கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 03

Tuesday, March 28, 2023


1.

சென்ற வாரம் ஒரு நண்பர் அவர் சிறிதளவில் பங்களிப்புச் செய்துகொண்டிருக்கும் ஒரு திரைப்படம் பற்றி கூறிக் கொண்டிருந்தார். 'இது ஒரு நடுநிலையான திரைப்படம், அரசு X இயக்கம் என்கின்ற இரு தரப்பையும் விமர்சிக்கின்றது' என்று அவர் குறிப்பிட்டார். எனக்கு இவ்வாறான 'நடுநிலை'மைகளில் அவ்வளவு நம்பிக்கை இல்லை, ஒரு படைப்பு அது எடுத்துக்கொள்ளும் களத்துக்கு உண்மையாகவும்/genuine ஆகவும் இருக்கின்றதா என்பதை மட்டுமே பார்ப்பேன் எனச் சொன்னேன். மேலும் அரசு என்னும் மாபெரும் இயந்திரத்தை, எந்த ஒரு போராடும் இயக்கத்திற்கும் நிகராக வைத்துப் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் அவருக்குக் குறிப்பிட்டேன். எந்த ஒரு இயக்கமும் தன்னியல்பிலே விரும்பி ஆயுதமெடுத்துப் போராடுவதில்லை, தம்மைத் தாமே பலிகொடுக்கவும் வருவதில்லை. இவ்வாறான இயக்கங்கள் தோன்றுவதற்குப் பெரும்பாலும் அரசுக்களும், சமூக புறக்காரணிகளுமே முக்கியமானவை. அதைத் தவிர்த்து, இந்த இயக்கங்கள் பிறகான காலத்தில் தம்மளவில் வன்முறையாளர்களாகவும், தம்மைச் சுற்றியவர்களை அழித்து தம்மையும் அழித்துக்கொண்டாலும் அவற்றைப் பேசும்போதும் கூட, இவை எழுந்தவற்றுக்கான அடிப்படைக் காரணங்களை நாம் மறந்துவிடக்கூடாது என்றேன்.

இன்றைக்கு ஒரளவு வாசிப்புடைய எவருக்குமே உலகில் மக்களுக்காய் மக்களிடையே எழுந்த எந்தவொரு ஆயுத இயக்கமும் தன் கையில் இரத்தக்கறையில்லாது வரலாற்றின் முன் நின்றதேயில்லை என்பது புரியும். அவையவற்றின் கறையில் கூடக் குறைய இருக்குமே தவிர, எவருமே 'புரட்சியின் பெயரால்' எனச் சொல்லித் தப்பி விடமுடியாது. அது நாம் உலகப்பரப்பில் வியந்துகொண்டிருக்கும் சே, லெனினில் இருந்து, ஈழப்போராட்டத்தில் நல்லதொரு தலைமைப்பண்பு உடையவரென பலரால் சொல்லப்படுகின்ற பத்மநாபா உட்பட அனைவரும் இந்தப் பழியிலிருந்து தப்பமுடியாது.

இந்த 'கசப்பான உண்மை'யை அறிந்துகொண்டு ஈழப்போராட்டத்தை அணுகியவர்கள் என்று பார்த்தால் மிகக்குறைவானவர்களே இருக்கின்றனர். இன்றைக்கு ஈழத்தில் ஆயுதப்போராட்டம் முடிந்தபின்னும் அதன் தோற்றுவாய், துன்பவியலான முடிவு, இனியான எதிர்காலம் என்று தத்துவார்த்த பின்னணியில் தமிழ் நிலத்தோடு ஆராய்ந்து எழுதியவர்கள் என்பது மிகக் குறைவு. அதிலும் ஈழத்திலும், புலம்பெயர்ந்த தேசத்திலும் இருந்து எழுதும் ஆய்வாளர்கள் நிலைபற்றிச் சொல்லத் தேவையில்லை. இன்னமும் 2000களின் தொடக்கத்திலேயே தேங்கிவிட்டு, புதிதாக நாம் வாசிப்பதற்கு/சிந்திப்பதற்கு, எதையும் எழுத அவர்கள் தயாரில்லை. அது எத்தரப்பாயினும் குண்டுச்சட்டிக்குள் குதிரையோடுவதில் மட்டும் அவர்களுக்குப் பெருமிதம்.

ஈழப்போராட்டம் இறுதிக்கட்டத்தில் நின்றபோது, அதன் அத்தனை பலவீனங்களையும் அறிந்துகொண்டு அதைத் தமிழ்நிலப் பண்பாட்டிலும், சர்வதேச அரசியல் நிலைமைகளோடும் நானறிய இருவர் எழுதிக் கொண்டிருந்தனர். ஒருவர் நாகார்ஜூனன், மற்றவர் தமிழவன். நாகார்ஜூனன் தனது இணையத்தளத்திலும், தமிழவன் தீராநதி போன்ற அச்சு ஊடகங்களிலும் எழுதிக்கொண்டிருந்தனர். வேறு சில தமிழகப் படைப்பாளிகள் அந்தக் காலத்தில் ஆஸ்திரேலியா போன்ற தேசங்களுக்குப் பயணஞ்செய்கையில், இந்தக் கடும் யுத்தம் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்டபோது, 'நானொரு அரசு ஊழியன், அது பற்றி கருத்து எதுவும் கூறமாட்டேன்' என்று கூறியும் இருந்தார்கள். அந்தக் காலத்தில்தான் தமிழகத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் தீக்குளித்தபடியும், இன்னும் பலர் கையாலாகநிலையிலும் தம் எதிர்ப்பைக் காட்டி சிறைக்குள்ளும் போய்க் கொண்டிருந்தார்கள். அவரவர்க்கு அவரவர்க்கான அறம் அல்லது அந்தந்த நேரத்து நியாயங்கள்!


2.

ழப்போராட்டம் தீவிரமான கட்டத்தில் இருந்தபோது தமிழவன் அதை நீண்ட நம் தமிழ்ப்பண்பாட்டில் வைத்து புரிந்துகொள்கின்றார். எவ்வாறு 1980களில் ஈழத்தில் நிகழ்ந்த படுகொலைகள் தமிழகத்தின் அந்தக்காலத்தைய தலைமுறையைப் பாதித்ததோ, அவ்வாறே ஈழப்போராட்டத்தின் இறுதி முடிவானது தமிழவனை மீண்டும் தமிழடையாளத்தைத் தேடச் செய்கின்றது. அதை அவர் தமிழின் செழுமையான தமிழ் இலக்கியங்களினூடாக சென்று மறுவரையாக்கம் செய்கின்றார். அதுவே தொகுக்கப்பட்டு இப்போது 'திராவிடம் தமிழ்த்தேசம் கதையாடல் ( ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனை வரலாறு)' என நூலாக வந்துள்ளது. இத்தொகுப்பின் முன்னுரையில் தமிழவன், 'தமிழ் இலக்கியமும் அரசியலும் பின்னிப் பிணைந்திருக்கின்றன' என்று தெளிவாகச் சொல்லிவிடுகின்றார்.

இன்றும் பின்னமைப்பியல்/பின்நவீனத்துவம் விரிவாகப் பேசப்பட்டபின்னும், இன்னும் இலக்கியத்தில் அரசியல் வேண்டாம் என்கின்ற குரல்களைப் பல இடங்களில் கேட்கின்றோம். இலக்கியத்தில் அரசியல் உரத்து ஒலிக்கின்றதா, மெளனத்தினூடாகப் பேசப்படுகின்றதா என்பதே ஒரு வாசகர் பார்க்கவேண்டியதே தவிர, இலக்கியத்தில் அரசியல் இல்லை என்பது அபத்தம் என்பதை நாமனைவரும் அறிவோம்.

தமிழவன் இத்தொகுப்பில் இருக்கும் 25 கட்டுரைகளிலும், நாம் ஏற்கின்றோமோ/மறுக்கின்றோமோ நாம் விவாதிக்கக் கூடிய பலபுள்ளிகளை ஒவ்வொரு கட்டுரையிலும் தருகின்றார். திராவிட இயக்கங்களின் முக்கியமாய் அண்ணாவின் பங்களிப்பை பெரும் நிகழ்வாகக் கொள்கின்ற அவர் அதேசமயம் அண்ணாத்துரையின் எழுத்துக்களை பலவீனம் என்றும் ஒதுக்கிவிடுகின்றார். ஆனால் அண்ணா கண்டெடுத்த பாரதிதாசனை தமிழவனும் முன்னிறுத்துகின்றார். பாரதியாருக்கும், அவரின் தாசனாக தொடக்கத்தில் கிளைத்த பாரதிதாசன் பிற்காலத்தில் எப்படி பாரதியாரிலிருந்து விலகி வந்திருக்கின்றார் என்று இதில் விபரமாக எழுதுகின்றார். பாரதியாருக்கு பக்தி இயக்கம் முன்னோடியாக இருந்து அதுவே அவரது சுதந்திரவேட்கைப் பாடல்களில் 'பாரத மாதா'வாக தீர்க்கமாக ஒலித்ததென்கின்ற தமிழவன், பாரதிதாசன் பிற்காலத்தில் சங்கப்பாடல்களுக்குள் அதிகம் மூழ்கின்றபோது அது தமிழ் அடையாளம் என்ற முக்கிய கதையாடலை முன்வைக்கின்ற புள்ளியாக மாறுகின்றதென்கின்றார். அந்தவகையில் 'தமிழ் தொல்மனமும் பாரதிதாசனும்', 'பாரதியும் உற்பத்தியாகிக் கொண்டிருந்த தமிழ்த்தேசமும்' முக்கியமான கட்டுரைகள் என்பேன்.

திராவிட இயக்கத்தினர் இன்றைக்கும் பாரதிதாசன் உள்ளிட்ட திராவிட எழுத்தாளர்கள் பற்றி முறையான ஆய்வுகள் செய்யாது ஒரு சிமிழுக்குள் பலரை அடக்கிவிட்டனர் என்பதைத் தமிழவன் விமர்சிக்கவும் செய்கின்றார். அதேவேளை திராவிட இயக்கத்தினர் கவனிக்காதுவிட்ட மணிக்கொடி/எழுத்து/க.நா.சு பற்றியும் அவர்கள் தமிழை வளர்த்துக்கொண்டு வந்த விதம்பற்றியும் குறிப்பிடுகின்றார். அதை ஒரு தனிக்கட்டுரையில் 'க.நா.சு வென்றார்' என்று தமிழவன் எழுதியிருக்கின்றார்.

அவ்வாறே ஈழத்தவர்களின் அரசியலைப் பேசுவதற்கு மஹாகவியின் படைப்புக்களையும், எஸ்.பொவின் 'மாயினி'யையும் எடுத்தாண்டிருக்கின்றார். கைலாசபதியும், ஏ.ஜே.கனரட்னவும், முக்கியமாய் சிவத்தம்பியும் பல கட்டுரைகளில் அவர்களின் பங்களிப்புக்காய் கவனப்படுத்தப்படுகின்றனர். இன்றைக்கு தமிழ் அரசியல் பேசும் ஆய்வாளர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டிய கட்டுரைகளாக தமிழவனின் 'இருபதாம் நூற்றாண்டின் தமிழாய்வில் அரசியல்' மற்றும் 'இருபதாம் நூற்றாண்டில் கம்யூனிசமும் தமிழும்' என்பவற்றைச் சொல்வேன்.

தமிழுக்கென்று சங்க இலக்கியங்களிலிருந்து ஒரு தொடர்ச்சியும், தொன்மையும் இருந்தாலும், சிறுகதைகள், நாவல் உள்ளிட்ட வகைமைகள் மேற்கிலிருந்து வந்ததை ஏற்றுக்கொள்பவர்கள், பின்னமைப்பியல்/பின்நவீனத்துவம் என்று வரும்போது அவை நம்சூழலுக்கு ஒத்துக்கொள்ளாது என முகஞ்சுழித்தபடி இருக்கின்றார்கள். அவர்கள் நிதானமாய்த் தங்கள் கருத்துகளை மறுபரிசீலனை செய்வதற்கு, இங்கே 'எண்பதுகளில் தமிழில் தோன்றிய புதுவகை கதை இயக்கமும் சில விமரிசனங்களும்', 'இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய விமரிசனமும், 21ஆம் நூற்றாண்டின் இலக்கிய விமரிசனமும்' போன்ற கட்டுரைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன.

எண்பதுகளில் உரையாடப்பட்ட பின் அமைப்பியல்/பின் நவீனத்துவம் போன்றவையே தமிழ்ச்சூழலில் தலித்தியமும், பெண்ணியமும் பேசுவதற்கான தளங்களை இன்னும் விரிவாக்கியது என்கின்ற உண்மையறியாதவர்களே இலக்கியத்தில் தத்துவ/கோட்பாட்டு உரையாடல்கள் தேவையில்லை எனச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். ஒரு இலக்கிய படைப்பு எத்தகைய தத்துவ சட்டகத்திற்குள்ளும் வலிந்து நின்று எழுதப்படுவதில்லை என்பது எந்த ஒரு இலக்கிய விமர்சகருக்கும் தெரிந்த எளிய உண்மை. ஆனால் ஒரு பிரதியைப் புரிந்துகொள்ள, அதை விரித்துப் பார்க்க இவ்வாறான கோட்பாடுகளே தேவையென்பதும், எல்லாக் கோட்பாடுகளும் காலத்தின் நீட்சியில் இன்னொன்றாக விரிந்து தன் வீரியத்தை இழந்துபோவதும் இயல்பானவைதான். இதைப் புரிந்துகொள்ளாமலே இன்றும் 80/90களில் பேசப்பட்ட கோட்பாடுகள் தற்காலத்தில் வழக்கொழிந்து போய்விட்டன, எனவே கோட்பாடுகள்/விமர்சனங்கள் தேவையில்லை என்று கிடைக்கும் மேடைதோறும் சிலர் பேசி அலுப்படைய வைக்கின்றனர்

திராவிடம் என்று தமிழடையாளம் தேடிய தமிழர், பின்னர் தமிழ்ச் சினிமா நாயகர்களைத் தமது தலைவர்களாகக் கொண்டு பாலும் தண்ணீரும் கட்-அவுட்களுக்கு அபிஷேசம் செய்பவர்களாகவும், அவர்களே தமிழ்நிலத்தின் நாயக பிம்பங்களாக தொலைக்காட்சிகளில் மாற்றப்பட்டதையும் தமிழவன் சிறப்பாக ' எந்திரம் மூலம் தயாரிக்கப்பட்ட கலையும், தமிழன் அகதி ஆனதும்' மூலம் எழுதிச் செல்கின்றார்.

இந்தத் தொகுப்பு தமிழ் அடையாளம் சீரழிந்து போவதை மட்டுமில்லாது, நாம் அந்த அடையாளங்களை எதன் மூலம் மீட்டெடுக்க முடியும் என்கின்ற சில புள்ளிகளை முன்வைப்பதும் முக்கியமானது. இன்றைக்கு தமிழ் அடையாளம் சார்ந்து அரசியல்/இலக்கியம் பேசும் எவராயினும் இந்த நூலை வாசிக்கவேண்டும் என்பேன்.

நாம் தமிழவனின் கட்டுரைகளை ஏற்கின்றோமோ, இல்லையோ என்பது அவ்வளவு முக்கியமில்லை. ஆகக்குறைந்தது போலி தமிழ் அடையாள உணர்விலும், பெருமையிலும் நம்மைத் தோய வைத்துக் கொண்டிருக்கும் அரசியல்/இலக்கிய/நடிக விம்பங்களிலிருந்தும், அதன் நச்சுச்சூழல்களிலிருந்தும் இதை வாசிப்பதன் மூலம் நாம் ஒரளவு தப்பிப் போகவாவது முடியும். 

**************************

(Dec 29, 2022)Part

கார்காலக் குறிப்புகள் - 02

Thursday, March 23, 2023


னி பொழிந்து வெண்மை மூடிய நிலத்தை, காலையில் மழை கரைத்துக் கொண்டிருந்தது. பெருங்காற்றுடன் பெய்த உறைபனிமழை புற்களை சற்று விலத்த பசுமை தெரிந்தது. அந்தக் காட்சி அவ்வளவு நீடிக்கவுமில்லை. மீண்டும் பனி சடுதியாகப் பொழிந்து வெள்ளை முகில்களால் போர்த்தியது போலத் தரை கண்முன்னே மாறியது.


எல்லாமே சில மணித்தியாலங்களுக்குள்! 

இந்தக் குறுகிய நேரத்திற்குள்ளே ஒரு 'நிரந்தரமின்மை'யைப் பார்க்கின்றேன். வியட்னாமில் போர் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது, தாயிடம் (Thich Nhat Hanh) இந்தப் போர் எப்போது முடியும் என்று மக்கள் ஆறுதல் தேடி வருகின்றனர். எப்போது போர் முடியும் என்று தெரியாவிட்டாலும், புத்தரை நான் நன்கறிவேன் என்பதால், 'எல்லாமே ஒருநாள் மாறும்' என்பதில் நம்பிக்கை வையுங்கள் என அந்த மக்களிடம் கூறியதாகத் தாய் கூறுகின்றார். 

ஆம். எதுவுமே நிரந்தரமில்லாதவை;  எப்போதுமே மாறிக் கொண்டேயிருப்பவை!

தாயிடம், பின்னர் இந்த உலகம் போர்கள்/காலநிலை மாற்றம்/சுரண்டல் என இவ்வளவு கொடுமையாக இருக்கின்றதே உங்கள் பதில் என்ன என்கின்றபோது தாய் இதையே ஒரு பத்திரிகையாளரிடம் -அவரின் 70வயதுகளில்- 'எல்லாமே மாறக்கூடியவை' என மீண்டும் நினைவுபடுத்துகின்றார். ஆனால் நம்மால் செய்யக்கூடியது, நல்லவை விளையக்கூடிய உகந்த காரணிகளை (Right Conditions) தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருப்பது என்கின்றார்.


தாயை, 1960களில் வியட்னாமிய அரசு சொந்த நாட்டுக்குத் திரும்ப வரக்கூடாது என்கின்றது. அதன்பின்னர் கிட்டத்தட்ட 40 வருடங்களின் பின் முதன்முதலாக மீண்டும் வியட்னாமுக்குப் போய் சங்காவை அவர் அமைக்கின்றார். ஒரு குறுகிய காலத்திற்குள்ளேயே நூற்றுக்கணக்கானவர்கள் அந்தச் சங்காவில் சேர, வியட்னாமிய அரசு தம் இறையாண்மையை அச்சுறுத்தும் சக்தி தாயினது சங்காவிற்குள்ளதோவென அச்சமுறுகின்றது. எனவே தாய் நாம் சங்காவை இங்கே நடத்துவதற்கான  உகந்த காரணிகள் இன்னமும் உருவாகவில்லையெனச் சொல்லி, அதை முற்றாகக் கலைத்து விடுகின்றார். ஆனால் அவ்வாறு வந்துசேர்ந்த பிக்குகளுக்கும், பிக்குணிகளுக்காவும் அருகில் தாய்லாந்தில் ஒரு சங்கா புதிதாகத் தொடங்கப்படுகின்றது.

இதையேன் தாயோ அல்லது அவரைப் பின் தொடர்பவர்களோ தொடர்ந்து நமக்கு நினைவூட்டுகின்றனர் என்றால், சில விடயங்களுக்கு சரியான காரணிகள் இல்லாதபோது பொறுமையாகக் காத்திருப்பதில் எவ்வித தவறுமில்லை என்பதற்காகவே.

ஆகவேதான் இப்போது பெரும் பனிக்காலம் தொடங்கிவிட்டபின், பெரும் பனிப்பொழிவு நடந்தேறி, தெருவில் பயணிக்க வேண்டாம் என்றும், விமானங்கள் வானில் ஏறமுடியாத ஒரு சூழலும் இருக்கும்போது, நாமெல்லோரும் சரியான காரணிக்காய்க் காத்திருக்கத்தான் வேண்டும். 

எதையும் நமக்கேற்றமாதிரி எல்லாப் பொழுதும் மாற்றிவிடமுடியாது என்பது பிரபஞ்ச யதார்த்தம்!

000000000000

நான் அவ்வப்போது பேசும் நண்பரொருவர் அடிக்கடி தனது நண்பர்கள் மாறிக் கொண்டிருக்கின்றனர், அவர்களைப் புரிந்துகொள்ளாமல் பழகிவிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருப்பார். அவருக்கு நான் என் வாழ்விலிருந்து சில உதாரணங்களைச் சொல்லிக் கொண்டிருப்பேன். அவரைப் போல எனக்கு நிறைய நண்பர்கள் இல்லாதுவிட்டாலும், நானும் பல நண்பர்களுக்கு மெளனமாக விடை கொடுத்திருக்கின்றேன். அது நண்பர்களோ, காதலிகளோ எந்த ஒருவரிடம் நம்மால் மனம் திறந்து பேசும் வெளி இல்லாமல் போகின்றதோ அப்போதே அவர்களுக்கு விடைகொடுத்து விடுவது இரு தரப்பினர்க்கும் நல்லது என்றேன்.

இந்தப் பிரபஞ்சம் நமக்கான அரிய விடயங்களை இழக்க வைத்தாலும், அதைவிட இன்னும் பெறுமதி மிக்க மனிதர்களைக் கொண்டு நம் வாழ்வை நிரப்பும். அதை நண்பர்களை விட, காதலிகளின் விடயத்தில் நான் பார்த்திருக்கின்றேன் என நண்பருக்குச் சொன்னேன். இவ்வளவு நாளும் எங்கிருந்தார்கள் இவர்கள் என்று வியக்குமளவுக்கு சட்டென்று நம்மிடையே தோன்றி நம்மைப் பலர் புதிதாக வியக்க வைப்பார்கள்.

ஒரு காதலின் பெரும் பிரிவில் தனக்குள் உழன்று கொண்டு, 'இவ்வளவு காதலை வைத்துக் கொண்டு என்ன செய்வது' என்று மறுகிக் கொண்டவனுக்கு, பின்னர் ஒரு காலத்தில் ஒரே சமயத்தில் நான்கு பெண்கள் காதலிக்க வந்தார்கள் என்பதை காதலின் துயரத்தில் இருந்தபோது அந்த ஒருவன் நம்பியிருக்கத்தான் முடியுமா என்ன?

வாழ்க்கை அப்படி விசித்திரமானதுதான். நம்மை எந்தளவுக்கு நமது பலவீனங்களோடு இன்னொருவரின் முன்னால் வைக்கமுடியுமோ, அந்தளவுக்கு அந்தளவு நமக்கு தோழமையோ/நேசமோ கிடைக்கும். அதேபோல திறந்த மனதுடன் நேசத்துக்குப் பிரியாவிடை வேண்டியபோது கொடுக்கவும் முடியும்.

இந்த நண்பருக்கு நேற்றிரவு நகுலனைப் பற்றி சுகுமாரன் எழுதிய 'நகுலன் விட்டுச் சென்ற வழிகள்' பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். மலையாளக் கவிஞர்களும், தமிழ்க் கவிஞர்களும் பங்குபற்றிய ஒரு நிகழ்வில் நகுலனும் மேடையில் உட்கார்ந்திருக்கின்றார். அப்போது ஒவ்வொரு கவிஞர்களும் கவிதை வாசிக்கும்போது நகுலனையும் அழைக்கின்றனர். நகுலன், 'கவிதை உரக்க வாசிப்பதற்கானதல்ல; மனதால் வாசிப்பதற்கானது என்று ஒலிபெருக்கியில் அறிவித்து விட்டு வந்து மெளனமாக உட்கார்ந்து விட்டார். நெருங்கிய நண்பரான அய்யப்பப் பணிக்கர் வற்புறுத்தியும் நகுலன் இசையவில்லை.' என்று சுகுமாரன் அந்த நிகழ்வை நேரில் பார்த்து எழுதியிருக்கின்றார்.

அவ்வாறு ஒரு கவிஞர் ஒருவரின் நூல் அறிமுக நிகழ்வுக்கு, தமிழ்நாட்டில் நின்றபோது சென்றிருந்தபோது, சிறுகூட்டம் என்பதால் ஒவ்வொருத்தரும் அந்தக் கவிஞரின் தொகுப்பிலிருந்து ஏதோ ஒரு கவிதையை வாசித்தபோது, நான் கவிதைகள் மெளன வாசிப்பிற்குரியது என்று மறுத்திருந்ததை (ப்யூகோவ்ஸ்கியின் தமிழாக்கத்திற்கான முன்னுரையிலும் குறிப்பிட்டிருப்பேன்) நண்பருக்கு நினைவூட்டினேன். 'அப்படியெனில் நான் ஒரு நிகழ்வில் கவிதைகளை உரத்து வாசித்ததை மறுதலிக்கத்தான், இவற்றை எனக்குச் சொல்கின்றாயா' எனக் கேட்டார். அப்படி என்றெல்லாம் இல்லை. நான் உணர்ந்ததைப் போல நகுலன் உணர்ந்திருக்கின்றார் என்பது நினைவுக்கு வந்ததென்று கதையை வேறு திசைக்கு மடை மாற்றினேன்.

அத்தோடு இருந்தால் பரவாயில்லை. வெளிக் குளிர் எனக்கு கலக மனோபாவத்தைத் தந்ததோ என்னதோ, அதே கட்டுரையில் நகுலன் சுகுமாரனுக்கு ஒரு எழுத்தாளராக ஆகவேண்டும் என்று விரும்பினால், திருமணம் செய்யாது இருக்கவேண்டும் என்றும் கூறியிருக்கின்றார் என்று வாயைத் திறந்து சொல்லிவிட்டேன். சரி இப்போது என்ன சொல்ல வருகின்றாய் அலுப்பான, உடல் நோவிருக்கும் நாளொன்றில், நல்ல மனோநிலையை எனக்குத் தருவாய் என்று உன்னிடம் வந்தால், கவிதைகள் மெளன வாசிப்புக்குரியவை, எழுதப்போவது என்றால் பிரம்மசாரியாய் இருக்கவேண்டும் என்றெல்லாம் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று ஒன்றுக்கொன்று தொடர்பில்லாது 'பனி' போலக் கதைக்கிறாய் எனச் சலித்துக்கொண்டார் நண்பர்.

நகுலன், பிரமிள், ஏ.ஜே.கனகரட்ன, (ஓவியர்) கருணா என்று தனித்திருந்து தம்போக்கில் வாழ்ந்து, இவ்வுலகிலிருந்து உதிர்ந்து போனவர்கள் மீது ஏனோ பனிக்காலங்களில் இன்னும் பிரியம் கூடிவிடுகின்றது. அந்த ஆன்மாக்கள் எங்கிருந்தாலும் ஒன்று சேர்ந்து - தற்சமயம் எனக்குப் பிடித்த ஆர்ஜெண்டீனா Santa Julia என்கின்ற செம்மதுக்காரியோடு- காதல் நடனமாடி கள்வெறி கொள்ளட்டுமாக.

பெண்களின் அரவணைப்பின்றி ஒருகணமும் இருக்கவே முடியாத என்னைப் ஒருவனுக்கு இவர்களின் வாழ்வு என்றும் தீரா வியப்புத்தான். அதை அருகிலிருந்து பார்த்தபின்னும் இப்படிக் கோபிக்கக்கூடாது, நண்பரே!

00000000000000000000

(Dec 22, 2022)

புலம்பெயர் X புகலிட X அகதி இலக்கியம்

Wednesday, March 22, 2023

-சிறு குறிப்புகள்-

*******************

ற்றைக்கு 20 வருடங்ளுக்கு முன்னரே புலம்பெயர் X புகலிட வேறுபாடுகள் தீவிரமாகப் பேசப்பட்டிருக்கின்றது. பல்வேறு நிலைகள்/விடயங்கள் இடைவெட்டும் மிக சிக்கலான ஈழத்தமிழர்களின் அந்நிய நாட்டு வாழ்வை தெளிவாக வரையறுத்தும் விட முடியாது. 1983 இனக்கலவரத்தை ஒரு முக்கிய புள்ளியாக வைத்து புலம்பெயர் X புகலிடம் என்பது உரையாடப்பட்டிருக்கின்றது. 80களுக்கு முன் இலங்கையில் இருந்த படித்த உயர்வர்க்கத்தினர் பொருளாதார வசதிக்காய் புலம்பெயர்ந்தனர். முக்கியமான யாழ், கொழும்பு ஆதிக்கசாதியினருக்கு இந்த வாய்ப்புக்கள் எளிதாகக் கிடைத்து அவர்கள் புலம்பெயர்ந்தனர்.

83இல் நிகழ்ந்த படுகொலைகளும், இலங்கை/இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்களும், நம் இயக்கங்களுக்குள் நிகழ்ந்த உட்படுகொலைகளும் சாதி, மத, ஊர் பாகுபாடில்லாது எல்லோரையும் வெளிநாடுகளுக்கு எப்படியெனினும் உயிரைத் தக்கவைப்பதற்காய் அத்தனை ஆபத்துக்களுக்குமிடையில் 80களில் இருந்து அனுப்பி வைக்கத் தொடங்கியது.

இவ்வாறு நிகழ்ந்த விடயங்களை -80களின் பிற்பகுதியில் இருந்து 90களின் முடிவுவரை- புலம்பெயர்ந்த தேசத்திலிருந்து வந்த சிறுசஞ்சிகைகளின் எண்ணிக்கையையும், அவற்றின் பேசுபொருள்களையும் வைத்துப் பார்த்தாலே இந்த வரலாறு  நமக்கு எளிதாகப் புரியும். அந்தக் காலத்தில் கலை இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களில் சிலர், ஏற்கனவே பொருளாதார வசதிக்காய் வந்தவர்களையும், அகதிகளாய் உயிர் தப்பி வந்தவர்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்தல் நியாயமில்லையென்று நினைக்கத் தொடங்கினர். எனவே பின்னமைப்பியல்/பின் நவீனத்துவம் கூறும் வித்தியாசங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினர். இந்த வித்தியாசங்கள் யாழில் இருந்து இலக்கியம் பேசுபவர்க்கும், மலையகத்தில் இருந்து இலக்கியம் பேசுபவர்க்கும் இருக்கும் வித்தியாசத்தைப் போன்றது அல்லது வடபகுதியில் இருந்து புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்களுக்கும், கிழக்கில் அந்தளவுக்குப் பாதிக்கப்படாத முஸ்லிம்களுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தைப் போன்றது என  ஒரு எளிய உதாரணத்துக்குச் சொல்லலாம்.

இதன் நிமித்தமே பொருளாதார வசதி காரணமாக வெளிநாடுகளுக்கு வந்தவர்களைப் புலம்பெயர்ந்தவர்கள் என்றும், ஊரில் இருக்க முடியாத நிலையில் உயிர்தப்பி வந்தவர்களை புகலிடத்தவர் என்ற வகைமைக்குள்ளும் பலர் வைத்துப் பார்க்கத் தொடங்கினர்.

முன்னவர்கள் தம் படிப்பின் நிமித்தம் ஒரளவு வசதியாகத் தம் வாழ்வை அமைத்துக் கொள்ள, 80களின் பின் யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்கள் ஒரு விளிம்புநிலை வாழ்வுக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இந்த புலம்பெயர்வுக்குள்ளும் இன்னும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இலங்கையில் ஆங்கிலத்தை ஒரளவு கற்று இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்க்கும், ஜேர்மன், பிரான்ஸ், சுவிஸ் மற்றும் ஸ்கண்டிநேவியன் நாடுகளுக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கும் இடையிலான வாழ்வியல் முறையே முற்றும் வேறுவிதமானமை. புதிய நாட்டில் புதிய காலநிலையில் புதிய ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதென்பது எவ்வளவு கடினமென்பது சொல்லாமலே நமக்குப் புரியக் கூடியவை.

2.

ப்போது புலம்பெயர்ந்த இலக்கியத்திற்குள் வருவோம். இவர்கள் 83 கலவரத்துக்கு முன் புலம்பெயர்ந்தவர்கள் என்றாலும் நாம் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களையும், 'காலம்' செல்வத்தின் எழுத்துக்களையும் ஒன்றாக மதிப்பிட முடியாது என்பதை அறிவோம். செல்வத்தின் எழுத்துக்களை வாசிக்கும்போது அவர் தொடர்ச்சியான தனது இலங்கை வாழ்வில் அவரும், அவரது பெற்றோரும் எப்படி ஒடுக்கப்பட்டிருக்கின்றனர் என்று நேரடியாகப் பதிவு செய்து வந்திருக்கின்றார். அப்படியெனில் செல்வத்துக்கு போர் பற்றிய அனுபவங்கள் அவ்வளவு இல்லையென்று இந்த ஒடுக்கப்பட்ட விடயங்களை நாம் ஒதுக்கிவிட்டுப் போகமுடியுமா? இல்லைத்தானே. அவ்வாறே புலம்பெயர் எழுத்துக்களிலும் வித்தியாசங்கள் இருக்கின்றன. நாம் பாரதி புத்தகலாயத்தை அடையாளப்படுத்தும் சிராஜ் இப்போது கூறும் 'யாழ் வெள்ளாள மேட்டிமை' வாதத்திற்குள் செல்வத்தின் ஒடுக்கபட்ட எழுத்துக்களை அடக்கி, கடந்து போனால் அவ்வளவு அபத்தமாக இருக்குமல்லவா? இதையேன் குறிப்பிடுகின்றேன் என்றால் இவ்வாறான விடயங்களை எளிதில் பொதுமைப்படுத்தக் கூடாது என்பதற்காகவே.

இப்போது புகலிட இலக்கியத்துக்கு வருவோம். 83 இற்கு பின் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்கள், அனைவரையும் சாதி, மத, பிரதேச பேதமின்றி வெளிநாடுகளுக்கு துரத்தி வைத்தது. அவர்களின் அநேகர் உணவகங்களில் கோப்பை கழுவியும், சமையலறைகளில் வெந்தும், தொழிற்சாலைகளில் கடைநிலை ஊழியர்களாக தேய்ந்தும், இவற்றிற்கிடையில் இருந்து கலை இலக்கியங்களை வளர்க்கத் தொடங்கினர். அந்த புகலிட இலக்கியவாதிகளில் அனைத்துச் சாதியினரும் இருந்தனர். விளிம்புநிலை வாழ்க்கையை வாழ்ந்தனர். பின்னரான காலத்தில் குடும்பம், பிள்ளைகள் என்று பலர் தமது சொந்தசாதி/மதப் பெருமிதங்களில் திளைத்தாலும், புகலிட இலக்கியம் என்பது விளிம்புகளின் உரையாடலாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கின்றது.

3.

ந்த புலம்பெயர் X புகலிட இலக்கிய வேறுபாடுகள் 2000களின் பின் மெல்ல மெல்லக் கரைந்து போயிருந்தது. ஏனெனில் பொருளாதாரவசதி காரணமாக புலம்பெயர்ந்தவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 1990/2000 பின்னரான காலம் ஈழத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஈழத்தமிழரையும் அகதிகளாக்கியுமிருந்தது. போரால் பாதிக்கப்படாத தமிழர்கள் இல்லை என்னுமளவுக்கு எல்லோரையும் யுத்தம் அலைய வைத்தது. ஆக 2000 பிறகான காலத்தில் அவரவர் விரும்பியமாதிரி புலம்பெயர், புகலிட இலக்கியம் என்று இதன் வரலாற்றை அவ்வளவு முக்கியப்படுத்தாது தம் விருப்பின்போக்கில் பாவிக்கத் தொடங்கினர்.

80களில் நடந்த இன்னொரு பெரும் புலம்பெயர்வு இந்தியாவை நோக்கியது. அதற்கு முன்னர் சாஸ்திரி-சிறிமாவோ ஒப்பந்தம் நம்மோடு ஒன்றாக நூற்றாண்டுகளாக வாழ்ந்த மலையகத்தமிழர்களை நாடற்றவர்களாகியது. அவர்களின் ஒருபகுதியை இந்தியாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தது. அந்தத் துயருக்கு நமது சில ஈழத்தமிழ்த்தலைவர்களும் காரணமாக இருந்தார்கள் என்பதை வரலாறு என்றும் மன்னிக்கவும் போவதில்லை.

அதற்குப் பின் 80களில் இலங்கையின் எல்லாப் பகுதியிலிருந்தும் பலரை இந்தியாவுக்கு அகதிகளாக யுத்தம் அனுப்பிவைத்தது. அங்கிருந்து வசதி வாய்ப்புக்களைப் பயன்படுத்தி சிலர் மேற்குலகிற்குத் தப்பியோட, பெரும்பான்மையினர் அகதி முகாமிற்குள்ளும் எவ்வித அடிப்படை வசதியோ, தனி மனித சுதந்திரமோ கிடைக்காமலே வாழவேண்டி வந்தது. இதன் உச்சக் கொடுநிலை ராஜீவ்காந்தியின் மரணத்தோடு வந்து சேர்ந்தது. இன்று எந்த மேற்கு நாடாயினும் நாம் அங்கே அகதியாகப் போனால் ஆகக்குறைந்தது அடிப்படை மனித வசதிகளுடன் வாழமுடியும். ஆனால் கணத்துக்கு கணம், தொப்பூழ்கொடி என்று உருகுகின்ற தமிழக மக்களாலோ, அரசாலோ இவர்கள் சக இந்தியர்களாக வாழ்வதற்கான எந்த வசதியும் ராஜீவ்காந்தியின் மரணம் முடிந்து 30 ஆண்டுகள் கடந்தபின்னும் செய்யமுடியாது இருப்பதென்பதுதான் எவ்வளவு துயரமானது.

இத்தனைக்கும் திபெத்திய மக்களையும், பங்களாதேச மக்களையும் குறிப்பிட்ட ஆண்டுகள் இம்மண்ணில் வாழ்ந்தபின் தம்மைப் போன்ற சக இந்தியர்களாக மாற வாய்ப்புக்கள் கொடுக்கும் இந்திய ஒன்றிய அரசு, அகதிகளுக்கான அடிப்படை உரிமையைக் கூட ஈழத்தமிழ் அகதிகளுக்கு இன்னமும் கொடுக்கத் தயாரில்லை. இப்போதும்  இந்திய உளவுத்துறையின் விசாரிப்புக்களும், கண்காணிப்புக்களும் இருக்கும் அகதி முகாமில் இருந்து எவர் நிம்மதியாக எழுத முடியும்? முகாமை விட்டு வெளியில் வந்தால் கூட உரிய எந்த ஆவணங்களுமின்றி 'தலைமறைவு' அகதிகளாகவே அவர்கள் வாழவும் வேண்டியிருக்கின்றது.

இதுகுறித்து யார் வெட்கப்படவேண்டும்? யார் அவமானப்பட வேண்டும்? நமது நிலத்தில் நமது சகோதரர்களை, நம்மைப் போன்று சரிநிகராக வாழவேண்டிய ஈழத்தமிழர்களை இப்படி நாம் நடத்தவேண்டி இருக்கிறதே என்று தமிழகத்தவர்கள் அல்லவா தலைகுனிய வேண்டும். கனடாவில் ஆதிக்குடிகளை எப்படி வெள்ளையினத்தவரும், பிரெஞ்சுக்காரர்களும் நடத்தினர் என்று வெட்கப்படவேண்டியது நம்மைப் போன்ற கனடிய குடிமக்களே தவிர அந்தப் பூர்வீகக் குடிகள் அல்ல.

ஆனால் இப்போது என்ன நடக்கிறது. தமிழகத்தில் இருக்கும் சிலர் இதுகுறித்து எந்த அவமானமும் வெட்கமும் அடையாது புலம்பெயர்ந்த நமக்கு பாடங் கற்பிக்க 'புதிய தீர்க்கதரிசிகளாக' வருகின்றார்கள். புலம்பெயர் இலக்கியமா, அகதி இலக்கியமா என்று மயிர்பிளக்கும் விவாதங்களை நடத்தி நம்மையின்னும் பிளவுபடுத்திக் கொண்டிருக்கின்றார்கள். போரின் எந்தத் துளியும் தீண்டிப் பார்த்திராத, அதன் மனவடுக்களை அறியாத நீங்கள் எங்களுக்கு அறிவுரை சொல்ல வருவது எவ்வளவு கேவலமானது என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா?

ஆதிக்கசாதிக்காரனாக இருந்துகொண்டு அந்த privilegeகள் அறியாது , ஒரு தலித்துக்குப் பாடஞ் சொல்ல வந்தால், நீங்கள் பேசும் மானிடத்தின் எந்த மேன்மையையும் பேசத் தகுதியற்றவரே. அதுபோலவே இதுவும் உங்களின் privileges உங்களுக்குத் தரப்பட்ட உரிமைகளல்ல.

இத்தனை காலமும் ஒடுக்கப்பட்ட அகதி முகாம் குரல்கள் (யார் ஒடுக்கியது? நீங்களேதான்) இப்போது பொதுவெளிக்கு வரத் தொடங்கியிருக்கிறது. முகாங்களிலிருந்து வரும் குரல்களை தொடக்க கால பத்தினாதனின் எடிட் செய்யப்படாத பனுவல்களிலிருந்து, அண்மைக்கால விஜிதரனின் எழுத்துக்கள் வரை பெரும்பாலானவற்றை என்னைப் போன்றவர்கள் கவனித்துக்கொண்டே வருகின்றோம். அவை குறித்து அவ்வப்போது எழுதியும் இருக்கின்றோம்.

இனியான காலத்தில் அதிகம் ஒலிக்கவேண்டிய இந்த முகாம் வாழ்க்கைக் குரல்களை, யாரேனும் புலம்பெயர்ந்தவரோ, புகலிடத்தவரோ வரவேற்காதவிடத்து அவர்களையும் நாம் கேள்வி கேட்போம், தள்ளிவைப்போம். ஒருகாலத்தில் சிறுபான்மையினர் என்றும், ஒடுக்கப்பட்டோர் என்றும் பஞ்சமர் என்றும் அழைக்கப்பட்டுக் கேவலப்பட்டவர்கள் தமது குரல்களை உயர்த்தியபோது எல்லா ஆதிக்கசாதிகளும் பம்மிப் பதுங்கின அல்லவா. அவ்வாறே இந்த அகதிமுகாமின் குரல்களும் ஓங்கி ஒலிக்கட்டும். குரலற்றவர்களின் குரலான அவர்களுக்குத் துணையாக இருப்பதை விட நம்மைப் போன்ற புலம்பெயர்ந்தவர்களுக்கு வேறு எது நிம்மதியைத் தரப்போகின்றது. ஆனால் வெளியில் இருந்து கொண்டு எங்களுக்குப் பாடங்கற்பித்தால், முதலில் உங்கள் வீட்டைச் சுத்தப்படுத்தி, அகதி என்று சொல்ல இன்றும் அகதிகளாக இந்தியாவில் இருப்பவர்க்கும், என்னைப் போன்று போரின் நிமித்தம் அலைந்தவர்க்கும் மட்டுமே உரிமை இருக்கின்றதே தவிர, தமிழ்நாட்டில் சொகுசாக இருந்துகொண்டு, உங்கள் அரசியல் சுயநலங்களுக்காய் நம்மைப் பாவித்துக்கொண்டிருக்கும் உங்கள் எவருக்கும் நம்மை அகதி என்று அழைக்க உரிமையில்லை என்றும் தெளிவாகச் சொல்லி வைப்போம்.

நாளை இந்தியாவின் அகதி முகாங்களில் இருந்து வெளிவரும் குரல்கள், தம்மை அகதிக் குரல்களாக அடையாளப்படுத்த விரும்பினால் என்ன, இல்லை புகலிடக் குரலாக அடையாளப்படுத்த விரும்பினால் என்ன, அவர்களுக்கான தோழமையுணர்வைக் கொடுக்க நாம் என்றும் துணையிருப்போம். அதில் எந்த மறுபேச்சுக்கும் இடமில்லை.

*********************

(Jan 21, 2022)

கார்காலக் குறிப்புகள்

Monday, March 20, 2023

1.

கரிச்சான் குஞ்சின் 'பசித்த மானுடம்' எனக்குப் பிடித்த ஒரு நாவல். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' கணியன் பூங்குன்றன் போல, 'புயலிலே ஒரு தோணி' சிங்காரம் போல, 'பசித்த மானுடம்' என்கின்ற புதினத்தோடு கரிச்சான் குஞ்சு, அவரின் வாழ்நாளைத் தாண்டி  நிலைத்திருக்கக்கூடியவர் என்பது என் வாசிப்பின் துணிபு. அப்படி ஆதவனை காலங்களில்  ஏந்திச் செல்ல 'காகித மலர்களும்', 'என் பெயர் ராமசேஷனும்' நமக்குப் போதும். 


கரிச்சான் குஞ்சு 'பசித்த மானுடத்தை'த்  தவிர்த்து வேறு சில சிறுகதைகளை எழுதியிருப்பாரென்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அவரின் முழுத்தொகுப்பை வாசிக்கும்போது, அவர் கிட்டத்தட்ட 99 கதைகள் எழுதியிருக்கின்றார் என்பதைப் பார்க்க மலைப்பாக இருக்கின்றது. இன்னமும் தொகுக்கப்படாத கரிச்சான் குஞ்சின் கதைகள் எங்கேயும் இருக்கக்கூடுமென்று தொகுப்பாளர்கள் கூறுவதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.


எனக்கு எந்தப் படைப்பாளியினதும் முழுத்தொகுப்புக்களை வாசிப்பதில் தயக்கமிருக்கும். தனித்தொகுப்பாக ஒருவரின் படைப்புக்களை வாசிப்பதில் இருக்கும் ஆர்வம் முழுத்தொகுப்பாக வாசிப்பதில் இருப்பதில்லை. அதை பத்து வருடங்களுக்கு முன்னர் வந்த 'பூமணியின் கதைகள்', மு.தளையசிங்கம் படைப்புகள்' 'சு.வில்வரத்தினம் கவிதைகள்' போன்றவற்றிலே கண்டடைந்துவிட்டதால் முழுத்தொகுப்பின் பக்கம் அவ்வளவாகப் போவதில்லை. ஒரு கதையில் கூட அலுப்படைய வைக்காது எழுதக்கூடியவர் என்று தயக்கம் எதுவுமின்றி சொல்லக்கூடிய என் விருப்புக்குரிய அம்பையின் முழுத்தொகுப்பை வாங்கி வாசிப்பதைத் தவிர்த்துக் கொண்டு இருப்பதற்கும், முழுத்தொகுப்புக்களின் மீது எனக்கு இருக்கும் தனிப்பட்ட இந்த ஒவ்வாமை மட்டுந்தான் காரணம்.


இப்போதும் கரிச்சான் குஞ்சின் கதைகளை முழுதாக வாசித்துவிடவில்லைத்தான். 'பசித்த மானுடம்' போல காலம் தாண்டிய சிறுகதைகளை கரிச்சான் குஞ்சு எழுதியிருக்கின்றார் என்று அறுதியாகச் சொல்லமுடியாவிட்டாலும் அவரின் 'அன்றிரவே' (1983) தொகுப்பில் வந்த கதைகள் முக்கியமானவை. 'அன்றிரவே' என்று 1955 இல் எழுதப்பட்ட கதையே அன்றைய காலத்தில் வித்தியாசமானது என்று சொல்லமுடியும். அந்தக் கதையின் தொடக்கமே 'வெங்கட்ராம் இந்தக் கதையை எழுதிவிட்டான்' என்று சொல்லப்பட்டே கதை சொல்லப்படுகின்றது. 


நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்டவர் கரிச்சான் குஞ்சு என மாறியது கு.ப..ராவின் மீதிருந்த பற்றினால் என்பது நாமறிந்ததே. கு.ப.ரா தொடக்க காலத்தில் கரிச்சான் என்ற பெயரில் எழுதி வந்தவர். கு.ப.ராவின் அணைப்பில் இருந்து எழுந்தவர்களென கரிச்சான் குஞ்சு, எம்.வெங்கட்ராம், தி.ஜானகிராமன் என்பவரைச் சொல்லலாம். கரிச்சான் குஞ்சை, கு.ப.ராவிடம் அறிமுகம் செய்தது தி.ஜானகிராமன். கு.ப.ரா கொடுத்த உற்சாகத்தில் எழுதத்தொடங்கியவர் கரிச்சான் குஞ்சு. 


20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அதுவரை மரபுகளுடனும், சாதி/மத வேர்களுடனும் இருந்த ஆதிக்கசாதியினர், தம்மைக் கேள்விக்குட்படுத்த வேண்டிய தேவை விரும்பியோ/விரும்பாமலோ ஏற்படுகின்றது. அந்த விரிசலில் மேலெழுந்த வந்த ஒருவராக கரிச்சான் குஞ்சின் எழுத்துக்களைப் பார்க்கின்றோம். அவரின் இளமைக் காலத்தில் மரபை/மதத்தை/சுயசாதியை கேள்விக்குட்படுத்தும்/சுயஎள்ளல் செய்யும் கரிச்சான் குஞ்சு பிறகான காலத்தில் சற்று மரபின் பக்கம்  -தனக்குள்ளே ஆழ்கின்றபோது- அதிகம் சாய்வதையும் காண்கின்றோம்.  


இன்றைய காலத்திலேயே வெளியே 'எல்லா விடயங்களிலிருந்தும் விட்டு விடுதலையாகிவிட்டோம்' என்று பிரகடனம் செய்தபடி சுயசாதிகளில் திருமணம் செய்தபடியும், சீதனம் வாங்கிக்கொண்டு, சாதியெதிர்ப்புப் போராளிகளாகவும், பெண்ணுரிமை பேசுபவர்களாகவும் பலர் இருக்கும்போது அந்தக்காலத்தைய கரிச்சான் குஞ்சின் இந்தச் சாய்வு அவ்வளவு பெரிய விடயமில்லை. லெளதீகத்தில் தன் சுயசாதி சார்ந்த அடையாளங்களைக் காவியபடி  கரிச்சான் குஞ்சு இருந்தாலும், இடதுசாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் எல்லாம் பங்குபெற்றியிருக்கின்றார் என்பது பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த வித்தியாசமான கலவையே கரிச்சான் குஞ்சின் கதைகளிலும் வெளிப்படுகின்றது.


2.


கரிச்சான் குஞ்சின் சிறுகதைத் தொகுப்பொன்றுக்கு முன்னுரை எழுதிய ஆதவன் கரிச்சான் குஞ்சின் கதைகள் பற்றிய ஒரு முக்கிய அவதானத்தை முன்வைக்கின்றார். இன்று யதார்த்தவாதக் கதைகள் என்றால் என்ன, இயல்புவாதக் கதைகள் என்றால் என்ன உரையாடல்கள் நடக்கும்போது, ஆதவன் அன்றே கரிச்சான் குஞ்சின் கதைகள் இயல்புவாதக் கதைகள் என்று அடையாளப்படுத்துகின்றார். அதற்கு ஓர் உதாரணமாக 'பித்தப்பசி' என்கின்ற கதையை முன்வைக்கின்றார். ராஜூ என்கின்ற ஆணுக்கு பத்மா என்ற மனைவியும் சில குழந்தைகளும் இருக்கின்றனர். பத்மா தற்சமயம் ஒரு குழந்தையும் பெற்றிருக்கின்றார். பிள்ளைகளையும், பத்மாவையும் கவனித்துக்கொண்டிருந்த ராஜூவின் தாயார் ஒரு மரண நிகழ்வுக்காக அவரின் ஊருக்கு இரண்டு மூன்று நாட்கள் செல்ல வேண்டியிருக்கின்றது. ராஜூ நம்மைப் போன்ற  வீட்டு வேலை எதிலும் பங்காற்றாத ஆண். ராஜூவின் தாயார், உன் மனைவியைக் கஷ்டப்படுத்தாது, உன் பிள்ளைகளைப் பார்த்து அவளுக்கு உதவியாக இரு' என்று சொல்லிவிட்டுப் போகின்றார். 


பத்மாவிற்கு உடம்பு சரியில்லை, அத்தோடு மூன்று பிள்ளைகளையும் பார்க்கவும் வேண்டும். ராஜூ ஒவ்வொருமுறையும் ஏதாவது உதவி வேண்டுமா வேண்டுமா என்று கேள்வி கேட்டுவிட்டு வழமையாக எப்படி இருப்பானோ அப்படியே இருக்கின்றான். தனது உணவைக் கூட, எடுத்துப் போடாது பத்மாவே அவனுக்குப் பரிமாற வேண்டியிருக்கின்றது. உணவுண்டபின் அடுத்த விருப்பமான தேகவேட்கை ராஜூவிற்குள் பொங்குகின்றது. பத்மா உண்மையிலே அலுப்பாக இருப்பதால் கொஞ்சம் மறுக்கின்றாள். ராஜூவிற்குக் கோபம் வருகின்றது. வீட்டை விட்டு வெளியேறுகின்றான். அப்போது கூட வழமை போல எல்லாம் மறந்து தன்னை வீட்டுக்குள் பத்மா அழைப்பாள் என்று எதிர்பார்க்கின்றான். ஆனால் அது நடக்கவில்லை. பிறகு வெளியே அலைந்து திரிந்து வரும் ராஜூவிடம், பத்மா தன் அலுப்பின் காரணமோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தாலோ மன்னிப்புக் கேட்பதில்லை. அப்படியே தூங்கிவிடுகின்றாள். அத்தோடு கதை முடிகின்றது. 


இங்கே கரிச்சான்குஞ்சு என்கின்ற படைப்பாளி  எந்த உரிமையும் எடுத்துக் கதையில் குறுக்கிடுவதில்லை. ஆதவன் குறிப்பிடுதைப் போல இங்கே ராஜூ ஒரு வில்லனாகச் சித்தரிக்கப்படுவதில்லை. பத்மா கூட ஒரு சொற்பொழிவு ஆற்றுவதில்லை. 'ஆசிரியர் ஒதுக்கமாகப் புற நிகழ்ச்சிகளை மட்டும் விவரித்து அழுத்தாமனதொரு சூழலை உருவாக்கும் இந்த நாச்சுரஸிஸ பாணியை' கரிச்சான் குஞ்சு கையாள்கின்றார் என்று ஆதவன் குறிப்பிடுகின்றார்.


முழுத்தொகுப்புக்கள் ஒருவகையில் படைப்பாளிகளின் முழுப்பரிணாமத்தையும் நம் முன்னே வைப்பதுபோல, அவர்களின் பலவீனமான படைப்பின் பக்கங்களையும்  எளிதாகக் காட்டிவிடக்கூடியவை. அதுவும் ஒரு படைப்பாளி காலமானபின், அவர் வாழுங்காலத்தில் தன் தொகுப்பில் சேர்க்க விரும்பாத கதைகளை எல்லாம் ஒரு தேர்ந்த தொகுப்பாளர் சேர்த்துவிடும்போது, நாம் நல்லதில்லாத கதைகளையும் வாசிக்க நேர்ந்துவிடுகின்றது. அந்தப் பலவீனங்களையும் தாண்டி ஒரு படைப்பளி விகசித்து எழுவதென்பதுதான் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இருக்கக்கூடிய பெரும் சவால். 


இதை வேறுவிதத்தில் 'ஒரு எழுத்தாளனின் எல்லாக் கதைகளையும் எல்லா வாசகர்களும் ரசிக்க வேண்டுமென்று கட்டாயமில்லை. அத்தகைய வீரவழிபாட்டை, நுட்பமான ஒரு இலக்கியாசிரியன் ரசிப்பவனுமில்லை' என்று ஆதவன் எழுதியிருப்பது இன்றைய காலத்துக்குப் பொருத்தமானதுதான். காதலிகளை அரவணைத்துக் கொண்டிருந்தால் அது தெய்வீக அனுபவம், நம்மைப் பற்றி எப்போதும் பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்று ஒருவர் தன் படைப்புக்களை ஆரத்தழுவிக் கொண்டிருந்தால், இலக்கியம் மட்டுமில்லை  அவரவர்க்கிருக்கும்  துணைகளும் பாவம் என்று நாம் எண்ணிக்கொள்ள வேண்டியதுதான். 


**********************

(Dec 27, 2022)