
பழுத்த இலைகள்
உதிர்ந்து விடைகொடுக்க
சாம்பர் வானக்குதிரையிலேறி
மிதக்குமென் பயணம்
மழையாக முடிவுறுகிறது
யுத்தபூமிகளில்
கந்தக வெடிலையும்
இரத்தச் சகதியையும் சுமந்தபடி
ஒற்றைச்சிறகுடன் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளை
தமக்கான இரையாக்குகின்றன
வட்டமிடும் வல்லூறுகள்
புறமுதுகிட்டு
பிள்ளை ஓடினானெனின்
முலையரிவேனென்ற புறநானூற்றுத்தாய்
போரை விதந்தேத்திய
கவிஞர்களின் எழுதுகோல்களை நொறுக்கி
இறந்துபோன பிள்ளைகளை
நினைவுகூர்கிறாள்
தன்முலைகளை அறுத்தெறிந்து
ஓர் அரும்பு
மலர்வதைப் போல
மரணித்தவர்களை உயிர்ப்பிக்கவும்
காற்று வீசுவதைப் போல
விழுப்புண்களை ஆற்றவும்
இயற்கையால் முடியவில்லையெனும் ஆதங்கத்தில்
பரிதி
பூமிபிளந்து
தனக்கான புதைகுழியைத் தோண்டத்தொடங்குகின்றது
அடர்ந்த காட்டில்
மூன்று நாட்களாய் சாப்பிடாதலையும்
ஒரு கெரில்லாப்போராளி
புழுக்கள் மிதக்கும்
அழுக்குத்தண்ணீரை அருந்துகையில்
விழிகளில் விரியும்
மக்களுக்கான கனவுகள்
பிரசவித்துவிடுகின்றன
எளிதில் தீர்க்கமுடியா
போர் குறித்த சிக்கலான சூத்திரங்களை.
2006.09.13
(திலீபனுக்கு.......)
ஓவியம்
2 comments:
romba arumaiyaana kavithai..vazhthukkal ungal kavithai poonga ithazhukku thernthedukkapattamaikku..
9/22/2006 08:39:00 PMநன்றி கார்த்திகேயன்.
9/25/2006 10:08:00 AMPost a Comment