கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அம்பையின் 'ஒரு கறுப்புச் சிலந்தியுடன், ஓர் இரவு'

Wednesday, October 29, 2014

டைப்பாளிகள் பலரை முதலில் அவர்களின் படைப்புக்களை வாசித்து அறிமுகமாகித்தான், பின் அவர்கள் யாரெனத் தேடிப் பார்த்திருக்கின்றேன். விதிவிலக்காய் அம்பையை அறிந்துகொண்டது, தொண்ணூறுகளின் பிற்பகுதியில் வாசித்த காலச்சுவடின் நேர்காணல் ஒன்றின் மூலமாக. முன்னட்டையே இல்லாத காலச்சுவடை கண்டதும் வாசித்ததும் ஒரு தற்செயலான நிகழ்வு. ஆனால் முதன்முதலாக வாசித்த காலச்சுவடும், அம்பையின் நேர்காணலும் அதுவரை இருந்த வாசிப்பின் திசையை மாற்றியிருக்கின்றது. இப்படி ஒருவர் வெளிப்படையாகவும், விமர்சன பூர்வமாகவும் எல்லாவற்றையும் உடைத்துப் போடமுடியுமா என யோசிக்க வைத்த நேர்காணலது.

அப்போது பதின்மவயதுகளிலிருந்த எனக்கு அம்பை ஏதோ இருபதுகளில் இருப்பவரைப் போன்ற உற்சாகமுடையவராகத் தெரிந்தார். அவர் அப்போதே 50களில் இருந்திருக்கிறார் என்பதைப் பின்னர் அறிந்தாலும், நகுலனைப் போல அவர் ஒரு இளமையானவராகவே எனக்குள் இன்றுமிருக்கின்றார். அம்பையின் இறுதியாய் வந்த 'ஒரு கறுப்புச் சிலந்தியுடன், ஓர் இரவு' தொகுப்பை வாசிக்கும்போது அதே உற்சாகத்தையும், அவருக்குப் பின் வந்த/வரும் எந்தத் தலைமுறையும் நெருக்கங்கொள்ளும் கதைகளையுந்தான் எழுதியிருக்கின்றார் என்பதைக் கண்டுகொண்டேன்.

முரகாமியின் எந்த நாவலை வாசித்தாலும், அதில் வரும் பாத்திரங்களுக்கு எவ்வளவு வயதாயிருந்தாலும், அவர்களின் பதின்மப்பருவங்களை எங்கோ ஓரிடத்தில் முரகாமி தொட்டுச் செல்லாமல் கடந்து சென்றிருக்கமாட்டார். அதற்கு இறுதியாய் வந்த 'Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage' என்ற நாவலில் கூட, கதையில் Tsukuru Tazaki, 36 வயதாக இருந்தாலும், நாவலைத் தொடங்கும்போது sukuruயின் பதின்மமும், 20களில் தற்கொலையிற்கு த்யாராகும் மனோநிலையை விபரிப்பதுடனேயேதான் நாவல் தொடங்குகின்றது. அவ்வாறே அம்பையின் கதையை வாசிக்கும்போது, அதில் வரும் பாத்திரங்கள் எத்தகைய வயதுகளில் இருந்தாலும் -என்றுமே வயதுபோகாத- ஒரு இளம்பெண் கதைகளிற்குள் மறைந்தும் மறையாத மாதிரி இருப்பதை அவதானிக்க முடியும்.

இந்தத் தொகுப்பில் 'பயணம் - XX' என்ற இலக்கமிட்ட கதைகளே நிறைய இருக்கின்றன. இப்படி 'பயணம்' என தலைப்பிடப்பட்டு கடந்த தொகுப்பில் வந்த கதைகளின் நீட்சிதான் இதுவெனினும், ஒவ்வொரு பயணங்களும் வெவ்வேறு கதைகளைக் கூறுகின்றன. பாரிஸிற்குப் போய் மரபுவாதிகளிடம் சிக்குப்படுகின்ற இராவணன் கோட்டை என்றாலென்ன, 'திருவள்ளுவர்' சிலையுடன் நெருக்கம் கொள்கின்ற இங்கிலாந்துக் கதையாயிருந்தாலென்ன எல்லாமே பயணித்தலின் குறுக்குவெட்டு முகங்களே.

இந்தியாவிற்குள் பயணிக்கும்போது நிகழ்பவை சில சிரிப்பைத் தருகின்றன என்றால பல பதற்றங்களை ஏற்படுத்துகின்றன. பயணிப்பதில் பெண்களுக்கு இருக்கும் சிக்கல்கள் பற்றி பலர் நிறைய எழுதியிருக்கின்றனர்/ விவாதிருக்கின்றனர். ஒரு கதையில் வரும் பாத்திரம் நடுத்தரவயதுகளில் இருந்தாலும், இந்த வயதில் ஜூன்ஸ் அணிந்து பயணித்தாலும் ஆண்களின் கண்கள் எப்படி உற்றுப் பார்க்கும் என நினைத்து, ஜூன்ஸ் அணிவதைத் தவிர்க்கும்போதே, அம்பை இளம் பெண்களுக்கு இருக்கும் இடைஞ்சல்களை -ஆடையின் அரசியலை- மிக எளிதாக வாசிப்பவருக்குச் சொல்லிவிடுகின்றார்.

டெல்கியில் படிக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய இன்னொரு கதையில், அந்தப் பெண் டெல்கியிற்கு ரெயினில் பயணிக்கும்போது இன்னொரு பெண்ணைச் சந்திக்கின்றார். இந்த -மற்ற- பெண், தன் ஊரில் குடும்பத்தினர் பிடிக்காத யாரையோ ஒருவரைக் கல்யாணங் கட்டித்தரப்போகின்றனர் என்பதற்காய் வீட்டை விட்டு எவ்வித தயாரிப்புமின்றி ஓடிவருகின்றவர். ஆனால் டெல்கியைப் பற்றி ஒன்றுமே அறியாத இந்தப் பெண் எப்படி டெல்கியில் தப்பிப்பிழைக்க முடியும் என டெல்கி யூனிவசிட்டியில் படிக்கும இந்தப்பெண் பதற்றமடைகிறார். கடந்த வருடங்களில் படித்துக்கொண்டிருக்கும் அவரை நடந்துபோகும்போதே துப்பட்டாவைப் பிடித்து இழுத்து சில்மிஷம் செய்ய முயன்றிருக்கின்றனர். இன்னொரு நாள் ஆண் நண்பனோடு இரவில் உரையாடிக்கொண்டிருந்தபோது, அவனைத் தாக்கிவிட்டு இவரை நெருங்கமுயன்றபோது அருந்தப்பில் தப்பியவர். வேறொருநாள், வாகனத்தில் பயணம் போனபோது, ஒரு குழு அரைநிர்வாணமாய்ப் பெண்ணை சிதைத்து அவரை எங்கோ புதைக்கப் போய்க் கொண்டிருந்ததை கண்டுமிருக்கின்றார். அவரைக் காப்பாற்றவில்லையே என்ற குற்றவுணர்வு மட்டுமில்லை, அப்படி சிதைக்கப்பட்ட பெண்ணைப் பற்றி அடுத்தநாள் எந்தப் பத்திரிகையில் செய்தி வரவில்லை என்பதையும் அறிந்து, இப்படி அடையாளந்தெரியாது எத்தனை பெண்களின் உயிர்கள் பாலியலிற்காய் காவுகொள்ளப்பட்டிருக்கும் என்று நினைத்தும் கவலைப்படுகின்றார்.

வ்வாறான ஒரு பெருநகரிற்கு எவரையும் தெரியாது ஊரிலிருந்து தப்பிவந்து விட்டேன் என நினைக்கும் பெண் எவரின் துணையின்றி வாழமுடியுமா என இந்த வளாகப்பெண் அந்தரப்படுகின்றார். ஒருகட்டத்தில் 'தயவுசெய்து திரும்பிப் போய்விடு, இது நீ நினைக்கின்ற நகரமல்ல, இதே ரெயினிலேயே திரும்பிச் சென்றுவிடு' என்று வற்புறுத்துகின்றார். படிக்கும் இந்தப் பெண்ணே தனியே வீட்டைப் போவதே அவ்வளவு பாதுகாப்பானதல்ல என்பதால் அவரின் மாமா ஒருவரே கூட்டிப்போக ரெயில்வே ஸ்ரேசனில் வந்து நிற்கிறார். ஆனால் வீட்டை விட்டு ஓடிவந்த பெண் திரும்பிப் போகாது, பெருநகரிற்குள் -எங்கே போவதெனக் கூட தெரியாது- நுழையத் தொடங்குகின்றார். இறுதியில், கதை சொல்பவர் தன் உடல் சில்லிடுகின்றது என்கிறார். அதற்கு டெல்கி குளிர் மட்டுமே காரணமில்லை என்பதோடு கதை முடிகின்றது. நமக்குள்ளே இப்படி டெல்கி என்ற பெருநகருக்குள் வந்து விழுந்துவிட்ட அந்த மற்றப்பெண்ணுக்கு என்ன நிக்ழப்போகின்றது என்று ஆயிரத்தெட்டு கேள்விகள் எழுகின்றன.

இன்னொரு வடஇந்தியப் பயணத்தில், ஒரு முதியவர் ரெயினுக்குள் தண்ணீர் தாகத்தில் தவிக்கிறார். அந்தப் பெட்டி முழுதும் அவருக்குத் தெரிந்தவர்களே இருக்கின்றார்கள். அவர்களே அனைவரும் இவரை விட சாதியின் படிமுறைகளில் வேறுநிலைகளில் இருப்பார்கள். எனவே பயணிக்கும் இந்தப்பெண்ணிடம் தண்ணீர் கேட்கிறார். கதைசொல்லி தண்ணீரைக் கொடுத்தாலும், அந்த முதியவர் இவரின் என்ன சாதி எனக்கேட்கின்றபோது நான் உங்கள் சாதியல்ல என்கிறார். திரும்பத் திரும்ப சாதி என்ன என முதியவர் கேட்டாலும், இந்தப் பெண், தான் என்ன சாதியென்பதைச் சொல்லவேமாட்டார். இதனால் முதியவர் தண்ணீரை வாங்கிக் குடிக்காது தாகத்துடன் அடுத்த ஸ்டேசனில் இருக்கும் பைப்பில் தண்ணீரைக் குடிக்கிறார். பின்னர் அந்த முதியவர் இரெயினுக்குள் சாப்பிட்டுவிட்டு வெற்றிலை/பாக்குப் போடும்போது பாக்கு தொண்டைக்குள் சிக்குபட்டு மூச்சிவிடத் திணறத்தொடங்குவார். தண்ணீரை அவசரத்திற்கு இந்தப் பெண் குடுக்கும்போது, தண்ணீர் இதற்கு வேலை செய்யாது, எனச் சொல்லிவிட்டு, இன்னொருவருவர் அவர் உடலைத் வளைத்துப் பிடித்து, ஒருமாதிரியாக பாக்கை எடுத்துவிடுவார். இந்த முதியவரின் சிந்திய பாக்குச் சாறை அந்த நபரே சுத்தமும் செய்துவிட்டு, அந்த முதியவரிடம், பாத்ரூம் சுத்தமாய்த்தானிருக்கிறது, நீங்கள் போய்க் குளிக்கலாம் என்கிறார். உதவிய மனிதர் தலித் என்பதால், இப்படித் தொட்டுக் காப்பாற்றியதால், அவருக்குத் 'தீட்டு' வந்திருக்கும் என்பதை நன்கு அறிந்தவர் அவர்.

அந்த தலித், தானொரு வைத்தியர் எனவும், நீங்கள் ஒரு தலித்தில்லை எனத் தெரியும், பிறகும் ஏன் சாதியைச் சொல்லி தண்ணீர் கொடுக்க மறுத்தீர்கள் எனக் கேட்பார். இந்தப் பெண், 'அந்த முதியவருக்கு இவ்வளவு சாதிவெறி இருக்கும்போது, என்னால் இப்படித்தான் இருக்க முடியும்' என்கிறார். அப்போது அந்த தலித் டாக்டர், 'உங்களுக்கு சாதி அடையாளத்தை மறுக்கும் தெரிவிருக்கிறது, ஆனால் எங்களால் அப்படி முடியாது' எனச்சொல்வது கதையின் மிகக் கூர்மையான இடம். அது மட்டுமின்றி கதையின் முடிவில் அந்த முதியவர் துவாயை எடுத்துக்கொண்டு 'தீட்டு' க்கழிக்க பாத்ரூமைப் போவதுகூட, ஒருவரின் உயிரைத் தலித் காப்பாற்றினால் கூட, அவர்களால் எந்த்ப்பொழுதில் சாதிப்பெருமிதத்திலிருந்து வெளியேறிவிடமாட்டார்கள் என யதார்த்தை அறைந்து சொல்கின்ற இடம்.

ம்பையின் பல கதைகள் எனக்கு நெருக்கமானதற்கு, பெரும்பாலான கதைகள் தமிழ்பேசும் சூழலிற்கு வெளியே நிகழ்பவை என்பதும் ஒரு காரணம். வாழும் சூழல் எப்படியிருந்தாலும் அந்த இடத்தில் தமிழ்மனம் எப்படி இயங்கிக்கொண்டிருக்கும் என்பதை சினிமாப் பாடல்களாலோ தமிழிசைப் பாடல்களாலோ மெல்லியதாய்த் தொட்டுக்காட்டிக்கொண்டேயிருப்பார். மேலும் அம்பையின் பெண் பாத்திரங்களை தமக்கான விடுதலையின் வெளியைத் தேடுபவர்களாய் இருந்தாலும், அவர்கள் சந்திக்கும் ஆண்கள் எவ்வளவு மோசமானவர்களாய் இருந்தாலும் அவர்கள் மீது காழ்புணர்வைக் கொட்டுவதில்லை என்பதையும் குறிப்பிடவேண்டும். தனக்கான சொந்தக்காலில் நிற்கும் பெண் தனக்கான ஒரு உலகைச் சிருஷ்டிததுக்கொள்ளவும், அங்கே வாழவும் தலைப்படுகின்றபோது அவர்களுக்கு ஆண்கள் ஒருபெரும் பொருட்டாய் இருப்பதுமில்லை.

'நிலவைக் காட்டிய பெண்' எனக்குப் பிடித்த கதைகளில் ஒன்று. வளாக நாட்களில் தன்னோடு ஒத்த இரசனைகளுள்ள நண்பனோடு ஒரு பெண் நெருக்கமாகின்றார். அந்தப் பெண்ணை கறுப்பானவள் என்று பிறர் கேலிசெய்யப்படும்போது, இந்தப் பெண்ணைக் காப்பாற்றுபவனாக அவனேயிருக்கின்றான. ஒருமுறை இருவருக்கும் ஜரோப்பாவில்(வெவ்வேறு நகரங்களில்) சில மாதங்கள் தங்கிப்படிக்கும் வாய்ப்பு வரும்போது, உடலாலும் நெருக்கமாகின்றனர். திரும்பி வரும்போது அந்தப் பெண் தான் கர்ப்பமடைந்திருக்கின்றேன் எனச்சொல்லி, இந்தியா போனதும் திருமணம் செய்வோம் என்கின்றாள். 'நான் உன்னைத் திருமணம் செய்வதென்று நினைக்கவேயில்லை. உனது நிறத்தை நீயே பார்த்ததில்லையா?' என அவளின் அடியாழம்வரை சென்று வேதனை செய்கின்றான். இந்தியா திரும்பும் பெண், மிகவும் கஷ்டப்பட்டு அபோர்ஷன் செய்கின்றாள். அபோர்ஷனிற்கு வெளிநாட்டிலிருந்து காசனுப்பிய அவனை ஓரிடத்திற்கு கூப்பிட்டு, இந்தக் காசிற்கா நான் என்னை உன்னிடந்தந்தேனென செருப்பெடுத்து அடிக்கிறாள்.

காலம் நகர்கின்றது. இந்தப் பெண் பேராசிரியை ஆகிவிட்டார் மட்டுமில்லை, இப்படித் தன் மகன் செய்தான் என்பதை அறிகின்ற அந்த ஆணின் தாயோடு நெருக்மும் ஆகிவிட்டார். 'நீ அபோர்ஷன் செய்தது உன் தெரிவு. ஆனால் இப்படி உதவியில்லாது எங்கோ தொலைவில் போய் நின்று செய்யும்போதாவது என்னிடம் சொல்லியிருக்கலாம். நான் உனக்குத் துணையாயிருந்திருப்பேன்' என்கிறார் அந்த ஆணின் அம்மா. ஆனால் இந்தப் பெண்ணுக்கு தான் பிரியமாய் வளர்க்க விரும்பிய இரட்டைப் பிள்ளைகளை இப்படியான நிலைக்குப் போகச் செய்துவிட்டேன் என்கின்ற கவலையிருக்கிறது. அதை எப்படிக் கலைந்து தன் 'தாளத்தை' நிதானமாக்கின்றார் என்பதை அம்பை இந்தக் கதையில் அற்புதமாக எழுதியிருப்பார். அந்த ஆண் அப்படிச் செய்துவிட்டான் என்ற வேதனை அந்தச் சந்தர்ப்பத்தில் மட்டுமே இருக்கின்றது. அது குறித்த எந்த நிந்தித்தலும் பிறகு கதையில் எங்குமேயில்லை. எனெனில் இப்போது அந்தப் பெண் தனக்கான உலகில் வாழத்தொடங்கிவிட்டாள். ஆணின் இருப்பு அவளின் வாழ்வோ இருக்கிறதோ இல்லையோ அவர் முன்னர்போல வேதனைப்படப்போவதில்லை. இதுவும் சேர்ந்ததுதான் வாழ்க்கையென புரிந்துகொள்வதில் பெண்களைப் போல பல ஆண்களால் இருக்கமுடிவதில்லை.

இதைத்தான் இன்னொரு கதையான, 'ஒரு கறுப்புச் சிலந்தியுடன், ஓர் இரவில், குடும்பம் நெருக்குகிறதென, மூன்று வயதுப்பிள்ளையுடன் தன்னை விட்டுவிட்டுப்போன துணையை, ஒரு பெண் நினைத்துப் பார்க்கின்ற கதையும் வேறுவிதமாய்க் கூறுகின்றது. 'நீ ஏன் என்னை விட்டுப்போனாய், உனக்குப் பிறகு நான் சந்தித்த எந்த ஆணும் உன்னைப் போல இருந்ததில்லையே. ஒரு கறுப்புச் சிலந்தியைப் போலவாது என்னுடன் கூடவே இருந்திருக்கலாமே' என உடல்வலி மிகுந்த இரவில் தன் துணையை சிலந்தியாக உருவகித்துப் பார்க்கின்ற வித்தியாசமான கதை.

பெண்களுக்கு இருக்கும் துயரங்களையும், திணறல்களையும், தடுப்புச்சுவர்களைப் பற்றி அம்பையின் கதைகள் கூறினாலும், அவை ஒருபோதும் ஆண் வெறுப்பை எந்த இடத்திலும் ஊதிப் பெருக்குவதில்லை. இந்த உலகமும், இந்த ஆண்களும் எவ்வளவு சிக்கலாகவும், மோசமாகவும் இருந்தாலும் அதைத்தாண்டி பெண்களை வாழ உற்சாகப்படுத்துகின்ற குரல்களை அம்பையின் பல கதைகளில் காணலாம். பெண்களின் இருத்தலை இன்னும் சற்று உள்முகமாய் நிதானமாய் பார்க்கக் கோருகின்ற கதைகளில் இருந்து நம்மால் த்ப்பிப்போக முடியாது, கரைந்து நெகிழத்தான் முடிகிறது

(Oct 03, 2014)

2 comments:

புதியவன் பக்கம் said...

அறிமுகத்துக்கு நன்றி. வாங்கி வைத்திருக்கிறேன். வாசிக்க இன்னும் வாய்க்கவில்லை.

10/29/2014 01:52:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி ஷாஜகான். அம்பையின் முன்னைய சிறுகதைத் தொகுப்புக்களை ஏற்கனவே வாசித்திருப்பீர்களென நம்புகின்றேன்.

10/30/2014 10:53:00 AM