கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 120

Thursday, December 04, 2025

 

ப்யூகோவ்ஸ்கியின் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தபோது 'தொலைந்த தலைமுறை' (Lost Generation) என்ற கவிதையில் கூறப்படுபவர்கள் யாரெனத் தேடத் தொடங்கினேன். 'தொலைந்த தலைமுறை' என்பது முதலாம் உலக யுத்தத்தின்போது தோன்றிய தலைமுறையைக் குறிப்பிடுவதாகும்.  அன்றைய கால எர்னெஸ்ட் ஹெமிங்வே போன்ற எழுத்தாளர்கள் இந்தச் சொல்லை பிரபல்யபடுத்தியவர்கள். 


சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவரல்ல. ஆனால் அந்தத் தலைப்பிடப்பட்ட கவிதை அன்றைய காலத்தைய ஒரு தம்பதியினரைப் பற்றிப் பேசுகின்றது.

Uploaded Image


இந்த அமெரிக்க இணையர், 1920களில் பிரான்ஸில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். ஒரு பெரும் மாளிகையை வாடகைக்கு எடுத்து கேளிக்கை விருந்துகளை நடத்தியவர்கள்.   பல படைப்பாளிகள் அவர்களின் மாளிகைக்குச் சென்று கேளிக்கைகளில் பங்குபற்றியவர்கள் மட்டுமின்றி, அங்கிருந்து தமது படைப்புக்களை எழுதியுமிருக்கின்றார்கள்.

அன்றைய 'தொலைந்த தலைமுறையை'ச் சேர்ந்த ஹெமிங்வே, ஸ்காட் பிட்ஸலாண்ட், ஹென்றி மில்லர் மட்டுமின்றி, டி.எச். லோரன்ஸ், அனாநிஸ் (மில்லரின் தோழி), ஜேம்ஸ் ஜாய்ஸ், வில்லியம் பாக்னர், குட்டி இளவரசன் எழுதிய 'அந்துவான் தூ செச் எக்சுபாரி உள்ளிட்ட பலரின் ஆரம்ப காலப் படைப்புக்களை வெளியிட்ட ஒரு பதிப்பகத்தையும் இந்தத் தம்பதியினர் அன்றைய காலத்தில் நடத்தியிருக்கின்றனர்.

இந்தத் தம்பதியினர் எந்தளவுக்கு பிரபல்யமானவர்களோ, அந்தளவுக்கு சர்ச்சைகளிலும் சிக்கியவர்கள். செல்வந்தவர்கள் எந்தளவுக்கும் தமது வாழ்க்கையைச் சீரழித்துப் பார்க்க முடியும் என்பதற்கு இவர்கள் நல்லதொரு உதாரணம் எனவும் சொல்லலாம்.

***
ஹரி, கார்ஸி க்ரோஸ்பி என்பவர்கள்தான் இந்தத் தம்பதியினர்.

ஹரி முதலாம் உலக மகாயுத்ததில் ஹெமிங்வேயைப் போல பங்குபற்றியவர்.  ஹெமிங்வேயைப் போல ஹரியும் போர்க்களத்தில் மயிரிழையில் படுகாயங்களோடு தப்பி உயிர் பிழைத்தவர். அதன்பிறகு ஹரி தன் வாழ்வை 'ஒரு கட்டற்ற வாழ்க்கை'யாக வாழவேண்டும் என்று தீர்மானித்து பெருங்குடியிலும், போதைப் பொருட்களிலும், பெண்களிலும் தன் வாழ்வைத் தொலைத்தவர். 20களில் இருந்த ஹரி, ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளோடு இருந்த கார்ஸியை மணம் முடிக்கின்றார்.

இதன்பின் கார்ஸியோடு பிரான்ஸுக்கு சென்று வாழ்கின்றபோது, அன்றைய எழுத்தாளர்களுக்குச் சொர்க்கபுரியாக இருந்த பாரிஸில் இவர்களின் மாளிகை ஆடம்பர விருந்தோம்பல்களை அறிமுகப்படுத்துகின்றது.

ஹரி கவிதைகளை எழுதியவர். ஆனால் கார்ஸியோடு வாழும்போது இன்னும் 20 வருடங்களில் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்வது என்று திகதியையும் குறிப்பிட்டு வாழ்கின்றார்கள். அந்தத் தற்கொலை என்பது விமானத்தில் இருந்து குதிப்பது என்றும், தமது அஸ்தி எப்படி தூவப்படவேண்டும் என்றும் உயிலை எழுதும்வரை போயிருக்கின்றது.

Uploaded Image

ஹரிக்கு கார்ஸியைத் தவிர்த்து பல உறவுகள் முகிழ்கின்றன. பலர் தன்னைத் திருமணம் செய்ய விரும்புகின்றனர் எனவும் கார்ஸியிற்குச் சொல்கின்றார். பிரான்ஸின் நோர்மாண்டி, வட ஆபிரிக்காவின் மொராக்கோ என்று இவர்கள் பயணம் செய்யும்போது இளம்பிள்ளைகளைச் சேர்த்துக் கொண்டு வந்து கூட்டுக்கலவி, தற்பால் உறவு, சோடிகளை மாற்றி பாலியல் உறவு என்று நாம் நினைத்தே பார்க்க முடியாத ஒரு வாழ்வை ஹரியும், கார்ஸியும் வாழ்ந்திருக்கின்றார்கள்.

ஹரியின் கட்டுக்கடங்கா பாலியல் உறவுகளின் நிமித்தம் கார்ஸி ஹரியை விட்டு விலகிப் போகின்றார். ஹரி பின்னர்  ஜோஸப்பின் என்கின்ற பெண்ணோடு சேர்ந்து அவரது 31 வயதில் தற்கொலை செய்கின்றார். அந்தப் பெண்ணுக்கோ 20 வயது. முதலில் இதை இருவரின் தற்கொலை நிகழ்வு எனச் சொல்லப்பட்டாலும், பின்னர் அது கொலை (ஜோஸப்பின்)/தற்கொலை (ஹரி) நிகழ்வு எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு கட்டற்ற வாழ்வை  போரின் வடுக்களால் வாழ்ந்து முடித்த ஹரி, மிகப்பெரும் செல்வந்தரான ஜே.பி.மார்கனின் (J.P.Morgan) பெறாமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரியின் தற்கொலையின் பின் அவரின் மனைவியாக இருந்த கார்ஸி அதே பதிப்பகத்தை 1920களைப் போல, 30களிலும்  நடத்தியவர். பின்னர் கிட்டத்தட்ட இதே ஆடம்பர விருந்துகளையும், எழுத்தாளர் கொண்டாட்டங்களையும் அமெரிக்காவிலும் கார்ஸி செய்திருக்கின்றார். அப்படித்தான் சல்வடோர் டாலி இவரின் இருப்பிடத்தில் இருந்து தனது சுயசரிதையை எழுதியிருக்கின்றார். இந்த 1940களில்தான் கார்ஸி, ப்யூகோவ்ஸ்கியின் முதலாவது சிறுகதைத் தொகுப்பை தனது பதிப்பகத்தினூடாக வெளியிட்டிருக்கின்றார்.

கார்ஸிக்கு பல காதலர்களும், சில திருமணங்களும் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் அவரின் கலை மீதான ஈர்ப்பு ஓவியங்கள்/ஸ்டூடியோக்கள் என அவர் இருந்த நகரத்தில் தொடங்குவதற்கான முன்னேடுப்புக்களைச் செய்திருக்கின்றன. மேலும் கார்ஸிக்கு இன்னொரு அடையாளமும் இருக்கின்றன. அதுவரை மிக இறுக்கமாக, நடனம் ஆடும்போதுகூட இடைஞ்சல் கொடுக்கும் அன்றைய கால  brassiere ஐ, நவீனமயமாக வடிவமைத்தவர் என்று பாராட்டப்படுகின்றார்.   

கார்ஸி 70களில் மரணமுற்றபோது, அவர் 'தொலைந்த தலைமுறை'யின் அன்றையகால புலம்பெயர் எழுத்தாளர்களின் ஞானத்தாய்' எனவும் குறிப்பிடப்படுகின்றார்.

***

ப்யூகோவ்ஸ்கி இந்தத் தம்பதியினரின் சீரழிந்த வாழ்வை பல கவிதைகளில் விமர்சிக்கின்றார்.  ப்யூகோவ்ஸ்கி  முதலாவது சிறுகதைத் தொகுப்பை வெளியிட கஷ்டப்பட்டபோது, கார்ஸிதான் அதைத் தனது வெளியிட்டிருக்கின்றார். ஆனால் பின்னர் ப்யூகோவ்ஸ்கி கார்ஸியின் சுயசரிதையை வாசித்துவிட்டு கார்ஸி-ஹரியை மட்டுமின்றி, அவர்கள் ஆட்டுவிக்க ஆடுகின்ற பொம்மைகள் போல இருந்த அன்றைய கால எழுத்தாளர்களையும் ப்யூகோவ்ஸ்கி மன்னிக்கத் தயாரில்லை என்கின்றார்.
Uploaded Image
இந்தளவுக்கு அவர் பட்டியலிடுகின்றவர்கள் அசலான படைப்பாளிகளாகவும், ப்யூகோவ்ஸ்கிக்கு பிடித்தவர்களாகவும் இருந்தால் கூட அவர்கள் இத்தகைய விமர்சனங்களில் இருந்து தப்ப முடியாது என்பதுதான் ப்யூகோவ்ஸ்கியின் வாதமாக இருக்கின்றது.

எவ்வாறு இந்த எழுத்தாளர்கள் ஹாரி- கார்ஸி தம்பதியினரி   விருந்தோம்பல் இடங்களிலும், கடற்கரைகளிலும் அவர்களோடு அறிவுஜீவித்தனமாக நின்றுகொண்டு, ஏதோ இது ஒரு கலையின் வெளிப்பாடு என்பது போல காட்சி கொடுக்கின்றார்களே, இவர்களில் ஆகக்குறைந்த ஒரு எழுத்தாளராவது, இந்த முட்டாள்தனங்களில் எங்களுக்கு துளியும் உடன்பாடில்லை என்று நேர்மையாகச் சொல்லி வெளியேறுவார்கள் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்' என்று ப்யூகோவ்ஸ்கி கார்ஸியின் சுயசரிதையை வாசித்தபோது எழுதிய கவிதையில் சொல்கிறார்.

"..the lady published one of my first
short stories in the
40's and is now
dead, yet
I can't forgive either of them
for their rich dumb lives
and I can't forgive their precious toys
either
for being
that. "

ஓர் கவிதையின் (அல்லது படைப்பின் மூலம்) இங்கே கடந்த காலம் மீளக் கொண்டு வரப்படுகின்றது. ஹெமிங்வே, ஹென்றி மில்லர் போன்றவர்களை ஒரளவு ஆழமாக வாசித்தபோது, இந்தப் பதிப்பகம் குறித்து கேள்விப்பட்டபோதும்  இநதத் தம்பதியினரின் வாழ்க்கையைப் பற்றி அவ்வளவாக நான் அறிந்ததில்லை. இவர்களுக்குத்தான் மில்லர் வேறொரு புனைபெயரில் ஒரு நாவலை பணத்தேவையின் நிமித்தம் எழுதிக் கொடுத்திருந்தார்,

ப்யுகோவ்ஸ்கியின் இந்தக் கவிதையே கார்ஸி/ஹரி வாழ்க்கையைத் தேடிப் பார்க்க என்னை வைத்திருந்தது. ஆக இந்தத் தம்பதியினரின் கட்டற்ற வாழ்க்கையாலும்/தற்கொலைகளாலும் காலத்தில் மறக்கடிக்கப்பட்ட இவர்களை அவர்களின் பெரும்பணம் கூட நினைவூட்டாததை, ஓர் எளிய கவிதை நமக்கு கிட்டத்தட்ட நூற்றாண்டுக்குப் பிறகு அந்த 1920களை நினைவுபடுத்துகின்றது என்பது எவ்வளவு வியப்பானது.

***

 

இளங்கோவின் ”நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்”-மைதிலி தயாநிதி

Tuesday, December 02, 2025


னடாவில் வாழும் எழுத்தாளரான இளங்கோவின் ”நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்” எனும் சிறுகதைத் தொகுப்பு  சென்னையிலுள்ள  டிஸ்கவரி ப்பளிகேஷன்ஸ்  நிறுவனத்தால் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.  இளங்கோவின் எட்டாவது நூலான இது மொத்தம் 142 பக்கங்களிற் பத்துச் சிறுகதைகளைக் கொண்டுள்ளது.  இந்நூல் தொடர்பான இலக்கியப்பகுப்பாய்வை அடிப்படையாக கொண்ட அறிமுகம் ஒன்றினை வழங்குதலே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.

இத்தொகுப்பினை வாசித்தபோது, எழுத்தாளரின் பின்னணி, நோக்கம் என்பவற்றை விட, அவரின் எழுத்து எவ்வாறு வாசகர் மனதில் அர்த்தங்களை உருவாக்குகிறது என்பது எனக்கு முக்கியமாகத் தெரிந்தது.  குறிப்பாக, இளங்கோ ”உறைந்த நதி”எனும் சிறுகதையின் இறுதியிற் குறிப்பிட்டுள்ள பிரெஞ்சு கோட்பாட்டாளர் ரோலண்ட் பார்த்ஸின்  (Roland Barthes) "ஆசிரியர் இறந்துவிட்டார்"  (The Death of the Author)  என்ற கருத்துநிலையுடன் எனக்குப் பெரும் இணக்கம் உண்டு.  ”நூலாசிரியர் பற்றிய விடயங்கள் வாசகரின் இலக்கிய அனுபவத்துக்குப் புறம்பானவை. எனவே இலக்கியப் படைப்பு எவ்வாறு விளங்கிக்கொள்ளப்படல் வேண்டும் என்பதை ஆசிரியர் பற்றிய செய்திகள்  தீர்மானிக்கக்கூடாது” என்று பார்த் அக்கட்டுரையில் வாதிடுகிறார். இலக்கியப் பிரதியின் அர்த்தம் பிரதியுடனான வாசகர்  தொடர்புகளிலிருந்தே பிறக்கிறது.  எனவே "ஆசிரியர் என்ன சொன்னார்?" என்பதிலிருந்து "பிரதி  என்ன சொல்கிறது?" அல்லது "வாசகர் அதில் என்ன காண்கிறார்?" என்பது நோக்கி இக்கோட்பாடு நம் கவனத்தைத் திருப்புகிறது.

அவ்வகையில், இளங்கோவின் கதைகள் வாசகரின் பங்களிப்பைப் பெரிதும் வேண்டுவன. வாசகர் பிரதியுடன் கொள்ளக்கூடிய ஆழ்ந்த ஈடுபாடு மூலமே இக்கதைகளுக்கான  அர்த்தங்களை அவர்கள் உருவாக்கிக்  கொள்ள முடியும்.  அத்தகைய வாசிப்பு அனுபவங்களை உருவாக்குவதற்குப் பன்முகப்பின்னற்கதைகள் (layered narratives), மேம்பட்ட கதைசொல்லல் உத்திகள் (advanced storytelling techniques) குறியீடும், உருவகமும் (symbolism and metaphor), வேண்டுமென்றே விடப்பட்ட கதை இடைவெளிகளும் மௌனங்களும் (intentional gaps and silences)  போன்ற நுட்பங்கள் இத்தொகுப்பில் முக்கிய இடம் வகிக்கின்றன  இவை குறித்த  சுருக்கமான விளக்கங்களை அளிக்கும் அதே சமயம், இக்கட்டுரையைக் கதைகளில் அவதானிக்கக் கூடிய பொதுப்பண்புகளான களப்பின்னணி (setting), பாத்திரங்கள், கருப்பொருட்கள், கையாளப்படும் மொழியின் இயல்பு  என்பவை குறித்த அறிமுகத்துடன் தொடங்குகிறேன்.
 
இத்தொகுப்பில் காணப்படும் கதைகளின் களங்கள்  வேறுபடுகின்றன. அதற்கேற்ப, அவை பேசும் விடயங்களும் வேறுபடுகின்றன. இலங்கையை மட்டும் நிகழிடமாகக் கொண்ட  மூன்றுகதைகள் வரலாறு, அரசியல், காதல், வன்முறை, துயரநினைவுகள் முதலானவற்றுடன் ஆழமான தொடர்பு கொண்டவையாகக் காணப்படுகின்றன.  ஆனால், கனடாவை நிகழிடமாகக் கொண்ட ஐந்து கதைகள் சமூக வரலாற்றுத் துயரங்களை விடுத்துப் புலம்பெயர் வாழ்க்கையில் தனிமனிதர் எதிர்கொள்ளும் தனிமை, அந்நியமயமாதல் (alienation), மனநலச்சிக்கல்கள், பாலியல் நோக்குநிலை (sexual orientation),  வெவ்வேறு இனங்களுக்கிடையிலான  காதலுறவு, தனிநபர் ஆன்மிகம் (personal spirituality)  போன்ற விடயங்களை ஆராய்கின்றன.  தாய்லாந்தை நிகழ்களனாகக்  கொண்ட  ”இயக்கக்காரி”  எனும் கதை அதிர்ச்சி (trauma), நினைவு (memory), பாலின அடிப்படையிலான வன்முறை (gendered violence) ஆகிய கருப்பொருள்களை மையப்படுத்துகிறது. இலங்கையையும் கனடாவையும் நிகழிடங்களாகக் கொண்ட ”கௌரி” எனும் சிறுகதை பதின்மவயதுக் காதல், வன்முறை, புலப்பெயர்வு, போருக்குப் பிந்தைய புலம்பெயர்ந்தோர் அரசியல் என்பவற்றைப் பேசுகிறது.


இக்கதைகளில் தோன்றும் பெரும்பாலான கதைமாந்தர்கள் போர்களால், அரசியல் ஒடுக்குமுறைகளால், மற்றும் பல்விதமான உளச்சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களில் சிலர் போரின் ஆறாவடுவைச் சுமந்து கொண்டு, அதன் பின்விளைவுகளோடு வாழ்பவர்கள். சிலர் புலம் பெயர்ந்த வாழ்க்கையின் பெறுபேறுகளாகும் தனிமை, அந்நியப்படுகை, அடையாளச் சிக்கல் போன்றவற்றால் தவிப்பவர்கள் . எடுத்துக்காட்டாக, மனநோய்கள் தரக்கூடிய சவால்கள், தனிமை ஆகியவற்றின் தீர்க்கப்படாத சிக்கல்களை முன்னிலைப்படுத்தும் “ஏகாந்தம் என்பதும் உனது பெயர்” எனும் கதை இலக்கியத்தில்  அதிகம் பேசப்படாத ஒரு தனிநபருக்காகக் குரல் கொடுப்பதைக் காண்கிறோம். தனது பாலியல் நோக்குநிலையை வெளிப்படுத்த முடியாத பெண்ணும், பிள்ளைப்பருவப் பாலியல் அத்துமீறல்களினால் பாதிப்புற்ற பெண்ணும் இத்தொகுப்பில்  இடம் பெறுகின்றனர்.  சமூகத்துடன் பூரணமாக ஒன்றிணைய முடியாத நிலையில் உள்ள, ஒருவித மன வெறுமையுடன் வாழும் இவர்களை விளிம்புநிலை மனிதர்கள் (marginalized) என்று கூறலாம்.

மேலும், இத்தொகுப்பு உளரீதியான பிரச்சினைகளுக்குக் குறிப்பிடத்தக்க வகையில்  முக்கியத்துவம் அளித்திருக்கக் காணலாம்.   இப்பிரச்சினைகளை  (அ) உளவடு ((trauma) மற்றும் (ஆ) உளவியல் நோய்கள் என இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். இவ்வகைப்பாட்டை இலக்கிய வாசகர் என்ற ரீதியில் செய்கிறேனே தவிர உளவியலாளர் நிலைமையில் இருந்தன்று என்பதைக் கவனிக்கவும்.  “இயக்கக்காரி” எனும் கதையில், இளம் வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான கதாநாயகியின் மனரீதியான பெரும்பாதிப்பு வெளிப்படுகிறது.
அதேபோல், ”வெள்ளவாய்க்கால் வைரவர்” கதையில், இந்திய அமைதிப்படையின் அத்துமீறல்களால் பாதிக்கப்படும் சிறுவனின் உளவியற் பாதிப்பு மிக யதார்த்தமாகக் காட்டப்படுகிறது. இதைவிட, தனிமையால் பாதிக்கப்பட்ட மற்றும் நீடித்த உளவியல் சிக்கல்களால் தவிக்கும் கதாபாத்திரங்களையும் சில கதைகள் முன்வைக்கின்றன. 
 
”ஏகாந்தம் என்பதும் உனது பெயர்” எனும் கதையில், bipolar disorder கொண்ட ஒரு பாத்திரத்தைச் சந்திக்கிறோம். ”உறைந்த நதி” எனும் கதையில், தன்னுடைய பண்பாட்டுக்கு அந்நியமான ஒரு பெண்ணைக் காதலித்து, அந்த உறவின் முறிவால் உளவியற் சிதைவுக்குள்ளாகும் ( psychological breakdown) கதாபாத்திரம் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. அதேசமயம் நவீன வாழ்க்கை இருத்தலியத்தில் உணரப்படும் தவிர்க்கமுடியாத தனிமை  (inescapable loneliness), அந்நியமாதல்  (alienation) என்பவற்றைப் புலம்பெயர் சமூகத்தில் இளைஞர்கள் எதிர்கொள்கின்றனர் என்பதை ”Mr. K” , ”நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்” போன்ற கதைகளும் உணர்த்துகின்றன.

பொதுவாக, இந்தக் கதைகள் பாலுணர்வை நுட்பமாகக் ககையாளுகின்றன. இது வெறும் உடல் ரீதியான செயல் என்பதைத் தாண்டி, ஆழ்ந்த உளவியல், இருத்தலியல் என்பவற்றின் பரிமாண வெளிப்பாடாகவே கதைகளில் சித்திரிக்கப்படுகிறது. உதாரணமாக, ”ஏகாந்தம்  என்பதும் உனது பெயர்” எனும் கதையில் bipolar disorder ஆல் பாதிக்கப்பட்ட பாத்திரத்தின்  எதிர்பாராத விதமாக மாறக்கூடிய உளநிலைகள் , நிலையான உறவுகள் உருவாகுவதைச் சிக்கலாக்குகின்றன. அதே சமயம். குறிப்பிட்ட மனச்சூழலில் பாலியல் நெருக்கமானது  தற்காலிகமாக இருந்தாலும் கூட, சுயத்தினை உறுதிப்படுத்துவதாக அமையக் காணலாம். அதே போன்று ”Mr. K” கதையில் Kafka இன் நூல்களில் ஈடுபாடு கொண்ட இளைஞனுக்கும், அவன் காதலிக்குமிடையில் உள்ள உடல்ரீதியான நெருக்கம் குறித்து விரிவாகப் பேசப்படுகிறது. இது  உடல் ரீதியான நெருக்கத்தின் மூலம் ஒருவித இருத்தலியல் அடித்தளத்தை அவன் கண்டறிகிறான் என்பதைக் காட்டுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக “நான் உன்னை முத்தமிட்டபோது புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்” என்ற கதையில், பாலியல் உறவு  தாந்திரிக பௌத்தத்தின் அடிப்படையில் இருத்தலிய விடுதலைக்கான, ஆன்மிக மீட்சிக்கான  வழியாகச் சித்திரிக்கப்படுகின்றது.  புத்தரின் புன்னகையுடன் முத்தத்தை இணைப்பது - சரீர இணைப்புக்கும் ஆன்மிக விழிப்புணர்வுக்கும் இடையிலான ஒரு சந்திப்புப் புள்ளியைக் குறிக்கிறது. சிற்றின்பமும் புனிதமும் ஒன்றையொன்று தொடும் புள்ளியை நோக்கிக் கதை நகர்கிறது. அத் தொடர்பு ஏற்பட்ட தருணம் விடுதலையை உணர்தலின் தருணமாக மாறுகிறது. அது “ என்னிலிருந்து எனது நானை விடுவித்துக்கொண்ட சுதந்திரம்”  ஆகும். இருத்தலிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் இளைஞன் கண்டு அடைந்த விடுதலை இது.  இலங்கையைக் களமாகக் கொண்ட”முள்ளிவாய்க்கால்”, ”கௌரி” எனும் கதைகளில் இடம் பெறும் பதின்மவயதுக் காதற் சித்திரிப்பை மேற்கூறியவற்றுடன் ஒப்பிட்டுப்  பார்க்கலாம்.

த் தொகுப்பிலுள்ள கதைகளில் நிகழ்வுகளோ, பாத்திரங்களோ இலட்சியமயப்படுத்தப்படுவது (romanticization) தவிர்க்கப்படுகிறது. இதனால் கதைகளின் எழுத்துநடை, பெரும்பாலும்,  புறவயமானதாயும் உணர்ச்சிகளை எழுப்பாததாயும் அமைகிறது. கதைசொல்லி தன் சொந்த நினைவுகளை, அனுபவங்களை அமைதியாக ஆவணப்படுத்துவது போன்றதொரு யதார்த்தமான நடை இங்கு காணப்படுகின்றது. பேச்சுத்தமிழ்ப் பிரயோகமோ அல்லது ஆங்கில வார்த்தைப் பிரயோகங்களோ இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆனால் பெரும்பாலும் நியமத் தமிழே (standard Tamil) பயன்படுத்தப்பட்டுள்ளது.  

அது அவ்வப்போது புனைவுக்கும் அல்புனைவுக்கும் (non-fiction) இடையிலான எல்லையைத்  தெளிவற்றதாக்குகிறது. எனினும், நான் கூறுவது எல்லாக்கதைகளுக்குக்கும் பொருந்தும் என்றும் சொல்ல முடியாது.  எடுத்துக்காட்டாக,  ”நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார் ” என்ற கதையிலும் ”வெள்ளவாய்க்கால் வைரவர் ” என்ற கதையிலும் இந்த ஆவணத் தமிழ் நடையின் நெகிழ்வுத்தன்மையை அவதானிக்கலாம்.  ”நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார் ”  என்ற கதையில் மொழியானது  உணர்ச்சி நிறைந்ததாய் சரளமாகவும், இயல்பாகவும், தெளிவாகவும் நீரோடை போலச் செல்கிறது. ”வெள்ளவாய்க்கால் வைரவர் ” கதையில் மூத்தண்ணையின் பாத்திர வர்ணனை ஓர் ஓவியம் போன்று வாசகர் மனதில் படிகிறது.

அத்துடன், குறியீட்டு வலுக் கொண்ட ஆழமான மொழியும் இங்கு உண்டு. எடுத்துக்காட்டாக, ”உறைந்த நதி” என்ற கதையில் இடம்பெறும் வலை என்ற குறியீட்டு பிம்பம் பற்றிய வர்ணனையைக் குறிப்பிடலாம்.
”வலை, வலை, வலை. எல்லாமே வலையாகத் தெரிந்து கொண்டிருந்து. சிலவேளைகளில் தானே ஒரு வலையாக ஆகிக்கொண்டிருக்கின்றேனோ  என்ற எண்ணம் அவனுக்குள்ளும் எழுந்து கொண்டிருந்தது.  ஒரு வலையை அகற்ற இன்னொரு வலை; அந்த இன்னொரு வலையை அகற்ற  இன்னுமின்னுமாக நிறைய வலைகள். வலைகளை மீன்கள் மட்டுமில்லை மனிதர்களுந்தான் விரும்புவதில்லை. சிலந்தி வகைகளில் ஏதோவொரு சிலந்தியினம் தனது வலையிற் தானே மாட்டித் தற்கொலை செய்து கொள்ளும் என்று யாரோ எழுதியிருந்ததை வாசித்தது அவனது நினைவலைகளில் வந்து போயிற்று.” (பக்கம் 121)

இது ஒரு வலுவான உளவியற் சித்திரம் ஆகும். விடுதலைக்கான ஒவ்வொரு முயற்சியும் மற்றொரு வடிவிலான கட்டுப்பாட்டிற்கு இட்டுச் செல்கிறது  என்ற கருத்தினை மையமாகக் கொண்டது. ‘வலை’ என்ற குறியீடு, உளவியற் சிக்கல்களில் சிக்கி, விடுதலை ஒருபோதும் சாத்தியமற்றது என எண்ணும் பாத்திரத்தின் நம்பிக்கை குலைந்த நிலையை வர்ணிக்கிறது.  அத்துடன், சிலந்தியானது தான் பின்னிய சொந்த வலையிலேயே சிக்கி அழிந்து போவது பற்றிய குறிப்பு,  கதையின் இறுதியில் வரும் பாத்திரத்தின் தற்கொலையினை முன்கூட்டியே சூசகமாக உணர்த்துவதாக உள்ளது (foreshadowing). இவ்வர்ணனை இடம்பெறும் “உறைந்த நதி” என்ற தலைப்பே மனச்சிதைவுக்கு ஆளாகிக் கொண்டு செல்லும் பாத்திரத்தின் உளப்பிரச்சினையைக் குறிப்பாகச் சுட்டும் உளவியல் உருவகமாகும்.  உறைநிலையிலுள்ள நதியின் உட்புறத்தே மறைந்திருக்கும் பதற்றம் கதையின் இறுதியில் வன்முறையாக வெடிப்பதைக் காணலாம். 

அடுத்து, இத்தொகுப்பில் காணப்படும் சில கதைசொல்லல் உத்திகள் குறித்தும் சுருக்கமாகக் குறிப்பிடல் வேண்டும். சிறுகதையின் ஆழத்தை மேம்படுத்துவதற்காக ஊடுபனுவலாக்கம் (inter-textuality) என்ற உத்தி பயன்படுத்தப்படுவதுண்டு. இது பெரும்பாலும் குறிப்புகள், ஒப்புமைகள் அல்லது நேரடி மேற்கோள்கள் மூலம் நிகழும். இத்தொகுப்பிலுள்ள “Mr. K”
 எனும் கதை இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும். இங்கு Kafka எழுதிய நூல்களும், அவரது கருத்துகள் பற்றிய குறிப்புகளும், அவர் எழுதிய ”பெர்லின் பொம்மை” என்ற கதையும் , எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் நேர்காணலின் சில பகுதிகளும் காணப்படுகின்றன.  இவை  “Mr. K” எனும் கதையின் கருப்பொருட்களை மேம்படுத்துவதுடன், கதையில் நேரடியாகக் கூறப்படாத விடயங்களை உய்த்துணர்ந்து கொள்ளவும் உதவுகின்றன. 
Uploaded Image

 

அதுபோன்று “பறந்துபோன இருமரங்களும் பச்சையம் இழந்த காடுகளும்” என்ற கதை  பல்குரல் கொண்டதாயும் (polyphony), ஒருவரின் அநுபவம் மற்றொரு பாத்திரத்தின் வாயிலாக் கூறப்படுதலால் பல் அடுக்குகள் கொண்டதாயும் (multi-layered narration) அமைந்துள்ளது. Metafiction என்ற உத்தியையும் இக்கதை பயன்படுத்தக் காணலாம். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு: லெஸ்பியன் உறவில் இருக்கும் தன் தோழியின் கதையை கேட்டுப் பதிவு செய்யும் கலிஸ்தீனோ ”அவர் [தோழி] கூறிய கதையை விரிவாகப் பதிவு செய்ய முடியாமைக்கு நமது வாசிப்புச்சூழல் குறித்த பதற்றமும், எனக்குள்ளே இருக்கும் தன்சார்பு சார்ந்த தணிக்கையும் காரணமெனக் கூற விரும்புகிறேன்” என்று கூறுகிறான். இது விளிம்புநிலை மனிதர்களுடைய கதைகளைப் பிறர் கூற முனைதலைக் கதைக்குள்ளேயே வைத்து விமர்சிப்பதாகும். கதையின் ஒருபகுதியாகவே இது அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும், விடுபடுதல் (Omission) என்பது  ஒரு கதை சொல்லும் உத்தியாகக் கருதப்படலாம் என்பதற்கு ”முள்ளிவாய்க்கால்” என்ற கதையை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.  அதாவது கதையிற் சேர்க்கப்பட்டவை போன்று விடுபட்டவையும் அர்த்தமுடையதாக இருக்கும் பட்சத்தில் விடுபடுதல் என்பது கதைசொல்லல் செயற்பாட்டில் ஆற்றல் மிக்க கருவியாக அமைந்துவிடுகிறது. ”முள்ளிவாய்க்கால்” என்ற கதை காணாமலாக்கப்பட்ட போராளி ஒருவரின் காதற் கதை. தமிழீழ இலட்சியத்தை விட அதிகமாகத் தன்னையே தனது காதலன் நேசித்தான் என்று நம்பும் ஓர் இளம் பெண்ணின் கதையும் கூட.  பெரும் அரசியல் கதையாடல்களை ஓரங்கட்டும் காதற்கதை இது.  உள்ளார்ந்தமான காதற்கதைகள் முள்ளிவாய்க்கால் தொடர்பான  அரசியற் பெருங்கதையாடல்களுக்குள்ளே காணாமல் போய்விடுகின்றன என்பதை இக்கதை உணர்த்துகிறது.  தனிநபர் துயரங்களைப் பொதுமைப்படுத்திப் பார்ப்பதையும் இது  நுட்பமாக எதிர்க்கிறது.

அதேசமயம் இக்கதையில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த கொடுமைகள் விவரிக்கப்படவே இல்லை. அந்தப் பெண் அக்கொடுமைகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கிறாள், அதைக் கேட்டுக்கொண்டிருந்த மனிதரும் அவை பற்றிக் கேட்கவில்லை.  ஒரு போராளி காணாமல் ஆக்கப்பட்டான் என்பது எண்ணற்ற உயிர்கள் அழிக்கப்பட்டமைக்கும், பலர் காணாமல் ஆக்கப்பட்டமைக்குமான பெருங்குறியீடாக விளங்குகிறது என்றே நான் கருதுகிறேன்.  இந்தக் கதை என்ன சொல்கிறது என்பதை விட, இது சொல்லாமல் விட்டவை தொடர்பான நினைவுகளே மனதைக் கனக்க வைக்கின்றன.  பிரதியின் இந்த மௌனம் மொழியாற் பேசவொணொத வலிகளைப் பிரதிபலிக்கிறது.

கதைகளைப்,  பொதுவாக சம்பவங்களை மையமாகக் கொண்ட கதைகள் (action-driven), பாத்திரத்தை மையமாகக் கொண்ட கதைகள் (character-driven) என வகுப்பது வழக்கம்.   ஆனால்  தொகுப்பில் உள்ள கதைகளை இந்த இருமுனைப் பாகுபாடுகளுக்குள் உள்ளடக்குவது என்பது கடினம். பொதுவாக, இக்கதைகளைக் கருப்பொருட்களை மையமாகக்  கொண்டெழுந்த கதைகள் ((theme- driven) எனலாம். எனினும் பாத்திரச்சிறப்பு மேவிய கதை   (charcater -driven) என்பதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு அரசியல், போர் வன்முறை, சமயம், ஆன்மிகம் , நாட்டுப்புற மரபுகள்,  மனவடு, தற்கொலை எனப் பல்வேறு கூறுகள் ஒன்று சேரும் ”வெள்ளவாய்க்கால் வைரவர்” என்ற கதையைக் கூறலாம்.  ஒரு சிறுவன் வாயிலாகச் சொல்லப்படும் இக்கதையில் மூத்தண்ணையின் உருவமும், குணாதிசயங்களும், செயற்பாடுகளும் மிக்க சுவாரஸ்யமாக விவரிக்கப்படுக்கின்றன. நீதியையும் காவலையும் பிரதிபலிக்கும் வைரவருடன் மூத்தண்ணை கதையில் ஒன்றுபடுத்தப்படுகிறார். வன்முறை சிறுவர்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பதைக் காட்டும் நல்லதொரு சிறுகதை இது.. இக்கதையில் இடம் பெறும் சிறுவனின் அம்மா பாத்திரமும் குறிப்பிடத்தக்கது.. பௌதிக உலகம், ஆன்மிக உலகம் இரண்டினையும் இணைப்பவளாய் அவள் திகழ்கிறாள். ஆன்மிக உலகின் பிரதிநிதியான மூத்தண்ணையைச் சோறிட்டுக் காப்பவளாகவும், இறுதியில் மகனைத் தற்கொலையினின்று காப்பவளாகவும் அவள் விளங்குகிறாள்.

நிறைவாக, இக்கதைகள் குறிப்பிடத்தக்க இலக்கிய நேர்த்தியுடனும் நுட்பத்துடனும் எழுதப்பட்டுள்ளன. இவை  நேரடியான, உணர்ச்சிபூர்வமான மொழியில் சொல்லப்படும் கதைகளுக்குப் பழக்கப்பட்ட தமிழ் வாசகர்களின் வாசிப்பு அநுபவத்தை விரிவாக்க விழைகின்றன. சில கதைகள் முதலில் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இந்தக் குழப்பம் (ambiguity ) வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதொன்று, தலைப்புகள், பெரும்பாலும் வாசகர் ஆர்வத்தைத் தூண்டுபவையாக இருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் கதைகள் எளிதான தீர்வுகளைத் தர மறுக்கின்றன. அறரீதியான மதிப்பீடுகளுடன் இக்கதைகளை வாசித்தல் சாத்தியமில்லை. ஏனெனில் அவை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ”உண்மைகளுக்கான” மாற்றுப் பார்வைகளை முன்வைக்க, அல்லது அவற்றைக் கேள்விக்கு உட்படுத்த முனைகின்றன. சுருங்கச் சொல்லின், நம்மை வெறுமனே வாசித்தற் செயற்பாட்டிற்கு அப்பால், மனத்தடைகள் இன்றி, ஆழமாகச் சிந்திக்க தூண்டுகின்றன.

*****

(நன்றி: 'கலைமுகம்' - அமுத மலர் (80)


 

கார்காலக் குறிப்புகள் - 119

Monday, December 01, 2025

 

டந்த சில நாட்களாக ரேய் பிராட்பரியின் 'Zen in the art of writing' ஐ வாசித்துக் கொண்டிருந்தேன். அது அவரின் எழுத்து அனுபவங்கள் சார்ந்த கட்டுரைகளாகும்.  இதில் 1950 இலிருந்து 1990 வரை அவர் எழுதிய கட்டுரைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த கட்டுரைகளை வாசிக்கும்போது ரேய் எவ்வளவு ஆழமாக எழுத்தை நேசித்திருக்கின்றார் என்பதை அறிய முடிகின்றது. அத்துடன் அவர் எவ்வளவு தான் விரும்பிய எழுத்துக்காக உழைத்திருக்கின்றார் என்பதையும் நாம் கண்டுகொள்ளவும் முடியும்.


டந்த சில நாட்களாக ரேய் பிராட்பரியின் 'Zen in the art of writing' ஐ வாசித்துக் கொண்டிருந்தேன். அது அவரின் எழுத்து அனுபவங்கள் சார்ந்த கட்டுரைகளாகும்.  இதில் 1950 இலிருந்து 1990 வரை அவர் எழுதிய கட்டுரைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த கட்டுரைகளை வாசிக்கும்போது ரேய் எவ்வளவு ஆழமாக எழுத்தை நேசித்திருக்கின்றார் என்பதை அறிய முடிகின்றது. அத்துடன் அவர் எவ்வளவு தான் விரும்பிய எழுத்துக்காக உழைத்திருக்கின்றார் என்பதையும் நாம் கண்டுகொள்ளவும் முடியும்.
Uploaded Image

ஒரு புதிய எழுத்தாளருக்குத் தேவைப்படும் பல விடயங்களை தன் அனுபவம் சார்ந்து ரேய் இதில் சொல்லிக்கொண்டே போகின்றார். அதில் ஒன்று தினமும் ஆயிரம் வார்த்தைகள் எழுதுவது. ஒருவருக்கு சிறுகதை எழுத்தாளராக விருப்பம் என்றால், வாரம் ஒருகதை என ஒரு வருடத்துக்கு நிறுத்தாமல் கதைகளை எழுத வேண்டும் என்கின்றார். ஒரு வருடத்தில் அப்போது 52 கதைகளையாவது எழுதியிருப்பீர்கள். நிச்சயமாக அதில்  தூக்கி எறியவோ/எரிக்கவோ வேண்டிய நிறையக் கதைகள் இருக்கும். ஆனால் அந்த 52இல் எப்படியேனும் ஒரு  சில  நல்ல சிறுகதைகளையாவது உங்களையறியாது எழுதியிருப்பீர்கள் என்பதை நீங்கள் கண்டறிந்து கொள்வீர்கள் என்கின்றார். அவரது பன்னிரண்டாவது வயதில் இருந்தே இப்படி தினம் எழுதும் பழக்கத்தை ரேய் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோலவே ஒரு புனைகதை எழுத்தாளருக்கு தினம் கவிதைகள் வாசிப்பது என்பது முக்கியமானது என்கின்றார். கவிதையானது நம் மனதில் படிமமாக, உருவமாக, ஏதேனும் ஒரு அரிய சொல்லாகத் தங்கிவிடுகின்றது. அவ்வாறே  நாம் கதைகளையும் ஏதேனும் ஒரு புதிய சொல்,  ஒரு படிமம் போன்றவற்றில் இருந்து நெய்து கொள்ளமுடியும் என்கின்றார். ரேய் நீண்டகாலத்துக்கு இரவு தூங்கிவிட்டு எழுந்தவுடன் கனவில் வருகின்ற சொற்களைக் குறித்துக்கொள்வார் என்றும் பிறகு அந்தச் சொற்களை வேறு சொற்களுடன் இணைத்துப் பார்த்து தன் புனைவை எழுதுவார் என்றும் சொல்கிறார். அதுபோலவே ஓரிரு பக்கமாயினும், இரண்டு சிறுகதைகளையும், புனைவல்லாத ஓரிரு கட்டுரைகளையும் தினம் வாசிப்பது ஒரு படைப்பாளிக்கு முக்கியம் என்கின்றார்.

ரேய் அவரின் பிரசித்தம் பெற்ற 'Fahrenheit 451' எழுதிய கதையைச் சுவாரசியமாக இந்தத் தொகுப்பில் சொல்கிறார். அவரிற்கு அப்போது குடும்பம் வந்துவிட்டது. பிள்ளைகள் அவரை வீட்டில் இருந்து எழுத விடுவதில்லை. ரேய் அருகிலிருந்த நூலகத்தின் நிலவறையில் எழுதுவதற்கு ஓரிடத்தைக் கண்டுபிடிக்கின்றார். அங்கே ஒரு பத்து சதம் போட்டால், ஒரு ரைப்ரைட்டரை அரை மணித்தியாலத்துக்கு வாடகைக்கு எடுத்து எழுதலாம். அவ்வாறு எட்டு டொலர் எண்பது சதத்தோடு எழுதிய நாவல்தான் 'பாரனைட் 451' என்று சொல்கிறார். இதை எழுதும்போது என்ன சிக்கல் என்றால், ஒவ்வொரு அரை மணித்தியாலத்துக்கும் 10 சதம் போட்டால்தான் தொடர்ந்து எழுதமுடியும். எழுத்து உள்ளே பொங்கிவரும்போது ரைப்ரைட்டர் நிற்பதும், அதற்குள் காசைப் போடுவதும் ஒரு தலையிடி பிடித்த பிரச்சினை என்கின்றார்.

நூல்கள் தடைசெய்யப்பட்டு அப்படி எங்கேனும் நூல்கள் கண்டுபிடித்தால் எரிக்கின்ற சட்டம் இருக்கின்ற இந்த நாவலை, நான் பல நூற்றுக்கணக்கான நூல்கள் கொண்ட ஒரு நூலகத்தில்தான் எழுதினேன் என்றால் உங்களால் நம்பமுடியுமா என்று ரேய் நம்மிடம் கேட்கிறார்.

துபோலவே 70களில் எழுதப்பட்ட ஒரு கட்டுரைதான், 'Zen in the art of writing'. உண்மையில் ரேயுக்கு அப்போது ஸென் குறித்து எதுவும் தெரியாது. அவர் அப்போதுதான்  'Zen in the Art of Archery' ஐ வாசித்திருக்கின்றார்.  ஒரு வித்தையில் தேர்ச்சி பெறவேண்டுமென்றால் அதில் கூறப்பட்ட 'Don't Think' என்பது இவரைக் கவர்கின்றது. ஓர் ஓட்டக்காரனோ, நீச்சல்காரனோ ஓடும்போதோ நீந்தும்போதோ எதையும் யோசிப்பதில்லை. அவனது சிந்தனை முழுதும் ஒரு உடலாக குவிகின்றது. அதுபோலவே எழுதும்போதும் நீங்கள் எதையும் யோசிக்காமல் என்ன வருகின்றதோ அதை எழுதுங்கள் என்கின்றார். WORK -RELAXATION- DON'T THINK இந்த மூன்றையும் தாரக மந்திரமாகக் கொண்டு, உங்களுக்கு விரும்பிய ஒழுங்கில் அதை மாற்றி அமைத்து, தீவிரமாக எழுதுங்கள் என்கின்ற கட்டுரை இந்த நூலில் நல்லதொரு கட்டுரையாகும்.

ரேய், தனது கதைகளை தனித்தனிப் பெயர்ச்சொற்களாக (Nouns) எழுதி அவற்றை சம்பவங்கள்/பாத்திரங்களை இணைப்பதன் மூலம் கதைகளாக எழுதுவது தனக்கு இலகுவாக இருக்கின்றது என்கின்றார். அதைபோல எதை எழுத உட்காரும்போதும் அதைக் குறித்து எதையும்  யோசிக்காது எது வருகின்றதோ அதை அப்படியே எழுதுங்கள் என்கின்றார்.

அப்படி எழுதும் முதற்பிரதிதான் உங்களுக்குச் சந்தோசம் தரக்கூடியது. பிறகு நீங்கள் திருத்தி வெட்டி முறித்து செய்யபோகும் செயல்கள் உங்களுக்கு மகிழ்ச்சி தரப்போவதில்லை. ஆகவே அந்த முதற்பிரதி தரும் இன்பத்தை ஒருபோதும் கைவிடாமல் அந்தக் கதையை அதன் போக்கில் யோசிப்பதற்கு இடங்கொடுக்காமல் எழுதிச் செல்லுங்கள் என்கின்றார்.

நம் மொழியில் 'கண்டதையும் கற்று பண்டிதன் ஆகுங்கள்' என்று சொல்வதுபோல, ரேய் தொடக்க காலத்தில் உங்களால் முடிந்தவரை அளவு கணக்கில்லாது எழுதுங்கள். அதில் நிச்சயம் எறியவேண்டியவை நிறைய இருந்தாலும், காலம் செல்லச் செல்ல உங்களை அறியாமலே நீங்கள் தரமான படைப்புக்களை எழுதத் தொடங்கிவிடுவீர்கள் என்கின்றார் ('Quantity gives experience. From experience alone can quality come').

அதுபோல நல்லதொரு படைப்பாளி என்பவர், சிறந்ததை எழுதுவது மட்டுமில்லை, எதை எழுதக்கூடாது, எதை ஒரு படைப்பில் சேர்க்கக்கூடாது, எப்படி எளிமையாகச் சொல்வது என்பதைக் கற்றுக்கொள்ளவேண்டும், அதுவே சிறந்த கலையை உருவாக்கும் என்கின்றார்.

ஒரு பியானோ கலைஞன் ஒவ்வொருநாளும் பயிற்சி பெறவில்லை என்றால், அது அவனுக்குத் தெரியும். இரண்டு நாட்களாகப் பயிற்சி செய்யவில்லை என்றால் ஒரு விமர்சகர் கண்டுபிடித்துவிடுவார். அதே கலைஞன் மூன்றுநாட்கள் பியானோவைத் தொடவில்லை என்றால், அவனுடைய பார்வையாளர்கள் எளிதில் அதை அறிந்து விடுவார்கள். அதுபோலவே எழுதுகின்றவர்களும் உண்மையில் எழுத்தின் மீது ஆர்வமும் விருப்பும் இருக்கின்றதென்றால் தினம் அது எவ்வகை எழுத்தாக இருப்பினும் தொடர்ந்து எழுதுங்கள் என்கின்றார்.

எனக்குப் பிடித்த ரேயினுடைய  ஒரு மேற்கோள் இருக்கின்றது: அது இப்படிச் சொல்வதாக இருக்கும்: "உங்களை யதார்த்தம் அழிக்காது இருக்க வேண்டுமாயின் நீங்கள் எழுத்தின் போதையோடு எப்போதும் இருக்க வேண்டும்".

***

அசோகப்பூ குறிப்புகள்

Sunday, November 30, 2025

 
வ்வளவு அழகான விடயம் இது!


தாம் படித்த பாடசாலைக்கு இரு மாணவிகள் இருபது இலட்சம் செலவு செய்து நூலகத்தை சீரமைத்திருக்கின்றார்கள். அதுவும் பாடசாலை நூலகம் உள்ளிட நூலகம் உள்ளிட்ட நூலகங்களைத் தேடித் தேடி வாசித்த அனுபவத்தை இவர் கூறுவதும், நூல்களே தனது முதல் துணைவன் என்று கணவர் நகைச்சுவையாக அடிக்கடி சொல்வதையும் கேட்க  ஆனந்தமாக இருக்கின்றது.


எனது நூலக அனுபவங்களை ஏற்கனவே பலமுறை எழுதிவிட்டதால், என்னைப் பின் தொடர்பவர்களுக்கு அது அலுக்க அலுக்கத் தெரியும். ஊரில் நான் படித்த பாடசாலைக்கு ஓர் அரிய நூலகம் இருந்தது. அது பாடசாலை அதிபரின் அலுவலகத்திற்கும், விளையாட்டு மைதானத்திற்கும் அருகில் இருந்ததாலும் எப்போதும் நூலகம் நம் அனைவரின் கண்களுக்குப்பட்டபடியே இருக்கும். ஆனால் (O/L) வரை) பதினாறு வயதுக்குள் இருப்பவர்க்கு (படிப்பு கெட்டுவிடும்?) உள்ளே அனுமதி இல்லாததால் யன்னலுக்குள்ளால் எட்டிப் பார்த்தபடி என் பாடசாலைக் காலம் கழிந்திருந்தது. 


நான் பதினாறு வயதுக்குப் பிறகு அந்தப் பாடசாலையில் படிக்கவும் இல்லை. பாடசாலையும் என் 12/13 வயதில் என்னைப் போலவே அகதியாகவே உள்ளூருக்குள்ளே அலையவும் தொடங்கிவிட்டது. அப்போதும் இடம்பெயர்ந்து மருதனாமடத்தில் சொந்தமாய் ஓலைக்கொட்டில்கள் போட்டு நம் பாடசாலை இயங்கியபோது, இடப்பெயர்வோடு நூலகத்து நூல்களையும் கொண்டு வந்திருந்தனர். அவற்றைத் தூசிதுடைத்து ஒழுங்காய் அடுக்கும் வேலை என்னைப் போன்றவர்களுக்குக் கிடைத்திருந்தது. அப்போதுகூட இந்த தன்னார்வள வேலையின் நிமித்தம் பாடசாலை அதிபர் ஏதேனும் ஒன்றிரண்டு புத்தகங்களையாவது எனக்கு இலவசமாக வாசிக்கத் தருவார் என நம்பினேன்.

 

அந்த ஆசையெல்லாம் 'மண்'ணோடு போனதுபோல அதிபர் எதையும் தராத புத்தகக் கஞ்சனாக இருந்தார் என்பதையும் நினைவூகூரவேண்டும். ஆனால் இப்படியாக நம் அகதிப் பாடசாலையைத் தன் சொந்தப் பிள்ளைப்போல ஊர் ஊராகக் கொண்டு திரிந்த அந்த அதிபரையும் அவரின் ஓய்வுக்காலத்தில் நம் இயக்கம் போட்டுத்தள்ளியது என்பதால், பாவம் அந்த நல்ல ஆத்மா நிம்மதியாகத் தூங்கட்டும்.


இப்போது என் பாடசாலை மீண்டும் தன் சொந்த ஊருக்கு (எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்தான்) திரும்பிவிட்டது. ஆனால் என்ன பரிதாபம். முன்பு விசாலமான் இடத்தில், அனைவரும் பார்க்கக்கூடியதாக இருந்த நூலகத்தை -இடைஞ்சல் என்று- எங்கோ ஒரு ஒதுக்குப் புறத்தில் கொண்டு போய் மறைத்துவிட்டார்கள். கடைசியாக ஊருக்கும், ஊர்ப்பாடசாலைக்கும் போன நான், வடிவேல் 'எங்கேடா இங்கே இருந்த கிணறைக் காணவில்லை' என்று தேடியதுபோல எங்கள் பாடசாலை நூலகத்தைத் தேடியதுதான் மிச்சம்.


இப்படியாக 'வளர்ச்சி/ உலகமயமாதல்' நூல்கள் வாசிப்பதை மிகவும் சுருக்கி கொண்டிருக்கும் இன்றைய காலத்தில், இந்தப் பெண்களைப் போன்றவர்கள் நூலகங்களுக்காக தம் நேரத்தையும் பணத்தையும் ஒதுக்குவது மிகவும் பாராட்டிற்குரியது. 


சற்று கடந்தகாலத்தைப் பற்றி யோசியுங்கள். இப்போதுபோல அலைபேசிகளில் உலகம் சுருங்கிவிடாத காலங்களில், என்னைப் போன்ற சிறுவர்களின் -அதுவும் மூடுண்ட போர்க்காலத்தில் வாழ்ந்தவர்க்கு - யுத்தத்திற்கு வெளியே, அழகான உலகம் இருக்கின்றது என்ற நம்பிக்கையை மட்டுமின்றி வாழ்வதற்கான உயிர்ப்பையும் தந்தவை எமக்கு அன்று கைகளில் கிடைத்துக் கொண்டிருந்த புத்தகங்கள் மட்டுமே. 


சிரியாவில் கொடும் உள்ளூர் யுத்தம் நடக்கையில் அத்தனை இழப்புகள், இடப்பெயர்வுகளுக்கும் அப்பால் அந்த சில இளைஞர்கள் தொடர்ச்சியான குண்டுவீச்சில் தப்பும் நூல்களைச் சேகரித்துக் கொண்டு, நடமாடும் நூலகத்தை நடத்தி போரின்  நடுவிலும் நூல்களை மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்ததுதானே பின்னர் 'சிரியாவில் தலைமறைவு நூலகம்' என்ற ஒரு நூலாக நம் கைகளுக்கு வந்து சிலிர்க்கவும் நெகிழவும் வைத்தது.


கிருஷ்ணானந்தியும் அவரது தோழியும் போன்று எண்ணற்ற மனிதர்கள் இன்னும் நம் நிலத்தை நூல்களால் நிறைக்கட்டும். நூல்களால் நிறைப்பது மட்டுமின்றி -எனக்கு சிறுவயதில் பாடசாலை நூலகத்தில் நிகழ்ந்தது போலவன்றி- வாசிக்க விரும்பும் அனைவரும் எளிதாய் நூல்களை வாசிப்பதற்கான வழிகளும் திறக்கட்டுமாக..!

*

 

Ballad of a Small Player
 

'All Quiet on the Western Front', 'Conclave' ஆகிய படங்களை எடுத்த நெறியாளரின் புதிய படம். இது ஏற்கனவே நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கின்றது. தனது அசல் முகத்தைத் மறைத்து சூதாட்டத்தில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருக்கும் ஒருவனை எப்படி பெண் ஒருத்தி அதளபாதாளத்தில் விழுந்துவிடாமல் தடுக்கின்றாளா/இல்லையா என்பது பற்றிய கதை. ஒரு மேலைத்தேயத்தவனில் கீழைத்தேய பெளத்த கதையான 'பசித்த பேய்கள்' பாதிப்புச் செலுத்துவதை, தனிமனிதன் ஒருவனின் வீழ்ச்சியுற்ற ஆன்மாவை, அந்த ஆன்மீகம் அல்லது தொன்மம் காப்பாற்றுகின்றதா என்று அறிய விரும்புவர்கள் இத்திரைப்படத்தைப் பார்க்கலாம்.
 
*
 
 
நீர்முள்
 

செந்தில்குமார் நடராஜனின் சிறுகதைத் தொகுப்பு இது. அண்மையில் வாசித்தவற்றில் மனமொன்றி வாசித்த கதைகளின் தொகுப்பு என இதைச் சொல்லலாம். தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து இப்போது சிங்கப்பூரில் தொழில் நிமித்தம் வசிப்பவர் செந்தில்குமார். 'பேழை', 'முதுகுப்பாறை' தவிர்ந்த ஏனைய கதைகள் அனைத்தும் சிங்கப்பூர், மலேசியாவை, பர்மாவைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட கதைகள். எனக்கு 'சன்னதம்', 'பேழை', 'மறுமொழி', 'பிறழ்வு' ஆகிய கதைகள் நெருக்கமாக இருந்தன. ஒருவர் பிறந்த மண்ணை மட்டுமில்லை புலம்பெயர்ந்த நிலத்தையும் நுட்பமாக பார்க்காதவிடத்து இவ்வாறான கதைகளை எழுதியிருக்கவே முடியாது. தமிழில் சமகாலத்தில் அலுப்புத்தரும் ஒரே வகையான கதைசொல்லல் முறை/மொழிப் பயன்பாட்டைத் தவிர்த்து, புத்துணர்ச்சியான மொழியில் இதில் கதைகள் சொல்லப்படுவது எனக்குப் பிடித்திருந்தது. இது செந்தில்குமாரின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு. அவர் இன்னும் நிறைய எழுத வேண்டும்.
 
*
 
 
The Phoenician Scheme


நெறியாளர் யாரென்று தெரியாமலே ஒருவர் திரைப்படத்தில் வைக்கும் பிரேம்களை வைத்தே யார் இந்த இயக்குநர் என்று கண்டுபிடிக்கு முடியும் என்றால் அது என்னைப் பொருத்தவரை Wes Anderson ஆகத்தான் இருப்பார். அன்டர்சனின் புதிய படம் வந்த ஞாபகம் இல்லாததால் தற்செயலாக இத்திரைப்படத்தைப் பார்க்கத் தொடங்கியபோது நெறியாளர் பெயர் திரையில் தோன்றமுன்னரே அந்த முதல் பிரேமிலே இது அன்டர்சனின் திரைப்படமாக இருக்கும் என்று கண்டுபிடித்துவிட்டேன். அன்டர்சனின் பெரும்பாலான திரைப்படங்களில் பெரிதாக கதை என்று எதுவும் இருக்காது. ஆனால் அவை எடுக்கப்படும் விதத்தில் நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கும். அவரின் Budapest Hotel படத்துக்குப் பிறகு நான் இரசித்துப் பார்த்த திரைப்படம் இதுவென்று சொல்வேன். பெரும் நடிகர்கள் ஒரு சில காட்சிகளில் வந்து போகின்றளவுக்கு அன்டர்சனின் திரைப்படங்களுக்கு ஒரு மரியாதை திரையுலகில் இருக்கின்றது. கொஞ்சம் பொறுமையாக அதிகம் பரிட்சயமில்லாத திரைமொழியில், ஆனால் அவ்வளவு அழகான திரைச்சட்டங்களுடன் (visual treats) ஒரு திரைப்படத்தைப் பார்க்க விரும்புகின்றவர்களுக்கான திரைப்படம் இது.
 
 
****

படுபட்சி: மோசமான மொழியில் எழுதப்பட்ட அசல் கதை

Thursday, November 27, 2025

 
"கலை என்பது ஒருபோதும் பாவனை செய்யக்கூடாது என்று நம்புபவன் நான். ஒரு படைப்பு எவ்வித ஆழமற்று, அப்பாவித்தனமாக இருந்தாலும், அது தன்னளவில் பாவனை செய்யாது இருக்கின்றதா என்பதைக் கூர்ந்து கவனிக்க விரும்புவன் நான்." என அண்மையில் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பேன். அவ்வாறு பாவனை செய்யும் படைப்பாக 'படுபட்சி' வந்திருப்பதுதான் கவலையானது. வெளியுலகிற்கு சொல்ல வேண்டிய அவசியமான, ஒரு தனி மனிதனுக்கு நிகழ்ந்த அனுபவங்களை இன்னொருவரால் சிதைக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக நாம் 'படுபட்சி'யை முன்வைக்க முடியும்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ச்சூழலில் ஒற்றைக்குரலின் ஆபத்துக்களைப் பற்றி விரிவாகப் பேசப்பட்டுவிட்டது. ஒருகாலத்தில் பின் நவீனத்துவத்தோடு இணைத்து தங்களைப் பேச விரும்பியவர்களே அதன் அடிப்படைக் கூறுகளையே விளங்கிக் கொள்ளாமல்தான் இப்படி தங்களை அன்று அடையாளப்படுத்தினார்களோ என்று நினைக்கும்போது அவர்களைப் பற்றி உண்மையிலே கவலையாக இருக்கின்றது.

'படுபட்சி'யின் தொடக்கமே தனது பாவனையை ஆஸ்திரேலியா பழங்குடிகளான 'அபோர்ஜின்'களோடு' கதையை இணைப்பதோடே ஆரம்பித்துவிடுகின்றது. ஒடுக்கப்படும் விளிம்புநிலையினரின் கதையை அல்லது அவர்களின் கலாசார/வரலாற்றுக் கூறுகளை அதற்கு வெளியில் இருந்து கதைகளைச் சொல்வோர் மிகுந்த கவனத்துடன் இவ்வாறான விடயங்களை அணுகவேண்டும் என்பது எளிய பாலபாடம். அந்த எந்த அடிப்படை தார்மீக அறமுமற்று 'படுபட்சி' அபோர்ஜின்களின் மீது கைவைப்பதை எவ்விதத்திலும் மன்னிக்க முடியாது.

இத்தனைக்கும் இது Auto Fiction என முகப்பில் சொல்லப்பட்டு விமானம் ஒன்றை இலங்கையில் உருவாக்க முயன்ற ஒரு இளைஞனின் பயணமும் பாடுகளும் என விளம்பரத்தப்படுகின்றது. இந்த நூலை உருவாக்கியவர்களுக்கு Autofiction என்ற அர்த்தம் உண்மையில் தெரியுமா என்பதே குழப்பமாக இருக்கின்றது. Autofiction  என்பது உண்மைச் சம்பவங்களில் அடிப்படையில் புனைவை இணைப்பது. ஆனால் அது உண்மைச் சம்பவங்களை (context) முற்றாக விலத்திப் போகவும் முடியாது. அந்த சூழலில்/சம்பவங்களில்  நாம் புனைவை விரும்பியவளவு சேர்க்கலாம். ஆனால் நடக்காத கதைகளை நடந்ததாகச் சொல்வது Auto Fiction ஆகாது. உதாரணத்துக்கு இந்தக் கதைசொல்பவனும், அவனின் தந்தையும், புலிகளின் கருணா அம்மானைச் சந்திப்பதாக இந்நூலில் ஓரிடத்தில் வரும். நிஜத்தில் அவர்கள் கருணா அம்மானைச் சந்தித்தார்களோ இல்லையோ, ஆனால் அந்தக் காலத்தில் கிழக்கில் ஒரு முக்கிய ஆளுமையாக கருணா அம்மான் இருந்ததால், அவரின் பாத்திர அமைப்பு Autofiction  வகைக்குள் வரக்கூடியதே.

ஆனால் இதே கதைசொல்லி அமெரிக்கா வந்து, அவருக்கு ஒரு மெக்ஸிக்கோ பெண் காதலியாக (திருமணம்?) இருப்பது வாழ்வியல் உண்மையாக இருக்கும்போது, அவன் ஒரு ஆஸ்திரேலியா அபோர்ஜின் பெண்ணைத் திருமணம் செய்பவனாகவும், அவர்களுக்கு ஓர் அபார்ஜின் குழந்தை இருப்பதாகவும் சித்தரிப்பது மிகக் கொடூரமானது. எப்படி காலனித்துவவாதிகள்,/ஆதிக்கசாதிகள் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளங்களை தமது சொந்தநலன்/புகழ் சார்ந்து பயன்படுத்தும் அபத்த அரசியலை நிகழ்த்தினார்களோ அதற்கு நிகராக 'படுபட்சி'யில் இவ்வாறாக ஆஸ்திரேலியா பூர்வீகக்குடிகள் பயன்படுத்தப்படுவது மோசமானது மட்டுமில்லை, கண்டிக்கப்பட வேண்டியதும் கூட.

மேலும் ஒற்றைக்குரலின் ஆபத்து என்பது, மேலாதிக்க வெள்ளையினத்தவர், -தமிழில்- ஆதிக்கசாதிகளின் மோசமான செல்வாக்கு என்பது அவர்கள் பிறரை தமது மொழிகளிலே கதைகளைச் சொல்ல வற்புறுத்துவதாகும். இந்த நூலில் மட்டக்களப்பு மக்களின் தனித்துவமான குரலையே கபளீகரம் செய்திருக்கின்றனர்.  இது ஒரு பொதுமொழியில் எழுதப்பட்டதால் மட்டும் அல்ல, அசலான யாழ்ப்பாண மொழியும் இங்கே நுட்பமாக கலந்திருக்கின்றது என்பதைக் கவனப்படுத்தியாக வேண்டும்.

எனக்கு மட்டக்களப்பு சார்ந்த மிகக்குறைவான அனுபவங்களே உள்ளன. ஆனால்  இன்றும் பல கிழக்கு மாகாண தோழிகள் நட்பில் இருக்கின்றனர். இந்த நூலில் கதைசொல்லி ஒரு கிழக்குமாகாண பெண்ணோடு காதல் வயப்படும்போது, 'நீர்' என்று விளித்து உரையாடல் செய்யப்படுகின்றது. அதை நான் பழகிய எந்த மட்டக்களப்புப் பெண்ணிடமும் கண்டதில்லை. அதுமட்டுமின்றி அவர்களோடு நான் என் யாழ் பேச்சுவழக்கில் சிலவேளைகளில் 'நீர்' என்று உரையாட முயலும்போது அது தங்களுக்கு செளகரியமில்லாத பேச்சுமொழியென்று ஆரம்பத்திலே கறாராகத் தவிர்க்கவும் சொல்லியிருக்கின்றார்கள்.

இவ்வாறு சாதாரண காதல் மொழியைக் கூட இந்த நூலில் கொத்துப்பரோட்டா போட்டு அதன் அசல் தன்மை கொல்லப்பட்டிருக்கின்றது. மேலும் இந்த நூலின் ஆசிரியரான டிலுக்சனும், நானும் கிட்டத்தட்ட ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்களாவோம். ஆனால் அவரின் பாடசாலைக் காலத்தைப் பற்றிய பாடத்திட்டம் எல்லாமே வேற்றுகிரகவாசிகள் பேசுவது போல இருக்கின்றது. உதாரணத்துக்கு பத்தாம் வகுப்பு சித்தியடைந்து பதினொராம் வகுப்பில் அறிவியல் பிரிவுக்குப் போவதாகவும், அதில் அவரின் காதலியோடு உரையாடல்களும் வருகின்றன. முதலாவது எமது காலத்தவர்கள் பதினோராம் வகுப்பு என்றே பாவிப்பதில்லை. அது ஏ/எல் என்று ஆகிவிடும். பத்தாம் வகுப்பும் ஓ/எல் ஆகிவிடும். மேலும் அறிவியல் என்ற தனிப்பிரிவோ, ஏன் ஒரு தனிப்பாடமோ 80களில் பிறந்தவர்களின் பாடத்திட்டத்தில் நானறிந்து இருந்ததாய் ஞாபகத்தில் இல்லை.

இதெல்லாம் ஒரு பெரியவிடயமா என்று ஒருவர் கேட்கலாம். இந்த நுண்ணிய விடயங்கள் மூலந்தான் நாம் ஒரு காலத்தின் கதையைச் சொல்லமுடியும். அதுபோலவே நாம் போரின் குழந்தைகளாக இருந்தவர்கள் என்பதால், டிலுக்சன் தனது விமானியாக  விரும்பும் கனவுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பது விபரிக்கப்படவே இல்லை. இதை அவர் கனடாவில் நடந்த உரையில், தான் பயிற்சிபெறப் பட்ட கஷ்டங்களைச் சொல்லியதின் ஒரு துளியேனும் இந்நூலில் பதியப்படவே இல்லை என்பது துயரமானது.

நமது காலங்களில் பொருளாதாரத்தடை காரணமாக யாழில் சாதாரண பட்டரிகளே அருமருந்த பொருளாக இருந்தது. ஏனெனில் சாதாரண 'டோர்ச் பட்டரிகள்' கூட ஆயுத உற்பத்திக்குப் பயன்படுத்தப்படலாம் என்று அரசு நினைத்து தடை செய்யப்பட்டிருந்த காலம். மின்சாரமும் என் பதின்மத்தில் பெரும்பகுதியில் இருக்கவே இல்லை. அவ்வாறே அதேகாலத்தில் கிழக்கு மாகாணமும் தனக்குரிய பொருளாதாரச் சிக்கல்களைக் கொண்டிருக்கும். அதிலிருந்து ஒரு இளைஞன் தனது கனவான (prototype) விமானத்தை அமைப்பதன் எல்லைவரை போகின்றான் என்றால் அது எவ்வளவு கடிய பயணமாக இருக்கும். ஆனால் நான் அதை உணருகின்ற அரிய தருணங்களோ, நாம் வியந்து பார்க்கும் சம்பவங்களோ அசல்தன்மையோடு இங்கே விபரிக்கப்படவே இல்லை.

இதிலிருக்கும் இன்னொரு சிக்கல் என்னவென்றால், நாவல் அல்ல, Autofiction என்று சொல்லியிருப்பதால்... இங்கே டிலுக்சனின் தந்தையார் டிலுக்‌ஷன்  விமானத்தை மட்டக்களப்பில் வடிவமைக்க முன்னரே நூலில் இறந்துவிட்டார் எனச் சொல்லப்படுகின்றது. கனடாவில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் தந்தையார் வந்திருந்தது மட்டுமின்றி, தந்தையார்தான் இந்த விமானம் அமைப்பதற்கு பல வழிகளில் உதவினார் என்று டிலுக்‌ஷன் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். அப்படியெனில் எதை அய்யா உண்மைகளின் அடிப்படைகளில் நூலில் நீங்கள் சொல்ல வருகின்றீர்கள்.

அதுமட்டுமின்றி டிலுக்‌ஷன் தனக்கு இரு அம்மாமார்கள் இருக்கின்றனர் என்றார் தனது உரையில். தனது பயாலாஜிக்கல் அம்மா, உண்மையில் வாய் பேசாத, காது கேட்காத ஒருவர் எனச் சொல்கின்றார். அந்த அம்மாவை இப்படி இந்த நூலில் அநியாமாக சாதாரணமாகப் பேசக்கூடிய ஒரு பாத்திரமாக எழுதி கொன்றுவிட்டீர்களே என்றுதான் என் மனம் அலறியது. அதுவும் இப்படி ஒரு அசலான அம்மாவை அப்படியே டிலுக்சனின் அனுபவங்களினூடு கொண்டுவரும்போது எவ்வளவு வீரியமான அம்மாவாக இருந்திருப்பார். அந்த வாய் பேசமுடியாத அம்மாவை மறைத்து வேறொருவராக அடையாளப்படுத்துவது கூட அயோக்கியத்தனந்தான்.

டிலுக்‌ஷனின் தந்தையாருக்கு அவரின் தாயார் தவிர்த்து இன்னொரு மனைவியும் இருப்பது இந்த நூலில் சொல்லப்படுகின்றது. இதை டிலுக்‌ஷன் அவரின் பதின்மத்தில் அறிகின்றார். இப்படி இன்னொரு பெண், தனது தந்தைக்கு மனைவியாக இருக்கின்றார் என்று ஒரு பதின்மன் அறிகின்றபோது எந்தளவு உளவியல் சிக்கலுக்குள் போயிருக்க வேண்டியிருக்கும். ஆனால் அது தந்தையின் புறவயமான பார்வையில் இந்த இன்னொரு உறவு எளிதாகச் சித்தரிக்கப்படுகின்றது. காலம் கடந்து போகையில் ஒரு முதிர்ச்சியில் இவ்வாறான பிறழ் உறவு(?)களை ஒரு பிள்ளை ஏற்றுக் கொள்ளக்கூடும். ஆனால் ஒரு பதின்மனுக்கு இது எவ்வளவு மனப்போராட்டத்தை அந்த வயதில் ஏற்படுத்தும் என்பதைக் கூட விரிவாகப் பதிவு செய்யவில்லை.

இதை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், வெளியே போர்ச்சூழல், குடும்பத்தில் இந்த உறவுப்பிறழ்வு, இவற்றுக்கிடையேதான் டிலுக்‌ஷன் தனது கனவான விமானியாகவும், தனி விமானத்தை உருவாக்கவும் முயன்றிருக்கின்றார் என்பதை வாசிப்பவரிடையே கடத்துதல் அல்லவா நூலில் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.

மேலும் அந்த அம்மாவையும், டிலுக்‌ஷனின் தங்கையையும் கூட ஒருகட்டத்தில் நூலில் கொன்றுவிடுகின்றனர். நிஜத்தில் அந்த வாய் பேசமுடியாத தாய் இலங்கையிலும், அந்தச் சகோதரி இப்போது ஜேர்மனியிலும் வாழ்ந்து கொண்டிருப்பதாகச் சொல்கின்றார். அப்படியாயின் படுபட்சியில் யாருடைய கதைகளை நீங்கள் எங்களுக்குப் பக்கம் பக்கமாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள்?

ப்படி இந்த படுபட்சியில் நிறைய அபத்தங்களைச் சொல்லிக் கொண்டிருக்க முடியும். அண்மையில் எந்தப் புனைவையும் இவ்வளவு எரிச்சலுடன்  இப்படி ஒரு பாவனை செய்யும் முதல் அத்தியாயத்தை வாசித்ததாக ஞாபகத்தில் இல்லை. ஒரு நாளில் சில மணித்தியாலங்களில் இந்த நூலை வாசித்து முடித்திருந்தாலும், முதல் அத்தியாயம் வாசித்துவிட்டு ஒரு பெரும் இடைவெளிவிட்டே பிறகு வாசிக்கத் தொடங்கினேன். அந்தளவுக்கு ஒரு நல்ல கதையை வீணாக்கிவிட்டார்களே என்ற துயரமே வந்தது. (நூலை வாசிக்க முன்னரே நூலைப் பற்றித் தெரியுமா என்று கேட்காதீர்கள். டிலுக்சனின் உரையை நேரில் கேட்டுவிட்டே நூலை வாசித்தேன்).

அன்புள்ள டிலுக்சன், நீங்கள் பிறரின் குரல்களைக் கேட்பவராக இருந்தால் உங்களுக்கு ஒன்று சொல்வேன். உங்களின் கதையை இன்னொருவரிடம் கொடுத்து அவர் உங்களின் கதையை தனது மொழியில் எழுதி அவரின் இன்னொரு நூலைப் போன்று இதை மாற்றி வைத்திருக்கும் பெரும் கொடுஞ்செயலைச் செய்திருக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்களோ தெரியாது.  ஆனால் எப்படி உங்கள் அசலான கதையின் ஆன்மா கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத்திணறி இந்த நூலில் இருக்கின்றதோ, அதற்கு உயிர்கொடுத்து தயவு செய்து அடுத்த திருத்திய பிரதியில், இந்த நூலை உங்கள் சொந்த மொழியில் மீண்டும் எழுதுங்கள். உங்களின் மொழி எவ்வளவு நொய்மையாக இருந்தாலும்,  உங்கள் மொழியில், மட்டக்களப்பு வாசம் நிறைந்த அனுபவங்களை நீங்கள் எழுதும்போதே அது உங்கள் அசலான கதையாக மாறும்.

தொடக்கத்தில் கூறியதுபோல, கலை என்பது ஒருபோதும் பாவனை செய்யக்கூடாது, ஆனால் உங்களின் இந்த 'படுபட்சி'யோ அவ்வளவு பாவனைகளுடன் வந்திருக்கின்றது. ஒரு வாசகராக படுபட்சியை வாசிக்கும்போது அதில் தெரிவது நீங்களல்ல, அதில் பளிச்சிடுவது உங்களுக்கு எழுத  உதவி புரிந்தவரின் அரசியலும், அவரின் மொழியும் மட்டுமே என்பது எவ்வளவு துயரமானது.

அது உங்களுக்கு எந்தச் சிறப்பையும் தரப்போவதில்லை. ஒரு அசலான மனிதனின் கதையை, என் சமகால வயதுடைய ஒருவனின் தனித்துவமான வரலாறை நான் ஒருபோதும் இப்படியான ஒரு குரலில் வாசிக்க விரும்பப் போவதே இல்லை.

***

கார்காலக் குறிப்புகள் - 118

Thursday, November 13, 2025


டந்த சனிக்கிழமை 'அன்புநெறி'  நாதசங்கமம் என்கின்ற ஓர் இசை நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது. இசை நிகழ்வென்றாலும் வீணை முன்னிலையாக இருக்க, வாத்தியங்களின் இன்னிசையெனத்தான் அதைச் செய்யவேண்டும். நிகழ்வின் நோக்கம், ஈழத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்ட நிதி சேகரிப்பதாகும். இந்த நிகழ்வு இதற்கு முதல் வாரம் மொன்றியலில் நிகழ்ந்திருந்தது. இங்கும் மொன்றியலில் நிகழ்ந்த நிகழ்வின் மூலம் 10 வீடுகள் கட்டுவதற்கான புரவலர்களின் நிதி கிடைத்தது மிக முக்கியமானது

 

நாத சங்கமத்தில் முதன்மை வாத்தியக் வீணை வாத்தியக் கலைஞராக இருந்த வாகிசன் கடந்தமுறையும் 'அன்புநெறி' நிகழ்வுக்கு இலங்கையிலிருந்து வந்திருந்தார். ஓர் இலங்கைக் கலைஞருக்கு முதன்மை கொடுத்து அன்புநெறியினர் அழைப்பதும், அவரின் திறமையை சபையினர் அங்கீகரிப்பதும் முக்கியமானது. இன்றைக்கு ஈழத்தில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கே இந்தியக் கலைஞர்ளை அழைத்து படப்பிடிப்பு நடத்தும் அவல நிலைக்கே நாம் வந்துவிட்டபின், புலம்பெயர் தேசத்தில் இவ்வாறு அரிதாகவேனும் ஈழக்கலைஞர்களை மதிப்பதும், நிகழ்வுக்கு அழைப்பதும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.

 

மேலும் வாகீசன் ஒருகட்டத்தில் இசையே வாழ்வென தீர்மானித்து தான் சென்ற கடினபாதையைப் பற்றியும் கொஞ்சம் கூறியிருந்தார். அதுவும் இலங்கையில் கலையை மட்டும் முன்னிறுத்தி ஒருவர் வாழப்போகின்றார் என்றால், நமது பெற்றோருக்கு வரும் பதற்றங்களை விபரிக்கத் தேவையில்லை. ஒருகட்டத்தில் இசையே வாழ்வென நினைத்து வாகீசன் இந்தியாவுக்குப் போய் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் இசையைக் கற்றிருக்கின்றார். அத்தோடு நின்றுவிடாது audio engineering இல்  பட்டமும் அதே காலகட்டத்தில் பெற்றிருக்கின்றார்.

 

எப்படியெனினும் தன் இசையும் வாழ்வும் இலங்கையிலே என்று முடிவு செய்து இலங்கையில் வாழத் தொடங்கியபோது வெளிநாட்டு இசை நிகழ்வுக்கான வாய்ப்புக்கள் வந்தபோதும், இங்கிலாந்திற்கான விஸாவிற்கு நான்கு முறைக்கு மேலாக நிராகரிக்கப்பட்டதையும் குறிப்பிட்டிருந்தார். இப்போது வருடம் முழுவதும் பயணித்துக் கொண்டிருப்பவராக அவர் இருக்கின்றார் என்று நினைக்கின்றேன். மேலும் அந்நிகழ்வில் அவர் சொன்ன இன்னொன்றுதான் நினைவில் கொள்ளத்தக்கது. தனது குரு உனக்கு நல்ல திறமை இருக்கின்றதென்று வாழ்த்து அனுப்பியபோது, எப்போதும் பயிற்சி செய்வதை மட்டும் நிறுத்திவிடாதே என்று சொன்னதாகச் சொன்னார். அதனால்தான் தான் பயிற்சியை மட்டுமின்றி, இசையின் புதிய நுட்பங்களையும் தினமும் கற்றுக்கொண்டிருக்கின்றேன் என்றார். கலையில் ஆழம் செல்கையில் கலை தன்னியல்பிலே நம்மை அரவணைத்துக் கொள்வது என்பதும் உண்மைதானில்லையா?

 

*

 

வாகீசனின் இசை நிகழ்வு அவ்வளவு அருமையாக இருந்தது மட்டுமின்றி, அவ்வளவு எளிமையாகவும், பணிவானவராகவும் இருந்தார். எப்போதும் கற்றுக்கொள்ள விரும்பும் ஒருவர், அவரின் படைப்பு சார்ந்த விமர்சனங்களையும் கேட்க திறந்த மனதுடையவராக இருப்பதை நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கின்றேன். அவ்வாறான ஒருவராக வாகீசனும் இருக்கக்கூடும்.

 

அண்மையில் எதையோ குறித்த எழுதிய பதிவில் நான் மதிக்கும் சில ஈழ/புலம்பெயர் திரை நெறியாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கின்றேன். அது நான் பார்த்த திரைப்படங்களின் அடிப்படையில் எழுதியது. அப்போது திரைப்படத்துறையைச் சேர்ந்த ஒருவர், நாங்கள் மூன்று முழுநீளத் திரைப்படங்கள் எடுத்திருந்தோம் எங்களைக் குறிப்பிடவில்லை என்று கவலைப்பட்டிருந்தார். அவர்களின் மூன்று திரைப்படங்களில் ஒன்றை மட்டுமே பார்த்திருந்தேன். அவரின் கருத்தைப் பார்த்தபோது மனதுக்குள், 'நான் திரையங்குக்குச் சென்று பார்த்த திரைப்படத்தை பற்றி என் விமர்சனத்தை எழுதினால் எனது பக்கமே எட்டிப் பார்க்கமாட்டீர்கள்' என்று சொல்லி, மெளனமாக அதைக் கடந்து போயிருந்தேன். அந்தப் படம் அந்தளவுக்கு மோசமாக இருந்தது. பார்வையாளர்களை முட்டாள்கள் போல நினைத்து பாவனை செய்து ஏமாற்றியிருந்தது. சிலவேளைகளில் மற்ற இரண்டு படங்கள் நன்றாக இருக்கலாம். ஆனால் பார்க்காதவை குறித்துக் கருத்துச் சொல்ல முடியாதே.

 

இப்போது அவர்களின் நான்காவது திரைப்படம் வெளிவருகின்றது போலும். அத் திரைப்படத்தின் கதை ஏற்கனவே நான் அறிவேன் (அது எப்படி என்னை வந்தடைந்தது என்கின்ற தேடல்கள் வேண்டாம்). ஆனால் திரைப்படத்தில் கரு மட்டும் நன்றாக இருந்தால் போதாது. அதைக் காட்சிப்படுத்துவதில்தான் எல்லாமே இருக்கின்றது. அதை அவர்கள் கற்றுக்கொள்ளாது, மற்றவர்களின் விமர்சனங்களைக் காது கொடுக்காதுவிட்டால், நமது இலக்கியவாதிகள் போல நாம் எழுதுவது மட்டுமே மேன்மையானது என்று தீவிரமாக நம்பி ஒரு குட்டைக்குள் நின்று நீச்சலடிப்பதாக முடிந்துவிடக்கூடும். அதனால் கலைக்கோ, பிறருக்கு என்ன நன்மை வந்துவிடப் போகின்றது என்று அவர்கள் தங்களைத் தாங்களே கேட்க வேண்டும். அப்படிக் கேட்கும்பட்சத்தில் உங்களின் கலை இன்னும் முன்னோக்கிச் செல்லும், நீங்கள் நினைக்காத இடங்களையெல்லாம் சென்று சேரும்.

 

மேலும் முழுநீளத்திரைப்படம் மட்டுமே எடுத்துத்தான் எங்களை நிரூபிக்க வேண்டும் என்றில்லை.  திரும்பத் திரும்பச் சொல்வதுதான், எத்தனை கதைகள் நம் ஈழநிலப்பரப்பெங்கும் பரவிக்கிடக்கின்றன. சின்ன சின்ன குறும்படங்களாகவோ, 30 நிமிடப்படங்களாகவோ அதை எடுத்து காட்சிப்படுத்தலாம். எத்தனையோ திரைப்பட விழாக்கள் இருக்கின்றன, அங்கே அனுப்பிக் கூடப் பார்க்கலாம். ஆனால் கதைகள் பாவனை செய்யாது, அசலான நம் வேர்களைப் பற்றிய கதைகளாக இருக்கும்போது மட்டுமே அவை தனித்துவமான படைப்பாக மாறும் என்பதையும் மறந்து விடக் கூடாது.

 

மேலும் அடிக்கடி நான்  குறிப்பிடுவதுதான், ஈழத்தில் யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்களால் எடுக்கப்பட்ட (கல்லூரி வசந்தம்?) திரைப்படமும், புலம்பெயர் தேசத்தில் அருந்ததி நெறியாள்கை செய்த 'முகம்' என்கின்ற்திரைப்படமும் பலவற்றுக்கு நமக்கு முன்னோடி என்பேன். இவையிரண்டும் கையில் இருந்த பணத்தையும், முறைசார் நடிகர்களுமில்லாது எடுக்கப்பட்டவை. தொழில்நுட்பத்தில் கூட பல இடைஞ்சல்களைப் பார்வையாளருக்குத் தரக்கூடியது. ஆனால் 20/30 வருடங்களுக்குப் பிறகும் அதை ஞாபகம் வைத்து அடுத்து வரும் தலைமுறை பேச முடிகிறது என்றால் அவை அசலான நம் கதைகள் என்பதாலாகும்.  

 

அவ்வாறு ஒரு படைப்பை அதற்கான காலத்தையும் தாண்டியும் உருவாக்க முடிவது என்பதுதானே பெரும்பாலான கலைஞர்களுக்குரிய கனவாக இருக்குமே தவிர, சமகாலத்தில் எந்தக் குதிரை ஓடுகின்றதோ அதற்கு தீனி போட்டு பாராட்டைப் பெற முயற்சிப்பது ஒரு அசல் படைப்பாளிக்குரிய மனோநிலையாக இருக்காது அல்லவா?

 

*

 

நாத சங்கம் நிகழ்த்திய வாகீசன் இன்று முழுநேரக் கலைஞர். அவருக்கு இசை சோறு போடுவது மட்டுமில்லாது, உலகெங்கிலும் கலை இரசிகர்கள் அவரை அழைத்து அவரின் கலையைக் கொண்டாடவும் செய்கின்றார்கள். அந்தக் கலை, வசதி வாய்ப்புக்குறைந்தவர்கள் தமக்கான உறைவிடத்தையும் அமைத்துக்கொள்ள ஏதோ ஒருவகையில் உதவி செய்கின்றது என்பது எவ்வளவு அருமையானது. கலை அழைத்துச் செல்லும் பாதைகள் அற்புதமானவை. அதற்கு முக்கியமானது நீங்கள் அந்தக் கலைக்கு உண்மையாக எந்தளவுக்கு இருக்கின்றீர்கள் என்பதும், அதற்காக எவ்வளவு ஆத்மார்த்தமாக உங்கள் உழைப்பைக் கொடுக்கின்றீர்கள் என்பதுமாகும்.

 

******

 

 

 

வாசகர்கள்..!

Friday, November 07, 2025

 

மது ரமேஷ் பிரேதன் காலமானபோது அவர் குறித்து பகிரப்பட்ட பதிவுகளைப் பார்த்தபோது, ரமேஷ் உயிரோடு இருந்த காலங்களில் இவற்றில் ஒரு பத்துவீதமானவர்களாவது அவரை வாசித்துக் கொண்டிருக்கின்றோம் என்று அவரிடம் சொல்லியிருந்தால் எவ்வளவு அகமகிழ்ந்திருப்பார் என நினைத்துக் கொண்டேன். தமிழ்ச்சூழலில் எழுத்தாளர்களின் நிலைமை அனைவர்க்கும் தெரிந்திருக்கும். அப்படி இருந்தும் பலர் தமது வாழ்வின் பெரும்பகுதியை எழுத்துக்காக  காலங்காலமாக அர்ப்பணித்தபடி இருக்கின்றனர். அவர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரும் அங்கீகாரம் அவர்களின் படைப்புக்களைப் பற்றி வாசகர்கள் உரையாடும்போதுதான் அதிகம் நிகழ்கின்றது. அதுவே அவர்களைத் தமிழ்ச்சூழலில் சோர்ந்து போகாது தொடர்ந்து   உற்சாகமாக எழுத வைக்கின்றதாகவும் இருக்கின்றது.


பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு மிக நெருக்கமான சில வாசகர்களாவது இருப்பார்கள். நானென் சிறுவயதுகளில் பாலகுமாரனின் மூழ்கியிருந்தபோது வாசகரான தேவகோட்டை வா மூர்த்தி (?) என்பவரின் அநேக கடிதங்கள் முன்னுரை போல பாலகுமாரனின் நாவல்களில் பிரசுரிக்கப்பட்டபடி இருக்கும். பாலகுமாரனின் மீதிருந்த அன்பால், இப்படியொரு ஒரு தீவிர வாசகனாக என் கடிதம் ஒன்றாவது பிரசுரிக்க வேண்டுமெனக் கனவு கண்டிருக்கின்றேன். அவ்வாறு ஹென்றி மில்லருக்கு அனானிஸ், நபகோவுக்கு வேரா(Vera), தமிழில் பிரமிளுக்கு கால சுப்பிரமணியம், வெங்கட் சாமிநாதனுக்கு தஞ்சை பிரகாஷ் என்று எண்ணற்ற வாசக உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.


*


கொழும்பில் ஒரு கஃபேயில், எனது ப்யூகோவ்ஸ்கி கவிதைகள் நூல் பற்றிய உரையாடலுக்கு நண்பர்கள் வந்திருந்தார்கள். கஃபேயின் மேற்றளத்தில் ஒரு பத்து நண்பர்கள் இலக்கியம் பேசி கொண்டுவிட்டு, கீழே இறங்கி வந்தபோது அவரது காதலியை அறிமுகம் செய்து வைத்திருந்தார். நான், அவரையும் மேலே அழைத்து வந்திருக்கலாம் என்று சொன்னபோது, பரவாயில்லை என்று இருவரும் சொன்னார்கள்.


அந்த நண்பர் எனது 'மெக்ஸிக்கோ' வாசித்து, அதன் மீது அவ்வளவு நேசத்துடன் இருந்தார். அவருக்கு கிட்டத்தட்ட எல்லாப் பக்கங்களும் பாடமென்றளவுக்கு அதை ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் வாசித்துமிருந்தார். அண்மையில்தான் இன்னொரு விடயமும் தெரிந்தது. அந்த நண்பர் தனது புத்தகங்களை காதலியின் வீட்டில் கொடுத்து வைத்திருக்கின்றார். அவ்வளவு வாசிப்பில் ஆர்வமில்லாத அவரின் காதலி தற்செயலாக 'மெக்ஸிக்கோ'வை எடுத்து வாசித்திருக்கின்றார். அது அந்தப் பெண்ணுக்கும் பிடித்ததால், இந்த நண்பர் 'ப்யூகோவ்ஸ்கி கவிதைகள்' நிகழ்வுக்கு வந்ததால், 'மெக்ஸிக்கோ' எழுதியவர் யாரென்று பார்க்க ஆவலுடன் வந்திருக்கின்றார். இது எனக்கு அப்போது தெரியாது. பின்னர் அந்த நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் இதைச் சொன்னார். அடடா இப்படியான ஒருவரை முறையாக வரவேற்கவில்லையே என எனக்குக் கொஞ்சம் வருத்தமிருந்தது.


இப்படித்தான் இன்னொரு வாசகர் இருக்கின்றார். அவர்தான் எனக்குக் கிடைத்த மிக இளம் வாசகர் என்று நினைக்கின்றேன். 'மெக்ஸிக்கோ' அவர் தனது பதினைந்து வயதுகளிலே வாசித்திருந்தார். அவரின் அக்காவின் சேகரத்தில் இருந்து எடுத்து வாசித்திருந்தார். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் இந்த விடயத்தை இந்த 'இளம் வாசகனை'ப் பற்றி பகிர்ந்தபோது, 'மெக்ஸிக்கோ' அவரைப் போன்றவர்கள் வாசிக்க ஏற்ற நாவலா என்று ஒரு சிறு உரையாடல் எனது முகநூலில் போனது சிலருக்கு ஞாபகம் இருக்கலாம்.


அவர் இன்று பல்கலைக்கழகத்துக்கு முதலாமாண்டு போகின்ற மாணவன். 'மெக்ஸிக்கோ'வோடு மட்டும் நிற்காது எனது அண்மைய நூலான 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' வரை வாசித்த வாசகர். தனது அக்காவோடு எனது எழுத்துக்கள் எப்படி மாறுதலடைந்து கொண்டு போகின்றது என்பதை எனது முதல் சிறுகதைத் தொகுப்பான 'சாம்பல் வானத்தில் மறையும் வைரவரை'த் தேடி வாசித்து உரையாடியிருக்கின்றார். அவரது அக்காவிற்கு தம்பி தன்னைவிட அதிகம் என் எழுத்துக்களை நுணுக்கமாக வாசிக்கின்றார் என்று திகைப்பு.


அண்மையில் கொழும்பில் அவர் வயதொத்ததவர்கள் கூடிப் பேசும் இலக்கியக் கூட்டத்திலும் தனக்குப் பிடித்த புத்தகம் என்று 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருக்கிந்தார்' பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். இன்று கூட அந்தப் புத்தகத்தை யாரோ ஒரு சிங்களத் தோழிக்கு (அவர் எழுத்துக்கூட்டி தமிழை வாசிப்பவர்) கொடுத்து அந்தத் தோழி வாசித்துக் கொண்டிருந்தபோது இன்னொருவர் அதைப் பார்த்து, 'இளங்கோவின் நூலையா வாசித்துக் கொண்டிருக்கின்றீர்கள்' என்று சொல்லி அவர்கள் என் எழுத்துக்களை விவாதித்திருக்கின்றனர். அதன் முடிவில்தான் இந்த புதிய நண்பர் எனக்கு நேசத்தை ஒரு காணொளியாக அனுப்பி வைத்தார்.


பதின்மத்தின் விளிம்பிலும், இருபதுகளின் தொடக்கத்திலும் இருக்கும் ஒரு புதிய தலைமுறை (என் எழுத்தை வாசிப்பதால் மட்டும் அல்ல) நூல்களை வாசிப்பதும் உரையாடுவதும் நிறைவாக இருக்கின்றது. அவர்களினூடாக புதியவர்கள் எழுத வந்து தமிழ்ச்சூழலின் புதிய பாய்ச்சல்களை நிகழ்த்தவும் கூடும். இப்படியான வயதுகளில்தான் அதுவரை நான் வாசித்தவற்றின் திசையை மாற்றிய எஸ்.பொவின் 'ஆண்மை'யையும், சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே.சில குறிப்புகளை'யும் கண்டடைந்திருக்கின்றேன். அவ்வாறு தொடங்கிய ஒரு புதிய வாசிப்பு எழுச்சியும் வீழ்ச்சியுமான என் அலைச்சறுக்கு வாழ்க்கையில் என்னை துயரங்களில் எப்போதும் மூழ்கவிடாது கரைசேர்த்திருக்கின்றது. 


இந்த இளையவர்களுக்கும், அவர்களின் வாசிப்பு, அவர்களின் தத்தளிப்புக்களின் மட்டுமில்லாது, இனிய தருணங்களுக்கும் துணை நிற்கட்டுமாக. இதுவே அவர்களை சிறந்த எழுத்தாளர்களாக நாளை ஆக்குமென நம்பிக்கையும் கொள்கிறேன்.


***
 

கார்காலக் குறிப்புகள் - 117

Tuesday, November 04, 2025

 

 காளமாடன் (பைசன்)

***


லை என்பது எப்போதும் பாவனை செய்யக்கூடாது என்று நம்புபவன் நான். ஒரு படைப்பு எவ்வித ஆழமற்று, அப்பாவித்தனமாக இருந்தாலும், அது தன்னளவில் பாவனை செய்யாது இருக்கின்றதா என்பதைக் கூர்ந்து கவனிக்க விரும்புவன் நான். கலை என்பதன் நோக்கமே படைப்பும்/படைத்தல் சார்ந்ததும். அதன் நிமித்தம் கிடைக்கும் புகழ்,பணம், செல்வாக்கு என்பதல்ல, படைப்பின் மகிழ்ச்சிக்கு அப்பால் கிடைப்பவை. எனவே ஓர் உண்மையான படைப்பாளி படைப்பின் மூலம் கிடைக்கும் by product குறித்து அவ்வளவு அக்கறைப்படமாட்டார் என்று நினைக்கின்றேன்.


இப்போது இங்கு முதல் காட்சியாக பார்த்து வந்த காளமாடன் (பைசன்) அவ்வளவு மனம் நிறைந்திருக்கின்றது. வழமையான விளையாட்டு சார்ந்த திரைப்படங்களுக்கு ஒரு வாய்ப்பாடு இருக்கின்றது. அவ்வாறான எல்லைக்கோடுகளை ஆழப்புழா ஜிம்கானா போன்ற மலையாளப் படங்கள் உடைக்ககூடும், ஆனால் டங்கலோ, இறுதிச்சுற்றோ, சர்பட்டா பரம்பரையோ, ஏன் காளமாடனோ உடைத்தல் சற்றுக் கடினமானதுதான்; அதைப் புரிந்துகொள்ளவும் முடியும்.


ஆனால் அந்த எல்லைக் கோட்டுக்குள் நின்று மிகச் சிறப்பாக தன்னை மாரி செல்வராஜ் 'காளமாடனை' நமக்கு அளித்திருக்கின்றார். அதிலும் ஓடுக்கப்பட்ட சாதி/ஆதிக்க சாதிகளை அதன் சிக்கல்கள்/வன்மங்கள்/சண்டைகள் என்று காட்டியிருந்தாலும், அனைவருக்கும் சொல்லப்படாத பக்கங்களைக் காட்டியிருப்பது, முக்கியமாக துவிதநிலையில் நாயக ௴ எதிர்நாயக் விம்பங்களை நவீனத்துவ நிலையில் நின்று கட்டியமைக்காததும் முக்கியமானது.


எனக்கு இரத்தம் பிடிப்பதில்லை. அதற்கு என் சிறுவயதில் போரின் நிமித்தம் எறிகணை வீழ்ந்து இரத்தம் தோயத்தோய வைத்தியசாலைக்குக் கொண்டு வந்ததில் இருந்து எங்கும் பார்க்கப் பிடிப்பதில்லை. திரைகளில் என்றால் கண்ணை மூடிவிடும் சுதந்திரத்தை எப்போதும் அனுபவிப்பவன். இதிலும் வன்முறை கடுமையாகக் காட்டப்படுகின்றது. ஆனால் சட்டென்று இப்படி சாதித்தலைவர்களின் (அல்லது ரெளடிகள் என விளிக்கப்பட்ட) பல கதைகளை/செய்திகளை முகப்பில் தாங்கிவந்த ஜூனியர் விகடன்களைப் பார்த்த ஞாபகம் வருகின்றது.


மாரி பத்திரிகைச் செய்திகளில் இருந்து கடந்தகால யதார்த்தத்தை மட்டுமில்லை, அசலான மனிதர்களின் சாயல்களுள்ள பாத்திரங்களையும் காளமாடனில் கொண்டு வருவது அருமையானது. அதுபோலவே இந்தச் சாதிச்சகதிகளுக்குள் விரும்பாமாலே சிக்கிகொள்ளும் ஒருவனது (அப்பாவி என்று சொல்வது அல்லது காட்சிப்படுத்துவது கூட பிறருக்கு ஏற்ற அரசியலைச் சொல்வதுதானல்லவா?) வாழ்வில் நாமும் ஒரு அங்கமாகின்றோம். அவனைப் போல நாங்களும் அவன் ஊர் என்கின்ற சாதிநோய் பிடித்த நிலப்பரப்பிலிருந்து தப்பிப்போக வழிகள் திறக்காதா என ஏங்குகின்றோம்.


இதில் தகப்பனாக வரும் பசுபதிதான் எல்லாப் பாத்திரங்களையும் விட ஓர் முன்னே நிற்கின்றார் என நினைக்கின்றேன். ஏனெனில் அந்தப் பாத்திரமே கடந்தகாலத்தின் எல்லா அவமானங்களை அறிந்தும், அதேவேளை நிகழ்காலத்தில் மகனைக் காப்பாற்றி பத்திரமாக வேறொரு கரை சேர்க்க விரும்பும் இந்தத் தலைமுறையின் ஒருவராகவும் இரண்டு காலங்களிலும் காலூன்றி நிற்பவராக இருக்கின்றார்.


துருவ்வை படத்தின் நீண்டநேரம் வரை விக்ரமின் இளம் பிரதியொன்றைப் பார்க்கின்றேனா என்றுதான் தோன்றிக்கொண்டிருந்தது. ஆனால் அதைத்தாண்டி அவர் உடல்மொழியில் தன்னை அந்தப் பாத்திரத்தில் கரையும் போது, அவர் அந்தத் திருநெல்வேலியின் அசல் பாத்திரங்களில் ஒரு பாத்திரமாக கரைந்துவிடுகின்றார். ஒரு நடிகர் தன்னை இயக்குநனருக்குக் கொடுக்கும்போது எப்படி உருமாறமுடியும் என்பதற்கு இப்படத்தில் துருவ்வும், மாரியின் மற்றப்படமான 'மாமன்னனில்' வடிவேலும் நல்லதொரு உதாரணங்கள்.


என்னைப் போன்ற ஊரில் இருந்து வந்தவர்க்கு ஒரு துறையில் பிரகாசிப்பது என்பது எவ்வளவு கடினமென்று தெரியும். அதுவும் படிக்கும் பாடசாலையில் இருந்து பல்வேறு மட்டங்களில் நம்மை கீழிறக்க நம் கண்ணுக்குத் தெரியாத கரங்களோடு போராடிக் கொள்ளவேண்டும். அதுவும் ஒருவன் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்துவிட்டால், அவன் தன் திறமையைக் காட்ட மட்டுமல்ல, தன்னையொரு சக உயிரியாகத் தன்னை நிரூபிகவே தன் காலம் முழுவதையும் செலவழிக்க வேண்டியிருக்கின்றது என்பதற்கு காளமாடன் நம்முன் சாட்சியாக இருக்கின்றது.


லை என்ன செய்யும்? நாம் வாழாத வாழ்வைக்கூட அதன் ஒரு பகுதியாக நம்மைக் கரைத்து அந்த வாழ்வை வாழ்ந்து பார்க்க வைக்கும். நமது போலிப் பெருமிதங்களையும், சாதி ஆணவங்களையும் இது உங்களின் அடையாளங்களல்ல, அழுக்குகள் என்று ஒவ்வொருவரையும் உணரவைக்கும். அதை இந்தக் காளமாடன் செய்திருக்கின்றான். 


நமது ஈழப்போராட்டம் முடிவடைந்தபின் நமக்கான நீதியைக் கோருவதற்கு நாம் மற்றவர்கள் குற்றவுணர்வை அடைகின்றமாதிரியான படைப்புக்களைக் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டேயிருப்பவன். எங்கள் வீரக்கதைகளைச் சொல்லி கடந்தகாலத்தில் நிலைத்து நிற்பதால் நமக்கு மட்டுமில்லை, அநியாயமாக இறந்துபோனவர்க்கும் நாம் அநீதி செய்தவர்களாகின்றோம். மேலும் நமது படைப்புக்கள் நம்மை ஒடுக்கிய இனத்தோடு மட்டுமில்லை, நாம் ஒடுக்கிய இனத்தோடும், ஏன் நமக்கிடையிலும் கூட உரையாடல்களைச் செய்வதாக இருக்க வேண்டும். 


மாரி இந்த காளமாடனினில் -அவரின் முன்னை திரைப்படங்களைப் போல- ஏன் அதைவிட இன்னும் மேலாக- ஆதிக்க சாதிகளிடையே ஓர் உரையாடலை - உணர்ச்சிவசப்படாது செய்ய வந்திருக்கின்றார். இந்திய/தமிழ்ச் சினிமாவின் செல்வாக்கில் அதைப் போல பாவனை செய்கின்ற நம் ஈழத்து/புலம்பெயர் சினிமாக்காரர்கள் ஆகக்குறைந்தது மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்களிடமிருந்து, எப்படி முரண்பாடுகளை நேர்மறையான கலைகளாக முன்வைப்பது என்கின்ற திசைகளைக் கற்றுக்கொள்ளலாம்.


மாரியும் ஓர் நேர்காணலில் சொல்லியிருப்பார், 'வாழை'யில் ஒரு நடந்தகதையை அப்படியோ சொல்லியிருக்கின்றேன். அதில் உரையாடல்களைச் செய்வதற்கு ஏதுமில்லை. அங்கே பார்வையாளர்களுக்கு ஒரு பெரும் மெளனத்தையே விட்டுச் சென்றேன். ஆனால் காளமாடான் பல்வேறு உரையாடல்களை அது நேரோ எதிரோ உருவாக்குவதையே விரும்புகின்றேன்  என்று கூறியிருப்பார்.


மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய, எந்தக் காட்சியிலும் ஏதோ ஒரு பக்கம் சாய்ந்து இன்னொரு தரப்பை உணர்ச்சியூட்டக்கூடிய அசலான கதையை பொதுவெளியில் பார்வையாளருக்கு முன்னே வைப்பதற்கு வீரத்தினால் அல்ல, ஒருவர் தன் கலையை அந்தளவுக்கு நம்பினால்தான் இவ்வாறு அச்சமின்றி ஓர் படைப்பை வைக்கமுடியும். அந்தவகையில் மாரி பாராட்டுக்குரியவர்.


இப்போது முன்புபோல அல்லாது மிகக் குறைவாக வருடத்துக்கு இரண்டோ/மூன்றோ தமிழ்த் திரைப்படங்களைத்தான் திரையரங்குக்குச் சென்று பார்ப்பேன். ஆனால் கடைசியாக வந்த மாரியின் 'மாமன்னன்', 'வாழை', இப்போது 'காளமாடன்' எல்லாவற்றையும் தவறவிடாது திரையங்கில் பார்த்தது மட்டுமின்றி முதல் காட்சியாக இவற்றைப் பார்த்திருக்கின்றேன் என்பதும் மாரி மீது என்னைப் போன்ற பார்வையாளர்கள் இன்னும் நம்பிக்கை இழக்காது இருக்கின்றோம் என்பதைத் தவிர வேறென்ன காரணம் இருக்கமுடியும்?



********