கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அன்னாவும், ஸோஃபியாவும், நம் வாசிப்புக்களும்...

Tuesday, September 23, 2014

1.
தஸ்தயேவ்ஸ்கியின் அன்னாவையும், டால்ஸ்டாயின் ஸோஃபியாவையும் புரிந்துகொள்வது என்பது மிகவும் சிக்கலானது. அதேபோன்று தஸதயேவ்ஸ்கியும், டால்ஸ்டாயும் மதிப்பிடும்போது அவர்கள் வாழ்ந்த காலத்தையும், அதன் பின்னணிகளையும் விளங்கிக் கொள்ளுதல் அவசியமாகும். படைப்பாளிகளைப் போல, அவர்களின் துணைகளினூடாக வரும் 'கதைகளும்'  வாசகர்களைச் சலனமடையச் செய்கின்றன. இவற்றில் பல படைப்பாளிகளுக்கு ஏற்கனவே இருக்கும் 'திருவுரு'க்களை மேலும் செதுக்குகின்றன. சில அவர்கள் மேல் ஏற்றப்பட்ட விம்பங்களைச் சிதைக்கவும் செய்கின்றன.

படைப்பாளிகள் நமது அகவுலகத்தில் தத்தம் படைப்புக்களினூடாக நெருக்கம் கொள்கின்றனர். அதேவேளை இந்த நெருக்கமானது, படைப்பின் உச்சத்தினூடாக நிகழ்த்திக்காட்டப்படுகின்றதே தவிர, ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்துகொள்வதனால் உண்டானதல்ல என்பதைப் பலர் மறந்தே போய்விடுகின்றனர். படைப்பாளி என்பவர் கூட, படைப்பின்போது வேறொரு மனிதராக மாறிவிடக்கூடியவராக இருப்பினும், பின்னர் நம்மைப் போன்ற சாதாரண மனிதராக வந்துவிடக்கூடிய ஒருவரே. ஆகவே அந்தப் படைப்பாளி சாதாரண மனிதர் செய்யக்கூடிய எல்லாத் தவறுகளையும் செய்யும்போதோ, தனது பிழைகளை அவர்  திருத்தத்தெரியாது திகைக்கும்போதோ, நாம் வேறொருவிதமான விம்பத்தை அவருக்குக் கொடுக்கக்கூடியவராக ஆகிவிடுகின்றோம்.

எவ்வகைக் கலையானாலும், படைப்பு மனம் ஒருவரை குழந்தையாகவோ, மனம் சிதறச்செய்கின்றதாகவோ அல்லது நாம் கற்பனை செய்து பார்க்கமுடியாத நிலைகளுக்கோ உருமாற்றம் செய்யவும்கூடும். ஆனால் படைப்பினூடாகத் தரிசிக்கும் அந்த நிலையிலேயே, நாம் படைப்பாளிகளைச் சந்திக்கும்போதோ அல்லது அவரது தனிப்பட்ட வாழ்க்கையை அறியும்போதோ இருக்கவேண்டும் என்றெதிர்ப்பார்ப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.


2.
'படைப்பை பார், படைப்பாளியைப் பாராதே'  என்பது எவ்வளவு முக்கியம் வாய்ந்த சொல்லாடல். ஆனால் நம் தமிழ்ச்சூழலில் அதை கேலிக்குரியதாக்கிய பெருமை, இதன் உண்மையான அர்த்தத்தை விளங்காதவர்களால் மட்டுமில்லை, இதை முன்னிலைப்படுத்திய சிலராலும் நிகழ்ந்திருக்கின்றது என்பதே அவலமானது.  'படைபைப் பார், படைப்பாளியைப் பாராதே' என்பது எழுதியவர் மற்றும் வாசிப்பவருக்கு ஒரு படைப்பை முன்வைத்து  எத்தகைய பெரும் சுதந்திரத்தைத் தருகின்றது என அநேகர் எண்ணிப் பார்ப்பதேயில்லை. படைப்பை எழுதியபின்னர், அது படைப்பாளிக்குச் சொந்தமில்லை. அதை முன்வைத்து எவ்வகையான வாசிப்பையும் வாசகர் செய்வதற்கான ஒரு வெளி திறந்துவிடப்படுகின்றது. வாசகர், தனக்குரிய வாசிப்பில் அந்தப் பிரதியை எவ்வகையாகவும் புரிந்துகொள்ளமுடியும். அதை படைப்பாளி, இது நானெழுதிய படைப்பு இப்படித்தான் விளங்கிக்கொள்ளவேண்டும் என்று எந்தவகையிலும் கட்டாயப்படுத்தமுடியாது. அவ்வாறு ஒரு படைப்பாளி தன் படைப்புக் குறித்து விளக்கந் தந்தாலும், அந்தப்படைப்பை எழுதியவர் என்றவகையில் உரிமைகோரி எதையும் கூறமுடியாது. அவரும் இன்னொரு வாசகராகவே கருத்துச் சொல்லமுடியும்.

உதாரணத்திற்கு ஜெயமோகன் 'அறம்' வரிசைக் கதைகள் எழுதியபோது, அழகாய் வளர்த்தெடுக்கப்படும் 'சோற்றுக்கணக்கு' கதையில் வரும் முஸ்லிம் பாத்திரத்திற்கு சாதியைத் திணித்திருக்கத் தேவையில்லை என என் வாசிப்பை முன்வைத்திருந்தேன். அதற்கு ஜெயமோகன் 'ஈழ எழுத்தாளருக்கு...' என்ற தலைப்பில் ஏன் சாதியை அங்கே தான் கொண்டுவருகின்றேன் என்பதற்கான விளக்கங்களோடு, வழமையாய் விரித்தெழுதும் அவரின் பழக்கத்தினால் 'சிங்களவர்களையே புரிந்துகொள்ளமுடியாத காழ்ப்புணர்வு கண்டவன்' என்பதுவரை என்னை இழுத்திருப்பார். இலக்கியம் சார்ந்து வரும் சர்ச்சைகளில் பிறரைச் சீண்டிப் பார்ப்பதும் ஒருவகை 'அறமே' என்பதால் அவை குறித்துக் குறையேதுமில்லை.

ஆனால் நான் ஜெயமோகன் தன் படைப்புக்குறித்துச் சொல்வதை அவரும் இந்தக்கதைகளின் ஒரு வாசகர் என்றவகையிலேயே பார்ப்பேனே தவிர, அவர் அந்தக் கதைகளை எழுதியவர் என்றவகையில் எந்த உரிமையும்  அவருக்குக் கொடுக்கப்போவதில்லை. அதாவது அவர் இந்தக்கதையை எழுதியவர் என்பதால், அவர் கூறும் பார்வையில்தான் இந்தக் கதையை வாசிக்கவேண்டும் என்கின்ற எந்த உரிமையும் அவருக்கு இல்லை என்பதையே மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

ஒரு புனைவை வாசிப்பதன் மூலம் ஒருவர் தனக்கான சொந்தப் பிரதியை உருவாக்கிக்கொள்ள முடியும். அந்தச் சுதந்திரத்தன்மையை படைப்பாளியால் கூட  மறுக்க முடியாது. அந்தவகையிலேயே திரைப்படங்களையும் நமக்கான பார்வையில் புரிந்துகொள்ள முடியும்.  ஒரு இயக்குநர் அறிந்தோ/அறியாமலே வைக்கும் காட்சிகளைக் கொண்டே, நாம் நம் பார்வையினால் வேறுபட்ட ஒரு படமாய் அதை வளர்த்தெடுக்க முடியும். இது ஜிகர்தண்டாவிற்கு எம்டிஎம் எழுதிய பார்வையிலும் பார்க்கலாம். ராஜன்குறையின் 'கதாநாயகனின் மரணம்' திரைப்படஞ் சம்பந்தமான தொகுப்பில் இன்னும் ஆழமாய் அவதானிக்கலாம்.

அது மட்டுமின்றி, 'நான் நீங்கள் நினைக்கும் அர்த்தங்களில் இவற்றையெல்லாம் எழுதவில்லை' என அண்மையில் காலச்சுவடில் வெளிவந்த அசோகமித்திரனின் குரலைத் தவிர்த்துவிட்டு, 'தண்ணீர்' நமது வாசிப்பில் ஒரு குறியீட்டு நாவலாய்த் தெரிந்தால் அப்படியே நாம் வாசித்தும்/வரித்தும் கொள்ளலாம். எம்.ஜி.சுரேஷ் பல்வேறு வகைமையான நாவல்களை எழுதுகின்றேன் என ஒவ்வொரு நாவல்களுக்கும் பின்னட்டைக் குறிப்பு எழுதி விளம்பரப்படுத்தியது எவ்வளவு அபத்தமோ, அவ்வாறே அசோகமிததிரன் தனது படைப்புக்களில் நீங்கள் நினைக்கும் வகையில் தான் எழுதவில்லை என்றவுடன் எமது வாசிப்புக்களைக் கைவிடுவதும் என்க.

ஆக தமிழ்ச்சூழலில் 'படைப்பைப் பார், படைப்பாளியைப் பார்க்காதே' என்பதோடு மேலதிகமாய் 'உங்களுக்கான பார்வையை உருவாக்கும்போது அதில் படைப்பாளி குறுக்கீடு செய்தால் கூட, உங்களுக்கான வாசிப்பை எந்தவகையிலும் கைவிடத்தேவையில்லை' என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறவேண்டியிருக்கின்றது.

சர்ச்சைகளும் சமாதானமும் இலக்கியத்தில் மூக்கும் சளியும் என்பதால், பின்னாளில் ஜெயமோகன் நானெழுதிய கதையிற்கு ஒரு குறிப்பு எழுதியிருப்பார். 'கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்?' என்ற தலைப்பை, 'விளையாட்டுக் கண்ணன் மீது பித்தான கோபிகை என்ற பொருளில் போடப்பட்டிருக்கும் தலைப்பும் அழகு' எனக் குறிப்பிடுவார். நான் கதையின் பாத்திரத்திற்கு 'கோபிகா' எனத் தெரிவு செய்ததற்கு என்னளவில் ஒரு காரணம் இருந்தாலும், அது ஜெயமோகன் கூறும் அர்த்தத்தில் அல்ல. ஆனால் நான் அதைக் குறிப்பிட்டு ஜெயமோகனின் வாசிப்பில் குறுக்கீடு செய்யமுடியாது. அவர் வாசிப்பில் உருவாக்கிய பிரதியிற்கு அப்படியொரு அர்த்தம் இருக்கும்போது அதில் நான் இடையீடு செய்து, இப்படித்தான் வாசிக்கவேண்டுமென கோருதல் ஒருவகை வன்முறை. படைப்பு எழுதி முடிந்தகணத்திலேயே 'படைப்பாளி இறந்துவிட்டார்'. இனி இருப்பது வாசிப்பவர்களின் பிரதி மட்டுமே.


3.
மீண்டும் படைப்பாளிகளின் துணைகளுக்கு வருகின்றேன். அன்னாவினதும், சோபியாவாவினதும் சுய அனுபவங்களினூடாக வரும் கதைகள் தஸ்தயேவ்ஸ்கியினதும், டால்ஸ்டாயினதும் திருவுருக்களை அசைத்துப் பார்க்கின்றன. ஆனால், நாம் மறந்தது என்னவெனில், நமக்குத் தெரிந்த தஸ்தயேவ்ஸ்கியும்,டால்ஸ்டாயும், கரம்ஸோவ் சகோதரர்கள், புத்துயிர்ப்பு, அன்னா கரினீனா, போரும் சமாதானமும், குற்றமும் தண்டனையும் போன்றவற்றினால் அறிமுகமானவர்களே தவிர, சாதாரண தனிப்பட்ட வாழ்வினால் அறிமுகமானவர்கள் அல்ல. உயர உயரப் பறந்தாலும், பறவைகள் நிலத்திற்கு என்றேனும் வந்தாக வேண்டும் என்பதுபோல, படைப்பு வெளியில் எங்கெங்கோ சுதந்திரமான அலைந்த மனிதர்களின் கால்கள் நிலத்தில் பாவும்போது நாம் கட்டிவைத்த விம்பங்கள் உடைதலும் இயல்பே.

கலைஞர்கள் பெரும்பாலானோர் வாழ்வு அப்படியொன்றும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருப்பதுமில்லை. துயரங்களும், தத்தளிப்புக்களும் இவற்றின் நீட்சியில் தம் சுயமழித்தலும் அநேகரின் வாழ்வில் இயல்பாயிருந்திருக்கின்றது. தஸ்தயேவ்ஸ்கியினதும், டால்ஸ்டாயினதும் மட்டுமில்லை, வேர்ஜீனியா வூல்ப்விலிருந்து சில்வியா பிளாத் என நீண்டு நம் தமிழ்ச்சூழலில் ஜி.நாகராஜன், ஆத்மநாம், சிவரமணி எனக் குறிப்பிடுவதற்கு நிறைய உதாரணங்களிருக்கின்றன. 

நாம் தஸ்தயேவ்ஸ்கியினதும், டால்ஸ்டாயினதும் தனிப்பட்ட வாழ்வை அவதானிப்பதாயின் அவர்களுக்குக் கிடைத்த துணைகளான சோபியாவும், அன்னாவும் இவர்கள் இருவரினதும் படைப்புக்களால் ஈர்க்கப்பட்டோ அல்லது இந்தப் படைப்புக்கள் மீது மதிப்பு வைத்தோ துணைகளானவர்கள். அவர்களினாலேயே இவ்வாறு ஒருவகையான விமர்சனம் வைக்கப்படுகின்றதென்றால், சிலவேளைகளில் சாதாரண 'லெளதீக' விடயங்களில் ஆசைப்படுகின்ற துணைகள் இவர்களுக்குக் கிடைத்திருந்தால் எவ்வாறிருந்திருக்கும் என யோசித்துப் பார்க்கவும் வேண்டியிருக்கின்றது. அவ்வாறு கிடைக்கும் துணைகளோடு போராடிப் போராடியே சிலவேளைகளில் தஸ்தயேவ்ஸ்கியினதோ, டால்ஸ்டாயினதோ சிறந்த படைப்புக்கள் எழுதப்படாது, நாம் இவற்றை இழந்திருக்கவும் கூடும்.

ஜெயமோகன் இப்போது வாஸந்தியிற்கு எழுதிய எதிர்வினையிலும்  நான் ஜெயமோகனோடு உடன்படுகின்ற புள்ளிகளே அதிகம் இருக்கின்றன. வாஸந்தியின் கட்டுரை மிக எளிமையாக ஒருவரை அடித்துத் துவைக்கவேண்டுமென்பதற்காய் எழுதியது என்பதை உடனேயே வாசித்துப் புரிந்துகொள்ளமுடியும். டால்ஸ்டாய் ஆன்மீகத்தைத் தேடியவர் எனினும் 80வயதிலும் உடலுறவு வைத்துக்கொண்டவர் என வாஸந்தி குறிப்பிடும்போதே 'ஆன்மீகத்தின்' எளிய புரிதலுக்கு அப்பால் வாஸந்தியால் நகரவே முடியவில்லை என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

ஆனால் ஜெயமோகனோடு பெரும்பாலும் உடன்படுகின்ற எனக்கும் கேள்விகளுண்டு. சோபியாவின் குரலும் கேட்கப்படவேண்டும் என்பதற்காய் வாஸந்தி டால்ஸ்டாயை கீழிறக்குவது போல, ஏன் ஜெயமோகனும் டால்ஸ்டாயை மேன்நிலையாக்கம் செய்வதற்காய் சோபியாவைக் கீழிறக்கவேண்டும் என்பதே. டால்ஸ்டாய் தன்னளவில் தனித்து நிற்கமுடிவதுபோல,  வெவ்வேறு தளங்களாய் இருந்தாலும், சோபியாவும் தன்னளவில் தனித்து நிற்கக்கூடிய ஒருவரே என்பதை ஏன் மறுதலிக்கவேண்டும். சிலவேளை ஒரு பெண்ணுக்குரிய/தாய்க்குரிய 'கடமை'களைச் செய்ய வேண்டிய அவசியமோ, டால்ஸ்டாயோடு வாழவோ வேண்டியிராத சந்தர்ப்பத்திலோ, சோபியா ஒரு தனிப்பட்ட ஆளுமையாக உயர்ந்திருக்கலாம் என்பதை ஏன் நாம் மறுக்கவேண்டும்?

நாம் ஒருபோதும் டால்ஸ்டாயினதோ, தஸ்தயேவ்ஸ்கியினதோ படைப்புக்களையோ (படைப்புக்கள் என்ற சமதளத்தில் இருந்தபோது கூட) ஒப்பிட்டு ஒன்றையொன்று கீழிறக்குவதில்லை. அவையவை தம்மளவில் தனித்துவமானவை என்று எடுத்துக்கொண்டே, விமர்சனங்கள் இருந்தாலும் அந்தப் பிரதியிற்குள் நின்றே கருத்துக்களை முன்வைக்கின்றோம். அதேபோன்று டால்ஸ்டாயையும், சோபியாவையும் ஒரே தராசில் வைத்து நாம் ஒப்பிடத்தேவையில்லை அல்லது ஒருவரைத் தாழ்த்துவதன் மூலம் இன்னொருவரை உயர்த்தத் தேவையில்லை.

இப்படியும் யோசித்துப் பார்க்கலாம். காலங்காலமாய் சோபியா, அன்னா என படைப்பாளிகளுக்கு உரிய துணைகளாக எத்தனையோ பெண்கள் இருந்திருக்கின்றனர். ஆனால் இவ்வாறு டால்ஸ்டாய் போலவோ, தஸ்தயேவ்ஸ்கி போலவோ, எழுத விரும்பும் பெண்களுக்கு  எத்தனை ஆண்கள் உறுதுணையாக இருந்திருக்கின்றோம் என எண்ணிப் பார்த்திருக்கின்றோமா? இத்தனைக்கும் பெண் படைப்பாளிகள் சமூகம் 'பெண்'ணிற்கு எனக் கூறப்படும் 'கடமை'களைச் செய்யவேண்டிய் அழுத்தத்தின் மேல் நின்றே எழுதுகின்றார்கள். மேலும், குடும்பமாகி குழந்தைகள் பெறும்போது தாய்மை எனும் பெருஞ்சுமையை விரும்பியோ/விரும்பாமலோ ஏற்றுக்கொண்டே எழுதவும் வேண்டியிருக்கின்றது. அதுவும் சில நூற்றாண்டுகள் முந்திய காலத்தில் நிறையக் குழந்தைகளைப் பெற்றும், அவை இடைநடுவில் இறக்கவும் பார்த்துக்கொண்டிருந்த சோபியாவினதும், அன்னாவினதும் அகவுலகங்களையும் விளங்கிக்கொண்டே, அவர்கள் தஸ்தயேவ்ஸ்கி மீதோ, டால்ஸ்டாய் மீதோ வைக்கும் விமர்சனங்களையும் பார்க்கவேண்டியிருக்கின்றது.

எங்களுக்கு தாஸ்தயேவ்ஸ்கி மீதும் டால்ஸ்டாய் மீதும் அளப்பரிய காதல் இருக்கலாம். ஆனால் அதற்காய் சோபியாவினதும் அன்னாவினதும் குரல்களை முற்றாக உதறித்தள்ளிவிட்டுத்தான் இவர்களை நேசிக்கவேண்டும் என்கின்ற எந்த அவசியமுமில்லை.

இந்த வாழ்வையும் மனிதர்களையும் ஆழமாய் நேசிக்கக் கற்றுத்தரும் டால்ஸ்டாயையும், தஸ்தயேவ்ஸ்கியும், தமது துணைகளின் குரல்கள் -அவர்களை மதிப்பிறக்கும் தொனியாக இருந்தாலும் கூட- அதையும் நிதானமாய்க் கேட்க வேண்டும் என்பதையுந்தானே சொல்லித்தரப் பிரியப்பட்டிருப்பார்கள்.
................

(2014)

பிரிய அடேல்

Thursday, September 18, 2014

நீ அந்தப் பெருமரத்தின் அருகிலிருக்கும் பெஞ்சில் உட்கார்ந்திருந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிகிறது. சூரிய ஒளி பிரகாசமாகத் தெறிக்கிறது. இலைகள் சிறகுகள் விரித்த சிறுபறவைகள் போல உதிர்ந்து கொண்டிருக்கின்றன. இயற்கையின் அழகோடு ஒன்றிக்க முடியாமல் நீ உன் உணர்ச்சிகளோடு போராடிக் கொண்டிருக்கிறாய். உனதிந்த அப்பாவித்தனத்தை ஏன் காலம் இவ்வளவு விரைவாகப் பறித்துப் போகிறது.  அவ்வளவு எளிதில் எவரையும் கடந்துவிடச் செய்யாத உனது அழகான விழிகளில் ஏன் இவ்வளவு துயரம் ததும்பிக் கிடக்கிறது.

அடேல், உனது அடையாளங்களைத் தேடியலைந்த பதின்மவாழ்க்கையை நீ மட்டுமில்லை, நாமெல்லோருமே வளர்ந்துவிடும்போது தொலைத்து விடுகிறோம் அல்லவா? உனது அவ்வளவு சீர்செய்யப்படாத கேசமென்பது கூட நீ யாரென்பதை அடையாளப்படுத்துகிற ஓரு விடயமில்லையா? நீ பாடசாலை அமைப்பை வெறுத்தபடி, ஆனால் நிறையக் கற்றுக்கொள்வதற்கு அதைத் தவிர வேறெந்த சிறந்த அமைப்புமில்லை என்பதையும் புரிந்து வைத்திருக்கிறாய். உனக்கிருக்கும் ஆகப்பெரும் கனவு, சிறு பிள்ளைகளுக்கு ஆசிரியராக ஆவது அல்லவா? பாடசாலை அமைப்பின் அபத்தத்தை நன்குணர்ந்த உன்னிடம் கற்கும் பிள்ளைகளுக்கு அழகான ஓர் உலகை கையளிப்பாய் என்றெழும் நம்பிக்கையில், உன் கரங்களை மிருதுவாய்ப் பற்றவேண்டும் போலத் தோன்றுகிறது.

ம் எல்லோரினதும் - முக்கியமாய் பதின்மவயதுகளில்- மிகப்பெரும் மூச்சுத்திணறல் என்னவென்றால் எமது அடையாளம் எது என்பது. மேலும் இயல்பாய் எழும் பாலியல் சார்ந்து, எந்த அடையாளத்திற்குள் எம்மை நிலை நிறுத்துவது என்பதும் கூட. பதிமன்ங்களில் எதிர்ப்பால் ஈர்ப்பென்பதே சிக்கலான ஓன்றாகப் பார்க்கப்படும்போது, தற்பால் உறவோ, இருபால் உறவோ இயல்பாய் ஏற்றுக்கொள்வதற்கு இன்னும் எவ்வளவு நீண்ட தூரம் பயணிக்கவேண்டியிருக்கிறது.

ஆண்களை எளிதாய் வசீகரிக்ககூடியவளாய் இருந்தாலும், உனக்கு எதிர்ப்பால் உறவு பொருத்தமானதில்லையென உணர்கிறாய். உன்னுடலைப் பரிசோதனைக் களமாய் அதற்காய் திறந்து வைத்துதும் அதை எளிதாய்ப் புரிந்துகொள்கிறாய். உனக்கான பாலியல்பு சார்ந்து நீ தேடலைத் தொடர்கிறாய். உன்னை விட வயது கூடிய எம்மாவைக் கண்டுகொள்கிறாய். உங்களின் உக்கிரமான காமம் எல்லோரையும் சரசரவென்று பற்ற வைத்துக்கொள்ளக் கூடியது. எம்மா ஓரு ஓவியையாக இருந்தும், அவளது நட்புகள் மிக உயர்ந்த அறிவுஜீவி மட்டத்தில் இருந்தபோதும், நீ அவளின் உயர்வில் உன் மகிழ்ச்சியைக் காண்கிறாய். எம்மாவினதும், அவளின் நட்புக்களினதும் அறிவார்ந்த உரையாடல்கள் உனக்கு அலுப்பைத் தருகின்றன. நீ அதை விரும்பி ஏற்றுக்கொண்டவளில்லை; அது உனக்குரியதல்ல எனவும் கண்டுகொள்கிறாய். எனினும் இவையெல்லாம்  எம்மாவின் மீதிருக்கும் காதலிற்கும் காமத்திற்கும் முன் ஒரு பொருட்டேயல்ல என்பதையும் நீ நன்குணர்ர்ந்தவள்.

எம்மா, உன் தொழில் சார்ந்தில்லாது வேறு விடயங்களிலும் உன்னைக் கவனஞ் செலுத்தச் சொல்கிறாள். உனக்குரிய வாசிக்கும், எழுதும் திறமையைக் கண்டு, கதைகளை எழுதச் சொல்கிறாள். நீயோ அவை என் அந்தரங்திற்குரியது என்கிறாய். என்றாலும் எம்மாவின் மீதிருக்கும் நேசத்தினால், எழுத முயற்சிக்கின்றேன் என்கிறாய்.

உனது உலகும் கனவுகளும் எளிமையானது. எம்மாவோடு மனது நிறையக் காதல் செய்வது. சிறுவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியை ஒருவராக ஆவது.

எந்தக் கணத்தில் உனக்கும் எம்மாவிற்கும் இடையில் விரிசல் வந்ததெனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. எம்மா வீட்டிற்கு வரத் தாமதமாகும் பொழுதுகளில் தனிமை உன்னை இராட்சத நிழலாகச் சூழகிறது. யாரெனும் ஓருவர் உனக்கு மனம் விட்டுப் பேச, வெறுமையை விரட்டத் தேவையாயிருக்கிறது. உனது சக ஆண் ஆசிரியரோடு பொழுதுகளைக் கழிக்கிறாய். அது சிலவேளைகளில் உடல் சார்ந்து பகிரும் பொழுதுகளாகவும் ஆகிவிடுகின்றன. நீ உன் தனிமையை விரட்ட உன்னுடலை மீண்டும் பரிசோதனைக் கள்மாக்கிறாய். அது முற்றுமுழுதான பகிரல் இல்லை என்பதும், ஆணுடலால் உனக்கு விரும்பிய நிறைவு கிடைக்காதென்பதும் நீயறிவாய். ஆனால் உனக்கு வேறு வழிகளேயில்லை. எனெனில் நீ தனிமையை இன்னொரு துணையாக உன் பதின்மங்களிலிருந்தே தேர்ந்தெடுத்தவள்.

எம்மா, உனது இருபால் உறவைக் கண்டுகொள்கிறாள். கோபம் மிகக் கொண்டு உன்னை வீட்டிலிருந்து வெளியே போகச் சொல்கிறாள். 'நான் என் தனிமையின் பொருட்டு தவறுகள் செய்துவிட்டேன், என்னை மன்னி...என் காதல் என்பது எப்போதும் உன்னோடு'தான் எனக் கெஞ்சுகிறாய். 'என்னை வெளியே போகச் சொல்லாதே, என்னால் உன்னை விட்டும் எங்கும் போகமுடியாது' எனவும் மன்றாடுகிறாய். ஆனால் எல்லா மன்னிப்புக்கோரல்களும் காற்றில் கரைந்து போகின்றன. நீ வழியற்றவளாய் வெளியே துரத்தப்படுகிறாய்.

ப்போது வருடங்கள் பல கழிந்துவிட்டன. நீ விரும்பியமாதிரி ஆசிரியையாகியும் விட்டாய். இன்னமும் தனித்தே இருக்கிறாய். இடையில் சில உறவுகள்/நட்புகள் வாய்த்தாலும் எதுவும் எம்மாவுடன் வாய்த்ததைப் போல காமமும் காதலும் நிறைந்ததாய் இல்லை.. எனவே அவர்களோடு தொடர்ந்து வாழ்வில் பயணிக்கத் தயங்கி எல்லோரையும் இடைநடுவிலேயே வெட்டியும் விடுகிறாய். வழமை போல நீ விரும்பியோ/விரும்பாமலோ தனிமை உன்னை மீண்டும் நெருக்கமானதாய்த் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.

நீண்டகாலப் பிரிவின் பின், ஒருமுறை எம்மாவைச் சந்திக்கிறாய். எம்மா இப்போது வேறொரு தளத்தில் இருக்கிறாள். அவளுக்கென்று துணையும், குடும்பமும் வாய்த்துவிட்டன.

உன்னிடம் இப்போதும் அதே அப்பாவித்தனமும், கடந்த காலத்தை அப்படியே நிகழ்காலத்திற்கு இழுத்துக் கட்டிக்கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையுமிருக்கிறது.

காதலும், காமமும் பொங்கி வழிகிறது. 'நீதான் எனது எல்லாம்' என எம்மாவிடம் சொல்லப் பிரியப்படுகிறாய். அதை ஒருவகையில் எம்மாவிற்கு உணர்த்தவும் செய்கிறாய். ஆனால் எம்மா தனக்கு ஏற்கனவே ஒரு குடும்பமிருப்பதை நினைவுபடுத்துகிறாள். என்றாலும், என் வாழ்வில் உன்னோடிருந்த காலங்களை என்றைக்குமாய் மறக்கமுடியாது, அவ்வளவு இனிமையானது' எனக் கூறி எம்மா உன்னிடமிருந்து என்றென்றைக்குமாய் விடைபெறுகிறாள்.

நீ பதின்மத்திலிருந்த அதே பெண்தான். விழிகள் முழுதும் கண்ணீர் ததும்பி வழிகிறது. அழுவதைத் தவிர இந்த குரூர உலகிலிருந்து தப்புவதற்கு  வழிகள் எதுவுமேயில்லையென மழை பெய்தால் போல அழுகிறாய். உன் கண்ணீர்த்துளிகள் நம் எல்லோரினதும் நெஞ்சை நிரப்பி விடுகின்றன. இரவுகளுக்கெல்லாம் இன்னும் கனம் கூடிவிடுகின்றன. இவ்வளவு வெகுளியான பெண்ணிற்கு அவள் விரும்பியமாதிரியான ஒரு வாழ்க்கை கிடைக்க விடாத காலத்தின் மீது நமக்கும் கோபம் வருகிறது.

பிரிய அடேல், துயரத்தின் நிமித்தம் நடுங்கும் கரங்களோடு நீ பற்ற வைக்கும் சிகரெட்டுக்களைப் போலத்தான் நம் பலரின் வாழ்வும் தினமும் அந்தரத்தில் மிதந்துகொண்டிருக்கின்றன. அளவிறநது பொங்கும் நேசத்தை, நாம் பிரியம் வைக்கும் மனிதர்கள் மீது அப்படியே காட்ட முடியாது தடுக்கும் கண்ணுக்குப் புலப்படாத சக்திகள்தான் என்ன? எல்லா அவமானங்களையும் தாண்டி, சந்தித்த தலைக்குனிதல்களையும் மீறி நீ யாசித்தது, மிக எளிமையான ஓரேயொரு விடயம், காதல் மட்டுமே. ஆனால் அதுவே உனக்கு விரும்பியமாதிரி கையளிக்கபடாது போனதுதான் எவ்வளவு துயரமானது. அது மட்டுமின்றி, உனது தவறுகளைக் கூட மன்னிக்க எம்மாவினால் முடியாதபோது, எல்லாவற்றின்மீது சாபம் போடவே மனது விரும்புகிறது.

அடேல் நீ இப்போதும் அந்தப் பெருமரத்தின் பெஞ்சில், உடலைக் குறுக்கிப் படுத்துக்கொண்டு பரந்த வானத்தை வெறித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் நான் உனக்கு உதிருமிலைகளை அல்ல, வசந்தகாலத்துப் பசிய இலைகளையும் வர்ணமயமான பூக்களையுமே பிரியங்களோடு தரவிரும்புகிறேன்.

உன் கண்ணீரின் அர்த்தம் விளங்கியவர்கள் இந்த உலகில் இல்லாமலா போய்விடுவார்கள். ஒழுங்காய் வாராப்படாது, தான்தோன்றித்தனமாய் விடப்படும் உன் கேசத்தை அழகெனவும், அதில் தன் முகம் புதைக்கவும் ஒருவர் வருவதை யாரால்தான் தடுக்கமுடியும்?

எவ்வாறாயினும் உன்னில் இருக்கும் அப்பாவித்தனத்தை என்றென்றைக்குமாய் கைவிட்டுவிடாதே. மேலும் செய்த தவறுகள் குறித்தும் அதிகம் கவலைப்படாதே. கடந்துபோனவை கடந்தவைதானல்ல்வா? நம்மால் என்னதான் இனிச் செய்யமுடியும்?  மேலும், நமது தவறுகளே நாம் ஓரிடத்தில் தேங்கியிருக்கவில்லை என்பதை இன்னொருவிதமாய் நமக்கு நிரூபிப்பவை. எனவே பிறர் உன்னை மன்னிக்க மறுத்தாலும் உன்னை நீயே மன்னிக்கக் பழகிக்கொள்.அது போதும்.

கதகதப்பான நிறமென நீலத்தைப் பெயரிட்டுக்கொள்ளலாம்.. ஆனால் வாழ்க்கை என்பது வர்ணங்கள் பலவின் கூட்டுக்கலவையினால் உருவாவது.

சாம்பல் வர்ணத்தை (உன்) அப்பாவித்தனத்தின் நிறமாய் நான் பெயரிட்டுக்கொள்கிறேன்.

ஆம், சாம்பல் வெகுளித்தனத்தின் வர்ணம் என்பேன்.


(Jul 09,2014)
('Blue is the warmest colour' திரைப்படம் பார்த்த பாதிப்பிலெழுதியது)

(நன்றி: 'எனில்' இணைய சஞ்சிகை)

'அம்ருதா' இதழில் வந்தவை...

Tuesday, September 16, 2014

கனவுகளைக் கனவுகள் எனவும் சொல்லலாம்

மார்க‌ழியின் மாலையொன்றில
ச‌ந்தித்த‌போது அது எதுவாக இருந்த‌தென்ப‌து
நினைவினிலில்லை;
கெதியாய் இருள்மூடி ப‌னிபொழிந்த‌ மூன்று ம‌ணியாக‌
இருந்திருக்கூடுமென்றபோது....
நான் - நினைவூட்ட‌லின் வ‌ன்முறை குறித்தும்
நீ - நினைவில் வைத்திருக்க‌வேண்டிய‌ வ‌ர‌லாற்றின் அவ‌சிய‌ம் ப‌ற்றியும்
விவாதித்த‌ப‌டி ப‌னிமூடிய‌ குளிராடையைத் த‌ள‌ர்த்திய‌ப‌டியிருந்தோம்
இக்க‌ண‌த்தை நினைவில் வைத்திருப்ப‌தைப் போன்று
முன்னே பின்னே நக‌ர்ந்த‌ ந‌க‌ரும் கால‌த்தை
நினைவு நூல‌க‌த்தின் அக‌ர‌வ‌ரிசையில் தேடியெடுக்க‌
ஏன் எவ‌ரும் துல்லிய‌மாக‌ எழுத‌வைக்க‌வில்லையென்ற‌ப‌டி
தேநீருட‌ன் சான்ட்விட்சுக்கான‌ காய்க‌ளை வெட்ட‌த்தொட‌ங்கினோம்

இன்ன‌வின்ன‌ வேலைக‌ளை இவ‌ரிவ‌ர் செய்ய‌வேண்டுமென்ற‌
எந்த‌க்க‌ட்ட‌ளையையும் ம‌வுன‌ம் க‌ற்பிக்காத‌தை
ந‌ம‌க்குரிய‌ நேச‌மென‌ப் பெய‌ரிட்ட‌ழைக்க‌லாம்
அன்றைய‌ இர‌வுண‌விற்கான‌ கோழியை வெட்டி
Ovenக்குள் வேகவைத்த‌ பொழுதிற்கிடையில்
*ஒற்ற‌னில் அமெரிக்கா வ‌ந்த‌ கதைசொல்லியின் அனுப‌வ‌த்தையும்
இறுதியின் எல்லோரையும் என்றென்றைக்குமாய் பிரிந்துபோகும்
அவ‌னின் மெல்லிய‌ துய‌ரையும் ப‌கிர்ந்த‌போது
ப‌னியைப்போல‌ நான் உருக‌க்கூடிய‌வ‌னாக‌யிருந்தேன்
நீராயென் வெறுமைக‌ளை நீ நிர‌ப்ப‌க்கூடிய‌வ‌ளாயிருந்தாய்

கால‌மெனும் நான்காவ‌து ப‌ரிமாண‌ம்
தெப்ப‌மாய் மித‌க்க‌த் தொட‌ங்கிய‌போது
நாம் எம‌க்கான‌ துடுப்புக்க‌ளைத் த‌வ‌ற‌விட்டு
ந‌தி வ‌ற்றுமென‌க் காத்திருந்தோம்
இப்போது குளிராடையைத் த‌ள‌ர்த்துவ‌த‌ற்கோ
கையுறையைக் க‌ழ‌ற்றி விர‌ல்க‌ளைக் கோர்ப்ப‌த‌ற்கோ நேர‌மின்றி
ந‌ம‌க்கான‌ க‌ன‌வுக‌ளுக்குள் த‌னித்து நீந்துவ‌தைத்த‌விர‌ வேறு வ‌ழியில்லை
மார்க‌ழி மாலையொன்றில் நாம் ச‌ந்திந்த‌போது
அது எதுவாக‌ இருந்த‌தோ அது இப்போதும் அவ்வாறே இருக்க‌வும்கூடும்
நாம்தான் எதுவெதுவாக‌வோ மாறிவிட்டோம் என்ப‌தைத் த‌விர‌.

* அசோக‌மித்திர‌ன் எழுதிய‌ நாவ‌ல்
--------------------------------------

பறக்கும் நூலகம்

குளிர்காலத்தில்
புத்தகசாலைக்குள் நுழையும் நீங்கள்
பக்கங்களில் தன்னைத் தொலைத்த
வெளிர்நீல ஆடையணிந்த ஒருத்தியைக் காணக்கூடும்
அவளின் கவனத்தை ஈர்த்தொரு புன்னகையைப்பெறும்
முயற்சியில் தோற்றுக்கொண்டிருக்கையில்
சலிப்பில் ஏதேனுமொரு சஞ்சிகையைப் புரட்டிக்கொண்டு
வெளியில் பொழியும் கடும்பனியைத் திட்டுவதுபோல
உங்களை நீங்களே நிதானமாய் நிர்வாணமாக்கவும் முடியும்

புத்தகக்கடையில் வேலை செய்யும் ஆணை/பெண்ணை
மோகித்துக்கொண்டிருப்பவள்/ன்
பலநூறு புத்தகங்களை
ஒரேநேரத்தில் வாசித்துவிடுபவனாய்/ளாய் இருக்கலாம்

தொடைகளுக்குள் பறக்கத்துடிக்கும் வண்ணத்துப்பூச்சியை
மறைத்து வைத்திருந்தவளின் உச்சந்தலையில்
ஆரம்பிக்கும் முத்தத்திலிருந்து
மலரத்தொடங்குகின்றது
வாசிக்கமுடியா வர்ணங்களில் கனவுகளின் நூலகம்.
-----------------------

வாதை

மூச்சுவிடமுடியாது நீருக்குள் அமிழ்ந்ததுபோல
கழுத்தை நெருக்கும் சுருக்குக் கயிறாய்
வார்த்தைகள் வார்த்தைகள்

ஒவ்வொருவரின் நியாயங்களும்
அழகாய்த்தானிருக்கின்றன
தவறுகளேயிருப்பதேயில்லை

கமபளிப்போர்வைக்குள்
வெப்பந்தேடி அலைந்துழல்கையில்
கால்விரல்களில் படியும்
பிரிவின் வாதைகள்

எல்லாவற்றையும் செரிக்க
எல்லோரையும் நேசிக்க
இப்பனிக்காலம் கற்றுத்தருவதைப்போல
போகாதேயென்று
ஒரு வார்த்தையால் தடுத்து நிறுத்தியிருக்கலாம்

வாசிப்பு
என்னை மோசமாய்த் தோற்கடிக்கும் காலத்தில்
நீ விட்டுச்சென்ற
கண்ணீர்த்துளியில் சுருக்கிட்டு
தற்கொலை செய்வேன்.

(நன்றி: 'அம்ருதா' - மே மாத இதழ்)

எருக்கம்பூ குறிப்புகள்

Friday, September 12, 2014

பகிர்ந்தமையிற்கு நன்றி (Thanks for Sharing)  

நாம் வாழ்க்கையில் எதற்கோ நம்மையறியாமல் அடிமையாகிவிடுகின்றோம். ஆனால் அந்தப் போதையிலிருந்து (addiction) வெளிவருதல், சிலவேளைகளில் நாம் விரும்பினால் கூட அவ்வளவு எளிதாக நிகழ்ந்து விடுவதில்லை. மதுவருந்தல், போதைப்பொருள் பாவித்தல் போன்றவற்றை துருத்திக்கொண்டு தெரியும் போதையான விடயங்கள் என்றாலும், தமிழ்ச் சமூகத்தில் அரசியல் பேசுவதில் கூட பலருக்கு ஒருவகை addiction இருக்கிறதென நினைப்பதுண்டு.

'பகிர்ந்தமையிற்கு நன்றி' என்கின்ற இத்திரைப்படம் பாலுறவிற்குப் போதையாகின்றவர்களைப் பின் தொடர்ந்து பார்க்கின்றது. இவ்வாறு பாலுறவிற்குப் போதையாகின்றவர்கள், தமது நிலைமை விளங்கி தமது கதைகளைக் கூறி போதையிலிருந்து விடுபடுவதற்கான கவுன்சிலிங் பெறுகின்றார்கள். ஒருவர் பாலுறவில் அதீத நாட்டங்காரணமாய் தான் வேலை செய்யும் வைத்தியசாலை மருத்துவரையே இரகசியமாக விடீயோ எடுத்து மாட்டுப்படுகிறார். இன்னொருவர் பாலியல் சார்ந்து எல்லாப் போதையிலிருந்தும், ஐந்து வருடங்களாக விலகி இவ்வாறான போதையிலிருப்பவர்க்கு ஆலோசனை வழங்கி உதவியும் புரிகின்றார்.

ஆனால் இவ்வகையான போதையிலிருந்து விலகினாலும் அது எப்போதும் மீண்டும் பற்றக்கூடிய தீயைப் போல ஐந்து வருடங்களாக ஒழுங்காக இருந்தவரும் மீண்டும் பாலின்பப் போதையிற்கு அடிமையாகின்றார். வாழ்வில் அடுத்த காலடியென நினைத்து காதலில் விழும்போது, இவ்வாறான பாலியல் போதையிற்கு அடிமையானவர்களை காதலிப்பவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதால் முதலில் ஒளிக்கிறார். பிறகு ஒருகட்டத்தில் உண்மையைப் பேசும்போது காதலி -புற்றுநோயால் மார்பகத்தை இழந்த cancer survivor என்றாலும்- இந்தப் போதை விடயத்தை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாதிருக்கின்றது.

எல்லோருடைய வாழ்வும் மீண்டும் தலைகீழாகிறது. ஆனால் இவ்வாறான போதையிற்கு அடிமையானவர்கள் தாங்களாகவே ஒரு சிறு சமூகமாய் இருந்து பிரச்சினைகளில் மாட்டுப்படுபவர்களுக்கு மாறி மாறி உதவி செய்கின்றனர். வெளிச்சமூகம் அவர்களைப் புரிந்து கொள்ள மறுத்தாலும் இச்சிறு சமூகம் அவர்களைத் தாங்கிக்கொள்கிறது/புரிந்துகொள்கின்றது. அவர்களின் வாழ்வு இவ்வாறான ஒரு குறுகிய வட்டத்தில் தொடர்ந்து நகர்ந்து போகின்றது.

இந்தப் படம் அவ்வளவு சிறப்பான படம் என்றில்லாதுவிட்டாலும், போதையிற்கு அடிமையாகின்றவர்களைப் பற்றியும் அவர்களின் நாளாந்த வாழ்க்கை பற்றியும் யோசிக்க வைக்கிறது. அவர்கன் போதையின் அடிமையிலிருந்து மீண்டு வரும்போது கூட, இந்தப் பொதுச்சமூகம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றது என்பதையும் கவனப்படுத்துகிறது.

தவறுகள் செய்யாத வாழ்க்கையென்பது நம் எவருக்கும் வாய்த்துவிடுவதில்லை. நாமறிந்தோ அல்லது அறியாமலோ செய்யும் தவறுகளுக்கே நாம் எப்போதும் மன்னிப்பை யாசிப்பவர்களாக இருக்கின்றோம். அவ்வாறு மன்னிப்புக்களை எதிர்பார்க்கும் நாம் இவ்வாறான போதைகளிற்கு அடிமையானவர்களையும் சற்று அரவணைத்துக்கொள்ளலாம். ஆகக்குறைந்து அவர்களும் நம்மைப் போன்று ஒரு இயல்புவாழ்க்கையைத்தான் யாசித்துக்கொண்டிருப்பார்கள் என்பதையாவது, அவர்களைக் கேலி செய்யாது நம் மனதில் இருத்திக்கொள்ளலாம்


ராஜீவ்காந்தி சாலை

ளவிற்கு அதிகமான பரபரப்புக்களும், விளம்பரங்களும் ஒரு படைப்பிற்கோ/படைப்பாளியிற்கோ எத்தகைய மேலதிக மதிப்பையும் வழங்கிவிடாது என்றும் நம்பும் ஒருவன் நான். 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் வெளிவந்தபோது, நாவலின் உள்ளடக்கம் குறித்து எதுவும் அதிகம் பேசாமலே அதற்கு வழங்கப்பட்ட 'வெளிச்சம்' , அந்நாவலை வாசித்துப் பார்ப்பதற்குத் தயக்கத்தைத் தந்திருந்ததால் -சில மாதங்களுக்கு முன்னும் விற்பனையிற்கு இருந்தபோதும்- அதை வாங்காமல் நகர்ந்திருக்கின்றேன்.

இப்போது அதை ஆறுதலாக வாசித்துப் பார்க்கையில், விநாயகமுருகனின் முதலாவது நாவல் என்றவகையில் கவனிக்கப்படவேண்டிய ஒரு நாவலாகவே தோன்றுகின்றது. நவீன காலத்தின் சிதறிய மனங்களை தகவல் தொழில்நுட்பப் பின்னணியில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும், அந்த 'வளர்ச்சி'யில் உள்ளும் புறமும் தொடர்புபட்ட மனிதர்களின் வாழ்வு பதியப்பட்டிருக்கின்றது.

இன்றைய தகவல் தொழில்நுட்பம் உலகையே உள்ளங்கையில் கொண்டுவந்திருக்கின்றது போன்ற பாவனையைத் தந்தாலும், மனித வாழ்வை இன்னுமின்னும் சிக்கலாக்கி, பல நூறு சில்லுகளாய் மனங்களை உடைத்து, ஒவ்வொருரையும் தனித்தனித் தீவுகளாகவே பெரும்பாலும் ஆக்கியிருக்கின்றது. இந்நாவலும் ஐரி(/டி) துறையில் உச்சத்திலிருப்பவர்களிலிருந்து, இதற்காய் நிலங்களை இழந்து சேரியில் வாழும் மனிதர்கள் வரை எல்லோரையும் ஊடுருவிப் பார்க்கின்றது.

பணத்திற்காகவும், அதன் நிமித்தம் வரும் வசதிகளுக்க்காகவும் பெரும்பான்மையான மனிதர்கள் இந்நாவலில் ஓடிக் கொண்டேயிருக்கின்றார்கள். அவர்கள் விரும்பிய சிலவற்றை அடைந்தபின்னும் இன்னுமின்னும் ஆசைகள் பெருகப் பெருக எதெதெற்கோ தொடர்ந்தும் அலைந்துகொண்டேயிருக்கின்றார்கள். இலட்சங்களில் உழைத்தால் கூட, இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு எதையும்/எவரையும் திருப்திப்படுத்தமுடியாதென இன்னுமின்னும் தேடப்போய் தங்களைத் தொலைத்தும் கொள்கிறார்கள்.

மனிதர்கள் மனம் பிறழ்கிறார்கள், சுமூகமான உறவுகள் சிதைகின்றன, மாடிகளிலிருந்து குதித்து அடிக்கடி தற்கொலை செய்கின்றனர். வெளிநாட்டு நிறுவனங்களுக்காய்ச் செய்யும் ஒவ்வொரு ப்ரஜெக்ட்டைப் போல, இவ்வாறாக இறந்துபோகும் மனிதர்களையும் எளிதில் மறந்துவிட்டு அடுத்து என்னவென அலைபாய்கின்றார்கள்.எந்த நேரத்திலும் சிதையும் மனோநிலையுள்ள மனிதர்களாய் தாங்களும் ஆகிவிடக்கூடும் என்ற நினைப்பை ஒத்திவைத்துவிட்டு வேலைக்குள் இன்னும் மூழ்குகிறார்கள்.

ஐரி நிறுவனங்கள் பற்றி அவ்வளவு பரிட்சயமில்லாதவர்களுக்கு இவ்வளவு இருட்டு நிறைந்த உலகமா அது என இந்நாவலை வாசிக்கும் ஒருவரை அச்சமூட்டக்கூடும். ஆனால் இன்றைய மெய்நிகர் உலகில் இந்நாவலில் குறிப்பிடுபவை எங்கேயும் எந்தச் சூழலிலும் நடைபெறுபவையே/நடைபெறக்கூடியவையே.

இந்நாவலிற்குள் இருக்கும் பெரும் பலவீனம் என்னவென்றால். நாவலின் எந்தக் கதாபாத்திரங்களுக்குள்ளும் ஆழமாய் இறங்கிச் செய்யவில்லை என்பதே. நாவல் முழுதும் தொடர்ந்து வரும் ப்ரணவ் செய்யும் தற்கொலை கூட ஏன் மனதை அவ்வளவாய்ப் பாதிக்கவில்லை என்று யோசிக்கவேண்டியிருக்கிறது. ஐரி துறையில் நீண்டகாலம் இருக்கும் பிரணவிற்கு ஆகக்குறைந்தது அது இயங்கும் சூழல் தெரியும் என நாவலில் தெளிவாகக் கூறப்படும்போது, சடுதியாக வேலையிழத்தலோ அல்லது மனைவியின் பிற ஆண் மீதான உறவோ , இவ்வாறான ஒரு முடிவை எடுக்க வழிவகுக்கச் செய்யுமா என்கின்ற சந்தேகம் வாசிப்பவருக்கு வரக்கூடும்.

அதுபோலவே தற்கொலை செய்யும் இரண்டு (காதல்?) சோடிகளின் தற்கொலைகளும் இருக்கின்றன. கணவன் இருக்கின்றபோதும், எல்லோருக்கும் பொதுவாய்த் தெரியக்கூடியதாய் வேலைத்தளத்தில் உள்ள ஆணோடு நெருங்கிப் பழகவும், அமெரிக்கா ஆன்சைட் போகின்றபோது அங்கு சந்திக்கும் கறுப்பின சக வேலையிட ஆணோடு உறவு கொள்கின்ற ஒரு பெண், எப்படி தற்கொலையை உடனே தேர்ந்தெடுப்பார் எனறும் கேள்விகள் வருகின்றன. ஏதோ ஒருவகையில் துணிச்சலும், எல்லாவற்றையும் சந்திக்கக்கூடிய தைரியமுள்ள ஒரு பெண் உடனே இப்படி தற்கொலையிற்கு முயல்வாரா என நாவலின் போக்கில் நின்று யோசித்துப் பார்த்தால், அவரின் முடிவில் பெரிதாய் பாதிப்பே வருவதில்லை. ஜெயமோகனோ (அல்லது யாரோ) முன்பு ஓரிடத்தில் எழுதியதுதான் நினைவிற்கு வருகின்றது, யதார்த்தத்தில் மரணம் தெருவில் வாகனம் அடித்துவிட்டாற்போல சடுதியாய் வரலாம். ஆனால் எழுத்தில் வைக்கும்போது அதற்கான காரணங்களை முன்வைத்தே எழுதவேண்டும். இல்லாவிட்டால் எத்தகைய பாதிப்பும் வாசிப்பவருக்கு வரப்போவதில்லை என்று. அவ்வாறே இந்நாவலில் பல பாத்திரங்களின் முடிவுகளும் எதையோ தவறவிட்டதாய் அந்தரத்தில் தொங்கி நிற்கின்றன.

காமத்தை, அது 'வழிதவறிய' உறவாய் இருந்தால் கூட, அருமையாக விபரித்துச் சொல்லக்கூடிய இடங்களையெல்லாம், நாவல் போர்னோ வகையாய் விபரித்தபடி போகின்றது. 'தகாத' உறவாய் இருந்தால் கூட, அந்த குற்றவுணர்வை மீறிப் பொங்கும் காமத்தை, காமத்திற்காய் எல்லாவற்றையும் துறந்துவிடத் தயாராகும் மனித மனத்தின் விந்தைகளை எல்லாம் எழுத்தில் வைக்காமல் தவறவிடப்பட்டிருக்கின்றன. மேலும் காமம் என்பது காமத்தை அப்படியே என்ன நடந்திருக்கும் என்பதைச் சொல்வதுமல்ல. உதாரணத்திற்கு 'என் பெயர் சிவப்பில்' காமத்தை விபரிக்கும் பக்கங்களை விரல் விட்டு எண்ண்விடலாம் (ஒன்றிரண்டு இடங்கள் மட்டுமே). ஆனால் நாவல் முழுதுமே காமம் மெல்லிய நீரோடையாய் ததும்பியபடி இருப்பதை வாசிப்பவர்கள் உணரும்படி ஒரான் பாமுக் எழுதியிருப்பார். ஆகக்குறைந்தது விநாயமுருகன் இந்நாவலில் அப்படி எழுதமுடியாமல் விட்டால் கூட, எரோட்டிக்கா வகை எழுத்து நோக்கியாவது நகர்ந்திருக்கலாம்.

நாவல் முழுதும் ஆண் பாத்திரங்களே தொடர்ந்து பேசியபடியிருக்கின்றன. எல்லாப் பெண் பாத்திரங்களும் வரும் ஆண் பாத்திரங்களுக்கு ஊடாக அறிமுகப்படுத்தப்படுகின்றனவே தவிர, அவை தம் கதையை/வாழ்வை சொந்தக் குரலில் கூறும் சாத்தியங்களே இல்லாமற் செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் பிராமணர்கள்/மலையாளிகள் மீது பொதுப்படையாக வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்களைத் தவிர்த்திருக்கலாம் (கவனிக்க, விமர்சனம் வைப்பதைக் கூறவில்லை).

இவை, நாவலில் வரும் எதிர்மறையான விடயங்கள் என்றாலும், இவற்றை வைத்து நாவலை நிராகரிக்க வேண்டியதில்லை. விநாயமுருகனின் முதல் நாவல் என்றவகையில் இன்னும் நிறையப் பயணிக்கப் போகின்றவரின் முதலடியென இந்நாவலை வரவேற்கலாம்.


பிறகு (With You, Without You)

த்திரைப்படம். மட்டுமில்லை படத்தின் பிறகான பிரசன்னாவோடான உரையாடலும் இன்னும் திரைப்படத்தோடு ஒன்றிக்க வைத்தது. கடந்தகால வன்முறையின் வரலாற்றை மறந்து (அல்லது உதறித்தள்ளி விட்டு) இனங்களுக்கிடையிலான மேலோட்டமான மீளிணக்கம் எப்படி தோல்வியுறும் என்பதை தனிப்பட்ட மனிதர்களுக்கிடையிலான உறவின் மூலம் மிக ஆழமாக பிரசன்னா இத்திரைப்படத்தில் தந்திருக்கின்றார்.

மிகக் குறைந்த பாத்திரங்களோடும், ஒரு குறுகிய பின்னணி நிலவியலோடும், மிகச் சொற்ப உரையாடல்களோடும் எப்படி மனதைப் பிசையுமொரு படத்தைத் தரலாம் என்பதற்கு இதொரு இன்னொரு உதாரணம். சிக்கலான படிமங்களோடும், எல்லாவற்றையும் 'சொல்லிவிடும்' எத்தனிப்புக்களுமின்றி பல்வேறு இடங்களில் விடப்படுகின்ற வெளியிலிருந்தும் பார்வையாளர் தமக்கான ஒரு பிரதியை(படைப்பை) உருவாக்கிக்கொள்ளும் சுதந்திரமும் தரப்பட்டிருக்கின்றது என்பது என்னளவில் முக்கியமானது. எவற்றிலிருந்தும் நாம் தப்பிவிடமுடியும் ஆனால் நமது மனச்சாட்சிகளிடமிருந்து என்றைக்குமாய்த் தப்பிவிடமுடியாது என்பதை ஒரு பெரும்பான்மை இனத்திடமிருந்து வரும் தெளிவான குரல் கவனிக்கத்தக்கது.

சிலரின் படைப்புகளைப் பார்த்து/வாசித்துவிட்டு அவர்களோடு உரையாடினால், இதைவிட அவர்களைச் சந்திக்காது விட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என யோசிப்போம். எனக்கு இந்தப் படத்தைப்போலவே பிரசன்னாவோடு நிகழ்த்திய உரையாடலும் அதிக நெருக்கத்தைத் தந்தது. இன்று அறியப்பட்ட நெறியாள்கையாளராக இருந்தாலும், நாம் சுட்டும் தவறுகள்(விமர்சனம்) போன்றவற்றை மிகப் பணிவாகக் கேட்டும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பிரசன்னாவில் பிடித்த இன்னொரு விடயம். இவர்களும் இவர்களின் படைப்புக்களுமே இன்னும் தாம் இன்னொரு இனத்தின் மீது நிகழ்த்திய வன்முறையை அறியாத (அல்லது அறிய விரும்பாத) பெரும்பான்மையினத்தவரின் மனச்சாட்சிகளை அசைக்க நம் முன் வைக்கப்படும் நம்பிக்கைக் கீற்றுக்கள் என நம்புகிறேன்.

"With you Without you" - What a movie. I am not only very impressed by the movie but also the conversation with the director. This movie again reminds us that there is no real reconciliation without knowing the history of violence between two ethnic communities in Sri Lanka. This movie have lots of metaphors and as well as leave enough space to audience to think beyond the movie. It is very hard to create a movie with handful of characters and a fixed small landscape, but this movie also impress us with less dialogues. I am also very moved with the conservation with Prasanna. Yet he is known director everywhere, he is very humble to hear audience's point of views. Thanks Prasanna Vithanage, Though there is long way to travel to resolve our ethnic conflicts, but you give a ray of hope that there are still few sinhalese people worrying (or in other words feeling guilty) of what happened to Tamil people in Sri Lanka.

'பிரசன்ன விதானகே: மேற்குலக திரைப்படங்களின் அரசியல் சாட்சி!' யிற்கு ஒரு எதிர்வினை

Wednesday, September 03, 2014


கெளதம சித்தார்த்தனின் 'பிரசன்ன விதானகே: மேற்குலக திரைப்படங்களின் அரசியல் சாட்சி!' சில வாரங்களுக்கு முன்னர் வாசித்தபொழுது, அது குறித்து சிலவற்றை எழுத விரும்பியபோதும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. இப்போது எல்லா பரபரப்புக்களும் ஒய்ந்திருப்பதால் அதுகுறித்து சிலவற்றைப் பேசலாம் என நினைக்கின்றேன்.

எனது மதிப்பிற்குரிய நண்பர் கெளதம சித்தார்த்தன் என்றாலும், இத்தகைய விடயங்களில் சமரசம் தேவையில்லை என்பதால் எதையும் மனந்திறந்து உரையாடலாம் என நினைக்கிறேன்.

கெளதம சித்தார்த்தனின் இந்தக் கட்டுரையே கட்டியிருக்கும் மாட்டைப் பற்றி ஒரு கட்டுரை எழுதச்சொன்னால், அதைத் தவிர்த்து மிகுதி எல்லாம் எழுதியது போன்ற பாவனையில் எழுதப்பட்டிருக்கின்றது என்பது கவலையான விடயமே.

சரி, இப்போது அவர் சற்று பிரசன்ன விதானகேயின் படத்தைப் பற்றிக் குறிப்பிடும் சில  இடங்களைச் சற்றுக் கவனிப்போம்...

1) "விதானகேவும் with you…. படத்தில் பூடகமாக முன் வைக்கிறார். சிங்கள ராணுவம் அல்லது சிங்களப் பேரினவாதத்தின் குற்ற உணர்வுகளாக முன் வைத்து மன்னிப்பும் கேட்கிறார். சரி Past is Past எல்லாவற்றையும் மறந்துவிடுவோம். இனி புதிய வாழ்க்கையை ஆரம்பிப்போம், ஒருவரோடு ஒருவர் கலந்து வாழ்வோம் என்பது போன்ற ஒரு பார்வையை முன் வைத்துப் பார்க்கிறார்."

கடந்தவை கடந்தவை என்றோ, எல்லாவற்றையும் மறந்துவிடுவோம் என்ற பார்வையோ அந்தப் படத்தைப் பார்த்தபொழுது எனக்கு வரவில்லை. பெரும் போருக்குப் பின்னரான காலத்தை, அதில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை, போர் நிகழாத நிலப்பரப்பில் வைத்து எடுக்கப்படுகின்ற கதையின் பின்னணியை மறந்துவிட்டு சித்தார்த்தன் பார்த்தால் எல்லாமே தலைகீழாய்ப் பார்க்கும் பார்வையே ஏற்படச் செய்யும். இது இன்று இலங்கை அரசு பிரச்சாரம் செய்கின்ற இணக்க அரசியலை, தனிப்பட்ட இரண்டு மனிதர்களின் சாதாரண வாழ்வின் மூலம் உடைத்தெறிகின்ற படம். இறுதியில் அந்தப் பெண் செய்கின்ற தற்கொலைகூட ஒருவகையில் சிங்களப் பேரினவாதத்திற்கு/சிங்களவர்களுக்கு கொடுக்கின்ற மிகப்பெரும் தண்டனைதான்.

எல்லாவற்றையும் இழந்தபின் மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் செய்ததைப் போல, தன்னிடம் இருக்கின்ற கடைசி துருப்பை அந்தப்பெண்  முன்னாள் இராணுவத்தினனிற்கெதிராகப் பயன்படுகின்றார் என ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது? ஏற்கனவே வேறொரு தமிழ்ப்பெண் பாலியல் வல்லுறவிற்குட்பட்டபோது, நடந்ததைச் சொல்லாது தப்பிவந்து குற்றவுணர்வில் துடிக்கின்ற இந்த முன்னாள் இராணுவத்தினனிற்கு இதைவிட எந்தப் பெரிய தண்டனையைக் கொடுத்துவிட முடியும்?

உண்மையில் இந்தக் காலம் தமிழரின் தரப்பு எல்லாவற்றையும் இழந்து கையாலாகாமல் நிற்கும் துயர்மிக்க காலம். சிங்களப் பேரினவாதம் சாதாரண  சிங்கள மக்களையும் ஊடுருவி நிற்கும் காலம். அண்மையில் இலங்கை அரச சார்பாய் இயங்கும் ஒருவர் ஒரு நிகழ்வில் கூறியதுதான் நினைவிற்கு வருகிறது. 'சந்திரிக்காவின் காலத்தில் சிங்களக் கிராமங்களுக்கு நாங்கள் பயமில்லாமல் நுழைய முடிந்திருந்தது. அங்கே நாம் மேடைகளில் எங்கள் தரப்பு நியாயத்தைக் கூறும்போது யாரும் இடைநடுவில் குழப்பினால் கூட, எங்களைக் காப்பாற்றி அனுப்பிவைக்க மக்கள் இருந்தார்கள். இன்றைய (மகிந்த) காலத்தில் நம்மால்  சிங்களக் கிராமங்களில் சாதாரணமாய்க் கூட உள்நுழைய முடியாது' எனக் கூறியிருந்தார்.

எனவே இன்றைய காலத்தில் நாம் நியாயங்களைப் பேசுவதன் மூலம், அவர்களின் மனச்சாட்சிகளை ஊடுருவவே முடியாது. தமிழர்களுக்கு நிகழ்ந்த பேரழிவுகளின் குற்றவுணர்வைப் பெருக்குவதன் மூலமே சிறு காலடியேனும் இது குறித்து முன்வைக்க முடியும். அதையே பிரசன்னா இப்படத்தில் ஏதோ ஒருவகையில் பார்வையாளர்களின் மனங்களைச் சலனமடையச் செய்கின்றார். அநேகமான சிங்கள மக்களிடையே, 'இப்போதுதானே போர் முடிந்துவிட்டது, புலிகள் அழிந்துவிட்டனர், சமாதானமும் சுபீட்சமும் பெருகுகிறதே' எனற சிந்தனையே இருக்கிறது. அதையே தான் எவ்வளவு அபிவிருத்தி நடந்தாலும், எத்தகைய மாடமாளிகைகள் எழும்பினாலும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை அவ்வளவு எளிதாய் -அது சாதாரண குடும்ப உறவில் கணவன்/மனைவியாய் ஆனால் கூட- நெருங்கிவிட முடியாது என்பதைத்தானே இப்படம் ஒருவகையில் நம்முன் வைக்கின்றது.

(2) "தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றமும் அதன் பண்பாடுகளும் வெகு மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் இச்சூழலில் அதுகுறித்த விமர்சனமேதுமின்றி, அப்படி எதுவும் நடக்காதது போன்ற ஒரு தோற்றத்தைப் படம் முழுக்கக் கட்டமைக்கிறார். படத்தின் பின்புலத்தில் திரும்பிய புறமெங்கும் கந்தசஷ்டிக் கவசமும் தமிழ் கும்தலக்கிடி பாடல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. உட்டாலக்கிடி படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. போரினால் பெரியளவில் தமிழர்களிடையே மனரீதியாக பாதிப்பு எதுவும் இல்லை; பொருளாதார ரீதியிலான பாதிப்பு வேண்டுமானால் உள்ளது என்கிற தோற்ற மாயையை தொடர்ந்து உருவாக்குகிறார்."

இக்கதை நிகழும் பரப்பு, போர் மிகமோசமாக நடந்த நிலப்பரப்போ அல்லது தமிழர்கள் கணிசமாக வாழும் வடக்கு/கிழக்குப் பகுதிகளோ அல்ல. அப்படியிருக்கும்போது எதை கெளதம சித்தார்த்தன் எதிர்ப்பார்க்கின்றார் என்றே தெரியவில்லை. போர் என்பது நமது கற்பனைகளுக்கு எவ்வளவு அப்பாற்பட்டவையோ அப்படியே அச்சூழலிற்குள் இருப்பவர்கள் வாழ்வும் நம்மால் சிநதித்தே பார்க்க முடியாத விசித்திரங்கள் நிறைந்தவையாக இருக்கின்றது. மிக மோசமான போர் நடந்த சூழலிற்குள் விஜய படம் பார்த்த சம்பவங்கள் முள்ளிவாய்க்கால் சூழலில் இருந்தவர்களால் பதியப்பட்டிருக்கின்றன. போரின் அழிவுகளைப் பார்த்தபின்னும், எதுவுமே இனி செய்வதற்கில்லை என்ற சூழலிலும் பலர் கேலியும் கிண்டலும் செய்து நாட்களை நகர்த்தியதை எழுதியிருக்கின்றார்கள். எனவே போர்ச் சூழல் என்பது சாத்தியமற்றதை எல்லாம் சாத்தியமாக்குகின்றது. இப்படியெல்லாம் இருந்திருக்க முடியுமா என எங்கள் சிந்தனைகளை எல்லாம் கேள்விக்குட்படுத்துகின்றன.

எனவே போர்ச்சூழலின் பின் மட்டுமல்ல, போர்ச்சூழலிற்குள் கூட ' கந்தசஷ்டிக் கவசமும் தமிழ் கும்தலக்கிடி பாடல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. உட்டாலக்கிடி படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன' போன்ற சந்தர்ப்பங்கள் நிகழலாம். இதையெல்லாம் ஒரு காரணமாய்க் காட்டி இத்திரைப்படத்தை நிராகரிக்கவே முடியாது.

(3) "தமிழ்ப்பெண்ணின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்கும் சிங்களராணுவ வீரன் என்னும் குறியீடு முழுக்க முழுக்க மேலோட்ட மான வெகுஜனப் பார்வை கொண்டது. இதைக் குற்றவுணர்வுகளின் அழகியல் என்கிறார். ஒரு இனத்தை மிகக் கொடூரமாகக் கொலை செய்த பிறகு குற்றவுணர்வுகளுடன் கூடிய சில சில நல்லிணக்கங்களையும் சமரசங்களும் செய்யும் காட்சிகளை உருவாக்குவதற்குப் பெயர்தான் குற்றவுணர்வுகளின் அழகியலா?"

 இத்திரைப்படத்தில் வரும் இராணுவத்தினன், தமிழ்ப் பெண்ணைக் கூட்டாய்ப் பாலியல் வன்புணர்வு செய்த நண்பனைத் தப்ப வைக்க பொய்ச்சாட்சி சொல்கின்றானே தவிர, அவன் அந்த நிகழ்வின் ஒரு பங்காளியல்ல. ஆனால் அதுவே அவனைப் பெரும் குற்றவுணர்ச்சியில் தள்ளுகின்றது. ஒருகட்டத்தில் இராணுவத்திலிருந்து நீங்க அந்த நிகழ்வே காரணமாகின்றது. ஆக இந்தப் படம் இன்னும் தமிழ் மக்களைக் கொன்றவர்களையோ, பாலியல் வன்புணர்வு செய்தவர்களின் ஆழமான பகுதியிற்குள்ளோ இறங்கவே இல்லை. மேலும் இப்படிப் பொய்ச்சாட்சி சொல்லிய இராணுவத்தினனை (கவனிக்க அவன் பாலியல் வன்புணர்வில் ஈடுபடவேயில்லை) மன்னிப்பதற்கே இன்னும் இந்தப் பெண்ணால் முடியவில்லை.

இத்தனைக்கும் இந்த பெண் வழியற்ற நிலையில் ஏதோ ஒருவகையில் உதவுகின்ற ஆணாகிய இவனையே அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இதற்குள், இத்தகைய பேரழிவை நிகழ்ததிய இலங்கை அரசையோ, அதற்கு ஏதோ ஒருவகையில் மெளனித்து ஆதரவளித்த பெரும்பான்மை சிங்கள மக்களையோ ஏற்றுக்கொண்டு ஒன்றுபட்ட இலங்கையிற்குள் பாதிக்கப்பட்ட மக்களால் வாழமுடியுமா? என்ற கேள்வியைத்தானே பிரசன்னா நுட்பமாக எழுப்புகின்றார்.

(4) "ஒரு இனத்தைக் கொன்றொழித்துவிட்டு எஞ்சியவர்களை, ‘நாங்கள் உங்களை ஏற்றுக் கொள்கிறோம், நாம் அனைவரும் ஒரே மக்கள், வந்து எங்களுடன் சார்ந்து ஒன்று கலவுங்கள்..’ என்று ராஜபக்சே கூறுவதற்கும் விதானகே கூறுவதற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்: நாங்கள் குற்றவுணர்வில் இருக்கிறோம் என்று விதானகே வாக்குமூலம் கொடுப்பது மட்டும்தான்."

இப்படி எழுந்தமானமாய் கெளதம் சித்தார்த்தன் எழுதும்போது, தயவு செய்து இன்னொருமுறை 'உணர்ச்சி'களை அடக்கிவைத்துவிட்டு பொறுமையாகத் திரைப்படத்தைப் பாருங்கள் என்பதை விட சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை.

(5) இக்கட்டுரையில் இடையில் சட்டென்று To Kill a Mocking Bird நாவலை சித்தார்த்தன் கொண்டுவருகின்றார். குற்றவுணர்ச்சி என்ற ஒரு காரணமாய் இருக்கக்கூடும். அந்நாவல் எழுதப்பட்ட காலம் 1960கள். அதுவரை அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த, அமெரிக்க கறுப்பின மக்கள் தமது உரிமைகள் கேட்டு  எழுச்சி பெறுகின்ற காலகட்டம். ஆதிக்க வெறி கொண்ட பெரும்பான்மை வெள்ளையின மக்களிடையே இருந்து வந்த ஒரு நம்பிக்கை கீற்றுத்தான் இந்த நாவல். இப்போது அதற்கான மதிப்பும், இடமும் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அது தன் எல்லைக்குள் நின்று  அன்றைய காலத்தில் ஒரளவுக்கு உண்மையைப் பேசிய நாவல். எதுவுமற்றிருப்பவர்க்கு கிடைக்கின்ற சிறுதுளி வெளிச்சத்தின் அருமை தெரியும். ஆகவேதான் அதைக் கறுப்பின மக்கள் அந்தக்காலத்தில் முக்கியப்படுத்தினார்கள். பின்னர் கறுப்பின மக்களே தம் வாழ்வை தாமே எழுதும்போது இதற்கான முக்கியத்துவம் இல்லாமற் போவதும் இயல்பானதே. அவ்வாறே பிரசன்னாவும் எல்லாம் இழந்து நிற்கும் தமிழ் மக்கள் மீது தன் எல்லைக்குள் இருந்து ஒரு திரைப்படத்தை எடுக்கிறார். அதே சமயம் அவருக்கு தான் பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவன் இல்லை என்பதும் நன்கு தெரிகிறது. எனவேதான் சோமீதரனின் பதிவில் பின்னூட்டம் இடும்போது, தமிழ்மக்களின் துயர் நன்கறிந்த சோமீயை திரைப்படம் எடுக்க உற்சாகப்படுத்துகின்றார்.

(6) "தமிழச்சி சரளமாக சிங்களத்தில் உரையாடுகிறாள். ஆனால் சிங்களன் தமிழ் பேசுவதில்லை. இதுதான் பேரினவாதம். என் மொழிதான் நீ பேசப்பட வேண்டும் என்னும் Reconciliation. ‘அவன் அவள் மீது எல்லையற்ற காதல் கொண்டு தமிழ்மொழி கற்றுக் கொள்வது போல ஒரு காட்சி வைக்க முடியாதா? அப்படி வைத்தால் இக்கதையின் ‘கலைப் புனிதத்திற்கு பங்கம் நேர்ந்துவிடுமா? "

இதென்ன கொடுமை....சிங்களவருக்கு உண்மையான காதல் தொடக்கத்தில் இருந்தே இருக்கவில்லை (காதலிக்கும் உணர்விருந்தால் அவர் இத்தனை காலம் தனித்திருக்கவும் தேவையில்லை; அதே போன்று இயந்திரத்தனமாய் ரெஸ்லிங்கை முன்னர் பார்த்ததுபோல, திருமணத்தின் பின்னும் எவ்வித மாற்றமும் இல்லாதே பார்க்கிறார்). எனவே இவ்வாறான பாத்திரத்திற்கு எப்படி 'காதலை' ஊட்டமுடியும்? ஆதிக்க இனத்திற்குரிய மற்றும் ஆணுக்குரிய நீ என் இடத்திற்கு வரவேண்டுமே தவிர, நான் உன்னிடத்திற்கு வரமாட்டேன் என்கின்ற அடம்பிடிப்பில் எப்படி ஒரு சிங்களவர் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளப் போகின்றார். இதுதான் நடைமுறை யதார்த்தம். ஒருவேளை உண்மையான காதல் இருந்தால் ஒருவர் அப்படி தமிழைக் கற்று வரக்கூடும். ஆனால் இந்தப் பாத்திரம் அப்படிப்பட்டது அல்லவே. பிறகேன் அப்படி எதிர்ப்பார்க்க வேண்டும்?

(6) "அதேபோல, தமிழ்பெண்ணின் கதாபாத்திரமும் பெரும் முரண்பாடுடனேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. போரின்கொடூரமான தாக்குதலினால் சிங்கள இனத்தின் மீதான ஓயாத மன வெறுப்பாலும், கடும் வறுமையாலும் உழல்பவள். டக்கென்று ஒரு சிங்கள இனத்தவரை திருமணம் செய்து கொள்ள மனம் ஒப்பாது. அடுத்த நொடியே தனது உடலைக் கொடுத்துவிடும் அதிசயமும் நிகழாது. (அந்த உடலுறவுக் காட்சி வெளிப்படையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழின் மூன்றாந்தர மசாலா இயக்குனர்கள் கூட ‘கலை’யாக இக் காட்சியை வடிவமைத்திருப்பார்கள்) மேலும், தேசிய இன அரசியல் பேசும் அப்பெண்ணை ‘விஜய் படங்களின் ரசிகையாக’ மாற்றியிருப்பது பெரும் Irony யாக இருக்கிறது."

இது அடுத்து கெளதம் சித்தார்த்தன் செய்யும் நகைச்சுவை. அவளுக்கு வேறு தெரிவு இல்லையென்றுதான் இதை முடிவெடுக்கிறாள் என்றுதானே காட்சி காட்சியாக தன்னிடமிருக்கும் ஒவ்வொரு நகையாக அடகுவைப்பதை நிதானமாய் பிரசன்னா காட்டுகின்றார்.

உடல் சார்ந்த இயற்கையை எல்லாம் 'அரசியல்' செய்யக்கூடாது கெளதம சித்தார்த்தன்.

ஒரு பெண் ஆணுடன் முதன்முறை உடலுறவில் ஈடுபடும்போது உற்சாகமாகவும் ம்கிழ்வாகவும் இருப்பதைப் பார்த்து ஆண் இவள் இதற்கு முன் நிறைய அனுபவித்திருப்பாளோ என சந்தேகம் கொள்வதற்கும் நீங்கள் கூறுவதற்கும் என்னால் பெரிதாய் வித்தியாசம் காணமுடியவில்லை. அதைவிடக் கொடுமை 'தேசிய இன அரசியல் பேசும் அப்பெண்ணை ‘விஜய் படங்களின் ரசிகையாக’ மாற்றியிருப்பது பெரும் Irony யாக இருக்கிறது' என நீங்கள் கூறுவது. கொஞ்சம் விட்டால் தேசிய அரசியல் பேசும் ஒருவர் இயற்கைக் கடன்களைக் கூட கழிக்ககூடாது என்று கூறிவிடுவீர்கள் போலிருக்கிறது. என்னுடைய அச்சம் இப்போது என்னவென்றால், அஸின் இரசிகனாக இருக்கும் நான் எழுதும் இந்த எதிர்வினையையே அதை வைத்தே நீங்கள் நிராகரித்துவிடுவீர்களோ என்பதுதான்.

(7) "இந்தச் சூழலிலிருந்து தப்பிக்க இந்தியாவுக்கு, தமிழ்நாட்டுக்குப் போவதுதான் ஒரே தீர்வாக முன் வைக்கிறார் விதானகே. அப்படியானால், ஈழத் தமிழர்களின் நலனுக்காக முன் நிற்கும் நாடு என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். ஈழத் தமிழர் நலன் சார்ந்த இந்திய வெகுஜன அரசியலும் நுண்ணரசியலும், தமிழ் நாட்டு வெகுஜன அரசியலும் நுண்ணரசியலும் எல்லோரும் அறிந்ததே. சமீபத்தில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் ஈழப் பெண்ணிற்கு ‘அகதி’ என்ற காரணத்துக்காக மருத்துவப் படிப்பு மறுக்கப்பட்ட அலட்சியம் தோய்ந்த பூமிக்கு வரத்தான் அவள் ஆசைப்படுகிறாள். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு NRI இட ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களை அள்ளிக் கொடுக்கும் அரசு, தனது மொழி பேசும் அகதியை அலட்சியப்படுத்தும் புண்ணியபூமி தான் அவளுக்கு ஆறுதல் கொடுக்குமென எண்ணுகிறாள். ஏன் கனடா, லண்டன் போன்ற நாடுகளுக்குப் போவது பற்றி அவள் கனவு காணவில்லை?"

என்னுடைய ஞாபகம் சரியென்றால் (சென்ற வருடம் ஒரேயொரு முறைமட்டுமே படத்தைப் பார்த்தது) அவர்கள் இந்தியாவிற்குப் போவது கோயில்களைப் பார்ப்பதற்கு என்பதாகவே காட்சியிருக்கும். அவள் மனம் சோர்ந்து ஒடுங்கியிருப்பதைக் கண்டே ஆண் இந்த முடிவை எடுக்கிறார் (இந்தக் காட்சியில் ஆணுக்கு மெல்ல மெல்லமாக காதல் அரும்புவதைக் கூட அழகாக பிரசன்னா எடுத்திருப்பார்). எனவே சித்தார்த்தன் முன்வைக்கும் பெரும் 'பூகோள அரசியல்' எல்லாம் இங்கு எடுபடாது.

அவ்வாறே சித்தார்த்தன் சொல்வதுபோல இந்தியாவிற்குப் போவதாய் இருந்தால் கூட, ஏன் கனடா, இங்கிலாந்து போகக் கேட்கவில்லை என்று கேட்பது இன்னும் அபத்தம். எனெனில் அவர்களிடம் அவ்வாறு போவதற்கான எந்தப் பணமும் இல்லை என்றுதானே படம் முழுக்கக் காட்டப்பட்டிருக்கிறது. நகைக்கடையை விற்றுவிட்டுத்தானே இந்த இந்தியப் பயணமே சாத்தியமாகிறது. கனவு வேண்டுமானால் அந்தப் பெண் 'ஒரு சனியனும் வேண்டாம் என்று செவ்வாய்க் கிரகத்திற்கு போவதாய்க் கூட காணலாம். ஆனால் யதார்த்த்தில் (கதையின் நீட்சியில்) அவர்களால் இந்தியாவிற்குப் போவதே சாத்தியமான ஒரே வழி.

(8) "ஆனாலும் இறுதிக் காட்சியில் அவருக்குள்ளிருக்கும் தார்மீகமான போராளி விழித்துக் கொள்கிறான். தன் இனத்தை அழித்தொழித்தவர்களுடன் இணைந்து அல்லது சார்ந்து வாழவே முடியாது என்பதையும் இலங்கை அரசு பிரச்சாரம் செய்யும் நல்லிணக்கம் குறித்த பார்வைகளையும் கேள்விக்குள்ளாக்கி தமிழ்ப்பெண் செல்வியை தற்கொலை செய்ய வைக்கிறார்."

ம்...இறுதியாக நானும் கெளதம் சித்தார்த்தனும் உடன்படும் ஒரு புள்ளிக்கு வந்துவிட்டோம். ஹொந்தாய்.

ஆனால், பிறகு பழையபடி வேதாளம்...

(9) "சிங்களரோடு சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் இல்லையெனில் சாவதைத் தவிர வேறு வழியில்லையென்ற விமர்சனம் இதற்குள் கட்டமைகிறது.

அவர் இன்னும் சற்று விசாலமாக யோசித்திருந்தால், தமிழ்ப் பெண்ணைச் சாகடிக்காது, அவனிடமிருந்து பிரிந்து, தனது நிலத்தில் சுதந்திரமாக அவள் விரும்பும் ‘விஜய் பாடல்களுடன்’ கொண்டாட்டமாக வாழ வைத்திருக்கலாம்."

அந்தப் பெண்ணிற்கு தனியே வாழும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருந்தால், அவள் ஒருபோதும் ஒரு சிங்களவரையே மணந்திருக்க முடியாது. அவளுக்கு வேறு தெரிவுகளில்லலாதுதானே சிங்களவரை மணக்கிறாள் எனத்தானே படத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

அந்தப் பெண்ணிற்கு கடந்தகாலத்தை முற்றாக மறக்க முடியுமென்றால், அவளால் எல்லாவற்றையும் துறந்துவிட்டு சிங்களக் கணவனோடு வாழ முடிந்திருக்கும்.

அதேபோல, அவனைத் துறந்துவிட்டு தனியே விஜயின் பாட்டுக்களோடு கொண்டாட்டமாய் வாழ முடியுமென்றால், அவனை விலத்தித் தனியே வாழ முடிந்திருக்கும். ஆனால் அவளால் இந்த இரண்டையும் தேர்ந்தெடுக்க முடியாது என்பதாலேயே அவள் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கின்றாள்.

இதுதான் இன்று ஈழத்தில் வாழும் தமிழர்களின் நிலையல்லவா? இதைவிட எப்படி அப்பட்டமாய் இன்றைய சூழலைக் காட்ட முடியும்? இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்கும் தமிழர்களால் முற்றுமுழுதாக கடந்த காலத்தை மறந்துவிட்டு வாழ முடியாது. அதேபோல, சிங்களவர்கள் பெரும்பான்மையான ஒரு நாட்டில் தனித்துப் பிரிந்துபோவதற்கான எந்த சிறு சமிக்ஞைகளும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை. ஆக இந்தப் பெண் தேர்ந்தெடுத்த தற்கொலையைப் போலத்தான் மிகவும் சிக்கலான காலத்தில்  தமிழர்கள் இன்று ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அல்லவா?

கெளதம சித்தார்த்தன் இப்படியும் சிந்தித்தும் பார்க்கலாம்.

மற்றும்படி  இதில் அவர் அஷோக ஹந்தகமவின் 'இனி அவன்' படத்திற்கு வைத்த விமர்சன்ம் உள்ளிட்ட தமிழ்மக்கள் மீது அக்கறையின் பாற்பட்டு வைக்கப்பட்ட கருத்துக்கள் எனக்கு உடன்பானதே.  ஆனால் இத்திரைப்படத்தை நான் சித்தார்த்தனின் பார்வையினூடாகப் பார்க்கவில்லை என்பதற்காகவே இந்தக் குறிப்பு.

ஈழத்திலுள்ளவர்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லாத இன்றைய சூழ்நிலையில் -நான் ஏற்கனவே கூறியதுபோல- பிரசன்ன விதானகேயின் கரங்களைக் கோர்த்து நடக்கவே விரும்புகின்றேன். அதுவும் நான் நம்பிக்கை வைத்த விமுத்தி ஜெயசுந்தரா ('இரண்டு உலகங்களுக்கிடையில்' படம் பற்றிய பார்வையும் 'உன்னத்திற்கே' எழுதியிருக்கின்றேன்) போன்றவர்களே இன்று 'இலங்கையிற்கு வாருங்கள்' என் இலங்கையரசு சார்பாய் சுற்றுலாப் படங்களை எடுக்கும் காலத்தில் பிரசன்னா போன்றவர்கள் மின்மினிப்பூச்சிகள் என்றாலும் அவர்களின் பறத்தல் எனக்கு முக்கியமானது.


கெளதம சித்தார்த்தனின் கட்டுரை:(http://www.keetru.com/index.php/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57/26915-2014-08-01-06-14-16)  

(August 13, 2014)