கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தேமாப்பூ குறிப்புகள்

Tuesday, April 21, 2015

The Hungry Ghosts

ஷ்யாம் செல்வதுரையின் 'The Hungry Ghosts' சிங்கள-தமிழ்ப் பெற்றோருக்கு பிறந்தவரும் தற்பாலினருமான சிவனின் பார்வையில் கதை சொல்லப்படுகின்றது. நாவலில் வருகின்ற ஒவ்வொரு பாத்திரமும் பிற பாத்திரங்களுடோ முரண்களோடும் அதனால் வரும் பதற்றங்களோடும் சிலவேளைகளில் மூர்க்கத்தோடும் இருக்கின்றன. சிறுவனான சிவன் தன் வாழ்வில் பிறரில் நலங்களுக்காய்த் தான் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலிபீடத்திற்கு முன் வைக்கப்படும் ஒருவனாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறார். கதையின் முதற்பாகம் 83 இனக்கலவரத்தோடு முற்றுப்பெற, இரண்டாம் பாகம் ரொறொண்டோவில் நிகழ்கின்றது.

ரொறொண்டோவிலிருந்து பிறகு வன்கூவருக்கும், திரும்பவும் இலங்கையிற்கும் என நீளும் நாவலை சுவாரசியமாக வாசித்துக்கொண்டு போகலாம். ஒவ்வொரு பாத்திரமும் தான் தெரிந்தோ தெரியாமலோ இழைக்கும் குற்றங்களுக்கு அடுத்த பிறப்பிலாவது நல்வினை கிடைக்காதா என ஏங்குகின்றன. ஆனால் அந்த ஏக்கங்களும் அதற்காய்ச் செய்ய முயலும் பிரயச்சித்தங்களும் இன்னுமின்னும் குற்றங்களைப் பெருக்குவதை ஒவ்வொரு பாத்திரமும் செய்வதறியாது திகைத்துப் பார்த்தபடியிருக்கின்றன.

ஜேவிபி காலம், புலிகள், சந்திரிக்கா அரசு, யோர்க் பல்கலைக்கழகம், ஸ்காபரோ, மெட்ரோ ரொறொண்டோ என நாம் பரீட்சயம் கொண்ட/கொள்கின்ற பின்னணிச் சூழல் கதையை வாசிக்கும் நம்மை நெருக்கமாய் உணர வைக்கின்றது. ஆனால் தெரிந்த பின்னணியில் தெரியாத கதையை ஷ்யாம் எழுதியிருப்பாரோ எனத் தேடும்போது சிலவேளை ஏமாற்றம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை. அதேசமயம் தற்பாலினரின் உறவுகள் -முக்கியமாய் புலம்பெயர்ந்த தற்பாலினர்- எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி விரிவாகவும் அங்கேயும் இருக்கக்கூடிய காதல், பொறாமை, கோபம் பற்றி நுட்பமாகவும் உறவுகள் குறித்துப் பேசும் பகுதிகளும் குறிப்பிடத்தக்கவை.

ஷ்யாம் உறவுகளில் இருக்கும் சிறுசிறு விடயங்களைக் கூட நுண்ணியதாய் அவதானித்து வைக்கும்போது இரசிக்க முடிகின்றது. ஆனால் கதையில் -முக்கியமாய் இலங்கை/புலம்பெயர் வாழ்வு என வாழும் சிவனின் பாத்திரம் - கொஞ்சமேனும் நகைச்சுவை உணர்வில்லாது ஏன் மிகச் சீரியஸாக எப்போதுமிருப்பதாய் வார்க்கப்பட்டிருக்கிறதென்பது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன். முடிவுவரை சுவாரசியமாய் நகரும் நாவல் இறுதியில் சற்று தளம்பினாற் போலிருந்தது. முடிவை வேறு வகையாக முடித்திருக்கலாம் எனத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. என்றாலும் தவறாது வாசிக்கவேண்டிய ஒரு நாவல் எனத் துணிந்து சொல்லலாம்.

A Fine Balance

அண்மையில் வாசித்த ஆங்கில நாவல்களில் A Fine Balance (by Rohinston Mistry) போல பாதித்த நாவல் எதுவுமேயில்லை. எழுத்துக்கள் குறுக்கப்பட்ட மலிவுப்பதிப்பிலே 600 பக்கங்கள் நீள்கின்ற இந்நாவலோடு கடந்த ஒருவாரமாக பயணித்துக் கொண்டிருந்தேன்.இந்தியாவில் 75ம் ஆண்டு எமர்ஜென்சிக் காலப் பகுதியில் நகரும் நாவல். கிராமப்புறங்களில் ஒடுக்கப்படும் தலித்துக்கள், நகரில் மிரட்டப்படும் மத்தியதர வர்க்கம்....என வெவ்வேறு பின்னணிகளில் இருந்து வரும் நால்வரின் கதை அல்லது அவர்களின் வாழ்க்கை இடைவெட்டும் புள்ளிகள்.

வெவ்வேறு வாழ்க்கைச் சூழல் எப்படி இவர்களிடையே தொடக்கத்தில் வெறுப்பையும், புரிதலின்மையையும் உருவாக்கிறது என்பதிலிருந்து அவர்களுக்கிடையில் முகிழும் நட்பு வரும் நீண்டு முடிவில் ஒரு பெரும் சரிவை/ அபத்தத்தை நோக்கிப் போகின்றது. இந்திய அரசு /உயர்சாதி வன்முறை, தலித்துக்களிலிருந்து தொடங்கி, இறுதியில் இந்திராவின் கொலையோடு சீக்கியர்களைத் தெருத்தெருவாக கொன்று குவிக்கின்றது வரை பரவுகின்றது என்பதை அறிவதற்காகவேனும் இந்நாவலை வாசித்துப் பார்க்க வேண்டும்.

எமர்ஜென்சிக் காலத்தைப் பற்றிக் கொடூரங்களை, ஒரு கொலைகாரன் எப்படி பிறகு சாமியாராக மாறுகின்றான் என்பதை, சாதிக் கொடூரங்களுக்குள் தப்பி வரும் தலித்துக்கள் எப்படி பிச்சைக்காரர்களாக ஆக்கப்படுகின்றார்கள் என்பதை, எல்லா மனிதர்கள் மீதும் பேரன்பு வைக்கின்ற ஒருவன் எப்படி பிறர் மீது நிகழும் அநியாயங்களைப் பார்த்து பின்னாட்களில் தற்கொலை செய்கின்றான் என்பதையெல்லாம் வாசிக்கும்போது பரவும் வெறுமையை அவ்வளவு எளிதாகக் கடந்து போய்விடமுடியாது.

கிளிநொச்சி - படுவாங்கரை

தீபச்செல்வனின் 'கிளிநொச்சி: போர் தின்ற நகரம்', தீபச்செல்வன் யுத்தம் முடிந்தபின் தன் உறவுகள்/நண்பர்கள்/அயலவர்களைத் தேடிச்செல்கின்ற சம்பவங்களை உருக்கமாய் முன்வைக்கின்றது. அழிவுகளின் போது மட்டுமல்ல அழிவுகளின் பின்னும் வாழ்கின்ற வாழ்வு எவ்வளவு துயரமானது என்பதற்கு இதுவும் சஞ்சயன் எழுதிய 'படுவான்கரையும்' நம் முன் வைக்கப்படுகின்ற சாடசியங்கள்.

சப்வேயில் 'கிளிநொச்சி'யை வாசித்தபோது தானாய் எழுந்த கண்ணீர்த்துளிகளை முன்னால் இருப்பவர்க்கு மறைக்க கஷ்டப்பட்டது ஒருபுறமென்றால் இன்னொருபுறம் இவ்வளவுக்கு அப்பாலும் இனி எதைச் சாதித்து எதைப் பெற்றாலும் இந்நினைவுகளின் 'வடுக்களுக்கு' மருந்திடமுடியுமா என்கின்ற அயர்ச்சியே வந்தது. 'கிளிநொச்சி'யை வாசித்தபோது இன்றைய தீபச்செல்வனை என்னால் நன்றாக விளங்கிக்கொள்ள முடிகின்றது. ஆனால் அதற்காய் அவரின் எல்லாக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்கிறேன் என்பதல்ல அர்த்தம். அவரை இன்னொரு எதிர்முனையில் ஒதுக்கிவைப்பதை விட, சகோதர வாஞ்சையுடன் நமது முரண் உரையாடல்களை அவருடன் தொடங்கவேண்டுமெனவே விரும்புகிறேன்.

The Panic Button

கும் காங்கேசனின் 'The Panic Button' நாவல் எனக்குப் பரிட்சயமான ஸ்காபரோ/டவுன்ரவுன் ரொறொண்டோ/கென்னடி சப்வே போன்ற இடங்களில் நிகழ்வதால் வாசிக்கச் சுவாரசியமாக இருந்தது. ஆனால் கதையென்றால்... அம்மா இரண்டு ஆண்களைக் கஷ்டப்பட்டு வளர்க்கிறார். அப்பா விஸா பிரச்சினையால் 25 வருடங்களுக்குப் பின் இலங்கையிற்கு வருகின்றார் (அதுவரை அவர்கள் தந்தையை நேரில் காணவில்லை என்ற லொஜிக் ஒருபக்கம் இடிக்கிறது). தமையனுக்குத் திருமணம் நடக்கும்போது தம்பிக்கு ஒரு வெள்ளைப் பெண்ணோடு காதல் வருகிறது. அதனால் ஏற்படும் சிக்கல்கள், அப்பா- மகன் முரண்பாடுகள்.

வாசுகியின் 'Love Marriage'  நாவலைப் போலவே இங்கும் திருமணம் ஒருவகையான 'ஃபான்சியாக' விபரிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்த முதல் தலைமுறையின் இளையவர்களின் வாழ்விலும் மரபுரீதியான திருமணம் முக்கியமாய் இருப்பது போலத் தெரிகிறது. ஆனால் என்ன பிரச்சினையென்றால் அவர்கள் நினைப்பது/விபரிப்பது போல இத்தகை திருமணங்கள் இயல்பில் இல்லை என்பதுதான். கனடாவில் நிகழ்ந்த இலக்கியச் சந்திப்பில் பேசிய இளைய தலைமுறையைச் சேர்ந்த சிவகாமிக்கு இருக்கும் 'அடையாளம் தேடல்' குறித்த பிரக்ஞை கூட, கும் காங்கேயனுக்கு இல்லாது ஒரு மேற்கத்தைய பார்வையினூடு கதையைக் கொண்டு செல்லல் அலுப்புத் தரக்கூடியது மட்டும் அல்ல கவலை தருவதும் கூட.

Magic in the Moonlight

Monday, April 20, 2015

வூடி அலனின் திரைப்படங்கள் எப்போதும் இருத்தல் சார்ந்த கேள்விகளை எழுப்புவது. ஒவ்வொரு மனிதர்களும் தமது பகுத்தறிவின் மூலம் தமக்கான வாழ்வையும், உறவுகளையும் கட்டியமைக்க முயல்கின்றார்கள். ஆனால் பகுத்தறிவு நமக்கான விடுதலையைத் தந்துவிடுமா, நம்மை மகிழ்ச்சியாகவோ அல்லது ஆகக்குறைந்தது நிம்மதியாக வாழ விடுமா என்பதைத் தேடும் ஒரு படந்தான் Magic in the Moonlight.

மாந்தீரிகவாதியான ஸ்ரான்லி பல வித்தைகள் செய்து பார்வையாளர்களை வசியம்செய்தாலும் அவரொரு பகுத்தறிவாளர். கடவுள் நம்பிக்கையற்றவர். எந்த ஒரு 'வித்தை'யையும் பகுத்தறிவால் அவிழ்த்துவிடமுடியுமே தவிர உண்மையில் அதற்கப்பால் 'அமானுஷ்ய' சக்திகள் இல்லை என்று தீவிரமாக நம்புகின்றவர். மனிதர்களின் சிந்தனைகளுக்கு அப்பால் சக்திகள் இருக்கின்றன எனக் கூறுகின்றவர்களை கேலியும் செய்கின்றவர்.

இவ்வாறான ஸ்ரான்லியிடம் அவரின் நண்பரொருவர் உதவி கேட்டு வருகின்றார். ஒரு பெரும் பணக்கார குடும்பத்தில், 'மனிதர்களின் மனதை வாசிக்கும்' ஒரு பெண் நுழைந்து எல்லோரையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கின்றார், அவரை ஒரு போலியென அக்குடும்பத்தில் நிரூபிக்கவேண்டும் என நண்பர் ஸ்ரான்லியிடம் கேட்டுக்கொள்கிறார். மேலும் இந்தப் பெண்ணின் மீது பணக்காரவீட்டு ஆண்களில் ஒருவர் ஏற்கனவே காதலில் வீழ்ந்தும் விட்டிருக்கின்றார் என்பதும் கூறப்படுகின்றது.

ஸ்ரான்லி, இப்படி மனித மனங்களை வாசிப்பதென்பது போலியான விடயம், நான் அங்கு வந்து இதைப் பொய்யென நிரூபிக்கின்றேன் என நண்பருடன் புறப்படுகின்றார். எல்லாமே பகுத்தறிவிற்கு உட்பட்டதென தீவிரமாய் நம்பும் ஸ்ரான்லியையும் அந்தப் பெண் தன் 'மாந்தீரிகத்தால்' கொஞ்சம் கொஞ்சமாக நம்பவைக்கின்றார். ஒருகட்டத்தில் ஸ்ரான்லி மனித அறிவால் எட்டமுடியாது, அதற்கு அப்பாலும் விடயங்கள் இருக்கின்றதென நம்பத் தொடங்குகின்றார். இந்தப் பெண் உண்மையிலே மனித மனங்களை வாசிக்கத் தெரிந்தவள் என பத்திரிகையாளர்களை அழைத்துச் சொல்லவும் செய்கின்றார். பத்திரிகையாளர்கள் 'நீங்கள் முன்னர் இப்படியான விடயங்களே இல்லை என தீர்க்கமாய்க் கூறியவர், அவர்களை எள்ளலும் செய்தவர், இப்போது இதையெல்லாம் உண்மையென நம்பத் தொடங்கிவிட்டீர்களா?' எனவும் கேட்கின்றனர். 'ஆம், முன்னர் அப்படித்தான் இருந்தேன், ஆனால் இந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் இதையெல்லாம் நம்பத்தொடங்கிவிட்டேன், உங்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்கின்றேன்' என்கின்றார்.

றுதியில் என்ன நடக்கிறது, மாந்தீரிகமா, பகுத்தறிவா தம்மைச் சரியென நிரூபித்துக்கொள்கிறதென்பதை படத்தின் முடிவில் அறிந்துகொள்ளலாம். வூடி அலன், இங்கே மாந்தீரிகத்தை ஒரு தளமாய் எடுத்துக்கொண்டாலும், அவர் அதனூடாக பரிசோதித்துப்பார்ப்பது மனித மனங்களைத்தான். ஸ்ரான்லி என்கின்ற பெரும்புகழ்பெற்ற மாந்தீரிகவாதி, தன்னை ஒத்த அறிவுடைய ஒரு துணையைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் ஒரு மகிழ்ச்சியான வாழ்வை வாழவில்லை என்பதை இந்த மாந்தீரிகம் செய்யும் பெண்ணைக் காணும்போது கண்டறிந்துகொள்கின்றார். அந்தப் பெண் தந்து கொண்டிருப்பது உற்சாகமான நாட்கள் என்றாலும் அவருடைய 'அறிவு' இதைக் காதலென பெயரிட்டுக்கொள்ள மறுக்கிறது. இந்த அற்புத அனுபவங்களைக் கூட, அறிவின் வழி ஆய்ந்து ஆய்ந்து மீண்டும் தன்னை உற்சாகமில்லாத ஒரு தனிமை வாழ்விற்குள் இழுத்துச் செல்ல விரும்புகின்றார். ஆனால், அவரது அன்ரியொருவர் ஸ்ரான்லியின் அறிவிற்கும், காதலுக்கும் இடையில் தள்ளாடும் மனதை எளிதாகப் போட்டுடைக்கின்றார்.

மனிதர்கள் ஒவ்வொருவரும் தம் புதிய உறவுகளை அமைத்துக்கொள்ளும்போது, தமக்கான அதேபடிநிலையிலேயே தமது துணைகளைத் தேர்ந்தெடுத்தால் வாழ்வு இதமாய் இருக்குமென நம்புகின்றனர். உண்மையிலே அப்படி நாம் நம் உறவுகளை அறிவின் வழி தேர்ந்தெடுக்கும்போது நமக்கு 'நிலைத்த' மகிழ்ச்சி கிடைப்பது சாத்தியந்தானா என வூடி அலன் நம்மிடையே கேட்க முனைகின்றார். கொஞ்சம் மாந்தீரிகம், கொஞ்சம் பொய்கள், கொஞ்சம் கற்பனைகள் இருந்தால் வாழ்வு இன்னும் அழகாகியும் விடக்கூடுமல்லவா? ஸ்ரான்லி என்னும் பகுத்தறிவின்படி எல்லாவற்றையும் ஆராயும்/தேர்ந்தெடுக்கும் ஒருவருக்குள், அவரளவிற்கு அறிவோ, வசதியோ இல்லாத ஸோபி என்கின்ற அழகான கண்களையுடைய அப்பாவித்தனமுள்ள பெண் எல்லா நிலைகளையும் எளிதாய் உடைத்தெறிந்து உள்நுழைந்து கொள்கிறாள். ஸ்ரான்லி, ஸோபியின் 'மனங்களை வாசிக்கும்' திறனை நம்பிக்கொள்வது கூட, அவரின் 'பகுத்தறிவை' மறைத்து/மறைந்து எழும்பிய காதலினால்தான் என்பதை பார்வையாளர் எளிதாக விளங்கிக்கொள்ளவும் முடியும்.

வூடி அலனின் படங்களில் முரண் உரையாடல்களாலேயே அழகான காதல்கள் கட்டியெழுப்பப்படுவதை நாம் அவதானிக்கமுடியும். ஆனால் இந்தப் படத்தில் அவ்வாறான தீவிர உரையாடல்கள் பாத்திரங்களிடையே நிகழத்தப்படவில்லை என்பதோடு, காதல் கூட அழகாக மனதைத் தொடும்படியாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதை இப்படத்தின் ஒரு பலவீனமாகத்தான் கொள்ளவேண்டும். ஒருவகையில் அவரின் முன்னைய படங்களைப் போன்று அவ்வளவு பாதிப்பையோ, நினைவில் இருத்திக்கொள்ளக்கூடிய நுட்பமான காட்சிகளோ இல்லாத ஒரு திரைப்படமாகவே இது இருக்கிறது.Vicky Cristina Barcelona, Midnight in Paris, Rome with Love, Blue Jasmine போன்று இருத்தலியத்தையும், காதலையும் நுட்பமாக செதுக்கிய பாத்திரங்களினூடாக மீண்டும், வூடி அலன் மீண்டு வருவதை அவரின் விரைவில் வரவுள்ள Irrational Man ல் எதிர்பார்க்கின்றேன்.

Stanley: "The more I watch her, the more I'm stunned. Could she be real? I'm beginning to question my own common sense."

Aunt : "You've always been so certain about the world and I've always tried to teach you that we don't know."
.....

பயணக்குறிப்புகள் - 07 (Cuba)

Thursday, April 16, 2015

"Sometimes a lonely trip ends up pretty cool, like I met you."

தையும் எதிர்பார்க்காத வாழ்க்கை நிறைய அமைதியைத் தரும் என்பதைப் போல, எதையும் திட்டமிடாத பயணங்களும் எமக்கு நிறைவான அனுபவங்களைக் கொண்டு வரக்கூடும். பயணிப்பது என்பதே வாழ்வில் அரிதாக இருக்கும் எனக்கு, தனித்துப் பயணிப்பவரைப் பார்த்தால் வியப்பு ஏற்படுவதுண்டு. தனியே பயணிப்பதில் அச்சம் என்பதைவிட, அப்படிப் பயணிக்கும்போது வரும் தனிமையைப் பற்றியே மிகவும் அஞ்சியிருக்கின்றேன்.

நண்பரொருவரோடு திட்டமிட்ட பயணம் -நண்பனின் வேலை நிமித்தம்- தனித்துப் பயணிப்பதற்கான முதல் சந்தர்ப்பம் வாய்த்தபோது, செல்வதற்குத் தயக்கமாயிருந்தது. அப்போதுதான் எனக்குத் தெரிந்த ஒரு தோழி கோஸ்டா ரிக்காவிற்கு தனித்துப் போய்விட்டு வந்திருந்தார். விமானத்தை மட்டும் பதிவு செய்துவிட்டு backpacker யாய் புறப்பட்டிருந்தார். திரும்பி வந்து அவர் கூறிய அனுபவங்களோடு, என்னையும் தனியே போகச் சொல்லி உற்சாகப்படுத்தினார்.

என்னதான் நடந்தாலும், வாசிப்பு எங்கும் கைவிடாது என்ற நம்பிக்கையில் பத்திற்கு மேற்பட்ட புத்தகங்களைக் கூட எடுத்துக்கொண்டு முதன்முதலில் தனித்துப் புறப்பட்டேன். அந்த அனுபவம்- ஏற்கனவே தெரிந்த நண்பர்களுடன் பயணிப்பதைப் போல- தனித்துப் பயணிப்பதிலும் இனிமை இருக்கிறதென நிறையக் கற்றுத் தந்திருந்தது.

இம்முறை எது வருகின்றதோ அதையெல்லாம் முழுமையாக -எதிர்க்காது- அனுபவிப்பது என்று மட்டும் நினைத்துப் பயணித்திருந்தேன். எவரும் முதலில் வந்து கதைக்கமுன்னர் அவர்களோடு பேசத் தயங்கும் ஒருவன், இம்முறை அந்தத் தயக்கத்தையும் சென்றிங்கியபோதே களைந்துவிட்டேன். சிலவேளைகளில் அந்த நண்பர் என்னைவிட தனிமையைக் கூட நேசிப்பவர் போலத் தோன்றியதால் என்பதால் என நினைக்கின்றேன்.

தற்கு முன்னர் தனித்துப் பயணித்தபோது ஒருவரை நண்பராக்கியது இன்னும் சுவாரசியமானது. கடலில் 'கானாய்' வலித்துச் சென்றபோதே இடைநடுவில் அவரைச் சந்தித்தேன். 'இப்படியே அடுத்த சிறுநகருக்குச் செல்வோமா'?' எனக் கேட்டார். அந்த நகருக்கு படகு வலித்துச் சென்றதும், கையில் காசில்லாதபோதும் அங்கே சந்தித்த உள்ளூர்வாசிகள் நமக்கு மது வாங்கி அருந்தத் தந்ததும், நாங்கள் அங்கேயே நிறையநேரம் கழித்ததால் எங்களைக் காணவில்லையென விடுதியில் பணிபுரிந்தவர்கள் தேடியதுமென ஒரு கதையாய் எழுதக்கூடிய சம்பவங்கள் அவை. அப்படித் தொடங்கிய நட்பு இன்னொரு பயணத்தைச் சேர்ந்து செய்யவேண்டுமெனக் கனவுகளை வளர்த்தபடி இப்போதும் அவருடன் தொடர்கிறது.

இம்முறை சந்தித்த நண்பருக்கு சைக்கிள் ஓடுவதிலும் ஸ்நோர்கிளிங் (snorkelling) செய்வதிலும் மிகுந்த விருப்பு. அவருடன் கூடவே எடுத்து வந்த உபகரணங்களை எனக்கும் தந்து ஸ்நோர்கிளிங் கற்றுத்தந்தார். என்றாலும் அவரின் ஆழ்கடல் தேடல்களைத் தடுக்கக்கூடாதென அவரை தூரச் செல்லவிட்டு நான் கரைக்கருகில் நின்று 'முத்து'க்குளித்தேன். கடலின் 'உலகு' அவ்வளவு அழகானது. நிச்சயம் நீ தவறவிடக்கூடாதென்றார். அவர் ஆழம் சென்று புகைப்படங்களும், விடீயோக்களும் எடுத்துக்கொண்டு வந்து எனக்கு காட்டிக்கொண்டிருப்பார். புதிதாக பார்த்த மீன்களையும், தாவரங்களையும் மகிழ்ச்சியுடன் குழந்தையைப் போலச் சொல்லிக்கொண்டிருப்பார். 'பறவைகளைத் தேடிப் போய் பதிவு செய்கின்றவர்களைப் போல, நீங்கள் புதிதாய்க் காணும் மீன்களைப் பற்றிய குறிப்புக்களைப் பதிவு செய்யுங்கள், அது சுவாரசியமாக இருக்கும்' என்றேன்.

எமது இந்தப் பயணத்தில் கட்டுமரத்தில் சென்று 2 மணித்தியாலம் பார்ப்பதை இலவசமாகத் தந்திருந்தார்கள். நானும் நண்பரும் சேர்ந்து கட்டுமரத்தில் சென்றபோது, அவரிடம் இந்த catamaran என்ற வார்த்தை எனது தாய்மொழியான தமிழில் இருந்தே ஆங்கிலத்திற்கு வந்தது என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டேன். நாங்கள் அவ்வளவு சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை சும்மா விட்டுவிடமுடியுமா என்ன?

இந்த நண்பரோடு நள்ளிரவு தாண்டி மிக நெருக்கமாக உரையாடினேன். எவரோடும் அவ்வளவு எளிதாய் -நான் எழுதிக்கொண்டிருப்பவன்- என்பதைப் பகிர்வதில்லை. இவரோடு பகிர்ந்துகொண்டேன், அது போலவே கடந்துவந்த பல்வேறு கதைகளையும். சிலநாட்களுக்கு முன் நட்பாகிய ஒருவரோடு இவ்வளவு விடயங்களைப் பகிர முடியுமா என்று கூட சற்று வியப்பாயிருந்தது.

நண்பரும் தன் சிறுவயது நினைவுகள் உட்பட பலதைப் பகிர்ந்து கொண்டார். சிறுவயதுகளில் தனக்கு நீந்த ஆசையிருந்தாலும், தனது தந்தையார் வேலை முடிந்து வரும்வரை காத்திருப்பதையும், நீச்சல் குளத்திற்குச் சென்றாலும் தந்தையார் வேலையின் களைப்பின் நிமித்தம் நீருக்குள் இறங்காது வெளியில் இருப்பார் எனவும், யாரேனும் வேறு ஆட்கள் வரும்வரை தான் நீச்சலிற்காய் ஆவலாய்க் காத்திருந்ததையும் கூறினார். இப்போது, நீருக்குள் இறங்க ஆசையுள்ள காலத்தில் தானும் ஒரு குழந்தை பெற்று அந்தப் பிள்ளைக்கு நீரின் வற்றாத இரகசியங்களைக் கற்றுக்கொடுக்க ஆசைப்படுவதாகவும் சொன்னபோது அவருக்குள் இருந்த மென்மனதைக் கண்டுகொண்டேன்.

சைக்கிளோட்டுவதில் மிகுந்த விருப்புடைய அவர் எப்படி தனக்கான சைக்கிளை பல்வேறு நாடுகளிலிருந்து பாகங்களை வாங்கி வடிவமைத்தார் என விபரித்தார். ஒவ்வொருவரின் கைகளின் அளவைப் பொறுத்து சைக்கிள் வேறுபடுமெனவும், வேகம் கூட அதில் அடங்கியிருக்கிறதென நுட்பமான விடயங்களைச் சொல்லிக்கொண்டே போனார். ஒருகட்டத்தில் இதெல்லாம் விசர்த்தனமாய் ஏதோ உளறுவதுபோல உனக்குத் தெரியுமெனவும் சொன்னார். நான் அப்படியில்லை எனச் சிரித்துக்கொண்டு மறுத்தேன். Friesம் Burgerம் Beerம் சாப்பிட்டு/அருந்தி இரவுகளில் நீண்டு போய்கொண்டிருந்தன உரையாடல். ஆனால் நாமிருவரும் தனிமையை அதிகம் விரும்புபவர்கள் என்பதையும் கண்டுகொண்டோம். அதீத கொண்டாட்ட மனோநிலையில் இருப்பவர்களுடன் இணையாது அவர்களை வேடிக்கை பார்ப்பவர்களாக மட்டும் இருந்தோம்.

ஒருநாள் நண்பரும் நானும் சைக்கிள் ஓடிக்கொண்டிருந்தபோது ஒரு பெண்ணைக் கண்டேன். திரும்பத் திரும்பப் பார்க்க வைக்கும் ஒருவித அழகு அவரிடம் இருந்ததை மறைக்காது சொல்லவேண்டும். அழகை இரசிப்பதற்கு நண்பர் சிலவேளை இடைஞ்சலாய் இருந்துவிடுவாரோ என்ற தயக்கத்தினால் நண்பரை 'இந்த வீதி இடதா வலதா திரும்புகின்றது?' எனப் பார்க்கச் சொல்லி முன்னே போகச் சொல்லிவிட்டு, நான் மரமொன்றின் நிழலில் நின்று -அழகை இரசிப்பதற்காய்- ஓய்வெடுப்பதாய்ப் பாசாங்கு செய்தேன். சில சந்தர்ப்பங்கள் இன்னொருமுறை கதவைத் தட்டாது அல்லவா?

மாலைவேளைகளில் உள்ளூர்மக்கள் கூடும் இடங்களுக்கு அடிக்கடி சென்று கொண்டிருப்போம். அவர்களோடு எப்போதும் ஏதாவது கதைக்க விரும்பிக்கொண்டிருந்தேன். அவர்கள் நாங்கள் சுற்றுலாப் பயணிகள் என்று நினைத்ததாலோ என்னவோ அவர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட ஒரேவிதமான கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நண்பருக்கு ஒருகட்டத்தில் இதனால் அலுப்பு வந்துவிட்டது. ஆனால் அவரிடம், 'நான் கதைகளை எழுத விரும்புகின்றவன், இவர்களில் யாரேனும் ஒருவர் வித்தியாசமான கதையைச் சொல்வார் என்ற எதிர்பார்ப்பில் நான் ஒருபோதும் இவர்களின் கதைகளைக் கேட்கச் சலிக்கப் போவதில்லை' என்றேன்.

ஒருமுறை இப்படி ஒரு உள்ளூர் நண்பரொருவரோடு நாங்கள் மாலைவேளையில் நடந்து போய்க் கொண்டிருந்தபோது ஒரு பெண் எங்களை நிறுத்தி, ஸ்பானிஸ் ஏதோ கூறினார். அந்த உள்ளூர் நண்பர் கொஞ்சம் மொழிபெயர்த்தார்; 'இந்தப் பெண் உங்களை ஏற்கனவே தெரிந்தவர்' என்று கூறுகின்றார் என்றார். 'எனக்கு இப்படியான ஒரு பெண்ணைச் சந்தித்ததாய் நினைவினில்லை. எவரோடும் கதைக்கவும் இல்லை' என்றேன். நண்பரும் தனக்கு நினைவில்லை என்றார். அந்தப் பெண் இன்னும் துல்லியமாகச் சொன்னார்....'இவர்கள் இருவரும் சைக்கிள் ஓடிக்கொண்டு போனார்கள். இவர் சைக்கிளை நிறுத்தி என்னைத் திரும்பத் திரும்பப் பார்த்தது எனக்கு நன்கு தெரியும்' என்றார். பெண்கள் நுட்பமாய் அவதானிப்பவர்கள் என்பது தெரியும். ஆனால் இப்படி எங்களின் பலவீனங்களை எடுத்துச்சொன்னால் என்ன செய்வது? எனது நிலை இக்கட்டாகிப் போயிற்று. நான் பகல் வேளையொன்றில் சைக்கிளில் இரசித்த அதே பெண்.

'உங்களின் அழகு என்னை அப்படி அசரவைத்தது, அதுதான் இயற்கையை எதிர்க்க விரும்பாது உங்களைத் திரும்பி திரும்பிப் பார்த்தேன்' என உண்மையைச் சொல்ல முடியுமா என்ன? 'ஓ நீங்களா அவர். இப்போது மாலையில் பார்க்கும்போது வேறுவிதமாய் இருக்கின்றீர்கள். அதுதான் அடையாளங்காண முடியாது இருக்கிறதென'ச் சொல்லி மழுப்பினேன். இப்போது நண்பருக்கும் விளங்கியிருக்கும், ஏன் தன்னை இவன் முன்னே போகச் சொல்லி அந்த மரநிழலில் தரித்து நின்றான் என்பதும். அதற்காகவெல்லாம் கவலைப்படமுடியுமா என்ன? ஆக, சந்தர்ப்பம் இரண்டாவது முறையாக மீண்டும் தட்டியது என்க.

இப்போது Holguin னில் சந்தித்த நண்பர் ஒரு மின்னஞ்சல் இப்படியாக அனுப்பியிருந்தார்.

This is because most of the time I ride a bike and a snowboard alone - friends always have something better to do: shopping, they are tired, etc. Sometimes a lonely trip ends up pretty cool, like I met you.
........
.............
Now it is cold outside so you will have more time to finish your book, especially that you have a lot of new experiences from Cuba :-)

ஆம், நண்பரே...ஒருநாள் அதையும் எழுதுவேன்.
நடந்ததை நடக்காதமாதிரியும், நடக்காததை நடந்தமாதிரியும்!

பயணக்குறிப்புகள் - 06 (India)

Sunday, April 12, 2015

இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்தப் பாடல்!

புத்தகக்கண்காட்சியினுள் ஒரு கடையைக் கண்டபோது நண்பரொருவர் உள்ளே இருக்கின்றாரா எனத் தேடிப் பார்த்தேன். அவரோடு அவ்வளவு பரிட்சயமில்லை என்றாலும், அவரது படைப்புக்களை ஏற்கனவே வாசித்து ஒருவித நெருக்கத்தை உணர்ந்திருந்தேன். பிறகு அவர் ஊடகமொன்றில் வேலை செய்யத் தொடங்கியபோது என்னையும் அதில் எழுத அழைத்திருந்தார். எனக்கு அவர் படைப்புக்கள் பிடிக்கும் என்றாலும், அவர்பணிபுரிந்த இடத்தின் அரசியல் -முக்கியமாய் ஈழத்தமிழர் குறித்த அதன் நிலைப்பாடு- உடன்பாடில்லாததால் நேரடியாகக் காரணத்தைச் சொல்லாது மென்மையாக மறுத்துவிட்டிருந்தேன். ஒருநாள் புத்தகக் கண்காட்சியில் தற்செயலாய், எனக்குச் சென்னையைச் சுற்றிக்காட்டிக்கொண்டிருந்த நண்பரின் பைக்கில் ஏறும்பொழுதில், நான் தேடிக்கொண்டிருந்த இந்த நண்பரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரோடு சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தபோது இரவு வீட்டுக்கு வாருங்கள், வீட்டில் எவரும் இல்லை. இரவிரவாய்/விடியவிடிய ஆறுதலாய்க் கதைக்கலாம் என அழைத்தார்.

நானும், மற்ற நண்பரும் தங்கியிருந்த விடுதியிற்கு முதலில் போய், அங்கிருந்து எங்கள் முடிவைச் சொல்கின்றோம் என புறப்பட்டோம். நாங்கள் பிறகு அவரை அழைத்தபோது, அவரும் மற்ற நண்பர்களும் டாஸ்மாக்கில் ஓய்வெடுப்பதாகச் சொன்னார்கள். நாங்களும் ஓய்வெடுக்கத்தான் விரும்புகின்றோம், அது விடுதியாயிருந்தாலென்ன? டாஸ்மாக்காயிருந்தாலென்ன? களைப்புப் போக்க ஓரிடம் இருந்தால் போதுமென சைதாப்பேட்டையிற்குப் போனோம்.


நாங்கள் டாஸ்மாக்கை அடைந்தபோது, நம் நண்பர் இன்னுஞ்சில நண்பர்களோடு சேர்ந்து முதலாவது அமர்வை முடித்திருந்தார். இரண்டாவது அமர்வைத் தொடங்குவதற்குள் இரவு பத்து மணியாகிவிட்டது, அரங்கை மூடிவிடவேண்டுமென ஊழியர்கள் அடிக்கடி வந்து நினைவுபடுத்திக் கொண்டிருந்தார். பகிர்வதற்குத் தேவையான ஆயத்தங்கள் இருந்தால் எங்கும் வாசிப்பை நிகழ்த்தலாம் என்பதால் அங்கே தேவையானவற்றை வாங்கிக்கொண்டு நண்பரின் வீட்டுக்குப் புறப்பட்டோம். நான்கைந்து பைக்குகளில் அந்த இரவில் ஏதோ இந்தத் தெருக்களே எங்களுக்குச் சொந்தமென்ற நினைப்பில் நாமெல்லோரும் போய்க்கொண்டிருந்தது உற்சாகமாயிருந்தது. வாசிப்பு அரங்கில் இருந்த மற்ற நண்பர்களுக்கு இரவிரவாய் இலக்கியம் கதைக்க விருப்பமிருந்தாலும், அவரவர் இல்லாள் பிறகு அவர்களின் இல்வாழ்வையே கேள்விகளால் வேள்வி செய்துவிடுவார்களே என்ற பதற்றங்களுடன் தத்தம் வீடுகளை நோக்கி நகரத்தொடங்கினர்.

ஓர் அறையில் நாம் கொண்டுவந்தவற்றைப் பரப்பிவிட்டு, சுவர்களில் சாய்ந்திருந்தபடி பேசத்தொடங்கினோம். எப்போது பசிக்கிறது என்றாலும் சொல்லுங்கள் உடனே சோறு வைத்துவிடலாம் என்றார். அப்போதுதான் 'ஐ' படம் வந்திருந்தது. நண்பர் படம் பார்த்து மெர்ஸலாயிருந்தார். நான் பார்த்த திரைப்படங்களில் இதுவல்லவா படம், எமி ஜாக்சனின் முன் எந்த அழகியும் நிற்க முடியாதென்றார். ஆக, அப்படியாக 'ஐ' படத்தின் பாடல்களைப் பின்னணியில் இசைக்கவிட்டபடி பேசிக்கொண்டிருந்தோம். 'மெட்ராஸில்' ஏதோ விளிம்புநிலைப் பாத்திரத்தைக் கொண்டுவிட்டதாய் எல்லோரும் கூறுகின்றீர்களே, சத்தமேயில்லாதே ஷங்கர் அந்தப் பாத்திரத்தை 'ஐ' யில் கொண்டுவந்துவிட்டாரென உற்சாகமாயப் பேசிக்கொண்டிருந்தார். நான் அப்போது 'ஐ' படத்தைப் பார்க்கவில்லை. பின்னர் அதை ஏவிஎம் தியேட்டரில் பார்த்தபோது சாதாரண ஒரு படத்தை, திருநங்கைகளை கேவலமாகச் சித்தரித்தன் மூலம் இன்னும் மோசமான ஒரு திரைப்படமாக்கிவிட்டனர் என்ற விம்பமே எனக்குள் தங்கியது என்பது வேறுவிடயம்.

ந்த வீட்டிற்குச் சென்றாலும் உடனே கைவைப்பது புத்தக அலுமாரிகளில்தான். நாங்கள் பேசிக்கொண்டிருந்த அறையிலே நண்பரின் புத்தக அலுமாரியுமிருந்தது. போர்ஹேஸையும், மார்க்குவெஸையும் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருந்தாலே இந்த வாழ்வுக்குப் போதுமென்றார். நிறைய சிறு சஞ்சிகளைகள் -சி.செல்லப்பாவின் எழுத்து- உட்பட அவரின் சேகரத்திலிருந்தன. வாசக மனதுதான் எவ்வளவு அற்புதமானது. போர்ஹேஸ் எந்தப் பொழுதிலும் மார்க்வெஸ்ஸின் படைப்புக்களைப் பாராட்டியதில்லை. ஆனால் நம்மால் இருவரையும் மனமுவந்து ஏற்று பக்கத்திலிருத்தி வாசிக்கமுடிகிறது என நினைத்துக்கொண்டேன்.


நேரம் ஆக ஆக, நண்பர் தன் கடந்தகாலங்களில் மூழ்கிக்கொண்டார். சிலரோடு நிறையப் பழகினாலும் மனந்திறந்து பேச முடியா கண்ணுக்குத் தெரியாத் தடைகள் இருக்கும். நானும் நண்பரும் இதுதான் நம் முதல் சந்திப்பு என்ற நினைப்பில்லாது நிறைய நெருக்கமான விடயங்களை பகிரத் தொடங்கினோம். அவர் தன் பாடசாலை நாட்களில் மூழ்கத்தொடங்கினார். முக்கிய இரண்டு இலக்கியவாதிகளின் உச்சக்கட்டத்தில் அவர்களோடு நெருக்கமாய் பழகமுடிந்தது தனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றார். இந்த வருடத்து வாசிப்பிற்கு 'கரம்ஸோவ் சகோதரர்களும்', 'மகா பாரதமும்' போதும் என்றார். நான் ஜெயமோகன் எழுதுகின்ற 'வெண்முரசா' என்றேன். இல்லை, இது பழைய மகாபாரதம் என மறுத்தார். பின்னர் நண்பர் சில இதழ்கள் வெளியிட்ட சிறுபத்திரிகையைப் பார்த்தபோது, அவர் என்னைவிட ஒவ்வொரு இதழிலும் ஜெயமோகனை நிறையத் திட்டியெழுதியிருந்தது தெரிந்தது. பரவாயில்லை இந்த விடயத்தில் கொஞ்ச நல்லவனாக நான் இருக்கின்றேன் என்ற 'அற்ப திருப்தி' வந்தது. நண்பரோடு பழகிய கொஞ்சநேரத்திலேயே கண்டுகொண்டது, அவர் எதையென்றாலும் முழுமையாக அனுபவிக்கக் கூடியவர். அதில் தன்னைத் தோய்த்துக் கரைத்துவிடக்கூடியவர். எனக்கும் அப்படி இருப்பதிலே மிகுந்த விருப்பமெனினும் அடுத்து என்ன அடுத்து என்ன என அலைபாயும் மனது இன்னமும் எனக்கு உரித்து.

நேரம் நள்ளிரவைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது. எங்களோடு இருந்த நண்பருக்கு தூக்கம் வருவதாகக் கூற, நண்பர் சோறு வைத்து, அப்பளம் பொரித்து, ஏற்கனவே வைத்திருந்த கறிகளுடன் சாப்பிடத்தொடங்கினோம். சில இலக்கியவாதிகள் பற்றிப் பேச்சு வந்தது. அவர்களில் சிலர் பெண்களோடு நடந்துகொண்டவிதம் பற்றி பேச்சும் வந்தது. இவர்களின் தனிப்பட்ட வாழ்வு எங்களுக்கு முக்கியமா என்று அதை விலத்தி நான் வந்தபோதும், பாதிக்கப்பட்டவர்கள் அதை பொதுவெளியில் பேசும்போது நாம் அவர்களின் பக்கம் நிற்கவேண்டியது அவசியம் என்பதில் எனக்கெந்த மாற்றுக் கருத்துமில்லை. மேலும் இவ்வாறு நடப்பதற்கும், இலக்கியம் படைப்பதற்கோ வாசிப்பதற்கோ எந்தத் தொடர்பும் இருக்கவேண்டிய அவசியமுமில்லை. இது எல்லாச் சாதாரண மனிதர்களும் செய்யக்கூடியதுதான். 'இலக்கியவாதி' என்ற ஒரு 'அடையாளம்' எளிதாய் இவற்றுக்கு உதவுகிறது. அவ்வளவே. ஆகவேதான், எவரெனினும் தான் ஒருவர் இலக்கியவாதி எனக் கூறி தன்னை மேனிலையாக்கம் செய்வதை தொடர்ந்து நிராகரித்துக்கொண்டே வருகின்றேன்

இலக்கியம்/கலைகளில் ஆர்வமும், ஈடுபாடும் இருக்கின்றவர்களால், எளிதாய் எந்த மனிதரினதும் உள்மனதிற்குள்ளும், அவர்களின் நுண்ணுணர்வுகளில் தளங்களிற்குள்ளும் போய் இறங்குவது ஒன்றும் அவ்வளவு கஷ்டமில்லை. நண்பரும் ஓரிடத்தில் கூறினார், எந்த வீட்டுக்குத் தான் சென்றாலும், அந்தக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கின்றதா, சண்டைபிடித்துக்கொண்டு வாழ்கிறதா என எளிதாய்க் கண்டுபிடிக்க முடியும் என்று. மேலும் இதுகுறித்து வெளிப்படையாகப் பகிரமுடியாத சில விடயங்களையும் நீட்டித்துச் சொன்னார். இது சற்று உயர்வுநவிற்சியாக இருந்தாலும், எப்போதும் பிரச்சினைகளுள்ள மனிதர்களுக்குள், அன்புக்காய் ஏங்கிக்கொண்டிருப்பவர்களிடையும் நாம் இலகுவாய் நெருக்கமாகிவிட முடியும். எனவே 'இலக்கியவாதிகள்' எனப்படுவோர் பலரின் வாழ்வில் குறுக்கிடுவது/இடையீடு செய்வது பிறரை விட இன்னும் எளிதாகிவிடுகின்றது.

வ்வாறு எங்கெங்கோ தீவிரமாய்ப் போய்க்கொண்டிருந்த உரையாடலில் என்னோடு வந்திருந்த நண்பர் 'உண்டகளைப்பு தொண்டனுக்கும் உண்டு' என்று நம் இலக்கிய சம்பாசணையிலிருந்து விலகி தூங்கச் சென்றுவிட்டார். நான் இந்த நண்பருக்கு கேரளாவுக்குப் போகும் என் பெருங்கனவை விரித்துச் சொல்லிக்கொண்டிருந்தேன். திருவனந்தபுரத்திலிருக்கும் விஷ்ணு கோயில்களுக்கு எல்லாம் நிச்சயம் போகவேண்டும் என்று கூறிவிட்டு, ஒரு மலையாள பக்திப் பாடலை இசைக்கவிட்டார்.

அது- கண்ணன் முதல் நாளிரவில் தன் லீலையைச் செய்துவிடடுப் போனபின், அடுத்த நாள் காலையில் ருக்மணி(?)யின் கோலத்தைக் கண்டு அவரின் தோழி இரவு நடந்ததைக் கண்டுபிடிப்பதைப் பற்றிய பாடல். நண்பர் மலையாளப் பாடலை சொல் பிரித்து பொருள் வகுத்து சொல்லச் சொல்ல, ஒருகட்டத்தில் அவர் விளக்கப்படுத்தமுன்னரே எனக்கும் சற்று மலையாளம் விளங்கியதுமாதிரி உணர்ந்தேன். ஏதோ இனி அஸினோடு மலையாளத்திலேயே சம்சாரிக்க முடியுமென்ற மகிழ்ச்சி கணப்பொழுதில் மனதில் வெட்டிவிட்டுப் போனது.

நண்பர் தூங்கப்போவாமா எனக் கேட்டார். நீங்கள் செல்லுங்கள், நான் இணையத்தில் கொஞ்சநேரம் சஞ்சாரித்துவிட்டு வருகின்றேன் எனச் சொன்னேன். பொழுதும் விடியத் தொடங்கியிருந்தது. யன்னலுக்குள்ளால் வெளியே பார்த்தபொழுது யாரோ சிலர் தெருவை கூட்டத் தொடங்கியிருந்தனர்.

பயணத்தின் அழகு என்பதே எதிர்பாராத் தருணங்களில்தான் வெளிப்படுகின்றது. இப்படியாக ஓரிரவு நெருக்கமானதாவும், மனம்விட்டுப் பேசக்கூடியதாகவும் மாறிப்போனது மகிழ்ச்சியாக இருந்தது.