கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

படைப்பாளியும், வாசகரும்..!

Thursday, February 29, 2024

 

ண்மையில் நானும் நண்பரொருவரும் ஒரு கதையைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். எனக்கு அந்தக் கதை மிகச் சாதாரணமாகத் தெரிந்தது. அந்த எழுத்தாளரை விரிவாக‌ வாசித்தவன் என்றவகையில் அது என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஆனால் நண்பர் அந்தக் கதையில் வந்த சில வரிகள் மிக முக்கியமானவை. அதிலிருந்து நமது வாசிப்பு அனுபவத்தை வேறுவிதமாக வார்த்துக் கொள்ளலாம் என்றார். நான் அந்தத் திசையில் நின்று அதுவரை யோசிக்கவில்லை. எனக்கும் பிறகு அந்தக் கதையை வேறுவிதமாக வாசித்து யோசிக்க முடிந்தது. ஹெமிங்வே அடிக்கடி 'ஆத்மார்த்தமான ஒரு சில வரிகள் மனதில் தோன்றிவிட்டால் போதும், நல்லதொரு கதையை எழுதிவிடலாம்' எனச் சொல்வார்.  

அதேபோன்று ஒரு எழுத்தின் ஆன்மாவைச் சரியாகப் புரிந்துவிட்டால் அந்தப் படைப்பை, சிலவேளைகளில் அதற்கான வழுக்களையும் பலவீனங்களையும் அது கொண்டிருந்தால் கூட ஒரு சிறந்த வாசகர் கொண்டாடச் செய்வர். ஒரு எழுத்தாளருக்கு எழுதுவது எவ்வளவு முக்கியமோ, அதேயளவுக்கு அவரை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளும் வாசகரும் முக்கியம். அந்த வாசகரை நோக்கியே ஒரு படைப்பாளி முதன்மையாக தனது படைப்புக்களினூடாகவும், சிலவேளைகளில் அந்தரங்கமாக தனிப்பட்டு உரையாடிக் கொண்டிருக்கவும் செய்வார். நபக்கோவுக்கு அப்படியே அவரை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் முதன்மை வாசகராக அவரது துணைவியார் இருந்திருக்கின்றார். ஆகவேதான் அவரது பெரும்பாலான நூல்களை நபகோவ் தன் மனைவிக்குக் காணிக்கை செய்திருக்கின்றார். ஹென்றி மில்லருக்கு அவர் பாரிஸுக்குப் போகமுன்னர் அவர் வீட்டுக்கு அருகில் வசித்த நண்பர் காலம் முழுக்க நல்லதொரு வாசகராக இருந்திருக்கின்றார். அந்த வாசகரோடு படைப்புக்களை மட்டுமில்லை தனது அந்தரங்க வாழ்க்கையையும் மில்லர் பகிர்ந்திருக்கின்றார் எனச் சொல்கின்றனர்.

என் பதின்மங்களில் பாலகுமாரனின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு அவரை ஆசானாகக் கொண்டு அவரது அனைத்து நூல்களையும் எவ்வித விமர்சனமுமின்றி வாசித்து ஏற்றுக் கொண்டிருக்கின்றேன். அவரது ஒவ்வொரு நூல்களையும் பொருளாதார நெருக்கடி அன்றையகாலத்தில் இருந்தபோதும் அவ்வளவு மனநிறைவுடன் வாங்கிக் குவித்திருக்கின்றேன். பாலகுமாரன் தனது நாவல்களில் தேவகோட்டை வா.மூர்த்தி என்ற தன் முதன்மையான வாசகரின் கடிதங்களைத் தொடர்ந்து பிரசுரித்துக் கொண்டிருப்பார். 



டைப்பாற்றல் என்பதை ஓஷோ இன்னும் விரிவாக வரையறை செய்வார். ஓஷோ வந்தடைகின்ற புரிதல்கள் அநேகமாக ஸென் மரபில் நூற்றாண்டுகளாய்ப் பின்பற்றப்படி வருபவை. எந்த ஒருவர் தனது படைப்பாற்றலை பணத்துக்காகவும், புகழுக்காகவும் பயன்படுத்தத் தொடங்குகின்றாரோ அப்போதே அது படைப்பு என்னும் பேரானந்தம் தரும் தன்மையிலிருந்து விலகிப் போய்விடுகின்றது என்கின்றார் ஓஷோ. அதனால்தான் நிறைய நல்ல படைப்பாளிகள் அவர்கள் வாழும் காலத்தில் மதிக்கப்படுவதோ ஏற்றுக்கொள்ளப்படுவதோ இல்லை என்கின்றார். ஒருவர் தனது புதிய படைப்பாற்றலைத் தனக்கானதாகக் கண்டுணர்ந்து அதை இந்த உலகத்தின் முன் வைக்கையில் அவரது ஆயுட்காலம் கிட்டத்தட்ட முடிந்துவிடுகின்றது. ஆகவே அநேக படைப்பாற்றல் மிக்கவர்கள் அவர்களின் மறைவின் பின்னரே கண்டுகொள்ளப்படுகின்றனர் எனச் சொல்கின்றார் ஓஷோ.

அதே போன்று எல்லா மதத்தினரும் தமது கடவுளர்கள் மிகச் சிறந்த சிருஷ்டிகரமானவர்கள் எனச் சொல்கின்றனர். ஆனால் ஒருவர் அசலான படைப்பாற்றலோடு -அது எந்த வகையாக இருந்தாலும்- தான் விரும்பியதில் ஈடுபடும்போது கடவுளர் தன்மையை அடைந்துவிடுகின்றார் என ஓஷோ அடிக்கடி குறிப்பிடுகின்றார். அது இந்தச் சமூகம் படிநிலைகளில் கீழே வைத்திருக்கும் சுத்திகரிப்புத் தொழிலாக இருந்தாலும்!

எனது ஆசிரியரான தாய், அவருக்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் இருந்தாலும் தனது ஆடைகளைத் தானே தோய்க்கச் செய்பவர். அதைக் கண்டு ஒரு மாணவர், தாய் உங்களுக்கு இந்த உலகிற்காகச் செய்வதற்கு எவ்வளவோ விடயங்கள் இருக்கும், என்னை உங்கள் ஆடைகளைத் தோய்க்க அனுமதியுங்கள் எனக் கேட்டபோது, இதுவும் தனக்கு ஆனந்தம் தரும் விடயம் என்று சொல்லி தாய் தன் ஆடைகளைத்தானே தோய்ப்பார். இதை ஏன் சொல்கின்றேன் என்றால் படைப்பாற்றல் என்பதை இன்று மேனிலையாக்கம் செய்த சில‌ விடயங்களோடு மட்டும் நாம் ஒப்பிட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதாலாகும்.

ஆகவேதான் எழுத்தும் வாசிப்பும் எனக்கு மிகப்பெரும் நிறைவைத்தரும் விடயம் என்றாலும் அதை பலர் செய்வதுபோல மேனிலையாக்கம் செய்யமாட்டேன். தமக்கு வாய்த்துவிட்ட‌ சில படைப்பாற்றல்களை வைத்து மற்றவர்களைச் சாதாரணமாக்கி அறிவுரைகூறும் விடயங்களும் எனக்கு உவப்பானதில்லை. ஒரு சிறந்த படைப்பாளி அகத்தில் உணரும் அமைதியையும், மகிழ்வையும் விட  ஒரு கிராமத்தில் மிகச் சாதாரணமாக தன் நாளாந்த வாழ்வோடு இருக்கும் ஸென் துறவி அடையும் நிறைவும் விடுதலையும் பெரிதல்லவா?

படைப்பாற்றல் என்ற ஒன்றை வைத்து, எவரை/எதை எடைபோட்டாலும் அது அபத்தமாக முடியும். முன்னர் ஒரு காலத்தில் தமிழ்ச்சூழலில் வாசிப்பு/எழுத்து என்பது உள்வட்டத்துக்குரியது என்று பிரகடனமாகச் சொல்லப்பட்டது அது ஒருவகையில் எழுதுபவர்களையும் வாசிப்பவர்களையும் இரண்டு பிரிவாக்கியது. வாசிப்பு/எழுத்து என்பது ஒவ்வொருவருக்கும் அந்தரங்கமானது, அதில் உணர்வதை எல்லோராலும் சிலவேளைகளில் உணரமுடியாது போகலாம். ஆனால் அதற்காய் எழுதுவது உள்வட்டத்துக்குரியது என்பது ஒரு மேனிலையாக்கச் செயலே. ஒருவருக்கு எழுதுவதும் வாசிப்பதும் நிறைவைத் தருகின்றது என்றால் இவ்வாறு பிரகடனங்களையெல்லாம் செய்து துவிதநிலையாக்கம் செய்யத் தேவையில்லை.  நீங்கள் எங்களோடு நிற்கவேண்டும் இல்லாவிட்டால் பயங்கரவாதிகளோடு நிற்கின்றீர்கள் என்று அர்த்தம் என ஒருவகையில் -பிற்காலத்தில்- ஜோர்ஜ் புஷ் பிரகடனப்படுத்தியதைப் போன்றது.

எமக்கு மனநிறைவை தரும் எந்த ஒரு விடயத்தை எடுத்துக் கொண்டாலும், அதற்கு அநேகமாக நீண்டகால வரலாறும், மிகச் சிறந்த முன்னோடிகளும் இருப்பார்கள். அவர்களைத் தாண்டி நம்மால் எதைச் சொல்லமுடியும் என்று வரும் சோர்வும் புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் அதுவே நம் சோம்பலுக்குக் காரணமாகிவிடக் கூடாது.

நாம் எதையோ சாதிக்கப் போகின்றோம், பணம் ஈட்டப்போகின்றோம் என்று நினைக்கத் தொடங்கியவுடனேயே நமது படைப்பாற்றல் மறைந்துவிடுகின்றது என்பது உண்மை. அத்துடன் நமக்கு நிறைவை/மகிழ்ச்சியைத் தரும் விடயத்தைச் செய்யாமலும் விலகிப் போவிடுகின்றோம்.  புகழும், பணமும் எதைச் செய்தாவது ஈட்டலாம், ஆனால்  நிறைவும் மகிழ்வும் நம் அகமனத்துக்கு ஒருபோதும் வாய்க்காது. ஆகவேதான் பிரமிளின் வாழ்க்கையை ஒரு வறுமையான/துயரமான வாழ்வாகப் பலர் எழுதும்போது எனக்கு எரிச்சல் வருவதுண்டு. என்னைப் பொறுத்தவரை பிரமிள் எழுத்தில் ஒரு சக்கரவர்த்தியாக தனக்குள் வாழ்ந்து மடிந்திருப்பார் என்றே நம்புகிறேன். 



ப்படியான ஒரு நிறைவைக் கண்டடைந்ததால்தான் எல்லா வசதி வாய்ப்புக்களையும் விலக்கி வைத்து க.நா.சுப்பிரமணியம் எழுத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அதே நிறைவுதான் அசோகமித்திரனை ஜெமினி ஸ்டூடியோவில் இருந்து விலகச் செய்து போதிய வருமானம் இல்லாவிட்டாலும் முழுநேர எழுத்தாளராக்கியது. அந்த முழுமை அசோகமித்திரனுக்குத் தெரியும் என்பதால்தான் அவர் நாகேஸ்வரா பார்க்கில் இருந்து ஒரு பக்கம் ஏற்கனவே ஏதோ எழுதி நிரப்பப்பட்ட தாள்களில் தனது கதைகளைத் தொடர்ந்து எழுதவும் அவரைச் செய்திருக்கின்றது.

இதனால் பிரமிளோ, க.நா.சுவோ, அசோகமித்திரனோ தமது வாழ்வில் சலிப்பையோ, சோர்வையோ சந்தித்திருக்கமாட்டார்கள் என்றெல்லாம் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. எப்படியெனினும் எழுத்துக்கு வெளியே வரும்போது இவற்றையெல்லாம் அனுபவிக்கத்தான் வேண்டும். ஆனால் அதைவிட எங்கே தங்களால் அடைக்கலம் அடைய முடியும் என்பதையும், எது தங்களுக்கு அர்த்தம் தருகின்றது என்பதையும் நன்கு அறிந்த படைப்பாளிகள் அவர்கள் என்பதைச் சுட்டவே அவர்களைக் குறிப்பிடுகின்றேன். இவ்வாறு ஒவ்வொரு கலைக்கும் பல்வேறு படைப்பாளிகள் தமிழில்  இருக்கின்றார்கள்.

இளையராஜாவிடம் பலர் எவ்வாறு இந்தப் பாடலை இவ்வாறு இசையமைக்க முடிந்தது என்க் கேட்கின்றபோது அவர் அநேகவேளைகளில் அது எனக்கே தெரியாது என்றோ இல்லை அவருக்குப் பிடித்த‌ கடவுளை நோக்கிக் கையைக் காட்டியோ பதிலளித்துவிடுவார். ஆனால் நமக்குத் தெரிவது அவர் இசையமைக்கும்போது அவ்வளவு நிறைவடைந்துவிடுகின்றார் என்பது. அந்த அனுபவத்தை எளிய வார்த்தைகளால் விபரிக்க அவருக்கு மொழி ஒருபோதும் கை கொடுப்பதில்லையென்றபோதும்! 

அவருக்கு அவரது ஆன்மீக விடுதலை, இசையாலே எப்போதோ கிடைத்துவிட்டது. அவர் பின்பற்றும் ரமணர் எல்லாம் அவருக்கு ஒர் அடையாளமே தவிர, அவரின் நிறைவும், கடவுளும், ஆன்மீகமும், இசையேதான். அந்த நிறைவை ஒவ்வொரு கலைகளிலும் ஈடுபடுவர்கள் உணர்வதால்தான் பொருள் புகழ் என்பவற்றுக்கப்பால் அவரவர் கலைகளில்/விருப்பங்களில் தோய்ந்து கிடக்கின்றார்கள். அது நம் பலருக்கு பைத்தியக்காரத்தனமாகவும், உலகோடு ஒத்தியங்காத முட்டாள்கள் எனவும் யோசிக்க வைக்கின்றது. இவ்வாறிருப்பவர்கள் எல்லோருமே இப்படித்தானா எனறு கேட்டால் இங்கேயும் போலிகளும், பாவனை காட்டுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் அவர்கள் நமக்கு முதன்மையானவர்கள் அல்ல. தன்னெஞ்சு உண்மை அறியும் என்று அவர்களை அவர்களின் மனச்சாட்சியோடு உரையாட மட்டும் சொல்லலாம்.  

இப்போது இதையெல்லாம் ஏன் பல்வேறு திசைகளில் எண்ணங்கள் சுழித்தோட‌ எழுதுகின்றேன் என யோசிக்கும்போது ஒரு படைப்பை மிகவும் குப்பையாக இருக்கின்றது எனச் சொல்லும் ஒருவருக்கு எப்படியான எதிர்வினை செய்வது என்பதன் நிமித்தமாகக் கூட இருக்கலாம். ஒருவர் ஒரு படைப்பை வாசித்து நிராகரிக்க அவருக்கு அனைத்து உரிமையும் இருக்கின்றது. ஒரு வாசிப்பு அல்லது விமர்சனம் நாம் எப்படி ஒரு படைப்பை விளங்கிக்கொள்கின்றோம் அல்லது மறுக்கின்றோம் என்ற புரிதலில் வரும்போது நாம் நம்மை அறிவதற்கான(வளர்வதற்கான/evolving) தருணங்களைத் தரும். அதுவே எம்மை அடுத்த கட்டங்களுக்கு நகர உதவி செய்யவும் கூடும். அவ்வாறு வாசித்து எழுதவும் செய்வதால் ஏதோ ஒருவகையில் சில நேரங்களிலாவது அந்த நிறைவை நான் அடைந்திருக்கின்றேன். மேலும் லியோ படத்துக்குப் பத்துப் பந்திகளில் கட்டுரை எழுதிவிட்டு  இன்னொரு முறை அதைப் பார்ப்பேன் எனச் சொல்பவரிடமும், நான் எழுத்தின் உன்னதத் தெறிப்புக்களை உணர்ந்த தமிழ் பிரபாவின் 'கோசலை' ரமணிச்சந்திரனின் நாவல் போல் இருக்கின்றது என்று இரண்டு வரிகளில் நிராகரித்துப் போகின்ற ஒருவரிடமும்  உரையாட முடியுமா என்பதில் தயக்கம் எனக்கு இருக்கின்றது. அதேவேளை லியோ இரண்டாம் முறை பார்க்கின்ற இரசனை உடையவரோடு உரையாடமாட்டேன்,  இலக்கியம் உள்வட்டத்துக்குரியது என்றெல்லாம் சொல்லி விலத்தவும் மாட்டேன்.

இப்போது இந்த (மானசீக) உரையாடல் கூட என்னை நானே அறிந்துகொள்ள முயற்சிக்கின்ற தருணங்கள்தான். எனவே எல்லோருக்கும் உரையாட அனைத்து வெளிகளும் திறந்திருக்கின்றன. ஆனால் ஒருபோதும் நிறைவைத் தராத ஒரு விடயத்தை பிறதுக்காய்/பிறருக்காய் செய்ய முயலாதீர்கள் என வேண்டுமானால் மெல்லிய குரலில் சொல்லிக் கொள்கின்றேன்.

****************

புகைப்படங்கள் : நன்றி - Google தேடல்

( Nov 28, 2023)

 

ஹென்றி மில்லரும், ஜூனும்..

Wednesday, February 28, 2024

 

ஹென்றி மில்லருக்கு இயந்திரத்தனமான அமெரிக்க வாழ்க்கை ஒரு கட்டத்தில் வெறுக்கின்றது. அவர் தனது வேலையைத் துறந்துவிட்டு பிரான்ஸுக்குப் போய் விடுகின்றார். அதன்பிறகு 10 வருடங்கள் அமெரிக்காவுக்குத் திரும்பாமல் பிரான்ஸில் இருக்கின்றார். ஐரோப்பாவைச் சூழ்ந்த 2ம் உலக மகாயுத்தம் அவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கின்றது. ஹென்றி மில்லர் பிரான்ஸில் இருந்தபோதே அவரின் Tropic of Cancer மூலம் பிரபல்யமானவர்.  அமெரிக்காவில் இருந்தபோது எழுதத் தொடங்கியபோதும் அவருக்குத் தன் எழுத்தின் மேல் நம்பிக்கை வரவில்லை.

 

அதைப்போலவே மில்லர் எழுதிய இன்னொரு நாவல் Crazy Cock (originally titled Lovely Lesbians).  இந்த இரண்டு நாவல்களும் ஹென்றி மில்லர் இறந்ததன் பிறகே வெளி வந்திருந்தன. இந்த நாவல்கள் இரண்டும் குறித்த விபரங்கள் மிகுந்த சுவாரசியமானவை. ஹென்றி மில்லர் எழுத்தாளராக மாறவும், அதன் நிமித்தம் வந்த பிரபல்யத்துக்கும் ஜூன் மிகப்பெரும் காரணம் என்றாலும், ஜுனுக்குள் இருந்த அலைபாயும் மனதும் சுதந்திர உணர்வும் அவரை வாழ்வில் பல திசைகளுக்கு அலைக்கழித்தது. ஜூனுக்கு மில்லரோடு இருக்கும்போதே இன்னொரு பெண்ணோடு உறவிருந்தது. அவரை மில்லரோடு தங்கியிருந்த வீட்டுக்கு அழைத்து வந்து வாழவும் வைத்திருகின்றார். ஒருநாள் ஜூனும் அவரது காதலியும் மில்லருக்கு எதுவும் சொல்லாமல் பாரிஸிற்குப் பறந்து போயிருக்கின்றனர். தனது முழுநேர வேலையை விட்டுவிட்டு எழுத்தாளராகும் கனவோடு வறுமையோடு போராடிக் கொண்டிருந்த மில்லருக்கு இது பெரும் சரிவைக் கொணர்ந்திருந்தது. அந்த ஆற்றாமையையும், கோபத்தையும் கலந்து எழுதிய நாவல்தான் Crazy Cock. கிட்டத்தட்ட அவரது அமெரிக்க வாழ்வின் சுயசரிதைத் தன்மை எனலாம்.

 

ஜூனும் இல்லாது வறுமையின் நிமித்தம் அவரின் பெற்றோரோடு வாழ மில்லர் சென்றிருந்தபோதும் அவரது குடும்பம் முப்பதுகளில் இருந்த மில்லரை அவ்வளவாக ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் மில்லர் பிரான்சுக்குப் போய் வாழ்கின்றபோதே, இந்த இரண்டு நாவல்களையும் அமெரிக்காவில் இருந்த ஜூனிடம் கொடுத்துவிட்டுச் செல்கின்றார்.

 

பிரான்ஸ் வாழ்க்கையின்போது மில்லரின் முதல் நாவல் பிரசுரமாகி பிரபல்யம் அடைந்ததும், பல நாடுகளில் அது தடை செய்யப்பட்டதும் நாம் அறிந்ததே. இதன் பிறகான சில வருடங்களில் மில்லரும் ஜூனும் பிரிந்து விடுகின்றனர்.. ஜூனிடம் கொடுக்கப்பட்ட இந்த நாவல்களின் பிரதிகள் என்னவானது என்று அக்கறைப்படாது மில்லரும் அடுத்தடுத்த நாவல்களென எழுதத் தொடங்கிவிட்டார். மில்லரைப் பிரிந்து 15 வருடங்களின் பின் ஜூன் மீண்டும் மில்லரைத் தொடர்புகொள்கின்றார். ஜுன் ஒருகாலத்தில் தன் உடலை மூலதனமாக்கியவர் என்பதால் அவருக்கு உடலில் பல்வேறு பிரச்சினைகள் வரத்தொடங்கிவிட்டன. ஜூன் நடந்துகொண்டிருந்தபோது வீடொன்றின் மேல்மாடியில் இருந்து தூக்கியெறியப்பட்ட தொலைக்காட்சி பெட்டி அவரின் வீழ்ந்ததால் கிட்டத்தட்ட படுத்த படுக்கையாகிவிட்டார். அப்போது ஜூனின் நிலைகண்டு மில்லரே தனது நாவல்களை ஆய்வுசெய்யும் ஒரு குடும்பத்தை ஜூனைப் பராமரிக்க அனுப்பி வைக்கின்றார். அப்படிப் பராமரிக்கச் சென்ற  பெண்ணே இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ஜூன் மில்லரின் தொடக்க கால நாவல்களைப் பத்திரமாக வைத்திருப்பதைக் காண்கின்றார். ஆனால் ஜூனுக்கு அவற்றைக் கொடுக்க விரும்பமிருக்கவில்லை. ஏதோ ஒருவகையில் அந்த நாவல் பிரதி செய்யப்பட்டு அமெரிக்காவின் இன்னொரு கரையில்  வாழ்ந்து கொண்டிருந்த மில்லருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது.

 

தொலைந்து போனதாக நினைக்கப்பட்ட நாவல்களை கண்டெடுத்தவர் மகிழ்ந்தபோதும், மில்லர் அவ்வளவு மகிழவில்லை. அவர் இப்போது அமெரிக்காவிலும் நன்கு பிரபல்யம் அடைந்தவராகி விட்டார். நிறைய நாவல்களை எழுதிவிட்டார். அந்த நாவல்களில் இந்த முதல் நாவல்களின் தெறிப்புக்களையும் காணமுடியும். ஒருவகையில் இந்த இரு நாவல்களும் மில்லர் தனது பிற்கால நாவல்களை எழுதுவதற்கான பயிற்சிகள் எனக்கூட எடுத்துக் கொள்ளலாம். எனவே மில்லர் தான் இறக்கும்வரை இவையிரண்டும் வெளியிடக்கூடாதென அவரின் எழுத்துக்கள் அனைத்தையும் ஆவணப்படுத்திய பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்திருக்கின்றார்.

 

மில்லரின் மரணத்துக்குப் பிறகே இந்த நாவல்கள் பிரசுரமாயின.  Crazy Cockஇற்கு   அமெரிக்காவில் இரண்டாம் பெண்ணிய அலை எழுந்தபோது பெண்களின் பாலியலை வெளிப்படையாக எழுதிய எரிக்கா யுங் நல்லதொரு முன்னுரையை எழுதியுள்ளார். மில்லரின் அநேக நாவல்கள் தன் வரலாற்றுத்தன்மை உடையதென்பதால் அநேகமான அவரின் பாத்திரங்களோடு மில்லரின் தனிப்பட்ட வாழ்வு ஒப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனால் இயல்பில் மில்லர் வேறொருவர். மில்லரே, 'எனது மிருக நடத்தைகளை/இருண்ட பக்கங்களையே எனது நாவல்களில் எழுதியிருக்கின்றேன்' என்றிருக்கின்றார். 

 

எல்லோருக்கும் ஏதோ ஒரு வடிகால் வாழ்வின் அலைச்சல்களுக்குள் தேவைப்படுகின்றது. மில்லருக்கு அது எழுத்தாக இருந்திருக்கின்றது. ஒருவகையில் மில்லர் ஜூனை எப்படி விளங்கிக் கொள்வது என்று புரியாத விசித்திரத்தால்தான் அவரது பல்வேறு நாவல்களில் வெவ்வேறு பெயர்களில் ஜூனை மில்லர் கொண்டு வந்திருக்கின்றார். 'எழுத்தாளரை நேசிக்கும்போது அவரின் எழுத்தின் மூலம் நீங்கள் சாகாவரம் பெறுவீர்கள்' என்ற தேய்வழக்கை நாம் பல இடங்களில் வாசித்திருப்போம். ஆனால் மில்லரின் எழுத்துக்களின் மூலம் ஜூன் இப்போதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.  

 

ஹெமிங்வே இப்படி பாரிஸில் வாழ்ந்த காலத்தில் அவரின் பிரசுரிக்காத கதைகள், இன்ன்பிற படைப்புக்களை சூட்கேஸில் வைத்து ஹெமிங்வேயின் மனைவி கொண்டுவரும்போது அது களவாடப்பட்டு தொலைந்து போகின்றது. அதைப்பற்றி சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி கூட ஒரு கவிதை எழுதியிருக்கின்றார். ஆனால் மில்லருக்கு இந்த விடயத்தில் அதிஷ்டம் அவருடன் இருந்திருக்கின்றது. எனவேதான் ஜூன் தன்னைப் பற்றி மோசமாகச் சித்தரித்திருந்தாலும் அவரின் இறுதிக்காலம்வரை இவ்விரு நாவலைகளையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றார். அது ஜூன், காலம் முழுக்க தன் மீது வைத்திருந்த மில்லரின் கனிவுக்கு கொடுத்த வெகுமதியாகக் கூட இருக்கலாம். 

 

*****************

 

(Nov 24, 2023)