கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தற்செயல்களின் அழகு

Sunday, July 27, 2014

-அ.முத்துலிங்கத்தோடு ஒரு சிறு சந்திப்பு-

'In Our Translated World' வெளியிடப்பட்டு மாதங்கள் சில ஆகிவிட்டபோதும், அதன் பிரதியைப் பெறுவதில் ஒவ்வொர்முறையும் ஏதோ 'சகுனப்பிழை' ஏற்பட்டு கையில் கிடைக்காமலே போய்க்கொண்டிருந்தது. அடிக்கடி அ.முத்துலிங்கத்திற்கு -வந்து பெறமுடியுமா- என மின்னஞ்சல் அனுப்பவதும், பிறகு ஏதேதோ காரணங்கள் போகாமல் விடுவதும் நிகழ்ந்திருக்கிறது.

அவருக்கும் காத்திருந்து காத்திருந்து அலுப்பு வந்திருக்கவேண்டும். அண்மையில் இங்கு பா.கிருஷ்ணனுடன் நடந்த சந்திப்பில் எனக்கான பிரதியைக் கையோடு கொண்டு வந்திருக்கின்றார். அப்போது நான் இன்னொரு நாட்டில் இருந்துகொண்டு, இன்று நான் பார்த்த பெண்களில் அதிகம் கவர்ந்திழுத்தவர் யார் என்ற தீவிர ஆராய்ச்சியில் மூழ்கியிருந்திருக்கின்றேன். கடந்த ஞாயிறும், 'வருகிறேன்' என அ.முவிற்குச் சொல்லிவிட்டு, மாலையில் கவிதைகளை விட, ஏரியில் மறையும் சூரியனைப் பார்ப்பதே முக்கியமென நண்பருடன் புறப்பட்டுவிட்டேன்.

நேற்றுத்தான் எனக்குச் 'செவ்வாய் தோசம்' முடிந்திருக்கவேண்டும். வாய்ப்புக் கிடைத்தது.

ஐந்து நிமிடங்களுக்குள் பிரதியைப் பெற்றுவிட்டு திரும்பிவிடலாம் என நினைத்துக்கொண்டுதான் போனேன். உரையாடத் தொடங்க அது ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக நீடித்துக்கொண்டு போனது. இதுநாள் வரை சந்திக்கும்போதெல்லாம் வணக்கமும் சுகமும் விசாரித்துவிட்டு நகர்ந்துகொண்டிருந்த நான் இவ்வளவு நேரம் அ.முவோடு உரையாடியது ஓர் ஆச்சரியமான நிகழ்வுதான்..

இப்போது அவர் வாசித்துக்கொண்டிருந்த நாவல்களை தன் Ipad த் திறந்து காட்டிக்கொண்டிருந்தார். முதலாவதே நிரோமி டீ சொய்சாவின் 'தமிழ்ப் பெண்புலி'. அது குறித்து எதையோ சொல்ல வாயெடுத்தேன், பிறகு ஏதேதோ நினைவுகள் பயமுறுத்த அமைதியாகிவிட்டேன். 'தமிழ்ப் பெண்புலி' குறித்த என் பார்வையை எழுதியதற்கே நிரோமி 'பணம் கொடுத்தார்' என்றெழுதிய ஒருவர் என்னை விட அ.முவோடு 'அதிக நட்பாய்' இருக்கின்றபடியால், இதையும் அறிந்தால், அ.முவை இன்னும் 'புகழ்ந்து' அவர் எழுதிவிடுவார் என்பதால் இந்நூல் பற்றித் தொடர்ந்து கதைப்பதைத் தவிர்த்துவிட்டேன்.

மைக்கல் ஒண்டாச்சி, ஷியாம் செல்வதுரை, ஜூம்பா லகிறி, சிமமண்டா அடீட்சி என நாங்கள் நிறையக் கதைத்துக்கொண்டிருந்தோம். English Patient, Funny boy போன்ற சிறந்த நாவல்களை எழுதிய மைக்கல் ஒண்டாச்சியும், ஷியாமும் பின்னைய நாவல்களில் சரிவு நிலைக்கு வந்துவிட்டார்கள் போலத் தோன்றுகிறதென அ.மு சொன்னார்.எல்லாப் புக்ழபெற்ற எழுத்தாளர்களுக்கும் முக்கியமான படைப்பாய் ஒரு நாவலே அதிகம் இருக்கிறதென்றேன். மேலும், அ.மு Hungry Ghosts ஐ அரைவாசிக்கு மேலாய்த் தாண்டமுடியவில்லை என்றபோது, நானும் இந்நாவலில் நிறைய எதிர்பார்த்தேன், முக்கியமாய் முடித்தவிதத்தில் நாவல் எங்கையோ தவறிவிட்டதென என் பார்வையைச் சொன்னேன். மொழியில் சாகசம் செய்யவேண்டும், ஷியாமின் இந்த நாவலில் குறிப்பிடத்தக்கதாய் எதுவுமில்லையென, அண்மையில் நியூயோர்க்கரில் வந்த கதையொன்றில் தனக்குப் பிடித்த வாக்கியங்களைத் தான் அடிக்கோடிட்டிருந்தவற்றை எடுத்துக் காட்டினார்.

Interpreter of Maladies எழுதிய ஜூம்பா லகிறியின் அண்மையில் வந்த நாவலான Lowland ம் அப்படியே என்றார். எனக்கு வாசித்தவளவில் அது சற்று சுவாரசியமாக இருந்தது. அதையின்னும் முடிக்காததால் எதையும் தீர்க்கமாய் இப்போது சொல்லமுடியவில்லை என்றேன். ஜூம்பா லகிறியின் The Namesake' ஐ மீரா நாயர் திரைப்படமாக அழகாக மாற்றியிருந்தார் என அ.மு வியந்து சொன்னார். முக்கியமாய் நாவலில் தாய் பாத்திரம் சிறிது; மகன் பாத்திரமே கதை சொல்லும். ஆனால் திரையில் தாய் பாத்திரம் விரிவாக்கப்பட்டு தாயினூடாக கதை சொல்லும் முறையாக மாற்றப்பட்டதென்றார். நாவலைப் படமாக்குவதில் அநேகம் நாவலே திரைபடத்தை விட நன்றாக இருக்கும், ஆனால் மீரா நாயரினால் நாவலை விட திரைப்படம் அழகாக வந்திருக்கிறதென்றார் (மீரா நாயரின் அண்மைய திரைப்படமான The Reluctant Fundamentalistம் நாவலை அடிப்படையாகக் கொண்டது. படம் பார்த்துவிட்டேன். நாவல் எப்படியிருக்குமென வாசித்துப்பார்க்கவேண்டுமென ஆவலைத் தந்த திரைப்படம்).நான் Namesake திரைப்படத்தை மாத்திரமே பார்த்தவன் என்பதால் இந்த நுட்பமான வித்தியாசம தெரியவில்லை, என்றாலும் லகிறியின் unaccustomed earth என்னை அவ்வளவாய் கவர்ந்ததில்லையெனச் சொன்னேன்.

ஒண்டாச்சி, லகிறி போன்றவர்களின் நாவல்கள் ஏற்கனவே சிறுகதை வடிவில் நியூயோர்க்கரில் வநது வாசித்திருந்ததால், பிறகு நாவலாக வந்தபோது ஈர்க்கவில்லையோ தெரியாதென அ.மு சொன்னார். அநேகமானவர்கள் நாவல்களை எழுதிக்கொண்டிருக்கும்போது அதிலிருக்கும் சிலபகுதிகளை சிறுகதைகளாக்கியோ அல்லது சுருக்கியோ வெளியிடுவது இயல்புதானே, ஹருக்கி முரகாமியின் 18Q4 கூட நாவலாக வரமுன்னர் இப்படி வந்தபோது வாசித்திருக்கின்றேன் என்றேன். சிலவேளைகளில் ஒண்டாச்சியோ, லகிறியொ, முரகாமி செய்ததைப் போல நாவலின் பல்வேறு அத்தியாங்களைக் கோர்த்து சிறுகதையாக்கியது போல அல்லாது, அப்படியே தங்களின் நாவலின் பகுதிகளை முன்னரே வெளியிட்டதால் நாவல் வாசிக்கும் சுவாரசியம் இல்லாமற் போய்விட்டதோ தெரியவில்லை.

நாவல்களின் பகுதிகளை முன்னரே வெளியிடுவது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான் என்று அ.மு சொன்னபோது, விகடனில் அவர் எழுதும் தொடரில் இறுதியாய் வந்த அத்தியாயத்தை நான் ஏற்கனவே வேறெங்கோ வாசித்து பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். இப்படியே நம் கதை திசையெட்டும் அலைந்தபோது , நாஞ்சில்நாடனின் விகடன் பட்டியலில் உமது படம் வரவில்லை? நான் தேடிப்பார்த்தேன், ஏன்?' என்று அ.மு கவலைப்பட்டார். எனக்கும் கவலைதான் இல்லையா என்ன? அடிக்கடி முன்னட்டைகளில் எனக்குப் பிடித்த அஸினின் வர்ணப்படம் வருகின்ற ஒரு பத்திரிகையில் பாஸ்போர்ட் சைஸிலாவது என் படம் வருகின்றபோது அவரின் தீவிர இரசிகனாக எனக்கும் பெருமிதமாகத்தானே இருக்கும். ஆனால் இது எனக்கும், அ.முவிற்கும் புரிகிறது. விகடன்காரர்களுக்கு இது விளங்கவில்லையே? (இப்படி எதையும் முகநூலில் எழுதவும் இப்போது பயமாயிருக்கிறது. 'பட்டியல் சர்ச்சை' பற்றி ஜூலை அம்ருதா கட்டுரையில் நான் முகநூலில் எழுதிய ஒரு சிறுபதிவைப் பிரசுரித்திருக்கின்றார்கள். அதுகூடப் பரவாயில்லை, அதில் நண்பர் யாருக்கோ சொன்ன பதிலான, 'எனக்கு இரசிகைகள் கூடிவிடுவார்கள் எனத்தான் விகடன் படம் போடாது இருட்டடிப்புச் செய்திருக்கின்றது' என்று எழுதிய கொமண்டையும் அல்லவா சேர்த்துப் பிரசுரித்திருக்கின்றார்கள்)

முகநூலிலிருந்து, டொமினிக் ஜீவாவிற்குக் கொடுத்த இயல்விருதுவரை, கோணங்கியிலிருந்து, எனக்கு மிகப்பிடித்த ரமேஷ்-பிரேம் வரை..., எழுதத் தொடங்கும்போது பாவித்த சொற்களையே திரும்பத் திரும்பப் பாவிக்கின்றேன் என வருகின்ற என் சோர்வுவரை நிறையத் தொடர்ந்து கதைத்துக்கொண்டிருந்தோம். வைதேகியின் தமிழ்ப்பற்றும், அவர் மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் பழந்தமிழ் இலக்கிய நூற்கள் பதினெட்டையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் விதத்தையும் பற்றியும் நிறைய அ.மு சொன்னார். தமிழ் என்பது தொடர்ந்தும் தனிமனிதர்களாலே தொடர்ந்து வளர்க்கப்பட்டு வந்திருப்பது குறித்தும், உதாசீனம் செய்யும் அரசு/நிறுவனங்கள் குறித்தும் பேசினோம்.

வைதேகி போன்று தமிழ் மீது பற்று வைத்திருப்பவர்கள் குறித்து உங்களைப் போன்றவர்கள் விரிவாக எழுதவேண்டும் என அ.மு சொன்னபோது. என் சங்க இலக்கிய அறிவு மிகவும் குறைவானது எனக்குறிப்பிட்டேன்., இப்போதும் நான் 'காலம்' செல்வத்தின் தொலைபேசி அழைப்புக்களை எடுக்காமல் தவிர்ப்பதற்கு செல்வம் நீ இப்போது சங்க இலக்கியத்தில் என்ன படிக்கிறாய் எனக்கேட்டு, கமபன் பாடிய ஏதாவது ஒரு பாட்டிற்குப் பொருள் சொல்லெனக் கேட்டுவிடுவாரோ என்ற அச்சத்தினால் என்பதை அ.முவிடம் சொல்லாமல் தவிர்த்துவிட்டேன்.

இப்படி எல்லாப் பக்கமும் கதைத்த நாம், எங்களிருவருக்கும் மிகவும் பிடித்த ஜெயமோகனைப் பற்றிக் கதைக்காமல் விட்டுவிடுவோமா என்ன?

நாங்கள் பேசிக்கொண்டிருந்த மேசையிலேயே 'முதற்கனல்' கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. அதை, முதலாவது முறை வாசித்துவிட்டு இரண்டாந்தடவையாக வாசித்துக்கொண்டிருந்தார். அ.மு, ஜெமோ குறித்து வியக்காமல் இருந்தால்தான் வியப்பு. நானும், ஜெயமோகன் எழுதும் வேகத்தைப் பற்றி வியந்து சொல்லிக்கொண்டிருந்தேன். சிறுவயதில் திருமூலர்தான் மனதின் வேகத்தை விட எழுதக்கூடியவர் என்று அறிந்திருக்கின்றேன். பதின்மவயதில் எனக்குப் பிடித்தவரான பாலகுமாரன் இப்படி நிறைய எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் ஜெயமோகனின் வேகத்திற்கு முன்னே எனக்குத் தெரிந்த எவ்ரும் நிற்கவேமுடியாது என் உறுதியாய்ச் சொன்னேன். வேகமாய் எழுதுவது மட்டுமில்லை, சொன்னதைத் திருப்பி எழுதாது, அதிகம் வேற்றுமொழிக்கலப்பில்லாது எழுதுவதுதான் இன்னும் வியப்பைத் தருகிறதென்றார் அ.மு.

ஜெயமோகன் மகாபாரதம் எழுதும் வேகத்தையும் ஆழத்தையும் பார்க்கும்போது, ஒரு குழுவே பின்னால் இருந்து இயங்குவது போலிருக்கிறது என்றுதான் எங்கள் இருவருக்கும் சந்தேகம் வந்தது. மகாபாரதம் எழுதுவதோடு மட்டுமின்றி, அதே நேரத்தில் திரைப்படங்களிற்குக் கதை எழுதுகிறார், இரண்டு பேரோடு சண்டைபிடிக்கிறார், மேலும் மூன்று பேருக்கு அறிவுரை கூறுகிறார், இதெல்லாம் ஒரு தனிமனிதரால் செய்யக்கூடியதா என்ற கேள்வி எனக்கும் நிறைய நாளாக உண்டு. இதற்குள் அ.மு, ஜெயமோகன் இப்படி தினம் தினம் எழுதிக்கொண்டிருந்தாலும், அவர் இணையத்தில் பிரசுரிப்பதைவிட ஒரு மாதம் முன்னே பிரசுரிப்பதற்கான அத்தியாயங்களை கைவசம் வைத்திருக்கின்றார் என்றபோது அ.மு அன்போடு தந்த கேக்கைச் சாப்பிட்ட கொண்டிருந்த நானப்படியே உறைந்துவிட்டேன்.

ஏதாவது புதிதாய் என் புத்தகம் வெளிவருகிறதா எனக்கேட்டார். சென்ற வருடம் 2 புத்தகங்கள் கொண்டு வருவதற்கான முயற்சியில் இருந்தேன். இந்த வருடத்திற்குள் எதையாவது ஒன்றையாவது செய்யும் விருப்பமிருக்கிறதென்றேன். நானோ, என் பதிப்பாளரோ இம்முறையேனும் உறங்குநிலைக்குப் போகாதிருக்கக் கடவ.

'உங்களை எல்லோரும் இந்தியாவிற்கு வர அழைக்கின்றார்களே நீங்கள் போகலாமே?' எனக் கேட்டேன். கனடாவிற்கு வந்ததன்பிறகு இன்னும் இந்தியா போகவில்லை, ஆனால் அங்கே போக சற்றுப் பயமாயிருக்கிறது. நிறையக் குழுக்கள் இருக்கின்றார்கள். சர்ச்சைகளில் சிக்கவேண்டியிருக்கும் என்றார். 'நீங்கள் அங்கே போய் நிரந்தரமாகத் தங்கப் போவதில்லைத்தானே. இதெல்லாம் பெரியவிடயமில்லை' என்றேன். அண்மையில் கூட, ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளுக்காய், விமான ரிக்கெட்டோடு தங்குமிட வசதியெல்லாம் தங்கள் செலவிலே செய்து தருகின்றோம் என்று கேட்டிருக்கின்றார்கள். நான் தான் போகவில்லை' என்றார். 'நிச்சயம் ஒருமுறை செல்லுங்கள். முக்கியமாய் புத்தகக்கண்காட்சிகள் நடக்கும் நேரங்களில் போனீர்களென்றால் நிறையப் பேரை ஒரேயிடத்தில் சந்திப்பதும் எளிதாக இருக்கும்' என்றேன். அப்படிப் போகும்போது தனியே போக அலுப்பாயிருக்கும், ஓர் உதவியாளர் தேவையென்று கூறி என்னையும் செலவில்லாது அழைத்துச் செல்லுங்கள் எனச் சொல்ல நினைத்தேன். அவரும், நானும் சேர்ந்து போய் ஜெயமோகனைச் சந்தித்து மகாபாரத வேகத்தையும் சற்றுக் குறைக்கலாம். வாசிப்பவர்களும் பாவமல்லவா. அவர்களுக்கும் சற்று ஓய்வு வேண்டுமில்லையா?

இதை எல்லாவற்றையும்விட, அ,முவின் எழுத்துக்களை மட்டுமின்றி அவர் சார்ந்தியங்கும் இயல்விருதுவரை விமர்சனங்கள் வைத்து, அவர் எழுதிய ஒரேயொரு நாவலையும் அது நாவலில்லையென கிழித்து எழுதியவனோடு ஒரு மணித்தியாலத்திற்கு மேலாய் அதன் சுவடுகள் இன்றி அவரால் இயல்பாய் உரையாட முடிந்திருந்ததும் என்னளவில் சற்று வியப்பானது. மேலும் In our translated worldன் colourful hardcover/normal copy என இரண்டு பிரதிகளைப் பத்திரமாய் வைத்துத் தரவும், முதற்கனலின் ஜெயமோகன் கையெழுதிட்ட செம்பதிப்பையும், வைதேகியின் நூலையும் மனமுவந்து தந்து வழியனுப்பியபோது ஒரு மெல்லிய நெகிழ்வு எனக்குள் பரவியிருந்தது.

தற்செயலான நிகழ்வுகள் அழகானவை மட்டுமில்லை. எமக்கான பிரமைகளைச் சிலவேளைகளில் தகர்க்கவும் தாண்டவும் வைக்கக் கூடியவையாகவும் இருக்கின்றன போலும்.

(முகநூலில்-Elanko Dse- ஜூலை 24 எழுதியது)