கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 118

Thursday, November 13, 2025


டந்த சனிக்கிழமை 'அன்புநெறி'  நாதசங்கமம் என்கின்ற ஓர் இசை நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது. இசை நிகழ்வென்றாலும் வீணை முன்னிலையாக இருக்க, வாத்தியங்களின் இன்னிசையெனத்தான் அதைச் செய்யவேண்டும். நிகழ்வின் நோக்கம், ஈழத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்ட நிதி சேகரிப்பதாகும். இந்த நிகழ்வு இதற்கு முதல் வாரம் மொன்றியலில் நிகழ்ந்திருந்தது. இங்கும் மொன்றியலில் நிகழ்ந்த நிகழ்வின் மூலம் 10 வீடுகள் கட்டுவதற்கான புரவலர்களின் நிதி கிடைத்தது மிக முக்கியமானது

 

நாத சங்கமத்தில் முதன்மை வாத்தியக் வீணை வாத்தியக் கலைஞராக இருந்த வாகிசன் கடந்தமுறையும் 'அன்புநெறி' நிகழ்வுக்கு இலங்கையிலிருந்து வந்திருந்தார். ஓர் இலங்கைக் கலைஞருக்கு முதன்மை கொடுத்து அன்புநெறியினர் அழைப்பதும், அவரின் திறமையை சபையினர் அங்கீகரிப்பதும் முக்கியமானது. இன்றைக்கு ஈழத்தில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கே இந்தியக் கலைஞர்ளை அழைத்து படப்பிடிப்பு நடத்தும் அவல நிலைக்கே நாம் வந்துவிட்டபின், புலம்பெயர் தேசத்தில் இவ்வாறு அரிதாகவேனும் ஈழக்கலைஞர்களை மதிப்பதும், நிகழ்வுக்கு அழைப்பதும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.

 

மேலும் வாகீசன் ஒருகட்டத்தில் இசையே வாழ்வென தீர்மானித்து தான் சென்ற கடினபாதையைப் பற்றியும் கொஞ்சம் கூறியிருந்தார். அதுவும் இலங்கையில் கலையை மட்டும் முன்னிறுத்தி ஒருவர் வாழப்போகின்றார் என்றால், நமது பெற்றோருக்கு வரும் பதற்றங்களை விபரிக்கத் தேவையில்லை. ஒருகட்டத்தில் இசையே வாழ்வென நினைத்து வாகீசன் இந்தியாவுக்குப் போய் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் இசையைக் கற்றிருக்கின்றார். அத்தோடு நின்றுவிடாது audio engineering இல்  பட்டமும் அதே காலகட்டத்தில் பெற்றிருக்கின்றார்.

 

எப்படியெனினும் தன் இசையும் வாழ்வும் இலங்கையிலே என்று முடிவு செய்து இலங்கையில் வாழத் தொடங்கியபோது வெளிநாட்டு இசை நிகழ்வுக்கான வாய்ப்புக்கள் வந்தபோதும், இங்கிலாந்திற்கான விஸாவிற்கு நான்கு முறைக்கு மேலாக நிராகரிக்கப்பட்டதையும் குறிப்பிட்டிருந்தார். இப்போது வருடம் முழுவதும் பயணித்துக் கொண்டிருப்பவராக அவர் இருக்கின்றார் என்று நினைக்கின்றேன். மேலும் அந்நிகழ்வில் அவர் சொன்ன இன்னொன்றுதான் நினைவில் கொள்ளத்தக்கது. தனது குரு உனக்கு நல்ல திறமை இருக்கின்றதென்று வாழ்த்து அனுப்பியபோது, எப்போதும் பயிற்சி செய்வதை மட்டும் நிறுத்திவிடாதே என்று சொன்னதாகச் சொன்னார். அதனால்தான் தான் பயிற்சியை மட்டுமின்றி, இசையின் புதிய நுட்பங்களையும் தினமும் கற்றுக்கொண்டிருக்கின்றேன் என்றார். கலையில் ஆழம் செல்கையில் கலை தன்னியல்பிலே நம்மை அரவணைத்துக் கொள்வது என்பதும் உண்மைதானில்லையா?

 

*

 

வாகீசனின் இசை நிகழ்வு அவ்வளவு அருமையாக இருந்தது மட்டுமின்றி, அவ்வளவு எளிமையாகவும், பணிவானவராகவும் இருந்தார். எப்போதும் கற்றுக்கொள்ள விரும்பும் ஒருவர், அவரின் படைப்பு சார்ந்த விமர்சனங்களையும் கேட்க திறந்த மனதுடையவராக இருப்பதை நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கின்றேன். அவ்வாறான ஒருவராக வாகீசனும் இருக்கக்கூடும்.

 

அண்மையில் எதையோ குறித்த எழுதிய பதிவில் நான் மதிக்கும் சில ஈழ/புலம்பெயர் திரை நெறியாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கின்றேன். அது நான் பார்த்த திரைப்படங்களின் அடிப்படையில் எழுதியது. அப்போது திரைப்படத்துறையைச் சேர்ந்த ஒருவர், நாங்கள் மூன்று முழுநீளத் திரைப்படங்கள் எடுத்திருந்தோம் எங்களைக் குறிப்பிடவில்லை என்று கவலைப்பட்டிருந்தார். அவர்களின் மூன்று திரைப்படங்களில் ஒன்றை மட்டுமே பார்த்திருந்தேன். அவரின் கருத்தைப் பார்த்தபோது மனதுக்குள், 'நான் திரையங்குக்குச் சென்று பார்த்த திரைப்படத்தை பற்றி என் விமர்சனத்தை எழுதினால் எனது பக்கமே எட்டிப் பார்க்கமாட்டீர்கள்' என்று சொல்லி, மெளனமாக அதைக் கடந்து போயிருந்தேன். அந்தப் படம் அந்தளவுக்கு மோசமாக இருந்தது. பார்வையாளர்களை முட்டாள்கள் போல நினைத்து பாவனை செய்து ஏமாற்றியிருந்தது. சிலவேளைகளில் மற்ற இரண்டு படங்கள் நன்றாக இருக்கலாம். ஆனால் பார்க்காதவை குறித்துக் கருத்துச் சொல்ல முடியாதே.

 

இப்போது அவர்களின் நான்காவது திரைப்படம் வெளிவருகின்றது போலும். அத் திரைப்படத்தின் கதை ஏற்கனவே நான் அறிவேன் (அது எப்படி என்னை வந்தடைந்தது என்கின்ற தேடல்கள் வேண்டாம்). ஆனால் திரைப்படத்தில் கரு மட்டும் நன்றாக இருந்தால் போதாது. அதைக் காட்சிப்படுத்துவதில்தான் எல்லாமே இருக்கின்றது. அதை அவர்கள் கற்றுக்கொள்ளாது, மற்றவர்களின் விமர்சனங்களைக் காது கொடுக்காதுவிட்டால், நமது இலக்கியவாதிகள் போல நாம் எழுதுவது மட்டுமே மேன்மையானது என்று தீவிரமாக நம்பி ஒரு குட்டைக்குள் நின்று நீச்சலடிப்பதாக முடிந்துவிடக்கூடும். அதனால் கலைக்கோ, பிறருக்கு என்ன நன்மை வந்துவிடப் போகின்றது என்று அவர்கள் தங்களைத் தாங்களே கேட்க வேண்டும். அப்படிக் கேட்கும்பட்சத்தில் உங்களின் கலை இன்னும் முன்னோக்கிச் செல்லும், நீங்கள் நினைக்காத இடங்களையெல்லாம் சென்று சேரும்.

 

மேலும் முழுநீளத்திரைப்படம் மட்டுமே எடுத்துத்தான் எங்களை நிரூபிக்க வேண்டும் என்றில்லை.  திரும்பத் திரும்பச் சொல்வதுதான், எத்தனை கதைகள் நம் ஈழநிலப்பரப்பெங்கும் பரவிக்கிடக்கின்றன. சின்ன சின்ன குறும்படங்களாகவோ, 30 நிமிடப்படங்களாகவோ அதை எடுத்து காட்சிப்படுத்தலாம். எத்தனையோ திரைப்பட விழாக்கள் இருக்கின்றன, அங்கே அனுப்பிக் கூடப் பார்க்கலாம். ஆனால் கதைகள் பாவனை செய்யாது, அசலான நம் வேர்களைப் பற்றிய கதைகளாக இருக்கும்போது மட்டுமே அவை தனித்துவமான படைப்பாக மாறும் என்பதையும் மறந்து விடக் கூடாது.

 

மேலும் அடிக்கடி நான்  குறிப்பிடுவதுதான், ஈழத்தில் யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்களால் எடுக்கப்பட்ட (கல்லூரி வசந்தம்?) திரைப்படமும், புலம்பெயர் தேசத்தில் அருந்ததி நெறியாள்கை செய்த 'முகம்' என்கின்ற்திரைப்படமும் பலவற்றுக்கு நமக்கு முன்னோடி என்பேன். இவையிரண்டும் கையில் இருந்த பணத்தையும், முறைசார் நடிகர்களுமில்லாது எடுக்கப்பட்டவை. தொழில்நுட்பத்தில் கூட பல இடைஞ்சல்களைப் பார்வையாளருக்குத் தரக்கூடியது. ஆனால் 20/30 வருடங்களுக்குப் பிறகும் அதை ஞாபகம் வைத்து அடுத்து வரும் தலைமுறை பேச முடிகிறது என்றால் அவை அசலான நம் கதைகள் என்பதாலாகும்.  

 

அவ்வாறு ஒரு படைப்பை அதற்கான காலத்தையும் தாண்டியும் உருவாக்க முடிவது என்பதுதானே பெரும்பாலான கலைஞர்களுக்குரிய கனவாக இருக்குமே தவிர, சமகாலத்தில் எந்தக் குதிரை ஓடுகின்றதோ அதற்கு தீனி போட்டு பாராட்டைப் பெற முயற்சிப்பது ஒரு அசல் படைப்பாளிக்குரிய மனோநிலையாக இருக்காது அல்லவா?

 

*

 

நாத சங்கம் நிகழ்த்திய வாகீசன் இன்று முழுநேரக் கலைஞர். அவருக்கு இசை சோறு போடுவது மட்டுமில்லாது, உலகெங்கிலும் கலை இரசிகர்கள் அவரை அழைத்து அவரின் கலையைக் கொண்டாடவும் செய்கின்றார்கள். அந்தக் கலை, வசதி வாய்ப்புக்குறைந்தவர்கள் தமக்கான உறைவிடத்தையும் அமைத்துக்கொள்ள ஏதோ ஒருவகையில் உதவி செய்கின்றது என்பது எவ்வளவு அருமையானது. கலை அழைத்துச் செல்லும் பாதைகள் அற்புதமானவை. அதற்கு முக்கியமானது நீங்கள் அந்தக் கலைக்கு உண்மையாக எந்தளவுக்கு இருக்கின்றீர்கள் என்பதும், அதற்காக எவ்வளவு ஆத்மார்த்தமாக உங்கள் உழைப்பைக் கொடுக்கின்றீர்கள் என்பதுமாகும்.

 

******

 

 

 

0 comments: