கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

புலம்பெயர் வாழ்வு: நெருக்கடிகளும், உயிர்த்திருத்தலும்...

Sunday, December 16, 2007

Aqsa Parvez கொலையை முன்வைத்தும், பிறவும்...

இன்னொரு கலாசாரத்தை/பண்பாட்டை/பழக்கவழக்கங்களை புரிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதும் என்பது அவ்வளவு எளிதானதல்ல. பலவேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து புதிய நாடுகளில் தங்கள் வேர்களைப் பதிப்பவர்கள் புதிய நாட்டின் காலநிலை/கலாசாரம்/சட்டதிட்டங்களுடன் மிகப்பெரும் போராட்டங்களை நடத்தவேண்டியிருக்கிறது. போர்/பொருளாதாரம் போன்ற... என்ன காரணங்களாய் இருந்தாலும் புலம்பெயர்ந்தவர்களுக்கு, தமது சொந்த நாட்டைப் பிரிந்துவந்த உளைச்சலோடு புதிய சூழலுக்குத் தங்களைப் பழக்கவேண்டிய அழுத்தமும் இருக்கின்றது. மேலும் அபிவிருத்தியடைந்த நாடுகள் உழைத்துக்கொண்டிருக்கும் மக்களை இன்னுமின்னும் எளிதாகச் சுரண்டிக்கொண்டிருக்கும். ஒரு வேலையில் திருப்தியான சம்பளத்தோடு வாழ்ந்துகொண்டிருந்தாலும் உங்களது 'கனவு வேலை'க்குப் போக எளிய பத்து வழிமுறைகளென எழுதி/பேசி உங்களுக்கு ஆசை காட்டிக்கொண்டிருக்க நீங்கள் இயந்திரமாய் மாறி மாறி இடையறாது இயங்கிக்கொண்டிருப்பது அவசியமாகிவிடுகின்றது. வாய்ப்புக்கள் திறந்தநிலையில் இருக்கையில் அவற்றை எல்லாவிதத்திலும் உபயோகப்படுத்துவதை விரும்பாமல் இருக்குமா மனித மனங்கள்?

இயந்திரத்தனமான வாழ்க்கையிற்குள் மூழ்கியிருந்தாலும் நீங்கள் தனியாள் அல்ல. உங்கள் ஒவ்வொரு அசைவும் நுட்பமாய் கவனிக்கப்படுகின்றது. திருமணவிழாக்களில்/ஒன்றுகூடலில்/ வழிபாட்டுத்தலங்களில் உங்களைப் பற்றிய கதைகள் சிறகுகளுடன் பறக்கத்தொடங்குகின்றன. இவ்வாறான கதைகள்/கிசுகிசுக்கள் உங்கள் காதிற்குள் விழத் தொடங்கும்போது உங்களது சுதந்திரமான எல்லைகளைச் சுருக்கத் தொடங்குகின்றீர்கள். அவ்வாறு ஒடுங்கத் தொடங்குகையில், அதைக் கண்காணிபாய்/அதிகாரமாய் உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீதும் செலுத்தத் தொடங்குகின்றீர்கள். அதிகாரம்/கண்காணிப்பு/ஒடுக்குதல் என்பவற்றை இலகுவாய் அது நமது கலாசாரம்/பண்பாடு என்று செப்பி அதை ஒற்றைத் தன்மைக்குள் புகுத்திவிட்டு எளிதாக நகர்ந்துவிடவும் விரும்புகின்றீர்கள்.


கூட்டுக்குடும்பம்/கூட்டுக் கலாசாரம்/உறவுகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் (அவற்றினூடாக சாதி நுட்பமாக தமிழ்ச்சமூகத்தில் புகுத்தப்படுவதும் கவனிக்கத்தது) கலாசார பின்புலங்களிலிருந்து புறப்பட்டு வரும் பலருக்கு தனிமனித உரிமைகள், தனிப்பட்ட விருப்புக்கள் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மேலை நாடுகள் ஒரு கலாசார அதிர்வை ஏற்படுத்துகின்றன. அந்த அதிர்வை எப்படி எதிர்கொள்வது என்பதும் அவற்றை எதிர்கொண்டு தொடர்ந்து எப்படி இடையறாது உயிர்த்திருத்தல் என்பதும்தான் கவனிக்கபபடவேண்டியது.

அண்மையில் கனடாவில் hijab (பர்தா?) அணியவில்லை என்ற காரணத்துக்காய் (அது முக்கிய காரணமே தவிர அதுமட்டுமில்லை காரணம்) பதினாறு வயது பெண் (Aqsa Parvez) ஒருவர் தகப்பனால் கொல்லப்பட்டிருக்கின்றார். கொல்லப்பட்ட பதின்ம வயதுப்பெண்ணின் நண்பர்கள், இந்தப்பெண் பர்தா மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவதால் பலமுறை தகப்பனால் உடல்/உள வன்முறைக்கு ஆளாகப்பட்டிருக்கின்றார் என்று கூறுகின்றார்கள். மேலும் பர்தாவும், தளர்வான ஆடைகளும் அணிந்தபடி வீட்டிலிருந்து வெளிக்கிட்டு, பாடசாலையில் இறுக்கமான ஆடைகளை அணிந்தும்... பிறகு வீடு நோக்கிச் செல்லும்போது மீண்டும் பர்தா மற்றும் தளர்வான ஆடைகள் அணிபவர் அந்தப்பெண் என்றும் அவரின் நண்பர்கள் கூறியிருக்கின்றார்கள். இவ்வாறான முரண்பாடுகளின் நீட்சியிலேயே அந்தப்பெண் கொல்லப்பட்டிருக்கின்றார் என்று நம்பப்படுகின்றது.

இந்தக் கலாசார அதிர்வு/ மற்றும் புதிய சூழலுக்குப் பழக்கப்படுதல் என்பவை முஸ்லிம் சமூகத்திற்கு மட்டும் உரியதல்ல. புலம்பெயர்ந்த எல்லாச் சமூகங்களுக்கும் பொதுவான ஒன்றுதான். ஆனால் முஸ்லிம்கள் பற்றி தொடர்ந்து ஒரேவிதமான ஸ்ரிரியோ வகை கருத்துக்களை பரப்ப விரும்பும் ஊடகங்களுக்கு..., பார்த்தீர்களா முஸ்லிம்கள் அனைவரும் இப்படித்தான் காட்டுமிராண்டித்தனமானவர்கள் எனக் கூற அவல் கிடைத்துவிட்டது. அந்த நுண்ணரசியல்தான் கனடாவில் எத்தனையோ விடயங்கள் நிகழ்ந்தும் புறக்கணித்த சி.என்.என் (CNN) இந்தச்சம்பவத்தை அடிக்கடிக் காட்டச் செய்திருக்கின்றது (அதற்காய் இஸ்லாமிய அடிப்படைவாதம் விமர்சிக்கக்கூடாது என்பதல்ல அர்த்தம்) . இந்தச் சம்பவம் நடக்கும் சில மாதங்களுக்குமுன் ஒரு தமிழ்த் தந்தை அவரது மகள் ஒரு ஆண் நண்பரோடு (இருவரும் டேட்டிங் செய்தார்களென வாசித்தாய் நினைவு) இருந்த சமயம் அவர்களை நோக்கி வானை ஏற்ற முயன்றதையும், அவரது மகள் சிறு காயங்களுடன் தப்பியிருக்கின்றார் என்பதையும் நினைவில் இருத்தவேண்டும். சில வருடங்களுக்கு முன் வன்கூவரில், ஒரு சீக்கிய பின்புல பெண், சாதி குறைந்த ஒருவரை நேசித்ததால், மிக நுட்பமாக இந்தியாவிற்குக் கூட்டிச்செல்லப்பட்டு அவரது தகப்பனாலும், சகோதரகளாலும் கொல்லப்பட்டிருக்கின்றார் என்பது சிபிசி(CBC) தொலைக்காட்சியில் ஆவணபடுத்தப்பட்டு, பரவலான உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டதையும் நாமனைவரும் அறிவோம். எனவே இந்த குடும்ப வன்முறை, கலாசாரவிதமாய் ஒடுக்குதல் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் உரியதல்ல என்ற புரிதலோடே இவ்வாறான விடயங்களை அணுகவேண்டியிருக்கிறது (சில கனடிய ஊடகங்கள் -ரொரண்டோ ஸ்ரார் போன்றவை- முஸ்லிம் சமூகம் என்று பார்க்காது பொதுவாய் அனைத்துப்புலம்பெயர் சமூகங்களுக்கும் உரிய பிரச்சினையெனப் பேசுவது ஆறுதல் தருகின்றது).


2.
தாம் புலம்பெயர்ந்து வந்த நாட்டின் கலாசாரத்தோடு சிறிதும் மாறாமல் இருக்கப்போகின்றவர்களுக்கோ அல்லது அப்படியே புலம்பெயர்ந்து வந்து புதிய நாட்டின் கலாசாரத்தை முற்றுமுழுதாய் எந்தக்கேள்விகளுமில்லாது ஏற்றுக்கொள்பவர்களுக்கோ இவ்வாறான பிரச்சினைகள் அதிகம் இருப்பதில்லை. இரண்டு கலாசாரங்களுக்கிடையில் (தாய்நாடு X புலம்பெயர்ந்த நாடு) சிக்கிக்கொண்டு எதை எதை தமக்குரியதாக தேர்ந்தெடுப்பது என்று நினைத்து அலைக்கழிப்பவர்களுக்க்த்தான் இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது.

இந்தக் கலாசார அதிர்வுகளை எதிர்கொள்வதில் ஏற்படும் சிக்கல்களில் பெற்றோருக்கே முழுப்பொறுப்பு இருக்கின்றதென அவர்களை நோக்கி சுட்டுவிரல்களைக் காட்டுவதிலோ, அல்லது இந்தக்காலத்துச் சிறுசுகளே இப்படித்தானென பெருமூச்சுவிட்டபடி இளையவர்களை நோக்கி முழுதாய் குற்றஞ்சாட்டுவதிலோ.. உருப்படியாக நம்மால் எதையும் சாதிக்கப்போவதில்லை. நம் அனைவருக்கும் பொறுப்புகளும் சகிப்பத்தன்மையும் பிறரை விளங்கிக்கொள்ளலும் அவசியம் என்ற புள்ளியிலே நாம் இவற்றை அணுகவேண்டியிருக்கின்றது. பெற்றோர்கள் அனைத்துச் சுதந்திரம் கொடுத்தும், அதை எவ்வாறு எடுத்துக்கொள்வதென்று விளங்காது பிள்ளைகள் சீரழிந்துபோன நிகழ்வுகள் இங்கே நிறைய நடந்துகொண்டிருக்கின்றன. அதேவேளை புதிய சூழலுக்கு ஏற்பத்தான் தங்கள் பிள்ளைகள் மாறிகொண்டிருக்கின்றார்கள் என்று புரியாமல் பிள்ளைகளை ஒடுக்கிக்கொண்டிருக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். பருவவயது மாற்றம் இன்னபிற சுழற்சி வட்டங்களுக்குள் திணறிக்கொண்டிருக்கும் பிள்ளைகள், தமது பெற்றோர்களும் தம்மை வளர்க்க வைக்க அவர்கள் வாழும்/பழகும் சூழலிற்குள் சிக்கிக்கொண்டு பல விதமான அழுத்தங்களோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பலவேளைகளில் மறந்துவிடுகின்றார்கள். நம்மைபோன்ற கலாசார பின்புலங்களோடு வருகின்ற பெற்றோர்களில் அநேகர், பிள்ளைகள் மட்டுந்தான் தமது எதிர்காலமென நினைத்து பிள்ளைகளை வளர்க்கத் தொடங்குகின்றார்கள். எனவே பிள்ளைகள் தமது விருப்புக்களுக்கு எதிராய் சிறிது நகரும்போதுகூட உடனேயே அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தொடங்குகின்றார்கள். பிறகு இரண்டு தரப்பினரும் மன உளைச்சல்களுக்கும் நம்பிக்கையீனங்களுக்கும் ஆளாகுகின்றனர்.

இங்கே, Aqsa Parvez கொல்லப்பட்டதை எதன் பொருட்டும் எவரும் நியாயப்படுத்தமுடியாது. மேலும் பர்தா அணிவது பற்றி, வ.கீதா ஒரு கலந்துரையாடலில் கூறிய கருத்தையே எனது கருத்தாகவும் இங்கே பதிவு செய்கின்றேன். பர்தா அணிவது குறித்து முஸ்லிம் சமூகமே தீர்மானிக்கவேண்டியது. குறிப்பாய் முஸ்லிம் பெண்களுக்குரிய தேர்வே தவிர பிறர்க்கு உரியதல்ல. ஒரு முஸ்லிம் பெண்ணேதான் அவர் hijab அணிய வேண்டுமா அல்லது வேண்டாமா என்று அவரது விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கவேண்டுமே தவிர நாங்களல்ல. இவ்வாறான தேர்ந்தெடுக்கும் ஒரு சுதந்திரமான வெளி முஸ்லிம் பெண்களுக்கு கொடுக்கப்படவேண்டும் என்று மட்டுமே -வெளியாட்களாக- நாங்கள் வற்புறுத்தவேண்டும்.

இரண்டு சம்பவங்களை எடுத்துக்கொள்வோம்.
(1) உயர்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலங்களில், ஒரு வானொலி நிகழ்ச்சியைக் கேட்க முடிந்திருந்தது. அதில் பெற்றோர் X பிள்ளைகள் என்ற புள்ளியில் விவாதம் நடந்துகொண்டிருந்தது. அநேகமானவர்கள் பிள்ளைகளையே பிறாண்டிக்கொண்டிருந்தார்கள். கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஒரு தாய், தனது மகள் இன்று நண்பர்களோடு படம் பார்க்கச் சென்றிருக்கின்றார்... ஆண்கள்/பெண்கள் என்று பலவேறு கலாசாரப்பின்புலங்கள் உள்ள நண்பர்களோடு போயிருக்கின்றார்..என்னிடம் அனுமதி கேட்டுத்தான் எனது பிள்ளை சென்றார் என்று கூறியிருந்தார். மேலும், இவ்வாறு இரண்டு தரப்பையும் அழுத்தாத புரிந்துணர்வுடன் நாம் பிள்ளைகளை அணுகவேண்டுமென அவர் கூறிக்கொண்டிருந்தார். ஆனால் நமது பண்பாட்டைக் காக்கும் ஆகிருதிகள் சும்மா விடுவார்களா என்ன? இதெல்லாம் ஒரு பிள்ளை வளர்ப்பா? இப்படிப் போகின்ற பிள்ளை அங்கே என்ன செய்துகொண்டிருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா அதாம் இதாமென்று வானொலியில் வந்து அலட்டத் தொடங்கியிருந்தார்கள்.

(2) ஈழத்தில் பைலாப்பாட்டுக்களில் கலக்கிய ஏ.ஈ.மனோகரன், நித்தி ஆகியோர் கலந்துகொண்ட ஒரு நிகழ்வுக்கு போயிருந்தேன்/தோம். இவ்வாறான நிகழ்வுகளை கர்நாடக சங்கீத சபாக்களைப் போல இறுக்கமாய் இருந்து பார்ப்பதில் நம்மவர்கள் வல்லவர்கள்.. அந்நிகழ்வில் மேடையில் பாடிக்கொண்டிருப்பவர்களே -சபையின் இறுக்கத்தைப் பார்த்து- எழும்பி ஆடுங்களென அறைகூவல் விடுத்தபோது வளாக நண்பர்கள் எழும்பி ஆடத் தொடங்கியிருந்தார்கள். அப்படி ஆடிக்கொண்டிருந்தபோது பெற்றோர்/உறவினர்களோடு வந்திருந்த சில பெண்களும் தங்கள்பாட்டில் எங்களுக்கருகில் வந்து ஆடத்தொடங்கினார்கள். உடனே நமது கலாசாரக்காவலர்கள் அதெல்லாம் அப்படியிருக்கூடாதென அந்தப்பெண்களை சிறிது நேரத்திற்குள்ளே திருப்பி அனுப்பியிருந்தார்கள். இத்தனைக்கும் அந்தப்பெண்கள் தமது பெற்றோரின் அனுமதியுடன் ஆட வந்திருந்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது. பெற்ற பிள்ளைகள் மீது பெற்றோரைவிட நமது கலாசார காவலர்களுக்கு இவ்வளவு அக்கறையா என வியக்கத்தான் வேண்டியிருந்தது.

இவை எளிய உதாரணங்கள். இங்கே வரும் இலவசப்பத்திரிகையான மெட்ரோவில் ஒரு பெண் -பத்தி எழுத்தாளர்- கூறியதுதான் நினைவுக்கு வருகின்றது. நாம் பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் கூறி முழுமையான மனிதர்களாய் வளர்த்துவிட முடியாது. ஒன்றேயொன்றைத்தான் நாம் உறுதியாக... பிள்ளைகளுக்குச் செய்யமுடியும். அவர்களாய் அனுபவங்களினுடாக வாழ்வைக் கற்றுக்கொள்ளும்போது என்ன நடந்தாலும் திரும்ப வரும்போது உங்களை ஏற்றுக்கொள்வோம் எனத்தான் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டுமென்று கூறுகின்றார்.

அண்மையில் ராப் பாடகர் நாஸும் (Nash) ஒரு நேர்காணலில், இன்றைய இளைஞர்கள் எம்மைப் பார்த்து பெரியவர்கள் குறைகளை மட்டும் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அலுப்புத்தருவது என்ன என்றால், தாங்கள் இளைஞர்களாய் இருந்தபோது தாங்கள் ஒரு தவறும் செய்யாத மாதிரி இந்தப்பெரியவர்கள் கதைத்துக்கொண்டிருப்பதுதான் என்று வெளிப்படையாக நாஸ் கூறியிருக்கின்றார். இன்றைய இளைய சமுதாயத்தைப் பற்றிக் குறை கூறும் வளர்ந்தவர்கள் - சற்று நிதானமாய் தமது கடந்துவந்த இளமைப் பருவங்களை நினைத்துப் பார்ப்பார்கள் என்றால்- பிள்ளைகளை இன்னும் நெருக்கமாய்ப் புரிந்துகொள்ள முடியும்.

மேலும் சொன்ன உதாரணத்தைப் போல, பிள்ளைகள் தாங்கள் செய்யவிரும்புவதைச் செய்யப்போகின்றோம் என்று பெற்றோரிடம் அனுமதி கேட்கும்போது பெற்றோர்கள் மறுத்தால் என்ன செய்வார்கள்..? அதை உடைத்து வெளியேறத்தான் செய்வார்கள். இவ்வாறு ஒரு பொதுவெளியில் ஆண்களோடு பெண்கள் ஆடுவதை மறுத்ததை நினைக்கும்போது, பெற்றோருக்குத் தெரியாது டான்ஸ் கிளப்புகளில் ஆடிக்கொண்டிருக்கும் பெண்கள்/ஆண்கள் நினைவுக்கு வருகின்றார்கள். ஒரு கட்டத்தில் கிளப்புக்களில் நிறைய மதுபானம் அருந்தியும் தாம் என்ன செய்கின்றோம் என்று அறியாது சீரழிந்துபோன பலர் இருக்கின்றார்கள். வெள்ளம் தலைக்கு மேலே வந்ததன்பிறகு ஒப்பாரி வைப்பதைவிட, ஒருவித புரிதலோடும், மெல்லிய கண்காணிப்போடும் பிள்ளைகளை அவர்களுக்குப் பிடித்ததைச் செய்யும்போது அவர்கள் சீரழியாமற் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் அல்லவா?. இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

3.
அண்மையில் வந்த ஒரு பேப்பர் இதழில் (Issue 83), P.கருணாகரமூர்த்தி என்பவர் (பொ.கருணாகரமூர்த்தியும் இவரும் ஒருவரா எனத் தெரியவில்லை) 'இரண்டு முத்தங்கள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றார். அ.முத்துலிங்கத்தின் 'சுளுக்கெடுத்தவன்' கதையில் ஆரம்பித்து, அன்ரன் செக்கோவோடு முடிச்சிட்டு, ஈழத்துச் சம்பவங்களோடு அந்தக் கட்டுரை விரிகின்றது. அதில் கனகா என்ற பெயரில் இருக்கும் பெண்களைப் பற்றிய பல 'சுவாரசியமான' விடயங்களைச் சொல்கின்றார். அனுராதபுரத்தில் - பலருக்கு ஆசை நாயகியாக இருந்த sex bomb- கனகா, வடமராட்சியில் -'அட்டகாசமான மார்புகள் மற்றும் மேல்பாதியை எப்போதும் காற்றாட வைக்கும் - இன்னொரு கனகா என்று பல பேரைப் பற்றிக்கூறுகின்றார்.

(கட்டுரைக்கு அப்பால்) இதை விட ஈழத்தில் - இனப்பிரச்சினை தீவிரமாவதற்கு முன்னர்- முக்கியமாய் யாழ்ப்பாணத்தில் சிங்கள மற்றும் மலையகப்பிள்ளைகளை எல்லாவிதமாய் சுரண்டிய ஒரு 'மூத்த சமூகம்' நமக்கு முன்னோடியாக இருந்திருக்கின்றது என்பதை நாமனைவரும் அறிவோம். போர் வந்து நம்மை அசைக்காவிட்டால் அந்த மற்றப்பக்க அத்தியாயம் தொடர்ந்து புதிது புதிது மாற்றப்பட்டு எழுதப்பட்டே கொண்டிருக்கும்.. கூடவே பல அப்பாவிகளின் வாழ்வு சீரழிக்கப்பட்டே கொண்டிருக்கும். ஆகவே எமது மூத்த தலைமுறை/பெற்றோர்கள் எந்தக்கூத்தையும் செய்யாது புனிதர்களாக இருந்தவர்களாகவுமில்லை. ஊருக்கொரு சண்டியர்களைப் பற்றி நாவலே எழுதக்கூடியவளவுக்கு சண்டியர்கள் ஒருகாலத்தில் ஈழத்தில் நிறைய இருந்திருக்கின்றார்கள் மட்டுமில்லை, இராணுவம் யாழைக் கைப்பற்றியபின்னர், சண்டியர்களும் சாதிவெறியர்களும் -ரெட் குரூப், தீனா குரூப், etc- என்று மீளவும் கோவணத்தை இறுக்கக்கட்டியபடி தலைநிமிர்ந்துமிருக்கின்றார்கள் என்பது அண்மைக்கால வரலாறு. எனவே தொடர்ச்சியாய் இவ்வாறு 'நல்ல விடயங்களை' நம்மினத்தின் மரபின் நீட்சியாய்க் கொண்டிருந்த நம் மூத்தோர்கள்தான்... அட நமது இளைய சந்ததி வீணாய்ப்போகின்றதென தொட்டதற்கெல்லாம் அலறிக்கொண்டிருக்கின்றார்கள்.

அதுகூடப் பரவாயில்லை, இந்த 'இரண்டு முத்தங்கள்' கட்டுரையை, கருணாகரமூர்த்தி எப்படி முடிக்கின்றார் எனப்பாருங்கள், ' ... வெட்டவெளியில் பட்டப்பகலில் ஒரு தமிழச்சி முத்தமிடுவதென்பது சற்று நெருடலைத் தந்தாலும், நான் சுளுக்கெடுக்கிறவனையும் வெகுவாக இரசித்தேன்' என்கிறார். கனகா என்கின்ற sex bomb..., காற்றாட மேற்பகுதியை தாரளமாய்த் திறந்து வைக்கின்ற வடமராட்சிக் கனகா... எல்லோரையும் தெரிந்த/இரசிக்கின்ற கருணாகரமூர்த்தியிற்கு ஒரு தமிழச்சி பட்டப்பகலில் வெட்டவெளியில் முத்தமிடுவது மட்டும் நெருடலைத் தருகின்றதே அது ஏன்? அங்கேதான் நமக்குள்ளிருக்கும் கலாசார அடிப்படைவாதம் பல்லிளிக்கத் தொடங்குகின்றது.


எங்கள் திருமணத்தில், மணப்பந்தலில் கூறைச்சேலையும் உடல்முழுக்க நகைகளையும் போட்டு வெட்கபட்டபடி இருக்கும் ஒரு மணப்பெண்ணைப் பார்த்து ஒரு வெள்ளைக்காரர், தேனிலவில் இந்தப் பெண் ஆடைகளையும் நகைகளையும் கழற்ற அனுமதிப்பாரா என்ற சந்தேகித்தால் கூட -நம் கலாசாரம் தெரியாத மேற்கத்தையவர் இப்படிக் கேட்கிறார்- பரவாயில்லை என ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் sex bomb கனகாக்களை எல்லாம் நன்கு தெரிந்த கருணாகரமூர்த்தியிற்கு தமிழ்ச்சி ஒருத்தி வெட்டவெளியில் முத்தமிடுவதைச் செரிக்கத்தான் கஷ்டமாயிருக்கின்றது. என்ன கொடுமையடா இது?

3.

கொல்லப்பட்ட Aqsa Parvez, வீட்டில் ஒரு ஆடை... வெளியில் பிடித்தமான ஆடை என்று அணிவது என்று அவர் மட்டுமே செயததில்லை. எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் வீட்டுக்குத்தெரியாமல் இருக்க என, பாடசாலையில் வந்து தொள்தொளவான ஆடைகள் மாற்றி -கறுப்பினத்தவர்களின் நாகரீகத்திற்கேற்ப- அணிந்ததைப் பார்த்திருக்கின்றேன். வளாகத்தில் இவ்வாறான பிரச்சினைகளை தாங்கள் தயாரித்தளித்த நாடகங்களில் கூட நண்பர்கள் பொதுவில் முன்வைத்திருக்கின்றார்கள். நான் காதில் கடுக்கன் போட்டுத்திரிந்த காலங்களில் - வீட்டால் அவ்வளவு பிரச்சினை வராது என்று தெரிந்தும்- ஒரு விதமான மனத்தடையோடே பெற்றோர்/சகோதரகளுக்கு முன் அதை அணியாமல் தவிர்த்திருக்கின்றேன். எனவே எல்லோரும் கலாசார அதிர்வுகளினூடாக நமக்குப் பிடித்ததைச் செய்யும்போது பலவிதமான குழப்பங்களுக்கு ஆளாகத்தான் செய்கின்றோம்.

இந்த முஸ்லிம் பெண், வீட்டிலிருக்கமுடியாது என்று இரண்டாவது முறையாகவும் வீட்டை விட்டு வெளியேறி தனது உடமைகளை மீண்டும் சேகரிக்கச் சென்ற சமயமே கொல்லப்பட்டிருக்கின்றார். கொஞ்சம் நிதானமாகவும், வெளிப்படையாகவும் இந்த விடயத்தை இந்தப்பெண்ணின் குடும்பம் அணுகியிருந்தால் எத்தனையோ பேரின் வாழ்வு சிதையாமல் தடுத்திருக்கலாம் (குடும்பவன்முறையால் பாதிக்கப்படுபவர்கள் போகும் shelter ற்கு போவதான எண்ணத்தில் இந்தப்பெண் இருந்திருக்கின்றார் எனச்செய்திகள் கூறுகின்றன). சில வருடங்களுக்கு முன் இப்படித்தான் எனது தோழியொருவரின் தங்கை ஒருவர் வீட்டிலிருந்து காண்மற் போயிருந்தார். அந்தப்பெண்ணை அவர்களின் முழுக்குடும்பமே தேடிக்கொண்டிருந்தது (அந்த அந்தரமான பொழுதில் தோழியின் தாயார் என்னோடு உரையாடியபோது என்ன ஆறுதல் சொல்வதென்று தவிர்த்ததும் இப்போதும் நினைவினிலுண்டு). பிறகு தோழியின் சகோதரி ஒரு ஷெல்ட்டரின் இருக்கின்றார் என்றறிந்ததும் அந்தக்குடும்பம் நிம்மதியடைந்தது. வீட்டில் பெற்றோரால் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய ஒடுக்குமுறை இல்லாதபோதும் இந்தப்பெண் அடிக்கடி வீட்டை விட்டு மறைவதும் வருவதுமாய் இருக்க, ஒருகட்டத்தில் ஷெல்ட்டரில் இருந்து அழைத்து வருவதை தோழியின் பெற்றோர்கள் கைவிட்டுவிட்டார்கள். ஆனால் ஷெல்ட்டர் வாழ்வு நாம் நினைப்பது போல் அவ்வளவு இலகு அல்ல என்று உணர்ந்து பின்னாட்களில் அந்தப்பெண் தோழியின் குடும்பத்தோடு இணைந்துகொண்டார். இதே முறையை இந்த பாகிஸ்தானிய குடும்பத்தினர் செய்திருந்தால் ஒருவரின் வீணான மரணத்தைத் தடுத்திருக்கலாம். எங்கள் எல்லோருக்குள்ளும் அடிப்படைவாதம் இருக்கின்றது. அது மதம் சார்ந்தும் மொழி சார்ந்தும் சாதி சார்ந்தும் கூடவே வந்தபடி இருக்கின்றது. அதனுள் இருந்து எப்படி விடுபவது என்பதே நமக்கு முன்னாலுள்ள முக்கியமான கேள்வி. இந்தப்பிள்ளையும் பெற்றோரும் சமரசம் செய்யக்கூடிய ஒரு புள்ளி நிச்சயம் இருந்தேயிருக்கும். கனடா போன்ற பல்கலாசார சமூகத்தில் சகிப்பத்தன்மையோடு வாழ்கின்ற நாம் வன்முறையில்லாது எந்த விடயத்தையும் சமரசம் செய்துகொள்வதற்கான வெளி நிச்சயம் இருக்கத்தான் செய்கின்றது என்பதை ஏன் இலகுவில் நாமனைவரும் மறந்துபோய்விடுகின்றோம்?

எமதேயான நம்பிக்கைகள்/விருப்புக்கள் மட்டுமே மிகச்சரியாக இருக்குமென இறுக்கமடையும்போது நாம பிறர் உரையாவதற்கான வெளிகளை அடைத்தே விடுகின்றோம். நாம் எமது நம்பிக்கைளோடு, எமக்குப் பிடித்ததைச் செய்வற்கு சுதந்திரம் இருக்கவேண்டும் என்று எண்ணுபவர்களாயிருப்பின், அதே நம்பிக்கைகளோடு இருக்கவும் விரும்பியதைச் செய்யவும் பிறரிற்கும் உரிமை இருக்கின்றது என்பதை வசதியாய் மறந்துவிடுகிறோம். இங்கே தான் நினைத்ததே சரியென்று நினைத்த தந்தையொருவர் மகளை இழந்திருக்கின்றார், கொலைகாரர் ஆகியிருக்கின்றார். ஒரு குடும்பமே சின்னாபின்னமாகி நிற்கின்றது.

பத்து வ்ருடங்களுக்கு முன் நான் வானொலியில் கேட்ட பெற்றோர் X பிள்ளைகள் தலைமுறை இடைவெளி உரையாடல்கள் இன்று தமிழ்த் தொலைக்காட்சி வரையில் நீண்டுகொண்டிருப்பதைப் பார்க்கின்றேன். நிச்சயம் இதுவொரு நல்லவிடயமே. நாம் தொடர்ந்து த்லைமுறை இடைவெளிகள் பற்றியும், புதிய கலாசாரத்தைப் புரிந்துகொள்வதைப் பற்றியும் தொடர்ந்து உரையாடும்போதே பலவிடயங்கள் குறித்து நாம் தெளிந்துகொள்ள முடியும். ஆகக்குறைந்து ஒருவர் ஏற்கனவே செய்துவிட்ட தவறை நாம் இன்னொரு முறை திருப்பச் செய்யாது அதன் வலிகளிலிருந்து தப்பிப் போய்விடவாவதுமுடிகின்றது. நாம் எல்லோரும் பிறந்த நாட்டைவிட்டு புலம்பெயர்ந்தது அதைவிட செழிப்பான ஒரு வாழ்வைத்தேடித்தான்..எனவே அப்படியொரு வாழ்வை நாம் அமைக்க விரும்புகின்றபோது பலவற்றை விலத்தியும் சில்வற்றை நமது வாழ்வில் சேர்த்துக்கொள்ளலும் அவசியமாகின்றது. எந்த விடயம் என்றாலும் -அது மொழியாய் இருந்தாலென்ன, கலாசாரமாய் இருந்தாலென்ன, மதமாய் இருந்தாலென்ன- அது திணிக்கப்படாது இயல்பாய் உள்வாங்கப்படும்போதே அது நீடித்து நிற்கும். வற்புறுத்தித் திணிக்கப்படும் எதுவும் அதன் எதிர்விளைவை நாம் திணிப்பதைவிட இன்னும் மோசமாய்க் காட்டும் என்பதை ஒருபோதும் மறந்தோ/மறுத்தோ விடமுடியாது.

குறிப்புகள்:
- இதை பெற்றோர் X பிள்ளைகள் என்று இரண்டுபக்கமாய் எழுத விரும்பியிருந்தாலும், பிள்ளைகள் பக்கம் அதிகம் சார்ந்து நின்று எழுதியதாகத் தெரிகின்றது. ஒரு பெற்றோருக்கான அனுபவம் எனக்கில்லை என்பதால் இருக்கலாம்.
- ஒரு ஒழுங்கான அமைப்பிற்குள் கொண்டுவராமலே எழுத முயன்றேன். எனெனில் இவ்வாறான விடயங்களுக்கு முடிந்த முடிவென்பது எதுவுமேயில்லை. ஒவ்வொருவரைப் பொறுத்தும் அது தனித்துவமும் தனிப்பட்டதுமான விடயமாகும்.

- யாரோ ஒருவர், Aqsaவின் சம்பவத்தின் பிறகு, அனைவரும் முஸ்லிம்களின் ரக்ஸிகளைப் (taxi) புறக்கணிக்கவேண்டும் என எழுதியிருக்கின்றார். இவ்வாறான எதிர்ப்பிலிருக்கும் அரசியலையும் காழ்ப்புணர்வையும் நாம் மத/மொழி/கலாசார அடிப்படைவாதத்தை எதிர்ப்பதுபோல எதிர்க்கவே வேண்டும்.

அறிந்ததும் கரைந்ததும் குறித்து...

Tuesday, December 11, 2007

கரைதல்: .../.../...
ஃபிரைடா காலோ பற்றிய The Life and Times of Frida Kahlo என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். Frida என்ற Salma Hayek நடித்த திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு இவ் ஆவணப்படத்தில் சொல்வதற்குப் பெரிதாக ஒன்றுமில்லைத்தான். எனினும் ஃபிரைடாவின் உறவினர்கள், மாணவர்கள், ஃபிரைடாவின் ஓவியங்களால் ஆகர்சிக்கப்பட்டவர்கள், ஃபிரைடா உறவுகொண்டவர்கள் போன்ற மனிதர்களின் குரல்களினூடாகக் கேட்கும்போது ஃபிரைடா மீண்டும் உயிர்த்து வருவதான நினைப்பு வருகின்றது. 


இந்த ஆவணப்படத்தைப் பார்த்த சில நாட்களில் The Diary of Frida Kahlo: An intimate self-portrait என்ற ஃபிரைடாவின் அற்புதமான டயரிக்குறிப்பினை வாசிக்க முடிந்திருந்தது. ஓவியங்கள்/கவிதைகள்/உரைநடைகள் என ஃபிரைடா ஸ்பானிஸ் மொழியில் எழுதிய பக்கங்கள் அப்படியே அதில் பிரதியெடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாவது பகுதியாக ஆங்கில மொழிபெயர்ப்பும், ஃபிரைடா தனது குறிப்புகளை எழுதிய சந்தர்ப்பங்களுக்கான தொகுப்பாளரின் குறிப்புகளும் இன்னும் ஃபிரைடாவை அதிகம் அறிந்துகொள்ள வைக்கின்றன. 18 வயதில் மிகப்பெரும் விபத்தைச் சந்தித்து, கிட்டத்தட்ட 30ற்கும் மேலான அறுவைச்சிகிச்சைகளை தனது வாழ்க்கைக் காலத்தில் செய்து, கலகக்காரியாய் விளங்கிய ஃபிரைடா பற்றி முடிவில்லாது நிறைய எழுதிக்கொண்டேயிருக்கலாம். அதிக கலைஞர்களைப் போல ஃபிரைடாவும் அவர் வாழ்ந்த காலத்தில் அவரின் திறமைகளுக்காய் அடையாளங் காணப்பட்டவரல்ல. ஆனால் தனது குறுகியகால வாழ்வை (45 வருடங்கள்) கொண்டாடியவர் மட்டுமில்லாது தனது நாடு/கலாசாரம் மீது அதீத பற்றுயுடையவராகவும், ஒரு கொம்யூனிஸ்டாகவும் காலம் முழுவதும் இருந்தவர்.



ஒன்றிரண்டு விடயங்களையேனும் ஃபிரைடாவின் ஆளுமை குறித்துச் சொல்லவேண்டியிருக்கின்றது. அநேக கலைஞர்களுக்கு பிரான்ஸ், அமெரிக்கா மீதிருக்கும் மோகத்தைப்போல ஃபிரைடாவிற்கு இந்த நாடுகளுக்குச் சென்று வாழும் விருப்பு என்றுமே இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் மிகவும் அலுப்பைத்தருமிடங்கள இவைகளென நிராகரிக்கச் செய்கின்றார் எனத்தான் சொல்லவேண்டியிருக்கின்றது. அதுவும், பிரான்ஸிலுள்ள அறிவுஜீவிகள் பற்றிக்குறிப்பிடும்போது, 'இவர்கள் இரவிரவாய் கலாசாரம், புரட்சி, தத்துவம் என்று உரையாடிக்கொண்டேயிருப்பார்கள். விடியப்பார்க்கும்போது சாப்பிடுவதற்கு உணவு எதுவுமேயிருக்காது, எனெனில் இவர்களில் எவருமே வேலைக்குப்போவதில்லை' என்றும், அங்கிருக்கும் கலைஞர்களில் அநேகர் அலுப்பைத் தரக்கூடியவர்கள் எனவும் குறிப்பிட்டிருகின்றார். 


பெண்ணியம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப காலங்களில், ஃபிரைடாவும் பெண்விடுதலைக்கு ஒரு குறியீடாய் முன்வைக்கப்பட்டார் என்று வாசித்திருக்கின்றேன். எந்த அடிப்படையில் பெண்ணியவாதிகள் ஃபிரைடாவை முன்வைத்தார்கள் என்று தெரியாதபோதும், ஆண்கள் வாழக்கூடிய வாழ்வை பெண்களும் கட்டற்ற சுதந்திரத்தோடு வாழமுடியும் என்பதற்கு ஃபிரைடா ஒரு யதார்த்த உதாரணம் என்ற புரிதலையே நான் எடுத்துக்கொள்கின்றேன் (சிமோன் தி பூவா இன்னொரு உதாரணம்). ஃபிரைடாவிற்கு -bi-sexualயாய்- பல ஆண்கள்/பெண்களோடு உறவுகளிலிருந்தாலும், அவர் அடிமனதில் ஒரு ஆணிற்காய்த்தான் (டியாகோ ரிவேரா) காலம் முழுக்க ஏங்கிக்கொண்டிருந்தார் என்பதைக் கவனிக்கவேண்டும். ...நீ எனது தோழன்/நீ எனது தந்தை/ நீ எனது துணை/ நீயே நான்/ நீயே பிரபஞ்சம்... என ரிவேராவிற்காய் உருகிக்கவிதைகளை ஃபிரைடா தனது டயரிக்குறிப்புகளில் எழுதியிருக்கின்றார்.

மற்றும் Salma Hayekன் ஃபிரைடா திரைப்படத்தில், ரொட்ஸ்கி (Trotsky), ஃபிரைடாவின் வீட்டை விட்டுப்போவதற்கு, ஃபிரைடாவோடான ரொட்ஸ்கியின் நெருக்கம் என்று காட்டப்பட்டபோதும், அது மட்டும் உண்மையாக இருக்கச் சாத்தியமில்லை. ஆரம்பத்தில் நான்காம் அகிலம்/ரொட்ஸ்கியோடு நெருக்கமாய் இருந்த ரிவேரா பின்னர் ரொட்ஸ்கியோடு முரண்படத்தொடங்கியதும் ரொட்ஸ்கி வேறிடம் நோக்கி நகர்வதற்கு முக்கிய காரணமாகும். ஆனால் முரணாய், ரொட்ஸ்கியோடு ஃபிரைடாவிற்கு (ஃபிரைடாவின் சில ஓவியங்களில் ரொட்ஸ்கியிற்கும் இடமுண்டு) நெருக்கமிருந்தபோதும், மார்க்ஸ், லெனின், ஸ்ராலின், மாவோ என்றுதான் குறிப்பிட்டு கம்யூனிசத்தை அடையாளப்படுத்துகின்றாரே தவிர, ரொட்ஸ்கியை அந்தப்பெயர்களுக்கிடையில் சேர்க்கவில்லை. இறுதிக்கால ஃபிரைடாவின் டயரிக்குறிப்புகளில் கூட ஸ்ராலினின் பெயரைக் குறிப்பிட்டு கம்யூனிசத்தைப் போற்றுகின்றாரே தவிர, ரொட்ஸ்கியைப் பற்றி எழுதிய எதையும் காணமுடியவில்லை..

ஃபிரைடாவின் ஓவியங்களே ஒரு சுயவரலாற்று நாவலுக்கு நிகரானதுதான். தன் சுயமழித்தல் மூலம் தன்னை அடையாளப்படுத்தும் ஃபிரைடாவின் ஓவியங்கள் மிகவும் உக்கிரம் வாய்ந்தவை. வரையப்பட்ட -150ற்கு மேற்பட்ட- ஓவியங்களில் மூன்றிலொரு பங்கு சுய ஓவியங்களே (self-portrait) என்பது கவனிக்கத்தக்கது. நிர்வாணமாய் வரையப்பட்ட ஓவியங்கள் கூட இச்சையைத் தூண்டுபவனவாயின்றி உடல் சார்ந்த வாதைகளை பார்ப்பவரிடையே படியவிடுபவை. நிர்வாண மொடல்களை வைத்து ஓவியங்கள் வரைந்த டியாகோ ரிவேராவிற்கு எதிர்ப்புள்ளியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஃபிரைடா முயன்றிருக்கின்றார் என்றும், தன் உடலை வெளிப்படையாக அதன் வலி/வாதைகளுடன் முன் வைக்கத் தயங்கவில்லை என்ற மாதிரியான வாசிப்புகளுக்கும் சாத்தியமுண்டு. அத்துடன் பிற கலைஞர்களால் நிர்வாணமாய் வரையப்படும் அதிகமான பெண்ணுடல்கள் அழகியல்தன்மையில் தான் வரையப்பட்டிருக்கின்றன/இரசிக்கப்பட்டிருக்கின்றன என்பதும் கவனத்திற்குரியது.

சில வருடங்களுக்கு முன் ஒரு நண்பர் மொன்ரியலில் வீடொன்று வாங்க முயற்சித்தபொழுதில், அவரோடு சேர்ந்து சில வீடுகளைப் பார்த்தபோது, சென்று பார்த்த ஒரு வீடு முழுவதும் ஃபிரைடாவின் ஓவியங்கள் மாட்டப்பட்டதைக் கண்டிருக்கின்றேன். இவ்வாறு உடல்சார்ந்த வாதையை அழுத்தமாய்ப் படிமமாக்கும் ஃபிரைடாவின் ஓவியங்களை எப்படித் தினமும் பார்த்துக்கொண்டு இயல்பான வாழ்வியலுக்குள் அலைந்து திரிய அந்த வீட்டிலிருப்பவர்களால் முடிகின்றது எனத்தான் வியந்திருக்கின்றேன்.

----------

அறிதல்: .../.../...
மனுசருக்கு சிரித்து சிரித்து ஆஸ்மா இழுக்கத் தொடங்குமா? மனம் விட்டுச் சிரித்தால் மட்டுமில்லை, நீண்ட நேரத்துக்கு தொலைபேசினால் கூட மூச்சிழுக்க அவஸ்த்தைப்பட்டு inhaler தேடவேண்டியதாகிப்போய்விடும் விசித்திரமான உடலமைப்பு எனக்குரித்தானது. சார்ளி சாப்பிளின், மொடர்ன் ரைமஸ் (modern times) பார்த்து வந்த சிரிப்பில் இரண்டு மூன்று முறை குறுகிய நேர இடைவெளியில் இன்கேலரை எடுக்கவேண்டியதாகிப்போய்விட்டது. இனியும் தொடர்ந்து பார்த்து சிரித்துக்கொண்டிருந்தால், மருந்து overdose ஆகிப்போய்விடும் என்ற பயத்தில் அரைகுறையில் நிறுத்திவிட்டு தூங்கப்போய்விட்டேன் (பிறகு இடைவெளி விட்டு விட்டு பார்த்துமுடித்தேன்). 1930களில் வந்த அந்தப்படத்தில் எவ்வளவு நவீனமாயும், நாசூக்காயும் விடயங்களைத் தட்டிக்கேட்டும் சாப்ளின் எடுத்திருக்கின்றார் என்று நினைக்கும்போது வியக்க முடியாமல் இருக்கமுடியவில்லை. மனிதர்களுக்குப் பதிலாய், இயந்திரங்கள் மாற்றீடு செய்வதை சமூக நோக்கோடு விமர்சிப்பதோடு, அதிகார அமைப்பை தொடர்ந்து கேலி செயதபடி (இங்கே பொலிஸ்) இந்தப்படத்தில் இருக்கின்றார். செம்மறியாட்டுக் கூட்டத்தைக் காட்டிவிட்டு அப்படியே சடுதியாக வேலைத்தளத்திலிருந்து வெளியேறும் மனிதக்கூட்டத்தையும் ஒப்பிட்டுக் காட்டும் ஆரம்பக்காட்சியே ஒரு அருமையான தொடக்கம். மந்தைக்கூட்டத்தில் இருக்கும் ஒரு கறுப்பாடு மாதிரித்தான், சாப்ளினும் சமூகத்தோடு ஒத்தியங்காத வெளியாளாக (outsider/other) இப்படம் முழுதும் -எல்லாவற்றையும் எள்ளல் செயதபடி- வருகின்றார்.



இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும், படத்திற்கப்பால் இன்னொரு பிரதியாக விரியக்கூடியவை. அதுவும் மெளனக் காட்சிகளால் பார்ப்பவரை அப்படியே ஒன்றிக்க வைப்பது அவ்வளவு எளிதானதுமல்ல. இந்தப்படத்தில் பெண் பாத்திரமாய் நடிக்கும் Paulette Goddardயே நிஜவாழ்வில் சாப்ளினுக்கு துணையாக நீண்டகாலமாக இருந்தவர். இவர்களிருவரும் சேர்ந்து நடித்த இன்னொரு படம் The great dictator . Moderm Timesல் சில இடங்களில் உரையாடுவது மாதிரிக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்ததும் பின்னர் இறுதியில் அவையெல்லாம் வெட்டப்பட்டன என்பதும், வழமைபோல சாப்ளினின் படங்களில் அவர் தனியே போவது போலல்லாது அந்தப்பெண்ணோடு - வாழ்வு எவ்வளவு கடினமாயிருந்தாலும்- சேர்ந்து வாழ்வோமென நடந்துபோவதுடன் படம் முடிகின்றது. முதலில் எடுக்கப்பட்ட முடிவில், Paulette ஒரு கன்னியாஸ்திரியாவது மாதிரியும், சாப்ளின் தனியே பயணிப்பதாகவும் எடுக்கப்பட்டதாய் -படத்திற்குப்பின்பான காட்சிகள்- கூறுகின்றன. மொழிகளற்ற வெளியில் பலரது மனங்களை அசைத்துப்பார்த்த சாப்ளினின் படங்களைப் பார்க்கும்போது, இன்னமும் தமிழ்ச்சூழலில் சினிமா என்னும் ஊடகம் பொழுதுபோக்கிற்கு என்பதற்கு அப்பால நகராத நிலையை நினைக்கத்தான் பரிதாபமாய் இருக்கின்றது. திரைப்படங்களைப்போல, மொழிகளைத்தாண்டிச்சென்று எல்லோரோடும் உரையாடும் வலுவான ஊடகம் வேறு எதுவும் இருக்கின்றதா என்ன?

------

உரையாடல்: .../.../...
தான் சாப்பிடக்கூப்பிட்டாலின்றி உணவு மேசைக்கு ஒருபோதுமே வந்துசேராத எனது 'பெருமை' குறித்து அம்மா புலம்பிக்கொண்டிருந்தார். திரைப்படங்களை வெளியே பார்க்கப்போகும்போது மட்டுமே சாப்பிடப்போகின்றேன் என்று கேட்பவன் என்று உபரியாகவும் மெச்சிக்கொண்டிருந்தார். இப்படி 'திரைப்படம்' என்ற புள்ளியிலிருந்து அம்மாவின் கடந்த காலங்களுக்கு நனவிடை தோய்ந்து போக முடிந்திருந்தது. தானும், சித்தியுமாய் பல மணி நேரங்கள் பேருந்தில் பயணித்து யாழ் நகரத்திரையரங்குகளில் படம் பார்த்த காலங்கள் அவருக்குள் திரளத் தொடங்கியது; அப்படியே குடும்ப வரலாறுகளும்.

வெளியே ஸ்நோ பொழியத்தொடங்கியிருந்தது, சஞ்சிகையையொன்றைப் புரட்டிக்கொண்டு அம்மாவை பேசவிட்டிருந்தேன். கரையுடைத்த நதியாய் அம்மாவின் பால்ய காலங்கள நகரத் தொடங்கியிருந்தது. பல சுவாரசியங்கள் சம்பவங்கள் ஒவ்வொன்றாய் பனிக்குள்ளிலிருந்து இலைதுளிர்காலத்தில் துளிர்க்கும் செடிகளாய் அரும்பத்தொடங்கியிருந்தன. அம்மாவின் மாமா முறையான ஒருவர் குடியென்ற பெருங்கடலில் மூழ்கி முப்பத்தைந்து வயதிலேயே வாழ்வைத் தொலைத்திருக்கின்றார். கோர்ட்டில் வேலை செய்தபடியால் நன்கு குடித்துவிட்டு, தனது தோழர்களையும் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு சாப்பிட வந்துவிடுவாராம். எந்த நேரமும் அவரின் துணைவியார் (அவாவை எனக்கு நினைவிருக்கிறது, சோடா மாமியென்று நாங்கள் அழைப்போம்) இரவு பகலென்று பாராது அவித்துக் கொட்டிக்கொண்டேயிருப்பாராம். குசினியை விட்டு வெளியே சோடாமாமி வருவதே அரிது என்றார் அம்மா. ஆனால் இவை அனைத்தும் அவரது துணை இறக்கும்வரை. துணை இறந்தபின் சோடா மாமி வாழ்வைக் கொண்டாடியிருக்கின்றார். எங்கள் குடும்பத்தில் அவரைப்போலத் திரையரங்குகளில் நிறையப்படம் பார்த்த ஆட்கள் குறைவு என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்தார் (அநேகமாய் யாழ் நகரிற்கு அவர் போனார் என்றால் என்று இரண்டு படங்களை ஒரேநாளில் பார்த்துவிட்டு வ்ருவாராம்)

அதேபோல், -ஈழத்தில்- எனக்குத் தெரிந்தவளவில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு இன்னொரு செய்தி ஆசசரியமாயிருந்தது. (ஆகக்குறைந்தது தனது பெயரை எழுதத தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள் என்றே நம்பியிருந்தேன்) எங்கள் மாமா முறையான ஒருவருக்கு கையொப்பம் இடவோ அல்லது துப்பரவாய் வாசிக்கவோ தெரியாது .... ஆனால் மனுசன் பயங்கர சுவாரசியமான மனிதராய் அவரது இளமைக்காலங்களில் இருந்திருக்கின்றார். நண்பர்களோடு சேர்ந்து இளநீர்க்குலை/ கள்ளுமுட்டி, களவாடுவது/வெட்டுவது (வீட்டில் பயங்கர அடிவிழுந்தாலும் அசட்டை செயவதில்லை) என்று பெரிய விளையாட்டு எல்லாம் செய்திருக்கின்றார். இது போதாது என்று வேள்விக்கு என்று யாரோ வளர்த்த கொழுகொழு கிடாயை ஒருமுறை இரவோடு இரவாய் களவெடுத்துக்கொண்டு போய் இவரும் இவரது நண்பர்களும் இறைச்சியடித்து விருந்துண்டிருக்கின்றார்கள். தமது கிடாயைக் காணாது, கிடாயை வளர்த்தவர்கள் மாமாவிலும் அவரது நண்பர்களிலும், ஐயம் வந்து இவர்களைத் தேடியபோது இவர்கள் நல்ல குடியோடும் விருந்துண்ட களைப்போடும் எங்கையோ படுத்துக்கிடந்திருக்கின்றார்களாம். கிடாய்க்காரன் மூளைசாலியாய் எல்லோரின் கைகளையும் பிடித்து முகர்ந்து முகர்ந்து பார்க்க -கறி வாசம் வருவதா என்று- இவர்கள் இன்னும் கண்ணை மூடிக்கிறக்கமாய் கிடந்திருக்கின்றார்கள். பிறகு நடந்தது... வழமைபோல நமக்குத் தெரிந்த கதைதான்.

அம்மா குடும்பத்தினர் முன்பு இருந்த வீடு மண்வீடானதால், வீட்டில் ஒரு அறையில் தன்னுடைய சேமிப்பையெல்லாம் ஒரு மாமா பேணிக்குள் போட்டு புதைத்துச் சேகரித்துக்கொண்டிருந்தாராம். (மண்ணில் புதைத்திருக்கும், ஆனால் தோண்டியெடுக்காமல் காசு போடலாம்/எடுக்கலாம்). காசு புதிது புதிதாய் போட்டாலும், தனது சேமிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டிருக்க, யாரோ தான் தங்கள் கைக்காரியத்தை காட்டுகின்றார்கள் என்று தெளிந்து வீட்டிலிருந்தவர்களிடம் மாமா விளக்கம் கேட்டிருக்கின்றார். எவருமே தாங்கள் எடுப்பதில்லையென 'உண்மை' பேசியிருக்கின்றார்கள். கள்ளனைப் பிடிக்கவேண்டும் என்பதற்காய் சேமிப்பு உண்டியலுக்குள் ஒரு தவளையைப் போட்டு விட்டிருக்கின்றார். இதையறியாது கைவிட்டு காரியத்தைச் செய்யப்போன இன்னொரு மாமா, அய்யோ பாம்பு என்னைக் கடித்துவிட்டதென கத்திய கத்தில் பல நாட் கள்ளன் ஒருநாள் பிடிபடுவானென -தவளையால்- பிடிபட்டாராம். இப்படி பல சுவாரசியமான கதைகளை அம்மா சொல்லிக்கொண்டே போனார். ஒரு கட்டத்தில், ஒரு நாவலாய் எழுதகூடிய அளவுக்கு உங்கள் குடும்பத்து வரலாறு சுவாரசியமாக இருக்கின்றதெனச் சொல்லிக்கொண்டேன். அம்மா புன்னகைத்துகொண்டார்; இப்போது மனதுக்குள் -அசுரக்காற்று அடிக்காது- தனித்து பூவைப்போல விழும் எனக்குப் பிடித்த பனி பொழியத் தொடங்கியிருந்தது.

-------------

பகிர்தல்: .../.../...
நாம் தொலைத்த வாழ்வு/சொந்த நாடு பற்றி எவரும் பேச/எழுதத்தொடங்கினால் நம்மைப்போல எந்த நாட்டையும் முழுதாய்ச் சொந்தங்கொண்டாட முடியாத நாடற்றவர்களுக்கு, மிகுந்த சுவாரசியமாய் இருக்குந்தானே. அப்படி இலயிப்புடன் வாசித்த ஒரு புதினம், இஸபெல் அலண்டேயின், My Invented Country: A Nostlagic Journey Through Chile. தொடர்ந்து வாசித்துக்கொண்டுபோகுபோது, சிலியில் இருக்கின்றானா அல்லது நான் பிறந்த நாட்டில்' இருக்கின்றேனா என்ற மாதிரியான உணர்வுகள் வருமளவுக்கு, கலாசாரம்/மனிதர்கள்/ நம்பிக்கைகள் பொதுவாய் இருந்தன. க்டவுள் நம்பிக்கை/சாத்திரம்/அமானுஷ்ய சக்திகள் போன்றவற்றில் மிகுந்த விருப்புடையதுபோல, பெண்களை ஒடுக்கிக்கொண்டும், உடலுறவு இன்னபிற பற்றி உரையாடுவதை tabooவாய் பார்ப்பதிலிருந்து அதிக ஒத்த தன்மைகள் தமிழர்களுக்கும், சிலி மக்களுக்கும் இருக்கின்றதெனத்தான் சொல்லவேண்டும். நனவிடைதோய்தலாய் இருந்தாலும், அளவுக்கதிகமாய் நாட்டுப்பாசத்தில் உருகிவிடாமல் விமர்சனங்கள் வைக்கவேண்டிய இடங்களில் இஸபெல் அலண்டே தனது நாடு பற்றி விமர்சிக்கவும் செய்கின்றார். ஸ்பானியர்கள் எவ்வாறு அங்கிருந்த பூர்வீகக்குடிகளை ஒழித்தார்கள், தங்களோடு வற்புறுத்திக் கலக்கச்செய்தார்கள் என்பது பற்றியும் விலாவரியாக இஸபெல எழுதுகின்றார்.


அவரின் மாமா முறையான சல்வடோர் அலெண்டே இடதுசாரி அரசை சிலியில் அமைத்தபோது, Paula என்ற பெண்களுக்கான க்லாசார இதழில் ஆசிரியப்பொறுப்பை இஸபெல அலண்டே ஏற்று, பெண்களுக்கான முக்கிய பிரச்சினைகளுக்கான உரையாடல்களை (domestic violence, abortion, diet, sex, etc) துணிச்சலாக -ஆண்களின் பலவிதமான விமர்சனங்களுக்கிடையில்- நிகழ்த்திக்காட்டியிருக்கின்றார் (பெண்ணியம் என்பது என்னவென்று அறியாமலே தானொரு கலகக்காரியாக -தனது தம்பிகளுக்கு கொடுக்கும் அனைத்தும் சலுகைகள் தனக்கும் கிடைக்கவேண்டுமென அடம்பிடித்த சம்பவங்களையும்/சிந்தனைகளையும் இஸபெல் நூலின் ஆரம்பக்கட்டங்களில் குறிப்பிடுகின்றார்). சல்வடோர் அலண்டேயைக் கவிழ்த்த சிஜஏயின் பெருமைகளை கிழிகிழியென்று இஸ்பெல் கிழிக்கின்றார். அதேபோல், சல்வடோர் அலண்டே முன்வைத்த சில சீர்திருத்தங்கள் அவர் நினைத்தற்கு எதிர்மாறான சில விளைவுகளை மக்களிடையே கொண்டுவந்தது என உண்மைகளைப் பேசவும் செய்கின்றார் (வாழ்க்கைச்செலவு ச்டுதியாகக்கூடியது). அலெண்டேயின் காலத்தில், ஒவ்வொரு நாளும் பாண் வாங்கப்போகும்போது பாணின் விலை அதிகரித்துக்கொண்டுபோவது இன்னபிற பிரச்சினைகளைப்பற்றியும் பேசுகின்றார். எனினும் உண்மையான அக்கறையோடு நாட்டுக்கு உழைக்க விரும்பிய சல்வடோர் அலண்டேயிற்கு உரிய இடம் கொடுக்கப்பட்டே இஸபெல எழுதுகின்றார் (இன்றைய பொழுதில் வெனிசுலாவில் சாவோஸிற்கு நிகழ்ந்துகொண்டிருப்பதை ஒப்பிட்டுப்பார்க்கும் சந்தர்ப்பம் நமக்கு உண்டு). பிறகு இராணுவக்கிளர்ச்சியில் General Pinochet, சிலி மக்களுக்கு சிஜஏயின் உதவியுடன் நல்லாட்சி கொடுத்தது கடந்தகாலத்தின் மறக்கமுடியாத வரலாறு. இராணுவக்கிளர்ச்சியில் தானும் கொல்லப்படக்கூடுமென்ற பயத்தில் வெனிசுலாவிற்கு இஸபெல் புலம்பெயர்கின்றார். கிட்டத்தட்ட பத்துவருடங்கள் அங்கே வாழ்ந்த அவருக்கு நாடு விட்டு வந்த கவலை, ஒழுங்காய் வேலை கிடைக்காத மன அழுத்தம் என்ற இன்னபிறவற்றை அகதியொருவரின் நிலையில் நின்று இஸ்பெல விபரிக்கின்றார் (இலத்தீன் அமெரிக்காவில் அநேக நாடுகளில் ஸ்பானிஷ் மொழியாக இருந்தாலும் அதன் வித்தியாசம்/கலாசாரம்/ இன்னபிற நுண்ணிய அவதானங்களை சிலி X வெனிசுலாவை வைத்து இஸபெல் எழுதுகின்றார். ஒரே மொழி/கலாசாரம் ஒன்றாகவேவிருக்கும் இஸ்பெலிற்கே இத்தனை பிரசிச்னைகள்/அழுத்தங்கள் வரும்போது மொழி/கலாசாரம் அவ்வாறு பழக்கப்டாத, புலம்பெயர்ந்த எம்மைப்போன்ற அகதிகளின் survival கதைகள் விரிவாக பதிவுசெய்யப்படக்கூடியவை.



தனது கடைசிப்பெயரில் அலெண்டே என்ற இடதுசாரியின் பெயரை வைத்துக்கொண்டும், தான் இப்போது ஏன் கலிபோர்ணியாவில் இருக்கின்றேனென வாசகர்கள் நீங்கள் கேள்விக்கேட்கக்கூடுமெனவும் கூறி இஸபெல -தனது காதலால் மட்டுமே- இடம்பெயர்ந்தேன் என்று காரணம் கூறி, தனது துணை பப்புவா நியூகினியாவில் இருந்தால் தான் அங்கேதான் வசித்துக்கொண்டிருப்பேன் எனக்கூறுகின்றார். அதைவிட அமெரிக்காவில் தான் முழுதாக ஒட்டமுடியாத காரண்ங்களை விரிவாக இந்நூலில் குறிப்பிடுகின்றார். அமெரிக்க்ர்கள் எல்லாவற்றிலும் விரைவுதான், அது உணவாயிருந்தால் என்ன, உடலுறவாயிருந்தால் என்ன? எல்லாமே வேகந்தானென எள்ளலுடன் எழுதுகின்றார். ஒவ்வொருவரின் தனிப்பட்ட சுதந்திரம், பிரைவேசி காப்பற்றப்படுவதில் அமெரிக்கா தனக்குப்பிடித்திருக்கின்றது எனவும், எனினும் தன்னைப்போல ஒருவர் தெருவில் இறந்துகிடந்தால் கூட அதைக்கவனிக்காமல் போகக்கூடியவர்களாய் நிறைய அமெரிக்கர்கள் இருக்கின்றார்களெனவும் இஸபெல குறிப்பிடுகின்றார். அதேபோல் அமெரிக்காவில் இருக்குகின்ற இனத்துவேசத்தைப்பற்றியும் குறிப்பிடும் இஸபெல் அதேவேளை தங்கள் நாட்டைப்போல துவேசத்தை இயல்பென (சிலி மக்களுக்கு அரபியர்கள்/ஆசியர்கள் மீது வெறுப்பிருக்கிறதென்கிறார்) ஏற்றுக்கொள்ளாது, அமெரிக்க மக்கள் அதுகுறிதத விழிப்புணர்வுடன் உரையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது அது தனக்கு நிறைவாயிருக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றார்.

பலவிதமான் சுவாரசியமாய் சம்பவங்களை இப்புதினத்தில் இஸ்பெல் கூறியிருந்தாலும், சல்வடோர் அலெண்டேயைப் பற்றிக்கூறத்தொடங்கியபின் தான் நான் மிகுந்த சுவாரசியமாய் வாசிக்கத்தொடங்கினேன் இந்த நனவிடைதோயதலில் நேரடியாக வாசகரோடு உரையாடுவதான தொனியில் இஸபெல எழுதிக்கொண்டுபோவது புதினத்தோடு இன்னும் ஒன்றிணைந்துபோகின்றது. இஸபெல அலண்டேயைப் பற்றி எனக்குத் தெரிந்த சிலிப்பெண்மணி ஒருவரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது, தற்சமயம் சிலியில் பெண் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், சிலியில் கலாசாரத்துக்குப்பொறுப்பான முக்கியமான பதவியில் இஸபெல் நியமிக்கபப்ட்டிருக்கின்றார் என்று கூறிக்கொண்டிருந்தார். இன்னும் எனக்கு வாசிப்பதற்கு இஸ்பெல அலண்டேயின் நாவல்கள் தன்னிடம் இருந்தாலும் -ஒரு நூலைத்தவிர- மிகுதி அனைத்தும் ஸ்பானிஸில் இருக்கின்றதென்றார் (இஸபெல் ஸ்பானிஸில்தான் எழுதுகின்றார், ஆங்கிலம் அவருக்கு அவ்வளவு பரீட்சயமில்லை). பிறகு இஸபெல அலெண்டே, Paula என்ற இளவயதில் (28 வயதில்) நோயால இறந்துபோன அவரது மகளைப் பற்றி எழுதிய நாவலான Paula பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். தான் அந்நூலை வாசித்த காலத்தில் அந்நாவலின் தாக்கத்தால் தான் அழுதுகூட இருக்கின்றேன் என்றும் இப்போதும் அந்நாவலை நினைத்தால் ஏதோ செய்கின்ற மாதிரியாய் இருக்கின்றதென்றார். இப்படி வேற்றுமொழி நண்பர்க்ளிடம் உரையாடுகின்ற சந்தர்ப்பத்தில்தான் எங்கள் மொழியிலும் நல்ல எழுத்துக்கள் இருக்கின்ற்ன எனக்கூறி உரையாட எமக்கு அவ்வளவாய் ஆங்கிலமொழிபெயர்ப்புகள் இல்லையென்ற உண்மை உறைக்கின்றது.
........