கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ரொபர்டோ பாலனோ (Roberto Bolano)

Monday, October 20, 2014

1.
பெரும்பாலான படைப்பாளிகளைப் போல ரொபர்டோ பாலனோ, அவரின் மறைவின் பின்னே கண்டுபிடிக்கப்பட்டவர். அவரின் படைப்புக்களை வாசித்த மோகத்தில் பலர் அவர் வாழ்ந்த வாழ்வு எப்படியானது என்று தேடிக்கொண்டிருக்கின்றனர். அது இன்னும் மூடப்பட்ட பக்கங்களாய் இருக்கும்போது ரொபர்டோ இன்னுமின்னும் மர்ம்ம நிறைந்த ஒருவராய் தோற்றங்களை மாற்றியபடியிருக்கின்றார். அது மட்டுமின்றி அவரின் புனைவுகளின் வழி அவரின் குணாதிசயங்களைத் தேடுபவர்கள் கண்டுகொள்ளும் விம்பங்களையும் ரொபர்டோ அடிக்கடி குலைத்தபடியுமிருக்கின்றார்.

இப்போது கிடைக்கும் ஒரளவு தகவல்களின்படி 1953ல் சிலியில் டிரக் டிரைவருக்கும், ஆசிரியை ஒருவருக்கும் மகனாய்ப் பிறந்த ரொபர்டோ தன் பதினைந்தாவது வயதில் மெக்சிக்கோவிற்கு குடும்பத்தினருடன் புலம்பெயர்கின்றார். டைஸ்லக்‌ஷியாவால் பாதிக்கப்பட்டிருந்த ரொபர்டோ, கற்பித்தலை கேட்கவோ அல்லது கிரகிக்கவோ முடியாது திணறிக்கொண்டிருந்த மாணவனாய் இருந்தாரென அவரின் ஆசிரியர்களால் குறிப்பிட்டிருக்கின்றனர். மெக்சிக்கோவில் உயர்பாடசாலைக் கற்றலை உதறித்தள்ளிவிட்டு, பத்திரிகையாளராக தன்னை மாற்றிக்கொண்ட ரொபர்டோ, அங்கே கவிஞர்களுக்கான சிறு அமைப்பைக் கட்டியெழுப்பியிருக்கின்றார்.

தீவிர மார்க்சியவாதியான (டிரொஸ்கியவாதி) ரொபர்டோ பின்னாட்களில் மெக்ஸிக்கோவில் இருந்து சிலியிற்கு பினோச்சோவின் சர்வாதிகார அமைப்பிற்கு எதிராகப் போராடத் தன் தாய் நாட்டிற்குப் போகின்றார். அரசிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ரொபர்டோ கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கவும்படுகின்றார். அங்கே சிறைக்காவலர்களாய் வேலை செய்யும் அவரின் பழைய இரண்டு பாடசாலை நண்பர்களால் காப்பாற்றப்பட்டு சிலியை விட்டுத் தப்பியோடுகின்றார். இந்த நிகழ்வு குறித்து -இப்படி ரொபர்டோ சிலியிற்கு போய் தப்பி வந்தது- நிகழ்ந்ததா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படாது விவாதங்கள் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த தப்பித்தலில்போது இடையில் எல் சல்வடோர் சென்று அங்கே கவிஞர்களோடும், போராளிகளோடும் நட்பு கொண்டார் எனவும் கூறப்படுகின்றது.

தனது 24 வயதில் ஸ்பெயின் போகின்ற ரொபர்டோ, பார்சிலோனாவின் பல்வேறு கடலோர நகரங்களில் வாழ்கிறார். அவ்வாறான ஒரு நகரத்திலேயே (Barnes) அவர் தனது துணையான லோபஸைச் சந்தித்து கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாய் -இறக்கும்வரை- தனது துணையோடும் பிள்ளைகளோடும் Barnesலேயே வாழ்கிறார். அவரின் அநேக படைப்புக்கள் பல்வேறு பதிப்பகங்களினாலும், ஏஜெண்டுகளாலும் நிராகரிக்கப்பட்டபோதும் தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருந்திருக்கின்றார். அவரது துணை அவர் எழுதுவதற்கான சூழலை தொடர்ந்து எவ்விதத் தொந்தரவிற்கும் உள்ளாகாது கொடுத்திருக்கின்றார் என்பதும் கவனிக்கத்தக்கது. எனினும் ரொபர்டோவின் இறுதி வருடங்களில் அவர் தன் துணையை விட்டு தனித்து வாழ்ந்திருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது.

2.
ஏன் எனக்கு ரொபர்டோ மிக நெருக்கமானவராக ஆகிப்போகின்றார் என யோசித்துப் பார்க்கின்றேன். அவரைப் போன்ற பதின்ம வயதுகளிலேயே எனது புலம்பெயர்வு நிகழ்ந்து மட்டுமில்லை, அநேகமான புலம்பெயர்ந்தவர்கள் செய்யும் தொழில்களான கோப்பை கழுவுதல், குப்பை அள்ளுதல், கழிவறைகள் சுத்தம் செய்தல் போன்ற சாதாரண தொழில்களையே ரொபர்டோ தொடர்ந்து செய்துமிருக்கின்றார் என்பதும் ரொபர்டோவை நான் நெருங்கியதற்கான காரணங்களில் சிலவாய் இருந்திருக்கலாம்.. மேலும் ஒதுக்குபுறமான வாழ்வை வாழ்ந்தவர் என்றபடியாலும், எந்த நிலப்பரப்போடும் அதிகம் நெருக்கம் கொள்ளாத மனோநிலையாலும், சிலி நாட்டைச் சேர்ந்த பாப்லோ நெரூடாவிலிருந்து, இஸபெல் அலெண்டே வரை எல்லோரையும் விமர்சனங்களால் அடித்துத் துவைத்துமிருக்கின்றார். ஆகவே தன்னை எங்கும் பொருத்திக்கொள்ளாத அல்லது எவரையும் பின் தொடர விரும்பாத ஒருவரை இந்த்ச் சமூகம் அவ்வளவு எளிதாய் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதும் இயல்புதானில்லையா?

ரொபர்டோவின் எழுத்துக்களை வைத்து, அவர் ஒரு பெரும் குடிகாரனாகவும், போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்திருக்கலாம் என்று கட்டியெழுப்பட்ட விம்பத்தை அவரைப் பற்றி இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் ஆய்வுகள், அப்படியில்லையெனத் தெரிவிக்கின்றன. அது மட்டுமில்லாது அவர் தன்னை எப்போதும் கவிஞனாகவே நினைத்துக்கொண்டவர், அவரின் குடும்ப நிலையிற்காகவே பிற்காலத்தில் நாவலாசிரியராக மாறினார் எனக் கூறப்பட்டதைக் கூட, அப்படியல்ல அவருக்கும் நாவலாசிரிய்ராகும் கனவு நீண்டகாலமாய் இருந்தது என்பதை இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ள அவரின் தொடக்ககாலக் குறிப்பேடுகள் சில நிரூபிக்கின்றன.

3.
ரொபர்டோவின் படைப்புக்களை வாசித்து நெருக்கம் கொண்ட பலர் இப்போது ரொபர்டோ வாழ்ந்த பார்சிலோனாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றபடி இருக்கின்றனர். அப்படி அங்கே போய், ரொபர்டோவின் நீண்டகால வீடீயோ கடை நண்பருடன் உரையாடும் லிஸா எமக்கு இன்னொருவிதமான ரொபர்டோவைக் காண்பிக்கின்றார். எப்போதும், எங்கேயும் புத்தகங்களை வாசித்துக்கொண்டிருக்கும் ஒருவரையே, ரொபர்டோவிவின் நண்பர் மட்டுமில்லை வேறு பலரும் நினைவு கொள்கின்றனர். தோள்வரை நீளும் தலைமயிரும், அடர்த்தியான கண்ணாடியும் அணிந்த ரொபர்டோவேயே அவர்கள் தங்கள் ஞாபகங்ளினூடாக மீண்டும் நிகழிற்குக் கொண்டுவருகின்றனர். மகனை பாடசாலையில் இருந்து அழைத்து வரக் காத்திருக்கும்போதுகூட ரொபர்டோ புத்தகங்களை வாசிக்கும் ஒருவராக மட்டுமின்றி, சிலவேளைகளில் சினிமா தியேட்டருக்குள்ளும் நூலை வாசிக்கும் தீவிரமான ஒருவராக இருந்திருக்கின்றாரென அவரோடு ஒரு தசாப்தகாலததிற்கு மேலாய்ப் பழகிய நண்பர் நினைவுகூருகின்றார்.

மேலும், ரொபர்டோ ஒரு பெருங்குடியாளனோ அல்லது போதைமருந்து அடிமையோ அல்லவென குறிப்பிடும் அந்த நண்பர், ஆனால் இவ்வாறானவர்களின் வாழ்க்கையை அவதானிப்பதற்காய் மணித்தியாலக்கணக்கில் பார்களில் நேரத்தை ரொபர்டோ செலவழித்திருக்கின்றார் எனச் சொல்கின்றார். மற்றவர்கள் உரையாடுவதை அமைதியாக எப்போதும் கேட்க விரும்பும் ரொபர்டோவுடன் பின்னாட்களில் போதையிற்கு அடிமையான நிறையப் பேர் நண்பர்களாய் ஆகியும் இருக்கின்றனர். அவர்களின் கதைகளைக் கேட்ட்கும்போது நிறைய கோப்பியும், சிகரெட்டும் அருந்தும் ரொபர்ட்டோவைத்தான் தனக்குத் தெரியும் என்கிறார் அந்த நண்பர்.

இவ்வாறாக ரொபர்டோவைத் தேடிப்போகும் லிஸா, அவரின் நாவல்கள் மெக்சிக்கோவையோ, சிலியையோ பின்புலங்களாய்க் கொண்டவையாக இருநதாலும், அந்த நாவல்களில் அவர் தொலைந்துபோன கனவுகளையும், கடந்து போன வாழ்வையும் எழுதினாலும், அவர் அந்த நாவல்களின் சித்தரித்தவைகள், தான் ஸ்பெயினில் வாழ்ந்துகொண்டிருந்த நிலப்பரப்புக்களையும் வாழ்ந்த வாழ்வையுந்தான் என்கின்றார். இது ஒருவகையில் புலம்பெயர்ந்து வாழும் படைப்பாளிகள் உணர்கின்ற யதார்த்தமும் கூடத்தான்.

சிலவேளைகளில் நாம் நமது தாயகத்தைப் பற்றி எழுதும்போது, நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தேசத்தின் கதையைத்தான் எழுதிக்கொண்டிருக்கின்றோமோ என்ற தோற்ற மயக்கம் ஏற்படுவதும் இயல்புதானல்லவா? ஆனால் ரொபர்டோவிற்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் ரொபர்டோ சிலியை விட்டுப் பிரிந்தபின் ஸ்பானிஷ் பேசக்கூடிய நிறைய நாடுகள் தென்னமரிக்காவில் நிறைய இருந்தன. இறுதியாய் அவர் வாழத் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஸ்பெயினிலும் அவரை அவ்வளவு அந்நியப்படுத்தப்படாத அவரின் தாய்மொழியைப் பேசும் வாழும் மக்களின் நிலப்பரப்பில் வாழ முடிந்தது என்பதே.

கடந்த வருடம் ஒரு எழுத்தாள நண்பருக்கு புலம்பெயர்ந்திருந்து எழுதுவதில் வரும் சலிப்பைப் பற்றி ஒரு கடிதத்தில் நான் குறிப்பிட்டபோது, அவர் முதன்மையாகக் குறிப்பிட்டது, 'உங்களுக்கு உங்கள் மொழி பேசும் மக்கள் திரளிடையே வாழ முடியாதது பெரும் இழப்பு' என்றிருந்தார். கசப்பானது என்றாலும் அதுதான் உண்மை.

4
ரொபர்டோவின் நண்பரான விடீயோ கடைக்காரர், தானும் ரொபர்டோவின் மணிக்கணக்கில் அரசியல்,இலக்கியம், திரைப்படங்கள், பெண்கள் பற்றிப் பேசுக்கொண்டிருப்போம் என்கின்றார். படைப்பாளியாக இருந்தபோதும் எப்போதும் தன்னை யாரேனும் அளவுக்கதிகமாய்ப் பாராட்டினால் அவர்களை விலத்தி வரவே ரொபர்டோ விரும்பியிருக்கின்றார் எனவும், அதே சமயம் எழுத்தாளர்களுடன் எப்போது அளாவளாவ பிரியப்பட்டவராக இருந்திருக்கின்றார் எனவும் சொல்கின்றார். தாங்கள் வூடி அலனின் படங்கள் உள்ளிட்ட நிறையப் படங்களை விவாதித்ததாகவும், ரொபர்டோவிற்கு டேவிட் லிஞ்ச், நைட் ஷியாமளன் போன்றவர்களின் திரைப்படங்கள் அதிகம் பிடிக்கும் எனவும் குறிப்பிடுகின்றார்.

ரொபர்டோவின் படைப்புக்களை ஆய்வு செய்தும், அவர் யார் என்பது பற்றியும் நிறையப் புத்தகங்கள் இப்போது வரத்தொடங்கிவிட்டன. அதுமட்டுமின்றி இன்னமும் பிரசுரிக்கப்படாது ரொபர்டோவின் கையெழுத்துப் பிரதிகளாக இருந்தவைகளும் பிரசுரங்களுக்குத் தயாராகியும் கொண்டிருக்கின்றன. அண்மையில் ரொபர்டோவை இறுதியாய் நேர்காணல் செய்தவர், ரொபர்டோவிற்கு பிற்காலத்தில் ஒரு காதலி இருந்திருக்கின்றார் என்றும், அந்தப் பெண்ணையும் கவனத்தில் கொள்ளவேண்டுமென புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றார்.

எதுவென்றாலும் புதுவகையான எழுத்தை அறிமுகப்படுத்தும் ரொபர்டோ போன்றவர்களை அவரின் வாசகர்கள் கொண்டாடவே செய்வார்கள்.அதுபோலவே அவரைப் பற்றிய புதிர்களும் அவரைப் பற்றிய வசீகரத்தை இன்னும் அதிகரித்தபடியே இருக்கும். இறந்தபின்னும் ஆயிரம் பொன் என்பது யானைகளுக்கு மட்டுமில்லை, ரொபடர்டோ, வான்கோ போன்ற படைப்பாளி/ஓவியர்களுக்கும் பொருந்தும் போலும். ஆனால் இதையெல்லாவற்றையும் விட இந்தப் புகழ், பெயர் என்பவற்றைப் பொருட்படுத்தாது, தாங்கள் வாழும் காலத்தில் நிராகரிக்கப்பட்டிருந்தபோதும், தாம் விரும்பியதை எதன் பொருட்டும் கைவிடாது செய்துகொண்டிருந்தார்களே, அதைத்தான் ரொபட்டோவிடமிருந்தும், வான்கோவிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது.

(நன்றி: 'அம்ருதா', புரட்டாதி, 2014)


ஏற்கனவே எழுதியவையும்/ எழுதுவதற்கு உதவியவையும்:

(1) https://www.facebook.com/photo.php?fbid=10152513264238186&set=a.135912858185.111205.645983185&type=1&theater
(2) http://www.newyorker.com/magazine/2013/04/22/mexican-manifesto
(3) http://www.newyorker.com/magazine/2012/01/23/labyrinth-2
(4) http://www.salon.com/2013/06/24/myths_and_legends_of_roberto_bolano_exposed_in_new_exhibit_partner
(5) http://www.independent.co.uk/arts-entertainment/books/features/fame-after-death-why-roberto-bolao-became-a-literary-superstar-posthumously-8706107.html

0 comments: