கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

புதினம்

Friday, October 20, 2006

-கள்ளம்' நாவலும் காமம் பற்றிய சில குறிப்புக்களும்-

நாம் எல்லோரும் நம் வாழ்வில் கள்ளம் செய்துகொண்டே இருக்கின்றோம். பெற்றோருக்குத் தெரியாமல், துணைக்குத் தெரியாமல், குழந்தைகளுக்குத் தெரியாமல், நண்பர்களுக்குத் தெரியாமல் என நுட்பமாய் எமக்கான கள்ளங்களைச் செய்துகொண்டிருக்கின்றோம். கள்ளங்கள் பிடிபடும்போது அவமானப்பட்டும், பிறரின் பார்வைக்கு அது அகப்படாதபோது குறுகுறுப்பான மகிழ்ச்சியுடன் அதைக்கடந்தபடியும் போய்க்கொண்டிருக்கின்றோம். தஞ்சை ப்ரகாஷின் 'கள்ளம்' நாவலும் பலரது கள்ளங்களை நம்முன் நிலைக்கண்ணாடியாக -அரிதாரங்களையின்றி- முன் நிறுத்துகின்றது. எனினும் வாசிக்கும் நமக்குத்தான் அவை கள்ளங்களாய்த் தெரிகின்றனவே தவிர, இந்நாவலிலுள்ள பல பாத்திரங்களுக்கு அவை இயல்பான வாழ்க்கை நடைமுறைகளாகத் தெரிகின்றன.

தஞ்சாவூர் ஓவியங்களை பராம்பரியமாகச் செய்துகொண்டு வருகின்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ராஜூ என்கின்ற கலைஞன், எந்த மாற்றமும் இல்லாமல் புராதனத்தை அப்படியே பின்பற்றி ஓவியஞ் செய்கின்ற தந்தையோடு முரண்படுகின்றான். சுயாதீனமாய் எதுவுஞ்செய்யாது, வெட்டி ஒட்டி கண்ணாடிச்சில்லுகளால் அலங்கரித்து வெளிநாட்டில் அவற்றை நல்லவிலைக்கு விற்று பணஞ்சம்பாதிக்கும் தனது தந்தையை மிக வெறுக்கும் ராஜு குடியிலும், கஞ்சாவிலும் மிதக்கின்றான். ராஜூ தனது மகன் என்ற காரணத்திற்காகவும், தனது கெளரவம் பாதிக்கப்படக்கூடாது என்றவகையிலும் ராஜூவின் 'அடாவடிகளை' சகித்து அவனது செலவுகளுக்கு கேட்ட நேரத்துக்கு எல்லாம் காசு கொடுத்து கவனிக்கின்றார் ராஜூவின் தந்தை. ஒருநாள் சிதைந்து போய்க்கொண்டிருக்கும் தஞ்சாவூர் அரண்மணையின் சிக்கலான தெருக்களில் ஒன்றில் பாலியல் தொழிலாளியான பாபியைச் சந்திக்கின்றான் ராஜூ. ஆனால் அவளை விட அந்தப் பாலியல் தொழிலாளிக்கு கூடமாட ஒத்தாசை செய்து சமைத்துக்கொண்டிருக்கும் ஒரு மராட்டியப் பெண் மீது ராஜூவுக்கு மையல் வருகின்றது. பாபியால் -தான் தெரிந்து வைத்திருக்கின்ற பாலியல் தொழிலால் எந்த ஆணையும் அடித்து வீழ்த்த முடியும் என்ற எண்ணத்தை-ராஜூவை நுட்பமான விதத்தில் ஈர்த்து ஜூம்னா வெற்றி கொள்கின்றாள். பாபிக்கு பொறாமை தீயாய் எழுகின்றது.

kallam

ஜும்னாவுடன் சேர்ந்து சேரியில் வாழத்தொடங்கும் ராஜூ சேரி மக்களின் கடவுள்களான சுடலை மாடனையும், காடனையும், இராயனையும், சூரனையும் தஞ்சாவூர் கண்ணாடிச்சில்லுகள் தெறிக்க தெறிக்க பிரமாண்டமாய் கட்டி எழுப்புகின்றான். அவனின் ஆளுமை கண்டு சேரிப் பெண்கள் பலர் அவனில் மையல் கொள்கின்றனர். தம் விருப்பங்களை நாகரீகம் பூசி மினுக்காமல் நேரடியாக ராஜூவிடம் தெரிவிக்கவும் செய்கின்றனர். ராஜூவை அந்தச் சேரிப் பெண்கள் மட்டுமில்லை அந்தச் சேரி ஆண்களும் தலையில் வைத்துக்கொண்டாடுகின்றனர். அன்றைய நாளின் பசியை எப்படித் தீர்ப்பது என்ற கவலையைப்போல அன்றைய நாளின் காமத்தைத் தீர்ப்பது அன்றைய நாளுக்குரியது என்பதாய் சேரி மக்களுக்கு வாழ்க்கை முறை இருக்கின்றதே தவிர கடந்தகாலம்/நிகழ்காலம் குறித்த எந்தப்பிரக்ஞையும் அம்மக்களுக்கு இருப்பதில்லை. தமக்கான -ஒழுங்கு நடைமுறைப்படுத்திய சமூகம் கூறும்- கள்ளங்களைத் தெரிந்தே செய்கின்றனர். ராஜூ தன்னில் மையல் கொள்ளும் பெண்களுக்கு -உடலகளைக் கலக்கச் செய்யாமல் ஆனால் ஒருவித காமத்தைத் தக்கவைத்தபடி- தனது தஞ்சாவூர் ஓவியக் கலையைக் கற்றுக்கொடுக்கின்றான். 'கருப்பையைக் கழற்றி வைக்காதவரை உங்களுக்கு எங்களைப் போன்ற ஆண்களிலிருந்து சுதந்திரம் இல்லையடி' என்று ராஜூ கூறிக்கொண்டாலும் பல பெண்களைத் தேர்ச்சியுள்ளவர்களாய், தமது உழைப்பிலேயே வாழ்வை நகர்த்தக்கூடிய கலைஞர்களாய் வளர்த்துவிடுகின்றான். அவர்கள் தங்கள்பாட்டில் கண்ணாடிச் சில்லுகளில் படம் வெட்டி ஒட்டி தஞ்சாவூரிலும் அதற்கு அண்மையிலுள்ள ஊர்களிலும் விற்று காசு உழைக்கத் தொடங்குகின்றார்கள்.

ஜூம்னாவுடன், ராஜூ சேரியில் வசித்தாலும் மற்றப் பெண்களின் நெருக்கத்தால் ஜூம்னா விலத்திப் போகின்றாள். அவள் பூமாலை கட்டி சம்பாதித்துக்கொள்கின்றாள். ஆனால் ஜூம்னாவின் ராஜூவாக மட்டுமே ராஜூ அந்தச் சேரி மக்களால் பார்க்கப்படுகின்றான். ராஜூவை சந்திக்க முன், எத்தனையோ ஆண்களோடு படுக்கையில் சல்லாபிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஜூம்னாவுக்கு ஆண் உடல் வெறுத்துப் போகின்றது. அவளுக்கு ராஜுவின் உடலல்ல, தனக்காய் ஒருத்தன் இருக்கின்றான் என்ற துணையே தேவைப்படுகின்றது. ராஜூவுக்கும் காமத்தால் தன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஒரு பெண் ஜூம்னா என்பது மட்டும் தெளிவாய்த் தெரியும்.

ராஜூவின் தஞ்சாவூர்க்கலையும் நவீன ஓவியப்பரீட்சயமும் கலந்த ஓவியங்களின் புகழ் தஞ்சாவூரில் மட்டுமில்லாது, தமிழ்நாடு தாண்டி வெளியிலும் பரவுகின்றது. இறுதியில் 'உனக்கு ஒன்றுமே தெரியாது' என்று திட்டி அனுப்பிய ராஜூவின் தந்தை, மகனின் திறமை கண்டு வியந்து தனக்குப்பின் தனது ஓவிய நிறுவனத்தை நீதான் நடத்தவேண்டும் என்று சேரிக்குள் வருகின்றார். ராஜுவோ இன்னும் என்னை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையேன விசராந்தியாகச் சிரிக்கின்றான். மேலும் சேரிக்கு வரமுன்னர் தன்னில் மையல்கொண்ட நண்பனின் தங்கை தனது தந்தையிற்கு மனைவியாக இருப்பதைக் கண்டு இது வாழ்வின் விந்தையென திகைக்கின்றான்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்குள் (சாதிக்குள்) சனாதனமாய் இறுகிக்கிடந்து விரைவில் அழிந்துபோய்விடும் என்ற தஞ்சாவூர் ஓவியப்பாணியை எல்லாச் சமூகங்களிலும் பரப்பி -காலங்களுக்கேற்ப மாற்றமடைந்து- தொடர்ந்து உயிர்த்திருக்கும் என்று நம்பிக்கை கொள்கின்றான் ராஜூ. சேரிக்குள் இருந்த பறையர், தேவர், கவுண்டர் பெண்களை மட்டுமில்லை, உயர்சாதியினராக தங்களைக் காட்டிக்கொள்வதில் பெருமிதப்படும் பிராமணப்பெண்களும் சேரிக்கு வந்து கற்கப்போகின்றோம் என்கின்றபோது ராஜு மறுப்பேதுமில்லாமல் சேர்த்துக்கொள்கின்றான். ஆனால் அதேசமயம் பாடத்திட்டங்களிலுள்ள கற்பித்தல்முறைகளை நிராகரித்து நேரடியாக ஓவியம் வரைவதிலிருந்து கலையைக் கற்றுக்கொள்வதையே ராஜூ ஊக்கப்படுத்துகின்றான். எனினும் அவன் தனக்குப்பின் இந்தக்கலையைப் பரப்புவார்கள் என்று தீவிரமாய் நம்புகின்ற ஒரு பெண் தற்கொலை செய்துகொள்கின்றாள். இன்னொரு பெண் யாரோ ஒருவனுடன் சென்னைக்கு ஓடிப்போகின்றாள். இப்படியாக வீழ்ச்சிகள் ஆரம்பிக்கின்றன. எனினும் காற்றைப் போன்றவன் கலைஞன், வீழ்ச்சிகளையும் எழுச்சிகளையும் பற்றிக் கவலைப்படாது தனக்குப் பிடித்ததைச் செய்துகொண்டிருப்பான் என்கின்றமாதிரி ராஜூ எவ்வித அறிவிப்போ எதிர்காலத் திட்டமிடல்களோ இன்றி அந்தச் சேரியை விட்டு வெளியேறத்தொடங்குகின்றான். அப்படியே நாவலும் நிறைவுபெறுகின்றது.

இந்த நாவலில் ராஜூ என்ற ஒரு பாத்திரத்தைத் தவிர கவனப்படுத்திருக்கும் மிகுதி அனைத்துப் பாத்திரங்களும் பெண்களே. நாவலில் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை சேரியே முக்கிய கதைக்களனாய் இருக்கின்றது. சேரியின் மொழிநடையில் அம்மக்களின் வாழ்வுப்ப்க்கங்கள் இயல்பாய் விரித்துவைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு நாகரீகமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு அதுமட்டுமே உன்னதமான வாழ்க்கையென நம்பிக்கொண்டிருக்கும் பலரால், இந்நாவலின் மொழிநடையை அவ்வளவு இலகுவாய் ஜீரணிக்கமுடியாது. எல்லாக் 'கெட்ட வார்த்தைகளும்', எல்லா 'அசிங்கங்களும்' (நாவல் ஆரம்பிப்பதே பாலியல் தொழில் செய்யப்படும் ஒரு பகுதியில்.. கெட்ட வார்த்தைகளுடன் தான் உரையாடலும் ஆரம்பிக்கும்) முகமூடிகளின்றி இந்நாவலில் பேசப்படுகின்றது. ஒரே களத்தில் இந்நாவல் சுழன்றாலும் பாத்திரங்களின் உரையாடல்களால் நாவலை அலுப்பின்றி வாசித்து முடிக்கக்கூடியதாய் இருப்பதை நாவலின் பலம் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். ஆனால் ஒருவித மணிப்பிரவாள நடைக்குள் ப்ரகாஷ் சிக்கிக்கொண்டிருப்பது வாசிப்பிற்கு இடையூறு ஊட்டுவதும், சேரி மக்களின் பேச்சின் நடுவில் கூட இந்த மணிப்பிரவாளநடை கதாசிரியரை அறியாமலே வந்துவிடுவதும் ப்லவீனம் எனத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். (இந்நாவல் தஞ்சை ப்ரகாஷ் எழுத முடியாமல் வைத்தியசாலையில் நோயின் நிமித்தம் இருந்தபொழுதுகளில் ப்ரகாஷ் கூறக்கூற அவரின் நண்ப்ரொருவரால் எழுதப்ப்படடது என்ற குறிப்பையும் நாம் சேர்த்து வாசிக்கவேண்டும்).

நாவலில் விளிம்பு நிலை மக்களே முதன்மைப்படுத்தப்பட்டிருந்தாலும், சில குறிப்பிட்ட சொற்றொடர்கள் குறித்த அரசியல் குறித்தும் கவனிக்கவேண்டும். உதாரணமாய் 'பற சனத்த சும்மா சொல்லக்கூடாது. படுன்னு மடிய விரிக்கிறாளே(ப 172)' என்பதுமாதிரியான வாக்கியங்களை சேரியிலுள்ள பெண்கள் உபயோகிக்கின்றனர் (சேரியில் பறையர், கவுண்டர், தேவர் என்று எல்லவிதமான சனங்களும் இருக்கின்றனர்). இவ்வாறான உரையாடல்களை வாசிக்கும்போது அது பாத்திரங்களின் அடிமனக்குரலா இல்லை கதாசிரியரின் குரலா என்ற சந்தேகம் வருகின்றது.

இந்நாவலில் சமப்பாலுறவு பெண்கள் பற்றிய வர்ணனைகள் வருவதும், நாவலின் முடிவில் கூட இருபெண்களுடையே அவ்வாறான் ஒரு உறவு முகிழலாம் என்றமாதிரியான குறிப்பை விட்டுச்செல்வதும் குறிப்பிடவேண்டியதொன்று. இந்தக் கதையிலிருக்கும் பல பாத்திரங்கள் இரத்தமும் சதையுமாய் நடமாடிய /நடமாடும் மக்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றார் ப்ரகாஷ். இந்நாவலில் குறிப்பிட்டதைவிட மிக வெளிப்படையும், அழுக்க்குகளும் கசடுகளும் வெற்றிகளும் வீழ்ச்சிகளும் நிரம்பிய மனிதர்கள் அவர்கள் என்றாலும் அவற்றை அப்படியே அடையாளப்படுத்த/ஏற்றுக்கொள்ள தமிழ்ச்சமூகம் இன்னும் வள்ர்ந்துவிடவில்லை என்ற தனது ஆதங்கத்தையும் ப்ரகாஷ் வெளிப்படுத்துகின்றார். நாவலை வாசித்தபோது ஒரு வாசக மனோநிலையில் நின்று யோசித்துப் பார்த்தபோது நினைவுக்கு வந்தது ஜி.நாகராஜனின் 'நாளை மற்றுமொரு நாளே'யும், ஆதவனின் 'காகித மலர்'களும். 'கள்ளம்' நாவல் இவற்றின் பாதிப்பிலிருந்து எழுந்தது என்று நிறுவுவதல்ல இதன் அர்த்தம். நாகராஜனால் விபரிக்கப்பட்ட பாலியல் தொழில் செய்யும் பெண்ணும், 'காகிதமலரில்' வரும் உலகோடு ஒட்டிவாழ முடியாத (வெறுமை/தனிமை)யும் கொண்ட ஆணும் உடனே நினைவில் வந்து ஒட்டிக்கொள்கின்றனர்.

(2)
-ப்ரகாஷ் இன்று உயிரோடு இல்லாதபடியால்- அவர் முன்னுரையில் எழுப்பியிருந்த கேள்வியை யோசிக்கும்போது, காமம் உட்பட்ட இன்னபிற விடயங்களைத் தமிழில் எவ்விதக்கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாய் இன்றையபொழுதில் எழுதிக்கொண்டிருப்பவர்கள் என்றால் ரமேஷு -பிரேமைக் குறிப்பிடலாம் என்று நினைக்கின்றேன். அவர்கள் தமது இருபது வயதில் எழுதிய 'அதீதனின் இதிகாசத்திலிருந்து' தொடர்ந்து உடல்மொழி பற்றிய உரையாடல்களை விரிவாக்கியபடி இருக்கின்றார்கள். உடலை வியந்தபடியே அவ்வுடலை பல்வேறு கூறுகளாய் துண்டு துண்டுகளாக்கியபடி உடல் மொழியின் வினோதங்களை, உணர்ச்சியின் குவியல்களாக்கிவிடாது உரையாடுவதை ரமேஷ்-பிரேமின் எழுத்துக்களில் காணலாம். ஆனால் அதிலும் பல பலவீனங்கள் இருப்பதாய் தோழியொருவர் அடிக்கடி குறிப்பிடுவார்; அது அவரது வாசிப்பு.

சாரு நிவேதிதா மீது சில விடயங்களில் மரியாதை இருந்தாலும் -அவரோ அல்லது அவரின் நண்பர்களோ- சாருவை பாலியல் சேர்ந்த எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தும்போது சற்று அதிகப்படியோ என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது. சாருவின் சீ(ஜீ)ரோ டிகிரியிலிருந்து, இன்றைய (இணையத்திலிருக்கும்) பத்திகள்வரை -வாசிக்கும்போது- அவரின் பாலியல் பற்றிய உரையாடல்கள் நிமிடங்களுக்குள் jerk-off ஆக்கிவிடுகின்ற வகையைச் சேர்ந்த எழுத்தே தவிர காமத்தை அதன் இயல்போடு அணுகவில்லை என்றே கூறதோன்றுகின்றது. ஆனால் அதே சாருவே மற்ற நாட்டு இலக்கியங்கள்/திரைப்படங்களை வாசித்துவிட்டு அவர்கள் காமத்தை கலாபூர்வமாய் எழுதுகின்றனர்/எடுத்துத்தள்ளுகின்றனர் -தமிழில் தன்னைத்தவிர எவருமில்லை- என்று புலம்புவது என்பது முரண்நகைதான்.

ஜெயமோகனின் எழுத்துக்களில் காமம் இருந்தாலும் -ஒழுங்கு/ஒழுக்கம் என்பதில் ஜெயமோகனுக்கு இருக்கும் தீரா விருப்பால்- உடல்கள் பகிர்வது குறித்து குற்றவுணர்வுடன் அல்லது அவமானத்துடன் நகர்வதாய் பல இடங்களில் காட்டப்படுகின்றதே தவிர பரிபூரணத்தை அடைய முயற்சிக்கும் புள்ளிகளை வந்தடைவதே இல்லை. அதேபோன்று ஜே.பி.சாணக்கியாவின் எழுத்துக்களில், பாலியல் சார்ந்த சித்தரிப்புக்கள் முக்கியத்துவம் பெறுகின்றவேளைகளில், அவரது வர்ணனைகள் அதிகவேளைகளில் காமத்தை உணர்ச்சிக்குவியலாக்கும் முயற்சிகளாகிப் போய்விடுகின்றன. இந்தவகையில் ப்ரகாஷின் 'கள்ளம்' நாவல் உடல்மொழி குறித்து தீவிரமாய் உரையாடவிட்டாலும், விளிம்புநிலை மக்களினூடாக -இயன்றளவுக்கு- காமத்தை இயல்பாய் அணுகியிருக்கின்றதே என்றுதான் கூறத்தோன்றுகின்றது.

எனக்கான தெருக்கள்

Thursday, October 12, 2006

நான்கு பருவங்களில் பிடித்த பருவம் எதுவென்றால் இலைதுளிர்காலம் என்று தயங்காமல் சொல்வேன். இயற்கையின் நடனத்தினால் தெருக்களுக்கு வெவ்வேறு வர்ணம் வந்துவிடுவதைப் போல, பருவங்களுக்கேற்ப தெருக்களுக்கு விதம்விதமான வாசனைகள் இருப்பதை நீங்கள் உணர்ந்ததுண்டா? மழை பெய்து சுத்தமாய்த் துடைத்துவிட்ட, அதிகம் வாகனங்கள் பயணிக்காத ஒரு தெருவில் என்னைப் போல இப்போது நீங்கள் நடந்துகொண்டிருப்பீர்கள் என்றால் நிச்சயம் தெருவுக்குரிய தனித்துவமான வாசனையை நீங்களும் அனுபவித்து சிலிர்த்திருப்பீர்கள்.

புத்தனுக்கு பின்னால் ஒளிரும் வட்டத்தைப் போல, நிலவு மிகப்பிரமாண்டமாய் இந்நெடுங்கட்டடத்தின் பின்னால் விகசித்தெழுகின்றது. தெருவில் விழும் இக்கீற்றுக்களை உங்களுக்கு பிடித்தமான உருவங்களாய் நீங்கள் கற்பனை செய்து கொள்ளவும் கூடும். இயற்கையின் ஆலிங்கனத்தால் சிலிர்த்து சிவப்பும் செம்மஞ்சளுமாய் வெட்கிக்கின்ற மரங்களின் இலைகளினூடாக நீளும் நிலவின் கீற்றுக்கள் எனக்குள் சீன எழுத்துக்களாய்/கிறுக்கல்களாய் உருமாற்றம் பெறுகின்றன. சிறுவயதில் மிகவும் பாதித்த சீன ஓவியங்களும், அவற்றில் அதிகம் தோன்றும் மூங்கில்களும் பண்டாக்கரடிகளும் இப்போதும் நினைவில் தேயாமல் கைகோர்த்து வருகின்றன போலும்.

chinese2

இப்படி அமைதியும் அழகும் வாய்த்த தெருக்களாய் ஊரில் ஒருபோதும் எந்தத் தெருவும் இருந்ததில்லை. ஊர்த் தெருக்களை நினைத்தால் சந்திகளில் மிதக்கின்ற உடல்கள்தான் உடனே நினைவுகளில் வந்து உட்கார்ந்து கொள்கின்றன. ஆறடிக்கும் குறைவான தெருவைக் கடப்பதற்காய் உயிரைப் பயணம் வைத்திருக்கின்றீர்களா? இந்தியா இராணுவ காலத்தில் அப்படிக் கடந்திருக்கின்றோம், உயிரையும் பொருட்படுத்தாது. உயிர் மீதான் அக்கறையின்மையால் அல்ல; பசியின் நிமித்தத்தால் -உயிர் இழக்கும் பயமின்றி- என்னைப் போன்றவர்கள் கடந்திருக்கின்றோம். எங்கள் வீடுகளையும், அருகில் மிகப்பரந்திருக்கும் வயல்களையும் பிரிப்பது சிறு தெருத்தான். இந்திய இராணுவ காலத்தில் மிகப்பட்டினியாய் இருந்த காலங்கள் அவை. அடிக்கடி ஊரடங்குச் சட்டங்களும் வெளியிலிருந்து உணவுகளும் வராத பொழுதுகள். பசியைத் தீர்ப்பதற்கு என்று இருந்த ஒரேயொரு அட்சய பாத்திரம், யுத்தத்தால் இடைநடுவில் கைவிடப்பட்ட தோட்டங்கள். அங்கே வாடியும் வதங்கியும் இருக்கும் வெங்காயம், கோவா, தக்காளி, பீற்றூட் போன்றவை மட்டுமில்லை, களையாக வளரும் சாறணை(?) கூட எங்களின் பசிக்கு உணவாகியிருக்கிறது.

இந்த பீற்றூட்டிலிருந்தும் வெங்காயத்திலிருந்தும் இப்படி விதவிதமான உணவு வகைகள் தயாரிக்கமுடியுமா என்று அம்மா கறிகள் சமைத்து வியக்க வைத்த காலங்கள் அவை. அருகிலிருந்த சந்தியிலிருக்கும் இந்திய இராணுவத்தின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு தெருவைக் கடப்பது அவ்வளவு இலகுவில்லை. நாங்கள் சிறுவர்கள். இந்திய இராணுவம் எங்களில் பரிவு வைத்ததாலோ அல்லது அவர்களின் கண்களில் 'தீவிரவாதிகளாய்' வளர்வதற்கான பருவத்தை அடையாத காரணத்தாலோ என்னவோ நாங்கள் சூடு வாங்காமல் தப்பியிருக்கிறோம். ஆனால் அவ்வாறு அதிஸ்டம் வாய்க்காது சூடு வாங்கி கால்களை இழந்தவர்களையும், கைதாகி சித்திரவதைக்குள்ளானவர்களையும் நான் அறிவேன்..

ஈழத்தின் அனேக தெருக்களுக்கு வடுக்களாய் செல்களோ, குண்டுகளோ அல்லது கெலி அடித்த சன்ன நேர்கோடுகளோ இருக்கும். அப்போதெல்லாம் அடிக்கப்படும் 30 கலிபர், 50 கலிபர் சன்னக்கோதுகளை தேடி தேடிப் பொறுக்கிச் சேகரித்திருக்கின்றோம். இங்கே சிறுவர்கள் முத்திரைகளையும், நாணயங்களையும் சேகரிப்பதுபோல சன்னக் கோதுகளை யார் அதிகம் சேர்ப்பது என்ற போட்டி எங்களில் அநேகருக்கு இருக்கும்.

ஒருமுறை இப்படித்தான் சித்தியின் மகனும், அவரின் நண்பனும் -அவரும் ஏதோ ஒருவகையில் உறவுதான்- இராணுவம் முன்னேறுகின்றான் என்று வேலிகளை வெட்டி வெட்டி சனங்களை தெருக்களால் போகாமல் ஒழுங்கைகளுக்கால் போகச் செய்துகொண்டிருந்தார்கள். தார் ரோடுகளில் தப்பியோடினால் இலங்கை இராணுவத்தின் கெலி துரத்திச் சுடக்கூடும் என்பதால் இந்த ஏற்பாடு. கொஞ்சச்சனங்களை அனுப்பிவிட்டு எங்கள் மாமியொருவரை அனுப்பிய சொற்பபொழுதில் செல்லொன்று விழுந்து அந்த நண்பர் படுகாயமடைகின்றார். சித்தியின் மகன் அதிசயமாய் தப்பிக்கொள்கின்றான். செல்லால் படுகாயமடைந்தவரை ஒருமாதிரி அம்புலண்ஸில் ஏற்றிச் செல்கின்றனர். (அந்தப்பொழுதில் காயப்படுகின்றவர்களை காவிக்கொண்டு செல்லும் எந்த வாகனமும் அம்புலன்ஸ்தான்). அந்த வாகனத்தையும் துரத்திச் துரத்திச் சுடுகின்றது கெலி. செல்லடிபட்ட நண்பர் இடைநடுவில் காயத்தின் நிமித்தம் இறந்துவிடுகின்றார். சித்தியின் மகனுக்கு கெலிச்சன்னம் முழங்காலுக்குள்ளால் பாய்ந்து போகின்றது. பிறகு நெடுங்காலத்துக்கு காலை மடக்கமுடியாமல் நடக்கவோ சைக்கிள் ஓட்டவோ முடியாது அவதிப்பட்டதை அருகிலிருந்து கண்டிருக்கின்றேன். நாங்கள் கொழும்புக்கு பெயர்ந்தபொழுதுகளில் அவர் போராளியாக மாறிவிட்டிருந்தார் என்ற செய்தி வந்திருந்தது. இப்படி எத்தனையோ சம்பவங்களின் சாட்சிகளாய் பல தெருக்கள் வடுக்களை வாங்கியபடி உறைந்துபோயிருக்கின்றன. தாங்கள் வாய் திறந்து இப்படிப்பட்ட சம்பவங்களைப் பேசினால் உலகம் தற்கொலை செய்துகொள்ளும் என்ற பயத்தில்தான் இந்தத் தெருக்கள் நிசப்தமாகி இருக்கின்றன போலும்.

இலையுதிர்காலத்தெருக்களை பற்றி உரையாட ஆரம்பித்து நினைவுகள் எங்கையோ அலைய ஆரம்பித்துவிட்டன. 'எல்லாத் தெருக்களும் உனது வீட்டு வாசலில் முடிகின்றன' என்ற கவிதை வரிகளைப்போல எதைப் பற்றிப் பேசினாலும் ஊர் பற்றிய நினைவுகள் வந்து ஆக்கிரமித்துக் கொள்கின்றன. விலத்த வேண்டும் என்று வீம்பாய் நினைக்க நினைக்க அவை இன்னும் ப்லவந்தமாய் ஒட்டிக்கொள்ளுவதன் காரணம் ஏனென்று இன்னும் புரிவதில்லை. இலையுதிர்காலத்துக்கு வனப்பும் குளிர்ச்சியும் இறக்கைகளாகி விடுவதைப்போல, பறக்கத் துடிக்கும் அந்த இறக்கைகளை இழுத்து விழுத்திவிடும் காற்றைப்போல நோய்களும் இந்தப்பருவத்தில் வந்துவிடுகின்றன. அடிக்கடிவரும் தடிமனும், இருமலும், சிலவேளைகளில் கூடவே சேர்ந்துவிடும் இழுப்பும் மிகச் சோர்வு தரக்கூடியன. தனிமையில் என்னை விடுங்கள் என்றாலும் அம்மாவால் விடமுடிவதில்லை. தினமும் அளந்து வார்தைகள் பேசுபவன் வருத்தத்தின் நிமித்தம் அதையும் பேசாமலிருப்பதை அம்மாவால் தாங்கிக்கொள்ள முடியாது போலும்.

'மஞ்சள் வெள்ளை நீலமாய்
மாத்திரைகள்
வெளிறிய உறக்கத்தை
குதறிக் கொண்டிருக்க
கடிகார முள்ளின் அசைவுக்கும்
இதயத்தின் அதிர்வுக்குமிடையிலான
கணப்பொழுதுகளை அளந்தபடி
கரையும் இரவுகளில்
என் காய்ச்சலைக் கடன்வாங்கிய
தலையணையின் வெம்மையில்
உன் நெஞ்சுச் சூட்டினைக் கண்டுணர்ந்து
ஆழ முகம் புதைத்துக் கொள்ளவும்
சீறும் புலியாய்
வெறிகொண்டெழும் தாபம்
என் கட்டுக்களையும் மீறி...

காதல் இதமானதென்று
எவர் சொன்னார்..?'
(~அம்பனா)

இந்தப்பின்னிரவை எப்படிக் கழிப்பது? இணையத்தில் சதுரங்கம் ஆடலாம். சுவாரசியமாய் முடியும்வரை பார்க்கவைத்த Basic Instinct-2ன் நுட்பமான மனவுணர்வுகளை இன்னொருமுறை அசைபோடலாம். ஏ.ஜே அற்புதமாய் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ரஞ்சகுமாரின் 'கோசலையை' -புத்தக அலுமாரியிலிருந்து Lutesong & Lamentஐ கண்டெடுத்து- வாசிக்கலாம். இல்லையெனில், 'ஒரு நரம்பு/இப்போது/என் மூளையைக் கொத்துகிறது!/இன்று காலையில்தான் இந்தப் பாம்பு/ எனக்குள்ளே வந்தது./நேற்று முன்தினம்/இரு தரப்பிலும்/சுமார் நூறுபேர்வரை மரணம் என்ற/பத்திரிகைச் செய்தியைப் பார்க்கையில்,/யாரோ என் கண்ணை/கல்லால் தட்டு'வதாய்- என்கின்ற சோலைக்கிளியின் வரிகளோடு தாயகச்செய்திகள் வாசித்து உறக்கத்தைத் தொலைக்கலாம்.

தற்செயலாய் அறைக்குள் இருந்து வெளியே விரியும் புத்தரின் சாந்தத்தையொத்த தெருவைப் பார்க்கின்றேன். சில வருடஙளுக்கு முன் வன்னிக்குச் சென்றபோது இரண்டு கண்களுமிழந்த ஒரு போராளி சொல்கின்றான்.....'இன்று எந்த கஷ்டமும் இல்லாமல் A9னால் வந்துவிட்டீர்கள். ஆனால் இந்தப்பாதையின் ஒவ்வொரு அடிக்காயும் எத்தனை போராளிகள், மக்கள், மரங்கள் உயிரைக் கொடுத்திருக்கின்றார்கள் தெரியுமா? இன்று தார் போடப்பட்டு மினுங்கிக்கொண்டிருக்கும் இந்த ரோட்டுக்கீழே எத்தனையோ பேரின் சதைகளும் இரத்தமும் வலிகளும் உறைந்துபோய்க்க்கிடக்கின்றன'.

இப்போதெல்லாம் இங்குள்ள தெருக்களைப் பார்க்கும்போது விபத்தில் அநியாயமாக இறந்துபோன தோழன் வருகின்றான். ஊர்த்தெருக்களை நினைத்தால் கண்களிழந்த போராளியிலிருந்து இன்னும் பலர் ஞாபகிக்கின்றனர். இந்த இலையுதிர்காலத்து தெருக்களுக்கு அழகும் அமைதியும் உள்ளன என்று நான் நினைத்துக்கொண்டிருப்பது மாயத்தோற்றந்தானோ? புத்தர் கொடுத்து வைத்தவன்; அவனை அமைதியாக்க ஒரு போதிமரமாவது அவனுக்காய் காத்திருந்திருக்கின்றது. எனக்கான தெருக்களிலோ போதிமரங்கள் வளர்வதற்கான எந்தச் சுவடுகளும் இருப்பதில்லை.

தொலைதல்

Thursday, October 05, 2006

P3240033

(1)
ஒன்ராறியோ வாவியில்
சிறகென அலையும் நான்
பாண்டிச்சேரிக் கடற்கரையில்
உருமாற்றம் அடைகிறேன்
மனிதனாய்

பிரேமும் ரமேஷும்
அடுத்த கவிதைக்கான சர்ச்சையில்
தம்மிருப்பு மறந்து
வெகு தீவிரமாய்

'அம்மாவின் சாயலில் துணையைக்கண்ட'
கவிதையில் மிதந்த ஆணாதிக்கத்தை
விமர்சித்த தோழியின்
கோபத்தை விளம்புகின்றேன்;
புத்தரால் ஆட்கொண்ட
நீவிர்
புத்தரால் ஆகர்சிக்கப்பட்ட மக்கள் கூட்டத்து
தீவு அரசியலை
கட்டுடைக்காது அமைதியாவதேனோ?
கூடவே சேர்க்கின்றேன் என்கேள்வியையும்

எல்லாவற்றினின்றும் விடுபடும்
சித்தம் - இன்னும்
வாய்க்கவில்லை என்கின்றனர்

பிரேமும் ரமேஷும் பிரமீளும்
நிறைய நிறைய
எடையிழந்து
'சிறகென மிதக்கின்றேன்'
மீண்டும் நான்

படுக்கை முழுதும் - சிலவேளைகளில்
நெஞ்சில் தவழும் மழலைகளாகவும்
கவிதைப் புத்தகங்கள்.
..................

(2)
பின்னேரங்களில்
காயப்பட்ட உடலாய்
சூரியன் நிறந்தேய
போரின் வலிகாவி
ஊரூராய் அலைந்திருக்கின்றோம்
கால்கள் வலிக்க

வேலை நிமித்தம்
திசைக்கொன்றாய் அப்பா அலைந்தபோது
மாதங்களின் முடிவில்
அறைந்து சாத்தப்படும் கதவுகளின்
அவமானம்
முகத்தில் தெறித்தாலும்
இரவல் வாங்கி
பொங்கிப்படைக்க மறந்ததில்லை
சோறும் பருப்பும்

அம்மா,
பகிர்வதற்கான பிரியங்களை
பால்யம்
கருங்கற்பாறையாக்கி
மனதின் அடுக்குகளில் திணிக்க
முரட்டுமொழி பேசும்
ஆம்பிளையும் ஆயினேன்

'வலிகளைத் தந்தவளுக்கு
வன்மத்தையல்ல;
வாழ்த்தை
திருப்பிக்கொடுத்தலே நேசமென'
தலைகோதி
போர்வை இழுத்துவிட்டு
நகர்ந்த இரவில் நெகிழ்ந்தேன்
நானுனக்கு இன்னமும்
-என்றுமே- வளர்ந்துவிடாத மழலையென.
...................


(3)
ஒரு கொலையைப்பற்றி
உரையாடுகையில்
மற்றொரு கொலை எங்கேயெனக்கேட்கிறது
திணிக்கப்பட்டு...
உருமாற்றமடைந்த மூளை

கொலைகளிலும்
என் இருப்பை நிரூபித்து எழுதாவிட்டால்
கைகளின் அரிப்பை சொல்லிமாளாது

வசதியான சூழலில்
உண்டுறுறங்கி புணர்ந்து
அறிவுஜீவித்தனமாய் பேசாவிட்டால்
வந்த நாடு கற்றுத்தந்த
மனிதாபிமானத்துக்கும் மதிப்பில்லை

கடைசிக் கணத்தில்
கையைக் காலை இழந்தோ;
இல்லை
முலைகளை குதறக்கொடுத்தோ
உயிரைத் தக்கவைத்திருக்காலாமென்று
அவர்கள் நினைத்தது...

மதுக்கோப்பையில்
முண்டங்களாய் மிதப்பதையும்
பூகம்பமாய் நடுங்குவதையும்
மட்டும்
நிறுத்தவே முடிவதில்லை
வரைமுறையற்று எவ்வளவு குடித்தாலும்.
.............

(4)
விரல்களை மடக்கி விரிப்பதற்குள்
கூடிவிடும்
சப்வே சனங்களைப்போல
ஆகிவிடுகிறது காதல்
மூச்சுத்திணறலாய்

ஒரு இரெயினும்
இன்னொரு இரெயினும் சந்திப்பதற்குள்
நகரவேண்டியிருக்கிறது
முத்தமிட்டு

கசங்கிய ஆடையில்
வருவது
நம் வாசமென்ற
சிலிர்த்த காலம் போய்
மாலை வந்து
வியர்வையூறும் ஆடைகளை
தோய்க்கவேண்டுமெனும் நினைவே
எஞ்சுகிறது
இன்றைய நம்முறவில்.


Photo: @ chinese lantern festival