவனமே காடுகளை அழித்து மரங்களை வெளியுலகிற்கு அனுப்புகின்றபோது அவருக்கு மனம் கசந்து போகின்றது. மரங்களை வெட்ட கனரக இயந்திரங்களும், புல்டோசர்களும் வந்து இறங்கி அடர் இருமையானதும், குளுமையானதுமான காடுகளை அழிக்கும்போது உள்ளே புகும் சூரிய ஒளி கூட மிகப்பெரும் வெறுமையைக் கொடுத்ததாக தன் அனுபவங்களினூடு நக்கீரன் எழுதுகின்றார்.

பிரேசில் போன்ற வளரும் நாடுகளின் மிகப்பெரும் சொத்தான காடுகளை எப்படி வளர்ச்சியடைந்த நாடுகள் உலகவங்கிகள் மூலம் அபிவிருத்தி என்ற பெயரில் கடன்களை வழங்கி, காடுகளையும் இன்னபிற வளங்களை அழிக்கவும் சுவீகரிக்கவும் செய்கின்றது என்பது மிக எளிமையாக இந்த நூலில் விபரிக்கப்படுகின்றது. காடுகளை அழிப்பதால் வரும் 'இலாபத்தை' விட காடுகளை அப்படியே பராமரிப்பதால் வரும் 'இலாபம்' எத்தனையோ வீதம் அதிகம் என்றபோதும், பெருநிறுவனங்கள் எப்படி குறுகிய காலத்தில் மிகப்பெரும் செல்வத்தைப் பெறுவதென்ற போட்டியில் மழைக்காடுகளை அழித்துவருகின்றன என்பதை இதை வாசிக்கும்போது விரிவாக அறியமுடியும்.

காடுகளை அழித்து, மீள்காடு செய்தல் என்பது ஒருவகையான சுத்துமாத்து என்பதையும் மேலும் பெருங்காடுகளை அழித்துவிட்டு இடையிடையே சிறுகாடுகளை அரசாங்கங்கள் பாதுகாப்பான வலயங்களாய் பராமரிப்பதால் அவ்வளவு பெரிய பலன்கள் கிடைக்கப்போவதில்லை என்பதையும் இந்நூல் சுட்டுகிறது. எவ்வாறு காடுகளுக்கிடையில் இருக்கும் உயிரிகளின் நகர்வுகளும், நீர்நிலைகளும் பாதிக்கப்படுகின்றன என்பதையும் இந்நூல் விவரிக்கின்றது.

சனத்தொகை பெருகும்போது, எந்தவகையில் காடுகளைத் தக்கவைப்பது என்ற சிக்கலான பக்கத்தை இந்நூல் தொட்டுவிடவில்லை என்பது ஒரு சிறுகுறையாகவே இருக்கிறது. மனிதர்கள் தமது ஆசைகளை எளிதாக்கிக்கொள்ளும்போதும், இன்னுமின்னும் இலாபம் வேண்டும் என்று பெருநிறுவனங்கள் தங்கள் அசுரப்பசியை குறைக்கும்போதும், நாம் இயற்கையை அதிகம் சுரண்டாமல் இருக்க முடியும் என்பது ஒரு எளியவழி.

இவ்விரு நூற்களும் சிறியதாக இருந்தாலும், வாசிப்பவர்க்கு மரங்களின் மீது காதலை வரச்செய்யவும், மரமொன்று தறிக்கப்படும்போது சற்றுக் கவலைப்படவும் செய்கின்ற மனதை தரவும்கூடும்.

(Feb 08, 2016)

சி.மோகன்

Wednesday, May 04, 2016

மோகன் எனக்கு அவரின் 'புனைகளம்' இதழ்களினூடாகத்தான்  முதன்முதலாக அறிமுகமாகியிருக்கவேண்டும் என நினைக்கின்றேன். 2002ல் இலண்டன் போயிருந்தபோது சபேசனின் வீட்டில் புனைகளம் இதழ்களை முதன்முதலாக வாசித்திருக்கின்றேன். அதன்  நேர்த்தியான வடிவமைப்பும், நாட்டார் கலைகளுக்காய் அதிக பக்கங்களை ஒதுக்கியிருந்ததும் என்னை சடுதியாகவே இழுத்துக்கொண்டது. அப்போதுதான் ஒரளவு தீவிரமான வாசிப்பு நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த மாணவபருவம். சிற்றிதழ்களுக்குரிய மொழிக்குள் நுழைய எனக்குச் சற்று சிக்கலாயிருந்தாலும், புனைகளம் எனக்குள் ஒரு புதிய வெளியைத் திறந்திருக்கின்றதென இப்போது யோசிக்கும்போது தோன்றுகின்றது. நாட்டார் மற்றும் நுண் கலைகளுக்காய் தன்னை அர்ப்பணிந்திருந்த 'புனைகளம்' இதழ் ஏதோ ஒன்றில்தான் அ.மார்க்ஸ்(?) எழுதிய நாட்டார்கலைகளோடு பின்னிப்பிணைந்திருக்கும் சாதி பற்றியும் நாம் மிக அவதானமாக இருக்கவேண்டும் என எச்சரித்த கட்டுரையையும் வாசித்ததாகவே நினைவு. 

பின்னர் மோகன் ஒருகாலத்தில் 'தீராநதி'யின் கடைசிப்பக்கங்களில் நுண்கலைகளை அறிமுகஞ்செய்யும் பத்தியை ஆர்வமாய் வாசித்தது வந்ததும் நினைவிலிருக்கின்றது. இப்போது 'ஓநாய் குலச்சின்னம்' மொழியாக்கம் என் வசத்து இருக்கின்றது. இன்னமும் 'விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்' நாவல் கையில் கிடைக்கவில்லையெனினும் விரைவில் வாசிக்கவேண்டும் என்கின்ற ஆவல் இருக்கின்றது.

மோகன் தமிழ்ச்சூழலில் தேடித்தேடி அறிமுகப்படுத்திய விடயங்களுக்காய், நாம் அவர் இருப்பை அங்கீகரித்திருக்கின்றோமா என்று இப்போதும் எனக்குள் கேள்வி இருக்கின்றது. மோகனின் தேடலில்லாவிட்டால் இன்றுகூட ப.சிங்காரத்தை கண்டுபிடித்திருப்போமா என்று தெரியவில்லை. ஜி.நாகராஜனோடு இறுதிக்காலத்தில் நெருக்கமாய் இருந்து, ஜி.ரா பற்றி மோகன் எழுதிய பதிவை அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது    இப்போது புனைவாய் எழுதிய ''விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்' கூட கலைகளில் மீது பித்துபிடித்து தன்னை உருவழித்து நம் சூழலில் அவ்வளவு கவனிக்கப்படாதிருந்த ஓவியரான ராமானுஜத்தைப் பற்றிய கதையல்லவா?

இவ்வாறு நாம் கண்டுகொள்ளாது எளிதாய் மூடிமறைக்கப்பட்டவர்களையும், கலைகளின் மீது பித்துப்பிடித்தலைபவர்களையும் தேடித்தேடி மோகன் நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கின்றார். இத்தகைய எழுத்தாளர்கள், ஓவியர்கள் நம்மிடையே வாழ்ந்தார்களா என ஒருவகையில் வியப்பையும் இன்னொருபுறத்தில் அவர்களைக் கவனிக்கத்தவறிய நம்மை வெட்கிக்கவும் செய்கின்றார்.

ராமானுஜம் பற்றிய சிறப்புரையை வழங்க வந்திருந்த மோகனைச் சந்தித்தபோது ஒரு நண்பர் என்னிடம், எத்தனையோ பேருக்கு இயல்விருது வழங்கும்போது ஏன் மோகனுக்கு எந்த விருதும் கொடுக்கவில்லை எனக் கேட்டார். நான் இயல்விருதை பிரதிநிலைப்படுத்துபவன் என்றில்லாவிட்டாலும் கனடாவிலிருந்து வந்தவன் என்பதால் அவர் என்னிடம் கேட்டிருக்கலாம். மோகனை நன்கறிந்த 'காலம்' செல்வம் போன்றவர்கள் இயல்விருதுக் குழுவில் இருக்கின்றனர்,இதைக் கவனித்திருக்கலாம் என நாங்களிருவரும் ஒருவகையான சோர்வுடன் தொடர்ந்து பேசியதாய் நினைவிருக்கிறது.

'விந்தைக் கலைஞனின் உருவச்சித்திரத்தில்' ஓரிடத்தில் 'நாலு காசுக்காக அவன் கால்கள் பூமியில் தரித்திருக்கவில்லை. அதனால்தான் அவனால் நிலவைக் கைப்பற்ற முடிந்தது' என ஓவியர் ராமனைப் பற்றி பணிக்கர் கூறுவதாய் வரும்.

அதையேதான் நானும் மோகனுக்குப் பொருத்திப் பார்க்கின்றேன். தங்களை தாங்கள் ஒன்றித்துப் போகும் கலைகளுக்காய் அர்ப்பணித்துப் போகின்றவர்கள், பொருளாதார வசதி குறித்தோ, தங்களை முன்னிறுத்தும் அரசியல்பற்றியோ அவ்வளவு யோசிப்பதில்லை.

ஆகவேதான் மோகன் என்னை இன்னுமின்னும்  வசீகரிப்பவராக இருக்கின்றார்.

(June 26, 2015)