கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இது ஒரு அழகிய வலைப்பதியும் காலம்

Wednesday, August 31, 2005

ஞாயிற்றுக்கிழமை எடுத்த படங்கள். படங்களும் பாடல்களும் கீழே பெயர் குறிப்பிடப்படும் நண்பர்களுக்கு சமர்ப்பணம் :-).

sunflo
'பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா'

(கார்த்திக்கிற்கு)
keerthiafter
'வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!

(கீர்த்திகனுக்கு)

ladies
'ஒரு கானம் வருகையில்
உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி
கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி
தேடும் மனசு தொலைகிறதே

கண் இல்லையென்றாலும்
நிறம் பார்க்க முடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை
நீ பார்க்க முடியாது
குயிலிசை போதுமே
அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே
அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்
கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால்
கற்பனை வளர்ந்துவிடும்
ஆடல் போலத் தேடல் கூட
ஒரு சுகமே'

(சன்னாசி எனப்படும் முன்னை நாள் மாண்ட்ரீஸருக்கு)

subway
'அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும் ? '

(தங்கமணிக்கு)


raining
'தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்க இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா

பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன பிரிந்து
இரவு தோறும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
பாவம் உண்டு பாபம் இல்லை
வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை. '

(பெயரிலிக்கு)

flower2
'தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய்.
தோழியே, இரண்டுமாய் என்றுமே நானிருப்பேன்.
தோளிலே நீயுமே சாயும்போது
எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்.

வெந்நீரில் நீர் குளிப்பேன்,
விறகாகி தீ குளிப்பேன்,
உதிரத்தில் உன்னை கலப்பேன்.
விழிமூடும்போது முன்னே பிரியாமல் நான் இருப்பேன்,
கனவுக்குள் காவல் இருப்பேன்.
நான் என்றால் நானேயில்லை,
நீதானே நானாய் ஆவேன்.
நீ அழுதால் நான் துடிப்பேன்.

(பாலாஜி-பாரிக்கு)
நன்றி: சந்திரவதனாவின் 'சினிமாப்பாடல்கள்'

எனது அறைக்குள் இருந்து.......

Saturday, August 20, 2005

pic2
சனிக்கிழமை மாலையொன்றில் கணணி மேசையில் விரியும் இன்னொரு உலகம்

Friday, August 19, 2005



வெயில்
அகங்காரம் பிடித்த புருஷனாய்
உலர்த்திக்கொண்டிருந்தாலும்
காற்று
புன்னகையுடன் கடந்துபோகும் பெண்ணாய்
வீசிக்கொண்டிருக்கிறது

இசை அதிர்கிறது
முன்னேயும் பின்னேயும்
நகரும் பின்தொடரும் கார்களுக்கு
நமது இருப்பையும் வயதையும்
அடையாளம் காட்டியபடி

கிலோமீற்றர்கள் நூறினைத் தாண்டி
கூழ் காய்ச்சிக் குதூகலிப்பதற்காய்
பயணித்துக்கொண்டிருக்கின்றோம்
நாகரீகப்பூச்சு இன்னமும் படியா
ஒரு கிராமத்தை நோக்கி

Barbeque மெஷினில்
புரட்டப்படும்
கோழியும் மாடும்;
கொதிக்கும் கூழும்
பரப்பும் வாசத்தில்
நாவில் எழும் தாகத்தை
தீர்த்துக்கொள்கின்றனர் நண்பர்கள்
பியர்களை உடைத்து

நாற்பத்தைந்து தொண்ணூறு பாகைகளில்
கணிதம் கற்கும் நாங்களும்
செங்குத்தான புள்ளியில் வதனத்தை நிறுத்தி
விழிகளால் கோணங்கள் அமைத்து பெண்களும்
தவத்தினைப் போல
கவனமாகச் செய்கின்றோம்
Chopping

மிக இயல்பாய்
உரையாடத்தொடங்கும்
இவர்களில் யாரேனும் ஒருவர்
காதலியாகவோ தோழியாகவோ
நமக்கு வாய்க்கக்கூடும்
நாளை

கிளித்தட்டு விளையாட்டு
களைகட்டிய தருணத்தில்
'சமூகத்தில் மதிப்பு வாய்ந்த' மனிதர்
சற்றுக்குழப்படி செய்த நண்பர்களில்
ஒருவனை
'பற நாயே' என விளித்து
தூஷித்திருக்கக்கூடாது
சாதியை இழுத்து.

சட்டையைப் பிடித்து
மணலில் புரட்டி
சில அன்பளிப்புக்கள் அவருக்கு வழங்காதிருந்தால்
மனிதர்கள் அல்ல
நாங்கள்

சம்பவம் கண்டு
'அப்பா' என்று அலறியபடி ஓடிவந்தவள்
இவ்வளவு நேரமும்
கலகலப்பாய் பேசியபடி
கடற்கரைக்காற்றாய்
மனதை நிறைத்துக்கொண்டிருந்தவளாய்
அமைந்ததில் எஞ்சிநின்றது
வாழ்வின் அவலச்சுவை

விவாதம் முடிந்து
நிதானம் வந்தபோது
எவரும் தீண்டுவாரின்றி
ஆறியிருந்தது கூழ்
விலகிப்போயிருந்தனர் பெண்கள்.

Aug 19/05

மூன்று வித்தியாசமான ஆளுமைகள் (மீள்பதிவு)



சில தினங்களுக்கு முன் இணையத்தில் செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு தமிழ்ப்பெண் Erotica வகை எழுத்தில் மிகத் தீவிரமாய் இயங்கிக்கொண்டிருக்கின்றார் என்ற செய்தியைப் பார்த்தபோது ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. Mary Anne Mohonraj என்ற இந்த தமிழ்ப்பெண்மணி, University of Utah வில் ஆங்கில இலக்கியத்தில் தனது Ph.Dயை முடித்தவர். இவர் யாழ்ப்பாணத்திலும், நீர்கொழும்பிலும் வளர்ந்த தமிழ்ப்பெற்றோருக்கு மகளாகப் பிறந்தவர். இன்று முப்பத்து நான்கு வயதாகும் இவர், தனது இரண்டாவது வயதிலேயே அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர். தான் தனது குழந்தைப்பருவத்தில் நன்கு தமிழ் பேசக்கூடியவர் என்றும், இப்போது முன்பு போல் தன்னால் பேசமுடியாது இருக்கின்றது என்றும் கூறுகின்றார். அண்மைக்காலத்தில் தமிழைப்படிக்க ஆரம்பித்ததாகவும், ஆனால் அந்தமொழியைக் கற்பது அவ்வளவு இலகுவில்லை என்றும், ஆனால் தனது பெற்றோர் தமிழில் பேசினால் தன்னால் விளங்கிக்கொள்ளமுடியும் என்றும் தனது பயோ-டேட்டாவில் எழுதுகின்றார். எனினும் தனது அடையாளமும் கலாச்சார வேரும் தமிழ் என்பதை மறைக்காமல் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். மேலைத்தேயத்தில் வளரும் ஒரு கீழைத்தேயப் பெண் அனுபவிக்கும் அனைத்துத் தடைகளையும் தானும் தாண்டி வந்ததாகக்கூறுகின்றார். தான் வாழ்ந்த/வளர்ந்த சூழலில் தனக்கு வெள்ளையின நிற ஆண்களுடந்தான் dating செய்யும் சந்தர்ப்பம் அதிகம் வாய்த்ததாகக் குறிப்பிடுகின்றார். இதனால் அநேகமுறைகள் அம்மாவுடன் சமையலறையில் கறிகள் சமைக்கும்பொழுது சண்டைகள் நடைபெற்றதாகவும், இதன் நீட்சியில் தனது பதினாறு வயதில் தனக்கு மாப்பிள்ளை பார்க்க இந்தியாவுக்கு தனது புகைப்படம் அனுப்பப்பட்டதாகவும், தொடர்ந்து 'குழப்படி' செய்தால் இலங்கைக்கு அனுப்பி கொன்வெண்டில் படிப்பிக்கப்போவதாகவும் தனது பெற்றோரால் பயமுறுத்தப்பட்டதாகவும் ஒரு நேர்காணலில் கூறுகின்றார்.



இவர் தான் erotic stories எழுத வந்தது ஒரு வித விபத்து என்கின்றார். ஒருமுறை இணையத்தில் மிக மோசமானமுறையில் எழுதப்பட்ட Erotic storeyஐ வாசித்தபோது, தன்னால் இதைவிட திறமையாக எழுதமுடியும் என்றுதான் தான் erotic stories எழுதத்தொடங்கினேன் என்று குறிப்பிடும் மேரி, செக்ஸ் குறித்த மெளனங்களை தான் உடைக்க உடைக்க, அது குறித்து மேலும் எழுதும் ஆர்வம் அதிகம் குவிந்தது என்கின்றார். 1939 கொழும்பில் இருந்தால் என்ன, 1999ல் கலிபோர்ணியாவில் இருந்தால் என்ன, செக்ஸ் குறித்த இரகசியங்களும், மெளனங்களும் இன்னவும் பெரும்பாலும் உடைக்கப்படாத பனிப்பாளங்களாகவே இருக்கின்றது என்கின்றார். ஆரம்பகாலங்களில் தனது கதை மாந்தர்கள் வெள்ளையின மற்றும் போலீஷ் இன மக்களாக(bec she lived in those neighbourhoods) இருந்ததாகவும், பிறகுதான் தனது அடையாளத்துடன் (Brown People) தொடர்புடைய கதைகளை எழுதத்தொடங்கியதாகக் குறிப்பிடுகின்றார். தமிழ்க்கலாச்சாரத்தில் பெண்களுக்கான பாலியல் வெளிகள் அடைக்கப்பட்டு சிக்கல் நிறைந்ததாகவும், ஆனால் திருமணம் செய்தவுடன் மட்டும் அனைத்துப் பாலியல் உறவு சேர்ந்த கதைகள் aunties, grandmas போன்றவர்களால் வெளிப்படையாக பெண்களுக்கிடையே பகிர்ந்துகொள்ளப்படுவதாகக் கூறும் மேரி தனக்கு அந்தச் சந்தர்ப்பம் இன்னும் வாய்க்கவில்லை என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிடுகின்றார். அதேசமயம் தனக்கு கெவின் என்ற பேராசிரியருடன் வெளிப்படையான உறவு (open relationship) இருந்ததைத் தெளிவுபடுத்துகின்றார். மேரி இன்று பல புத்தகங்களை எழுதியும் தொகுத்தும் இருக்கின்றார். சென்ற மாதம் அவரது புத்தகமான, Bodies in Motion வெளியிடப்பட்டிருக்கின்றது. இதன் முக்கிய கதை மாந்தர்கள் பலர் தமிழர்களாய்/தமிழ் அடையாளத்துடன் இருக்கின்றார்கள்.அமெரிக்காவின் பல்வேறு பிரதேசங்களில் தனது புதுப்புத்தகத்தின் பக்கங்களை வாசித்துக்காட்டுவதும், தனது புத்தகங்களை வாசிப்பவர்களைச் சந்திப்பதும் என இன்றையபொழுதில் நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றார். பாலியல் சுதந்திரம் ஒடுக்கப்பட்ட தமிழ்ச்சமூகத்திலிருந்து பல்வேறு தடைகள்/தளைகளைத்தாண்டி தனது அடையாளங்களுடன் தன்னை நேரடியாக வெளிப்படுத்திய Mary Anne Mahonraj நிச்சயம் கவனிக்கப்படவேண்டியவர்.



ராப் பாடகரான 50 CENT, தனது சுயசரிதைத் தன்மைகொண்ட நூலான, 'From Pieces to Weight' என்ற புத்தகத்தை நேற்று வெளியிட்டிருக்கின்றார். ஒன்பது முறை சுடப்பட்டும், தான் தப்பியிருக்கின்றேன், ஆகவே நான் உயிர்வாழ்வதற்கான காரணம் என்று ஏதோ ஒன்று இருக்கவேண்டும் எனத் தனது புத்தகத்தின் ஆரம்பத்தில் குறிப்பிடுகின்றார். 2003ல் தனது முதலாவது இசைத்தட்டான, 'Get Rich or Die Tryin' மூலம் உலகிற்கு அறிமுகமான 50 Cent இன்று ராப் பாடகர்களில் தவிர்க்கமுடியாத ஒருவராக ஆகிவிட்டார். இவர் போதைமருந்து விற்று வாழ்ந்த தாயிற்கு மகனாகப்பிறந்தவர். தனது எட்டாவது வயதிலேயே தனது தாயைத் துப்பாக்கிக் குண்டுக்குப் பலிகொடுத்தவர். அவரது பதினொராவது வயதில் தெருக்களில் போதைமருந்து விற்பவராக ஆகிவிடுகின்றார். பதினாறாவது வயதில் துப்பாக்கி வாங்கி, சில மாதங்களில் தன்னை ஒரு குழுவாகத் தாக்கிய கும்பலில் ஒருவரின் காலுக்கும் சுட்டும் விடுகின்றார். இரண்டு வருடங்களில் போதைமருந்துச் சீர்திருத்தப்பள்ளியில் இருந்தாலும், சிறையில் இருந்து வெளியே வந்த முதல்நாளே தான் போதைமருந்தை மீண்டும் விற்கத்தொடங்கியதாகக் கூறுகின்றார். குடிக்கும், போதை மருந்துக்கும் அடிமையானோர் சூழப்பட்டவர்களின் வாழ்வு முறைக்குள் இருந்த தனக்கு, போதைமருந்து விற்பது, தான் வாழ்வதற்கான பல options களில் ஒன்றாக இருக்கவில்லை. அது மட்டுமே ஒரெயொரு option ஆக இருந்தது என்கின்றார். இன்று G-unit என்ற பிரபல்யம் வாய்ந்த record comapnyற்கு நிறுவன அதிபராகவும், விட்டமின் நீர், G-unit clothing lines, வீடியோ கேம்ஸ் போன்றவற்றை விற்பனை செய்வது என்று பல்வேறு துறைகளில் தனது கால்களை அகலப்பதித்தபடி இருக்கின்றார். தான் யாருக்கும் role-model இல்லையெனவும், வாழ்க்கையின் அடிமட்டத்திலிருப்பவரும் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு நம்பிக்கை ஊட்டுவதற்கு ஒரு வாழும் உதாரணம் மட்டுந்தான் தான் என்றும் குறிப்பிடுகின்றார். சிலவிடயங்களை அவர்களது காலணிகளில் நுழைந்துபார்க்காமல் நாம் தீர்ப்புக்கள் எதையும் வழங்கிவிடமுடியாது, அவ்வாறான ஒரு நபராகத்தான் 50 CENTம் தெரிகின்றார்.

ஆவணி மாத 'உயிர்மை' இதழில் சிங்கப்பூரில் தீவிரமாய் இயங்கிவரும் நாடக்கலைஞரான இளங்கோவனின் நேர்காணல் வெளிவந்திருக்கின்றது (நேர்கண்டவர்: சி. அண்ணாமலை). இளங்கோவனைப் பற்றியும் அவரது நாடகங்களைப் பற்றியும் அவ்வ்வபோது சிறுசிறு செய்திகளாக வாசித்திருந்தாலும் இந்த நேர்காணலில் இருந்து பல விடயங்களை அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. அரசாங்கம்/அதிகாரமையங்கள் போன்றவற்றிற்கு அறைகூவல் விடுகின்றோம் என்று எழுத்தில் மட்டும் அறைகூவல் விடுகின்றவர்கள் இந்தக் 'கலக்ககாரனின்' அரசுகளுக்கும்/மதங்களுக்கும் எதிரான செயற்பாட்டுக்களை கொஞ்சம் கவனித்தார்கள் என்றால் பேசாமல் வாயை மூடி மெளனமாக இருக்கக்கூடும். சிங்கப்பூர் என்பது பற்றி நமக்கு ஊட்டப்பட்ட விம்பங்களை இவரது நேர்காணல் கேள்விக்குள்ளாக்கின்றது 'தென் கிழக்காசியாவில் மிகவும் புனிதமான சமூகமாகவும், கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகமாகவும், மிகச் சிறந்த பொருளாதாரப் பரத்தையாகவும் (?) சிங்கப்பூர் கருதப்படுகின்றது. இதில்தான் என்னுடைய படைப்புக்கள் மிகவும் நுணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்டு, சில சமயம் பொருளாதார நெருக்கடிக்கும் உள்ளாக்கப்படுகின்றன. இந்தச் சமர் சுவாரசியமாக இருக்கின்றது' என்கின்றார் (சிங்கப்பூர் குறித்து ஏற்கனவே அங்கு வசித்த நண்பர் மூலமும் இவ்வாறான விடயங்களை நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்). 'நீங்கள் பிரச்சினைக்குரியவரா?' என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது, 'மூவாயிரம் சமணர்களை ஆற்றங்கரையில் கழுவிலேற்றிக் கொல்ல உதவிய பார்ப்பான் திருஞானசம்பந்தனுக்கு முலைப்பால் கொடுத்த உமையாள், ஏன் தன்னுடைய மறுமுலையை ஒரு தலித்துக்குக் கொடுக்கவில்லை என்று நான் எழுதினால் அது கலகம். ஆனால் மாட்டிறைச்சி வாடையுள்ள தலித் வாய்க்கு, 'பாருவின் மாரு ஒத்துக்காது மாமு' என்று ஆய்ந்தறிந்த மொண்ணைத்தனத்திற்காக இங்குள்ள பலரைப் போல தமிழில் முனைவர் பட்டம் வாங்கினால் நான் கலகக்காரன் அல்ல, சாந்தசொரூபி' என்று சாட்டையால் அடிக்கிறார். 'இன்று சிங்கப்பூரில் சர்ச்சைக்குரிய எதையும் படைப்பாக்கும் ஒரே நபராக இருக்கும் இளங்கோவன் எதைச் சொன்னாலும் அது விவாதத்துக்குரியதாகிவிடுகிறது (அண்மையில் அவரால் மேடையேற்றப்பட்ட 'தலாக்' நாடகம் பிறகு அரசால் தடைசெய்யப்பட்டது). பலத்த எதிர்ப்பு, கொலை மிரட்டல், நாடகம் நிகழ்த்தத் தடை, வேலையை இழந்தது, இவருக்கு எதிரான பிரச்சாரம்..... என்று இளங்கோவனுக்கு எதிராய் இருக்கும் சக்திகளில் மேட்டுக்குடி தமிழர்களுக்கும் முக்கிய இடமுண்டு' என்று ஒரு குறிப்புக் கூறுகின்றது. நாடகத்துறையில் நீண்டகாலமாய் இருக்கும் நீங்கள் இப்போது எப்படி உணர்கின்றீர்கள் என்று கேட்டபோது, 'கண்ணிவெடிகள் நிறைந்த நிலப்பரப்பில் நான் நீண்டகாலமாகத் தனிமையில் நடந்துகொண்டிருகின்றேன்' என்கின்றார். இதைவிட வேறெந்தச் சொற்றொடராலும் அவரைப் பிரதிபலித்துக்காட்டமுடியாது போலத்தான் அவரது நேர்காணலை வாசித்தபோது எனக்குத் தோன்றியது.

நன்றி: இவற்றை எழுத துணைபுரிந்த 'உயிர்மை', 'மெட்ரோ நியூஸ்' மற்றும் சில இணையத்தளங்கள்.

வாழ்வும் வதையும்

Thursday, August 11, 2005

ச.பாலமுருகன் எழுதிய 'சோளகர் தொட்டி'



(1)
"இவதான் மாதியா? சிவண்ணாங்கறவன் பொண்டாட்டி. எங்கேடி உன் புருஷன்? எங்கிருக்கான் சொல்லு" என்றான் அதிகாரி.

"அவன் காட்டுக்குள்ளே ஓடிட்டான் சாமி. அவனை தலமலைக்குக் கூட்டிக்கிட்டுப் போனபோது பார்த்தது" என்றாள்.

"அப்படியா" என்று அவளது முடியைப் பிடித்து இழுத்து சுவரில் வீசிவிட்டான். அவள் சுவரில் தலைமுட்டிக் கீழே விழுந்தாள். பின் அவளது உடைகளை அவிழ்த்தெறிந்து அவளை நிர்வாணப்படுத்தப்படுத்தினர். இரண்டு கால்களையும் சேர்ந்து உருளையின் ஒரு கயிற்றில் கட்டி அதன் மறுமுனையை போலிஸ்காரனை இழுக்க உத்தரவிட்டான் அதிகாரி. கால்கள் மேலே ஏற தலைகீழாய் முடிகள் நிலத்தைத் தொட தொங்கினாள் மாதி. அந்தரத்தில் தொங்கும் அளவு கயிறு கட்டப்பட்டபோது, ஒரு போலிஸ்காரன் அங்கிருந்த தடியை எடுத்துத் தலைகீழாய்த் தொங்கியவளை பலம் கொண்ட மட்டும் அடித்தான். அவள் அலறியபோது கயிறு ஆடியது. அவள் அலறி மயக்கமடையும் நிலைக்கு வந்திருந்தாள். அப்போதுதான் அடிப்பதை நிறுத்தினான்.

அந்த நேரம் மேலே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த கெம்பனைக் கீழே இறக்கி, மின் ஒயர்கள் இணைக்கப்பட்டிருந்த இரும்புப் பெட்டியைக் காட்டி,
மெக்கர் பெட்டியிலிருந்து "கரண்ட் கொடு" என்றான் அதிகாரி.

உடனே பொலீஸ்காரர்கள் அந்த மெக்கர் பெட்டியில் இணைக்கப்பட்டிருந்த ஒயர்களைக் கொண்டு வந்து அதன் முனையிலிருந்த கிளிப்பினை கெம்பனின் இரண்டு காது மடல்களிலும் மற்றொன்ன்றை அவனின் குறியில் விதைப்பையிலும் மாட்டினார்கள்.

ஒரு பொலீஸ்காரன் அந்த மெக்கர் பெட்டியில் இணைக்கப்பட்டிருந்த கைப்பிடியை மெதுவாகச் சுற்றினான். அது ஒரு சுற்றும்போது மின்சாரத்தை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. பின் ஒரு கருப்புப் பொத்தானை அழுத்தியதும் மின்சாரம் கெம்பனின் உடலில் பாய்ந்து அவன் அதிர்ந்தான். பொத்தானிலிருந்து அடுத்த வினாடி கை எடுக்கப்பட்டதும் அந்த அதிர்வு தடைப்பட்டது. மீண்டும் மெக்கர் பெட்டியைச் சுற்றி இம்முறை அதிக நேரம் பொத்தனை அழுத்திப் பிடித்தான் பொலிஸ்

"எங்கேடா வீரப்பன்? சொல்லு"

அவன் "ஊ...ஊ..." என்று கத்திக்கொண்டு அறை முழுவதும் ஓடி தலைகீழாய்த் தொங்கிக்கொண்டிருந்த மாதி மீது இடித்துவிட்டுத் தடுமாறிக் கீழே விழும்போது அவன் காலோடு வழிந்த மலம் அறை முழுவதும் சிதறியது. அவன் மயக்கமுற்றுச் சரிந்தான்.

அவன் உண்மையாகவே மயங்கிவிட்டானா? அல்லது நடிக்கின்றானா? என அறிய பொலீஸ்காரன் நூற்றுக்கணக்கான சிறு ஆணிகள் அடிக்கப்பட்ட ஒரு பட்டையான தோல் வாரினை, தண்ணீரில் நனைத்துக்கொண்டு வந்து கெம்பனின் முதுகில் ஓங்கியடித்தான். ஆணிகள் அவனது உடலின் சதைகளைத் துளைத்து வெளியே இழுக்கப்படும்போது இரத்தம் அறைகளின் சுவரில் தெறித்தது. அவன் "அய்யோ" என்று கத்தி நெளிந்தான்.

"டேய் அறைக்குள்ளேயே பீயை இருந்திட்டையா? அதைத் தின்னடா" என்றான் அதிகாரி.

அதிகாரிக்கு அந்த அளவு கோபமூட்டக்கூடியவனாக கெம்பனிருந்ததால், நின்று கொண்டிருந்த பொலீஸ் கெம்பனின் முடியைப் பிடித்து முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு, "தின்னுடா பீயை" என்று மலம் சிதறிய பக்கம் அவனை இழுத்தான்.

கெம்பன் சிதறிய மலத்தைக் கையில் எடுத்து கண்களை மூடிக்கொண்டு வாயில் திணித்துக்கொண்டான். அவன் கண்ணில் மரணத்தின் பீதி தென்பட்டது. உடனே அவன் அறைக்கு வெளியே இழுத்துப்போகும்போது வாந்தியெடுக்கும் சப்தம் கேட்டபோது, கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டிருந்த மாதியை கீழே இறக்கி நிற்கச் சொன்னான். அவள் ஒட்டுத் துணியற்றவளாய் கூச்சத்தில் கால்களையும், கைகளையும் மாராப்ப்பிக்கொண்டு நெளிந்தாள்.

"எங்கேடி உன் புருஷன்?" என்றான் அதிகாரி.
"தெரியாதுங்க"
"இவளுக்கும் கரண்ட் கொடுங்க" என்று உத்தரவிட்டான். அவள் அச்சத்தில் பின்னே நகரும்போது பொலிஸ்காரன் மெக்கர் பெட்டியிலிருந்து ஓயரை எடுத்து அவன் முன்னே வந்தான். பின்னே நகர்ந்தவள் சுவரில் முட்டி நின்றாள். அவளது காதுகளில் இரண்டு கிளிப்புக்களும், அவளின் மார்புக் காம்புகளில் இரண்டும், பிறப்பு உறுப்பில் ஒன்றும் மாட்டப்பட்டது. மாதி கையெடுத்துக் கும்பிட்டாள். பலனில்லை. போலீஸ்காரன் மெக்கர் பெட்டியின் கைப்பிடியை நான்கு சுவர் சுற்றினாள். பின், அதன் கருப்பு நிறப் பொத்தானை அழுத்தினான்.
"அட சாமி....." என அவள் அறை முழுதும் திக்கற்று ஓடினாள். மீண்டும் மெக்கர் பெட்டியின் சுழலும் கைப்பிடி சுற்றப்பட்டது. அவள் பள்ளத்தில் வீழ்வது போல உணர்வு கொண்டாள். மீண்டும் சுற்றப்பட்டது. அவள் தன் உடலின் நரம்புகள் ஆங்காங்கே தலைமுதல் பாதம் வரை வெடித்துச் சிதறச் செய்யுமளவு வலியையும் அதிர்வையும் அனுபவித்துத் தரையில் விழுந்தாள்.

"இவ பொண்ணை இழுந்தாங்கடா?" என்றான் அதிகாரி.
"சாமி. வேண்டாம்" என்று அந்த வேதனையிலும் அதிகாரியின் கால்களைப் பிடித்துக் கொண்டு முனகினாள். அவன் பூட்ஸ் கால்களால் அவள் முதுகில் ஒரு உதைவிட்டான். மூக்கிலிருந்து ரத்தம் வழிய அவள் சுவரோரமாய் போய் விழுந்தாள். அவள் கண்கள் இருண்டன. பின், அவள் சித்தியின் அலறல் சத்தம் கேட்டுச் சிரமப்ப்பட்டு விழித்தாள். சித்தியும் நிர்வாணமாய் மெக்கர் பெட்டியிலிருந்து மின்சார அதிர்வு பாய்ந்து அலறினாள்.

"வேண்டாம்" என மாதி எழுந்து நிற்க முயலும்போது, அவளைக் கீழே தள்ளி அவளது தலைமுடியை தரையுடன் காலில் வைத்து அழுத்தி நின்று கொண்டான் கணேஷ் பொலீஸ். ஏழாவது முறை மெக்கர் பெட்டியிலிருந்து மின்சாரம் பாய்ச்சப்படும்வரை சித்தி மயங்காமலிருந்தாள்.
(ப204-206)

அப்போது அவர்களின் அறைக்கதவு திறக்கும் சப்தம் கேட்டது. கணேஷ் பொலிஸ்காரன் வந்தான்.

"இன்னிக்கு வந்த பொம்பளைங்க வெளியே வாங்க" என்று கூறிவிட்டு, மாதி, சித்தி, சரசு என்று பெயர் சொல்லி அழைத்தான்.

மூவரும் எழுந்து வெளியே வந்தனர். இருட்டில் வெளியே ஏழு ஆட்கள் நின்று கொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டு நின்றிருந்தது தெரிந்தது.
'வா வெளியே" என்றான்.

மாதி புரிந்து கொண்டாள். முரண்டு பிடித்தால் எத்வும் நடக்காது என்று முடிவு செய்து, "நான் வரேன். என் மகள் சின்னப்பொண்ணு. அவளை விட்டுங்க" என்று கும்பிட்டாள்.

வெளியே நின்றிருந்தவர்களில் மூன்று பேர் சித்தியின் கையைப் பிடித்து அறைக்குப் பின்புறமாயிருந்த மண்தடத்தில் அவளை இருளில் கூட்டிச் சென்று மறைந்து விட்டார்கள்.

மற்ற இருவர் சரசுவையும் ஒருவன் மாதியையும் இழுத்துக்கொண்டு இருட்டில் மரத்தின் பக்கம் கூட்டிச்சென்றனர். மாதியைத் தரையில் கிடத்தி அவன் மீது விழுந்தான்.

சித்தி என்று கத்த நினைத்தாள். நொடிப்பொழுதில் வாழ்க்கையும் நம்பிக்கையும் செத்துப்பிணமாவதை எண்ணி அமைதியாகி விட்டாள். சித்தியை நினைத்துக் கண்ணீர் விட்டாள். அதன்பின், இரண்டு நபர்கள் அவள் மீது விழுந்து எழுந்து போய்விட்டார்கள். அவளுக்கு மேலே திறந்திருந்த வானத்தில் மின்னிய அவளுக்குப் பழக்கப்பட்ட நட்சத்திரத்திடம், "நான் பிணம்" என்று சொல்லிக்கொண்டாள். அதன் பின், "நீயும் கூடத்தான் மாதேஸ்வரா?" என்றாள்.

நடுச்சாமத்துக்குப் பிறகு அவள் கொட்டடையில் கொண்டு வந்து படுக்க வைக்கப்பட்டாள். பக்கத்தில் சித்தி இருக்கிறாளா என இருட்டில் கை வைத்துத் தேடிப்பார்த்தாள். அவளையறியாமல் ஓவென அழுகை வந்ததும் படுத்துக்கொண்டிருந்தவர்கள் விழித்துக்கொண்டார்கள். சற்று நேரத்துக்குப் பின் சித்தியை கைத்தாங்கலாய்க் கொண்டுவந்து அறையில் கிடத்திவிட்டுப் போனார்கள். அவள் கண்கள் மூடியிருந்தது. ஆனாலும் மூச்சியிருந்தது. அவளது கன்னங்களைத் தட்டி, சித்தி என மீண்டும் மீண்டும் செய்தாள். அதன் பின் மெல்ல "அம்மா.....அய்யோ" என்றாள் சித்தி.
(ப208)

(2)
'சோளகர் தொட்டி'க்கு ஒரு விமர்சனம் என்னால் எந்தப்பொழுதிலும் எழுத முடியாது போலத்தான் தோன்றுகின்றது.. இப்படி மேலே கூறப்பட்ட சம்பவங்களைப் போல 240 பக்கங்கள் உள்ள புத்தகத்தில் அரைவாசிக்கு மேற்பட்ட பக்கங்கள் இவ்வாறான 'வீரப்பன் வேட்டை' என்ற பெயரில் பழங்குடி மக்கள் மீதான அதிகாரமையத்தின் சித்திரவதைகளையும், வன்புணர்வுகளையுந்தான் பேசுகின்றன. மேலே கூறப்பட்ட, கரண்டு கொடுத்து சித்திரவதை செய்யப்பட்டது வளர்ந்த ஆண்கள் மட்டுமலல, ஏழு, பதினொரு வயது சிறுவர்களுக்குக் கூட இந்தக் கொடூரம் நிகழ்கின்றது. நிறைமாதக் கர்ப்பிணியை எல்லாம் நாலைந்து பொலீஸ் வீட்டுக்குள் நுழைந்து வன்புணருகின்றனர்.

இந்த நாவல் குறித்து எதை எழுதத் தொடங்கினாலும் ஒருவித நிம்மதியான வாசிப்பனுவத்துடன் எந்த ஒரு வாக்கியத்தையும் முடிந்துவிடமுடியாது என்று மட்டும் தெரிகின்றது. சில சமயம், தொடர்ந்து இதை வாசிக்கமுடியாமல் வெறித்தபடி பஸ்சினுள் பயணித்துக்கொண்டிருந்திருக்கின்றேன்; வீட்டினுள் சோபாவினுள் முடங்கியிருக்கின்றேன். இப்படியான சித்திரவதைச் சம்பவங்களை இதற்கு முன் இந்தளவு வெம்மை உருகும் வார்த்தைகளுடன் வாசித்ததேயில்லை.

இந்தப் பழங்குடி மக்களுக்கு இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்து, அவர்களுக்காய் வாதாடிய ஒரு வழக்குரைஞரினால் இவை பதிவு செய்யப்பட்டு, ஒரு மூன்றாம் மனிதனாய், மேலைத்தேய வாழ்க்கைச் சூழலில் இதன் துயரங்களின் ஒரு துளியும் அனுபவிக்காது வாழும் என்னையே கலங்கிடச் செய்கின்றதென்றால், அதை நேரடியாக அனுபவித்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை மட்டுந்தான் என்னால் யோசிக்கமுடிகின்றது இந்தக்கணத்தில்.

(3)



ச.பாலமுருகன் தனது 'என்னுரையில்' ...
'மகிழ்ச்சி நிரம்ப் வாழ்ந்து கொண்டிருந்த அம்மக்கள் சமூகம் பல்வேறு நிகழ்வுகளால் பாதிப்புக்குள்ளாயிற்று. தங்கள் சொந்த விளைநிலங்களிலிருந்து அவர்கள் அன்னியராக்கப்பட்டனர். அம்மக்களின் தாயைப் போன்ற வனத்திற்குள் சுதந்திரமாய்ச் செல்ல இயலாதவாறு பல்வேறு தடைகளையும், அரச இயந்திரங்களின் மனித உரிமை மீறல்களையும் சந்தித்த்தார்கள். கடந்த பத்தாண்டுகளாய் மனித உரிமைப் பணியில் ஈடுபட்டு வந்தவன் என்றமுறையில் அந்த மக்களிடம் பழகவும், அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் எனக்குக் கிடைத்த வாய்ப்புக்களும் அனுபவமும் எனக்குள் பெருஞ்சுமையை ஏற்றியது.

இந்நாவலில் வரும் அந்த பழங்குடி மக்கள், அவர்களால் தொட்டி என்றழைக்கப்படும் அவர்களது சிற்றூர், அடர்ந்த வனம், அந்தச் சூழல்கள் இவைகளே எனது நாவலுக்கு உயிர்தந்தவை. நாம் சுமந்த அம்மக்களின் கதைகள் பாறையை விட கனமானவை. இருளை விட கருமை மிக்கவை. நெருப்பினைவிட வெப்பமானவை.. பல சமயங்களில் நான் உள்வாங்கியவற்றைச் சுமக்கும் பலமற்றவனாய் இருப்பதை உணர்ந்திருக்கின்றேன். ஆனால் அவற்றுள் சிலவற்றையாவது பதியாமல் விட்டுவிட்டால் கால ஓட்டத்தில், பின்னொரு காலத்தில், நான் சுமக்க இயலாத அவை கற்பனையாகக்கூட கருதப்படும். எனவே அவைகளை இந்தப் பதிவின் மூலம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன்' என்கின்றார்.

வீரப்பன கொலைசெய்யப்பட்டு 'அமைதி' நிலவும் இன்றைய பொழுதிலாவது, இந்தப் பழங்குடி மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்களா என்பது இன்னும் கேள்விக்குறியே. வாழ்வு திட்டமிட்டுக் குலைக்கப்பட்ட சமூகத்தில், வலிகளுடன் உள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மாறுதல் அவ்வளவு இலகுவில்லை.

தமிழர் நாள்

Sunday, August 07, 2005

நேற்று, ரொரண்ரோவிலுள்ள வொண்டலாண்டில், இளைஞர்களால் 'தமிழர் நாள்' ஒழுங்குசெய்யப்பட்டு கலை நிகழ்வுகள் திறந்தவெளி அரங்கில் மேடையேற்றப்பட்டன. அதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே. கானங்களும் காட்சிகளும் அழகாய்த்தான் இருந்தன. படங்கள் இப்படி 'அற்புதமாய்' வந்தற்கு, எனது புகைப்படம் எடுக்கும் 'திறமை' மட்டுமே காரணம்.



ஆடலுடன் ஒரு பாடல்
M.I.A வின் அதிரவைக்கும் பாடலுக்கு பெண்களின் ஆட்டம்

வொண்டலாண்டின் செயற்கை ஊற்றுக்கள் இரவில்


'கொக்கரக்கோ'(கில்லி) பாடலுக்கு ஆண்களின் கானா கலக்கல்


'பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே' பாடலுக்கு


கடையொன்றில் தூக்கிவிடப்பட்டிருந்த Simpson & Bart பொம்மைகள்


செயற்கையாய் அமைக்கப்பட்ட மலையும், அதிலிருந்து கீழிறங்கும் செயற்கை நீர்வீழ்ச்சியும்

வன்னியிலிருந்து மூன்று படைப்புக்கள்

Thursday, August 04, 2005

உக்கிரமான போர்க்காலத்தில் வன்னியிலும் மக்கள் வாழ்ந்தார்கள் என்று ஏனைய நாடுகள் ஒப்புக்கொள்வதற்கு அந்த மக்கள் சமாதானக்காலம் வரை காத்திருக்கவேண்டி வந்தது. அதேபோன்று அந்தக் கடும் நெருக்கடிக் காலகட்டத்தில் வன்னிப்பெரும் நிலப்பரப்பிலிருந்து குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பல படைப்பாளிகள் தோன்றியிருந்தனர் என்று புலம்பெயர்ந்தவர்கள் அறியவும் நெடுங்காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று. நானறிந்தவரையில், போர்க்காலத்தில் மூன்றாவது மனிதன் ஓரளவு வன்னியிலிருந்து எழுதிய படைப்பாளிகளைப்பற்றி குறிப்புக்களை எழுதியதை வாசித்திருக்கின்றேன். அதில் சி.சிவசேகரம், மு.பொன்னம்பலம் போன்றவர்கள் வன்னியிலிருந்து முகிழ்ந்த படைப்புக்களுக்கு விமர்சனங்களை அவ்வவ்போது எழுதியிருந்தனர்.

அமரதாஸின் இயல்பினை அவாவுதல் (1999), நிலாந்தனின் யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே (2002), தானா.விஷ்ணுவின் நினைவுள் மீள்தல் (2003) போன்றவை வன்னிப்பெரும் நிலப்பரபிலிருந்து அச்சிட்டு வெளியிடப்பட்டாலும், படைப்பாளிகள் வன்னிக்குள்ளும் வெளியிலும் வாழ்ந்தவர்கள்; வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். வன்னியிலிருந்து பதிக்கப்பட்டதால், அவற்றை வன்னிப்படைப்புக்கள் என்ற ஒரு இலகுவான பிரிப்புக்குள் கொண்டுவரலாம் என்று நினைக்கின்றேன்.



இயல்பினை அவாவவுதல் தொகுப்பை வெளியிட்ட அமரதாஸ் ஒரு போராளியாக இருந்தவர். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் களத்தில் நேரடியாக நின்றவர். சண்டிலிப்பாய் - அளவெட்டிப்பகுதியில் நடைபெற்ற புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் காலில் படுகாயம் அடைந்து இன்றும் ஒருகால் சரியாக இயங்காது அவதிப்படுபவர். இன்றையபொழுதில் போராட்ட அமைப்பிலிருந்து முற்றாக விலகி சாதாரண ஒரு பொதுமகனாக, துணைவி, பிள்ளை என வாழ்ந்துகொண்டிருக்கின்றார். அவருடம் நேரடியாகப் பேசியபோது தன்னை ஒரு சுயாதீன பத்திரிகையாளர் (Freelance Journalist) என்றே அடையாளப்படுத்த விரும்புவதாய்க் கூறியது நினைவு.

அமரதாஸ் என்னும் படைப்பாளி பற்றி, கருணாகரன் இந்தத் தொகுப்புக்கான முன்னுரையில் இப்படிக் கூறுகின்றார். 'அமரதாஸ் 23 வயது இளைஞர்; ஈழக்கவிஞர்; தொண்ணூறுகளில் ஆரம்பத்திலிருந்து எழுதத்தொடங்கியவர்.; இலக்கியத்தின் பிற துறைகளிலும் ஈடுபடுபவர்; வாழ்வின் சகல விடயங்கள் பற்றியும் தீர்க்கமாக உரையாடுபவர்; புரிந்துணர்வோடும் விரிந்த சிந்தனையோடும் உறவாடுபவர். இவரின் கவிதைகளிலும் இந்தப் பின்புலங்களை உணரமுடியும். இவற்றுக்கப்பாலான அம்சங்களையும் அடையாளங்களையும் இவருடைய கவிதைகளில் வாசகர்கள் உணரக்கூடும்.'

அமரதாஸின் கவிதைகளில் ஆச்சரியப்படவைக்கும் ஒருவிடயம் எங்கும் நேரடியாக போரைப் பற்றிப் பேசவில்லை என்பதுதான். எழுதப்பட்ட சில கவிதைகளில் கூட, போர்க்களத்தில் நிற்கும் ஒருவன் தன் துணைக்கு தான் திரும்பி வருவேன் என்று ஆறுதல் கூறுகின்றதான கவிதைகளாய் இருக்கின்றனவே தவிர போர் குறித்து பெருமிதப்படும் கவிதைகள் அறவே கிடையாது. போரிற்குள் வாழ்ந்துகொண்டு அதன் அனைத்துக் கொடூரங்களையும் பார்க்கும் ஒருவனால் அது குறித்து பேசமுடியாது போலும். காதலியின் கடிதம் 01ல்...

'போர்முனையுள் உன் முனைப்பு
வேரறுந்த பூமரமாய் ஆகிறது என் நினைப்பு.

அழிக்கவோ அல்லது அணைக்கவோ முடியாத
என் நிழலாய் உன் இருப்பு
அந்தரத்து வாள் முனையில்
எந்தனது காத்திருப்பு'

என்றும்,
துயர்க்காலம் என்னும் கவிதையில்,

'அவசரமாய் அணிவகுத்து
போருக்குப் புறப்படும்போது
ஊரில் இருந்து
சதா என்னை நினைத்து
அழுதிருக்கும் உன் முகம்
இதயத்தில் மினுங்குது மங்கலாய்.'

என்று ஆரம்பித்து இறுதியில்...

'வெடித்துச் சிதறும் களத்திலிருந்து
உயிர்கொண்டு திரும்ப நேர்ந்தால்
உனைக்காண வருவேன்
மனஞ்சிலிர்த்து'

என்று மனதைப் பிசைவதாய்த்தான் முடிகிறது. பல கவிதைகள் படிமங்களால் வார்க்கப்பட்டு (புத்தகம் பற்றி, விருட்சத்தின் கதை அல்லது வில்லர்களின் தறிப்பு) பல்வேறு அர்த்தங்களை வாசிப்பவர்களுக்குத் தருபவை. வன்னிக்கு சென்றவருடம் சென்றபோது அமரதாஸ¤டன் இரண்டுவாரங்கள் பழகும் சந்தர்ப்பம் வாய்த்தது. இயல்பான சூழ்நிலையில் பலவிடயங்களை மனந்திறந்து பேசக்கூடியதாக இருந்தது. இந்தத் தொகுப்பில் எழுதப்பட்ட அனேக கவிதைகள் போராட்டக்களத்தில் நின்றபோது எழுதப்பட்டவை என்று கூறியபோது வியப்பாயிருந்தது. வாசிப்பதற்கோ, விவாதிப்பதற்கோ நேரங்கிடைப்பதே அரிதாயிருக்கும் சூழலில் (மற்றும் போராட்டக்காலத்தில் வடபகுதிக்கு பிற இடங்களிலிருந்த அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தது) இந்தக் கவிதைகள் நவீனத்துவச் சாயல் படிய எழுதப்பட்டிருப்பதற்கு, அமரதாஸ் என்னும் ஒரு படைப்பாளியின் ஆளுமைதான் முக்கிய காரணமாயிருக்கக்கூடும் என்று நினைக்கின்றேன்.

அமரதாஸ¤டன் உரையாடியபோது அவர் நிறைந்த வாசிப்புள்ளவர் என்பதை இலகுவில் அவதானிக்க முடிந்தது. ஈழம் என்றில்லாமல் தமிழக/புலம்பெயர் படைப்புக்களில் அனேகமானவற்றை வாசித்திருக்கின்றார் அல்லது அறிந்து வைத்திருக்கின்றார். அது மட்டுமில்லாமல் அமரதாஸ் நல்லதொரு புகைப்படக் கலைஞர். அவர் எடுத்த படந்தான் Lutesong and Lament என்ற ஈழத்தமிழ்ப்படைப்புக்களின் ஆங்கிலமொழிபெயர்ப்பின் முன்னட்டையை அலங்கரிக்கின்றது. இன்று வன்னியிலிருந்தும் யாழிலிருந்தும் வரும் அனேக படைப்புக்களில் அமரதாஸினதும், கருணாகரனினதும் பங்களிப்பு ஏதோவொரு வகையில் இருக்கின்றது (அண்மைய உதாரணம்: புதுவை இரத்தினதுரையினது, பூவரசம் வேலியும் பூலூனிக் குஞ்சுகளில், ட்ராஸ்கி மருதுடன், அமரதாஸின் கைவண்ணமும் உள்ளது).

அமரதாஸிற்கு பயணஞ்செய்வதில் (எந்தப்படைப்பாளிக்குத்தான் விருப்பமிருக்காது) அலாதிப்பிரியமெனவும், அவ்வாறு பயணித்த இடங்களில் எடுத்த புகைப்படங்களை எனக்கும் காட்டியிருந்தார். அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட படங்களைத் தொகுத்து, 'கோபுரங்களில் இருந்து' என்ற தலைப்பில் ஒரு புகைப்படக்கண்காட்சி வைக்கப்போவதாய் கூறியதாயும் நினைவு. அந்தக் கண்காட்சியில் முழுப்படங்களும் இந்துக்கோயில் கோபுரங்களின் சிலைகளை/சிற்பங்களை உள்ளடக்கப்போவதாய் கூறியிருந்தார். பாலியல் சிந்தனைகள் ஒடுக்கப்பட்ட தமிழ்ச்சமூகத்தில்தான் இவ்வாறான படைப்புக்கள் முகிழ்ந்திருக்கின்றன என்பதுதான் முக்கியமான முரண்நகை என்றார். கோபுரத்தில் உறங்கிக்கிடக்கும் அவற்றை யதார்த்திற்கு கொண்டுவந்து விரிவான உரையாடல்கள் நிகழ்த்தப்படவேண்டும் என்ற நோக்கிலேயே கோபுரத்திலிருந்து என்று தலைப்பு வைக்க விரும்புவதாய் கூறினார். உண்மையில் அதுவரைகாலமும், இந்தியாவிலுள்ள கோயில்களில் மட்டுந்தான் இப்படி வெளிப்படையான பாலியல்/நிர்வாணம் சித்தரிக்கும் சிற்பங்கள் இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு அமரதாஸ் எடுத்த புகைப்படங்கள் மிகவும் ஆச்சரியமூட்டியது (கிட்டத்தட்ட மூன்று அல்பங்கள் அளவில் அவர் எடுத்த படங்கள் இருந்தன).



தானா.விஷ்ணு யுத்ததிற்குள்ளே பிறந்து அதன் சகல பாதிப்புக்களையும் தன்னகத்தே உள்நிரப்பி வளர்ந்த ஒரு கவிஞன். அனைவரையும் போல, முதலாம் தொகுப்புக்கான பலத்துடனும் பலவீனங்களுடன் நினைவுள் மீள்தல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கின்றது. போரும், காதலும் இவரது கவிதைகளின் அடிநாதமாய் ஒலித்தபடி இருக்கின்றன.

'ஒளி ஓவியத்தின் ரேகைகளுள்
நான் தொலைந்து கொண்டிருக்கும்
இந்தப் பொழுதில்
நீ தலையணைக்கடியில் உன் விழிகளை
உதிர்ந்து விட்டு
ஒரு பிரமாண்டமான கனவுக்குள் புகுந்திருக்கக்கூடும்
ஒரு வனாந்தரத்தின் தனிப் பாடகனாய்
அலைந்து திரியும் எந்தன் மனசு
குளிர்காலதின் ஸ்பரிசத்தில்
என்னுள் ஊடுருவும்
உன் விம்பங்களை எதிர்பார்த்துக் கொண்ருக்கிறது

நான் அந்த இருள் படிந்த
நான்கு சுவர்களின் நடுவே
நனைந்து போன பூனைக்குட்டியைப் போல்
இருக்கின்றேன் இப்போதும்
தனித்து.

என்று 'இருளின் தனிமை வெளி' கவிதையில் காதற்பிரிவையும் தனிமையும் வாசிக்கும் நம்முள்ளும் படியவிடுகின்றார். இன்னொரு கவிதையான 'அடையாளப்படுத்தலில்' வாளை படிமமாக வைத்து எமது வாழ்வை மீட்டெடுக்கவேண்டியவர்கள் நாமன்றி வேறொருத்தரும் அல்ல என்கின்றார். அதற்காய்,

'நீயும் வாள் வைத்திருப்பது நல்லது
அப்பிள் வெட்டவோ
மற்றவரை ஆசிர்வாதிக்கவோ அல்ல
உன்னை ஆசிர்வதிக்க நினைப்பவனுக்கு
உன் அடையாளத்தைக் காட்டுவதற்கும்
உன் அடையாளத்தைத் தறிப்பவனின்
சிரம் நறுக்கவும்
நீ ஒரு வாள் வைத்திருத்தல் அவசியம்'
என்று குறிப்பிடவும் தவறவும் இல்லை. இந்தத் தொகுப்பில் பல நல்ல கவிதைகளும் சில சாதாரணக்கவிதைகளும் உள்ளன. இனிவரும் காலத்தில் இன்னும் ஆழமான கவிதைகளை, விரிவான தளங்களில் தானா.விஷ்ணு தருவார் என்ற நம்பிக்கையை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளை வாசிக்கும்போது ஏற்படுகின்றது.



நிலாந்தன் மரணத்துள் வாழ்வோம் தொகுப்பு வெளிவந்தபோதே அறியப்பட்ட ஒரு கவிஞர். பிறகு ஈழ அரசியல் நிலவரங்கள் குறித்து பத்திகள் எழுதி தனது பன்முக ஆளுமையை போர்க்காலத்திலும், இன்றைய 'சமாதான' காலத்திலும் வெளிப்படுத்தியவர்; வெளிப்படுத்திக்கொண்டிருப்பவர். 'யாழ்ப்பாணமே ஓ.... எனது யாழ்ப்பாணமே தொகுப்பு கவிதை நடையிலும், கதை வடிவிலும் எழுதப்பட்டிருக்கின்றது. யாழின் ஆரம்பகால வரலாற்றுடன் ஆரம்பித்து, 95ல் நிகழ்ந்த பெரும் இடப்பெயர்வையும், இறுதியில் யாழின் நுழைவாயிலை எட்டிப்பார்த்த ஓயாத அலைகள்-03 வரையும் ஆவணப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

கைப்பற்றப்பட்ட யாழ்ப்பாணத்திலிருந்து வருகின்ற ஒரு கடிதம் யாழின் அன்றைய நிலையை (1996) விபரிக்கின்றது.

'இம்முறை மிக நீண்ட கோடை
ஓரே வெயில்
ஒற்றனைப்போல ரகசியமாய் வீசும் காற்று.

இரவு
ஊளையிடும் நாய்களுக்கும்
உறுமிச் செல்லும் ட் ரக்குகளுக்குமுரியது

பகலெனப்படுவது
இரண்டு ஊரடங்குச் சட்டங்களிற்கு
இடையில் வரும் பொழுது

தெருவெனப்படுவது
ஒரு காவலரணில் தொடங்கி
இன்னொரு காவலரணில் முறிந்து நிற்பது.

இதில் வாழ்க்கையெனப்படுவது
சுற்றிவளைக்கப்பட்ட
ஒரு மலட்டுக்கனவு.'

என்கின்றது. யாழ்ப்பாணத்து பெருமை சொல்லப்பட்டாலும், யாழ் மேலாதிக்கத்தனத்தையும் நிலாந்தன் சுட்டிகாட்டத்தவறவில்லை. '...இப்படி வீரம் விவேகம் விச்சுழி தந்திரம் சுயநலம் இவற்றோடு கட்டுப்பெட்டித்தனம் புதுமைநாட்டம் விடுப்பார்வம் விண்ணாணம் இவையெல்லாம் கலந்த ஒரு திணுசான கலவைதான் ஒரு அசலான யாழ்ப்பாணி' என்கின்றார் யாழில் நடந்த மிகப்பெரும் இடம்பெயர்வும் அதனால் பாதிப்புற்ற மக்களின் துயரமும் அந்தக்காலகட்டத்தில் அங்கிருக்காதவரைக் கூட இந்தப் படைப்பை வாசிக்கும்போது கொஞ்சமாவது பரவச்செய்து கலக்கமுறச்செய்யும்.

இந்தப் படைப்பில் முக்கியமான குறிப்புக்களில் ஒன்றாய் இதையும் சேர்த்து வாசிக்கத்தான் வேண்டும். '....மேலும் இங்கையொரு சோகமான ஒற்றுமையும் உண்டு. ஐந்து ஆண்டுகளிற்கு முன்பு யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் அகற்றப்பட்ட அதே நாட்களில்தான் 1995ல் எக்ஸ்சோடஸ் ஏற்பட்டது என்பது.' உண்மைதான். நாம் முற்பகலில் எதை விதைக்கின்றோமோ அதைத்தானே பிற்பகலில் அறுவடை செய்யவும் வேண்டியிருக்கின்றது என்பதுதானே யதார்த்தம். ஒரு புதிய வாசிப்பு முறைக்கு நிலாந்தன் இந்தப் படைப்பில் நம்மை அழைத்துச் செல்கின்றார் என்றபோதும், பைபிளின் பழைய ஆகமத்தில் கூறப்படும் யூதர்களின் இடப்பெயர்வை யாழ்ப்பாண இடம்பெயர்வுடன் ஒப்பீட்டு நோக்குவது சற்று உறுத்தச் செய்கின்றது. அது ஆதியில் நிகழ்ந்தது எனினும் இன்று யூதர்கள் பாலஸ்தீனியர்கள் மீது நடத்தும் அக்கிரமம்தான் கண் முன்னே விரிந்து நிற்கின்றது. இன்றைய பொழுதில் யூதர்கள் செய்யும் அட்டூழியங்களைத் தவிர்த்து வரலாற்றின் முந்தைய பக்கங்களுக்குள் இலகுவில் நுழைந்துவிடமுடியாது. எனினும் நாமும் யூதர்களைப் போல, பராம்பரியத்துடன் நூற்றாண்டுகளாய் ஈழத்தின் வடபகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களைத் துரத்திய பாவச்செயலைச் செய்திருக்கின்றோம் என்பதை மறுத்துவிடவோ அல்லது அவ்வளவு இலகுவில் மறந்துவிடவோ முடியாது.