கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அகாலம்

Tuesday, September 19, 2006

நாள்குறிக்கப்பட்ட மரணத்தை
எப்படியெதிர்கொள்வதென
மழையுமிருளும் மூர்க்கமாய்ப்போரிடுகையில்
பூங்கா இருக்கையிலமர்ந்து யோசிக்குமொருவன்
நடக்கத்தொடங்குகின்றான் நூலகவாசலைநோக்கி
எல்லாப் புத்தகங்களும்
மரணம் நிகழ்வதற்கான சாத்தியங்களை எதிர்வுகூறுகின்றதேதவிர
இழப்பை ஆற்றுவதற்கான கதவுகளை
இறுக்கச்சாத்தியிருக்கும் சலிப்பில்
புரட்டத்தொடங்குகின்றான்
தற்கொலைகளால் நிரப்பப்பட்ட தொகுப்பை.
சில்வியா பிளாத்தின் கவிதையோடு
விரியுமொரு தாளில்
உலர்ந்துபோய்க்கிடந்த பெயர்தெரியாப்பூச்சியொன்றை
இவன் உற்றுநோக்கியபொழுதில்தான்
நண்பனின் வாசனை உதிர்ந்திருக்கவேண்டும்
தனிமை இருகரங்கொண்டு தோளிலழுத்த
துயரினில்மூழ்கி விறைத்துக்கொண்டிருக்கும் இரவை
சிறுவனாயிருப்பின்
அம்மாவின் முதுகின்பின் முடங்கிப்படுத்தாவது
கடந்துபோயிருக்கலாம்
'என்னைவிட்டுபோயிட்டானடா' என
ஆஸ்பத்திரி ப்ளோரில்
பதறியோடிவந்து விரல்நடுங்கும் காதலிக்கு
ஆறுதல்கூற வார்த்தையில்லா மொழியின் வெறுமை
மூளைசிதைந்து
வடிந்துகொண்டிருந்த நண்பனின் குருதியாய்
இவனில் பரவ
கள்ளிச்செடிகளில் தேன்குடித்து
பூவிலமர்ந்த தும்பிகளை
துரத்தியோடிய
சிறுவயதுநினைவுகள்
சட்டமிட்ட ஓவியமாய் உறைந்துபோகின்றது.

ஊருமில்லை; பால்யம் விரிந்த ஒழுங்கைகளுமில்லை;
இனி நீயுமில்லை.


(தோழனுக்கு....16092006)

Friday, September 15, 2006

abs2

பழுத்த இலைகள்
உதிர்ந்து விடைகொடுக்க
சாம்பர் வானக்குதிரையிலேறி
மிதக்குமென் பயணம்
மழையாக முடிவுறுகிறது
யுத்தபூமிகளில்

கந்தக வெடிலையும்
இரத்தச் சகதியையும் சுமந்தபடி
ஒற்றைச்சிறகுடன் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளை
தமக்கான இரையாக்குகின்றன
வட்டமிடும் வல்லூறுகள்

புறமுதுகிட்டு
பிள்ளை ஓடினானெனின்
முலையரிவேனென்ற புறநானூற்றுத்தாய்
போரை விதந்தேத்திய
கவிஞர்களின் எழுதுகோல்களை நொறுக்கி
இறந்துபோன பிள்ளைகளை
நினைவுகூர்கிறாள்
தன்முலைகளை அறுத்தெறிந்து

ஓர் அரும்பு
மலர்வதைப் போல
மரணித்தவர்களை உயிர்ப்பிக்கவும்
காற்று வீசுவதைப் போல
விழுப்புண்களை ஆற்றவும்
இயற்கையால் முடியவில்லையெனும் ஆதங்கத்தில்
பரிதி
பூமிபிளந்து
தனக்கான புதைகுழியைத் தோண்டத்தொடங்குகின்றது

அடர்ந்த காட்டில்
மூன்று நாட்களாய் சாப்பிடாதலையும்
ஒரு கெரில்லாப்போராளி
புழுக்கள் மிதக்கும்
அழுக்குத்தண்ணீரை அருந்துகையில்
விழிகளில் விரியும்
மக்களுக்கான கனவுகள்
பிரசவித்துவிடுகின்றன
எளிதில் தீர்க்கமுடியா
போர் குறித்த சிக்கலான சூத்திரங்களை.

2006.09.13
(திலீபனுக்கு.......)
ஓவியம்

ஒற்றைத்தாளில் படியும் நினைவுகள்....!

Monday, September 11, 2006

-யாருக்கு எழுதுகின்றேன் என்று தெரியாமல் யாருக்காகவோ எழுதிய குறிப்புக்கள்-

சென்ற சனிக்கிழமை Black Eyed Peasன் concertற்கு போயிருந்தேன். ஷக்கிராவின் (Shakira) இசை நிகழ்வுக்குப் போகவேண்டும் என்று நுழைவுச்சீட்டுக்கள் தேடிக்கொண்டிருந்தபோது, Black Eyed Peasம் நகரிற்கு வருகின்றார்கள் என்று அறிந்து சந்தோசத்தில் இந்நிகழ்வுக்கு நுழைவுச்சீட்டுக்கள் எடுத்திருந்தேன். 15,000 ற்கு மேற்பட்ட இரசிகர்கள் என்றால் கொண்ட்டாட்டத்திற்கு சொல்லவும் வேண்டுமா? என்ன சற்றுக் குளிராய் இருந்தது. சரி கதகதப்பாயிருக்கட்டும் என்று நண்பனும் நானும் பியரும் கூலரும் வாங்கிக்கொண்டு வந்தால் ரிகன்னா (Rihanna) சிறப்பு விருந்தாளியாக வந்து கலக்கத் தொடங்கியிருந்தார். DJ வாரும் வாரும்; வந்து பாட்டைத் திருப்பப் போடும், நான் ஆடப்போகின்றேன் என்று அவர் எனக்கு தனிப்பட்ட அழைப்புக் கொடுக்க, மேடையில் அசல் ஆட, கீழே நூற்றுக்கணக்கான ரொரண்டோ ரிகன்னாக்கள் ஆட, யாரை எந்த ஒழுங்கில் பார்த்து இரசிப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கவே அந்த நிகழ்வு முடிந்துவிட்டது. ஏன் தான் இப்படியான அரிய தருணங்கள் சடுதியாய் முடிந்துவிடுகின்றன என்பது ஒருபோதும் விளங்குவதில்லை.

Rihanna-32
Rihanna

Black Eyed Peas பற்றி நேரங் கிடைத்தால் விரிவாக எழுதவேண்டும். குளிர் கூட கூட நண்பன் சொன்னான், 'இவங்கள் நுழைவுச்சீட்டோடு மூன்று பியர்கள் இலவசமாய் வழங்கியிருக்கவேண்டும்' என்று. நானும் 'இரசிகர்களின் மனமறிந்த பொன்மனச்செம்மல் நீதான்டா' என்றொரு பாராட்டுப்பத்திரம் அவனுக்கு வழங்கிவிட்டு, 'பசிக்கிறது வா Pizza Slice வாங்கிச் சாப்பிடுவம்' என்று அழைத்துக் கொண்டு சென்றுவிட்டேன். பசி தாஙகமுடியாமல் அடுத்த ஒரு மணித்தியாலத்தில் இரண்டாவது முறையும் Pizzaவிற்கு போக, ஆயிரக்கணக்கான சனத்துக்கு இடையிலும் எங்களை அடையாளங்கண்டுகொண்ட அந்த Pizza விற்கும் பெண், Oh you guys again?ஆ என்றார். நாங்களும் ஓமோம் இசைத் தாகத்தைவிட வயிற்றுப்பசிதான் எங்களுக்கு அதிகமாயிருக்கிறது என்று அவரைச் சமாளித்துவிட்டு வர, Will I Am, 'Toronto Girls are so hot' என்று கூற நாங்களும் Pizza உண்ட தென்பில் ஓமோம் என்று உரத்தகுரலில் வழிமொழிந்தோம். பிறகு முடிகின்ற நேரத்தில் Black Eyed Peas, க... க... கனடா... ரொ... ரொ... ரொரண்டோ என்று -கிட்டத்தட்ட தமிழ் பாடல் beatல்- தொடங்கி Jump Jump Toronto Jump Jump என்று அவர்கள் உச்சநிலைக்குப் போக, நாங்கள் எல்லோரும் Fly தான். நல்லவேளை அன்றைக்கு வானம் சற்று உயரத்தில் இருந்தது, இல்லாவிட்டால் எங்களின் தலைகள் வானத்தில் முட்டி எத்தனைபேருக்கு காயம் வந்திருக்குமோ தெரியாது.

blackeyed
Black Eyed Peas
...................................

'இருக்கும்
பிரியமான மனிதர்களையும்
இழப்பதற்கு இன்னொரு பெயர்தான்
இலக்கியம்'

என்று ஒரு சோர்ந்துபோன நாளில் பதிந்து வைத்ததைப்போல, பிரியப்பட்டு வாங்கும்/சேகரிக்கும் பொருட்களை உடைக்கவும் தொலைக்கவும் செய்யும் பொழுதுகளிலும் சோகம் புகைமூட்டமாய் கவியச் செய்கிறது. அதிலும் பிரியமான மனிதர்கள் வாங்கித்தந்த பொருட்களை தொலைத்துக் கொண்டிருக்கையில், அந்த மனிதர்களின் அன்பையையும், நம் மீது அவர்கள் வைக்கும் நம்பிக்கையையும் இழப்பதுபோன்ற உணர்வுதான் தலைதூக்குகின்றன. என்றாலும் எவ்வளவுதான் அக்கறையாயிருந்தாலும் இழப்பதும் உடைப்பதும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

...................................

இரண்டு வாரங்களுக்கு முன் என்று நினைக்கின்றேன். ஆங்கிலப்படம் பார்ககலாம் என்று நானும், நண்பனும் தீர்மானித்து எந்த புதுப்படம் பார்ப்பது என்று அலசிக்கொண்டிருந்தோம். World Trade Center பார்ப்பமா என்று நான் கேட்க, அமெரிக்கத் தேசியத்தையும், 'அமெரிக்காக் கனவு'களையும் பார்ப்பதை விட, தூங்கிவிடுவது நிம்மதி தரும் ஒருவிடயம் என்றான் நண்பன். அதுவும் சரிதான் என்று நானும் வழிமொழிந்து, அன்றையபொழுதில் எந்தப்படத்துக்கும் போகாமல், லெபனானில் நடந்த சம்பவத்துக்கு கனடா எடுத்த நிலைப்பாட்டுக்காய் Prime Minister Stephen Harperஐ திட்டிக்கொண்டிருந்தோம் இந்த லெபனான் பிரச்சினையின் நீட்சியில் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துக்கொண்டிருந்த ப்ளொக் க்யூபெக்காவும் (Bloc Quebec), 'Stephen Harperடனான் தேனிலவு முடிந்துவிட்டது' என்று அறிவித்திருந்தது. மற்றொரு கட்சியான என்டிபியின் தலைவர் Jack Layton, 'Prime Minister Stephen Harper, ஜோர்ஜ் புஷ்சின் cheer leader' என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றார். இப்போது ஆப்கானிஸ்தானில் அந்தமாதிரி அல்லவா கனடிய இராணுவம் அடிவாங்குகின்றது. இந்த அரசியல் கோமாளித்தனத்தில் பரிதாபமாய் காவுகொள்ளப்படும் இராணுவத்தினரைப் பற்றி ஆளும்வர்க்கத்திற்கு ஏது கவலை?

ம்...அடிக்கடி இப்படித்தான் எதற்கோ செல்வதற்கு/செய்வதற்கு என்று தீர்மானித்து எதையெதையோ நாங்கள் செய்துகொண்டிருப்போம். சாதாரணமாகவே ஒரு விசர் நிலையில் திரியும் எஙகளைப் போன்றவர்கள் விசர்த்தனமாய் அமெரிக்கா புகழ் பாடும் திரைப்படங்களைப் பார்த்து இன்னும் விசர்நிலையின் உச்ச நிலையை அடைந்துவிடுவோம் என்ற பயத்தால் அனேகமாய் தியேட்டருக்குச் சென்று பார்க்கின்ற படங்களாய் Superman Returns, Pirates of Caribbean போன்ற வகைகளய்த்தான் இருக்கும். இவ்வாறான படங்கள் பிடிக்கவில்லையானால் கூட, தியேட்டரோடு வசைகளை எறிந்துவிட்டு வெளியில் வரும்போது இயல்புக்கு வந்துவிடலாம்.

Ladder_49_poster

தற்செயலாய், Ladder 49 என்ற படத்தை பார்க்கும்போது அது மிகவும் பிடித்துவிட்டது. இத்திரைப்படத்தில் Joaquin Phoenix, John Travolt போன்ற தேர்ச்சி பெற்ற நடிகர்கள் நடித்திருக்கின்றார்கள் என்பதால் அல்ல, எளிமையான கதை சொல்லல் முறையில் மனதில் சலனங்களை உருவாக்கியிருந்தது. தாதித் தொழிலை(Nurses), sex symbol ஒன்றாய் ஆக்குவதைப் போலதான் அனேகமாய் Firefighters ஐயும் ஒரு symbol ஆக்குவார்கள். ஆனால் இந்தப்படம் அவர்களின் இன்னொருபக்கத்தை -வீரதீர பராக்கிரமச் செயல்கள் அன்றியும், 'ஆண்மையின் அழகு' வழிவதாகவும் காட்டாது- ஒரு சாதாரண தீயணைப்பாளனின் பார்வையில், அவனுக்குப் பின்னுள்ள குடும்பம், கடமை, ஆபத்துக்கள் என்று நகர்கின்றது.

நீ வாங்கித் தந்த ஈரானிய படங்களும், அகிரா குரோசோவின் Dreams ம் இருக்கின்றன. மனம் அமைதி கொள்கின்ற நிசப்தமான பின்னிரவுகளில் அவற்றைப் பார்க்கத் தொடங்கவேண்டும். மேலும் இங்கே இப்போது சீனா கலாச்சாரத்தை மையப்படுத்தி Lantern Festival நடக்கின்றது. கரீபனா பார்க்கப்போனபோது இந்த விழாவுக்காய் அலங்கரிக்கத் தொடங்கியிருந்த மிகப்பிரமாணடமான புத்தர் சிலைகளும், ட்ராகன்கள் போல வடிவமைக்கப்பட்ட படகுகளும் மனதை மிகவும் ஈர்த்துக்கொண்டிருந்தன.
உன்னை அதிகம் வசீகரிப்பவை சீனக் கலாச்சாரமும், ஆபிரிக்காக் கலாச்சாரமும் தானே. நீயும் இந்நகரில் இருந்திருந்தால் அந்த நிகழ்வுக்கு சேர்ந்து போயிருக்கலாம்.

...................................

திருமணங்கள் மட்டுமில்லை ஏனைய அலுப்பூட்டும் விழாக்களுக்கும் அவ்வளவாய் போவதில்லை. ஈழத்தில் இருந்தபோது பன்னிரண்டோ பதின்மூன்றோ வயதிலேயே சாமர்த்திய விழாக்களுக்குப் போவதை நிறுத்தியாயிற்று. சிலவேளைகளில் மச்சாள்மார், நெருங்கிய உறவுகளின் சாமத்திய விழாக்களுக்கு வாவென்று அம்மா கெஞ்சுகின்றபோதும் போவதில்லை. பிறகு பெற்றோரும் விழாக்கள் நடக்கும்போது தங்களை காரில் ஏற்றி இறக்க மட்டும் என்னை உதவிக்கு கூப்பிடுவதோடு அமைதியாகிவிட்டார்கள். நண்பர்களின் திருமணங்கள் என்கின்றபோது தவிர்க்கமுடியாது தலைகாட்ட வேண்டியிருக்கிறது. அண்மையில் வளாகத்தில் படித்த நண்பனின் திருமணத்துக்கு போவது என்று தயார்படுத்திவிட்டு கொஞ்சம் உறங்கி எழுந்தால், என்னைத் தன்னோடு கூட்டிப்போவதாய் உறுதியளித்த நண்பன் மறந்துபோய் விழாவுக்குப்போய்விட -அவனது செல்லிடப்பேசியும் உயிர்ப்பில்லாது உறங்கிவிட- என்ன முகவரி என்றும் ஒழுங்காய்க்கேட்காமல் விட்டிட்டேனே என்று கொஞ்சநேரம் குழம்பிவிட்டு...... பிறகு என்ன? வழமைபோல, எனக்கு எனது தூக்கத்தைத் நிம்மதியாய்த் தொடரச்செய்யும் வரம் கிடைத்துவிட்டது என்று அகமகிழ்ந்தேன். நல்லவேளை திருமணம் நடந்த நண்பனும் எங்களின் அலைவரிசையில் இருப்பதால் 'நிலைமையை' விளக்கியதும் பின்னர் விளங்கிக்கொண்டான்.

என்றாலும் என்ன? என்னைப் பழிவாங்குவதற்கென்று ஒரு திருமண வைபவம் காத்துக்கொண்டிருந்திருக்கின்றது என்பது எனக்கு முன்கூட்டியே தெரியாமற்போய்விட்டது. இந்தப் பெண்ணையும் அவரின் குடும்பத்தையும் நெடுங்காலமாய் தெரியும். எங்கள் குடும்பம் எல்லோருக்கும் அவர்கள் மிகவும் பரீட்சயமானவர்கள். வளாகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, என் பெற்றோர் -அக்காவின் திருமணத்துகாய்- கொழும்பு சென்றபோது, தங்கள் வீட்டுக்கு எந்த நேரமும் வந்து சாப்பிடலாம் என்று அன்போடு அழைப்பு விடுததவர்கள். அத்தோடு தமிழ் ஆக்கள் குறைந்த அந்நகரில், தனிமை ததும்பி வழிந்த நாட்களில், அவர்கள் நட்பாய் இருந்தது மிகவும் இதமாய் இருந்த பொழுதுகள் அவை. 'எழுதிக் கிழிப்பதில்' அலுப்பு வந்து நிறுத்தியிருந்த காலகட்டத்தில, நீ எழுதத்தான் வேண்டும் என்று நாலைந்து பக்கத்தில் நம்பிக்கை தரும் வார்த்தைகளில் அவர்களில் ஒருவர் எழுதித்தந்தது இப்போதும் என்னிடம் பத்திரமாய் இருக்கிறது. அந்தப்பெண்களில் ஒருவருக்கு திருமணம் சில வருடங்களுக்கு முன் நடந்தபோது -தேர்வுகள் இருக்கிறது என்று - சும்மா தட்டிக்கழித்துவிட அவர் என்னோடு பேசுவதை பின்னாளில் நிறுத்திவிட, அந்தப்பயத்தில் அவர்களின் சகோதரியின் திருமணத்துக்காவது தலைகாட்டவேண்டும் என்று போயிருந்தேன்.

எண்ணூறு பேர் அமரக்கூடிய பெரிய மண்டப்பத்தில்தான் நிகழ்வு நடந்தது. நான் போவதற்கு முன்னால்- மாப்பிள்ளையும் பெண்ணும்- குதிரை வண்டிலில்- வந்திறங்கினார்கள் என்று அங்கிருந்தவர்கள் கூறினார்கள். அப்பாடா நான் அந்த இம்சையிலிருந்து தப்பிவிட்டேன் என்று நிம்மதிப் பெருமூச்சுவிட, சட்டென்று இரண்டு பெரிய திரைகளில் 'சுட்டும் விழிச்சுடர்' ஒலிக்க, அட நம்ம அசினை பார்க்கலாம் என்று விழிகளை உயர்த்தினால், அங்கே இந்த மாப்பிள்ளையும் பெண்ணும், அசினும் சூர்யாவுமாக மாறி ஏதோ ஒரு பார்க்கில் காதல் டூயட் ஆடத் தொடங்கிவிட்டார்கள். அஸினின் தீவிர இரசிகனான என்னால் இதை எல்லாம் சகித்துக்கொள்ளமுடியுமா என்ன? இதுக்கு மேல் இருக்கமுடியாது என்றுதான் வெளியே வந்து உன்னோடு தொலைபேசுகின்றேன்.

-----------------------------------------

சென்ற வாரவிறுதியில் ஒரு நண்பன் கார் விபத்தில் சிக்கி தலையில் பலமாய் அடிப்பட்டு இன்னும் நினைவு திரும்பாமல் வைத்தியசாலையில் இருக்கின்றான். அவன் விரைவில் நலம்பெற வேண்டும் என்று மனம் கதறுகிறது. என் சிறுவயது நண்பன். ஊரில் பக்கத்து வீட்டுக்காரன். ஒரே வகுப்பில்தான் நாம் இரண்டுபேரும் படித்திருந்தோம். அவனோடு தான் முதன் முதலில் சைக்கிள் ஓடப்பழகியதும், கிரிக்கெட் விளையாடுவதற்கு என ஊர் ஊராய் அலைந்ததும் என்று பலப்பல நினைவுகள் மனதில் மிதக்கின்றன. புலம்பெயர்ந்த பின் பழைய நட்பின் நெருக்கம் குறைந்துவிட்டாலும், விபத்தில் சிக்கிவிட்டான் என்றறிந்தவுடன் அவன் இயல்புநிலைக்கு வரவேண்டும் என்று மனம் மிகவும் அவாவுகிறது. இந்த நினைவின் கனத்தோடு வாரப் பத்திரிகையை புரட்டினால், சென்றவாரம் இங்கு பதினாறு வயதும், இருபத்திரண்டும் வயதுமான இரண்டு தமிழ்ப்பெண்கள் விபத்தில் சிக்கி அகால மரணமடைந்திருக்கின்றார்களாம். போரை விட்டு எவ்வளவு தூரம் விலத்தி வந்தாலும் அநியாயச் சாவுகள் எம்மை விட்டு என்றும் அகலாது போலும்.
.................................

வாசிப்பு இடைமறிப்பு

Wednesday, September 06, 2006

ராஜ் கெளதமனின் 'தலித்திய விமர்சனக்கட்டுரைகளை' முன்வைத்து....

' *வரலாறு தலித் மீது தொடுத்த, தொடுத்துக் கொண்டிருக்கிற சகலவிதமான வன்முறைகட்கும், அவற்றை செய்துகொண்டிருக்கிற அதிகாரத்துவத்திற்கும் எதிரான குரலைத் தலித் இலக்கியம் ஒலிக்க வேண்டும். 'தலித்' ஒன்றுக்குத்தான் சாதி இல்லை., மதம் இல்லை எனக் கூறும் உரிமையும், தைரியமும், தேவையும், கடமையும் உண்டு. ஏனெனில் அதற்கு கீழே ஒடுக்கப்படுவதற்குச் சாதிகள் இல்லை; இதனைக் கட்டிக் காக்க மதங்கள் இல்லை. சாதியையும், மதத்தையும், ஆண் மகனையும் மையமாகக் கொண்ட குடும்பத்தையும் தகர்ப்பதே தலித் இலக்கியத்தின் உள்ளடக்கமாக இருக்கும். இவ்விதத்தில் கறுப்பர் இலக்கியமும், பெண்ணிய இலக்கியமும், நாட்டுப்புற இலக்கியமும் தலித் இலக்கியப் பரப்பிற்குரிய இன்றியமையாத கூறுகளை வழஙக முடியும்.'

raj

'தலித்திய விமர்சனக்கட்டுரைகள்' எனப்பெயரிடப்பட்ட இத்தொகுப்பில் வெவேறு காலகட்டத்தில் ராஜ்கெளதமனால் எழுதப்பட்ட பதினைந்து கட்டுரைகள் இருக்கின்றன. 'தமிழக தலித்தும் தலித் இலக்கியமும்', 'குடும்பம் பெண்ணியம்', 'பின்னை நவீனத்துவமும் தலித் சிந்தனைகளும்', 'தலித்தியப்பார்வையில் பாரதி', 'தலித் பார்வையில் (இந்து) மதம்' என்பவை குறிப்பிடத்தக்க கட்டுரைகளாகும். விரிவாகவும், சான்றாதாரங்களுடன் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகளை வாசிக்கும் வாசகர்கள் இவை உண்மைக்கு அண்மையாக இருக்கின்றன என்ற வாசிப்பனுவத்தை எளிதாகப் பெறமுடிகின்றது.

'தமிழக தலித்தும் தலித் இலக்கியமும்' என்ற கட்டுரையில் ஜெயகாந்தன் எப்படி ஒரு காலத்தில் கலகக்காராக இருந்து இறுதியில் 'ஜெயஜெய சங்கரா' பாடி இந்துமதப்பெரும் ஜோதியில் கலந்தார் என்பதை ராஜ்கெளதமன் அடையாளங் காட்டுகின்றார். 'இந்து மத்த்தில் புதைந்துள்ள கர்மவினைக் கோட்பாடில் ஏறுவரியையை ஜெயகாந்தனிடம் காணமுடியும்' என்று ஜெயகாந்தனுக்கு எழுதப்பட்டுள்ள முடிவுரை சரிபோலத்தான் தோன்றுகின்றது. அதேபோன்று ராஜம் கிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களின் நாவல்களில் சித்தரிக்க்கபடும் தலித்துக்கள் எவ்வாறு கீழ்த்தரமாகக் காட்டப்படுகின்றார்கள் என்பதைச் அடையாளங்காட்டுவதோடு, பூமணி போன்ற சில தலித் எழுத்தாளர்கள் கூட மெல்ல மெல்ல உயர்சாதிக் கதாபாத்திரங்களை தங்கள் படைப்புக்களில் முக்கியபாத்திரங்களாக்கி நாவல் படைப்பதையும் ராஜ்கெளதமன் சுட்டிக்காட்டத்தவறவில்லை. அதே போன்று டானியலின் நாவல்களை முன்வைத்து, -எந்தமதமானாலும்- மதம் மாறினால் கூட சாதி இழிவும், பிரிவுகளும் நீங்கிவிடாது என்பதையும் கட்டுரையாசிரியர் கவனப்படுத்துகின்றார்.

நிறப்பிரிகை விவாதக்கூட்டமொன்றிற்காய் 90களில் வாசிக்கபட்ட, 'குடும்பம், பெண்ணியம்' முக்கியமான ஒரு கட்டுரை. பெண்ணிற்கான சுதந்திரத்தை பெண்கள தமக்கான வழிகளில் தேடுவதே மிகச்சிறந்த வழியாக இருக்குமென்பதையும், தலித்துக்களைப் போலவன்றி இன்னும் கடும் சவால்களையும் வீழ்ச்சிகளையும் சந்தித்தே பெண்கள் தமக்கான விடுதலையைப் பெறமுடியும் என்று ராஜ்கெளதமன் இக்கட்டுரையில் குறிப்பிடுகின்றார். மேற்கத்தைய பெண்ணிய சிந்தனைவாதிககளின் முக்கிய விவாதப்புள்ளிகள் மிக விரிவாக இக்கட்டுரையில் மேற்கோள்களுடன் பேசப்படுதைக் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

அதேபோன்று பாரதியைத் தலித்தியப் பார்வையில் கட்டுடைக்கும் கட்டுரையும் மிக அற்புதமாய் எழுதப்பட்டிருக்கின்றது. 'பெண்ணையும், தலித்துக்களையும் முறையே சக்தி, சகோதரர்கள் என்று ஓர்மையாய் மதிக்கின்ற பாரதியே, கோழைத்தனத்தையும், இழிவையும் குறிப்பிடும்போது ஓர்மையின்றி 'பெட்டை', 'புலை' என்று எழுதிவிடுகின்றார் (ப 158). பாரதி தனது காலத்தைய பிற உயர்சாதிக்காரர்களின் சிந்தனைகளில் இருந்து பெரிதாக வேறுபடவில்லை என்றாலும் (அதற்கான ஆதாரங்கள் விரிவாக இக்கட்டுரையில் பேசப்படுகின்றன), பாரதி உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை மனதார விரும்பியவர் என்பதை எவரும் துளியளவும் சந்தேகிக்கமுடியாது என்கிறார் ராஜ்கெளதமன்.

'தலித் பார்வையில் (இந்து) மதம்' என்ற கட்டுரையில் தலித்துக்களின் விடுதலைக்காய் பாடுபட்ட மூன்று முக்கிய ஆளுமைகளான அண்ணல் அம்பேத்கார், பெரியார் ஈ.வே.ரா, அயோத்திதாச பண்டிதர் பற்றி பேசப்படுகின்றன. அம்பேத்காரும், அயோத்திதாசரும் சாதி ஒழிப்பைப் பற்றி அதிகம் பேசியதாகவும், பெரியார் மத ஒழிப்பில் அதிக கவனம் செலுத்தியதாகவும் இக்கட்டுரை பேசுகிறது. நாத்திகராய் பலர் மாறினாலும் அவர்களுக்குள்ளும் சாதியக்கூறுகள் உயிர்ப்புடன் இருக்கின்றன என்பதால் இன்றைய காலகட்டத்தில் அம்பேத்காரும், அயோத்திதாசரும் முன் வைத்த சாதி ஒழிப்பே. பெரியார் முன்வைத்த மத ஒழிப்பை விட முக்கியத்துவம் வாய்ந்தது என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றார் ராஜ்கெளதமன். அதேவேளை மத ஒழிப்பைவிட சாதி ஒழிப்புக்காய்த்தான் நீண்ட பாதையில் மிகவும் கடினமாய் பயணிக்கவேண்டியிருக்கும் என்பதையும் குறிப்பிடுகின்றார்.

பெரியார் மீது வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பினும், அயோத்திதாசர் ஒரு குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சாதிக்குள் முடங்கிப்போனதையும், அம்பேத்கார் -சாதி ஒழிப்புக்கு மட்டுந்தான் முக்கியத்துவம் கொடுத்தார் என்றால்- ஏன் அவர் தலித்துக்களை மதங்கள் (பவுத்தம், இஸ்லாம்) மாறச்சொல்லியிருக்கவேண்டும்? அதற்கான பின்னணி என்ன? என்பதைக் கவனப்படுத்தவும் தவறவிட்டு விடுகின்றார் ராஜ்கெளதமன். இன்றைய தலித் விடுதலை என்பது அம்பேத்காரியத்தையும், பெரியாரியத்தையும், மார்க்ஸிசத்தையும் உள்ளடக்கி, ஒன்றின் இடைவெளியை/போதாமையை மற்றொன்றதை வைத்து நிரப்புவதன் மூலம் சாத்தியமாவதற்கான குரல்கள் ஒலிக்கத்தொடங்கியுள்ள இக்காலகட்டத்தில் அம்பேதகாரையோ, பெரியாரையோ ஒருவருக்கொருவர் தாழ்த்தி -தனிப்பட்ட மனிதர்கள் மீதிருக்கும் காழ்ப்புணர்வுக்காய்- அரசியல் செய்யும் வழிமுறைகளை தவிர்த்தல் நன்றாக இருக்கும் போல தோன்றுகின்றது.

மிக விரிவாக எழுதப்பட்ட (மேலே குறிப்பிடப்பட்ட) கட்டுரைகள் எவ்வளவு முக்கியமானவையோ, அதேபோன்று ராஜ்கெளதமன் இன்றையபொழுதுகளில் நகர்ந்துகொண்டிருக்கும் அரசியல்/குழு புள்ளிகளும் முக்கியமானவையே. இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள பதினைந்து கட்டுரைகளில் மூன்று கட்டுரைகள் புதுமைப்பிததனுக்கும், இரண்டு கட்டுரைகள் சுந்தர ராமசாமிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதையும் எழுந்தமானது என்று ஒதுக்கி நாம் அவ்வளவு இலகுவில் கடந்து சென்றுவிட முடியாது. புதுமைப்பித்தனிலும், சுந்தர ராமசாமியிலும் ராஜ்கெளதமனுக்கு இருக்கும் அளவற்ற பற்றைப்போல, இன்று காலச்சுவட்டுடன் எந்த விமர்சனமும் இன்றி ஒட்டி உறவாடும் நிலை குறித்தும், 'சிலுவைராஜ் சரித்திரம்' 'காலச்சுமை' போன்ற நூல்கள் ஆர்.எஸ்.எஸ் தொடர்புள்ளதாகக் குறிப்பிடப்படும் தமிழினி மூலம் வெளிவரும் அரசியற்புள்ளிகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

இலக்கியத்திலும் தலித் அரசியலிலும் ஈர்ப்புள்ள இளைஞர் யுவதிகளுக்கு ஒரு ஆளுமையாக/ வழிகாட்டியாக எழுத்தால் இருக்கக்கூடிய ராஜ்கெளதமனும் -நாளை ஜெயகாந்தனைப் போல-'ஜெய ஜெய' கோசம் பாடிக்கொண்டு பார்ப்பனியத்தில் இரண்டறக்கலந்து நமக்கு ஆசிகளை வழங்காமல் இருந்தால் சரி.


* தமிழக தலித்தும் தலித் இலக்கியமும் என்ற கட்டுரையிலிருந்து...

இண்டியா அரி - சிறு குறிப்புக்கள்

Friday, September 01, 2006

டென்வர், கொலராடோவில் 1975ல் பிறந்த இண்டியா அரி (India Arie), பாடுவதில் மட்டுமில்லாது அவரது வீரியமிக்க பாடல்வரிகளாலும் அதிகம் கவனம் பெறுபவர். 2000 ஆண்டளவில் இசையுலகிறகு வந்து இதுவரை மூன்று இசைத் தொகுப்புக்களை (Acoustic Soul ,Voyage To India, Testimony: Vol. 1, Life & Relationship) வெளியிட்டுள்ளார்.
india3
'எனது இசைத்தட்டை வெளியிடும்போது எந்த நிறுவனத்தினூடு வெளியிடவேண்டும் என்று அலையவில்லை; என்னை, எனது இசையை எவற்றோடும் சமரசம் செய்யாமல் வெளியிடவேண்டும் என்பதில் மட்டுமே அதிகம் கவனஞ்செலுத்தினேன்' என்று கூறுகின்ற இண்டியா அரி, சென்ற மாதமளவில் Testimony: Vol. 1, Life & Relationship என்ற தனது மூன்றாவது இசைத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். மகாத்மா காந்தியின் மீதிருந்த ஈர்ப்பினால் இண்டியா (India) என்ற பெயரையும், அரி (Arie) என்று தாயால் செல்லமாய் அழைக்கப்பட்டதை பிற்பகுதியாகவும் சேர்த்து இண்டியா அரி ஆகியிருக்கின்றார்.

2001ல் வெளிவந்த 'வீடியோ' என்ற பாடல்தான் இண்டியா அரியின் தனித்துவத்தை வெளிப்படுத்தியது. தனது பெண் என்ற அடையாளத்தை அந்தப் பாடலில் இண்டியா அரி தேட முயல்கின்றார்...

'நான் உனது வீடியோவிலிருக்கும் சாதாரண பெண் அல்ல
நான் ஒரு பேரழகியைப் போல வடிவமைக்கப்பட்டவளுமல்ல
ஆனால் நான் அறிந்துவைத்திருக்கின்றேன்
என்னை நானே எப்படி அளவிறந்து நேசிப்பது என்று
ஏனெனில் நானொரு அரசிளங்குமரி
எனது பெறுமதி நான் அணிந்திருக்கும் ஆடைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை
இண்டியா அரியாக இருப்பதற்கு எது தேவையோ
அதை மட்டுமே நான் அணிவேன்'


இந்தப்பாடலோடு அண்மையில் பிரபல்யம் அடைந்த பிங்கின்(Pink), Stupid Girls ஐ ஒப்பிட்டுப் பார்க்கலாம். பிங்கும் தனது பாடலில் வெகுசன ஊடகங்கள் பெண் பற்றி கட்டமைக்கபடும் விம்பங்களைக் கடுமையாகச் சாடுகின்றார். அதில் ஒரிடத்தில் இப்படி வரும்...., 'என்னவாயிற்று? /அமெரிக்காவில் பெண் ஜனாதிபதியாகும் இந்தப் பெண்ணின் கனவுக்கு/ அவள் இப்போது 50CENTன் வீடியோவில் ஆடிக்கொண்டிருக்கின்றாள்/' என்று.

தனிப்பாடலான 'வீடியோ' இண்டியா அரியை பிற பாடகர்களிலிருந்து வித்தியாசமாய் காட்டியது என்றால், அவரது இரண்டாவது இசைத் தொகுப்பான் 'இந்தியாவுக்கான பயணம்' (Voyage to India), அவரை அதிக இசை இரசிகர்களிடம் அறிமுகம் செய்திருப்பதோடு கிராமி விருதுகளையும் அவருக்குப் பெற்றுக் கொடுத்திருக்கின்றது.

'எதுவென்றாலும் நீ எனக்குச் சொல்லித்தந்தாய்
நானும் காரணங்களோடு கற்றுக்கொண்டேன்
நான் நம்புகின்றேன்; நாங்கள் நட்சத்திரங்களில் எழுதப்பட்டவர்கள்
'நாளை' எதை வைத்திருக்கின்றது என்று தெரியாது
நான் இந்தக் கணத்தில் வாழ்கின்றவள்
நான் ஆணெனும் உனக்காய் நன்றி சொல்லிக்கொண்டிருக்கின்றேன்
நீ, நான் - எனது பிரார்த்தனைகளில் கேட்கின்ற எல்லாமாயும் இருக்கின்றாய்
ஆகவே உன்னை எனது தேவதைகள்தான் கொண்டுவந்து சேர்த்திருக்கவேண்டும்
உனது அன்பு என் காயங்களை ஆற்றிக்கொண்டிருக்கின்றது
நீ எனது வாழ்வின் பிடிமானம்
நான் சிரித்துக்கொண்டிருப்பதற்கும் நீயே காரணம்
நீ ஒரு அழகிய வியப்பு!
'

என்று தனது இரண்டாவது இசைத்தட்டில் மலரும் புதிய உறவில் சிலிர்த்துப்போகின்ற இண்டியா அரி, மூன்றாவது இசைத்தட்டிலும் உறவுகளைப் பற்றியே பேசுகின்றார். தனது கடந்த (மூன்றாண்டு)கால உறவையும், பின் நிகழ்ந்த பிரிவையும் இறுதியாய் வந்த இசைத்தொகுப்பில் சொல்ல விளைவதாகவும், ஆனால் கசப்பான நினைவுகளில் தங்கிவிடாது வாழ்வின் இயல்பென வலிகளை ஏற்றுக்கொண்டு நம்பிக்கையுடன் முன்னோக்கி நகர்வதையே தான் பேச விரும்புவதாகவும் அரி கூறுகின்றார். Wings of Forgivenessல்....

'நெல்சன் மண்டேலாவால்
தன்னை ஒடுக்கியவர்களை மன்னிக்கமுடியுமென்றால்
நான் நிச்சயம் உன்னை மன்னிப்பேன், உனது தனித்துவத்திற்காய்.
.....
காந்தியால் persecutionஐ (தமிழ் மொழிபெயர்ப்பு என்ன?) மன்னிக்க முடியுமென்றால்
நிச்சயமாய் உனது பரிதாபத்துக்காய் என்னால் உன்னை மன்னிக்கமுடியும்.
....
இயேசு அவருக்குச் செய்யப்பட்ட கொடூரங்களை மன்னிக்கின்றார் என்றால்
நிச்சயமாய் நாங்கள் இதற்கொரு முடிவு கண்டு நகரமுடி
யும்'

என்று மன்னிப்பதன் மகோன்னதத்தை அருமையாக கூறுகின்றார். அதே பாடலில்.....

'குற்றங்களும் இரகசியஙளும்
நிறைந்த கடலில்
நான் நீந்தத்தொடங்கினேன்
என்னை யாரென
அடையாளங்காண்பதற்காய்.....
யாருமற்ற ஒரு தீவில்
எனக்குரிய தனிமையில்
உயர்ந்த உண்மை எதுவெனக் கேட்டேன்...'

என்று கூறிவிட்டு, நமக்கு நாமே நேர்மையாக இருப்பதுதான் அதியுயர்ந்த உண்மையாக இருக்கும் என்று தனக்குச் சொல்லப்பட்டதாய் கூறிக்கொள்ளவும் செய்கின்றார்.
indianew
அதே போல இன்னோரு பாடலான 'I am not my hair', ஒரு பெண்ணின் தலைமயிரை வைத்து சமூகம் செய்யும் அரசியல் குறித்து பேசுகின்றது. (தமிழ்பெண்களுக்கு உள்ளது போன்றே) கறுப்பினப் பெண்களுக்கு அவர்கள் எப்படி தலைமயிரை கட்டமைக்கவேண்டும் என்ற நெருக்குதல்கள் இருக்கின்றன என்கிறார் அரி. ஒவ்வொரு பருவத்திலும் எப்படி எப்படி தனது தலைமயிர் அலங்காரங்கள் கட்டமைக்கப்பட்டிருந்தன என்றும், பிறர் இவ்வாறான தலைமயிர் அலங்காரத்தை முன்மாதிரியாக வைத்து எப்படி எல்லாம் ஒரு பெண்ணைக் குறித்து பேசிக்கொண்டிருந்தனர்/பேசுகின்றனர் என்பதையும் இந்தப்பாடல் பேசுகிறது. இறுதியில் தனக்குரியதை தேர்வு செய்யும் உரிமை தனக்கு மட்டுமே என்று கூறுகின்றார். பெண்களின் தலைமயிரை வைத்து ஆண்கள் செய்யும் அரசியலை மிக அழகாக புற்றுநோய வந்த பெண்ணின் படிமம் மூலம் உடைத்துக்காட்டுகின்றார்.

மார்பகப் புற்றுநோயும், அதன் பின்பான சிகிச்சையும்
அவளது அழகையும் பெருமையையும் எடுத்துச் சென்றன
அவள் கடவுளிடம் உறுதிமொழி எடுத்தாள்
நான் உயிர்தப்பினேன் என்றால்
எனது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் சந்தோசிப்பேன் என்று
தேசியத் தொலைக்காட்சியில்
அவளது கண்கள் மின்னலடிக்கின்றன வைரங்களாய்
அவளது வழுக்கைத் தலை ஒரு முழுநிலவாய் மினுங்குகின்றது
முழு உலகுக்குமாய் அவள் இப்போது பாடிக்கொண்டிருக்கின்றாள்...hey
'

indai2

வனப்புடன் இருப்பதாய் கட்டமைக்கப்படும் அமெரிக்க வாழ்வியலை, பிரேசில் நாட்டில் தான் சந்தித்த பையன் ஒருவனின் பார்வையால் அரி சீர்குலைத்துக்காட்டுகின்றார் இப்படியாக....,

'என்னால் எதையும் சாதிக்கமுடியும் என்பதை
உணரவைத்தான்
பிரேசில் நாட்டில்
ஒரு ஒதுக்குப்புறத்தில் சந்தித்த
இளஞ்சகோதரன்;
அவனும் என்னைப் போலவே பாடவிரும்பினான்
அவனது வீட்டுக்கு யன்னல்களோ கதவுகளோ இருக்கவில்லை
ஒரு எளிய வாழ்க்கை வாழும் அவன் மிகுந்த ஏழ்மையாக இருந்தான்
இவற்றுக்கும் மேலாய் அவனுக்கு பார்வையும் இல்லை
ஆனால் அது அவன் 'ஒளி'யைப் பார்ப்பதைத் தடுக்கவில்லை
அவன் கேட்டான், அமெரிக்கா எப்படி இருக்குமென்று
எனது பதில் முழுதும் முறைப்பாடுகளாகவே இருந்தன
அவன் சொன்னான், இங்கே வாழ்வது சொர்க்கத்தில் வாழ்வது...
அவன் எனக்கு சொல்லித் தந்தான்;
சொர்க்கம் என்பது எனது மனதின் உள்ளேதான் உள்ளது என்று.'

Pop, R&B, Rap பாடுபவர்களின் பாடல்களை ஓரளவு உற்றுக கவனிக்கின்றவன் என்றவகையில், இண்டியா அரியின் பாடல் ஒவ்வொன்றும் ஒரு கவிதைக்குரிய தனித்துவத்துடன் மிளிர்கின்றன என்பதைத் தயக்கமின்றிக் கூறலாம் என்று நினைக்கின்றேன் (Kanye Westன் பாடல்களிலும் இவ்வாறான நம்பிக்கைகள் துலங்குகின்றன). இண்டியா அரியின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு கதையை அவற்றின் பின்புலங்களுடன்/அரசியல்களுடன் விரித்துச் சொல்ல முயல்கின்றன. அவற்றில் அதீத காழ்ப்போ, வெறுப்போ இல்லாது சமூகத்தின் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் கடந்து மனிதர்களை பலவீனங்களுடன் ஏற்றுக்கொண்டு வாழ்வை இன்னும் ஆழமாய் நேசிக்க அரியின் பாடல்கள் கற்றுத் தருகின்றன என்பதுவும் முக்கியமானது. மேலும் ஏற்கனவே சொல்லப்பட்ட நொய்ந்துபோன வார்த்தைகளை வைத்து பாடல்கள் இயற்றப்படுவதைத் தவிர்த்து தனக்குரிய தனித்துவங்களுடன் புதிய படிமங்களையும், அர்த்தங்களையும் தேடும் அரியின் பாடல்கள் கேட்கும் எவரையும் இலகுவில் வசீகரிக்கச் செய்வதில் வியப்பேதுமில்லைதானே.