கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

"நான் உயிர்வாழ்வ‌த‌ற்காய் ஆசீர்வதிக்க‌ப்ப‌ட்டிருக்கின்றேன்" - கணேஸ்வ‌ரி ச‌ந்தான‌ம்

Wednesday, May 26, 2010

ந‌ன்றி: IRIN
த‌மிழாக்க‌ம்: டிசே த‌மிழ‌ன்

க‌ணேஸ்வ‌ரி ச‌ந்தான‌ம் (31),சுத‌ந்திர‌ த‌மிழ் நாடு அமைப்ப‌த‌ற்காய் 25 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாய் போராடி,அண்மையில் தோற்க‌டிக்க‌ப்ப‌ட்ட‌ த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளில் இணைந்திருந்த‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ பெண்க‌ளில் ஒருவ‌ர்.

-ப‌ல‌ நாடுக‌ளால் தீவிர‌வாத‌ அமைப்பென‌ அழைக்க‌ப்ப‌ட்ட‌‍- இய‌க்க‌த்தில் இணைந்த‌ இவ‌ர், ச‌மாதான‌ கால‌த்தில் இய‌க்க‌த்திலிருந்து வில‌கி, ச‌க‌ போராளி ஒருவ‌ரைத் திரும‌ண‌ஞ் செய்து ஒரு குழ‌ந்தையையும் -மீண்டும் இய‌க்க‌த்தில் 20006ல் அழுத்த‌த்தால் இணையும்போது- பெற்றிருந்தார். இன்று ஆயிர‌க்க‌ண‌க்கான‌வ‌ர்க‌ள் மீண்டும் த‌ங்க‌ள் வீடுக‌ளுக்குத் திரும்புவ‌தைப் போல‌, தானும் ஒரு ந‌ல்ல‌தொரு எதிர்கால‌த்தை க‌ட்டிய‌மைக்க‌ முடியுமென‌ இவ‌ர் ந‌ம்புகிறார்.

'நான் 10 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் த‌மிழ் ம‌க்க‌ளின் விடுத‌லைக்கான‌ போருக்காய் புலிக‌ளிட‌ம் சேர்ந்தேன் என‌து பெற்றோர் என‌து முடிவு குறித்து அவ்வ‌ள‌வு ச‌ந்தோச‌ம‌டைய‌வில்லை. போரின் கார‌ண‌மாக‌ நான் பாட‌சாலையிலிருந்து வில‌கினேன். ஒரு ப‌ர‌த‌ நாட்டிய‌க்காரியாக‌ வ‌ருவ‌தே என‌து குழ‌ந்தைப் ப‌ருவ‌க் க‌ன‌வாக இருந்த‌து; ஆனால் என‌து க‌ன‌வு ஒருபோதும் நிறைவேறிய‌தில்லை.'

'கிட்ட‌த்த‌ட்ட‌ ப‌த்து வ‌ருட‌த்திற்கு மேலாக‌ இய‌க்க‌த்தில் இருந்த‌பின், 2002ல் ஏற்ப‌ட்ட‌ ச‌மாதான‌க் கால‌த்தில் நான் புலிக‌ளிட‌மிருந்து விலகினேன். புலிக‌ளின் போராளியொருவ‌ரை ம‌ண‌ந்து, ஒரு குழ‌ந்தையையும் பெற்று நாங்க‌ள் ம‌கிழ்ச்சியான‌ த‌ம்ப‌திக‌ளாக‌ இருந்தோம்.

'ஆனால் 2006ல் வாழ்வின் இய‌ல்புநிலை மாறி நான் மீண்டும் இய‌க்க‌த்தில் இணைய‌ அழுத்த‌ம் கொடுக்க‌ப்ப‌ட்டேன். இக்கால‌க‌ட்ட‌த்தில், கிராம‌த்தில் மிக‌க் க‌டுமையான‌ ப‌யிற்சி என‌க்கு ம‌ற்ற‌ப் பெண்க‌ளோடு த‌ர‌ப்ப‌ட்டு, ம‌ற்றைய‌வ‌ர்க‌ளை விட‌ சிற‌ந்த‌தொரு போராளியாக‌ என்னை நான் நிரூபித்துக் காட்டினேன்.'

'அதே நேர‌ம் இது மிக‌வும் க‌டின‌மாக‌ இருந்த‌து எனெனில் நான் என‌து குடும்ப‌ம் ப‌ற்றி மிக‌வும் க‌வ‌லைப்ப‌ட்டேன். இப்போரில் நான் கொல்ல‌ப்ப‌ட்டால் யார் என‌து குடும்ப‌த்தைக் க‌வ‌னிப்பார்க‌ள் என‌ எப்போதும் நான் யோசிப்பேன். போர்க்க‌ள‌த்தில் நான் நிற்கும்போதும்,என‌து குடும்ப‌ம் ப‌ற்றிய‌ நினைவுக‌ளே எப்போதும் என‌து ம‌ன‌தில் இருந்த‌ன‌.இன்னொரு புற‌த்தில் இது நான் தீர்மானித்து தெரிவு செய்யும் ஒன்றாக‌ இருக்க‌வில்லை; நான் தொட‌ர்ச்சியாக‌ ச‌ண்டைபிடித்தேன். க‌ட‌வுளிட‌ம் எனது க‌ண‌வ‌னையும் ம‌க‌னையும் வாழ‌ விடும்ப‌டி நான் பிரார்த்தித்தேன். பின்ன‌ர், என‌து குடும்ப‌மும் நானும் எங்க‌ள் கிராம‌த்திலிருந்து இட‌ம்பெய‌ர்ந்தோம். இன்னொரு ம‌க‌னைப் பிர‌ச‌வித்த நான் இப்போது என‌து க‌ண‌வ‌ரைப் போல‌வே தொழில் எதுவுமின்றி இருக்கின்றேன்.'

'போர் மிக‌வும் கொடூர‌மாயிருந்த‌து, நிறைய‌ காய‌ங்க‌ளும், இழ‌ப்புக்க‌ளும். நான் என‌து பிள்ளைக‌ளை ப‌டிப்பித்து ந‌ல்ல‌ பிள்ளைக‌ளாக்க‌ விரும்புகிறேன். க‌ச‌ப்பான‌ க‌ட‌ந்த‌கால‌த்தை ம‌ற‌ந்துவிட்டும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ன்னித்துவிட்டும் அமைதியான‌ வாழ்வை நான் (வாழ‌) விரும்புகிறேன்.

'நான் போர்க்க‌ள‌த்தில் ச‌மராடியிருக்கிறேன்,ஆனால் என்னால் எவ்வித‌க் காய‌ங்க‌ளுமின்றி த‌ப்ப‌ முடிந்திருக்கிற‌து, அதேவேளை என‌து ச‌க‌போராளிக‌ள் நிறைய‌ப் பேர் அந்த‌ இட‌த்திலேயே இற‌ந்திருக்கின்றார்க‌ள். இது ஒரு க‌ட‌வுளின் அதிச‌ய‌ம். நான் உயிர்வாழ்வ‌த‌ற்காய் ஆசீர்வ‌திக்க‌ப்ப‌ட்டிருக்கிறேன்.'

மூன்று க‌விதைக‌ள்: சென்ற‌ வ‌ருட‌ நினைவுக‌ளிற்கு...!

Tuesday, May 18, 2010

க‌பால‌ங்க‌ளைக் காவிச்செல்லும் ப‌ற‌வைக‌ள்

ந‌ள்ளிர‌விலழும் குழ‌ந்தைகளை கதகதப்பாக்க
சிமினி விள‌க்குக‌ளை காவிய‌ப‌டி
ப‌ற‌க்கும் சாம்ப‌ல் ப‌ற‌வைக‌ள்
எனது குற்றங்களின் குறுகுறுப்பை
தாங்க‌ முடியாத் துய‌ர‌த்தில்
த‌வ‌றவிடுகின்ற‌ன‌ விள‌க்குக‌ளை

சித‌றிய‌ எண்ணெய்த்துளிக‌ளிலிருந்து
முத்துக்குமாரிலிருந்து முருக‌தாச‌ன்வ‌ரை
எண்ண‌ற்றோர் தீ மூட்டிக்கொள்ள‌
நூற்றாண்டுக‌ளாய் நில‌த்தினுள்
உறைந்துபோயிருந்த‌ போர் அரக்கன்
விழிக‌ள் விரித்து
இன்ன‌மும் உட‌ல‌ங்க‌ள் தாவென்று உக்கிர‌த்துட‌ன்
த‌ன் அக‌ண்ட‌ வாயைப் பிள‌க்கிறான்
வ‌ன்னிப் ப‌துங்குகுழிக‌ளுக்குள்.

அவ்வைக்கு க‌ள்ளோடு தமிழூட்டி
முன்னோர் காலத்தில் ச‌ந்த‌திக‌ளைப் பிர‌ச‌வித்தபடி
காடுகளில் அலைந்த ஆதித்தாயே
குழ‌ந்தைக‌ளின் குருதி குடித்தும்
எவரினதும் தாகம் தீராக்கண்டு
எல்லாப் பூர்வீகப் பிரதிகளும்
தம்மைத் தாமே எரிக்க
எமதெல்லோரினதும் அடையாளமாகிறது மகாவம்சம்

உடலங்கள் புதைந்த சதுப்புநிலத்தில்
இன்னமும் கொய்வதற்கு மிஞ்சியுள்ள
தலைகளுக்காய் காத்திருப்பவர்களின்
கைகளில் 'சமாதானம்' இருக்க
அரசர்களும் அதிகாரங்களும்
கவனிக்கவும் கதைக்கவும்படும் காலத்தில்
நாயொன்று கவ்விக்கொண்டுவந்த
எலுமிச்சை குத்தப்பட்ட வைரவரைப்போல
அநாதரவாயினர் மக்கள்

பறவைகள் காவிச் செல்லும்
சிமினி விளக்குகளுக்காய் குழந்தைகள் காத்திருந்த காலம்போய்
நேற்றுச் சரிந்து வீழ்ந்த உடலுக்கு
கொள்ளியிட எந்தப் பிசாசு நெருப்புக்கொண்டுவருமென்று
காத்திருக்கும் விழிகளின் கோரம் தாங்காது
நான் அனுப்பிக்கொண்டிருக்கின்றேன் எண்ணெய் ஊற்றி
எரியூட்டிய எனது கபாலத்தை.

(Feb 26, 2009)

நனவுகளின் பலிக்காலம்

கறுப்புத்துணியால்
இறுக்கப்பட்ட விழிபிதுங்க
பின்னிரவில் பின்னந்தலையில் 'பொட்டு' வைக்கப்பட்ட
என் 'சவம்' தாங்கிவருகின்றாள் தாய்
அவளிடம் சொல்வதற்கு சில வார்த்தைகளை
அவசரமவசரமாய்த் தயார்ப்படுத்துகின்றீர்கள்
இவனிற்கு ஏதேனும் இயக்கத்தோடு தொடர்பிருந்திருக்கலாம்;
-அல்லது- நாளை ஏதேனும் இயக்கத்தில் இணைந்திரண்டுபேரை
மண்டையில் போடுமொருவனாய் மாறிவிடும் ஆபத்தான கொள்கைகளோடிருந்தவன்
நாக்கு பலவாயிரம் கதைசொல்லிகளை கட்டெறும்புகளாய்ப் பிரசவிக்கிறது.

பிரேதங்கள் உரையாடுவதில்லையெனினும்
நீங்கள் ஊற்றிக்கொண்டிருக்கும் சிவப்புவைனில் மிதக்கும்
ஐஸ்கட்டியிலிருந்தெனது சிதைந்தமூளை கரைவதான நினைப்பில்
விரல்கள் நடுங்கி இதயம் அழுத்தமுறும்
ஒரு குழந்தையைப் புணர்ந்தவனுக்கும் இவ்வாறு பதற்றங்களோடிருப்பவனுக்கும்
வித்தியாசங்கள் அவ்வளவாய் இருப்பதுமில்லை

அம்மாவிற்கு
'தேசியம்' தெரியாது
சர்வதேசியத்தால் எல்லாமே தீர்ந்துவிடுமென்ற 'வரலாற்றுண்மை'யும் அறியாள்
தாடியைத்தாண்டி பெரியாரையும் மார்க்ஸையும் இனம்பிரித்தறியும்
சில்லெடுப்புக்களில் அக்கறையிருந்ததுமில்லை
ஆனால் அவளுக்கு
சுருண்டிருக்கும் குறியாய் பிஸ்ரல் இருப்பதும்
விறைத்த லிங்கமாய் ஏகே-47 விரிந்தும்
மாறிமாறி வதைத்துக்கொல்லும் 'ஆம்பிளைத்தனங்கள்' தெரியும்

என்னுடைய கனவாயிருந்தது;
எல்லாவற்றிலிருந்தும் தப்பியோடுவது
காசு கொஞ்சம் உழைத்து அம்மா உலக்கைபோட்டு அரிசி இடித்தலை
வாடி வதங்குவதை நிறுத்துவது
பனிப்புலத்தில் ஒருத்தியைப் புணர்ந்து
காஃப்காவின் நாயகனைப்போலவென் கடந்தகாலச்சோகங்களைச் சிதைப்பது.

f*** off, you bloody shot gun!
தலையிலடித்து மண்ணை வாரியிறைத்து
தன் ஆடைகள் கிழித்து
என்னைப் புணர்ந்தெனினும் தன் இளையமகனை
திருப்பித்தருவியளா பாவிகளேயெனக் கேட்டுருகும்
அம்மாக்களின் கதறல்கள் நூற்றாண்டுகளாய்த் தொடர்ந்து எதிரொலிப்பவை

அம்மா,
உன் யோனியை இறுக்கிமூடி
குறிகளை மட்டுமில்லை
துவக்குகளையும் உள்நுழைய அனுமதிக்காதே;
எவருமே நெருங்கவியலா
பயங்களற்ற சவமாய்
உனக்குள்ளே கதகதப்பாய்த் துயில விரும்புகின்றேன்.

(Nov 07,2007)

உட‌ல‌ப்ப‌ச்சைய‌ங்க‌ள்

1.
நேற்றைக‌ளின் இர‌வுக‌ளின்
ஒவ்வோர் க‌த‌க‌த‌ப்பான‌ அழைப்பிலும்
ப‌ச்சைய‌ம் ப‌டிந்து உருவான காடுக‌ள்
க‌ழுத்திலொரு வ‌ளைய‌ம் அணிவித்து
கால‌ம் ந‌ம்மை நெருக்கிய‌போது
எல்லா இர‌க‌சிய‌ங்க‌ளையும்
தம்மோடு மூடிக்கொண்டு
துய‌ர‌த்தில் த‌ற்கொலை செய்திருந்த‌ன‌

'எல்லாமும்' இருக்கின்ற‌
யாரும‌ற்ற‌ ப‌னிப்பாலையில்
சுழிய‌த்திலிருந்து தொட‌ங்கும் ப‌திய‌ங்க‌ள்
த‌வ‌றுக‌ளின் துரித‌க‌தியில் ஊரத்தொட‌ங்குகின்ற‌ன‌ புத்த‌க‌ப்பூச்சிக‌ள்
புத்த‌க‌ங்க‌ளும் வேண்டாம் பூனாவும் வேண்டாமென‌
மூர்ககமாகி அனைத்தையும் உதைத்துத்த‌ள்ளிய‌பின்
கொளுத்த‌த்தொட‌ங்கினேன் புத்த‌க‌ம் + பூச்சிக‌ளை.

2.
இப்போது உதிர்ந்துகொண்டிருக்கும்
இலைக‌ளில்
பொழியும் மழை
மீண்டும் கிள‌ர்த்திக்கொண்டிருக்கிற‌து
க‌ன‌வுக‌ளை.

'ந‌ம‌க்கான‌ க‌ன‌வுக‌ள் த‌னித்துவ‌மான‌வை'
நூறிலிருந்து சுழிய‌த்துக்கு ந‌க‌ர்ந்துகொண்டிருந்த‌
விருப்புக்க‌ளின் ச‌துர‌ங்க‌த்திற்குள் நின்றொலித்திருக்கிறேன்
பாம்பு வாலால் சுழ‌ற்றி வீழ்த்திய‌போதும்
ஏணியில் ஏற்றிவிட‌ 'தொலைவிலொரு குர‌ல்' காத்திருந்த‌து

ப‌ச்சைய‌ங்க‌ளில் வ‌ள‌ர்த்த‌
ந‌ம‌க்கான‌ காடு த‌ற்கொலையை நாடிய‌போது
அத‌ன் க‌டைசிப்பொழுது க‌த்தரிப்பூ நிற‌த்திலிருந்த‌து
பிடித்த‌மான‌ க‌ள்ளிச்செடிக‌ளை வ‌ளர்க்க‌க்கூட‌
மூர்க்க‌மாய் ம‌றுத்துத் த‌ரிசான‌து நில‌ம் (அல்ல‌து காடு).

3.
பிற‌ருக்கான‌
ந‌ன்றிக‌ளையும் விருப்புக்க‌ளையும்
ம‌றுத‌லித்து பாவ‌ங்க‌ளின் குறுக்கும‌றுக்குமான‌
முடிவிலி வ‌லைக்குள் வீழ்ந்தா நானா?
ந‌ம‌க்கான‌ க‌ன‌வா?
காடெரிந்த‌ க‌த்தரிப்பூச் சுவாலை
மீண்டும் ஊருலா வ‌ருகையில்
காலையில் த‌ருமொரு முத்த‌மாய்
உன்துயில் க‌லைக்காது 'போய்விட‌' விரும்புகின்றேன்

'எரிப்ப‌தை விட‌ வ‌னாந்த‌ர‌த்தில் புதைப்ப‌தே விருப்ப‌மான‌து'
அன்பே, த‌ய‌வுசெய்து ம‌ற‌ந்துவிடாதே
க‌ன‌வு எண் இருப‌த்தைந்தை.

காடு த‌ன்னை எரித்த‌துபோல‌வ‌ன்றி
அடையாளமின்றிப்போவ‌தை ம‌றுக்கின்றேன்
'இந்த‌க் க‌ன‌வுக‌ள் - ஈர‌லிப்பான‌வை நித்திய‌மான‌வை நிக‌ழ‌க்கூடிய‌வை'

ப‌ஞ்ச‌வ‌ர்ண‌க்கிளியின் வ‌ழிகாட்ட‌லோடு
க‌ன‌வுக‌ளை நிக‌ழ்த்திக்காட்ட‌
வ‌ருமொருவ‌ரின் கால‌டித்த‌ட‌ங்க‌ளுக்காய்
மித‌ந்த‌ப‌டியிருக்க‌ட்டும்
என்னுட‌ல‌ப் ப‌ச்சைய‌ங்க‌ள்.

(2009)

Monday, May 10, 2010

செம்மஞ்சளாய்
இலைகள்
உதிர்ந்துகொண்டிருந்த பருவத்தில்
முன்பொருமுறையும் சென்றிராத
சிறுதீவுக்கு பயணித்திருந்தேன்

ஒரு மதுபானவிடுதியின்
இருட்டுமூலையில்,எனது
கோப்பையை நிறைக்கும்
மதுவினைப்போல்
பரவியிருந்தது வெறுமை

அந்நியமான சூழலில்
தோலின் நிறத்தை
நிராகரித்து
மொட்டவிழ்க்கும் தோழமை
அழகு நிறைந்தது

இப்போது
நமது உதடுகளில்
நுரைத்துத் ததும்புகின்றன
வார்த்தைகளும் மதுவும்.

திடீரென
dance floorன் மையத்தில்
இழுத்துச்சென்று
ஆட்டத்தின்
எந்தவிதியும் அறியாவென்னை
soca நடனம்
இணைந்தாடச்சொல்கின்றாய்

மதுவும் இசையும்
நரம்புகளைத் துளைக்க
தளம்பாதிருப்பவர் அறிவுஜீவிகள்
நான் உன் பிரியத்திற்குரியவன்;
ஆடுகின்றேன்.

வாரமொன்று களிந்து
புறப்படுகையில்
பேரூந்து யன்னலில்
அலைந்து திரிந்த ஒற்றையிலை
காலம் முழுவதற்குமான
நமது பிரிவுத்துயரை
காவிச்செல்கின்றது

இந்த நள்ளிரவில்
நீ சமைத்துப் பரிமாறிய
உன்கலாச்சாரத்து கார உணவும்
soca நடன அசைவுகளும்
ஒரு கடிகாரத்தின் முள்சத்தத்தைவிடவும்
அதிகம் தொந்தரவு செய்கின்றன

நீயும் எழுதக்கூடும்
தென்னை சூழ்ந்த கடற்கரையில்
ஊரின் ஞாபகம் வந்து
விழிகளிரண்டில் ஈரஞ்சுமந்த
ஒரு நாடற்றவனின் குறிப்பினை.

சித்திரை 05/05

நஞ்சு

Saturday, May 08, 2010

thami

குளிரென் நெஞ்சை அமுக்கவெடியாய் அழுத்தியபோது
இலையுதிர்காலத்தின் கடைசிச்சாட்சியென
பறந்துசெல்லும் அவனைக் கண்டேன்
விபத்தில் இல்லாமற்போனவன் தீப்பிடிக்கும் காயங்களுடன்
துடிப்படங்காது அலறும் தன்செவ்விதயத்தை
பனிக்குள் பத்திரப்படுத்திக் கையளிக்க
மாயன்காலத்தவர்கள்
போரினை நிறுத்த
உயிருள்ளவர்களைப் பலியிட்டார்களெனும் குறிப்புகள்
குருதி நரம்புகளெங்கினும் ஓடுகின்றன

காளான்களாய் குண்டுகள் முளைக்கும்
தேசத்தின் செம்மண் தெருக்களினொன்றில் பதியஞ்செய்கையில்
தொலைந்துபோனவர்களின் நினைப்பொழிந்து
போர்பற்றிய பயங்களிலிருந்து விடுபடலாமென்று
தீயையொரு நாயைப்போல வருடியபடி கூறுகின்றான் தோழன்

குருதி நிறத்திலிருந்து நீலம்பாரிக்கும் இதயத்தைக்காவியபடி
இரண்டு கடல்களும் மூன்று கண்டங்களும் தாண்டி
சிறுதீவொன்றில் புதைக்கும்போது
பூமிபிளந்து இருதேசங்கள் பிரிந்தன

இப்போது
மழைக்கால ஈசல்களைப்போல
பல்லாயிரம் இதயங்கள்
மாயன்காலத்து போர்க்காலக்குறிப்புக்கள் களைந்து
மீண்டும் மனிதவுருக்கொள்கின்றன
தமிழும் சிங்களமும் பேசி

இரவுகளை கோரமாய் விழுங்கும்
பனியரசனின் தீயுமிழும் ட்ராகனை
கோடையில் சூரியன் விழுங்கியதுபோல்
நஞ்சூட்டப்பட்ட என்னுடலும் வார்த்தைகளும்
பொறி வைத்துக்காத்திருக்கின்றன
போர் அரக்கனுக்காய்.




(Jan 30, 2007)
Photo: Thami (Eelam)




இரண்டு உலகங்களுக்கு இடையில்...

-விமுக்தி ஜெயசுந்தராவின் Between Two Worlds முன்வைத்து-

1.
திரைப்ப‌ட‌ங்க‌ள் என்ப‌து பொழுதுபோக்கிற்கு ம‌ட்டுமே என்றொரு விம்ப‌ம் த‌மிழ்ச்சூழ‌லில் பொதுப்புத்தியில் ப‌திந்திருக்கின்ற‌து. அவ்வாறான‌ சூழ‌லிலிருந்து வ‌ரும் நெறியாள‌ர்க‌ளும் பொதுப்புத்தியைத் த‌விர்த்து புதிய‌ க‌ள‌ங்க‌ளில் த‌மிழ்த்திரைப‌ட‌ச்சூழ‌லை ந‌க‌ர்த்துவ‌த‌ற்கு அக்க‌றை கொள்வ‌துமில்லை.. ஆக‌வேதான், வ‌ழ‌மைக்கு மாறாய் ஆடல், பாட‌ல், ச‌ண்டைக்காட்சிக‌ள் குறைவாக‌ வ‌ரும் திரைப்ப‌ட‌ங்க‌ளைக் கொண்டாட‌வேண்டிய‌ அவ‌ல‌ச்சூழ‌ல் த‌மிழில் இருக்கிற‌து. எனினும் இவ‌ற்றுக்கு அப்பால் இவ்வாறான‌ திரைப்ப‌ட‌ங்க‌ளில் கூட‌ த‌லித்துக்க‌ள், பெண்க‌ள், அர‌வாணிக‌ள் போன்ற‌ விளிம்புநிலை ம‌னித‌ர்கள் ப‌ற்றிய‌ சித்த‌ரிப்புக்க‌ள் மிக‌ மோச‌மாக‌ நுண்ணிய‌த‌ள‌த்தில் இய‌ங்கிக்கொண்டிருப்ப‌தை நாம் அவ‌தானிக்க‌ முடியும்.த‌மிழ்ச்சூழ‌லோடு ஒப்பிடும்போது மிக‌ச்சிறிய‌ பார்வையாள‌ர் வ‌ட்ட‌த்தையும் மோச‌மான‌ த‌ணிக்கைச் சூழ‌லையும் கொண்ட‌ சிங்க‌ள‌த் திரைப்ப‌ட‌ச்சூழ‌லிலிருந்து அற்புத‌மான‌ திரைப்ப‌ட‌ங்க‌ள் ப‌ல்வேறு பின்புல‌ங்க‌ளை முன்வைத்து வ‌ர‌த்தொடங்கிவிட்ட‌ன‌. அதிகார‌த்தின் அமைப்புக‌ளுக்கு அறைகூவ‌ல் விடுத்தப‌டி ப‌ல இளைய‌ நெறியாள‌ர்க‌ள் த‌ம‌க்கான‌ -முக்கிய‌மாய் போருக்கும்/அர‌ச அதிகார‌ங்க‌ளுக்கும் எதிரான‌ க‌தைக‌ளைத் துணிவுட‌ன்- திரைப்ப‌ட‌மாக்க‌த் தொட‌ங்கிவிட்ட‌ன‌ர். இன்று ப‌ல்வேறு நாடுக‌ளில் நிக‌ழும் திரைப்ப‌ட‌ விழாக்க‌ளில் சிங்க‌ள‌ப்ப‌ட‌ங்க‌ள் திரையிட‌த் தேர்ந்தெடுக்க‌ப்ப‌டுவ‌தும், விருதுக‌ளைப் பெறுவ‌தும் புதிய‌ க‌ள‌ங்க‌ளைப் ப‌ரீட்சித்துப்பார்த்த‌ சிங்க‌ள‌த்திரைப்ப‌ட‌ச்சூழ‌லிற்குக் கிடைத்த‌ அங்கீகார‌மென‌ எடுத்துக்கொள்ள‌லாம்.

அவ்வாறான‌ சிங்க‌ள‌ நெறியாள்கையாளர்களில் ஒருவ‌ராக‌, த‌ன‌து இருபத்தேழாவது வ‌ய‌தில் The Forsaken Land திரைப்ப‌ட‌த்தை இய‌க்கிய‌த‌ன் மூல‌ம் பல‌ர‌து க‌வ‌ன‌ததைத் திருப்பிய‌ ஒருவ‌ர் விமுக்தி ஜெய‌சுந்தரா. இல‌ங்கையின் தென்ப‌குதியில் பிற‌ந்த‌ விமுக்தி திரைப்ப‌ட‌த்துறை சார்ந்த‌ க‌ல்வியை இந்தியாவில் புனேயிலும், பின்ன‌ர் மேற்படிப்பை பிரான்சிலும் மேற்கொண்ட‌வ‌ர். இப்போது மீண்டும் -நான்கு வ‌ருட‌ இடைவெளியின்பின்- த‌ன‌து இர‌ண்டாவ‌து ப‌ட‌மான‌ Between Two Worlds என்ற‌ ப‌ட‌த்தோடு வ‌ந்திருக்கின்றார்.. ஏற்க‌ன‌வே வெனிஸ் திரைப்ப‌ட‌ விழாவில் திரையிட‌த்தெரிவான‌ இத்திரைப்ப‌ட‌ம் இமமாத‌ம் ரொற‌ண்டோவில் நிக‌ழ்ந்த‌ ச‌ர்வ‌தேச‌த் திரைப்ப‌ட‌விழாவிலும் தெரிவு செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. .மிக‌க் குறைவான‌ உரையாட‌ல்க‌ளையும், நிறைய‌ப் ப‌டிம‌ங்க‌ளாலான‌ கவித்துவ‌க்காட்சிக‌ளையும் கொண்ட‌ விமுத்தியின் ப‌ட‌ங்க‌ளில் சாதார‌ண‌மாய் ஒருவ‌ரால் அவ்வ‌ள‌வு எளிதில் நுழைந்துவிட‌முடியாது..மிக‌ மெதுவாக‌வும், நேர்கோட்டுத்த‌ன்மை அற்ற‌ காட்சிக‌ள் ஒன்றுக்கு ஒன்று தொட‌ர்பில்லாது அடிக்க‌டி மாறிக்கொண்டிருக்கும் இத்திரைப்ப‌ட‌ங்களைப் பார்க்க‌த் த‌ன்னைத் த‌க‌வ‌மைத்துக்கொள்ளாத‌ ஒரு பார்வையாள‌ரை இத்திரைப்ப‌ட‌ங்கள் த‌ம்மிலிருந்து வெளியே எற்றி எறிந்துவிட‌வே செய்யும். Between Two Worlds என்கின்ற இத்திரைப்ப‌ட‌ம் தொட‌ங்குவ‌த‌ற்கு முன், ஒரு சிறு அறிமுக‌த்தை விமுக்தி த‌ரும்போது, "ஏற்க‌ன‌வே இப்ப‌ட‌த்தைப் பார்த்த‌ ப‌ல‌ர் விள‌ங்குவ‌த‌ற்குக் க‌டினமான‌ ப‌ட‌ம் என்றே கூறியிருக்கின்றார்க‌ள். இது ப‌ல‌ puzzleக‌ளைக் கொண்ட‌ ஒரு திரைப்ப‌ட‌ம். ப‌ட‌ம் முடியும்போது நீங்கள் puzzleளைப் பொருத்தி உங்க‌ளுக்கான‌ ஒரு க‌தையை உருவாக்க‌ முடியும்" என்றிருந்தார். உண்மையில் இந்த‌ப்ப‌ட‌ம் பார்வையாள‌ருக்குரிய‌ திரைப்ப‌ட‌ம்; .puzzleக‌ளை மாற்றி மாற்றி அடுக்குவ‌த‌ன் மூல‌ம் பார்ப்ப‌வ‌ர் த‌ன‌க்கான‌ ஒரு க‌தையை உருவாக்க‌ முடியும். ஒருவ‌ர் உருவாக்கும் க‌தையும், ப‌ட‌த்தைப் பார்க்கும் ம‌ற்றொருவ‌ர் உருவாக்கும் க‌தையும் ஒன்றாய் இருக்கவேண்டும் என்ற‌ எந்த அவ‌சிய‌மும் இல்லை. இதை இன்னொருவித‌மாய் இது த‌ன்ன‌ள‌வில் பார்ப்ப‌வ‌ரின் சூழ‌லுக்கும், அனுப‌வ‌ங்க‌ளுக்கும் ஏற்ப‌ க‌ண‌ந்தோறும் மாறிக்கொள்ளும் பிர‌தியென‌ எடுத்துக்கொள்ள‌லாம். ஆனால் ஒற்றைத்த‌ன்மையிலும், நேர்கோட்டுக்க‌தைச் சொல்ல‌லிலும் ஊறியிருக்கும் ந‌ம்மில் எத்த‌னைபேர் இத்திரைப்ப‌ட‌ம் த‌ரும் சுத‌ந்திர‌த்தை அனுப‌விக்க‌த் த‌யாராக‌ இருக்கின்றோம்? கட்டற்ற சுத‌ந்திர‌ம் என்ப‌து சில‌ருக்குப் பிடிக்காதுபோல‌ இத்திரைப்ப‌ட‌ம் எடுக்க‌ப்ப‌ட்ட‌வித‌மும் ப‌ல‌ருக்குப் பிடிக்காது போக‌வும் கூடும்.

2.
ஒருவ‌ன் ம‌லையுச்சியிலிருந்து க‌ட‌லுக்குள் வீழ்வ‌துட‌ன் ஆர‌ம்பிக்கும் முத‌ற்காட்சி, அவ‌ன் திரும்ப‌வும் ம‌லை மீதேறி ந‌க‌ருக்குள் நுழையும்போது ந‌க‌ர் க‌ல‌வ‌ர‌த்தின் அந்த‌ர‌த்தில் மித‌க்க‌த் தொட‌ங்கியிருக்கின்ற‌து. தெருவில் போகின்ற‌வ‌ர்க‌ளை அடித்துத் துவைத்து க‌டைக‌ளையெல்லாம் நொறுக்கிய‌ப‌டி குழுக்குழுவாய் இளைஞ‌ர்க‌ள் கூக்குர‌லிட்ட‌ப‌டி இருக்கின்றார்க‌ள். க‌ல‌வ‌ர‌த்தின் ந‌டுவில் ப‌யந்து ந‌டுந‌டுங்கிய‌ப‌டி ஒரு பெண்ணிருப்ப‌தைப் பார்த்து, க‌ட‌லில் விழுந்து ந‌க‌ர் மீண்ட‌ இளைஞ‌ன் அவ்ளைக் காப்பாற்றுகின்றான். சீன‌ச்சாய‌லுடைய‌ பெண்ணை இவ‌ன் (திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்திற்கு பெயர் எதுவும் இருக்காததால் அந்தப் பாத்திரத்தை 'இவன்' எனக்குறிப்பிடுகின்றேன்) இன்னொருத்த‌னின் வானில்(Van) ஏற்றிய‌ப‌டி நீண்ட‌வீதியினூடாக‌ கிராம‌ப்புற‌த்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றார்க‌ள். 'உன்னை வ‌ன்புண‌ர்ந்த‌வ‌ர் யாரென்று தெரியுமா' என அந்த‌ப் பெண்ணிட‌ம் கேட்கும்போது, 'உன்னைப் போன்ற‌ சாய‌லுடைய‌ ஒருவ‌ன்' என்கிறாள் அந்த‌ப்பெண். வானிற்குள் வைத்து -காப்பாற்றிப்போகும்- பெண்ணை வ‌ன்புண‌ர‌ இவ‌ன் துடிக்கின்ற‌போது, வானை ஓட்டிக்கொண்டு வ‌ருகின்ற‌வ‌ர் அதற்கு இடைஞ்ச‌லாய் இருப்ப‌து புரிகின்ற‌து. இப்ப‌ய‌ண‌த்தின்போது சீனாவில் ஒரு நகரில் ப‌ல‌ தொலைத்தொட‌ர்புச்சாத‌ன‌ங்க‌ளைத் த‌க‌ர்த்த‌ப‌டி போராளிக‌ள் முன்னேறிக்கொண்டிருக்கின்றார்க‌ள் என்றொரு செய்தி -வானின் வைத்து கேட்க‌ப்ப‌டும் வானொலியில்- சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து (ம‌றைபொருளாய் இல‌ங்கையிலிருக்கும் போராளிக‌ள் என்றும் அர்த்த‌ம் கொள்ள‌லாம்). ப‌ய‌ண‌த்தின் ந‌டுவில், இவ்வாறு காம‌த்துட‌ன் பித்தேறியிருக்கும் இவ‌னை அடித்துப்போட்டுவிட்டு அந்த‌ப்பெண்ணும், சார‌தியும் வானில் ஏறித் த‌ப்பிப்போகின்றார்க‌ள்.

இவ‌ன் மீண்டும் த‌ன‌து கிராம‌த்திற்குப் ப‌ஸ்சில் போகின்றான். ஊரிலிருப்ப‌வ‌ர்க‌ள் 'ஊருக்கு ஏன் இவ்வ‌ளவு விரைவில் திரும்பி வ‌ந்தாய்?' என்று கேட்டு, 'தெருவில் திரியாதே அவ‌ர்க‌ள் சுட்டுப்போட்டுவிடுவார்க‌ள், காட்டுப் பாதையால் போய் எங்கையாவ‌து ஒளிந்துகொள்' என்கின்றார்க‌ள். அவ‌னைப் போன்ற‌ ப‌ல‌ இளைஞ‌ர்க‌ள் அதிகார‌ அமைப்பின் வ‌ன்முறைக்குப் ப‌ய‌ந்து ஊரைவிட்டு ஒதுங்கி காட்டுப்ப‌க்க‌மாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்க‌ள் என்ப‌தை ஒரு சிறுவ‌னின் துணைகொண்டு இவ‌ன் அறிகின்றான். .தானும் அவ‌ர்க‌ளோடு ப‌துங்கிவாழ‌ இவ‌ன் த‌யாராகின்ற‌போது, தான் வ‌ந்த‌ வான் குள‌மொன்றில் க‌விழ்வ‌தைக் காண்கின்றான். இவ‌ன் விரைவாக‌ ஓடிப்போய் குள‌த்தைப் பார்க்கின்ற‌போது அங்கே வான் விழுந்த‌த‌ற்கான‌ எந்த‌ அடையாள‌மும் இல்லை.. குள‌த்தினுள் குளித்துக்கொண்டிருக்கும் ஒரு முதிய‌வ‌ரிட‌ம் இது குறித்துக் கேட்கும்போது, 'வான் எதுவும் குள‌த்தினுள் இப்போது விழ‌வில்லை. ஆனால் முன்னோர் கால‌த்தில் இப்ப‌டியோரு ச‌ம்ப‌வ‌ம் நிக‌ழ்ந்திருக்கின்ற‌து. க‌ட‌ந்த‌கால‌த்தில் நிக‌ழ்ந்த‌து எதுவும் இனி நிக‌ழாது என்றும் அறுதியிட்டுக் கூற‌முடியாது' என்கிறார். இப்போது அடுத்த‌ காட்சி மாறுகின்ற‌து.

3.
ஒரு முதியவ‌ரும் இளைஞ‌னும் ந‌ல்ல‌ வெறியில் க‌ட‌லையொட்டிய‌ குன்றொன்றில் அம‌ர்ந்திருக்கின்றார்க‌ள். முதிய‌வ‌ர் க‌தையொன்றைச் சொல்ல‌ப்போவ‌தாய்க் கூறுகின்றார். ஆனால் க‌தையின் ந‌டுவில் எதுவும் கூறி க‌தையை வேறு வித‌மாக‌ மாற்றக்கூடாது என்று இளைஞ‌னை எச்ச‌ரிக்கின்றார். க‌தை: ஒரு நாட்டின் அர‌ச‌னுக்கு இர‌ண்டு ம‌க‌ன்க‌ளும் ஒரு ம‌க‌ளும் இருக்கின்றார்க‌ள். எதிர்கால‌த்தில் இந்த‌ அர‌ச‌னின் ம‌க‌ள் திரும‌ண‌ஞ்செய்து அவளுக்குப் பிற‌க்கின்ற‌ ஆண் குழ‌ந்தை, அவ‌னின் இரு மாம‌ன்க‌ளையும் கொன்றுவிட்டு அரசாட்சியைக் கைப்ப‌ற்றுவான் என்று சோதிட‌ர்க‌ள் எச்ச‌ரிக்கின்றார்க‌ள். இத‌ன் நிமித்த‌ம், எவ‌ரையும் திரும‌ண‌ஞ்செய்து குழ‌ந்தை பெறாதிருக்கும் நோக்கில், அரச‌னின் ம‌க‌ள் ஒரு தீவின் ந‌டுவில் சிறைவைக்க‌ப்ப‌டுகின்றாள். ஆனால் ஏதோவொரு வ‌கையில் அவ‌ள் கர்ப்ப‌ம‌டைந்து ஒரு ஆண் குழ‌ந்தையைப் பெற்று விடுகின்றாள். வ‌ள‌ர்ந்துவ‌ரும் அந்த‌ இள‌வ‌ர‌ச‌னைக் கொல்ல‌ இர‌ண்டு மாம‌ன்க‌ளும் முய‌ல்கின்றார்க‌ள். இறுதியில் அந்த‌ இள‌வ‌ர‌ச‌ன் கொல்ல‌ப்ப‌ட்ட‌ விதம் ப‌ற்றிப் ப‌ல‌ க‌தைக‌ள் கூற‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒன்று: இள‌வ‌ரச‌ன் குறித்த‌ ச‌ரியான‌ அடையாள‌ந்தெரியாத‌தால், அந்நாட்டிலுள்ள‌ அவ‌ன் வ‌ய‌தொத்த‌ அனைத்து இளைஞ‌ர்க‌ளையும் கொலைசெய்ய‌ அவ‌ன‌து மாம‌ன்மார்க‌ள் க‌ட்ட‌ளையிட்டார்க‌ள் என்று க‌தை சொன்ன‌ முதிய‌வ‌ர் கூறுகின்றார். அதைக் க‌தை கேட்ட‌ இளைஞ‌ன் ம‌றுத்து, அந்த‌ இள‌வ‌ர‌ச‌ன் த‌ன‌து தோழ‌ர்க‌ளுட‌ன் நீராடிக்கொண்டிருந்த‌போது அவ‌ர்க‌ள் சுற்றிவ‌ளைக்க‌ப்ப‌ட்டு கொல்லப்படுகின்றார்கள், எனினும், இள‌வ‌ர‌ச‌ன் தப்பிப்போய் ஒரு ம‌ர‌ப்பொந்தில் போய் ஒளிந்துகொள்கின்றான் என‌வும், அவ‌ன் இன்ன‌மும் அந்த‌ ம‌ர‌ப்பொந்தில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கின்றான் என்று ந‌ம்ப‌ப்ப‌டுகின்ற‌து என்றும் க‌தையை வேறுவித‌மாய் முடிக்கின்றான்.

4.
இதற்கு அடுத்து வரும் காட்சியில், . காட்டுக்குள் த‌ன் வ‌யதொத்த‌ -ப‌துங்கியிருக்கும்- இளைஞ‌ர்க‌ளைத் தேடும் இவ‌ன், த‌ன‌து அண்ணியின் வீட்டுக்குள் வ‌ருகின்றான். க‌ண்ணில் காய‌ம் ஏற்ப‌ட்டு ஒரு விழி திற‌க்க‌முடியாத‌ இவ‌னுக்கு அவ‌ர் முலைப்பால் விட்டு காய‌ம் ஆற்றுகின்றார். இடையில் இவ‌னுக்கு அண்ணி மீது உட‌ல்சார்ந்த‌ ஈர்ப்பு வ‌ர‌ அண்ணி அவ‌னை உத‌றித்த‌ள்ளுகின்றார். 'என‌து ராஸ்க‌ல் அண்ண‌ன் இனியும் திரும்பி வ‌ருவான்?' என்று நீங்க‌ள் நினைக்கின்றீர்க‌ளா என்று வினாவுகிறான். பின்னொரு பொழுதில் அண்ணி இவ‌னோடு ப‌ற்றைக‌ளுக்கிடையில் கூடுகின்றார். மீண்டும் இவ‌ன் சிறுவ‌னின் துணையுட‌ன் ஒளிந்திருக்கும் இளைஞ‌ர்க‌ளைத் தேடிப் போகின்றான். சிறுவ‌ன் ஒரு ம‌ர‌ப்பொந்தைக் காட்டுகின்றான். அருகே போகும்போது வெடிச்ச‌த்த‌ங்க‌ள் கேட்கின்ற‌ன‌. இவ‌ன் சிறுவ‌னின் ம‌ன்றாட்ட‌த்தையும் அல‌ட்சிய‌ம் செய்து ம‌ர‌த்த‌டிக்குப் போகின்றான். அந்த‌ ம‌ர‌ம் இள‌வ‌ர‌ச‌ன் தான் கொல்ல‌ப்ப‌டுவ‌திலிருந்து த‌ப்ப‌ ஒளிந்து கொள்வ‌தாய்த் தொம‌க்க‌தையில் குறிப்பிட‌ப்ப‌டுகின்ற‌ ம‌ர‌ம்.

இத‌ற்கிடையில் கிராம‌ம் எங்கும் கைக‌ள் ம‌ட்டும் வெளியே தெரியும் உட‌ல‌ங்க‌ள் தென்ப‌ட‌த்தொட‌ங்குகின்ற‌ன‌. கிராம‌த்துக் குழ‌ந்தைக‌ளும், பெண்க‌ளும் பீதியுட‌ன் உறைந்த‌ நிலையில் இவ‌ற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கின்ற‌ன‌ர். நாய்க‌ள் மாடுக‌ள் எல்லாம் கூட‌வே சுட‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒரு முழு மாட்டைக் கோர‌மாய் கிழித்துண்ணும் க‌ரிய‌ நாய் சூழ‌லின் கொடூர‌த்தை ந‌ன்கு புல‌ப்ப‌டுத்துகின்ற‌து.. கிராம‌த்தில் எல்லா இய‌ல்ப‌ற்றுப் போய்க்கொண்டிருக்கின்ற‌ன‌. இளைஞ‌ர்க‌ள் காணாம‌ற்போய்க்கொண்டிருக்கின்ற‌ க‌தையை வெளியே சொல்ல‌முடியாத‌ க‌ன‌த்த‌ சோக‌த்தை த‌ங்க‌ள் தொண்டைக்குழிக‌ளுக்குள் அட‌க்கிய‌ப‌டி கிராம‌த்த‌வ‌ர்க‌ள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்க‌ள்.அதேவேளை கிராம‌த்த‌வ‌ர்க‌ளின் நீர்த்தேவைக‌ளைப் பூர்த்திசெய்யும் குள‌மும் ந‌ஞ்சூட்ட‌ப்ப‌டுகின்ற‌து. பதுங்கியிருக்கும் இளைஞ‌ர்க‌ள் வெளியே வர, இவனும் அந்த இளைஞ‌ர்க‌ளும் ஒன்றுசேர்ந்து அக்குள‌த்தைச் சுத்திக‌ரிக்கும் ப‌ணியில் இணைந்துகொள்கின்றார்கள். ஒரு இயக்கமாய்ச் சேர்ந்து. குள‌த்தைச் சுத்திக‌ரித்து வெற்றியைக் கொண்டாடும்போது குதிரைக‌ளில் ஆயுத‌ங்க‌ளுட‌ன் வ‌ருப‌வ‌ர்க‌ள் கூடி நிற்கும் இளைஞ‌ர்க‌ளைத் அடித்தும் சுட்டும் கொல்ல‌த்தொட‌ங்குகின்றார்க‌ள். எல்லோரும் கொல்ல‌ப்ப‌ட‌ இவ‌ன் ம‌ட்டும் த‌ப்பிப்போய் ம‌ர‌ப்பொந்தில் ஒளிந்துகொள்கின்றான். காணாமற்போன‌ இவ‌னைத் தேடி சிறுவ‌னும், இவ‌ன‌து அண்ணியும் அலைய‌த்தொட‌ங்குவ‌துட‌ன் ப‌ட‌ம் முடிவுபெறுகின்ற‌து.

காட்சிக‌ளை அப்ப‌டியே ப‌திவாக்குவ‌து என்றால் இப்ப‌டித்தான் இத்திரைப்ப‌ட‌த்தின் க‌தையிருக்கும். விமுத்தி குறிப்பிட்ட‌துபோல‌ பார்ப்ப‌வ‌ர் இந்த‌ puzzleக‌ளை எப்ப‌டி அடுக்கித் த‌ன‌க்கான‌ ப‌ட‌த்தை உருவாக்குகின்றார் என்ப‌தில்தான் ப‌ட‌த்தின் முழுமை த‌ங்கிருக்கிற‌து. திரையிட‌லின் பின் ப‌ட‌ம் குறித்த‌ கேள்விக‌ளுக்கு, 'இந்த‌ப்ப‌ட‌த்தின் மூல‌ம் எந்த‌க் க‌தையைச் சொல்ல‌ விரும்புகின்றீர்க‌ள்?' என்று பார்வையாள‌ரிடையே இருந்து வினாவ‌ப்ப‌ட்ட‌போது, 'நீங்க‌ள் யோசியுங்க‌ள் இப்போதில்லாவிட்டாலும் இன்னும் ஒருவார‌த்தில் உங்க‌ளுக்கான‌ ஒரு க‌தை உருவாகியிருக்கும்' என்று விமுத்தி ப‌தில‌ளித்திருந்தார்.. 'சில‌வேளைக‌ளில் இந்த‌ப்ப‌ட‌த்தை த‌ங்க‌ளின் ஜ‌தீக‌க் க‌தைக‌ளோடு இணைத்துப் பார்த்து இல‌ங்கைய‌ர்க‌ளால் விள‌ங்கிக்கொள்ள‌ முடியும், அத‌னாற்றான் எங்க‌ளால் விள‌ங்குவ‌த‌ற்குக் க‌டின‌மாய் இருக்கிற‌தா?' என்றொருவ‌ர் கேள்வி எழுப்பிய‌போது, 'இதில் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ க‌தை ம‌காவ‌ம்ச‌த்தில் வ‌ருகின‌ற‌து. ஆனால் ம‌காவ‌ம்ச‌த்தை வாசித்தால்தான் இந்த‌ப் ப‌ட‌ம் விள‌ங்கும் என்ப‌த‌ற்கு எந்த‌ அவ‌சிய‌மும் இல்லை' என்றும் விமுக்தி க‌வ‌னப்ப‌டுத்தியிருந்தார்.. ஒரு நேர்கோட்டு முறையில் சொல்லும் வ‌ர்த்த‌க‌ ஹொலிவூட் ப‌ட‌ங்க‌ளுக்கு தான் எதிரான‌வ‌ன் என்ப‌தை விமுக்தி ப‌திவு செய்த‌போது, அப்ப‌டியாயின் இத்திரைப்ப‌ட‌த்திற்கான‌ பார்வையாள‌ர்க‌ள் யாரென‌ வினாவ‌ப்ப‌ட்ட‌போது, 'அது குறித்து நான் அக்க‌றைகொள்ளவில்லை. என்ன‌ளவில் எத்த‌கைய‌ ச‌ம‌ர‌ச‌த்திற்கும் த‌யாரில்லை. ஆக‌க்குறைந்து அய்ந்துபேர் பார்த்தாலே போதுமான‌து' என்று விமுத்தி தெளிவாக‌வே கூறியிருந்தார்.

5.
இனி, என‌க்கு விள‌ங்கிய‌மாதிரி உருவாக்கிக்கொண்ட‌ க‌தை: இர‌ண்டுவித்தியாச‌மான‌ உல‌கு என்ப‌தை விமுக்தி ய‌தார்த்த‌திற்கும் புனைவுக்குமான‌ உல‌க‌ம் என்று குறிப்பிட்டிருந்தார். நான் இன்னும் எளிதாக்கி இது க‌ன‌வுக்கும் ந‌ன‌வுக்கும் இடையிலான‌ உல‌க‌ம் என்று பொருள் கொள்கின்றேன். உண்மையில் இந்த‌ க‌ன‌வு X ந‌ன‌வு என்கின்ற‌ இர‌ண்டு உல‌கை அவ்வ‌ளவு எளிதாக‌ எவ‌ராலும் வித்தியாச‌ப்ப‌டுத்த‌ முடியாது. நாம் ய‌தார்த்த்தில் இருக்கும்போதே ச‌ட்டென்று க‌ன‌வுல‌க‌த்திற்குப் போய்விட‌முடியும். இங்கே த‌ன்னை த‌டுத்துநிறுத்த‌ முய‌ல்கின்ற‌ சிறுவ‌னை இவ‌ன் த‌ரையில் அடித்துக்கொள்வ‌தும், த‌ன‌க்கு புண‌ர‌ முத‌லில் ச‌ம்ம‌த‌ம் த‌ராத‌ அண்ணியை க‌ல்லொன்றால் ச‌த‌க் ச‌த‌க் என்று இர‌த்த‌ம் பீறிட இவன் கொல்வ‌துமான‌ காட்சி யதார்த்த‌தில் நிக‌ழ்வ‌துபோல‌க் காட்ட‌ப்ப‌ட்டிருந்தாலும் இவைய‌னைத்தும் இவ‌னின் உள்ம‌ன‌தில் உருளுகின்ற‌ உல‌கில் வ‌ருப‌வையே. எனெனில் இறுதிக்காட்சிக‌ளில் இவ‌ன் பொந்தில் இருக்கின்ற‌போது தேடி உயிருட‌ன் மீள‌ வ‌ருப‌வ‌ர்க‌ள் இச்சிறுவ‌னும் அண்ணியுமே ஆகும். விமுத்தியிற்கு ப‌டிம‌ங்க‌ளைக் காட்சிப்ப‌டுத்துவ‌தில் பெருவிருப்ப‌ம் உள்ள‌தென்ப‌தால் எதையும் நேர‌டியாக‌ச் சொல்வ‌தற்காய் அதிக‌ நேர‌ம் செல‌வ்ழிப்ப‌தில்லை. அவ‌ர‌து முத‌ற்ப‌டமான‌ Forsaken Land லிலேயே, போரைப் ப‌ற்றிச் சொல்ல‌ப்பட்டாலும் போரின் நேர‌டி அழிவுக‌ளை எந்த‌வொரு காட்சியிலும் காட்சிப்ப‌டுத்தியிருக்க‌ மாட்டார்.. அதுபோல‌ அந்த‌ப்ப‌ட‌த்தில் அடிக்க‌டி ஒரு ப‌டிம‌மாய் வ‌ரும் க‌வ‌ச வாக‌ன‌மும் (ராங்கியும்) அது குறிப்பார்க்க‌த் திருப்புகின்ற‌ நீண்ட‌ குழாயும், 'ச‌மாதான‌ கால‌ம்' என்று சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ கால‌த்திலும் போர் வாச‌ற்ப‌டியில் நின்று, எப்போதோ மீண்டும் நிக‌ழ‌த் த‌யாராகின்ற‌தென‌ நாம் எடுத்துக்கொள்ள‌லாம். இந்த‌ப் ப‌ட‌த்திலும் அவ்வாறான‌ ப‌டிம‌ங்க‌ளையே விமுக்தி ப‌ய‌ன்ப‌டுத்தியிருப்பார். உண்மையில் இந்த‌ப்ப‌ட‌த்தில் வ‌ரும் இவ‌ன் ஒரு முன்னோர் கால‌த்தில் நிக‌ழ்வ‌தாய்க் கூற‌ப்ப‌டுகின்ற‌ க‌தையில் வ‌ருகின்ற‌ இள‌வ‌ர‌ச‌னின் இன்னொரு ப‌டிம‌மே. இங்கே வ‌ரும் அண்ணியும் கூட‌. அவர் மூன்றாம் முறையாக‌ இவ‌ன‌து காய‌த்தை ஆற்றுவ‌த‌ற்காய் த‌ன‌து முலைப்பால் கொடுக்கும்போது, இவ‌ன் கேட்கின்றான் எப்ப‌டி 'உங்க‌ளுக்குப் பிள்ளையில்லாம‌லே முலை சுர‌க்கிற‌து?' என்று. இதை நாம் அந்த‌ ஜ‌தீக‌க் க‌தையில் தீவின் ந‌டுவில் சிறைவைக்க‌ப்ப‌ட்ட‌ இளவ‌ர‌சி எவ‌ருமேயின்றி எப்ப‌டி ஒரு ஆண் குழ‌ந்தைக்குத் தாயாகின்றாள் என்ப‌தோடு பொருத்திப் பார்க்க‌லாம். அதே மாதிரி இள‌வ‌ர‌ச‌னின் தோழ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌தைப் போல‌ நிக‌ழ்கால‌த்தில் இவ‌ன‌து ஊரைச் சேர்ந்த இளைஞ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌டுகின்றார்க‌ள். ஒரு கிள‌ர்ச்சி/க‌ல‌க‌ம் அழிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌து என்று அதிகார‌த்திலிருப்ப‌வ‌ர்க‌ள் கொண்டாடுகின்ற‌போதும், இவ‌ன் பொந்தில் இருப்ப‌து என்ப‌து, போராட்ட‌த்திற்கான‌ கார‌ணி இன்ன‌மும் அழிந்துவிட‌வில்லை என்ப‌தைக் குறியீடாக‌க் கொள்ள‌லாம். இந்த‌த் திரைப்ப‌ட‌த்தை ஈழ‌த்தில் ந‌டைபெற்ற‌ இர‌ண்டுவித‌மான‌ உள்நாட்டுப் போர்க‌ளோடு ஒப்பிட்டுப் பார்க்க‌லாம்.. திரைக்க‌தை மேலோட்ட‌மாய் த‌னியொருவ‌னின் க‌தையைச் சொல்வ‌தாக‌ இருந்தாலும், அது ஒரு போராடிய ச‌மூக‌த்தின் க‌தையைத்தான் சொல்கின்ற‌து என்ற‌ நுட்பமான பார்வையை நாம் வ‌ந்தடைய‌ முடியும். ஈழ‌த்தில் ந‌டைபெற்று முடிந்த‌ த‌மிழரின் ஆயுத‌ப்போராட்ட‌ம், சிங்க‌ள இளைஞ‌ர்க‌ளின் 'சே குவேரா' (ஜேவிபி) கிள‌ர்ச்சிக‌ளுட‌ன் நாம் இணைத்துப் பார்க்கலாம். என்னைப் பொருத்த‌வ‌ரை அதிக‌மாய்ப் பொருந்திப் போவ‌து ஜேவிபியின் கிள‌ர்ச்சிக்கால‌ம் என்றே சொல்வேன். பிரேமதாசா ஜ‌னாதிப‌தியாக‌ இருந்த‌போது ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ சிங்க‌ள இளைஞ‌ர்க‌ள் மிக‌ மிலேச்ச‌த்த‌ன‌மாய் எந்த‌வித‌ சாட்சிக‌ளோ விசார‌ணைக‌ளோ இன்றி கொல்ல‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். இல‌ங்கையின் தென்பாகம் எங்கும் ச‌ட‌லங்க‌ள் க‌ட‌லில் மித‌ந்த‌தாக‌வும் அரைகுறையாய் புதைக்க‌ப்ப‌ட்ட‌தாக‌வும் பின்வ‌ந்த‌ க‌தைக‌ள் சாட்சிய‌ம் கூறியிருக்கின்ற‌ன‌. இன்றைய‌ த‌மிழின‌ அழிப்பில் எவ்வாறு இந்தியாவின் கொடூர‌க்க‌ர‌ங்க‌ள் இருந்த‌ன‌வோ அதேபோல் சிங்க‌ள இளைஞ‌ர்க‌ளின் கிள‌ர்ச்சிக்கால‌த்தை ஒடுக்க‌வும் இந்தியாவின் இர‌த்த‌க்க‌ர‌ங்க‌ள் நீண்டிருந்த‌ன‌ என்ப‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம்.

மானுட‌ விடுத‌லைக்கான‌ கல‌க‌ங்க‌ள் எவ்வ‌ளவு கொடூர‌மாய் அதிகார‌த்தின் க‌ர‌ங்க‌ளால் ஒடுக்க‌ப்ப‌ட்டாலும் அவை என்றேனும் ஒருகால‌த்தில் மீண்டும் திரும்பி வ‌ருவ‌த‌ற்கான‌ நிக‌ழ்த‌க‌வுக‌ள் இருக்கின்ற‌ன‌ என்ப‌தையே இப்ப‌ட‌ம் உள்ளுறை உவ‌மமாக‌க் கூறுவ‌தாக‌த் தோன்றுகின்ற‌து.. இப்ப‌ட‌த்தில் ஒரு முதிய‌வ‌ர் அடிக்க‌டி வ‌ந்து வ‌ர‌லாற்றில் நிக‌ழ்வுக‌ள் அடிக்க‌டி மீள‌ நிக‌ழ‌க்கூடிய‌வை என்ப‌து இச்சாராம்ச‌த்தோடு இணைந்துபோக‌க்கூடிய‌துதான். விமுத்தியின் Forsaken Landயாய் இருந்தால் என்ன‌, இந்த‌ப் ப‌ட‌மாய் இருந்தாலென‌ன‌ அவ‌ருக்கு மிக‌ப்பெரும் வெளியைக் காட்சிப்ப‌டுத்துவ‌து பிடித்திருக்கின்ற‌து. Forsaken Landல் பொட்ட‌ல் வெளி என்றால், இங்கே காடு சார்ந்த‌ பெரு நில‌ப்ப‌ர‌ப்பு. அத்தோடு அதிக‌ காட்சிக‌ளில் க‌மரா அப்ப‌டியே அசையாம‌ல் ச‌ல‌ன‌ம‌ற்றிருக்கின்ற‌து; அது காட்டுகின்ற‌ வெளியில் ம‌னித‌ர்க‌ள் வ‌ருகின்றார்க‌ள், பிற‌கு ம‌றைந்தும் போய்விடுகின்றார்க‌ள்.. அக‌ண்ட‌காட்சிகளாய் விரியும் ப‌ல‌ காட்சிக‌ளில் வ‌ந்துபோகின்ற‌ ம‌னித‌ர்க‌ள் மிக்ச்சிறிதாக‌த் தெரிகின்றார்க‌ள். இந்த‌ப் ப‌ட‌க்காட்சிக‌ள் ந‌ம‌து ம‌ன‌தோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய‌வை. நம‌து வாழ்வில் எத்த‌னையோ ம‌னித‌ர்க‌ள் வ‌ருகின்றார்க‌ள் போகின்றார்க‌ள், ஆனால் ந‌ம‌து வாழ்வு தொட‌ர்ந்து ஒரேயிட‌த்தில் நின்று இவை எல்லாவ‌ற்றையும் ச‌ல‌ன‌ம‌ற்றுப் பார்த்துக்கொண்டிருக்கின்ற‌துபோல‌.

விமுக்தியின் பட‌ங்க‌ளை -ஏற்க‌ன‌வே குறிப்பிட்ட‌தைப் போன்று- சாதார‌ண‌ப் ப‌ட‌ங்க‌ளை பார்க்கும் வேக‌த்திலோ, அதிர‌டியான‌ திருப்ப‌ங்க‌ளையோ எதிர்பார்த்தோ பார்க்க‌ முடியாது. முத‌ல் வ‌ரும் காட்சிக்கும் அடுத்த‌ காட்சிக்கும் க‌ட்டாய‌ம் தொட‌ர்பு இருக்க‌வேண்டும் என்ற‌ அவ‌சிய‌த்தையெல்லாம் விமுத்தி உடைத்துத்த‌ள்ளும் அதேவேளை சில‌ காட்சிக‌ள் மிக‌ மிக‌ மெதுவாக‌ ந‌க‌ர்கின்ற‌போது ச‌ற்று அலுப்பு வ‌ர‌ச்செய்வ‌தையும் குறிப்பிட்டாக‌ வேண்டும். இன்று விமுத்தியின் ப‌ட‌த்தை பார்த்து ஒரு க‌தையை உருவாக்கும் ஒரு பார்வையாள‌ர் நாளை அத‌ற்குத் தொட‌ர்பில்லாத‌ இன்னொரு க‌தையைத் த‌ன்ன‌ளாவில் உருவாக்கிக்கொள‌ள‌வும் முடியும். நாம் வாசிக்கும் ஒரு பிர‌தி வாசிக்கும் க‌ண‌ந்தோறும் த‌ன‌க்கான‌ க‌தையை மாற்றிக்கொள்ளும் மாய‌த்தை உள்ள‌ட‌க்கினால் எப்ப‌டியிருக்குமோ அப்ப‌டியே விமுத்தியின் இப்ப‌ட‌மும் ஒவ்வொரு காட்சியிலும் புதிர்க‌ளின் குறுக்குவெட்டுக்க‌ளால் புதிய கதைகளைப் புனைந்துகொள்ள‌ முனைகின்ற‌து. இந்த‌க் மாய‌ வித்தை சில‌ருக்கு வ‌ன‌ப்பூட்ட‌லாம், வேறு சில‌ருக்கு அலுப்பூட்ட‌லாம். அது க‌தைசொல்லியின் த‌வ‌றும‌ல்ல‌, க‌தைகளைச் ச‌துர‌ங்க‌க் க‌ட்ட‌த்தில் ந‌க‌ர்த்த‌ விரும்பும்/விரும்பாத‌ ந‌ம‌து த‌னிப்ப‌ட்ட‌ விருப்புக‌ள் சார்ந்த‌வை.


ன்றி: 'உன்னம்' & 'வைகறை'‌‌‌‌

ச‌ம‌கால‌ ஈழ‌த்து இல‌க்கிய‌ம் - 03

Wednesday, May 05, 2010

இதைவிட‌ ஈழ‌த்திலிருந்து அண்மைக்கால‌மாய் தொட‌ர்ச்சியாக‌வும் காத்திர‌மாக‌வும் எழுதும் அனாரைத் த‌விர்த்து நாமின்று ச‌ம‌கால‌ ஈழக் கவிதைக‌ள் குறித்து பேச‌முடியாது. 'வரையாத தூரிகை, 'எனக்கு கவிதை முகம்', 'உடல் பச்சை வானம்' என்று குறுகிய காலத்தில் கவனிக்கத்தக்க 3 தொகுப்புக்களை அனார் தந்திருக்கின்றார். மேலும் தொகுப்பாய் வாசிக்கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் வாய்க்காத‌போதும் சிறுக‌தைக‌ளில் த‌னித்து மிளிரும் திசேராவும், க‌விதைத்த‌ள‌த்தில் ப‌ஹிமா ஜ‌கானையும் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டியிருக்கின்ற‌து. அதேபோன்று ம‌ட்ட‌க்க‌ள‌ப்பிலிருந்து எழுதும் ம‌ல‌ர்ச்செல்வ‌னின் பெரிய‌ எழுத்திலும் சில‌ ந‌ல்ல‌ க‌தைக‌ள் இருக்கின்ற‌ன.

ம‌ஜீத்தின் 'புலி பாய்ந்த‌போது இர‌வுக‌ள் கோடையில் அலைந்த‌ன‌', க‌ருணாக‌ர‌னின் 'ப‌லியாடு' என்ப‌வற்றையும் வாசிக்காத‌போதும் -வாசித்த‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளின் அடிப்ப‌டையில்- அவையும் ச‌ம‌கால‌ ஈழ‌த்தில‌க்கிய‌த்தில் முக்கிய‌ம் வாய்ந்த‌வை போன்றே தெரிகின்ற‌ன‌. அதேபோன்று யாழிலிருந்து வெளிவ‌ந்த‌ பா.ச‌த்திய‌மூர்த்தியின் ந‌.ச‌த்திய‌பால‌னின்  'இப்படியாயிற்று நூற்றியொராவ‌து த‌ட‌வையும்', புலத்திலிருந்து வெளிவந்த கலாமோகனின் 'ஜெயந்தீசன் கதைகள்' மற்றும் இரவி அருணாசலத்தின் 'காலமாகி வந்த கதை'யும்', வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' குறுநாவலும் வாசிப்பில் உள்ள‌ட‌க்க‌வேண்டிய‌வை.

நீண்ட‌கால‌மாய் புனைவுத்த‌ள‌த்தில் இய‌ங்கிவ‌ரும் பொ.க‌ருணாக‌ர‌மூர்ததியின் 'கூடு கலைதலும்', 'பெர்லின் இரவுகளும்' கவனிக்கத்தககவை. பொ.கருணாக‌ர‌மூர்த்தியிட‌ம் ம‌ர‌பு சார்ந்த‌ க‌தைசொல்லி அவ்வ‌ப்போது வெளிப்ப‌ட்டு வாசிப்ப‌வ‌ருக்கு இடைஞ்ச‌ல் கொடுத்தாலும், அதை வெளிப்ப‌டையாக‌ உண‌ர‌முடியாத‌வ‌ளவுக்கு அவ‌ரின் க‌தைக‌ளில் அங்க‌த‌ம் ஓடிக்கொண்டிருக்கிற‌து. அவ‌ரின் ப‌டைப்புக்க‌ள் குறித்து அவ‌ரின் நூல் வெளியீட்டு விழாவில் விரிவாக‌ப் பேசியிருப்ப‌தால் அவ‌ற்றைப் பற்றி இங்கே பேசுவ‌தைத் த‌விர்க்கிறேன்.

மேலும் தொகுப்புக்க‌ளாய் வெளிவ‌ராத‌போதும் (என்னை) மிக‌வும் வ‌சீக‌ரித்த‌ க‌தைக‌ளை எழுதிய‌ மைக்க‌ல், பார்த்தீப‌ன், சித்தார்த்த‌ சே குவேரா  போன்ற‌வ‌ர்க‌ளையும் க‌விதைக‌ளில் பிர‌தீபா தில்லைநாத‌ன், துர்க்கா போன்ற‌வ‌ர்க‌ளையும் நாம் இந்த‌ இட‌த்தில் த‌வ‌ற‌விட‌ முடியாது; அவ்வாறு குறிப்பிட‌த்த‌க்க‌ நீண்ட‌ ப‌ட்டிய‌ல் நம்மிடையே இருக்கிறது. ற‌ஞ்சினி, தேவ‌ அபிரா,தானா.விஷ்ணு, அலறி, பெண்ணியா, ஆகர்ஷியா, வினோதினி, சலனி, மாதுமை போன்றோரின் தொகுப்புக்களைப் பற்றிப் பேசுவதையும் -நேர‌ங்க‌ருதி- இங்கே த‌விர்க்கின்றேன். அத்துடன் சேரன், செழியன், சோலைக்கிளி, வ.ஜ.ச.ஜெயபாலன், சு.வில்வரத்தினம், மு.பொன்ன‌ம்பல‌ம் போன்றவர்களின் -2000ம் ஆண்டிற்குப் பின்- வெளிவந்த தொகுப்புக்களையும் அவர்கள் ஏற்கனவே பரவலாக அறிமுகம் உடையவர்கள் என்ற காரணத்தால் தாண்டிப் போகின்றேன்.

ப‌ல்வேறு ப‌டைப்பாளிக‌ளின் ப‌டைப்புக்க‌ளைத் தொகுத்து இல‌ண்ட‌னிலிருந்து ப‌த்ம‌நாப ஜ‌ய‌ர் (க‌ண்ணில் தெரியுது வான‌ம்), பிரான்சிலிருந்து ஷோபா ச‌க்தி, சுக‌ன் (ச‌ன‌த‌ரும‌போதினி, க‌றுப்பு), க‌ன‌டாவிலிருந்து தேவ‌காந்த‌ன் (கூர்), த‌மிழ‌க‌த்திலிருந்து அ.ம‌ங்கை (பெய‌ல் ம‌ண‌க்கும் பொழுது), சுவிஸிலிருந்து ர‌ஞ்சி (மை) போன்றோர் வெளியிட்ட‌ தொகுப்புக்க‌ள் ச‌ம‌கால‌ ஈழ‌த்து இல‌க்கிய‌ம் குறித்த‌ ப‌ல‌வேறு குறுக்கு வெட்டு முக‌ங்க‌ளைத் த‌ருகின்ற‌ன‌.

3.
ஈழத்திலக்கியம் (அதாவது ஈழம் மற்றும் புலம்பெயர்) கடந்த பத்தாண்டுகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்காவிட்டாலும், கவனம் பெறும் படைப்புக்களை இந்தச் ச‌காப்த‌த்தில் தந்திருக்கின்றது. அவற்றுக்கு ஆதாரமாய் ஏற்கனவே குறிப்பிட்ட படைப்புக்கள் சில உதாரணங்களாகும். இதை இன்னொருவகையாய் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் எவ்விதமான பாய்ச்சல இல‌க்கிய‌ம் சார்ந்து நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்ற பின்னணியில் வைத்துக் கூட அணுகலாம். இவ்வளவு பெரும் சனத்தொகையும், எங்களைப் போலன்றி போரில்லாச் சூழ்நிலையில் கூட தமிழகத்திலிருந்து விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய படைப்புக்களே வந்திருக்கின்றன. ஈழ, புலம்பெயர் படைப்பாளிகளில் அனேகர் ஒருகால‌த்தில் உற்சாகமாய் நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இயங்கிக்கொண்டு இருப்ப‌தும் பிற‌கு சடுதியாக ஒருவிதமான உறைநிலைக்குப் போவதும் நிக‌ழ்ந்து கொண்டிருக்கின்ற‌து. அந்த இடைவெளியை நிரப்ப அடுத்தவர்கள் வர சற்றுக்கூட காலம் நாம் காத்திருக்கவேண்டியிருக்கின்றது. தமிழகத்தில் ஒப்பீட்ட‌ள‌வில் எங்க‌ளைவிட‌ கணிசமானோர் இல‌க்கிய‌ச் சூழ‌லில் இருப்பதால் இவ்வாறு ஒரு உறைநிலை அவ‌ர்க‌ளுக்கு ஏற்ப‌ட்டாலும், அடுத்தவர்கள் அந்த இடத்தின் வெற்றிடத்தை உணரமுடியாது வ‌ந்து நிர‌ப்பிவிடுகின்றார்க‌ள்.

மேலும் குறிம்பிடும்படியான போர்க்கால இலக்கியங்களோ, அல்லது புலம்பெயர் வாழ்வின் நெருக்கடிகளோ மிக விரிவான தளத்தில் பதியப்படவில்லை என்கின்ற முணுமுணுப்புக்களை தமிழகத்து ஜாம்பவான்களின் மூச்சில் அடிக்கடி வந்து விழப்பார்க்கின்றோம். மிக அற்புதமான போர்க்கால இலக்கியங்களைத் தந்த ரஷ்யா (சோவிய‌த்து ஒன்றிய‌ம்) உட்ப‌ட‌ ப‌ல‌ நாடுக‌ள் post war வரை அதாவது போருக்குப் பின்பான நீண்ட காலம்வரை காத்திருக்கவேண்டியிருக்கின்றது. 1ம், 2ம் உலகப்போர் பற்றியும் ஹிடலர் பற்றியும் வெளிவ‌ந்த‌ அதிகமான பதிவுகள் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே வந்திருக்கின்றன. ஆகவே போருக்குள் 3 தசாப்த காலத்தை த‌ங்க‌ளுக்குள் பறிகொடுத்த ஈழத்தமிழரிடமிருந்து உடனடியாக இவ்வாறான படைப்புக்கள் வரவேண்டும் என எதிர்பார்ப்பது என்பது கூட, இவர்களுக்கு இன்னும் உலக இலக்கியங்கள் பரிட்சயமாகவில்லையோ என்ற எண்ணத்தை வரச்செய்கின்றது. அதேபோன்று முற்றுமுழுதாக வேர் பிடுங்கப்பட்ட புலம்பெயர் வாழ்வின் காலப்பகுதி என்ப‌து கூட‌ வ‌ர‌லாற்றை முன்வைத்துப் பார்க்கும்போது மிகக் குறுகிய‌ கால‌மே. வேரை ஒழுங்காய்ப் புதிய இடத்தில் பதிக்கமுன்னரே வானை முட்டும் மரங்களை எதிர்ப்பார்ப்பதும் அவ்வளவு நியாயமாகாது.

க‌ட‌ந்த‌ 10 வ‌ருட‌ கால‌த்தில் க‌விதை, சிறுக‌தை போன்ற‌வ‌ற்றில் க‌வ‌னிக்க‌த்த‌க்க‌ ப‌டைப்புக்க‌ளை ப‌திவு செய்த‌ ஈழ‌த்து இல‌க்கிய‌ உல‌க‌ம் நாவ‌லக‌ளிலோ விம‌ர்ச‌ன‌ம் உள்ளிட்ட‌ அபுனைவுத்த‌ள‌த்தில் அதிக‌ள‌வு ச‌ல‌ன‌ங்க‌ளை ஏற்ப‌டுத்த‌வில்லை என்றே எடுத்துக்கொள்ள‌ வேண்டியிருக்கிற‌து. நாவ‌ல்க‌ள் என்று பார்க்கும்போது ஷோபா ச‌க்தியின் 'கொரில்லா', 'ம்', தேவகாந்தனின் 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்', 'நிலாச்சமுத்திரம்', ந‌டேச‌னின் 'வ‌ண்ணாத்திக்க்குள‌ம்', 'உனையே ம‌ய‌ல் கொண்டு', விமல் குழந்தைவேலுவின் 'வெள்ளாவி', அ.முத்துலிங்க‌த்த்தின் 'உண்மை க‌ல‌ந்த‌ நாட்குறிப்புக‌ள்'. ர‌குநாத‌னின் 'ஒரு ப‌ன‌ங்காட்டுக்கிராம‌த்தின் க‌தை', எஸ்.பொவின் 'மாயினி' போன்ற‌வையே ஒர‌ள‌வாவ‌து க‌வ‌னிக்க‌த்த‌க்க‌ ப‌டைப்புக்க‌ளாய் இருக்கின்ற‌ன.

இதில் கொரில்லா, ம், யுத்தத்தின் முதலாம் அதிகாரம் போன்ற‌வையே முக்கிய‌முடைய‌ ப‌டைப்புக்களாகின்ற‌ன‌. வ‌ண்ணாத்திக்குள‌ம் சிங்க‌ள/த‌மிழ் உறவுக‌ளை அதிக‌ ரொமான்டிசை செய்த‌துபோல‌ இருக்க‌, உனையே ம‌ய‌ல் கொண்டு ஒரு ஆணாதிக்க‌ப் பிர‌தியாக‌வும் யாழ்ப்பாணியக் கூறுக‌ள் அதிக‌ம் கொண்ட‌தாக‌வும் தெரிகின்ற‌து. ப‌ன‌ங்காட்டுக் கிராம‌த்தின் க‌தை ஈழ‌த்துப் ப‌ஞ்ச‌ம‌ர் வாழ்வைச் சொல்ல‌ முற்ப‌டும் ஒரு ப‌டைப்பு என்றாலும் அதில் சில‌ விட‌ய‌ங்க‌ள் திருப்ப‌ச் திருப்ப‌ச் சொல்வ‌து ஒருவித‌ அலுப்பை ஏற்ப‌டுத்துகின்ற‌து. சிற‌ந்த‌ க‌தை சொல்லியாக‌ த‌ன்னை எப்போதும் நிறுவிக்கொள்ளும் எஸ்.பொ மிக‌ மோச‌மான‌ த‌மிழ்த்தேசிய‌ பிர‌ச்சார‌க் க‌தையாக‌ மாயினியைத் த‌ந்திருக்கின்றார். அ.முத்துலிங்க‌த்தின் உண்மை க‌ல்ந்த‌ நாட்குறிப்புக்க‌ள், அவை த‌னித்த‌ள‌வில் சிறுக‌தைக‌ளாய் இருக்கின்ற‌தே த‌விர‌ ஒரு நாவ‌லுக்கான‌ வெற்றியை அது அடைய‌வே இல்லை. விமல் குழந்தைவேலுவின் 'வெள்ளாவி' விளிம்புநிலை மனிதர்களைச் சித்தரிக்கும்போது இருக்கவேண்டிய நுண்ணியபார்வையைத் தவற விட்டுவிடுகின்றது.

ஆனால் நமக்கு விதிகப்பட்ட புறவயமான வாழ்வுச்சூழலை மட்டும் காரணங்களாய்க் காட்டி நாம் தப்பித்துவிடவும் முடியாது. ஏன் இன்னும் எம‌து ப‌டைப்புக்க‌ள் த‌ம‌து த‌ள‌த்தை உல‌க‌ அள‌விற்கு விசாலிக்க‌வில்லை என்று யோசிக்கும்போது ஒழுங்கான‌ விம‌ர்ச‌ன‌ ம‌ர‌பு தொட‌ர்ச்சியாக‌ வ‌ள‌ர்த்தெடுக்க‌ப்ப‌ட்ட‌வில்லை என்ப‌து முக்கிய‌ கார‌ண‌மாய்த் தோன்றுகின்ற‌து. ந‌ம் ப‌டைப்பாளிக‌ள் ச‌க‌ ப‌டைப்பாளிக‌ளிடையோ வாச‌க‌ர்க‌ளிடையோ விரிவான‌ உடையாட‌ல்க‌ளை நிக‌ழ்த்தாது த‌ங்க‌ளின் சாள‌ர‌ங்க‌ளை இறுக்க‌ முடிக்கொண்டிருப்ப‌து இருப்ப‌து இன்னொரு கார‌ண‌மாக‌ இருக்க‌க்கூடும். ம‌ற்றும்  -இதைச் சொல்வ‌தால் சில‌ருக்கு  கோப‌ம் வ‌ர‌க்கூடும் என்றாலும்- நாம் இன்னும் அர‌சிய‌ல், சினிமா தொட‌க்கும் இல‌க்கிய‌ம் வ‌ரை இந்தியா மீதான் அடிமை மோக‌த்திலிருந்து வெளியே வர‌வில்லை என்ப‌தையும் கூற‌த்தான் வேண்டியிருக்கிற‌து.

(காலம் இலக்கிய நிகழ்வான 'ஈழமின்னல் சூழ் மின்னுதே' வில்  வாசிக்கப்பட்ட கட்டுரை; சில திருத்த‌ங்கள் செய்ய‌ப்ப‌ட்டிருக்கிற‌து - Apr, 2010)

சமகால ஈழத்து இலக்கியம் - 02

Sunday, May 02, 2010

(2000ம் ஆண்டுகளின் பின்பான பிரதிகளை முன்வைத்து)

இந்த‌ இட‌த்தில் பெய‌ர்க‌ளைப் ப‌ட்டிய‌லிடுவ‌தை ச‌ற்று நிறுத்தி, மீண்டும் தொட‌ர்ச்சியாக‌ எழுதுவ‌து/ எழுதாம‌ல் இருப்ப‌த‌ன் புள்ளி குறித்து ச‌ற்றுப் பார்ப்போம். ப‌ல்வேறு புற‌க்கார‌ண‌ங்க‌ள் இருந்தாலும், ஈழ‌த்தில‌க்கிய‌த்தில் ந‌ல்ல‌ சில‌ ப‌டைப்புக்க‌ளை எழுதிய‌ எத்த‌னையோ பேர்கொண்ட‌ ப‌ட்டிய‌ல் ந‌ம்மிட‌ம் நீண்ட‌தாய் இருக்கிற‌து. ர‌ஞ்ச‌குமார் ஓர் அருமையான‌ தொகுப்பான 'மோகவாசலோடு' நிறுத்திவிட‌வில்லையா? ' ம‌க்கத்துச் சால்வை' எம்.ஹ‌னீபா 40 ஆண்டுக‌ளாக‌ எழுதினாலும் 'அவ‌ளும் ஒரு பாற்க‌ட‌ல்' என்ற‌ தொகுப்பில் 25 க‌தைக‌ளை ம‌ட்டுந்தானே தொகுக்க‌ முடிந்திருக்கின்ற‌து. ஆனால் வாசிக்கும் நாம் ர‌ஞ்ச‌குமாரையோ, ஹ‌னீபாவையோ, ஏன் அர‌சிய‌ல் த‌ள‌த்தில் கோவிந்த‌னையோ தொட‌ர்ச்சியாக‌ நினைவு கூர்ந்து கொண்டுதானே இருக்கின்றோம். இதைத்தான் ஈழ‌த்தின் த‌னித்துவ‌மான‌ ஒரு ப‌ண்பு என‌ எடுத்துக்கொள்கின்றேன். எங்க‌ளுக்கு -அதாவ‌து வாச‌க‌ருக்கு- ஒரு ப‌டைப்பாளி ஒன்றிர‌ண்டு ந‌ல்ல‌ ப‌டைப்புக்க‌ளைத் த‌ந்தால் கூட‌ அவ‌ர் க‌வ‌னிக்க‌க்கூடிய‌வ‌ர் என்றுதான் எம‌து ஈழ‌த்து ம‌ர‌பும் வாழ்வும் க‌ற்றுத்த‌ந்திருக்கின்ற‌து. இந்த‌ ம‌ர‌பு இப்போதுதான் தொட‌ங்கியிருக்கின்ற‌து என்ப‌த‌ல்ல‌, ச‌ங்ககால‌க் க‌விஞ‌ர்க‌ளை இப்போதும் நினைவுகூர‌ எங்க‌ளுக்கு அவ‌ர்க‌ளின் ஒன்றிர‌ண்டு பாட‌ல்க‌ளே போதுமாயிருக்கிற‌து அல்ல‌வா?

இந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் இணைய‌ம் ப‌ல‌ புதிய‌ ப‌டைப்பாளிக‌ளை அடையாள‌ங்காட்டுகின்ற‌து. முக்கிய‌மாய் யாழ்ப்பாண‌த்திலிருந்து முர‌ண்வெளி த‌ள‌த்தில் ஹ‌ரி எழுத‌த் தொட‌ங்குகின்றார். முர‌ண்வெளி த‌ள‌த்தில் வெளிவந்த ஆமிர‌பாலியின் க‌விதைக‌ளும், அமெளனனின் 'வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகள்' என்ப‌தும் 2005ற்குப் பிற்பான‌ ப‌டைப்புக்க‌ளில் க‌வ‌ன‌த்தைக் கோருப‌வை. வெளிச்ச‌க்கூடுக‌ள் தேவைப்படுவோர் க‌தை இராணுவ‌த்தால் மூட‌ப்பட்ட‌ யாழ் ந‌க‌ரின் வாழ்வைப் ப‌திவுசெய்கின்ற‌து. விரும்பியோ விரும்பாம‌லோ சூழ‌லின் நிர்ப்ப‌ந்த‌ற்குள் உந்த‌ப்ப‌ட்டு இராணுவ‌த்தோடு த‌ற்பால் உற‌வு கொள்கின்ற‌ சிறுவர்களின் பாத்திர‌ங்கள் இதில் வ‌ருகின்ற‌து. இக்க‌தையில் அநேக‌மான‌ ஈழ‌த்துச் சிறுக‌தைக‌ளில் விப‌ரிக்க‌ப்ப‌டுகின்ற‌ 'கொடுமைக்கார‌' இராணுவ‌ம் என்ற‌ பாத்திர‌ம் இராணுவ‌த்திற்கு கொடுக்க‌ப்ப‌டாத‌து க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டிய‌து. மிக‌ உக்கிர‌மான‌ போர்ச்சூழ‌ல் ந‌ம‌க்கான‌ இர‌ண்டு தெரிவுக‌ளைக் கொடுக்கின்ற‌து; அதிலொன்று நாம் 'வீர‌னாகி'ப் போர்க்க‌ள‌த்திற்குப் போவ‌து. அல்ல‌து இன்னுமொரு வாய்ப்பாக‌ இருக்க‌கூடிய‌ காம‌த்தின் உச்ச‌த்திற்குள் சிக்கிக்கொள்வ‌து. மேலும் இணையத்தில் ஈழத்திலிருந்து எழுதிக்கொண்டிருந்த நிவேதா, சித்தாந்தன் போன்றோரின் கவிதைகளும் கவனத்தைக் கோருபவையாக இருந்திருக்கின்றன.

2005ற்குப் பின் முத்துலிங்க‌மும், சோபாச‌க்தியும் பரவலான கவனத்தைப் பெற்றதால், நாம் அவ‌ர்க‌ளின் பிற‌ ப‌டைப்புக்க‌ளைச் ச‌ற்று ம‌ற‌ந்து பிறரைப் பார்ப்போம். சும‌தி ரூப‌னின் 'யாதுமாகி' தொகுப்பு மிதர பதிப்பகத்தால் வெளிவ‌ருகின்ற‌து. அவ‌ற்றில் அனேக‌மான‌வை வானொலிக்கு எழுதிய‌வை என்றாலும் ஒரு பெண்ணின் அக‌வுல‌க‌ம் மிக‌ நுட்ப‌மாக‌ப் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. முக்கியமாக 'வேட்கை' என்று சும‌தி திண்ணையில் எழுதிய‌ க‌தை கவனிக்கத்தக்கது. திருமணமான ஒரு பெண்ணுக்கும் அவரோடு தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு இளைஞனுக்கும் வரும் உறவு குறித்துப் பேசும் கதையது. திரும‌ண‌ம் என்கின்ற‌ மிக‌க்க‌ட்டுபாடான‌ அர‌ங்கை விட்டு ந‌க‌ர‌ விரும்புப‌வ்ர்க‌ளால் கூட‌ சில‌வேளைக‌ளில் ப‌ண்பாட்டை க‌ழ‌ற்றியெறிய‌ முடியாது இருக்கின்ற‌து என்ப‌தைச் சுமதி தாலியை முன் வைத்து அதில் க‌வ‌னப்ப‌டுத்தியிருப்பார். இதே காலப்பகுதியில் க‌ன‌டாவிலிருக்கும்போது அவ்வ‌ளவு க‌வ‌ன‌ம் பெறாத‌ த‌மிழ்ந‌தி த‌மிழ‌க‌த்திலிருந்து த‌ன‌து த‌ட‌ங்க‌ளைப் ப‌திக்க‌த்தொட‌ங்குகின்றார். 'சூரிய‌ன் த‌னித்த‌லையும் ப‌க‌ல்' என்கின்ற‌ கவிதைத் தொகுப்பும், 'ந‌ந்த‌குமார‌னுக்கு எழுதிய‌து' என்கின்ற‌ சிறுக‌தைத் தொகுப்பும் வெளிவ‌ருகின்ற‌ன‌. த‌மிழ்ந‌தியின் க‌விதை மொழியில் ஒரு வ‌சீக‌ர‌த்த‌ன்மை இருந்தாலும் அவ‌ர் முன்வைக்கும் அர‌சிய‌ல் சில‌வேளைக‌ளில் அபத்தமாக இருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.

இவ‌ர்க‌ளை விட‌ மிக‌வும் க‌வ‌னிக்க‌த்த‌க்க‌ தொகுப்பை நிருபா 'சுணைக்கிது'வாய் த‌ந்திருக்கின்றார். சிறுமியிலிருந்து வ‌ள‌ர்ந்த‌ பெண்வ‌ரை ப‌ல‌ பாத்திர‌ங்க‌ள் மிக‌ அழ‌காக‌ச் சித்த‌ரிக்க‌ப‌ப்ட்டிருக்கின்ற‌ன‌. சுணைக்கிது க‌தையில் சிறுமியொருத்தியைப் பாலிய‌ல் துஷ்பிர‌யோக‌த்திற்கு ஆளாக்குப‌வ‌ர் யாரென்ப‌தை நேர‌டியாக‌ச் சொல்லாம‌ல் ஒரு வினாவாக‌த் தொக்கு நிற்க வைத்து அருமையான‌தொரு க‌தையாக‌ முடித்திருப்பார். கிட்ட‌த்த‌ட்ட‌ எஸ்.ராம‌கிருஸ்ணைன் த‌ன‌து க‌தையொன்றில் (விசித்திரி என‌ நினைக்கிறேன்) ம‌ன‌நிலை பிற‌ழ்ந்த‌ பெண்ணொருத்தியோடு உற‌வு கொண்ட‌து யாரென்ப‌தை கூறாம‌ல் ஒரு க‌தை எழுதியிருப்பார். அதை ஒரு சிற‌ந்த‌ க‌தையாக‌ சொல்லித் திரிந்த‌ எவ‌ரும் நிருபாவின் சுணைக்கிது க‌தையைப் ப‌ற்றிக் குறிப்பிடாம‌ல்விட்ட‌து விய‌ப்பாக‌ இருக்கிற‌து.

இதேவேளை பிரான்சிலிருந்து நீண்டகாலமாய் கவிதைகள் எழுதிவரும் வாசுதேவனின் 'தொலைவில்' வெளிவருகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்புக்களை சில இடங்களில் கோரக்கூடிய கவனிக்கத்தக்க பல கவிதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன. மைதிலியின் 'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' காலம் பிந்தி வந்தாலும், ஆழியாளின் உரத்துப் பேச போன்றதைப் போல கவனிக்கத்தக்கதொரு தொகுப்பே. மேலும், மு.புஷ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்களும்' , த.பாலகணேசனின் 'வர்ணங்கள் கரைந்த வெளியும்' இதே காலப்பகுதியில் வெளிவருகின்றன..

3.

ஈழ‌த்தில் சமாதானக் காலத்திலும் அதற்குப் பிந்தைய காலத்திலிருந்தும் வன்னியிலிருந்து புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எழுத வருகின்றார்கள். அதிக கவனத்தைக் கோருகின்ற இருவராக தீபச்செல்வனையும், த.அகிலனையும் கூறலாம். கிளிநொச்சியின் முற்றுகையை தொடர்ச்சியாகப் பதிவு செய்தவர் என்ற வகையில் தீபச்செல்வனின் கவிதைகள் முக்கியம் பெறுகின்றன. இதை சு.வில்வரத்தினத்தினம் தீவுகள் ஆக்கிர‌மிக்க‌ப்ப‌டுவ‌தைப் பாடிய 'காற்றுவெளிக்கிராமம்' , யாழ்ப்பாண 95ம் ஆண்டு பெரும் இடம்பெயர்வையும் முற்றுகையையும் முன்வைத்து நிலாந்தன் எழுதிய 'யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே' போன்ற தொகுப்புக்களின் நீட்சியில் வைத்துப் பார்க்கலாம். தீபச்செல்வனின் 'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை' தொகுப்பு ஒரு முக்கியமான வரலாற்றுப் பதிவை விட அதற்கப்பால விரிவடையவில்லை. திருப்பவும் திருப்பவும் ஒரேவிதமான மொழியாடலில் ஒரேவிதமான படிமங்களுடன் தீபச்செல்வன் நிறையக் கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பதால் அப்படியான வாசிப்பு மனோநிலை வந்ததோ தெரியாது. எனினும் ஒரு சகோதரரை ஈழப்போருக்குக் பலிகொடுத்தும், பதின்மத் தங்கை கட்டாய புலிகளின் ஆட்சேர்ப்பில் உள்ளாக்கப்பட்டு, இன்று தாயும் தங்கையும் முள்வேலி முகாங்களுக்குள் இருக்கும்போது தீபச்செல்வனை வேறு விதமாய் கவிதை எழுதக்கேட்க எங்களிடமும் எவ்வித அறங்களுமில்லை என்பதையும் அறிவேன். நீண்டதொரு பயணத்திற்கு தீபச்செல்வன் தயாராகின்றார் என்றால் இதே விமர்சனத்தைப் பின்னாட்களில் அவர் கேட்கக் கூடும் என்ப‌தால் இதை இப்போது சொல்ல‌வேண்டிய‌ அவ‌சிய‌மும் இருக்கிற‌து என‌வே ந‌ம்புகிறேன். த.அகிலனின் ஒரு கவிதைத் தொகுப்பு வந்திருக்கின்றது, அதை வாசிக்காதவரை அதுகுறித்து கருத்துச் சொல்லமுடியாது எனினும் புனைவுத் தன்மையில் அகிலன் எழுதிய 'மரணத்தின் வாசனை' முக்கியமானதொரு படைப்பு. ஒவ்வொரு கதையும் மரணத்தையே பேசுகின்றது. இவ்வளவு மரணங்களையும் நெருக்கமாகக் கண்ட ஒருவரால் இவ்வளவு நிதானமாகப் பதிவு செய்யமுடிகின்றதே என்ற ஆச்சரியமும், மரணம் சூழப்பட்ட எம் ஈழத்தமிழ் இனம் குறித்த சோகமும் ம‌ர‌ண‌த்தின் வாச‌னை வாசிக்கும்போது சூழ்கின்றது. இத்தொகுப்பு வெளிவந்த சில மாதங்களில் அவரின் சகோதரரும் போரின் நிமித்தம் பலிகொடுக்கப்பட்டிருக்கின்றார் என்பதும் கவனிக்கத்தக்கது.

ஏன் இவ‌ர்க‌ளின் ப‌டைப்புக்க‌ளோடு இவ‌ர்க‌ளின் புற‌ச்சூழ‌ல் குறித்தும் குறிப்பிடுகின்றேன் என்றால், இவ‌ர்க‌ளைப் போன்ற‌ ப‌ல‌ ப‌டைப்பாளிகள் பலர் இவ்வாறான இழ‌ப்புக்க‌ளோடும் துய‌ர‌ங்க‌ளோடும் நேர‌டியாக‌ப் பாதிக்க‌ப்ப‌ட‌ட‌வ‌ர்க‌ள். தாங்க‌ள் நினைத்த‌ நேர‌த்திற்கு கும்ப‌மேளாவிற்கும், கும‌ரிமுனைக்கும் போய் வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு எத்தகைய நெருக்கடிகளிலிருந்து ஈழத்துப் படைப்புக்கள் எழுதப்படுகின்றன என்பதை அறிதல் கடினமே.

இறுதியாக அண்மையில் வெளிவந்த மெலிஞ்சி முத்தனின் 'வேருலகு' பற்றியும் குறிப்பிட்டாக‌ வேண்டும். இது ஒரு குறுநாவல் அளவு சிறிதெனினும் பலவித கதைகளை நீட்சித்துக் கொண்டுபோகக்கூடிய இடைவெளிக‌ளை வாச‌க‌ருக்குத் த‌ர‌க்கூடிய‌ ஒரு முக்கிய படைப்பு. மெலிஞ்சி முத்தனின் கவிதைகள் என்னை அவ்வளவு ஈர்க்காதபோதும், மெலிஞ்சியின் 'வேருலகு' அண்மையில் புலம்பெயர் சூழலில் வெளிவந்த முக்கிய படைப்பு எனலாம். அவரின் கவிதைகளிலிருந்து பார்க்கும்போது, இக்குறுநாவல் மிகப்பெரும் பாய்ச்சலாகவே இருக்கின்றது.

(தொடரும்...)
(காலம் இலக்கிய நிகழ்வான 'ஈழமின்னல் சூழ் மின்னுதே' வில்  வாசிக்கப்பட்ட கட்டுரை, Apr, 2010)

சமகால ஈழத்து இலக்கியம்

Saturday, May 01, 2010

(2000ம் ஆண்டுகளின் பின்பான பிரதிகளை முன்வைத்து)

1.
ச‌ம‌கால‌ ஈழ‌த்து இல‌க்கிய‌ம் என்ப‌து ப‌ர‌ந்த‌ த‌ள‌த்தில் அணுக‌வேண்டிய‌து. விரிவான‌ வாசிப்பும், ஆழ‌மான‌ விம‌ர்ச‌ன‌ப்ப‌ண்பும் இல்லாது ஒரு வாசிப்பை முன்வைத்த‌ல் என்ப‌து க‌டின‌மான‌து.. ஈழ‌த்திலிருந்து என‌க்கு வாசிக்க‌ கிடைத்த‌ பிர‌திக‌ள் மிக‌ச் சொற்ப‌மே. எனவே ஈழ‌த்தில‌க்கிய‌ம் என்ற‌ வ‌கைக்குள் ஈழ‌த்திலிருந்தும் புல‌ம்பெய‌ர்ந்தும் வ‌ந்த‌ ப‌டைப்புக்க‌ளை சேர்த்து, சில‌ வாசிப்புப் புள்ளிக‌ளை முன்வைக்க‌லாமென‌ நினைக்கின்றேன். அத்துடன், இது எத‌ற்கான‌ முடிந்த‌ முடிபுக‌ளோ அல்ல‌ என்ப‌தையும் த‌ய‌வுசெய்து க‌வ‌ன‌த்திற் கொள்ள‌வும். மேலும் போர் தின்றுவிட்டுப் போயிருக்கின்ற‌ ஈழ‌த்துச் சூழ‌லில், இன்று இல‌க்கிய‌ம் பேசுவ‌து கூட‌ ஒருவ‌கையில் அப‌த்த‌மான‌துதான்.

ச‌ம‌கால‌ ஈழ‌த்தில‌க்கிய‌ம் என்ப‌தை 2000ம் ஆண்டுக்குப் பிற‌கான‌ சில‌ பிர‌திக‌ளினூடாக‌ அணுக‌ விரும்புகின்றேன். ஈழ‌த்தில‌க்கிய‌த்தில், மிக‌ நீண்ட‌கால‌மாக‌ புனைவுக‌ளின் ப‌க்க‌ம் தீவிர‌மாக‌ இய‌ங்கிய‌வ‌ர்க‌ள் என‌, எவ‌ரேயையேனும் க‌ண்டுகொள்ளுத‌ல் ச‌ற்றுக் க‌டின‌மாக‌வே இருக்கிற‌து. விம‌ர்ச‌ன‌த்துறையில் ஒரு தொட‌ர்ச்சியும், தொன்மையும் இருந்த‌தைப் போல‌, புனைவுக‌ளின் வ‌ழியே ந‌ம்மிடையே ஒரு தொட‌ர்ச்சி இருந்த‌தில்லை. அவ்வாறு இல்லாத‌து ந‌ல்ல‌தா கூடாதா என்ப‌தைப் பிற‌கொரு நேர‌த்தில் பார்ப்போம். இந்த‌க் கால‌ப்ப‌குதியில், ஒர‌ள‌வு தொட‌ர்ச்சியாக‌ க‌விதைத் த‌ள‌த்தில் தீவிர‌மாய் இய‌ங்கிவ‌ந்த‌ வில்வ‌ர‌த்தின‌த்தை இழ‌ந்திருக்கின்றோம். இன்னொரு புற‌த்தில் மிக‌வும் நம்பிக்கை த‌ந்துகொண்டிருந்த‌ எஸ்.போஸை மிக‌ இள‌ம‌வ‌ய‌தில் துப்பாக்கியிற்குப் ப‌லியும் கொடுத்திருக்கின்றோம். ஆக‌வே ஈழ‌ இல‌க்கிய‌த்தை வாசிப்புச் செய்ய‌வ‌ரும் ஒருவ‌ர், புற‌நிலைக் கார‌ணிக‌ளான‌, தொட‌ர்ச்சியான‌ போர், இட‌ம்பெய‌ர்த‌ல், சுத‌ந்திர‌மாக‌ எதையும் எழுத‌முடியாத‌ சூழ‌ல் என்ப‌வ‌ற்றைக் க‌வ‌ன‌த்தில் கொள்ளுத‌ல் அவ‌சிய‌மாகின்ற‌து. இதை விம‌ர்ச‌க‌ர்க‌ளுக்கு முக்கிய‌மாய் இந்தியாவில் சொகுசான‌ சூழ‌லில் இருந்துகொண்டு, வ‌ருமான‌ வச‌திக‌ளுக்காய் கோட‌ம்பாக்க‌த்தில் புர‌ண்டு கொண்டிருப்ப‌வ‌ர்க‌ளுக்கு விள‌ங்க‌ப்ப‌டுத்துவ‌து க‌டின‌ம‌.

ஈழ‌த்தில‌க்கிய‌ம் என்ப‌தே அவ‌ற்றின் நில‌ப்ப‌ர‌ப்புக‌ளுக்கும், க‌லாசார‌ த‌ள‌ங்க‌ளுக்கும் ஏற்ப‌ உட்பிர‌தேச‌ங்க‌ளிலேயே வித்தியாச‌ப்ப‌டுப‌வை. உதார‌ண‌மாக‌ யாழில் வெளிவ‌ரும் ப‌டைப்புக்க‌ளுக்கு, பிரயோகிக்கும் விம‌ர்ச‌ன‌ அலகுகளை ம‌லைய‌க‌த்தில் முன்வைக்க‌முடியாது. முற்றிலும் வித்தியாச‌மான‌ சூழ‌ல் ம‌லைய‌க‌த்தினுடைய‌து. க‌விதை எழுதும் ம‌லைய‌க‌ப் பெண்ணொருவ‌ர் ஒரு நேர்காண‌லின்போது, தான் ஒரு ப‌டைப்பு எழுதி அனுப்புவ‌து என்றால் கூட‌ 4 மைல் ந‌ட‌ந்துவ‌ந்தே த‌பால் பெட்டிக்குள் போட‌வேண்டியிருக்கின்ற‌து என்ப‌த‌ன், பின்னாலுள்ள‌ புறச்சூழ‌ல்க‌ளை முன்வைத்தே நாம் ம‌லைய‌க‌ப் ப‌டைப்புக்க‌ளை அணுக‌வேண்டியிருக்கின்ற‌து. அதேபோன்று வ‌ட‌க்கிலிருந்து துர‌த்த‌ப்ப‌ட்ட‌ முஸ்லிம்க‌ளின‌தும், கிழ‌க்கில் இருக்கும் முஸ்லிம்க‌ளினதும் வாழ்வு நிலை என்ப‌து கூட‌ முற்று முழுதிலும் வேறுப‌ட‌க்கூடிய‌து. இந்த‌ வித்தியாச‌ங்க‌ள் அவ‌ர்க‌ளின் ப‌டைப்புக்க‌ளில் ஊடாடுவ‌தை விள‌ங்கிக்கொள்ளாது ஒரு வாசிப்பை நாம் எளிதாக‌ச் செய்துவிட‌ முடியாது. இவ்வாறே முற்றுமுழுதாக‌ வாழ்வு குலைக்க‌ப்ப‌ட்டு புதிய‌ நாட்டுச் சூழ‌லில் வாழ‌த்தொட‌ங்கும் புல‌ம்பெய‌ர்ந்த‌வ‌ர்க‌ளுக்கும் வேறுவித‌மான‌ பிர‌ச்சினைக‌ள் இருக்கின்ற‌ன‌.

2.
2001ம் ஆண்டு ஷோபாச‌க்தியின் 'கொரில்லா' ஒரு புதிய‌ பாய்ச்ச‌லை தமிழ்ச்சூழலில் ஏற்ப‌டுத்துகின்ற‌து. க‌தைக் க‌ள‌த்தில் ம‌ட்டுமில்லாது புனைவின் மொழியிலும் அது வித்தியாச‌த்தைக் கொண்டிருந்த‌து. அழுது வ‌டிந்துகொண்டிருந்த‌ மொழியில், க‌தை சொல்லிக்கொண்டிருந்த‌ ஈழ‌த்த‌மிழ‌ர் ப‌டைப்புக்க‌ள‌த்தில், இது ஒரு பெரும் மாற்ற‌த்தை ஏற்ப‌டுத்தியிருந்த‌து. மிக‌ உக்கிர‌மான‌ அர‌சிய‌லை, அங்க‌த‌த்தோடு இணைத்துக்கொண்ட‌தால் -எப்போதுமே அர‌சிய‌ல் பேச‌ப்பிடிக்கின்ற‌ த‌மிழ‌ர்க‌ளை- அது வெகுவிரைவாக‌ த‌ன‌க்குள் இழுத்துக்கொண்ட‌து. அதே ஆண்டு அ.முத்துலிங்க‌த்தின் 'ம‌காராஜாவின் புகைவ‌ண்டி ர‌யில்வ‌ண்டி' கால‌ச்சுவ‌டு ப‌திப்பாக‌ வ‌ருகின்ற‌து. அத‌ற்கு முன் இங்கொன்றும் அங்கொன்றுமாய் முத்துலிங்க‌த்தின் க‌தைக‌ளை வாசித்த‌வ‌ர்க‌ளுக்கு ‍‍-முக்கிய‌மாய்த் த‌மிழ‌க‌ வாச‌க‌ர்க‌ளுக்கு- இப்ப‌டி த‌ங்க‌ளை எளிதாக‌ப் புன்ன‌கைக‌ வைக்கின்ற‌ ஒரு க‌தைசொல்லி இருக்கின்றார் என்ப‌தை அறிகின்றார்க‌ள்.. ஷோபா சக்தியும், முத்துலிங்க‌மும் புதின‌ங்க‌ளில் வாச‌க‌ர்க‌ளின் க‌வ‌ன‌த்தைக் கோருகின்ற‌ அதேவேளையில், க‌விதைக‌ளில் 2000ல் ஆழியாளின் 'உர‌த்துப் பேச‌'வும், பா.அகில‌னின் 'ப‌துங்குகுழி நாட்க‌ளும்' க‌வ‌ன‌த்தைப் பெறுகின்ற‌ன. காத‌ல் முறிவின்போது என்னிட‌ம் இருந்து எல்லாவ‌ற்றையும் திருப்பிப் பெறுகின்ற‌ நீ, எப்ப‌டி என‌க்குத் த‌ந்த‌ முத்த‌ங்க‌ளையும்,விந்துக்க‌ளையும் திருப்பிப் பெறுவாய்? என்று அறைந்து கேட்கின்ற‌ கேள்விக‌ள் ஆழியாளிட‌மிருந்து வெளிவ‌ருகின்றது, பா.அகில‌னோ இழ‌ந்து போன‌ காத‌லை, ம‌ஞ்ச‌ள் ச‌ண‌ல் வ‌ய‌லில் விழுகின்ற‌ சூரியனாய் ஆக்குகின்ற ப‌டிம‌ங்க‌ளில் எழுதுகின்றார்.

ஷோபாச‌க்தியைப் போல‌, மிக‌ப்பெரும் பாய்ச்ச‌லை புனைவுத்த‌ள‌த்தில் நிகழ்த்த‌க் கூடிய‌வ‌ர் என்று, மிக‌வும் ந‌ம்ப‌ப்ப‌ட்ட‌ ச‌க்க‌ர‌வ‌ர்த்தி 'யுத்த‌தின் இர‌ண்டாம் பாக‌த்தோடு' ஒருவித உற‌க்க‌நிலைக்குப் போன‌து ஈழ‌த்து இல‌க்கிய‌ப்ப‌ர‌ப்பில் ஏமாற்ற‌மே. யுத்த‌த்தின் இர‌ண்டாம் பாக‌த்தின் சில‌ கதைக‌ள் உணர்ச்சித்தளத்தில் மட்டும் இருக்கின்ற‌ன‌ என்றாலும், அதில் உண்மைக‌ள் நேர்மையாக‌வும் துணிச்ச‌லாக‌வும் கூற‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து என்ப‌தால் முக்கிய‌ம் வாய்ந்ததாகிவிடுகின்றது. மேலும் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மொழியின் வாச‌னை க‌தையெங்கும் ம‌ல‌ர்ந்த‌ப‌டியே இருப்ப‌துவும் க‌வ‌னிக்க‌த்த‌து. இதே கால‌க‌ட்ட‌த்தில் இல‌க்கிய‌ உல‌கில் கால‌ம் ச‌ற்றுப் பிந்தி நுழைந்தாலும் மிகுந்த‌ சொற்சிக்க‌ன‌த்தோடும் அழ‌கிய‌லோடும் திருமாவ‌ள‌வ‌ன் நுழைகின்றார். ப‌னிவய‌ல் உழ‌வில் முன்ன‌வ‌ர் சில‌ரின் பாதிப்பு இருந்தாலும் சிற‌ந்த‌ க‌விதைக‌ள் சில‌வ‌ற்றையாவ‌து அதில் அடையாள‌ங்காண் முடியும். ப‌னிவ‌ய‌ல் உழ‌விற்குப் பிற‌கு அஃதே இர‌வு அஃதே ப‌க‌லில் வேறொரு த‌ள‌த்தில் க‌விதைக‌ளை திருமாவ‌ள‌வ‌ன் ந‌க‌ர்த்த‌ முய‌ன்றிருக்கின்றார். ஆனால் அவ‌ர‌து 3வ‌து தொகுப்பான‌ இருள்-யாழி இவ்விரு தொகுப்புக்க‌ளை விடுத்து முன்ன‌க‌ர‌ வேண்டிய‌த‌ற்குப் ப‌திலாக‌ சற்றுத் தேங்கிப் போன‌து ஒருவ‌கையில் ஏமாற்ற‌மே. இதே கால‌ப்ப‌குதியில் க‌ன‌டாவிலிருந்து தேவ‌காந்த‌னின் 'க‌தா கால‌ம்' கால‌ம் ப‌திப்பாக‌ வ‌ருகின்ற‌து. ம‌காபார‌த‌ம் ந‌ம‌து ஈழ‌த்துச் சூழ‌லிற்கு ஏற்ப‌ ம‌றுவாசிப்புச் செய்ய‌ப்ப‌டுகின்ற‌து.நாம் அறிந்த ம‌காபார‌த‌ பாத்திர‌ங்க‌ள் க‌தா கால‌த்தில் வேறு வேறு வ‌டிவ‌ங்க‌ள் எடுக்கின்ற‌ன‌.. வாசிப்புக் க‌வ‌ன‌த்தைக் கோரும் இப்புதின‌ம், ஏற்க‌ன‌வே வெளிவ‌ந்த‌ எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் உப‌பாண்ட‌வ‌த்தின், பெரும் வெளிச்ச‌த்தில் பின் த‌ங்கிவிட்ட‌தோ, என்கின்ற‌ ஆத‌ங்க‌ம் இப்போதும் என‌க்கு உண்டு.

2001ல் ஈழ‌த்தில் ஏற்ப‌ட்ட‌ ச‌மாதான‌க் கால‌ம், வ‌ன்னியிலிருந்து நாம் இதுவ‌ரை அறியாத‌ க‌தைக‌ளை எம்முன்னே கொண்டுவ‌ர‌த் தொட‌ங்குகின்ற‌து. ஏற்க‌ன‌வே அறிய‌ப்ப‌ட்ட‌ தாம‌ரைச் செல்வியின் 'அழுவதற்கு நேரமில்லை' சிறுக‌தைத் தொகுப்பு வெளிவ‌ருகின்ற‌து. அதேபோன்று த‌ன‌து பிள்ளைக‌ளை ஈழ‌ப்போருக்குப் ப‌லிகொடுத்து, தானும் ஒரு போராளியாக‌ இருந்த‌ த‌மிழ் ம‌க‌ள் என்ற‌ க‌தைசொல்லியின் 'இனி வானம் வெளிச்சிரும்' வ‌ருகின்ற‌து. வ‌றுமைக்குள் வாழ்ந்து, திரும‌ண‌மாகி சில‌ வ‌ருட‌ங்க‌ளில் க‌ண‌வ‌னால் கைவிட‌ப்ப‌ட்ட‌ உறுதிமிகு ஒரு வ‌ன்னிப் பெண்ணின் க‌தை, மிக‌ அற்புத‌மாக‌ அதில் ப‌திய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. இதுவ‌ரை ஆண்க‌ளின் குர‌ல்க‌ளின் வ‌ழியே விழுந்த‌ போராட்ட‌ம் குறித்த‌ க‌தையாட‌ல்க‌ளை த‌மிழ்ம‌க‌ள் வேறொரு வித‌த்தில் அணுகுகின்றார். இந்நாவ‌லின் ஆண்க‌ள் விய‌ந்தோத்தும் வீர‌த்தை அதிக‌ம் கொண்டாடாது, இப்போராட்ட‌ம் த‌ம‌க்கு வேறு வ‌ழியில்லாது திணிக்க‌ப்ப‌ட்ட‌து, த‌ம‌து இருத்த‌ல் என்ப‌தே இப்போராட்ட‌த்தோடு இணைந்துள்ள‌தென‌ நினைக்கும், ஒரு பெண்ணின் ம‌னோநிலையில் எழுத‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. போர் குறித்தும் போர் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌து குறித்தும் ந‌ம‌க்கு ப‌ல்வேறு கேள்விக‌ள் இருக்கின்ற‌போதும் தாம் உறுதியாய் ந‌ம்பிய ஒரு நிலைப்பாட்டுக்காய் த‌ங்க‌ளை அர்ப்ப‌ணித்துக்கொண்ட‌வ‌ர்க‌ளின் புதின‌ம் என்ற‌வகையில் இந்நாவ‌ல் முக்கிய‌மான‌தே. ம‌க்சிம் கார்க்கியின் தாயிற்கு நிக‌ரான‌ எத்த‌னை ஆயிர‌மாயிர‌ம் தாய்களை நாம் ந‌ம‌து நில‌ப்ப‌ர‌ப்புக்க‌ளில் க‌ண்டிருக்கின்றோம். அவ்வாறான‌ ஒரு தாயின் க‌தையே இது. மேலும் புலிக‌ளின் அரசிய‌ல் துறையில் இருந்த‌ ம‌லைம‌கள் எழுதிய‌ 'புதிய க‌தைக‌ளிலும்', வெளிச்ச‌ம் ச‌ஞ்சிகையால் தொகுக்க‌ப்ப‌ட்ட‌ 'வாசல் ஒவ்வொன்றும்' சிறுக‌தைத் தொகுப்பிலும் போர்க்கால‌ வ‌ன்னிச்சூழ‌ல் அங்கே வாழ்ந்த‌வ‌ர்க‌ளால் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. அதேபோல மலையக பெண்களின் கவிதைகள் தொகுக்கப்பட்ட 'இசை பிழியப்பட்ட வீணை'யையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

(தொடரும்...)
(காலம் இலக்கிய நிகழ்வான 'ஈழமின்னல் சூழ் மின்னுதே' வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)