கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

விரியும் மலரைப் போல ஒரு பொழுதைப் பழக்குதல்

Thursday, September 28, 2017

ங்களுக்காய் ஒரு நாள் இனிதாய் விடிகிறது. மென்வெயிலும் முற்றத்த்தில் சிறகடிக்கும் பறக்கும் சாம்பல்நிற flycatcher களும், செம்மஞ்சள்நிற ரொபின்களும் விடியலுக்கு வேறொரு வனப்பைத் தந்துவிடுகின்றன. என்றோ ஒருநாள் குதூகலத்தின் எல்லையில் நீங்கள் ஏவிவிட்ட வெடியொன்று பக்கத்து வீட்டுக் கூரையை உரசியதால் உங்களோடு முரண்பட்டு, முகத்தை இறுக்கமாய் வைத்திருப்பவர் கூட, புற்களைப் பராமரித்தபடி வழமைக்கு மாறாய் காலை வணக்கம் கூறுகின்றார். மேலும் இன்று நீங்கள் உங்களுக்கு மிகப்பிடித்தமான ஆடையையும் அணிந்திருக்கின்றீர்கள் என்பதால் உங்கள் பெருமிதம் உங்கள் உயரத்தை ஓரங்குலம் உயர்த்தியும் விட்டிருக்கின்றது.

காதுகளில் ஹெட்போனை மாட்டியபடி நடக்கத் தொடங்குகின்றீர்கள். உங்களுக்குப் பிடித்த Katy Perryயின் "You don't have to feel like a wasted space/ You're original, cannot be replaced/If you only knew what the future holds/ After a hurricane comes a rainbow" குரல் இழைய இழைய நீங்கள் வானத்தில் பறக்கத் தொடங்கியும் விடுகின்றீர்கள். ஏறும் பஸ்சில் நெரிசல்தானென்றாலும் உங்களுக்குப் பிடித்த அடிக்கடி சந்திக்கின்ற இரண்டு பெண்களும் ஏறிவிடுவதால் அது அலுப்பான பயணமாகவும் தெரியவில்லை. பஸ்சிலிருந்து இறங்கி சப்வே இரெயின் எடுக்கப்போகும்போது -மூன்றாவதான -மீண்டுமொருமுறை திருப்பிப் பார்க்கவைக்கும் பெண்ணைச் சந்திக்கின்றீர்கள்.

இரசிக்க விருப்பமிருப்பினும் பார்வையை எப்படியோ சுழித்து நெளித்து ஒரு பரவளைவாடியைப் போல - அந்தப் பெண் உங்கள் முன்னே நடந்துபோனாலும்- ஒருமாதிரியாக திசையை மாற்றிவிடுகிறீர்கள். யவனத்தை இரசிப்பதற்கும், யதார்த்தத்தில் வாழ்வதற்கும் காலங்காலமாய் நடக்கும் சமர் போலும். எனினும் நேற்றிரவு வாசித்த ஒரு பெண்ணின் நேர்காணலில் 'உங்களுக்குப் பிடிக்காத விடயம் என்ன'வெனக் கேட்கப்பட்டபோது, 'ஒரு ஆண் கொஞ்ச விநாடிகள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாலே வெறுப்பு வந்துவிடும்' என்ற சொல்லப்பட்ட பதிலில் இதற்கு ஒரு மேலதிகமான காரணமாய்க் கூட இருக்கலாம். ஆக நீங்கள் இரசிக்க விரும்பும் உங்கள் மனதை சமரசம் செய்துவிட்டு சப்வே இரெயின் பெட்டிக்குள் இப்போது நுழைகின்றீர்கள்.

ன்று வாசிக்க பத்திரிகையை எடுத்து வராததில், நேற்றுக் கனவில் கொண்டு வந்த பெண்ணை மீண்டும் நினைவில்கொண்டு விழிகளை மூடுவதும் திறப்பதுமாய் இருக்கின்றீர்கள். ஒரு கர்ப்பிணிப் பெண் ஏறுகின்றார். உங்களுக்கு எல்லாவற்றிலும் சந்தேகமும் குழப்பமும் இருப்பதை அறிவோம். ஆனால் உங்களுக்கு ஒருவர் கர்ப்பிணியா அல்லது உடலின் பருமனா என்று தெளிவாய்க் கண்டுபிடிக்கும் வித்தையும் இதுவரை கைவந்ததில்லை. எப்போதும் குழப்பமுற்றபடியே இருக்கையைக் கொடுப்பதா வேண்டாமா என அடிக்கடி யோசித்துக்கொண்டிருப்பீர்கள். அதுபோலவே வயதுமுதிர்ந்தவர்களில் எவருக்கு இருக்கையைக் கொடுப்பது என்பது பற்றியும் உங்களின் குழப்பங்களை நாங்கள் அறிவோம்.

உடல் பருமனா ஒருவருக்கு இருக்கையை எழும்பிக் கொடுத்தால், அது அவரின் எடையை அவமதிப்பாய்ப் போய்விடும், அதுபோலவே வயது முதிர்ந்த எல்லோரும் அப்படி இருக்கை கொடுப்பதை 'பெருந்தன்மை'யாக நினைப்பதுமில்லை. மேலும் ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்துப் பேசுவதையே எந்தப் பெண்ணும் விரும்புவார் என்பதையும் நன்கறிவீர்கள். ஆனால் வயிற்றையும் இதற்காகக் கவனிக்கவேண்டும் என்பது கஷ்டமான ஒருவிடயம். வயிற்றைப் பார்த்து எதுவெனச் சரியாகத் தெரியாது ஒருவரின் முகத்தைப் பார்த்து இடம் தரவா வேண்டாமா என யோசிப்பதற்குள், அவர் இருக்கை தேவையில்லாத ஒருவராக இருப்பின் இவனென்னை ஏன் இப்படி உற்றுப் பார்க்கிறான் என அவர் நினைத்தால் பிறகு இன்னும் சிக்கலாகிவிடும். இதற்காகவே எப்போதென்றாலும் ஒரு மூலை இருக்கையை தேர்ந்தெடுக்கும் ஒருவராக நீங்கள் இருக்கவும் கூடும்.

இன்று முழங்கால் தொடும் ஒற்றைக் கறுப்பாடையை அணிந்தவரைக் கண்டவுடன், அவரின் வயிறு தெளிவாகக் காட்டிக் கொடுத்துவிட, முடிவைச் சரியாக வந்தடைந்த சந்தோசத்தில் உங்கள் இருக்கையை கொடுத்துவிடுகின்றீர்கள். அவரின் மென்குரலில் ஒலித்த நன்றி உங்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது.

உங்கள் வேலைத்தளத்தில், அவ்வளவு எளிதில் மனம் விட்டு எதையும் பாராட்டாத நீங்கள் உங்கள் நெடுநாள் தோழி மென்நீல ஆடை அணிந்து வந்திருப்பதைக் கண்டு, 'இன்று நீங்கள் மிகவும் அழகாக இருக்கின்றீர்களென' கஷ்டப்பட்டு வார்த்தைகளைத் தொடுத்துச் சொல்கின்றீர்கள். அவருக்கு அது மிகவும் சந்தோசம் கொடுக்கின்றது. 'நான் வித்தியாசமாய் அழகு செய்து வரவில்லை, சாதாரணமாய்த்தான் இன்று வந்தேன்' என்கின்றார். 'இயல்பாய் இருப்பதுதான் மிகுந்த அழகானது அல்லவா' என நீங்கள் கூறுகின்றீர்கள்.

அவர் உங்களுக்கு வாரவிறுதியில் அனுப்பிய குறுஞ்செய்தி நினைவு வருகின்றது.' நீ இப்போது மொன்றியலிலா இல்லை நியூயோர்க்கிலா நிற்கின்றாயா?' என்று. ஒரு நீண்ட வாரவிறுதி வந்தபோது இரண்டிலொன்றுக்குப் போவதென அவருட்பட்ட நண்பர்களுடன் திட்டமிட்டதும் அது பிறகு நடக்காமல் போனதையும் நினைவுபடுத்தி உங்களை வெறுப்பேற்றுவதற்கு அல்லவெனவே நீங்கள் நம்பவிரும்புகின்றீர்கள். 'நான் நீங்கள் நினைத்த இரண்டு இடத்திலுமல்ல, நன்றாக தூங்கிக்கொண்டு வீட்டில் இருக்கின்றேன்' எனப் பதிலளித்துவிட்டு மீண்டும் நித்திரைக்குப் போகின்றீர்கள். பிறகு அவர் வழமையாக எல்லாப் பெண்களையும் துரத்தும் துர்க்கனவான- 'நான் இப்போது நிறையச் சாப்பிட்டு மிகுந்த எடை கூடிவிட்டேன்' என்கின்றார். 'இந்த வயதில் நீங்கள் சாப்பிடாது எப்போது விரும்பியதைச் சாப்பிடுவது? வேண்டுமென்றால் அடுத்தவாரவிறுதியில் hiking போகலாம் கவலைப்படவேண்டாம்' எனப் பதிலையும் இடையில் அனுப்பியும் விடுகின்றீர்கள்.

அவருக்கிருக்கும் காதலர் எடை கூடுதல்/குறைதல் பற்றி என்ன நினைக்கின்றாரோ தெரியாது ஆனால் சில மாதங்களுக்கு முன்கூட நீங்கள் 'பெண்கள் உடல் பருமன் கூடுதல் பற்றி நினைத்து வருந்துவதைப் போல பெரும்பாலான ஆண்கள் நாங்கள் கவலைப்படுவதில்லை. எந்த எடையும் எங்களுக்குப் பிடித்ததே' எனச் சொல்லியதும் உங்களுக்கு ஞாபகம் வரலாம். மேலும் உங்களில் சிலருக்கு, டிசே போன்றவர்களுக்கு ஈர்ப்பிருக்கும் chubbyயான பெண்களைத்தான் கூடப் பிடிக்கும் என்பதையும் நாங்கள் அறிவோம்.

இவ்வாறாக உங்கள் தோழி இன்று காலைச் சாப்பாட்டுக்கு தன்னோடு வரும்படி அழைக்கின்றார். நீங்கள் ஒவ்வொருநாளும் காலையுணவிற்கென ஒரேவகையான bagelஐ கொண்டு வந்து நன்னிக்கொண்டு திரிவதையும் அவர் நன்கு அறிவார். 'நானொரு மினிமலிஸ்ட். உங்களோடு காலையுணவில் கலந்துகொள்கின்றேன். ஆனால் நான் கொண்டுவந்ததையே நன்னுவேன்...மன்னிக்க தின்னுவேன்' என்கின்றீர்கள். இப்போது தோழியோடு உணவகம் தேடிச் செல்லும்போது அவரது அழகும் குதியுயர்ந்த காலணிகளும், கடந்து போகின்றவர்களை ஈர்ப்பதை நீங்கள் அறிவீர்கள். ஆண்கள் மட்டுமில்லை பெண்களும் திரும்பிப் பார்ப்பதையும், அந்த விழியெறிதல்களை உங்கள் தோழியைச் சந்திக்கமுன்னர் நீங்கள் இடைமறித்து இடையில் அந்தப் பெண்களை நோக்கி ஒரு புன்னகையை தவழவிட்டுவிட்டீர்களென்றால் இந்த நாள் உங்களுக்கு  மேலும் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக மாறிவிடுகின்றது.

ஆனால் இதையும் நீங்கள் நினைவுகொள்ளவேண்டும். இந்த நாள் உங்களையறியாமலே இவ்வளவு அழகாக மலர்ந்ததற்கு நீங்கள் எந்த பிரயத்தனங்களைச் செய்யவில்லை என்பதையும். அது தன்னியல்பிலே மலர்ந்து விரியும் மலரைப் போன்றது.  முகிழ்கின்ற மலர்களுக்கு உதிர்கின்ற பருவங்களும் உண்டு. ஆகவே ஒருநாள் என்பது நாம் எதிர்பார்க்காத எதனையுமே தன்னகத்தே வைத்திருக்கலாம்.

ரு தொலைபேசி அழைப்பு வருகின்றது. எல்லாவற்றையும் கடந்துவிட்டோம் என்ற நினைத்த உங்களை கடந்தகாலத்திற்கு ஒவ்வொரு கற்களாக உதிரவைத்து அது அழைத்துப் போகவும், நீங்கள் கலங்கிக்கொள்கின்றீர்கள். உங்களின் இனிய நாள் இப்பொழுது இறுக்கமான ஒரு பொழுதாக மாறுகின்றது. மதியவுணவு அவ்வளவு எளிதில் இறங்க மறுக்கிறது. எண்ணங்கள் அலைபுரண்டோடுகின்றன, anxiety மெல்ல மெல்ல தேவையில்லா ஒரு செடியைப் போல உங்களில் படரத்தொடங்குகின்றது.தப்பமுடியாது, ஆனால் உற்றுப் பார்த்துக் கைகுலுக்கி எவரும் காயப்படாமல் நகரவேண்டும்.

ஒரு உலாத்தல் உங்களுக்குப் போதுமானது. ஆனால் இப்போது உங்களுக்கான இன்னொரு தோழி இருப்பது நினைவுக்கு வருகின்றது. சொற்களெல்லாம் குழைந்து மனதைக் குதறும் எண்ணங்களை அனுப்பிவிடுகின்றீர்கள். வரும் பதிலின் ஒருபகுதி இப்படியாக இருக்கவும் கூடும்.

"ஏனெனத் தெரியாது வாழ்வெம்மை தண்டிக்கிறது.
பின்னும் அதுவே தோள் மீது கை கோர்த்து இன்பங்களை அறிவிக்கிறது. பிரிதல் நோயாகி ரணங்களை தோற்றுவிக்கிறது. நாம் நேசிக்கும் தனிமை கூட சமயங்களில் நம்மை குடித்து காலி செய்கிறது. வாழ்தல் எனும் பெரும் சுமை இதயம் நசங்க எனை கூன் விழச்செய்கிறது.

இந்த சுவர்களே விரல்களாகி எனை தழுவுங்களேன் என கேவத்தோன்றுகிறது. ஆனாலும் என் ப்ரிய சிநேகிதா நேசித்தல் எனும் அற்புதம் ஒன்றே போதுமாயிருக்கிறது இதை கடப்பதற்கு.
ஆதனால் நேசம் கொள்வோம் எப்படியேனும் எதன் மீதேனும்."

சில வார்த்தைகள். மெல்லியதான அன்பு. சிலரேனும் உங்களை ஆற்றுப்படுத்த இருக்கின்றார்கள் என்பது மீண்டும் உங்களை வீழ்ச்சியிலிருந்து எழவைக்கின்றது. விடியலோடு உங்களுக்கு கையளிக்கப்பட்ட அழகிய நாள் ஒரு சூரியகாந்திப்பூவைப் போல திரும்பவும் தலைதூக்குகின்றது.

ஆகவே ஒருநாளில் எல்லாமும் நடக்கும்.கொல்லக்கூடிய வார்த்தைகளுக்கே ஆரத்தழுவிக்கொள்ளவும் தெரிகிறது. நீங்களும் இரண்டிலும் கலக்காது இரண்டையும் எதிர்க்காது இயல்பாய் இருப்பது எப்படியென்பதைக் கற்றுக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.

இப்போது கோடையின் மென் வெம்மையுடனும், விரிந்திருக்கும் நீல வானத்துடனும், பூத்திருக்கும் ஊதாப்பூக்களுடனும், உங்களில் ததும்பும் பிரியங்களை எல்லோருக்குமாய் அனுப்பி வைக்கத் தொடங்குகின்றீர்கள்.

(நன்றி: 'அகநாழிகை', 2017)

நெரூடா

Monday, September 25, 2017

நெரூடாவின் வாழ்க்கை மிக நீண்டது மட்டுமில்லாது மிகச் சிக்கலானதும் கூட. வலதுசாரிகளுக்கு இருக்கும் தெரிவுகளைப் போல, இடதுசாரிகளாய் இருக்க விரும்புகின்றவர்களுக்குத் தெரிவுகள் அவ்வளவு எளிதாய் அமைவதில்லை. அவர்கள் ஆதரிக்கும் கம்யூனிசக் கட்சியோ, தலைவர்களோ எப்போது மாறுவார்கள், என்ன செய்வார்கள் என்பதையும் எவராலும் இலகுவாய் ஊகித்தறியவும் முடியாது. ஆனாலும் இடதுசாரிகளாய் இருப்பதை ஏன் பலர் விரும்புகின்றார்கள் என்றால், அதுவே ஒடுக்கப்படும்/சுரண்டப்படும் மக்களுக்கு அருகில் நின்று பேசமுடிவதற்கான ஓர் புறச்சூழலை உருவாக்கித் தருகின்றது. நெரூடாவும் அவ்வாறான ஒரு இடதுசாரி வாழ்வு முறையை இளமையில் தேர்ந்தெடுத்து, இறுதிவரை அதினிலிருந்து வழுவாது இருந்து வாழ்ந்து முடித்துமிருக்கின்றார்.

மார்க்வெஸிலிருந்து போர்ஹேஸ் வரை பல்வேறு வகையிலான படைப்பாளிகளால் கவிதைகளுக்காய்ப் பாராட்டப்பட்டவர் என்பதோடு அவர் காலத்தில் கார்ஸியா லோக்கஸ், பிகாஸோ உள்ளிட்ட பலரோடு நட்பாகவும் இருக்கும் நல்வாய்ப்பையும் பெற்றவர் நெரூடா. சே குவேரா எப்படி ஒடுக்கப்படும் மக்களின் புரட்சிகளுக்கு முன்னுதாரணமாய்க் காட்டப்படுகின்றாரோ, அவ்வாறே நெரூடா எப்படி ஒரு படைப்பாளி உழைக்கும் மக்களுக்குள்  தன் படைப்புக்களினூடாக ஊடுருவ முடியுமென்பதற்கு ஒரு உதாரணமாய் இன்றும் காட்டப்படுகின்றார்.

நெரூடா என்கின்ற இப்படம் நெரூடாவின்  சொற்பகால- ஒன்றரை வருடத்திற்கும் குறைவான- வாழ்க்கையைக் காட்சிப்படுத்துகின்றது. நெரூடா செனட்டராக இருக்கும் 1948 காலத்தில் அன்றைய சிலியின் ஜனாதிபதி, உழைப்பவர்க்கு எதிராய் இருந்து அவர்களைச் சித்திரவதைக் கூடங்களில் அடைக்கின்றார் என்பதை நெரூடா வெளிப்படையாக பாராளுமன்றத்தில் கண்டித்துப் பேசுவதிலிருந்து படம் தொடங்குகின்றது.

இந்த எதிர்ப்புத் தெரிவிப்பு பின்னர் நெரூடாவைத் தலைமறைவு வாழ்க்கையிற்குத் தள்ளுகின்றது. நெரூடா தலைமறைவாகின்ற காலத்திலேயே சிலியின் கம்யூனிசக் கட்சியும் தடை செய்யப்படுகின்றது. நெரூடா நண்பர்களின்/உறவுகளின்//பாலியல் தொழிலாளர்களின் உதவியுடன் மறைந்து வாழத்தொடங்குகின்றார். நெரூடாவை, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரி கைதுசெய்து சிறையில் அடைப்பதற்குத் தேடத்தொடங்குகின்றார்.  மிகப்பெரும் ஒரு வேட்டை தொடங்குகின்றது. தானில்லாதுவிட்டால் பொலிஸும் இல்லை, பொலிஸ் இல்லாவிட்டால் தன் வாழ்வும் சுவாரசியமில்லை என   -ஆபத்தானதெனத் தெரிந்தும்- ஒரு வினையான விளையாட்டை நெரூடா ஆடத்தொடங்குகின்றார். இறுதியில் நெரூடா குதிரைப்பயணமொன்றைச் செய்து ஆஜெண்டீனாவைச் சென்றடைகின்றார். இவரைத் தேடிய பொலிஸிற்கோ ஒரு விபரிதமான முடிவு ஏற்படுகின்றது.

நெரூடா தலைமறைவாவதும், அவரை அரசு தேடுவது எவ்வளவு உண்மையோ,  அதேயளவிற்கு இந்தத் திரைப்படத்தில் வருவது போல ஒரு பொலிஸ் அதிகாரி இவ்வளவு நெருக்கமாய் நெரூடாவை கைது செய்யுமளவிற்கு நெருங்கியிருக்கவில்லை என்பதும் உண்மையாகும். மிக நுட்பமான இந்தப் பொலிஸ் பாத்திரம், இந்தப்படத்தை நெறியாள்கை செய்தவரின்  ஒரு கற்பனையான பாத்திரம். அதேவகையில் ஒருவரை அரசோ/பொலிஸோ தேடுகின்றபோது,  அதிகாரத்தரப்பிலிருந்து நிகழும் ஒவ்வொரு செயற்பாட்டையும், தேடப்படுகின்றவர் அறிவதில்லை. ஏன் சிலவேளை தம்மை எவர் பிந்தொடர்கின்றார் என்பதைக்கூட ஏதாவது அசம்பாவிதம் நிகழும்வரை அறிவதுகூடக் கடினமாக தேட்ப்படுகின்றவர்களுக்கு இருக்கும். அப்படி ஒருவர் தீவிரமாய்த் தேடப்பட்டிருக்கின்றார் என்பதை பிற்காலங்களில் எவரேனும் வெளியீடுவார்களாயின் மட்டுமே அறியமுடியும். ஒருகாலத்தில் அமெரிக்காவின் கண்காணிப்பிற்குள் இடதுசாரிகள் எனச் சந்தேகிக்கப்பட்ட பல படைப்பாளிகள் இருந்திருக்கின்றார்கள் என்பதை பின்னர் FBIவெளியிட்ட ஆவணங்களின் மூலம் அறியமுடிந்திருக்கின்றது.

நெரூடாவின் இந்தத் தலைமறைவு வாழ்க்கை, உயிருக்கு அச்சம் இருக்கும் சூழல் என்பவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது இது எங்களின் தேசத்திலும் நடந்திருக்கக்கூடியதென்பது நினைவில் ஓடிக்கொண்டிருந்தது. இலங்கை/இந்திய இராணுவத்தாலும், சக இயக்கத்தவர்களாலும் தேடப்பட்டு இப்படித் தலைமறைவாகியவர்களின் ஆயிரக்கணக்கான கதைகள் நம்மிடையே இருக்கின்றன. அப்படித் தப்பித்தவர்கள் ஏதோ ஒருவகையில் அதிஷ்டசாலிகளாகவும், பிடிபட்டு சித்திரவதைக்குள்ளனவர்கள் துரதிஷ்டசாலிகளாகவும் வகுத்துப் பார்ப்பதற்கும் காலத்தைத்தான் நாம் சாட்சியிற்கு அழைக்கவேண்டும். அதுமட்டுமில்லாது தாம் தேடப்படுகின்றோம் என்றோ அல்லது அதைக் கூட அறியாமலே இந்தப் பொறிக்குள் அகப்பட்டு தமது வாழ்வைத் தொலைத்தவர்க்குக் கூட நம்மிடையே நூற்றுக்கணக்கில் உதாரணங்கள் இருக்கின்றன.

நெரூடாவிற்கு நிகழ்ந்தது 50 வருடங்களுக்கு முன்னர் என்றால், நமக்கு அண்மையில் இவையெல்லாம் நிகழ்ந்திருக்கின்றன. பாலைவனத்தில் இருக்கும் ஒரு சித்திரவதைக்கூடத்திற்குப் பொறுப்பதிகாரியாக இத்திரைப்படத்தில் காட்டப்படுகின்ற பினோச்சோதான்  கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு சல்வதோர் அலெண்டேயின் ஆட்சியைக் கவிழ்ந்து மிகக்கொடூரமான சர்வாதிகார ஆட்சியைக் கொண்டுவந்திருக்கின்றார். நெரூடாவின் 1973 மரணம் மாரடைப்பால் நிகழ்ந்தது என்றாலும், அன்றையகாலத்தில் பினோச்சோயின் இராணுவ ஆட்சியிற்கு அச்சுறுத்தல் இருக்கக்கூடுமென்று நெரூடாவிற்கு, பினோச்சோதான் ஒரு மருத்துவரினூடாக நஞ்சு ஊசி செலுத்தியிருக்கலாம் என்கின்ற சந்தேகமும் இருக்கின்றது. சல்வதோர் அலெண்டே கொல்லப்பட்ட பத்துநாட்களுக்குள் அலெண்டேயிற்கு நெருக்காக இருந்த நெரூடாவும் மரணிக்கின்றார் என்பதையும் கவனிக்கவேண்டும்.

நாம் கடந்துவந்த யுத்தக் காலத்தை பல்வேறுமுறைகளில் நாங்கள் வெளிக்கொணரலாம். நமக்கு அதிகார அரசு/இராணுவம் மட்டும் நிகழ்த்தியதை மட்டுமில்லை, நாம் நம்பிய இயக்கங்கள் தங்களுக்குள்ளே முரண்பட்டு மிகமோசமாக நிகழ்த்தியவற்றையும் மறைக்காமல் பேசவேண்டும், ஆவணப்படுத்தவேண்டும். அந்தவகையில் நெரூடாவின் இந்த தலைமறைவு/உயிர்தப்பல் போன்றவற்றை நினைக்கும்போது, செழியன் எழுதிய 'ஒரு மனிதனின் நாட்குறிப்புகளிலிருந்து' நினைவுவருகின்றது. எதையெதையோ திரைப்படமாக எடுத்து, தங்களைத் தாங்களே கீழிறக்கிக்கொள்ளும் நம் நெறியாளர்கள், தமக்கு முன்னும் சிறப்பான பிரதியொன்று நல்லதொரு திரைக்கதை வடிவமாவதற்குக் காத்திருப்பதையும் ஒருமுறை நினைத்துக்கொள்ளலாம்.

(நன்றி: 'அம்ருதா', புரட்டாதி/2017)

நயோமியின் 'What lies between us'

Sunday, September 24, 2017


வாழ்க்கையின் திசைகளை எவை தீர்மானிக்கின்றன என்பதை மனிதர்கள் எவரும் அறியார். வீசும் காற்றிற்கேற்ப வளையும் நாணல்களைப் போல மனிதர்களுந்தான்  விரும்பியோ விரும்பாமலோ தம்மை  மாற்றவேண்டியிருக்கின்றது என சொல்கின்றது நயோமியின் 'எங்களுக்கிடையில் என்ன இருக்கின்றது' என்கின்ற இந்நாவல். கங்கா என்கின்ற சிறுமி, வளரிளம் பருவப்பெண்ணாகி, ஒரு குழந்தையிற்குத் தாயாகும்வரையான தன் கதையைச் சொல்லத் தொடங்குகின்றார். இலங்கையில் கண்டியில் வசதி வாய்ந்த குடும்பத்தில் கங்கா பிறந்தாலும் பெற்றோருக்கிடையில் இருக்கும் சிக்கலான உறவால் கங்காவின் குழந்தைப் பருவம் சுமூகமாக இருப்பதுமில்லை. பெற்றோரிடம் கிடைக்காத அமைதியை கங்கா தன் வீட்டில் சமையல் செய்து வரும் சீதாவிடமும், தோட்டவேலை செய்யும் சாம்சனிடமும் தேடுகின்றார்.

மழைக்கால நாளொன்றில் ஆற்றில் தற்செயலாய் விழுந்து கங்காவின் தகப்பன் இறந்துபோகின்றார். அந்த மரணத்தோடு தோட்டவேலை செய்யும் சாம்சனும் காணாமற்போகின்றார்.  தன் கணவன் இல்லாது இலங்கையில் என்ன செய்வது எனக் கலங்கும் கங்காவின் தாயாரை, அமெரிக்காவிலில் குடும்பத்தோடு வாழும் அவரின் சகோதரி அமெரிக்காவிற்கு அழைக்கின்றார். கங்காவின் பதின்மம் அமெரிக்காவில் தொடங்குகின்றது என்கின்றபோதும் அவருக்கும் தாயாருக்குமான  'கதைக்கப்படாத விடயங்களின் நிமித்தம்' ஒரு இடைவெளி வருகின்றது.

கங்கா பாடசாலைப் படிப்பை முடித்து பல்கலைக்கழகத்தில் தாதிகளுக்கான படிப்பை முடித்து வேலை செய்யத் தொடங்குகின்றார்.  வயதேற ஏற திருமணம் என்பதைப் பற்றி யோசிக்காது கங்கா இருப்பது அவரின் தாயாருக்கு கவலையாக இருக்கின்றது. கங்காவிற்கு திருமணத்தில் மட்டுமில்லை, ஆண்களுடான உறவுகளுடனும் அவருக்கு நிறைந்த சிக்கல்கள் இருக்கின்றன. ஏன் தன்னை விரும்பும் ஒவ்வொரு ஆணையும் ஒரு எல்லையிற்குப் பிறகு அனுமதிப்பதில்லை என்பதற்கும் கங்காவிற்கும் தெளிவான காரணங்கள் தெரிவதேயில்லை. இது குறித்து நீட்சியாக யோசிக்கும்போதே, கங்கா தன் சிறுமிப்பராயத்தில் பாலியல் வன்முறைக்குட்பட்டதை நினைவு கூருகின்றார். அந்த நினைவுகள் ஒவ்வொருமுறையும் அவரைத் துன்புறுத்தும்போதும் அதன் ஆழத்திற்குள் போய் சிடுக்கை அவிழ்க்கமுடியாது இடையில் வெளியே வந்தும்விடுகின்றார்.

நீண்ட தனிமையின் பின் கங்கா, அவருக்குப் பிடித்த காதலை ஒரு ஓவியனிடம் கண்டுகொள்கின்றார். அவரொரு வெள்ளையினத்தவராக இருப்பதால் கங்காவின் தாயால் இந்த உறவை ஏற்றுக்கொள்வதில் தயக்கமாய் இருக்கின்றது. சில வருடங்கள் சேர்ந்து வாழும் கங்காவும் அவரது காதலனும், பின்னர் திருமணஞ்செய்தும் கொள்கின்றார்கள். திருமணவாழ்வில் கங்காவிற்கு தன் குழந்தைமையில் பலாத்காரம் செய்யப்பட்ட கொடுங்கனவுகள் வருகின்றபோதும், கணவன் உறுக்கிக்கேட்கும்போதும் அவரால் நடந்ததைப் பகிர்ந்துகொள்ளமுடியாது இருக்கின்றது.

திருமண உறவில் அவர்களுக்குக் குழந்தையும் பிறக்கின்றது. குழந்தையின் மீது அளப்பரிய காதல் இருந்தாலும் சிறுவயது நினைவுகளால் கங்காவினால் அவரது குழந்தையிற்கு ஒரு நல்லதொரு தாயாக இருக்கமுடியாதிருக்கின்றது. பல்வேறு சம்பவங்களின் நீட்சியில் கங்காவின் கணவர் குழந்தையையும் எடுத்துக்கொண்டு கங்காவைப் பிரிந்து குழந்தையுடன் தனித்து வாழத்தொடங்குகின்றார். சிறுவயது பாலியல் துஷ்பிரயோகத்தோடு, இப்போதும் குழந்தையும் பிரிக்கப்பட்ட துயரில், கங்கா இன்னும் ஆழமான உளவியல் சிக்கலுக்குள் போகின்றார்.

இந்தப் பிரச்சினைகளுக்கிடையில் கங்கா ஒருமுறை தாயுடன் பேசும்போது அவர் குழந்தையாக இருக்கும்போது பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர், அவர் மிகவும் நேசித்துக்கொண்டிருந்த  ஒருவர் என்பதை அறிந்து இன்னும் அதிர்ச்சியாகின்றார். அன்றையகாலத்தில் தனக்கொரு வழியும் இருக்கவில்லை எனத் தாயார் இதுவரை மறைத்து வைத்ததன் துயரத்தைச் சொல்லி அழுகின்றார்.

தன்னை பாலியல் வன்முறை செய்தவர் யாரென்ற அதிர்ச்சியில், இதுவே தாயில்லாது தந்தையோடு மட்டும் வாழும் தன் மகளுக்கும் நிகழப்போகின்றது என்ற அச்சத்தோடு கங்கா ஒரு விபரீதமான முடிவை எடுக்கின்றார். அது தன்னோடு, தன் குழந்தையும் தற்கொலைக்கு எடுத்துச் செல்வது. பிறகு என்ன நடந்தது, கங்காவி ஏன் அவ்வாறான பாரதூரமான முடிவை எடுக்க முன்வந்தார் என்பதை நாவலை வாசிக்க விரும்புவர்க்காய் இப்போதையிற்கு விட்டுவிடலாம்.

குழந்தைப் பருவம் என்பது எல்லோருக்கும் மிக முக்கியமானது. போர்க்காலத்தில் வாழ்கின்ற ஒரு குழந்தையினதோ அல்லது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் குழந்தையினதோ, பிறகான வளர்ந்த காலங்கள் என்பது ஒருபோதும் இயல்பாய் இருப்பதில்லை. அதிலும் முக்கியமான சிறுவயதில் நடந்த கொடும் விடயங்களைப் பகிரமுடியாது தவிர்ப்பவர்களின் வாழ்க்கை என்பது இன்னும் சிக்கலாய் கங்காவினதைப் போலவும் ஆகிவிடுகின்றது.  அது இலங்கையில் வாழ்ந்தாலென்ன, அமெரிக்காவில் வாழ்ந்தாலென்ன, நடக்கும் பின் விளைவுகள் என்பது நாம் நினைத்துப் பார்க்கமுடியாதவையாய் இருக்கின்றன.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தமது உளக்கிடக்கைகளைப் பேசுகின்ற வெளிகள் உருவாக்கப்படவேண்டும். அதுமட்டுமின்றி அவர்கள் தாம் பாதித்த கதைகளைக் கூறும்போது அவர்களை எதன்பொருட்டும் விலத்தவோ, தவறாக நினைக்கமாட்டோம் என்கின்ற நம்பிக்கைகளையும் கேட்பவர்கள் வழங்கவேண்டும். அவ்வாறு இல்லாதுவிடின் இவ்வாறான கங்காக்கள் நம்முன்னே உருக்குலைந்துபோவதற்கு நாமும் தெரிந்தோ அல்லது தெரியாமலோ ஒரு காரணமாய் ஆகிவிடவும் கூடும்.

(நன்றி: 'அம்ருதா', புரட்டாதி, 2017)