கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

எருக்கம்பூ குறிப்புகள்

Friday, September 12, 2014

பகிர்ந்தமையிற்கு நன்றி (Thanks for Sharing)  

நாம் வாழ்க்கையில் எதற்கோ நம்மையறியாமல் அடிமையாகிவிடுகின்றோம். ஆனால் அந்தப் போதையிலிருந்து (addiction) வெளிவருதல், சிலவேளைகளில் நாம் விரும்பினால் கூட அவ்வளவு எளிதாக நிகழ்ந்து விடுவதில்லை. மதுவருந்தல், போதைப்பொருள் பாவித்தல் போன்றவற்றை துருத்திக்கொண்டு தெரியும் போதையான விடயங்கள் என்றாலும், தமிழ்ச் சமூகத்தில் அரசியல் பேசுவதில் கூட பலருக்கு ஒருவகை addiction இருக்கிறதென நினைப்பதுண்டு.

'பகிர்ந்தமையிற்கு நன்றி' என்கின்ற இத்திரைப்படம் பாலுறவிற்குப் போதையாகின்றவர்களைப் பின் தொடர்ந்து பார்க்கின்றது. இவ்வாறு பாலுறவிற்குப் போதையாகின்றவர்கள், தமது நிலைமை விளங்கி தமது கதைகளைக் கூறி போதையிலிருந்து விடுபடுவதற்கான கவுன்சிலிங் பெறுகின்றார்கள். ஒருவர் பாலுறவில் அதீத நாட்டங்காரணமாய் தான் வேலை செய்யும் வைத்தியசாலை மருத்துவரையே இரகசியமாக விடீயோ எடுத்து மாட்டுப்படுகிறார். இன்னொருவர் பாலியல் சார்ந்து எல்லாப் போதையிலிருந்தும், ஐந்து வருடங்களாக விலகி இவ்வாறான போதையிலிருப்பவர்க்கு ஆலோசனை வழங்கி உதவியும் புரிகின்றார்.

ஆனால் இவ்வகையான போதையிலிருந்து விலகினாலும் அது எப்போதும் மீண்டும் பற்றக்கூடிய தீயைப் போல ஐந்து வருடங்களாக ஒழுங்காக இருந்தவரும் மீண்டும் பாலின்பப் போதையிற்கு அடிமையாகின்றார். வாழ்வில் அடுத்த காலடியென நினைத்து காதலில் விழும்போது, இவ்வாறான பாலியல் போதையிற்கு அடிமையானவர்களை காதலிப்பவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதால் முதலில் ஒளிக்கிறார். பிறகு ஒருகட்டத்தில் உண்மையைப் பேசும்போது காதலி -புற்றுநோயால் மார்பகத்தை இழந்த cancer survivor என்றாலும்- இந்தப் போதை விடயத்தை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாதிருக்கின்றது.

எல்லோருடைய வாழ்வும் மீண்டும் தலைகீழாகிறது. ஆனால் இவ்வாறான போதையிற்கு அடிமையானவர்கள் தாங்களாகவே ஒரு சிறு சமூகமாய் இருந்து பிரச்சினைகளில் மாட்டுப்படுபவர்களுக்கு மாறி மாறி உதவி செய்கின்றனர். வெளிச்சமூகம் அவர்களைப் புரிந்து கொள்ள மறுத்தாலும் இச்சிறு சமூகம் அவர்களைத் தாங்கிக்கொள்கிறது/புரிந்துகொள்கின்றது. அவர்களின் வாழ்வு இவ்வாறான ஒரு குறுகிய வட்டத்தில் தொடர்ந்து நகர்ந்து போகின்றது.

இந்தப் படம் அவ்வளவு சிறப்பான படம் என்றில்லாதுவிட்டாலும், போதையிற்கு அடிமையாகின்றவர்களைப் பற்றியும் அவர்களின் நாளாந்த வாழ்க்கை பற்றியும் யோசிக்க வைக்கிறது. அவர்கன் போதையின் அடிமையிலிருந்து மீண்டு வரும்போது கூட, இந்தப் பொதுச்சமூகம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றது என்பதையும் கவனப்படுத்துகிறது.

தவறுகள் செய்யாத வாழ்க்கையென்பது நம் எவருக்கும் வாய்த்துவிடுவதில்லை. நாமறிந்தோ அல்லது அறியாமலோ செய்யும் தவறுகளுக்கே நாம் எப்போதும் மன்னிப்பை யாசிப்பவர்களாக இருக்கின்றோம். அவ்வாறு மன்னிப்புக்களை எதிர்பார்க்கும் நாம் இவ்வாறான போதைகளிற்கு அடிமையானவர்களையும் சற்று அரவணைத்துக்கொள்ளலாம். ஆகக்குறைந்து அவர்களும் நம்மைப் போன்று ஒரு இயல்புவாழ்க்கையைத்தான் யாசித்துக்கொண்டிருப்பார்கள் என்பதையாவது, அவர்களைக் கேலி செய்யாது நம் மனதில் இருத்திக்கொள்ளலாம்


ராஜீவ்காந்தி சாலை

ளவிற்கு அதிகமான பரபரப்புக்களும், விளம்பரங்களும் ஒரு படைப்பிற்கோ/படைப்பாளியிற்கோ எத்தகைய மேலதிக மதிப்பையும் வழங்கிவிடாது என்றும் நம்பும் ஒருவன் நான். 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் வெளிவந்தபோது, நாவலின் உள்ளடக்கம் குறித்து எதுவும் அதிகம் பேசாமலே அதற்கு வழங்கப்பட்ட 'வெளிச்சம்' , அந்நாவலை வாசித்துப் பார்ப்பதற்குத் தயக்கத்தைத் தந்திருந்ததால் -சில மாதங்களுக்கு முன்னும் விற்பனையிற்கு இருந்தபோதும்- அதை வாங்காமல் நகர்ந்திருக்கின்றேன்.

இப்போது அதை ஆறுதலாக வாசித்துப் பார்க்கையில், விநாயகமுருகனின் முதலாவது நாவல் என்றவகையில் கவனிக்கப்படவேண்டிய ஒரு நாவலாகவே தோன்றுகின்றது. நவீன காலத்தின் சிதறிய மனங்களை தகவல் தொழில்நுட்பப் பின்னணியில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும், அந்த 'வளர்ச்சி'யில் உள்ளும் புறமும் தொடர்புபட்ட மனிதர்களின் வாழ்வு பதியப்பட்டிருக்கின்றது.

இன்றைய தகவல் தொழில்நுட்பம் உலகையே உள்ளங்கையில் கொண்டுவந்திருக்கின்றது போன்ற பாவனையைத் தந்தாலும், மனித வாழ்வை இன்னுமின்னும் சிக்கலாக்கி, பல நூறு சில்லுகளாய் மனங்களை உடைத்து, ஒவ்வொருரையும் தனித்தனித் தீவுகளாகவே பெரும்பாலும் ஆக்கியிருக்கின்றது. இந்நாவலும் ஐரி(/டி) துறையில் உச்சத்திலிருப்பவர்களிலிருந்து, இதற்காய் நிலங்களை இழந்து சேரியில் வாழும் மனிதர்கள் வரை எல்லோரையும் ஊடுருவிப் பார்க்கின்றது.

பணத்திற்காகவும், அதன் நிமித்தம் வரும் வசதிகளுக்க்காகவும் பெரும்பான்மையான மனிதர்கள் இந்நாவலில் ஓடிக் கொண்டேயிருக்கின்றார்கள். அவர்கள் விரும்பிய சிலவற்றை அடைந்தபின்னும் இன்னுமின்னும் ஆசைகள் பெருகப் பெருக எதெதெற்கோ தொடர்ந்தும் அலைந்துகொண்டேயிருக்கின்றார்கள். இலட்சங்களில் உழைத்தால் கூட, இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு எதையும்/எவரையும் திருப்திப்படுத்தமுடியாதென இன்னுமின்னும் தேடப்போய் தங்களைத் தொலைத்தும் கொள்கிறார்கள்.

மனிதர்கள் மனம் பிறழ்கிறார்கள், சுமூகமான உறவுகள் சிதைகின்றன, மாடிகளிலிருந்து குதித்து அடிக்கடி தற்கொலை செய்கின்றனர். வெளிநாட்டு நிறுவனங்களுக்காய்ச் செய்யும் ஒவ்வொரு ப்ரஜெக்ட்டைப் போல, இவ்வாறாக இறந்துபோகும் மனிதர்களையும் எளிதில் மறந்துவிட்டு அடுத்து என்னவென அலைபாய்கின்றார்கள்.எந்த நேரத்திலும் சிதையும் மனோநிலையுள்ள மனிதர்களாய் தாங்களும் ஆகிவிடக்கூடும் என்ற நினைப்பை ஒத்திவைத்துவிட்டு வேலைக்குள் இன்னும் மூழ்குகிறார்கள்.

ஐரி நிறுவனங்கள் பற்றி அவ்வளவு பரிட்சயமில்லாதவர்களுக்கு இவ்வளவு இருட்டு நிறைந்த உலகமா அது என இந்நாவலை வாசிக்கும் ஒருவரை அச்சமூட்டக்கூடும். ஆனால் இன்றைய மெய்நிகர் உலகில் இந்நாவலில் குறிப்பிடுபவை எங்கேயும் எந்தச் சூழலிலும் நடைபெறுபவையே/நடைபெறக்கூடியவையே.

இந்நாவலிற்குள் இருக்கும் பெரும் பலவீனம் என்னவென்றால். நாவலின் எந்தக் கதாபாத்திரங்களுக்குள்ளும் ஆழமாய் இறங்கிச் செய்யவில்லை என்பதே. நாவல் முழுதும் தொடர்ந்து வரும் ப்ரணவ் செய்யும் தற்கொலை கூட ஏன் மனதை அவ்வளவாய்ப் பாதிக்கவில்லை என்று யோசிக்கவேண்டியிருக்கிறது. ஐரி துறையில் நீண்டகாலம் இருக்கும் பிரணவிற்கு ஆகக்குறைந்தது அது இயங்கும் சூழல் தெரியும் என நாவலில் தெளிவாகக் கூறப்படும்போது, சடுதியாக வேலையிழத்தலோ அல்லது மனைவியின் பிற ஆண் மீதான உறவோ , இவ்வாறான ஒரு முடிவை எடுக்க வழிவகுக்கச் செய்யுமா என்கின்ற சந்தேகம் வாசிப்பவருக்கு வரக்கூடும்.

அதுபோலவே தற்கொலை செய்யும் இரண்டு (காதல்?) சோடிகளின் தற்கொலைகளும் இருக்கின்றன. கணவன் இருக்கின்றபோதும், எல்லோருக்கும் பொதுவாய்த் தெரியக்கூடியதாய் வேலைத்தளத்தில் உள்ள ஆணோடு நெருங்கிப் பழகவும், அமெரிக்கா ஆன்சைட் போகின்றபோது அங்கு சந்திக்கும் கறுப்பின சக வேலையிட ஆணோடு உறவு கொள்கின்ற ஒரு பெண், எப்படி தற்கொலையை உடனே தேர்ந்தெடுப்பார் எனறும் கேள்விகள் வருகின்றன. ஏதோ ஒருவகையில் துணிச்சலும், எல்லாவற்றையும் சந்திக்கக்கூடிய தைரியமுள்ள ஒரு பெண் உடனே இப்படி தற்கொலையிற்கு முயல்வாரா என நாவலின் போக்கில் நின்று யோசித்துப் பார்த்தால், அவரின் முடிவில் பெரிதாய் பாதிப்பே வருவதில்லை. ஜெயமோகனோ (அல்லது யாரோ) முன்பு ஓரிடத்தில் எழுதியதுதான் நினைவிற்கு வருகின்றது, யதார்த்தத்தில் மரணம் தெருவில் வாகனம் அடித்துவிட்டாற்போல சடுதியாய் வரலாம். ஆனால் எழுத்தில் வைக்கும்போது அதற்கான காரணங்களை முன்வைத்தே எழுதவேண்டும். இல்லாவிட்டால் எத்தகைய பாதிப்பும் வாசிப்பவருக்கு வரப்போவதில்லை என்று. அவ்வாறே இந்நாவலில் பல பாத்திரங்களின் முடிவுகளும் எதையோ தவறவிட்டதாய் அந்தரத்தில் தொங்கி நிற்கின்றன.

காமத்தை, அது 'வழிதவறிய' உறவாய் இருந்தால் கூட, அருமையாக விபரித்துச் சொல்லக்கூடிய இடங்களையெல்லாம், நாவல் போர்னோ வகையாய் விபரித்தபடி போகின்றது. 'தகாத' உறவாய் இருந்தால் கூட, அந்த குற்றவுணர்வை மீறிப் பொங்கும் காமத்தை, காமத்திற்காய் எல்லாவற்றையும் துறந்துவிடத் தயாராகும் மனித மனத்தின் விந்தைகளை எல்லாம் எழுத்தில் வைக்காமல் தவறவிடப்பட்டிருக்கின்றன. மேலும் காமம் என்பது காமத்தை அப்படியே என்ன நடந்திருக்கும் என்பதைச் சொல்வதுமல்ல. உதாரணத்திற்கு 'என் பெயர் சிவப்பில்' காமத்தை விபரிக்கும் பக்கங்களை விரல் விட்டு எண்ண்விடலாம் (ஒன்றிரண்டு இடங்கள் மட்டுமே). ஆனால் நாவல் முழுதுமே காமம் மெல்லிய நீரோடையாய் ததும்பியபடி இருப்பதை வாசிப்பவர்கள் உணரும்படி ஒரான் பாமுக் எழுதியிருப்பார். ஆகக்குறைந்தது விநாயமுருகன் இந்நாவலில் அப்படி எழுதமுடியாமல் விட்டால் கூட, எரோட்டிக்கா வகை எழுத்து நோக்கியாவது நகர்ந்திருக்கலாம்.

நாவல் முழுதும் ஆண் பாத்திரங்களே தொடர்ந்து பேசியபடியிருக்கின்றன. எல்லாப் பெண் பாத்திரங்களும் வரும் ஆண் பாத்திரங்களுக்கு ஊடாக அறிமுகப்படுத்தப்படுகின்றனவே தவிர, அவை தம் கதையை/வாழ்வை சொந்தக் குரலில் கூறும் சாத்தியங்களே இல்லாமற் செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் பிராமணர்கள்/மலையாளிகள் மீது பொதுப்படையாக வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்களைத் தவிர்த்திருக்கலாம் (கவனிக்க, விமர்சனம் வைப்பதைக் கூறவில்லை).

இவை, நாவலில் வரும் எதிர்மறையான விடயங்கள் என்றாலும், இவற்றை வைத்து நாவலை நிராகரிக்க வேண்டியதில்லை. விநாயமுருகனின் முதல் நாவல் என்றவகையில் இன்னும் நிறையப் பயணிக்கப் போகின்றவரின் முதலடியென இந்நாவலை வரவேற்கலாம்.


பிறகு (With You, Without You)

த்திரைப்படம். மட்டுமில்லை படத்தின் பிறகான பிரசன்னாவோடான உரையாடலும் இன்னும் திரைப்படத்தோடு ஒன்றிக்க வைத்தது. கடந்தகால வன்முறையின் வரலாற்றை மறந்து (அல்லது உதறித்தள்ளி விட்டு) இனங்களுக்கிடையிலான மேலோட்டமான மீளிணக்கம் எப்படி தோல்வியுறும் என்பதை தனிப்பட்ட மனிதர்களுக்கிடையிலான உறவின் மூலம் மிக ஆழமாக பிரசன்னா இத்திரைப்படத்தில் தந்திருக்கின்றார்.

மிகக் குறைந்த பாத்திரங்களோடும், ஒரு குறுகிய பின்னணி நிலவியலோடும், மிகச் சொற்ப உரையாடல்களோடும் எப்படி மனதைப் பிசையுமொரு படத்தைத் தரலாம் என்பதற்கு இதொரு இன்னொரு உதாரணம். சிக்கலான படிமங்களோடும், எல்லாவற்றையும் 'சொல்லிவிடும்' எத்தனிப்புக்களுமின்றி பல்வேறு இடங்களில் விடப்படுகின்ற வெளியிலிருந்தும் பார்வையாளர் தமக்கான ஒரு பிரதியை(படைப்பை) உருவாக்கிக்கொள்ளும் சுதந்திரமும் தரப்பட்டிருக்கின்றது என்பது என்னளவில் முக்கியமானது. எவற்றிலிருந்தும் நாம் தப்பிவிடமுடியும் ஆனால் நமது மனச்சாட்சிகளிடமிருந்து என்றைக்குமாய்த் தப்பிவிடமுடியாது என்பதை ஒரு பெரும்பான்மை இனத்திடமிருந்து வரும் தெளிவான குரல் கவனிக்கத்தக்கது.

சிலரின் படைப்புகளைப் பார்த்து/வாசித்துவிட்டு அவர்களோடு உரையாடினால், இதைவிட அவர்களைச் சந்திக்காது விட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என யோசிப்போம். எனக்கு இந்தப் படத்தைப்போலவே பிரசன்னாவோடு நிகழ்த்திய உரையாடலும் அதிக நெருக்கத்தைத் தந்தது. இன்று அறியப்பட்ட நெறியாள்கையாளராக இருந்தாலும், நாம் சுட்டும் தவறுகள்(விமர்சனம்) போன்றவற்றை மிகப் பணிவாகக் கேட்டும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பிரசன்னாவில் பிடித்த இன்னொரு விடயம். இவர்களும் இவர்களின் படைப்புக்களுமே இன்னும் தாம் இன்னொரு இனத்தின் மீது நிகழ்த்திய வன்முறையை அறியாத (அல்லது அறிய விரும்பாத) பெரும்பான்மையினத்தவரின் மனச்சாட்சிகளை அசைக்க நம் முன் வைக்கப்படும் நம்பிக்கைக் கீற்றுக்கள் என நம்புகிறேன்.

"With you Without you" - What a movie. I am not only very impressed by the movie but also the conversation with the director. This movie again reminds us that there is no real reconciliation without knowing the history of violence between two ethnic communities in Sri Lanka. This movie have lots of metaphors and as well as leave enough space to audience to think beyond the movie. It is very hard to create a movie with handful of characters and a fixed small landscape, but this movie also impress us with less dialogues. I am also very moved with the conservation with Prasanna. Yet he is known director everywhere, he is very humble to hear audience's point of views. Thanks Prasanna Vithanage, Though there is long way to travel to resolve our ethnic conflicts, but you give a ray of hope that there are still few sinhalese people worrying (or in other words feeling guilty) of what happened to Tamil people in Sri Lanka.

0 comments: