கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சிங்கள மாணவியிற்கான எதிர்வினை

Wednesday, September 07, 2016

திசுரி வன்னியராட்சியின் கட்டுரையை வாசிக்க: 
To The Tamil Students In The Recent Fight At Jaffna University


Thisuri Wanniarachchi என்பவர் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வன்முறையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரையை நண்பர்கள் பலர் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர். தனக்குரிய privilege ஐயும், மன்னிப்பையும் கேட்டுக்கொண்டு அவர் எழுதுவது நல்லதொரு விடயமே. அத்தோடு பெண்கள் எவ்வாறு நாளாந்தம் வன்முறைகளைச் சந்தித்தாலும் வன்முறைக்குப் போகாத 'சகிப்புணர்வை'ப் பற்றி அவர் சொல்வதும் நிச்சயம் கவனத்தில் கொள்ளக்கூடியது. பெண்கள் வன்முறையைக் கையிலேந்தாமல், ஒருநூற்றாண்டுக்குள் அவர்களால் எவ்வளவு சாதிக்க முடிந்தது என்பதைப் பற்றி இனிப் போராட்டங்களை நம்சூழலில் நடத்துபவர்கள் சிந்திக்கவேண்டும் என நண்பர்களிடையே விவாதித்திருக்கின்றோம். சிங்களப் பேரினவாதத்தின் 'தேசியம்' இருக்கும்வரை, தமிழ்த் தேசியம் எவ்வாறான நிலையில் என்றாலும் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும் என்பதை (தமிழ்த்தேசியம் எப்படி வெறியாக உருமாறியது/உருமாற்றப்படுகிறது என்பது இன்னொரு உரையாடலுக்கான புள்ளியென்றபோதும்) நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடியதே. இனியான தமிழ்த்தேசியம் ஆகக்குறைந்து ஒடுக்கப்பட்டவர்களிலிருந்தும் பெண்ணியத்திற்குள்ளிலிருந்தும் எழுந்தாலன்றி அது இன்னொருவகையான குறுந்தேசியவாதமாக போகுமென்பதிலும் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை.

இதை ஒருபுறம் வைத்துவிட்டு, இப்போது Thisuri Wanniarachchi தமிழ் மாணவர்க்கு என எழுதியதற்கு வருவோம். ஒரு பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர், தன் privilege விளங்கிக்கொண்டவர் முதலில் 'அறிவுரை' கூறவேண்டிய இடம் தமிழ் மாணவர்களுக்கு அல்ல. தான் சார்ந்த தன்னைப் போன்ற privilege உள்ள தன் சமூகத்திற்கே அவர் முதலில் எழுதவேண்டும். அதையும் தவிர்த்து அவர் தமிழ் மக்கள்/மாணவர் மீதான அக்கறையில் எழுதுகின்றார் என்றே வைத்துக்கொள்வோம். நீங்கள் 'வரலாற்றை' எவ்வாறு privilege உடன் அல்லது அதை நீக்கம் செய்தா வாசிக்கின்றீர்கள் என்பதையும் நாங்கள் பார்க்கவேண்டியிருக்கிறது.

1983ல் தமிழர்கள் (புலிகள்) தாக்கியதிலிருந்துதான் அன்றிலிருந்து 30 வருடங்கள் நாடு போருக்குள் வீழ்ந்ததெனக் குறிப்பிடுகின்றீர்கள். புலிகள் இராணுவத்தைத்தான் தாக்கினார்கள். அதற்காய் 1983ல் அப்பாவி/நிராதயுதபாணியான மக்களையெல்லாம் கொல்லத்தொடங்கியது ஏனென்று கேள்விகள் கேட்பதிலிருந்தே நாம் உரையாடல்களை ஆரம்பிக்கவேண்டும். இதைக்கூட ஒரு வன்முறைக்கான வித்து (புலிகள்) இட்டதால்தான் கலவரம் தொடங்கியதென ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். புலிகள் 1983ல் தாக்கமுன்னர், 1956 தனிச்சிங்களச் சட்டத்துடன் 1983வரை நடந்த கலவரங்களில், யார் அங்கே 'வன்முறை'யாளர்களாய் இருந்தார்கள் என்பதை நீங்கள் கவனிக்காதுவிடும்போதுதான் உங்களின் privilege இருந்து நீங்கள் இன்னமும் வெளியே வராது ஒடுக்கப்பட்டவர்களுக்கு 'அறிவுரை' கூற ஓடிவந்துவிடுகின்றீர்களே என்ற சந்தேகம் வருகிறது.

இப்போதும் தமிழர்களே 'வன்முறையாளர்களாய்' ஆகாதீர்களெனத்தான் கூற வருகின்றீர்களே தவிர வன்முறையின் ஊற்றுக்கள் எங்கே தொடங்குகின்றதெனக் கவனிக்கத் தவறுகின்றீர்கள் என்பதில்தான் எமக்குச் சோர்வு வருகிறது. ஏன் இந்தளவு போர் அழிவின்பின்னாலும், எல்லாவகையிலும் ஒடுக்கப்பட்டபின்னும் தமிழர்களிடையே 'வன்முறை' உணர்வு இருக்கிறதென்பதை நீங்கள் யோசிக்கவேண்டும். நீங்கள் இப்போதும் சிங்களச் சமூகத்தில் பெரிதாய் எதுவுமே மாறவில்லை என்று குறிப்பிட்டு, அவர்களும் வன்முறையாகத் திரும்பித் தாக்கினால் என்னவாகும் என எங்களிடம் கேட்கின்றீர்களே தவிர, பெரும்பான்மைச் சமூகத்திற்கு முதலில் 'அறிவுரை' கூறிவிட்டுத்தான் தமிழ் மாணவர்களிடம் இதைக் கூறுகின்றேன் எனச் சொல்வதற்கான எந்த அடையாளத்தையும் என்னால் காணமுடியவில்லை.

அதை விட இதை எப்படி மன்னிப்பும் கேட்டுக்கொண்டு உங்களிடம் இப்படி எழுதமுடிகிறதெனவும் யோசிக்கிறேன்.
"But at the end of the day we are both Sri Lankan and we cannot let our parents’ and grandparents’ generation’s mistakes belittle the future we have to rebuild."
இதை எப்படி சொல்கின்றீர்கள் என்பதும் விளங்கவில்லை. நாங்கள் சிங்களவர்கள், நீங்கள் தமிழர்கள் என்ற வித்தியாசங்களின் அடிப்படையில் ஒரு நாட்டில் வசிப்பவர்கள் என்று கூறுவீர்களென்றால் ஏற்றுக்கொள்ளலாம். நாம் இலங்கையர் என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் எம்மை உணரவைக்காதபடி, நீங்கள் 'இலங்கையர்' என்ற ஒருகுடைக்குள் தமிழர்களையும் இணையும்படி கேட்பது மிகுந்த வன்முறையல்லவா? ஒரு அரசியல்வாதி சொல்வது என்றால் கூடச் சகிக்கமுடியும். உங்களின் privilege உணர்ந்தபடி தமிழர்கள் மீது அக்கறையுள்ளவர் எனச் சொல்கின்றவர் இப்படி எப்படிச் சொல்லமுடிகிறதென வியக்கத்தான் முடிகிறது.

உங்களின் தமிழ்மாணவர் பற்றிய அக்கறை மீதோ அல்லது வன்முறையை எந்தவகையிலும் நியாயப்படுத்தக் கூடாது என்பதிலும் உங்களைப் போலவே எமக்கும் ஒத்த கருத்தேயுண்டு. ஆனால் அது நீங்கள் எழுதிய இந்தக் கட்டுரையில் தெளிவாக வெளிப்படவில்லை என்பதே என்னைப் போன்றவர்களின் வருத்தம்.

வன்முறை வேண்டாம் என்று இங்கே போதிக்கும் உங்களை விட எங்களுக்கு வன்முறையின் சகல வடிவங்களும் நன்கு தெரியும். அந்த 'வன்முறை'யினால் சமூகத்தில் எந்த கீழ்நிலைக்கும் போகமுடியும் என்று கடந்தகாலத்தில் நன்குணர்ந்த ஒரு சமூகம், ஏன் இன்னும் அந்த 'வன்முறை'யைக் கைவிடத் தயாராகவில்லை என்பதை நீங்கள் சற்று ஆழமாக யோசிக்கவேண்டும். அதே சமூகந்தான் ஒரேநாட்டில் வாழ்ந்தாலும் தமிழர் என்ற தனித்துவமான அடையாளத்தோடு வாழவிரும்புகின்றதே தவிர, இலங்கையர் என்ற அடையாளத்தில் சேர ஏன் விரும்புவதில்லை என்பது பற்றியும் ஒரு பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த, அதன் privilege உணர்ந்த நீங்கள் நிதானமாக யோசித்துப் பார்க்கவேண்டும்.

( July 19)