கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கொன்றைப்பூ குறிப்புகள்

Thursday, May 29, 2014


மாதொருபாகனும், ஆளண்டாப் பட்சியும், சில நினைவுகளும்...

'ஆளண்டாப் பட்சி' - அண்மையில் வெளிவந்த பெருமாள் முருகனின் நாவல். இன்றைய காலத்தில் வாசிப்பின் வேகம் குறைந்துவிட்டதாலோ என்னவோ, மிக ஆறுதலாகவே ஒருவாரத்திற்கு மேலாக எடுத்து, வாசித்து முடித்திருந்தேன். ஆனால் மாதொருபாகனை இரண்டு நாட்களில் வாசித்திருந்தேன். அவ்வளவு சுவாரசியமான மொழிநடையில் எழுதப்பட்ட நாவல் மாதொருபாகன்.

ஈழத்தில் இருந்த காலங்களில் பிளாஸ்ரிக் வயர் பின்னிய கதிரையில் சுருண்டு கிடந்தபடி, மாலைச்சூரியன் எப்போது மங்கியதென அறியாது மெல்லிய இருள் படிவது கூடத் தெரியாது வாசித்துக்கொண்டிருப்பேன். 'மாதொருபாகனை' வாசித்து முடிக்கும்வேளையில் அவ்வாறுதான் இருள் சூழச்சூழ, எந்தநிலையிலும் மின்குமிழை இயக்காது வாசித்து முடித்துவிடவேண்டுமென்ற விருப்புடன் இயற்கை ஒளியிலேயே முடித்திருந்தேன்.

'மாதொருபாகனாய்' இருந்தாலென்ன, 'ஆளண்டாப் பட்சி'யாய் இருந்தாலென்ன, ஏன் 'கூளமாதாரி'யாய் இருந்தாலென்ன, நாவலின் உள்கிடக்கை சிலவேளைகளில் அவ்வளவு கவராவிட்டால் கூட, பெருமாள் முருகனின் சித்தரிப்புக்கள் நம்மை அப்படியே அந்தச் சூழலில் கொண்டு சென்று சேர்த்துவிடும்.

மாதொருபாகனின் விபரிப்புக்கள் எனக்குள் இழந்துவந்த கிராமத்தின் நினைவுகளை பெருக்கெடுக்கச் செய்தன. காடுகளில் (தோட்டங்களில்) செய்யும் விவசாயமும், வளர்க்கும் ஆடு மாடு, கோழிகளும் அவற்றை அளவிறந்து நேசிக்கும் காளியென, நானும் ஒரு பாத்திரமாய் இருப்பது போல மாதொருபாகன் ஆக்கியிருந்தது. எனக்குப் பழக்கமான பூவரசுகளையும்,வேம்புகளையும், பனைகளையும் மட்டுமில்லை வாதநாராயணி, கிளுவைகளென -நினைவிலிருந்து இல்லாமற்போய்க்கொண்டிருந்த- இன்னும் பல மரங்களையும், பறவைகளையும் மீளக் கண்டுபிடிக்க முடிந்தது.

காளி, ஒழுங்காய் கோழிகள் முட்டை பொரித்து குஞ்சுகள் பிற பிராணிகளிடமிருந்து தப்புவதற்காய் கரிப்புக்குருவிகள் வளர்க்கும் இடமெல்லாம் நுட்பமானது. எப்போதும் எங்கள் வீட்டில் கோழிகள் உலாத்தியபடியேயிருக்கும், அந்த முட்டைகளே அவசரத்திற்கு விற்கவும், பிறபொருட்களுக்கு பண்டமாற்றம் செய்வதற்குமென உதவிக்கொண்டேயிருக்கும்.

கோழி அடைகாத்து நிறையக் குஞ்சுகள் வந்தாலும் பெரிதாக வளரும்போது அவை பருந்துகளாலும், மரநாயாலும் அரைவாசியாக எண்ணிக்கையில் மாறியிருக்கும். இரவுத்தூக்கத்திற்காய் மாமரத்தின் கிளைகளிலே எங்கள் வீட்டுக் கோழிகள் தூங்குவதும், அவ்வப்போது மரநாய்கள் வந்து அவற்றை பலியெடுத்துச் செல்வதும் அடிக்கடி நிகழ்வது.

கோழிகளால் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்குப் பறக்கமுடியும், அவைகள் தம்பாட்டிலே மாமரக்கொப்பிலே ஏறுபவை என்று நகரத்திலே பிறந்து வளர்ந்த நண்பருக்குச் சொல்லும்போதேல்லாம், நண்பர் சும்மா பொய் சொல்லாதே, கோழி பறக்காது என என்னை நக்கலடிப்பதுண்டு. பின்னர் தற்செயலாய் யூரீயுப்பில் கோழிகள் பறக்கும் விடீயோவைக் காட்டி நான் சொன்னது உண்மைதானென நிரூபிக்க வேண்டி வந்தது வேறு விடயம்.

பெருமாள் முருகனின் நாவல்களில் அநேகம் வருபவர்கள் கவுண்டர்களும் சாணர்களுமாய்த்தானிருக்கின்றார்கள். முக்கியபாத்திரமான கவுண்டர்கள் சாணர்களை ஒரளவு மதிக்கக்கூடியபவர்களாகவும், ஆனால் அதேசமயம் உள்ளே முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளத் தயங்குபவர்களாகவும் இருப்பார்கள். அதை 'ஆளண்டாப் பட்சி'யில் வரும் குப்பண்ணா பாத்திரம் மூலம் நன்கறிய முடியும். ஆனால் அவர்கள் எவ்வளவுதான் ஓடாய் தேய்ந்து வேலை செய்தாலும் கவுண்டர்கள் ஓர் எல்லைக்கு மேலே விடவும் மாட்டார்கள்.

'மாதொருபாகனில்' மாட்டுவண்டியில் சாணர்கள் அருகே அமரவே தீட்டுப் பார்க்கப்படும், அவர்களுக்குத் திருவிழாக் காலத்தில் மோரோ நீரோ ஊற்றும்போதுகூட தனியே பனங்கோட்டைகளில் ஏந்தி பவ்வியமாய்த்தான் குடிக்கவேண்டியிருக்கிறது. அன்பாய் காசுகொடுக்கும்போதுகூட சாணர் பெண், தன் துணிவிரித்துத்தான் நாலணாவையோ எட்டணாவையோ பெற்றுக்கொள்ள முடிகிறது.

ஆனால் இந்தச் சூட்சுமம் எல்லாம், சாணர் வீட்டில் கள்ளோ சாரயமோ வாங்கிக்கொடுக்கும்போது எப்படி காணாமற் போய்விடுகிறது என்பதுதான் 'அதிசயம்'. சாணர் பெண் சமைத்துக்கொடுக்கும் கறியிலும், சாறிலும், சோத்திலும் எந்தத் 'தீட்டை'யும் பார்க்காமால் எப்படி அள்ளியள்ளிச் சுவைத்துச் சாப்பிட முடிகிறது. பிள்ளை பிறக்கதாதால் 'வறடி' எனப் பெயரெடுக்கின்ற, அதன் நிமித்தம் ஒதுக்கப்படுகின்ற கவுண்டப் பெண் கூட, அழகாய் இருக்கும் சாணர் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்ச விரும்பினால் கூட 'தீட்டு வந்துவிடும்' என அஞ்சுபவராக, அந்த அனுபவத்தை மறுதலிப்பவராக இருக்கின்றார் என்பதில் எல்லாம் இருப்பது சாதியின் அரசியலன்றி வேறென்ன?

ஓரிடத்தில், 'வறடி'யாக இருப்பதால் ஒரு சடங்கில் ஒதுக்கப்படுகின்றார் கவுண்டர்பெண். அப்போது அந்தப் பெண் இப்படி எங்களைத் தீண்டாச் சாதியாக வைத்துவிடுகின்றார்களே என கவுண்டர்களைத் திட்டுகிறார். நான் இதைத்தாண்டி யோசித்துப் பார்க்கும்போது, கவுண்டர் பெண்ணுக்காகவது அவரால் குழந்தை பெறமுடியவில்லை என்ற உடலியல் காரணத்திற்காய் (அது கூட எவ்வளவு முட்டாள்தனமானது என்று சொல்லத் தேவையில்லை) தான் ஒதுக்கப்படுகிறார். ஆனால் இந்த 'தீண்டப்படாத' சாதி என ஒதுக்கி வைக்கப்பட்டவர்களெல்லாம் என்ன காரணத்திற்காய் ஒதுக்கப்படுகின்றார்கள் என்று சற்று யோசித்துப் பார்க்கலாமே எனத் தோன்றியது. அவர்கள் செய்த ஒரேயொரு 'தவறு' இந்த 'தீண்டப்படாத சாதி' என அழைக்கப்படும் பிரிவிற்குள் வந்து பிறந்ததைத் தவிர வேறென்ன...?

'கூளமாதாரி'க்கு பிறகு மிகுந்த சுவாரசியத்துடன் வாசித்த பெருமாள் முருகனின் நாவல் 'மாதொரு பாகன்' . இந்நாவலை 'கூளமாதாரி' மாதிரி எங்கே முடிப்பதென மிக நுட்பமாகத் தெரிந்து முடிக்கப்பட்டிருப்பதால் இன்னும் பிடித்தமாயிருந்தது. 'ஆளண்டாப் பட்சி' நிலம்பெயர்வின் சிறுவரலாற்றைக் கோட்டிட்டு காட்ட முனைகிறதென்றாலும், நாவலாக அது வளரவில்லை எனத்தான் கூறவேண்டியிருக்கிறது.


த்ரிஷம்

குழல் பிட்டோடு தொடங்கும் காட்சியோடு அமிழ்ந்து இறுதிக்காட்சியில் மோகன்லால் பொலிஸ் ஸ்ரேசனிலிருந்து வெளிவரும்வரை உள்ளிழுத்துக்கொண்ட ஓர் திரைப்படம். இன்றைய சூழலில் எந்தக் கணத்திலும் நம் முன்னே சாதாரணமாய் நிகழ்வதற்குச் சாத்தியமுள்ள ஒரு கதை. அதை எவ்வாறு திரைப்படமாக்கியிருக்கின்றார்கள் என்பதோடு 'அறம்' என்பது எதுவாக இருக்கும் என்பது குறித்தும் நம் மனதில் கேள்விகளையும் உருவாக்கிறது இத்திரைப்படம்.

மலையாளச் சூழலில் தொடர்ந்து எவ்வாறு நம்மைச் சலனமடையுச் செய்யும் இத்தகைய திரைப்படங்களை எடுக்க முடிகிறதெனவே யோசித்துப் பார்க்கிறேன். மலையாளத் திரைப்படங்களுக்கும் - எல்லா மொழிப்படங்களுக்கு நிகழ்வதைப் போல- ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் எப்படி அவர்களால் வீழ்ச்சியிலிருந்து எளிதாக மீள உயிர்க்க முடிகின்றது? தமிழில் நல்ல படங்கள் வருவதற்கான சூழ்நிலை உருவாகின்றது என நாம் சற்று மகிழும்போதே அவ்வாறான நம்பிக்கைகள் தூர்ந்து மீண்டும் பழைய 'வழமை'யான நிலைக்குத் திரும்புவிடும் குறித்து யோசிக்கவேண்டியிருக்கிறது.

சென்ற வருடம் இங்கே நிகழ்ந்த திரைப்படம் சம்பந்தமான ஒரு கலந்துரையாடலிலும், தமிழில் நம்பிக்கையளிக்கும் சமிக்ஞைகள் புதியவர்கள் (முக்கியமாய் 'நாளைய இயக்குநர் யார்? போன்ற நிகழ்வுகளின்) ஊடாக வந்தாலும் அதை ஒரு மாற்றத்திற்குரிய புள்ளியெனக் கொள்ளமுடியாதெனவும், ஒரளவு கவனிக்கத்தக்க இந்த இயக்குநர்கள் அடுத்தடுத்து இயக்கும் திரைப்படங்களை வைத்தே நாம் தமிழ்ச் சூழல் மாறுமா/மாறாதா என அவதானிக்க முடியுமெனச் சொன்னதும் ஞாபகத்திலுண்டு.

ஏன் மலையாளத்தில் இவ்வாறான நல்ல திரைப்படங்கள் -அவர்களுக்கும் பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும்- வெளிவருகின்றது எனப் பார்க்கும்போது, அங்கேயிருக்கும் 'நட்சத்திர நடிகர்கள்' கூட கதைக்கேற்ப மாறக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பது முக்கிய காரணங்களில் ஒன்று. திரிஷம் படத்தில் மோகன்ல்லால் சப்பாத்துக்காலால் அடிவாங்குகின்ற காட்சிகளையெல்லாம் தமிழ்ச்சூழலில் ஒரு படம் நடித்து (அதுவே ஹிட்டாயிற்று என்றால் சொல்லவே தேவையில்லை) தந்த நாயகர்கள் கூட இப்படி 'பாத்திரத்திற்கேற்ப' நடிப்பார்களென எதிர்பார்க்கவே முடியாது.

தமிழ்ச் சூழலில் சில இயக்குநர்கள் தன் சுயத்தில் ஒரு நல்ல படத்தைத் தந்தால் கூட, அவர் அடுத்தடுத்து 'நட்சத்திர நடிகர்களை' வைத்து படமாக்கும்போது அந்த நடிகர்களுக்கேற்ற ' நாயக விம்பக் கதைகளை' உருவாக்கின்றார்களே தவிர அநேகமாய் தம் சுயத்தைக் கைவிட்டு விடுபவர்களாக இருக்கின்றார்கள். இதில் பாலா போன்ற ஒன்றிரண்டு பேரே விதிவிலக்கு. 'வெண்ணிலா கபடிக்குழு', 'அழகர்சாமியின் குதிரை' போன்ற கதைகளைத் தந்த சுசீந்திரன் போன்றவர்கள் மறுதிசைக்கு உதாரணங்கள்.

ஆகவேதான், ஒரளவு நம்பிக்கை தந்து தமிழ்சூழலின் ஏதேனும் சலனத்தை உருவாக்குவார்கள் என நம்பிக்கை தந்த (நாளைய இயக்குநர் புகழ்) புதியவர்களால் கூட, அவர்களின் 2ம் 3ம் படங்களில் தமிழ்சூழல் ஏற்கனவே பயணித்துக்கொண்டிருக்கின்ற 'நாயக விம்ப வழிபாட்டு'த் திசையில் அலையும் அவலம் நிகழ்ந்திருகின்றது.

மலையாளச் சூழலில், எத்தகைய நட்சத்திரங்களாய் இருந்தாலும் அவர்களால் கதைக்கேற்ப இறங்கி வரமுடிகிறது. தங்களை அத்தகைய பாத்திரங்களிற்கேற்ப மாற்றிக்கொள்ள முடிகிறது. எனவேதான் மலையாளத் திரைப்படங்கள் காலத்துக்காலம் நெருக்கடிகளைச் சந்தித்தாலும் தொடர்ந்தும் தன்னைப் புதுப்புத்துக்கொள்ள முடிகிறது. தமிழ்ச்சூழலோடு ஒப்பிடும்போது மிகச்சிறிய பார்வையாளர்களைக் கொண்டிருந்தாலும் வணிக நெருக்கடியென போலிக் காரண்ங்கள் கூறிச் சிக்கிக்கொள்ளாது மீண்டும் மீண்டும் தன்னை உயிர்ப்பித்தபடி இருக்கிறது.

பாலாவினால் 'நடிகர்'களாக்கப்பட்டு, மாற்றத்தை ஏதேனும் ஒருவகையில் தமிழ்ச்சூழலிற்குக் கொணர்வார்களென நம்பப்பட்ட விக்ரமோ, சூர்யாவோ இன்று நிற்கும் திசையைப் பார்க்கும்போது நமது அவலம் புரியும். மலையாளச் சூழலில் ஃபகத் பாசில் போன்ற ஒருவருக்கு நிகராகக் காட்டக்கூடிய ஒருவர் கூட நம்மிடையே இல்லை என்பதையிட்டு வெட்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம்.


Gods in Print: Masterpieces of India's Mythological Art (by Richardh Davis)

கொஞ்சக் காலம் முன்பு ரொறொண்டோவில் புத்தக சாலையிற்குச் சென்றபோது இந்நூலைக் கண்டு வாங்கியிருந்தேன். அழகான வர்ணப்படங்களுடன் வரலாற்றுப் பின்னணியுடன் இந்நூல் தொகுக்கப்பட்டிருக்கின்றது. எப்படி கடவுள் படங்கள் முதன்முதலாக அச்சு ஊடகங்களிற்கு வருகின்றது, எந்த ஓவியர்கள் நாம் இன்று வணங்கும் கடவுளரிற்கு உருவங்களைக் கொடுத்தார்கள் என்பதை காலனித்துவக் காலத்திலிருந்து இதில் காட்சிப்படுத்துகின்றார்கள். அசல் ஓவியங்களின் கையெழுத்துப் பிரதிகளுடன் அவற்றைப் பக்கம் பக்கமாய்ப் பார்க்கும்போது சிலிர்ப்பாயிருந்தது.

மேலும் நாமின்று பார்க்கும் கடவுளரின் ஓவியங்கள் , எவ்வாறாக காலவோட்டத்தில் மாற்றமடைகிறது என்பதை அறிய/பார்க்கக் கிடைத்தது வித்தியாசமான அனுபவம் (சரஸ்வதி ஆரம்பகாலத்தில் வைத்திருக்கும் வீணை/இன்று நாம் பார்க்கும் வீணை. தாமரைப் பூவில் இல்லாத சரஸ்வதி/லக்சுமி ஓவியங்கள்). அதுவும் அச்சு ஊடகங்கள் மேற்கிலிருந்த காலத்தில், எப்படி ஜேர்மனியில் வைத்து அச்சிட்டப்போது அங்கிருந்த ஓவியர்கள் அவர்களுக்குத் தெரிந்த பின்னணியில் கடவுளரை வரைந்தார்கள் என்பது இன்னும் சுவாரசியமானது.

கிருஸ்ணனும் ராதாவும் மேற்கின் கோட்டைகளுக்கு முன்னும், கிருஸ்ணன் கோபியர்கள் குளிக்கும்போது ஆடைகளைக் களவாடிச்சென்று விளையாடுவதையும் மேற்கத்தைய மனம் எப்படிக் கற்பனை செய்திருக்கிறது என்பதை அறிவது.... தஞ்சாவூர் ஓவியக்கலையை கற்றுச் சென்ற ரவி/ராஜா வர்மா சகோதரர்கள் எப்படி தம் ஓவியங்களின் மூலம் அச்சுப்பொறியை தமக்குச் சொந்தமாய் வாங்கும்வரை புகழின் உச்சத்துக்குச் சென்றார்கள் என்பதையும், பிறகு எப்படி அதை தாம் வேலைக்கு அமர்த்தியிருந்த ஜேர்மனியருக்கு விற்றதையும், அந்த ஜேர்மன்காரர் தொடர்ந்து ரவி வர்மாவின் ஓவியங்களின் உரிமையை வாங்கி தன் அச்சுக்கூடம் 1970(1980?) தீயில் எரியும்வரை அச்சிட்டாரென பல விடயங்களின் வரலாற்றை வர்ணப்படங்களினூடாக அறியக்கூடியதாய் இருந்தது.

இத்தொகுப்பிற்கு முன்னுரை எழுதியவர் 1960 களிலிருந்தே இந்தியாவிற்கு -முக்கியமாய் தமிழகத்திற்கு- அடிக்கடி பயணித்துக்கொண்டிருப்பவர். அவர் எப்படி தான் மதுரை மீனாட்சி கோயிலுக்குப் போனார் என்பதையும் அங்கே உள்மாடத்திலிருந்த சிறுகடையொன்றில் கடவுளரின் படம் வாங்கத்தொடங்கி அந்தக் கடைக்காரரினூடாக கடவுளரின் கதைகளை அறிந்ததையும், தமிழகத்துக் கடைகள் எங்கினும் (ஓட்டோக்களில் கூட) கடவுள் படங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என விரிவாக எழுதியிருப்பதை வாசிப்பது சுவாரசியமானது.

இந்த ஓவியங்களில் தெறிக்கும் அழகை விட, ஒவ்வொரு படங்களும் வரையப்பட்ட மாந்தீரிகத்தன்மைதான் இன்னுமின்னும் ஈர்த்துக்கொண்டேயிக்கிறது.