கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வலிகளை ஆவணப்படுத்துதல்

Friday, May 04, 2007

-Provoked & Bordertownஐ முன்வைத்து-

பெண்கள் மீதான வன்முறை காலங்காலமாய் நடந்தேறிக்கொண்டேயிருக்கிறது. இனங்களின் கலாசாரங்களையும், குடும்ப விழுமியங்களையும் கட்டிக்காக்கவென்று கட்டியெழுப்பப்பட்ட மதங்களோ, கலாசார நிறுவனங்களோ இவ்வாறான விடயங்களில் அதிகளவு குறுக்கீடு செய்யவிரும்புவதில்லை. தொடர்ச்சியாக உடல்/உளரீதியான சுரண்டலகளுக்கு ஆளாகும் பெண்கள் மனப்பிறழ்வுக்கு உள்ளாபவர்களாகவும் தற்கொலையை நாடுபவர்களாகவும் அதிக சந்தர்ப்பங்களில் மாறிப்போகின்றார்கள். அண்மைக்காலமாய் ரொரண்டோ சபவேகள் எங்கும் பெண்கள், சிறுவர்களுக்கான வன்முறைக்கெதிரான (violence against women and children) விழிப்புணர்வு பதாதைகள்/விளம்பரங்கள் பரவலாகத் தென்படத்தொடங்கியுள்ளன. வளர்ச்சியடைந்த பெருநகரங்களில் ஒன்றான ரொரண்டோவில் கூட இவ்வாறான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்பதை திடீரென்று முளைக்கும் இவ்விளம்பரங்கள் நமக்கு சாட்சியப்படுத்தியபடியிருக்கின்றன.


Provoked என்கின்ற இத்திரைப்படம், கிரண்ஜிட் என்ற இலணடனில் வசித்த பஞ்சாபி பெண்ணுக்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பத்து வருடங்களாய் தனது கணவருடனும், இருகுழந்தைகளுடன் வசிக்கும் கிரண் தனது கணவனை ஓரிரவில் தீயிட்டு கொளுத்திவிடுகின்றார். தீக்காயங்களினால் இறக்கும் கணவரைக்கொன்ற குற்றத்திற்காய் கிரணிற்கு பன்னிரண்டு ஆண்டுகால ஆயுட்தண்டனை வழங்கப்படுகின்றது. இவ்வாறான ஒரு சம்பவத்தை கிரண் செய்ய அவரை உந்தித்தள்ளியது எதுவென ஆராய்கின்றபோது அவரது கணவனின் உடல்/உள வன்கொடுமைகள்தான் காரணம் என்று தெரியவருகின்றது. எனினும் வெளியுலகம் அவ்வளவு தெரியாத, ஆங்கிலம் பேச முடியாத, தன் உடற்காயங்களை வெளிப்பார்வைக்குக் காட்டத்தயங்குகின்ற கீழைத்தேய மனதுடைய கிரணால் தனது வழக்கறிஞர்களின் ஊடாக இதுகுறித்த விவாதத்தை நீதிமன்றத்தில் நடத்த முடியாமல் போகின்றது. மேலும் கிரணிற்கு தனது கணவரைத் தான் தீயிட்யெரித்து கொலைசெய்துவிட்டேன் என்ற குற்றவுணர்வு இன்னும் உறுத்துகிறது.

provokedGood

ஜெயிலில் பிற பெண்களால் கிரண் bullying ற்கு (தமிழில் என்ன?) ஆரம்பத்தில் உட்பட்டாலும், பிறகு சில நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்கிறார். ஜெயிலில் இருக்கையில், 'இப்போதுதான் எனது இரவுகள் நிம்மதியாகக் கழிகின்றன' என்கின்றபோது அவரது திருமணவாழ்வு அவருக்கு எத்தகை வலியைத் த்ந்திருக்கின்றது என்பது பார்ப்பவருக்கு புரியவரும். இதற்கிடையில் கிரணை இந்தக் கொலையைச் செய்வதற்கு உந்தித்தள்ளியது எதுவென South Asian Black Sisters என்ற அமைப்பு ஆராயத் தொடங்குகின்றது. அவரது கணவர் நிகழ்த்திய உடல் மீதான வன்முறை/பாலியல் பலாத்காரங்கள் தான் இத்தகைய முடிவுக்கு வர கிரணை provoke செயதது என்ற பிரச்சாரத்தை இலண்டன் சமூகத்தில் அவர்கள் மேற்கொள்ளத்தொடங்குகின்றார்கள். அதன் நீட்சியில் கிரணின் வழக்கை மேன்முறையீடு செய்ய விரும்பும்போது ஜெயிலில் இருக்கும் பெண்ணொருவரின் சகோதரர் முறையிலான வழக்கறிஞர் ஒருவரின் உதவி வாய்க்கிறது. அவர் இங்கிலாந்து இராணிக்கு சட்ட நுணுக்கஙளை சொல்லவல்லபர் என்பதால் இவ்வழக்கு இன்னும் பரவலான கவனத்தைப் பெறுகிறது. இறுதியில் attempted murder என்ற நிலைய்லிருந்து manslaughterற்கு வழக்கு மாற்றப்படுகிறது. இவ்வழக்கு முடிவதற்குள் -நான்கு வருடங்கள்- கிரண் ஜெயிலிற்குள் தண்டணை பெற்றுவிட்டபடியால் அத்தோடு அவர் விடுதலை பெறுகின்றார்.

கிரணைப்போன்ற கதைகள் -துணைவர்களால துன்புறுத்தப்படுகின்ற சம்பவங்கள்- பல இடங்களில் 'சாதாரணமாய்' நடந்துகொண்டிருந்தாலும், இந்தச் சம்பவத்தின் தீர்ப்பே பிற கதைகளிலிருந்து இதை வித்தியாசப்படுத்துகின்றது. 'கொலையும் செய்வாள் பத்தினி' என்று நமது கீழைத்தேயமரபுகள் போதித்துக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் ஒரு பெண் தன்னை விடுதலை செய்வதற்காய் கொலை செய்திருக்கின்றார் என்பது சற்று 'அதிர்ச்சியானது'தான். புலம்பெயர் நாடுகளில் நமது பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளின் பட்டியல் நீண்டுகொண்டேயிருப்பவை. மேலும் எம்மைப்போன்ற கீழைத்தேயங்களிலிருந்து வருகின்றவர்களுக்கு இருக்கும் கண்காணிப்புச்சுவர்கள் இவை குறித்த திறந்த விவாதங்களைப் பெண்கள் தொடக்கி வைக்க அவர்களுக்கு தடைக்கற்களாகவும் இருக்கின்றன.

இப்படத்தில் கிரணாக, ஜஸ்வர்யா சிறப்பாக நடித்திருக்கின்றார். ஆரம்பத்தில் வெளியுலகம் அவ்வளவு தெரியாத, ஆங்கிலம் தெளிவாகப் பேசமுடியாத பெண்ணாக இருந்து பிறகு ஜெயிலில் ஆங்கிலம் கற்று தெளிவாகச் சிந்திக்கும் பெண்ணாக மாறுவது என நல்லதொரு நடிப்பை ஜஸ்வர்யா தந்திருக்கின்றார். ஜெயிலிற்குள் வருகின்றபோது, பொதுவில் வைத்து ஆடைகளைக் கழற்றி ஜெயில் உடுப்புகள் அணியவேண்டும் என்ற நிலை வரும்போது, 'எங்கள் கணவருக்கு முன்னாலேயே ஆடைகள் மாற்றக் கூச்சப்படுபவர்கள் நாங்கள்' என்று ஜஸ்வர்யா பதட்டப்படுவது, உடல் குறித்த நமது சமூகத்தின் கண்காணிப்பு அரசியலை மறைமுகமாய் காட்சிப்படுத்துக்கிறது. நந்திதா தாஸ் south asian black sisters என்ற பெண்கள் அமைப்பின் செயற்பாட்டாளாராய் வருகின்றார். எனினும் அவர் தனது நடிப்பை வெளிப்படுத்துவத்றகான் காட்சிகள் மிகக்குறைவாகவே இத்திரைப்படத்தில் இருக்கின்றது. மது அம்பட்டின் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ஆரின் இசையும் புலம்பெயர்ந்த மேற்கத்தைய நாட்டில், கீழைத்தேயவரின் வாழ்வு முறையை இன்னும் நெருக்காமாய்க்காட்டுகிறது.

இங்கே கிரண் கொலையைத்திட்டமிட்டுச் செய்யப்படவில்லை என்று - அந்தக்கணத்தின் வன்முறையின் கொடூரத்தில் உந்தப்பட்டு செய்யமுயன்றார்- என்பதே கிரணிற்கான தண்டனையைக் குறைக்கின்றது. கொலை நடந்த சந்தர்ப்பத்தில் எப்படியான மனநிலையில் கிரண் இருந்தார் என்ற ஒரு பொலிஸின் சாட்சியே கிரணிற்கான முக்கிய சாட்சியாக இருக்கின்றது. அவ்வாறு நிரூபிக்கப்படாதவிடத்தில் கிரணிற்கு ஒரு கொலையைச் செய்தவருக்கான தண்டனையே வழங்கப்பட்டிருக்குமென்பது நினைவில் கொள்ளக்கூடியது.

(2)

இந்தப்படத்தைப் பார்ப்பதற்கு சில வாரங்களுக்கு முன் தான், போர்டர் ரவுண் (Bordertown) என்ற ஜெனிபர் லோபஸ் (Jennifer Lopez), அன்ரோனியோ பாண்டரஸ் (Antonio Banderas) நடித்த படத்தைப் பார்த்திருந்தேன். மெக்ஸிக்கோ-அமெரிக்க எல்லையில், மெக்ஸிக்கோ சுதந்திர வர்த்தக வலயத்தில் (Free Trade Zone) அமைந்திருக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்கள் கொலை செய்து புதைக்கப்படும் உண்மைச் சம்பவங்களை அடையாளப்படுத்துகின்றது. சுதந்திர வர்த்தக வலயத்தில் இருக்கும் அந்நிய நாட்டு நிறுவனங்கள் (அமெரிக்க நிறுவனங்கள்) குட்டிச் சர்வாதிகாரிகள் போலச் செயற்படுகின்றன. தமக்கான தனிப்பட்ட சட்டதிட்டஙகளை கொண்டு, இருபத்து நான்கு மணிநேரமும் இயங்கும் இத்தொழிற்சாலைகள், இளம்பெண்களை வேலைக்கு எடுப்பதில் முக்கிய கவனம் எடுப்பதோடு, (அப்போதுதான் அவர்கள் ஓய்வில்லாது வேலை செய்து தமது நிறுவங்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க முடியும்) இரவு நேரங்களில் வேலை முடிந்து பெண்களின் பாதுகாப்பு குறித்து எவ்வித அக்கறையும் இல்லாமல் இருக்கின்றன.

இவ்வாறு வீடுதிரும்பும் வழிகளில் பல பெண்கள் காணாமற்போகின்றார்கள். அப்படியொருநாள் வீடு திரும்பும் வழியில் பாலியல் வன்புணர்ச்சியிற்கு உள்ளாக்கப்பட்டு அரையுயிருடன் தப்பும் ஒரு பூர்விக குடிப்பெண்ணின் மூலம் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரத்தொடங்குகின்றன. ஆனால் இந்த உயிருள்ள சாட்சியைக் கொலைசெய்ய பலர் தீவிரமாக முயற்சிக்க, அந்தப்பெண் ஒரு பத்திரிகையின் உதவியை நாடுகின்றார். அதே சமயம், இவ்வாறு பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படும் பெண்களின் செய்தியறிந்து சிகாகோவிலிருக்கும் ஒரு பத்திரிகை, செய்திகள் சேகரிப்பதற்காய் தமது நிருபரை (ஜெனிபர் லோபஸை) மெக்சிக்கோவிற்கு அனுப்புகிறது. சுதந்திர வர்த்தக வலயங்களில் நடக்கும் கொடூரங்களை பாதிக்கப்பட்ட பெண்ணின் பார்வையினூடு கட்டுரைகளாக எழுதி ஜெனிபர் தனது பத்திரிகை நிறுவனத்திற்கு அனுப்புகிறார். இந்தக்கதைகள் வெளியுலகத்திற்கு வந்தால்தான் பாதிக்கப்பட்ட அந்தப்பெண்ணின் எதிர்கால வாழ்வு காப்பற்றப்படும் என்ற நிலையிலும், அமெரிக்க பத்திரிகை நிறுவனம் அந்தக்கட்டுரைகளை பிரசுரிக்க மறுக்குகின்றது. கோபம் கொண்டு நிருபர் (ஜெனிபர்) வினாவுகின்றபோது, பத்திரிகை உடபட எல்லாமே பெருநிறுவனங்களால் ஆளப்படுபவை; அவற்றிற்கு எதிராய் எதையும் எழுதிவிடமுடியாது என்ற காரணம் கூறப்படுகிறது. இதற்கிடையில் மெகிசிக்கோவில் ஜெனிபருக்கு உதவியாக இருக்கின்ற பத்திரிகையாளர் (அன்ரோனியோ பண்டர்ஸ்) கொல்லப்படுகின்றார். இனி அமெரிக்கப் பத்திரிகையில் தனக்கு வேலை வேண்டாம் என்று தனது வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு வருகின்ற ஜெனிபர் தனது நண்பரின் மெக்ஸிக்கோ பத்திரிகையில் இணைந்து வேலை செய்யத் தொடங்குகின்றார்.

இறுதியில் பாதிக்கப்பட்ட அந்தப்பெண் மனித உரிமைகள் அமைப்பால் பாதுகாக்கப்பட்டு, அவரைப் பாலியல் வன்புணர்ந்து கொலைசெய்ய முயன்ற சில கொலைகாரர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். எனினும் கொலைகள் தொடர்ந்து நடைபெற்றபடி இருக்கின்றன. இந்தக்கொலைகள் நடப்பதை ஏதோவொருவகையில் அமெரிக்கப் பெருநிறுவனங்களும், மெக்ஸிக்கோ அரசும் அங்கீகரிக்கின்றன என்ற குறிப்புகளை விட்டபடி திரைப்படம் நிறைவுறுகிறது. வறுமையான கிராமப்புறங்களிலிருந்து வரும் பெண்கள் பாலியல் வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்டு நூற்றுக்கணக்கில் அடையாளங்கள் இல்லாது மறைக்கப்படுவது குறித்து எவருக்கு அக்கறையிருக்கப்போகின்றது? அரசுக்கு தமது கெளரவம் வெளியுலகில் கெட்டுவிடக்கூடாது என்ற கவலையும், பெரு நிறுவங்களுக்கு இவ்வாறான செய்திகளால் தமது இலாபம் பாதிக்கப்படும் என்ற பதட்டம் வருவதும் 'சாதாரண'மானதே.

bDGood

உழைப்பவர்களை மனித இயந்திரங்களாக்கி ஓய்வுநேரங்களையும் மனித விழுமியங்களையும் மூன்றாமுலக நாடுகளில் விழுங்கி ஏப்பமிட்டுக்கொண்டிருக்கும் உலகமயமாதலின் விளைவுகள் குறித்து விரித்து ஆராய வேண்டிய அவசியம் இங்கு தேவையில்லை. இப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஈழத்தில் இருந்தபோது, 'இலங்கை வளநாட்டை பொருளாதாரத்தால் உயர்விக்க அமைக்கப்பட்ட சுதந்திர வர்த்தக வலயங்களையும், வந்திறங்கிய நிறுவங்களையும்' பாடப்புத்தகங்களில் வாசித்த குறிப்புகள் நினைவுக்கு வருகின்றன. கொழும்பு இரத்மலானை இந்துக்கல்லூரியில் படித்த காலங்களில் எங்களோடு பஸ்ஸிலும், நடந்தும் வருகின்ற சுதந்திர வர்த்தக வலயத்தில் உழைப்பவர்களுக்கு இருக்கும் நெருக்கடிகள்/சுரண்டல்கள் குறித்து நிதானமாய் இப்போது யோசித்துப்பார்க்கமுடிகின்றது. அதைவிட made in Sri Lanka, made in Bangaladesh என்று வருகின்ற ஆடைகளை அணியும்போது எத்தனைபேரின் உழைப்பு மிகக்கேவலமாய் சுரண்டப்பட்டிருக்கும் என்பது குறித்தும் கவலைப்படவேண்டியிருக்கிறது.

இப்படத்தை எடுக்கும்போது மெக்ஸிக்கோ நாட்டின் கண்காணிப்பு அதிகளவு இருந்தது என்று இப்படம் எடுத்தவர்களின் குறிப்பு கூறுகின்றது. அதைவிட அமெரிக்கா பெருநிறுவங்களை இதை எப்படி உன்னிப்பாய் கவனித்திருக்கும் என்பது குறித்துக் கூறத்தேவையில்லை. தமது நடிப்புத் தொழில் இவ்வாறான ஒரு படத்தில் நடிப்பதால் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தை மீறி, இப்படத்தில் நடிக்கமுன்வந்த ஜெனிபஸ் லோபஸும், அன்ரோனியோ பண்டரஸும் பாராட்டப்படக்கூடியவர்கள். மேலும் இப்படி பிரபலமானவர்கள் நடிக்கின்றபோடு இவ்வாறான திரைப்படங்கள் பரவலான பார்வையாளர்களைப் போய்ச்சேரும் என்பதையும் நினைவூட்டிக்கொள்ளலாம்.

Provoked, BorderTown போன்ற படங்கள் தொடர்ந்து ஆவணப்படுத்தப்படவேண்டும். பொதுப்பார்வைக்கு வைக்கப்பட்டு விரிவான உரையாடல்கள் வளர்க்கப்படவேண்டும். அவற்றின் மூலமான அதிர்வுகள் ஆட்சியிலிருப்பவர்களையும், அதிகாரங்களை ஆக்குபவர்களையும் சலனமடையச் செய்தாலே பல மாற்றங்கள் சாத்தியப்படக்கூடும். கிரண் தனது வழக்கின் முடிவில் கூறுவார், இங்கே நான் பாதிக்கப்பட்டேன், விடுதலை பெற்றுவிட்டேன் என்று மகிழ்ச்சியடைய முடியாது, வெளியில் சொல்லப்படாத பல கதைகள் சொல்லப்படாமலே இருக்கின்றன. அவை குறித்தும் நமது பார்வைகள் விரியவேண்டும் என்பது நம் எல்லோருக்குமானது.


16 comments:

Anonymous said...

if get a chance, watch this documentary, "senorita extraviada". Almost four years old, yet informative and valid to this time.

5/04/2007 12:44:00 PM
Anonymous said...

Hi DJ,

Have read your views and criticism on'Provoked'. I haven't yet seen the film. What about The Mistres sof Spices & The Namesake? have you written about them too?

Regards,
Chaminth

5/04/2007 02:07:00 PM
இளங்கோ-டிசே said...

தகவலுக்கு நன்றி.
....
Bordertownஜ விட Senorita Extraviada அதிகம் ஆழமாய் இருக்கும் போலத்தோன்றுகின்றது.

5/04/2007 03:23:00 PM
இளங்கோ-டிசே said...

சமிந்த்,
Namesake படம் குறித்து கறுப்பி இங்கே எழுதியுள்ளார்.
http://karupu.blogspot.com/2007/04/we-all-came-out-from-under-gogols.html

பெயரிலி Namesake நூலைப் பற்றி மூன்று வருடங்களுக்கு முன் விரிவாக எழுதியிருக்கிறார்
http://pulan.blogspot.com/2004/09/namesake-by-jhumpa-lahiri.html
......
The Mistres of Spices பிரதி வீட்டில் இருக்கிறது; இன்னும் பார்க்கவில்லை

5/04/2007 03:26:00 PM
Chandravathanaa said...

இரண்டு நாட்களுக்கு முன்தான் எனது மகள் Provoked படத்தைப் பார்த்து விட்டு(லண்டனில்) தொலைபேசியிலேயே கதையைச் சொல்லி முடித்தாள். உங்கள் பதிவு படம் பற்றிய எனது ஆர்வத்தை இன்னும் கூட்டியிருக்கிறது.

5/04/2007 04:26:00 PM
கறுப்பி said...

டீசே இந்த இரு படங்களையும் நான் பார்க்கவில்லை. "Provoked" எங்கே எடுத்தீர்கள்?
நடித்த குடும்பவன்முறை பற்றிய Jennifer Lopez இன் இன்னுமொரு படம் பார்த்தேன் பெயரை மறந்து விட்டேன். கணவரின் கொடுமை தாங்காமல் கடைசியில் தானே பொக்ஸிங் பழகி தன் உடலை மிகப் பலப்படுத்தி வந்து கணவரை அடித்தே கொல்லுகின்றாள் மனைவி. செல்ஃப் டிபென்ஸ் என்பது எப்போதும் பெண்களைக் காத்துக்கொள்ளும்.

5/04/2007 04:42:00 PM
இளங்கோ-டிசே said...

சந்திரவதனா, நன்றி.
.....
கறுப்பி, இந்தப்படத்தை குமரன் வீடியோவில்தான் எடுத்தேன் (கனடிய தமிழ் வானொலி(CTR)க்கு கீழே அமைந்திருக்கிறது.

5/05/2007 10:08:00 AM
அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நல்ல படங்களைக் குறித்துத் தொட்ர்ந்து நுணுக்கமான அலசல்களைப் பகிர்ந்து வருவதற்கு நன்றி

5/06/2007 05:26:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி ரவிசங்கர்.

5/07/2007 11:52:00 AM
சின்னக்குட்டி said...

இந்த படத்தை பற்றிய எனது பதிவை பார்க்க இங்கே அழுத்தவும்-1



இங்கே அழுத்தவும்-2

5/07/2007 12:31:00 PM
கறுப்பி said...

திரைப்படம் பார்த்து விட்டேன். மிகவும் இயற்கையாக நகர்த்தியுள்ளார்கள். கிரணின் சில பேட்டிகளை மின்கணனியில் படித்தேன், அத்தோடு அவருக்கு குடும்ப வன்முறைக்கான தடைக்களை உடைத்தமைக்கான ஆசியப் பெண்கள் விருது வழங்கப்பட்டிருக்கின்றது. வேறு பல விருதுகளும் அவருக்குக்கிடைத்தாக அறிந்தேன். குடும்பவன்முறையால் அவர் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டுத் தப்பி ஓடியிருக்கின்றார் ஆனால் கணவர் அவரைக் கண்டு பிடித்து வீட்டிற்குக் கொண்டு வந்து கொடுமைப் படுத்தியிருக்கின்றார். இது திரைப்படத்தில் காட்டப்படவில்;லை. அவர் வேறு வழியேதும் தெரியாமல்தான் கொலை செய்திருக்கின்றார், இருந்தும் எனக்குள் ஒரு சின்ன நெருடல். விருதுகளைக் கொடுத்து அவரைக் கௌரவப்படுத்தி ஒரு வீஐபி யாக மாற்றிவிடுவது, குடும்;பவன்முறையில் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மற்றைய பெண்களுக்கு தாமும் எதையாவது செய்துவிடும் உந்துதலைக் கொண்டுவரும் அல்லவா?

5/07/2007 01:05:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி சின்னக்குட்டி & கறுப்பி.
.....
சின்னக்குட்டி provoked குறித்து விரிவாக நீங்கள் எழுதியுள்ளதுடன், ஒளி/ஒலிக்குறிப்புகளையும் அவற்றோடு இணைத்திருப்பது இன்னொரு சிறப்பு.
....
/இருந்தும் எனக்குள் ஒரு சின்ன நெருடல். விருதுகளைக் கொடுத்து அவரைக் கௌரவப்படுத்தி ஒரு வீஐபி யாக மாற்றிவிடுவது, குடும்;பவன்முறையில் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்மற்றைய பெண்களுக்கு தாமும் எதையாவது செய்துவிடும் உந்துதலைக் கொண்டுவரும் அல்லவா? /
கறுப்பி, நீங்கள் கூறுவதும் சாத்தியப்படக்கூடியதுதான். ஆனால் எவருமே கொலையை வரவேற்கமாட்டார்கள் என்றுதான் நினைக்கின்றேன். அத்துடன், இப்படியான சம்பவங்களுக்கு அரிதாகத்தான் இப்படியான தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கும் என்று நினைக்கின்றேன், அல்லாவிடின் first/second degree murderற்கான தண்டணைதான் கிரணிற்கு கிடைத்திருக்கும். கிரணை இன்றையபொழுதில் அடையாளப்படுத்துதல் என்பது குடும்பவன்முறைக்கு கொலைதான் தீர்வு என்பதற்காய் அல்ல, இவ்வாறான வன்முறைகள் நிகழும்போது தயக்கங்களில்லாது சட்டத்தின் உதவியை நாடமுடியும்/வேண்டும் என்று பிறருக்கு நம்பிக்கைகொடுக்கும் ஒரு அடையாளமாய்த்தான் பார்க்கிறேன். புதுமொழி, புதுச்சூழலில் இருந்து வன்முறைக்காகும் ஆளாகும் பெண்களுக்கு, வன்முறையோடு வாழத்தேவையில்லை அதிலிருந்து மீள்வதற்கும் உதவுவதற்கும் பலர்/பல அமைப்புக்கள் இருக்கின்றன் என்பதையே கிரணின் வாழ்வு அடையாளப்படுத்துவதாய் நான் எடுத்துக்கொண்டேன்.

5/07/2007 11:41:00 PM
Anonymous said...

பதிவுக்கு நன்றி, டிசே.

இவ்வாறான வன்முறைகள் குறித்து உரத்துப் பேசவேண்டிய தேவையிருக்கிறது. எனினும் எம்மவர்கள் இதனை - நீங்கள் குறிப்பிட்டது போல - 'சாதாரணமாக' எடுத்துக் கொள்வதுதான் அவலம். எந்தவொரு பெரிய விடயமும் தொடர்ந்து நடைபெறுகையில் சாதாரணமாக்கப்பட்டு விடுகிறது, குடும்ப கௌரவம்.. குடும்பம் பிளவுபட்டுவிடக்கூடாதென்ற இன்னபிற காரணங்களை முன்வைத்து.

இப்படி விடுதலையாகி வந்த பெண்ணுக்கு சமூகம் வழங்கும் இடமென்ன என்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதே.. லண்டனில் வசிக்கும் பெண்ணுக்கு சரிதான்.. அதுவே எமது கீழைத்தேய நாடுகளாயிருந்தால்..???

5/12/2007 01:22:00 AM
இளங்கோ-டிசே said...

நன்றி நண்பர்.
.....
/எந்தவொரு பெரிய விடயமும் தொடர்ந்து நடைபெறுகையில் சாதாரணமாக்கப்பட்டு விடுகிறது, குடும்ப கௌரவம்.. குடும்பம் பிளவுபட்டுவிடக்கூடாதென்ற இன்னபிற காரணங்களை முன்வைத்து./

இவ்வாறான காரணங்கள்தான் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே தங்கள் பாதிப்புக்களை சொல்லமுடியாதிருப்பதற்கு -பல இடங்களில்- சிக்கலாக இருக்கின்றன போலும்.

/இப்படி விடுதலையாகி வந்த பெண்ணுக்கு சமூகம் வழங்கும் இடமென்ன என்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதே../

விரிவாக விவாதிக்கவேண்டிய விடயமே.

5/13/2007 12:23:00 PM
Jazeela said...

இரண்டு படங்களையும் கண்முன்னே கொண்டுவந்தமைக்கு நன்றி. கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. துண்டு துண்டாக இரு கதையின் விமர்சனம் தராமல் இரண்டையும் சேர்த்து சொன்ன விதம் சிறப்பு.

5/16/2007 05:33:00 AM
இளங்கோ-டிசே said...

நன்றி ஜெஸிலா.
.....
(இங்கே சொல்வதற்கு தயக்காமாயிருப்பினும்), அண்மையில்தான் உங்களின் பதிவுகளை ஒரேமிக்க வாசிக்க ஆரம்பித்தேன். அவசியமான விடயங்களை மிக எளிதாக எழுதுகின்றீர்கள். ஒரே மையத்தில்/கருத்தில் சுழலாது பல விடயங்களைப் பரவலாக நீங்கள் எழுதுவது இன்னும் கவர்கிறது. பாராட்டுக்களை எங்கு தெரிவித்தால் என்ன? சொல்ல விரும்பும் நேரத்தில் சொன்னால் சரிதானே :-).

5/16/2007 11:41:00 PM