கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மழைக்காலம்

Wednesday, October 20, 2010

(2006, சேக‌ர‌ம்)

மழையைச் சந்திக்கும் எப்போதும் நினைவில் வருவது இரண்டு விடயங்கள்தான். தடிமன் வந்துவிடுமோ என்ற பயமும், அவளைப் பறறிய நனவிடை தோய்தலும்தான். மழையை- காதலுடன், மனதை வருட வைக்கும் நினைவுகளுடன், துளித்துளியாய் மனதில் பொழியவைக்கும் எழுத்துக்களை எழுதாத படைப்பாளிகள் மிகக் குறைவே என்றாலும் மழைக்கு இன்னொரு பக்கமும் உண்டு. ஒழுகாத கூரையில்லாத வீட்டை உடையவர்களும், வீடற்று தெருவில் உறங்குபவர்களும் மழையுடன் வேறுவிதமான உறவுகளைத்தான் கொண்டிருக்கின்றார்கள்.

ஊரில் இருந்தபோது நோயின் நிமித்தம் பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டதால் மழையில் ஒருநாளும் ஆசை தீர நனைந்ததில்லை. ஓடுகளில் கல்லால் எறிவது போல பேரிரைச்சலுடன் விழும் மழைத்துளிகளைக் கேட்டபடி, வீட்டுக்கூரையின் மூலைகளில் பீலியைப்போல(?) வழிந்து ஓடுகின்ற நீரை விடுப்புத்தான் பார்த்திருக்கின்றேன். மேலும் ஓலையால் வேயப்பட்டிருந்த எங்கள் குசினியின் இடுக்குகளுக்குள்ளால் விழும் மழைத்துளிகள், அம்மா செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சாணத்தால் மெழுகும் தரையை குழிகளாக்குவதையும் பார்த்துமிருக்கின்றேன். அதைப் பார்க்கும்போதெல்லாம் அம்மா குண்டுத்தோசை சுடும்போது ஒவ்வொரு குழிகளிலும் தோசைமாவை வார்க்கும்போது பொங்கி தோசை வருவதைப் போல இந்தக் குழிகளிலும் நீர் விழுந்து விழுந்து சிலவேளை குமிழிகளை உருவாக்கின்றனவோ என்றுதான் உவமித்துக்கொள்வேன்.

மழைக்காலங்களில் நாம் வளர்க்கும் வீட்டுப்பிராணிகள் மீது ஏனோ இனந்தெரியாத பரிவு வந்துவிடுகின்றது. தங்கள் உடலைச் சிலிர்க்கவைக்க மழைத்துளிகளை உதறுகின்ற நாயை, கோழிக் குஞ்சுகளை, ஆட்டுக்குட்டிகளை மிக விருப்புடன் அதிக வேளைகளில் பார்த்துக் கொண்டிருப்பதுண்டு . அதுவும் சிலவேளைகளில் மழை பெருமழையாக உருமாறும்போது வீட்டுப் பிராணிகள் எங்கள் வீட்டு விறாந்தைக்கு பெற்றோரால் புலம்பெயர வைக்கப்படுகையில் இன்னும் நெருக்கமாய் அவற்றின் அசைவுகளை அவதானிக்க முடிந்திருக்கின்றது. மழை தொடர்ந்து பெய்கின்றபோது பாடசாலையும் இல்லாது வீட்டுக்குள் முடங்குகின்றபோது புத்தகங்களோடு விட்டுவிட்டு சில உரையாடல்களை நிகழ்த்த முடிந்ததில் ஒருவிதமான இதம் இருக்கிறது. வீட்டின் ஒரு அறை முழுதும் புத்தகங்களே நிரம்பியிருக்கும். அப்பா, நூலகங்களில் வருட இறுதிகளில் புத்தகங்கள் ஏலத்துக்கு போகும்போது விகடன், கல்கி, கல்கண்டு, கலைக்கதிர் (?), சினிமாப் புத்தகங்கள் என்று அள்ளிக்கட்டி கொண்டு வருவார். இவ்வாறான மழைப் பொழுதுகளில் அந்தப்புத்தகங்களை விறாந்தையில் வாரம்,மாதம் என்ற ஒழுங்கில் அடுக்கி பரப்பி மகிழ்வதுதான் எனது பொழுதுபோக்காய் இருக்கும். அப்படிச் செய்வது என்றுமே அலுக்க்காத விசயமாக இருந்திருக்கின்றது. அப்பாவுக்கு இருந்த புத்தகங்களின் மீதான வாஞ்சையும், அக்காவுக்கு வாசிப்பில் இருந்த தீராத மோகமும்தான் என்னைப் புத்தகங்கள் வாசிக்கத்தூண்டியிருக்கலாம் என்று இப்போது யோசிக்கும்போது தோன்றுகின்றது.. இப்படி எடுக்கப்பட்ட சஞ்சிகைகள் அத்தியாயம் அத்தியாயமாய் கட்டப்பட்டுத்தான், சாண்டியல்யனின் கடல் புறா, யவனராணி, சுஜாதாவின் பலகதைகள்(கரையெல்லம் செண்பகப்பூ இப்போதும் நினைவிலிருப்பது) போன்றவற்றை வாசிக்க முடிந்திருக்கிறது. இப்படி தொடராய் வந்தவற்றை அதுவும் ஓவியங்களுடன் வாசிப்பதில் இனம்புரியாத மகிழ்ச்சியும், உயிர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது.

மழைக்காலத்தில் மறக்கமுடியாத இன்னொரு நினைவு என்னவென்றால், அளவெட்டியையும் அமபனையையும் இணைக்கும் வீதியில் சைக்கிளோட்டிப் போவது. அந்த வீதியால போகும்போது இரண்டு பக்கமும் பசுமையாய் விரிந்திருக்கும் வயல்களில் இலயிக்காமல் எவரும் அவ்வளவு இலகுவில் கடந்துவிடமுடியாது. கமம் செய்வதற்கு நிலம் என்று எங்களுக்கு எதுவும் இல்லாதபோதும் வயல் மீது இருக்கும் என் காதல் அளவற்றது. அம்மாவோடு வீட்டில் வளர்க்கும் ஆடு மாடுகளுக்கு புல்லுச் செருக்குவதாய்ப் போவதிலிருந்து… அறுவடைகள் முடிந்தபின் மிளகாய்ச்செடிகளை இன்னபிற பயிர்களை விறகுக்காய் சேகரிப்பதிலிருந்து… ஊரில் இருந்தவரை எனக்கு வயல்களோடு நெருக்கமான பிணைப்பு இருந்திருக்கின்றது. அவ்வாறான ஒரு பொழுதில்தான் அண்ணா வாங்கிகொண்டுவந்த கொத்துரொட்டியை வாழைத்தோட்டம் ஒன்றில் முதன் முதலாய் சாப்பிட்டதும்… இன்னும் பசுமையாய் இருக்கிறது. இந்த குண்டும் குழியுமான -தாரையே தசாப்தங்களாய் காணாத- வீதியால் போகும்போது, என் வயதொத்தவர்கள் அல்லது குறைந்தவர்கள் வாழைக்குற்றிகளை, முறிந்து மிதக்கும் மரக்கிளைகளை படகாக்கி மழைக்காலங்களில் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்க பார்க்க ஆசை நுரை நுரையாகப் பொங்கத்தொடங்கும் (வழமையான நிலப்பிரசினைகளால் ஒவ்வொருத்தரும் நிலத்தை வெட்டி வெட்டி வீதி சிறுத்துக் கொண்டுபோனது இன்னொரு சுவாரசியமான விடயம்). நோயின் காரணத்தாலும் பெற்றோர் கண்டு விட்டால் என்னாகும் என்ற பயத்தாலும் வீதியில் நின்று அவர்களை இரசித்துவிட்டு கையசைத்துவிட்டு நகர்ந்தபடி இருந்திருக்கின்றேனே தவிர அவர்களோடு அசைதீர மழைநீரில் ஒருநாளும் சேர்ந்து விளையாடியது கிடையாது.

புலம்பெயர்ந்து வந்தபின்னும் மழையில் ஆசைதீர ஒருநாளும் நனைந்ததில்லை. அவள் -நான் இன்று முழுவதுமாய் மழையில் நனைந்தேன்- என்று சிலிர்த்துக் கூறியபோது என்னால் ஏன் இப்படி ஒருபோதும் இருக்கமுடியவில்லை என்றுதான் எண்ணத்தோன்றியது. வீட்டையே உலகமாய் திணிக்கப்படும் பெண்களுக்கு மழை -என்னால் புரிந்துகொள்ளமுடியாத- பல மொழிகளை அவர்களுக்காய்ப் பேசவும் கூடும். ஒரு மழைப்பொழுதில் பிறர் பற்றிய பிரக்ஞையின்றி நனைதல் என்பது ஒரு பெண்ணுக்கு மிகபெரும் சுதந்திரமாயும் இருக்கலாம். அவள் -உன்னோடு நனையும் ஒரு மழைப்பொழுதுக்காய் காத்திருக்கின்றேன்- என்கின்றாள். மழையை வீட்டுக்குள் இருந்து மட்டும் இரசித்துக்கொண்டிருப்பவனுக்கு அது எவ்வ்ளவு சாத்தியம் சாத்தியமின்மை என்று தெரியாதபோதும் என்றேனும் ஒருநாள் அவளோடு மழையில் முழுதாய் நானும் நனைந்துவிடக்கூடும் போலத்தான் தோன்றுகின்றது.

அப்போது…அந்தப் பொழுதை என்ன பெயரிட்டு அழைப்போம் கண்ணே?

(Friday, May 26th, 2006 at 8:55 am)

North Country (திரைப்படம்)

(2006: சேக‌ர‌த்திற்காய்...)

நிலக்கரிச் சுரங்கத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அதிலிருந்து தங்களது உரிமைகளைப் பெறப் போராடிய ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் இந்தப் படம் ஆவணப்படுத்துகின்றது.. ஒரு நல்ல சிறுகதை என்பது வெட்டி எடுக்கப்பட்ட கயிற்றின் பகுதி போல, எங்கே தொடங்குகின்றது எங்கே முடிகின்றது என்று தெரியாமல் இருக்கவேண்டும் என்று ஒரு படைப்பாளி கூறியதுமாதிரி, இந்தப்படமும் ஒரு புள்ளியில் திடீரென்று ஆரம்பித்து இன்னொரு புள்ளியில் சடுதியாய் முடிந்துவிடுகின்றது.

தனது ஆண் துணையால் அடித்து துன்புறுத்தப்பட, குழந்தைகளுடன் ஜோஸி தனது பெற்றோர் வீடு நோக்கிச் செல்வதுடன் படம் ஆரம்பிக்கின்றது. பெற்றோருடன் இருந்தாலும் ஜோஸி தனக்கென்று சொந்த வேலை தேடத்தொடங்க நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை பார்க்கப்போகின்றார். வேலைக்குச் சேரமுன்னர் வழமையான ‘கர்ப்பம் தரித்திருக்கின்றாரா’ போன்ற வைத்தியப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வேலையில் சேர்க்கப்பட்டாலும், ‘இது பெண்களுக்கு உரிய தொழில் அல்ல’ என்ற திமிருடன் ஆண்கள வேலைத்ளத்தில் பாலியல் சேட்டைகளைச் செய்தபடி இருக்கின்றனர். சுவர்களில், கழிவறைகளில், கெட்ட கெட்ட வார்த்தைகள் எழுதுவது, பெண்களின் உணவுப் பெட்டிகளில் sex toysஜ வைத்து ‘நீ வாறியா’ என்று பல்லிளிப்பது, அதற்கும் மேலாய் பெண்கள் வேலையின் பளுவில் இருக்கும்போது அவர்களின் முலைகளைப் பிடித்து, உறுப்புக்கள் பற்றி வக்கிரமான நக்கல்கள் செய்வது என்று பலவிதமான உடல் உள பாலியல் பாதிப்புக்கள் பெண்களுக்கு ஏற்படுகின்றது.

ஒரு கட்டத்தில் இவற்றை எல்லாம் சகிக்கமுடியாது என்று, ஜோஸி அந்த நிறுவனத்தின் உயர்பதவிகளில் இருப்பர்களிடம் முறையிடப் போகின்றார். அங்கே அவர்கள் இவரின் முறைப்பாட்டைக் கேட்கமுன்னரே, ‘நீ என்ன சொல்லப்போகின்றாய் எங்களுக்குத் தெரியும், ஆனால் அதற்கு முன் உனக்கு ஒரு சந்தோசமான செய்தியைத் தருகின்றோம் என்று கூறி, அவரை வேலையில் இருந்து நிறுத்துகின்றோம் என்கின்றார்கள். I’m not quiting என்றும் தனக்கு இந்த வேலை கட்டாயம் தனது வாழ்க்கைச் செலவுக்கு தேவை என்கின்றபோது, அப்படி என்றால் முறைப்பாடு எதுவும் செய்யாது ‘வேலையில் மட்டும் கவனம் செலுத்து’ என்று அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர்.

மீண்டும் ஜோஸி வேலைக்குபோனாலும், அங்கே நடைபெறும் வன்முறைகள் முன்பு இருந்த்தைவிட இன்னும் மோசமாகின்றது. தொழிலாளர்களுக்கு என்று தொழிற்சங்கம் இருந்து அதில் பெண் பிரதிநிதிகள் இருந்தாலும் இப்படி ஜோஸி செய்ததால் ‘தொழிற்சங்க நண்பர்களும்’ கைவிட்டுவிடுகின்றனர். சக பெண் தொழிலாளிகளும் ‘உன்னாலை எங்களுக்குத்தான் பிரச்சினை’ என்று ஜோஸியை விலத்தி வைக்கின்றனர். ஒரு கட்டத்தில் சக தொழிலாளி மிக மூர்க்கமாய்த் தாக்க, எதுவும் செய்யவியலாத நிலையில் வேலையை விட்டு ஜோஸி விலகுகின்றார்.

ஜோஸி வேலை செய்யும் சுரங்கத்தில்தான் ஜோசியின் தகப்பனார் வேலை செய்தாலும் ‘பெண்கள் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்யக்கூடாது’ என்று அதிக ஆண்கள் நம்புவதைப்போல நினைக்கும் ஒரு ஆணாய் அந்தத் தகப்பனும் இருப்பதால், தனது மகள் அங்கே வேலை செய்வதால் தனது ‘கெளரவம்’ பாதிக்கப்படுகின்றது என்ற கோபத்தில் ஜோஸியுடன் பேசுவவதை நிறுத்திக் கொள்கின்றார். அதைவிட தனது மகள் பதின்மங்களிலேயேயே கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று, அதற்கு யார் தகப்பன் என்று கேட்டபோது, தெரியாது என்று கூறிய பழைய கோபமும் தகப்பன் - மகள் உறவு உடைந்துபோனதற்கு இன்னொரு காரணமாய் இருக்கிறது.

தான் வேலைக்குப் போவதை நிறுத்தினாலும் ஜோஸி தளர்ந்துவிடவில்லை. நிலக்கரிச் சுரங்ககத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக வழக்குப் போட ஒரு வழக்கறிஞரை நாடுகின்றார். வழக்கு தங்களுக்குப் பாதகமாய்ப் போகின்றது என்று அறிகின்றபோது எதிர்த்தரப்பு ஜோசியின் தனிமனித ஒழுக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்துகின்றது. ஜோஸியின் இரண்டு பிள்ளைகளில், முதல் மகனுக்கு யார் தந்தை? என்று கேள்வி கேட்கின்றார்கள். ஜோஸி அத்ற்குப் பதிலளிக்கத் தயங்க, அவருக்கு பல sexual partners இருந்திருக்கின்றார்கள் என்று நிரூபணமாகின்றது, அவ்வாறே நிலக்கரிச் சுரங்கத்திலும் நடந்துகொண்டு பாலிய்ல வன்முறை நடப்பதாய் பொய்யான குற்றச்சாட்டை தங்கள் மீது சுமத்துகின்றார்கள் என்று நிலக்கரிச் சுரங்க நிறுவனம் நீதிமன்றத்தில் கூறுகின்றது. இறுதியில் அந்த உண்மையை ஜோஸி உடைக்கின்றார். தனது பதின்ம வயதில் தனது ஆசிரியர் ஒருவரால் பாலியல் வன்புணரப்பட்டு, ஆனால் அந்தக் கொடூரத்துக்காய் தனது வயிற்றில் ஒரு பட்டாம்பூச்சியைப் போல வளர்ந்த கருவை அழிக்க மனமில்லாதால் குழந்தையாய்ப் பெற்றுக்கொண்டேன் என்கின்றார். ஆனால் எதிர்த்தரப்பு இந்த வல்லுறவு நடந்துபோது சாட்சியாய் இருந்த ஜோஸியின் பாடசாலை ஆண் நண்பனையும் ‘ஜோஸி விரும்பித்தான்’ பாலியல் உறவு வைத்துக்கொண்டார்’ என்று கூறவைத்து வழக்கை திசைமாற்றுகின்றது. இதுவரை காலமும் வேறொரு காரணத்தைக் கூறி வளர்க்கப்பட்ட ஜோஸியின் மகனும், she is a liar, she is a whore… என்று தாயைக் குற்றஞ்சாட்டி விலகிப்போக ஜோஸி உடைந்துபோகின்றார். மேலும் நகரும் இத்திரைப்படம், எப்படி இந்த வழக்கு முடிந்தது என்பதையும், ஜோஸியின் தகப்பன் - மகள் உறவும் ஜோஸி- மகன் உறவும் என்னாவாயிற்று என்பதையும் இயல்பாய் காட்சிப்படுத்துகின்றது.

Charlize Theron எனக்குப் பிடித்த கொலிவூட் நடிகைகளில் ஒருவர். Monster படம் பார்த்தபோதே ‘பெண்களின் அழகு’ என்று நமக்குப் போதிக்கப்ப்ட்ட விடயங்களை உதறித் தள்ளிவிட்டு அந்தக் க்தாபாத்திரமாய் -முக்கியமாய் ஒரு கொலிவூட் நடிகை- மாறியிருந்தது வியப்பாயிருந்தது.. இத்திரைப்படத்திலும் பாத்திரத்துக்கேற்ற இயல்பான அழகையும் நடிப்பையும் வெளிப்படுத்தியிருப்பார். இவ்வாறான் படங்களில் தேர்ந்தெடுப்பதற்கும் நடிப்பதற்கும் தனி துணிச்சல் வேண்டும் என்றுதான் நினைக்கின்றேன். (இப்படியே நடித்துக்கொண்டிருந்தால் இவர் ‘ஒருமாதிரியான’ ஆள் என்று கொலிவூட்டில் ஓரங்கட்டியும்விடவும் கூடிய அபாயமும் உண்டு என்பதால்).

இந்தப்படத்தில் காட்டப்படும் வழக்கு முடிந்தபின்னரே முதன்முதலாய் அமெரிக்காவில் (1984ல்) sexual harassment policy என்ற சட்டம் (நிலக்கரிச் சுரங்கங்களில்) வேலை செய்யும் பெண்களுக்காய் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது முக்கியமானது. இன்று நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்யும் பெண்கள் மட்டுமில்லாது, பெண்களுக்கெதிரான அனைத்து வன்முறைகளுக்கு எதிராகப் போராடுபவர்கள்கூட கூட, நிஜத்தில் இதைச் சாதித்துக்காட்டிய அந்தப்பெண்ணை நினைவுகூரத்தான் செய்வார்கள். A long journey begins with a single step என்பதற்கு இணங்க சின்னக் காலடியை அந்தப் பெண் எடுத்து வைத்திருக்கின்றார், நீண்ட நெடும்பயணம் பெண்களுக்காய் காத்திருக்கின்றது அதன் அழகோடும், அசிங்கங்களோடும் குரூரங்களோடும்.

(Friday, March 10th, 2006 at 11:34 am )

Magic Seeds by V.S.Naipaul

Tuesday, October 19, 2010

-நாவல் பற்றிய சில குறிப்புகள்-
(2006ல் எழுதியது, சேகரத்திற்காய்...)

(1)
மத்திய வயதிலிருக்கும் விலி சந்திரனின் (Willie Chandran) வாழ்க்கையின் ஒரு பகுதியை இந்நாவல் கூறுகின்றது. இந்தியாவில் பிறந்து படிப்பின் நிமித்தம் இங்கிலாந்து சென்று, அங்கே போர்த்துக்கேய‌ப் பின்புலமுள்ள ஒரு பெண்ணைத் திருமணஞ் செய்து, பதினெட்டு வருடங்கள் ஆபிரிக்காக்கண்டத்தில் வசித்த விலி சந்திரன், உரிய அனுமதியின்றி ஜேர்மனியிலுள்ள தனது சகோதரி சரோஜினியுடன் தங்கி நிற்பதுடன் நாவல் ஆரம்பிக்கின்றது. சரோஜினி மூன்றாம் உலக நாடுகளின் பிரச்சினைகளை ஆவணப்படுத்தும் திரைப்பட முயற்சிகளில் ஈடுபாடுடையவர்.அவ்வாறான செயற்பாடுகளால் பல (இடதுசாரி) தலைமறைவு இயக்கங்களுடன் நேரடித்தொடர்புகளும் உடையவர்.

 வாழ்க்கையின் பெரும் பகுதியை நோக்கமில்லாது கழித்து mid-life crisisல் அவதிப்படும் சந்திரனை, இந்தியாவுக்குச் சென்று அங்கே ஒடுக்கப்பட்டவர்களுக்காய் போராடும் ஒரு இயக்கத்துடன் இணைந்து செய்ற்பட சரோஜினி ஆலோசனை கூறுகின்றார். சந்திரனுக்கு தனிப்பட்ட ரீதியாக எந்த அடக்குமுறைக்கும் பாதிக்கப்படாது விட்டாலும் ஒருவித ஆர்வத்த்தாலும், வாழ்க்கையின் வெறுமையாலும் இந்தியாவுக்குச் சென்று ஒரு இயக்கத்துடன் இணைகின்றார்.

சந்திரன் இந்தியா சென்று இயக்கமொன்றில் சேர்கின்றபோது, சரோஜினி வழிகாட்டிய இயக்கம் இரண்டாகப் பிளவுபட்டு இருக்க, சந்திரன் பிரிந்த இரு குழுக்களில் ஒன்றில் இணைகிறார். ஆனால் அது இவர் நினைத்த தலைமையின் கீழ் இயங்கிய (கண்டபலியின் கொள்கைகளுக்கு) நேர்மாறாக இருப்பதைக் கண்டு சலித்தாலும் வேறு வழியில்லாது அவர்களுடன் இணைந்து போராடுகின்றார். ஆரம்பத்தில்- பொலிஸ் பதிவுகள்- எதுவுமில்லாததால் ஒரு தகவலாளியாக இயக்கத்துக்குச் செயற்படுகின்றார். வேறு இரகசிய இடங்களிலிருந்து வரும் ஆயுதங்களை இயக்கத்தின் கரங்களுக்கு மாற்றவும், நிதியைச் சேகரிக்கவும் இன்னொரு போராளியுடன் நகரத்தில் சில வருடங்களைக் கழிக்கின்றார். பிறகு பொலிஸ் சந்திரனின் நண்பரைக் கைதுசெய்து, சந்திரனுக்கும் வலைவிரிக்க, நகரை விட்டு நீங்கி, இயக்கத்தின் தலைமை இருந்த காட்டுக்குள் இருந்து செயற்படத் தொடங்குகின்றார். இவர் சார்ந்த இயக்கத்தில் இருப்பவர்கள் அனேகர் இவரைப் போல மத்திய வயதில் இருப்பவர்களாகவும்- சிலர் இயக்கத்தில் 30,40 வருடங்கள் இருப்பவர்களாயும்- என்றோ ஒரு நாள் தாங்கள் நம்பிக்கொண்டிருக்கும் புரட்சி நிகழ்ந்துவிடும் என்ற கனவை இறுகப்பற்றிப் பிடித்தவர்களாகவும் இருக்கின்றார்கள். மேலும் ஒடுக்கப்பட்டவர்களுக்காய் போராடுகின்றோம் என்று கூறிக்கொண்டு உயர் சாதிக்காரர்கள் இயக்கத்தின் முக்கிய பதவிகளில் இருப்பவர்களாகவும், தீர்மானங்களை எடுப்பவர்களாய் இருப்பதுவும் சந்திரனுக்கு ஆச்சரியமளிக்கிறது.

நகரங்களுக்கும் தங்கள் செயற்பாடுகளை விரிவாக்கவேண்டும் என்று விரும்பிய இயக்கத்தின் தீர்மானம், அரசு, பொலிஸ் போன்றவற்றின் கண்காணிப்பால் மாற்றமடைகிறது. தாங்கள் தங்கியிருக்கும் காடுகளை அண்டிய கிராமஙகளை முதலில் மீட்டெடுத்து அங்கிருக்கும் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் இணைத்துக் கொண்டு நாடு முழுதும் புரட்சியை விரிவாக்க திட்டத்தை மாற்றி அமைக்கின்றனர்.

இயக்கம் பண்ணையாட்களிடம் இருந்து நிலங்களை மீட்டெடுத்து ஒடுக்கப்பட்டவர்களுக்காய் கொடுத்தாலும், அவர்கள் காலம் காலமாய் பழக்கப்பட்ட பழக்கத்திலிருந்து மாறமுடியாது, 'இது பண்ணையாட்களின் நிலம் எங்களால் பயிரிடமுடியாது' என்று ஒவ்வொருமுறையும் கூறிக்கொள்கின்றனர். இவர்களை, ஆயுதங்களை வைத்து மிரட்டினால்தான் மாறுவார்கள் என்றும், பொலிஸை சுட்டுக்கொன்றால்தான் இயக்கம் என்ற ஒன்று இருக்கிறது என்று நமபுவார்கள் என்றும் சந்திரன் தனக்குள் அலுத்துக் கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் சந்திரன் இயக்கத்தை விட்டு இன்னொரு தோழருடன் தப்பியோடி பொலிஸில் சரணடைகின்றார். தனக்கு சொற்ப சிறைத்தண்டனையே கிடைக்கும் என்று நம்பிய சந்திரனுக்கு பத்து வருடச் சிறைத்தண்டனை வழங்கப்பட சந்திரன் சோர்வும் வெறுமையும் அடைகிறார். இதற்கிடையில் இவரது சகோதரியும் தங்கள் தகப்பன் மரணத்தின் விளிம்பில் இருப்பதைக்கண்டு இந்தியாவுக்கு வருகின்றார். பிறகு தந்தையாரும் இறந்துவிட, அவர் நடத்திய ஆச்சிரமத்தை நடத்தப்போவதாயும் இனி இந்தியாவில் தங்கப்போவதாயும் சிறையிலிருக்கும் சந்திரனுக்கு சரோஜினி கூறுகின்றார்.

இலண்டனில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் சந்திரன் வெளியிட்ட ஒரு புத்தகத்தின் பதிப்பாளரின் உதவியால், குறைந்த கால சிறைத்தண்டனையுடன் சந்திரன் விடுதலையாகின்றார். பிறகு தனது கடந்தகால கசப்பான நினைவுகளைத் தாங்கிக்கொண்டு இங்கிலாந்திலிருக்கும் நண்பரொருவரின் வீட்டில் சென்று தங்குகின்றார். அங்கே அந்த நண்பருடன் நடைபெறும் நீண்ட உரையாடல்களும், வாழ்க்கை என்பது என்ன என்ற மாதிரியான கேள்விகளளுககு விடைகளைத் தேடுவதாயும், அந்த நண்பரின் மனைவியுடன்  உறவும் புதியவேலையும், முதலாளித்துவ உலகைப் புரிந்துகொள்வதுமாயும் நாவல் நீள்கிறது.

(2)
ஆரம்பத்தில் சுவாரசியமாகப் போகும் நாவல் பின்பகுதியில் மிக மெதுவாக நகர்ந்து, தொடர்ந்து வாசிக்கும் ஆர்வத்தை குறைக்கிறது. கவனமாக உற்றுப்பார்த்தால், வாசகர்களை ஆரம்பத்தில் எந்த அபிப்பிராயங்களை உருவாக்காமல் நாவலுக்குள் இழுத்துவிட்டு, அத்தியாங்கள் நீள நீள தனது வலதுசாரிக் கொள்கைகளை நாவலின் ஆசிரியர் திணிக்கத் தொடங்குவது கண்கூடு. நாவலின் ஆரம்ப அத்தியாயத்தில் ஜேர்மனியில் இருக்கும் தமிழர்கள் வ்ருகின்றார்கள். சந்திரனும் சரோஜினியும் மூன்றாம் உலகநாடுகளின் (தேசிய) போராட்டங்களைப் பற்றி உரையாடும்போது, ரோசாப்பூக்களை விற்கும் தமிழனைப் பார்த்து இந்த ரோசாப்பபூக்கள் எல்லாம் இவர்களின் நாட்டில் ஆயுதங்களாய் மாறும் என்ற மாதிரி சரோஜினி கூறினாலும், விமர்சனங்களை மீறி அவர்கள் போராடுவதற்கான நியாயங்களும் காரணங்களும் இருக்கின்றன என்கிறார். நாவலின் நீட்சியில் நாவலாசிரியர் தனது சொந்தக்கருத்துக்களை கதாபாத்திரங்களில் திணித்தாலும், சரோஜினியை ஒரு இடதுசாரி நம்பிக்கை உள்ள ஒருவராக அடையாளப்படுத்துவதால், தமிழர் போராட்டம் அரையும் குறையுமான மேற்கத்தைய புரிதல்களிலிருந்து தப்பிவிடுகின்றது.

வாழ்க்கையின் அரைவாசிக்கும் மேற்பட்ட காலத்தை வெளிநாடுகளில் வசித்த ஒருவர், முறையான காரணங்கள் இன்றி இந்தியாவுக்கு போராடப்போவதும், எந்தக் கேள்வியும் இல்லாது அவரை இயக்கம் ஏற்றுக்கொள்வதும், ஊர்/நகர மக்களும் வித்தியாசம் காட்டாது இயல்பாய் பழகுவதும் நாவலில் மட்டுமே நடக்ககூடிய விடயம். நாவலாசிரியர் ஒரு தெளிவான காரணத்தைக் காட்டாது சந்திரனின் பாத்திரத்தை -ஏதோ ஷொப்பிங்கு போவதுபோல- போராடவும் போவதாய் காட்சிப்படுத்தும்போதே நாவலின் சரிவும் ஆரம்பித்துவிடுகின்றது. எப்படி தங்கள் கொள்கைகள், கருத்துக்களை பரப்ப ஒரு கதைக்களன் தேவைப்படுகின்றதோ, அப்படியே தனது நம்பிக்கைளை விதைக்க நைபாலும், சந்திரன் என்ற முக்கிய பாத்திரத்தையும், இந்தியத் துணைக்கண்டத்தையும் பயன்படுத்திக்கொள்கிறார்.
இங்கிலாந்தில் வாழும் வாழ்வுதான் யதார்த்தமான வாழ்வு எனவும், தத்துவங்களால், புரட்சிகளால் ஆகப்போவதில்லை ஒன்றுமில்லையெனவும் இறுதியில் நாவலை முடித்துவிடுகின்றார் நாவலாசிரியர். தனது தந்தை ஏழை மக்களுக்காய் நடத்திக்கொண்டிருந்த ஆச்சிரமத்தை தன்னால் தொடர்ந்து நடத்த முடியாது இருக்கின்றதென சரோஜினியும் முடிவில் நம்பிக்கை இழந்துவிடுகின்றார். ஆரம்பத்தில் கட்டியமைக்கப்படுகின்ற அனைத்து நம்பிக்கைகளும் இறுதியில் தகர்ந்துவிடுவதாய்க் காட்டுவது தனி மனிதர்களின் வீழ்ச்சி என்பதைவிட, மூன்றாம் உல நாடுகளில் எதையும் செய்தல் சாத்தியமில்லை என்ற தொனிதான் எல்லாவற்றையும் மீறி ஒலிக்கிறது. ரின்னாட்டில் (Trindnad) பிறந்து இங்கிலாந்தில் பெரும்பகுதியைக் கழித்து, பிரிட்டிஷ் இராணியில் செல்லப்பிள்ளை பரிசான நைற் (Knight) விருதைப் பெற்ற ஒருவரிடமிருந்து மூன்றாம் உலப்பிரச்சினைகளையும் அங்குள்ள மக்களையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதுகூட ஒருவகையில் தவறுதானோ.

(Thursday, March 16th, 2006 at 10:03 am)